பொய்க்கால் கழுதைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 22, 2012
பார்வையிட்டோர்: 7,065 
 

தலைவருக்கு வயது தொண்ணூறு. தளதளவென்று பரங்கிப் பழம்போல் முகம். இட்ட அடி நோக இருவர் தாங்கி பிடித்துக் கொள்ள, மெல்ல நடந்து வந்தார். திண்டில் மடங்கிச் சாந்தார்.

பேட்டிக்கு நோட்டைப் பிரித்துக் கொண்டேன்.

“ வாழ்த்துக்கள் ! உங்களுக்குத் தொண்ணூறு வயது இன்று. ” ஆசீர்வாதத்திற்குக் கையை உயர்த்தினார். “ எழுதிக் கொள்ளுங்கள். ஆளும் கட்சியின் அராஜகம் நாளுக்கு நாள் … ” என்ற வழக்கமான அரசியல் வார்த்தைகளில் ஆரம்பித்தார்.

“ மன்னிக்க வேண்டும். ”

என்ன என்று கண்கள் கேட்க முகத்தை உயர்த்தினார்.

“ எப்போதும் போன்ற உபதேசங்கள் வேண்டாம். அடிப்படைகள் குறித்துப் பேச விரும்புகிறேன். ”

“ ம் ? ”

“ எழுபது வருடமாக அரசியலில் புழங்கி வருகிறீர்கள். எத்தனையோ விநோதமான யோசனைகளை முன் வைத்திருக்கிறீர்கள். அரசுக்கு எதிராக ராணுவம் கிளர்ச்சி செய்ய வேண்டும். நாடு உருப்பட வேண்டும் என்றால் அரசியல் கலாசார, ஆன்மிக மாறுதல்கள் ஏற்பட வேண்டும் என்றெல்லாம் பேசி வந்திருக்கிறீர்கள். எப்போதேனும் சாதாரண மனிதனை நினைத்துப் பார்த்ததுண்டா ? ”

கேள்வி முகத்தில் அறைந்தது. திகைத்துப் போனார் தலைவர். அரை நிமிடம்தான். அதற்குள் சமாளித்துக் கொண்டு முறுவலித்தார்.

“ மை டியர் ஆங்கிரி யங்மேன் … ” என்று ஆரம்பித்தார். சடாரென்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு சரிந்தார். அம்மா என்று முனகினார். உடனே நினைவிழந்தார். பக்கத்திலிருந்த தொண்டர்கள் திமுதிமுவென்று ஓடி வந்தார்கள். டாக்டருக்கு போன் பறந்தது. முதலுதவிப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தார் ஒருவர். பரபரவென்று உள்ளங்காலில் சூடு பறக்கத் தேய்த்தார் ஒருவர்.

சாப்பிட உட்கார்ந்து சற்று நேரம் ஆகியிருக்கும். பாதிச் சாப்பாட்டில் வாசற் கதவு இடிஇடியென்று குலுங்கியது. பயமும் பதற்றமும் தெரிந்த இடிப்பு. பதிலுக்குக் காத்திராமல் சார், சார், என்று மிரண்ட குரல். முதுகுக்குப் பின்னால் கையை மறைத்துக் கொண்டு கதவைத் திறந்தேன். சந்திரசேகர்.

“ சாப்பிடறீங்களா சார், ஸாரி. ”

“ என்ன சேகர், இத்தனை பதற்றம் ? ”

“ சாப்பிட்டு வாங்க, போகலாம். ”

“ என்னப்பா ? ”

“ நீங்க சாப்பிடுங்க சொல்றேன். ”

“ ப்ச். விஷயத்தை சொல்லு முதலில். ”

“ ரகுவிற்கு நிலைமை மோசமாயிருக்கிறது. தூக்கி தூக்கிப் போடுகிறது. அவன் அம்மாவிற்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. மிரண்டு போய், நடுவார்டில் ‘ ஓ ’ வென்று அழுகிறாள். நீங்கள் வந்து இரண்டு வார்த்தை சொன்னால் அடங்குவாள்.”

சாப்பாட்டை கைகழுவி விட்டுச் சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்டேன்.

இன்னைக்கெல்லாம் இருந்தால் ரகுநாதனுக்கு இருபது வயதிருக்கும். வெகு சூட்டிகையான பையன், வேலைக்குச் சேர்ந்த அன்றே வித்தை தெரிந்த ஆள் என்று காண்பித்துவிட்டான். சின்னப் பையன் என்று டெஸ்பாட்டிச்சில் போட்டிருந்தேன், அதிகம் வேலை இல்லாத நாற்காலி. ஆனால் உட்கார்ந்திருந்தோம். வேலை செய்தோம், வீட்டுக்குப் போனோம் என்ற நிம்மதி கிடையாது. மருந்துக் கம்பெனி ஆனதால் தினம் இருநூறு முன்னூறு கடுதாசி வெளியில் போகும். அதில் பாதி டாக்டர்களுக்கு அனுப்பும் ஞாபகக் கடிதங்கள். இன்ன ஊரில், இந்த டாக்டருக்கு, இன்ன தேதியில், இன்ன ப்ராடெக்ட் என்று போக வேண்டும். ஆண் டாக்டருக்கு பிரசவ மருந்தும், குழந்தை டாக்டருக்கு கருத்தடை மாத்திரையும் போனால் தபால் செலவு தண்டம். வருகிறவர்கள், போகிறவர்கள் எல்லாம் இவருக்குப் போச்சா, அவருக்குப் போச்சா என்று குடைந்து கொண்டு இருப்பார்கள். அப்படிப் போகவில்லை என்றால் அதனால்தான் விற்பனை குடி மூழ்கிப் போயