போராட்டம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 9, 2018
பார்வையிட்டோர்: 6,695 
 

மஞ்சு கை கால்களெல்லாம் ஓய்ந்து போய் படுத்தாள். எப்போதடா பொழுது விடிந்து இந்த நீண்ட இரவு முடியும் என்று ஆயாஸமாக இருந்தது. நேற்று இரவு ஒன்றுமே விபரீதமாக நடக்காததைப் போல எப்பொழுதும் போல ஜகன் காலை எட்டு மணிக்குக் கண் முழித்து குளித்து ‘டிப் டாப்’பாக உடை அணிந்து காலை உணவுக்காக சாப்பாடு மேஜையில் வந்து அமர்ந்தான். அதற்குள் குழந்தைகளுக்கு ஸ்கூல் வேன் வந்து அவர்கள் கிளம்பி விட்டார்கள். மஞ்சுவுமே அலுவலகம் செல்வதற்காக உடையணிந்து தயாராகிக் கொண்டிருந்தாள். அவன் தோசை சாப்பிட்டு விட்டு ‘ஷ¨’ மாட்டிக் கொள்வதற்காக சோஃபாவில் அமர்ந்தபோது மதிய உணவு ‘கேரியரில்’ அவன் ‘ப்ரீஃப் கேஸ்’ அருகில் வைக்கப்பட்டது.

“ஹை! இந்த ‘ட்ரெஸ்’ல நீ ரொம்ப அழகாயிருக்கே!” என்று மஞ்சுவின் கன்னத்தில் செல்லமாகத் தட்டி விட்டு வேகமாக படியிறங்கினான். கோபமாக ஏதோ பேச வாயெடுத்தவள், பேச்சே வராமல் திக்பிரமைபிடித்தது போல் ஒரு கணம் நின்ற இடத்திலேயே நின்றாள்.

முதலில் நண்பர்களோடு ஜாலிக்காகக் குடிக்க ஆரம்பித்த ஜகனுக்குக் குடிப்பழக்கம் தொற்றிக் கொண்டு விட்டது. தினமும் அலுவலகம் விட்டு நேரே ‘டாஸ்மாக்’ கடைக்குப் போய் குடித்து விட்டு தான் வருவான். வீட்டுக்குள் நுழையும்போதே போதை தலைக்கேறியிருக்க ஒன்றும் புரியாமல் தான் வருவான். அந்த நேரத்தில் அவள் ஏதாவது பேச்சு கொடுத்தாலோ கேள்வி கேட்டாலோ தீர்ந்தது. வாய்ப்புக்காகக் காத்திருந்தவன் போல கெட்ட கெட்ட வார்த்தைகளால் அவளை அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விடுவான். இரவு எட்டு மணிக்கு அநேகமாக ஜகன் வந்து விடுவான் என்பதால் அலுவலகம் விட்டு வந்தவுடனேயே மஞ்சு பரபரப்பாகச் செயல்படுவாள். ஜகன் குடித்து விட்டு வீட்டுக்குள் வந்தால் என்ன நடக்கும் என்பதே யாருக்கும் தெரியாததால் ஆறாவது படிக்கும் விக்னேஷையும் இரண்டாவது படிக்கும் உஷாவையும் பள்ளிக் கூட வீட்டுப் பாடங்கள் ஏதாவது முடிக்க வேண்டியது இருந்தால் அல்லது அடுத்த நாள் பரீட்சைக்கு படிக்க வேண்டியிருந்தால் சீக்கிரம் முடிக்க வைத்து இரவு உணவு உட்கொள்ள வைப்பாள். குழந்தைகளை கவனித்த பிறகு வீட்டில் இருக்கும் கத்தி, அரிவாள்மணை போன்ற ஆயுதங்களை ஒளித்து வைப்பாள். ப்ளீச்சிங்க் பவுடர், பினாயில் இத்யாதி சுத்திகரிப்பு பொருட்களை மறைத்து வைக்க வேண்டும். முக்கியமாக இரவு வாசலில் அழைப்பு மணி ஒலித்தால் மஞ்சு தான் போய் திறப்பாள்.

வாசலில் முழு போதையோடு கோபமாக நின்று கொண்டிருக்கும் ஜகன் நுழைந்தவுடனேயே யார் கதவைத் திறந்தார்களோ அவர்கள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு விட்டு, “என்ன உங்களுக்கு என்னைப் பார்த்தால் அவ்வளவு அலட்சியமா போயிடிச்சா? ‘பெல்’ அடிச்சா உடனே தொறக்க மாட்டீங்களா?” என்று கச்சேரியை ஆரம்பிப்பான்.

ஆரம்ப காலங்களில் “ஏங்க? இப்படி தெனைக்கும் குடிச்சிட்டு வர்றீங்களே? உங்களுக்கே இது நியாயமாயிருக்கா?” என்று மஞ்சு ஆதங்கமாகக் கேட்டால், உடனே ஓடுவான் சமையலறைக்கு, கத்தியையோ அரிவாள்மணையையோ எடுத்து வர. “ஏண்டி! நீ சம்பாரிச்ச காசில குடிச்சேனா? இல்ல ஒங்கப்பன் வீட்டுக் காசை யெடுத்து குடிச்சேனா?” என்று அவளைப் பார்த்து கத்தியை ஓங்குவான். அவனிடமிருந்து தப்பிக்க சினிமாவில் வருவது போல சோஃபாவைச் சுற்றி, கட்டிலைச் சுற்றி ஓடுவாள் மஞ்சு. சில சமயங்களில் குழந்தைகள் முழித்துக் கொண்டிருந்து மிரட்சியோடு பார்ப்பார்கள். “என்னை எங்கப்பன் படிக்க வைக்கில. ஆனா நா உங்களை ‘ஃபீஸ்’ கட்டி படிக்க வெக்கிறேன். ஒழுங்கா படிக்கலேன்னா பாரு!” என்று அவர்கள் பள்ளிக்கூடப்பையை எடுத்து புத்தகம், நோட்டுப் புத்தகங்களை தாறுமாறாகக் கிழிக்க முற்படுவான். குழந்தைகள் பயத்தில் கதற அப்போது அவனுடன் புத்தகப்பையைக் காப்பாற்ற நடக்கும் போராட்டங்களில் எல்லோருக்குமே அடி உதை கணக்கில்லாமல் கிடைக்கும். மஞ்சுவிற்கும் இள வயது. கோபம்,. ஆத்திரம் எல்லாம் வரும். அவனை சரிக்கு சரி கத்தி ஓய்ந்த பிறகு உடலும் மனதும் தளர, “எல்லாம் என் தலையெழுத்து! இப்படி ஒரு ஜன்மத்தைக் கட்டிக்கிட்டு மாரடிக்கணும்னு இருக்கே!” என்று அழ ஆரம்பிப்பாள். உடனே ஜகன் ரௌத்திரம் ஜாஸ்தியாக, “இப்போ என்னாங்கிற? நா செத்துப் போகணும்? அதானே ஒன் ஆசை? அப்புறம் நீ நிம்மதியா உங்கம்மா வீட்டில போய் ஒக்காந்துக்கலாம் அவ்வளவுதானே? இப்பவே ப்ளீச்சிங்க் பவுடரை தின்றேன் பாரு! பினாயி;ல் எங்கே? அதைக் குடிச்சா செத்துரலாம் இல்ல! ” என்று ஓடிப் போய் பினாயில் பாட்டிலை எடுத்துத் திறக்க முயற்சிக்கும்போதே மஞ்சு பதறிப் போய் அவனிடமிருந்து அதனைப் பிடுங்கி வைக்க முற்படும்போது அவன் விடாமல் ஆக்ரோஷமாக அவளை எட்டி எட்டி உதைப்பான். பிறகு அவனே ஓய்ந்து போய் ‘தொப்’பென்று கட்டிலில் விழுவான்.

இதையெல்லாம் பார்த்து அரண்டு போய் நிற்கும் குழந்தைகள். உஷா அம்மா மடியில் புதைத்த தலையை நிமிர்த்தவே நிமிர்த்தாமல் தேம்பிக் கொண்டே இருப்பாள். கொஞ்சம் விவரம் தெரிந்த விக்னேஷ், “அம்மா! எனக்கு ரொம்ப பயமா இருக்கும்மா. நாம்ப இந்த வீட்டில இருக்க வேண்டாம்மா! எங்கேயாச்சும் போயிடலாம்மா!” என்பான். தான் முதலில் சுதாரித்துக் கொண்டு பிறகு குழந்தைகளை சமாதானப்படுத்தித் தூங்க வைத்து ,’இதென்ன வாழ்க்கையென்று நாம் வாழ்கிறோம்?’ என்று விரக்தியோடு விட்டத்தைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பவள் எப்போது தூங்கினாள் என்றே தெரியாமல் காலையில் அலாரம் ஐந்து மணிக்கு ஒலித்தவுடன் சட்டென்று எழுந்து வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவாள்.

ஆனால் என்றாவது அபூர்வமாகக் குடிக்காமல் வரும் நாட்களில் அவ்வளவு அன்பாக இருப்பான் அவளிடமும் குழந்தைகளிடமும். அப்போது அவளும் மெதுவாக எடுத்துச் சொல்வாள். ‘இந்த பாழாய்ப் போன குடி எப்படி தங்கள் வாழ்க்கையை சீரழிக்கிறது. இது தேவை தானா நமக்கு?’ என்று. அவள் மொதல் நாள் சாதாரணமாகச் சொல்லியிருப்பாள், “நீங்க நல்ல அரசாங்க வேலையில இருக்கீங்க. உங்களுக்கு மட்டும் இந்தப் பழக்கம் இல்லாம இருந்திருந்தா உங்க சம்பாத்தியத்திலேயே நாம்ப நல்லா வாழலாங்க. நான் தனியார் கம்பெனியில ஒரு வேலைக்குப் போய் சம்பாரிக்கணும்னு தேவையேயில்லை” என்று. அடுத்த நாளே திரும்ப வேதாளம் முருங்கை மரம் ஏறி விடும். “நேத்து என்னடி சொன்ன? என் சம்பளம் முழுசும் குடிக்கே போயிடுதுன்னா? ஏன்? வீட்டில டீவி யார் வாங்கிப் போட்டாங்க? ஃப்ரிட்ஜ் எங்கேர்ந்து வந்தது? ஒங்கொப்பனா வாங்கிக் குடுத்தான்? போய்ப் பாருடீ! ஊருல குடிக்காதவன் யாரிருக்கான்னு?” திரும்பத் திரும்ப அடி, உதை! அர்த்தமில்லாத பேச்சுகள்! அவன் தெளிவாக இருக்கும்போது இருப்பது போல போதையில் இருக்கும்போது இருக்க மாட்டான் என்பதால் அவனிடம் பார்த்து தான் எதையும் பேச வேண்டியிருக்கிறது என்பதை மஞ்சு புரிந்து கொள்ளவே வருடங்கள் ஆகி விட்டன. சொந்தபந்தங்களுக்கு அவரவர் வீடு, வாழ்க்கை பிரச்சினைகள். யாரிடமும் போய் நிற்க முடியாது. எந்த விதத்திலும் தன் எதிர்ப்பைக் காட்டக் கூட வழியில்லாமல் இந்த வாழ்க்கையை அவள் தான் வாழ்ந்தாக வேண்டும் என்று நன்றாக உணர்ந்து கொண்டபடியால் மஞ்சு வாயே திறக்காமல் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறாள்.

கீரை விற்கும் பொன்னம்மா தான் குரல் கொடுத்தாள். காலையில் கீரை மாலையில் பூ வியாபாரம் செய்யும் பொன்னம்மாவின் சுறுசுறுப்புக்கு ஈடு இணையே கிடையாது. ஆனால் இப்போதெல்லாம் அவள் முகத்தில் ஒரு சோர்வு! புருஷன் மொடாக் குடிகாரன். குடித்து விட்டு வந்து இரவு இடுப்பில் எட்டி எட்டி உதைப்பானாம். வலது பக்க இடுப்பெலும்பே வளைந்து விட்டதாம். “நானும் அவன் ஒதைக்க வரச்சொல பீச்சக்கை பக்கமா திரும்பி அந்த சைடு இடுப்பைக் காட்டணும்னு தான் நெனைச்சிப்பேம்மா. ஆனா பதட்டத்தில மறந்து போய் ஒரே பக்கமா ஒதை வாங்கி வாங்கி இப்படியாயிடுச்சிம்மா!” என்று சிரிப்பாள். மஞ்சுவுக்கு தான் கோபத்திலும் ஆத்திரத்திலும் உடம்பே ‘தட தட’ என்று ஆடும். இந்த அழகில் தினமும் காலையில் குடிக்க நூறு ரூவா காசு குடுப்பதே பொன்னம்மா தான். இல்லாவிடில் மண்டகப்படி காலையிலேயே ஆரம்பித்து விடுமாம்.

பொன்னம்மா கதை இப்படி என்றால் வீட்டில் இரண்டு வருடங்களாகப் பாத்திரம் தேய்த்துத் தரும் கண்ணாத்தாவின் கதை இன்னுமே சோகம். ஆரணியில் மஞ்சக் காணியாக தன் தாய் வழி தனக்கு வந்த நிலத்தில் பயிர் வைத்து விவசாயம் செய்து வளமையாக இருந்த கண்ணாத்தா, புருஷனின் குடிப் பழக்கத்தால் எல்லாம் போய் பிழைக்கவென்று மூன்று பிள்ளைகளோடு சென்னைக்கு வந்து இப்படி வீடு வீடாகப் பாத்திரம் தேய்த்து அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறாள். மஞ்சு ஒரு நாள் பச்சைப் பயறில் வீட்டில் செய்திருந்த சுண்டலில் கொஞ்சம் கண்ணாத்தாக்குக் குடுக்கப் போக அவளுக்கு துக்கம் பீறிட்டுக் கிளம்பியது.

“எங்கையால இந்தப் பயறு எவ்வளவு வெளைச்சல் எடுத்து எத்தனை பேருக்குக் கொடுத்திருக்கேன்? எவ்வளவு வளமான பூமி? இதையெல்லாம் இங்க வர்ற வரை நாங்க காசு கொடுத்து வாங்கினதேயில்லையேம்மா! இந்த பாழாய்ப் போன குடி என் வாழ்க்கையை இப்படி சீரழிச்சிடுச்சே!” என்று பொங்கிப் பொங்கி அழுதாள். ஒரு நாள் கண்ணாத்தாவின் பதினாலு வயது பெரிய பிள்ளை பதட்டமாய் ஓடி வந்தான். அவனுடைய அப்பா தினமும் அதிகாலை மூன்று மணிக்கு எங்கேயோ போய் குடித்து விட்டு வருவாராம். ‘டாஸ்மாக்’ கடைகள் திறக்காத அந்த நேரத்தில் ஏதோ போலி சரக்கை யாரோ விற்பார்களாம். அந்த கலப்பட சரக்கால் மனநிலை பாதிக்கப்பட்டு இப்போது கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அவர் ‘அட்மிட்’ செய்யப் பட்டிருக்கிறாராம். மஞ்சுவிற்கு பயத்தில் சர்வாங்கமும் ஒடுங்கிப் போனது. இந்தக் குடியினால் எப்பேர்ப்பட்ட பாதிப்பு? எல்லோருடைய குடும்பத்தையும் கெடுக்கும் இந்தக் குடியை ஆள்பவர்களிலிருந்து அரசியல்வாதிகளிலிருந்து எல்லா தரப்பு ஜனங்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்?

தினமும் காலையில் வேலைக்குப் போக நிற்கும் பேருந்து நிறுத்தந்தான். இன்றைக்கு ஏதோ வித்தியாசமாக இருப்பது போலத் தோன்றியது மஞ்சுவிற்கு. நிறுத்தத்திற்கு வலது பக்கத்தில் வெகு அருகில் ஒரு ‘டாஸ்மாக்’ கடையிருக்கும். இடது புறத்தில் ஒரு சிவன் கோவிலும் மற்ற கடைகளும் அமைந்து ஜன நடமாட்டம் எப்போதும் இருக்கும் பகுதி தான் அது. ‘டாஸ்மாக்’ கடை பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருப்பதால் ‘குடி மகன்கள்’ அங்கேயே தான் விழுந்து கிடப்பார்கள். சில சமயங்களில் அவர்களை மிதித்து விடாமல் ஜாக்கிரதையாகப் பேருந்தில் ஏற வேண்டியிருக்கும். அந்த ‘ஏரியா’க்காரர்களும் அரசாங்கத்தில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோருக்கும் கடையை வேறு இடத்திற்கு மாற்றச் சொல்லி மனு கொடுத்து ஒரு பயனுமில்லை.

‘டாஸ்மாக்’ கடை வாசலில் பெண்கள் கூட்டம். பலமுறை மன்றாடிக் கேட்டு ஒன்றும் பலனில்லாததால் பாதிக்கப்பட்ட பெண்களே, ஒரு மாதர் சங்கம் தலைமை ஏற்க, கையில் கம்பு, கடப்பாரை, நீண்ட இரும்புக் கம்பிகள் என்று பல்வேறு ஆயுதங்களை ஏந்தி ஆக்ரோஷமாகக் கடை மீது சராமாரியாக தாக்குதல் நடத்த ஆரம்பித்தார்கள்! காலையில் கடை எப்பொழுது திறக்க வேண்டும் என்று நேரம் அரசாங்கம் நிர்ணயித்த போதிலும், குடிப்பவர்களின் வசதிக்காக தினமும் வெகு சீக்கிரமே கடையைத் திறந்து வியாபாரத்தை ஆரம்பிக்கும் கடைச் சிப்பந்திகள் பயத்தில் தெறித்து ஓட, இப்போது கடைக்குள்ளேயே புகுந்த பெண்கள் சரக்குகளை வெளியே தூக்கிப் போட்டு அடித்து நொறுக்கினார்கள்.

எத்தெத்தனை வடிவங்களில் பாட்டில்கள்! சப்பை, உருண்டை, நீள் சதுரம், மருந்து பாட்டில் வடிவத்தில், உசரமான பீர் பாட்டில்கள்! ஒவ்வொன்றாக கீழே போட்டு இரும்புக் கம்பியால் அடித்தார்கள்! மஞ்சுவும் பதற்றத்துடன் அவர்களுடன் போய் நின்று கொண்டாள்.

“எங்கப்பன் இந்த குடியால எங்கம்மாளையும் எங்களையும் சீரழிச்சான். எம்புருஷன் இப்போ சம்பாதிக்கிற காசையெல்லாம் இந்தக் கடையிலேயே ‘தாராந்துட்டு’ எங்களை நடு ரோட்டில நிறுத்தி யிருக்கான். எம் புள்ள தலையெடுத்து என்னையக் காப்பாத்துவான்னு நெனைச்சேனே, கடவுளே! அவனும் இப்போ இந்தக் கடையே கதின்னு கெடக்கிறானே? இந்த பாதகத்தை யாரு கிட்டே சொல்லி அழுவேன்?” அடி வயிற்றிலிருந்து பெரிதாக ஒரு கேவல் ஒலிக்க, ஒரு பெண் ஆற்ற மாட்டாமல் பெருங்குரலெடுத்து அழத்தொடங்கினாள்.

“இனிமே ராவுல குடிச்சுப்புட்டு வந்து எம்புள்ளீங்களையும் என்னையும் அடிப்பியா? நாள் முச்சூடும் நா ஒழைச்சு கொண்டார காசில வாங்கி சோறாக்குற ஒரு வாய்ச் சோத்தை குழந்தைகளை நிம்மதியா துண்ண வுடுவியா? படிக்குற புள்ளீங்களை ஒழுங்கா படிக்க வுடுவியா? எங்களை ஒரு ராவிலயாச்சும் முழுசா தூங்க வுடுவியா? சொல்லுய்யா, சொல்லு!” அந்த சப்பை பாட்டிலை தன் புருஷனாக பாவித்து ஓங்கி ஓங்கி அடித்த ஒரு பெண் கடைசியில் துக்கம் தாளாமல் அப்படியே சரிந்து உட்கார்ந்து ,

“நா ஒனக்கு இன்னா கெடுதி செஞ்சேன்யா? என்னைய இப்படி ஒரு நா கூட நிம்மதியா வாழ வுடாம பாடாய் படுத்திறியே?” என்று குமுறிக் குமுறி அழுதாள். ‘நீ நினைத்ததையெல்லாம் சொல்லிட்டேம்மா! என்னால் தான் வெளியில் ஒண்ணும் சொல்லிக்க முடியல! வாழ்க்கையில் பொறுமையாக இருந்து எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு போக வேண்டும் என்று வளர்க்கப்பட்ட விதமும், தன் குடும்ப அவலங்கள் வெளியே தெரியக் கூடாது என்கிற பாழாய்ப் போன குடும்ப கௌரவமும் தடுக்கிறது.’ மனதில் எழுந்த எண்ணத்தில் அவளைப் பார்த்து துக்கம் நெஞ்சையடைக்க மஞ்சு அவள் தோளில் கையை வைத்து தன்னோடு அணத்துக் கொண்டாள்.

எல்லாப் பெண்களின் கைகளிலும் பற்பல ஆயுதங்கள். மஞ்சுவின் கையிலும் ஒரு இரும்புத் தடி வைக்கப்பட்டது.

“குடியைக் கெடுக்குற குடியை ஒழிப்போம்!”

“பெண்களின் வாழ்வை அவலமாக்கிற குடியை பந்தாடுவோம்! ஊரை விட்டே விரட்டுவோம்”

பலவிதமான கோஷங்களோடு கடையை சூறையாடினார்கள் பெண்கள். கைகள் நடுங்க மஞ்சுவும் தனக்கருகில் வீசப்பட்ட பாட்டில்களை பலமாக அடித்து தூள் தூளாக்கினாள். அதற்குள் இவர்கள் செயலால் அந்த ஏரியாவே பதட்டமானது. போலீசுக்கு சொல்லிவிட்டார்கள் போல. எங்கோ தூரத்தில் சைரன் ஒலி கேட்டது. கேமிராவும் கையுமாக ஒரு ‘டீவி’ வண்டி வேறு வந்திறங்கியது. அந்த நேரத்தில் ஒரு பேருந்து அங்கே வந்து நிற்க, நிறைய பெண்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு அதில் ஏறினார்கள். மஞ்சுவும் விரைந்து ஏறி ஒரு சீட்டைப் பிடித்து உட்கார்ந்தாள்.

“சட்னு பஸ்ஸை எடு. ஏதாவது தகராறு நடந்து பஸ்ஸில கல்லு கில்லு வீசறதுக்கு முன்ன போயிடலாம்” கண்டக்டர் பதட்டமாக குரல் கொடுக்க பஸ் விரைந்து அந்த ஏரியாவை விட்டகன்றது.

ஏதோ ஒரு விதத்தில் தானும் தன்னையறியாமலேயே தன் எதிர்ப்பை இந்த சமுதாயத்திற்குக் காட்டியிருக்கிறோம் என்ற நினைப்பு மனதில் ஒரு ஆறுதலைத் தோற்றுவிக்க, தலையோடு கால் தொப்பலாக வியர்வை வழிய பதட்டத்தில் இதயமே தெறித்து வெளியே வந்து விழுந்து விடும் போல பெரிய பெரிய மூச்சுகளாக விட்டுக் கொண்டு பேருந்தில் அமர்ந்து அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தாள் மஞ்சு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *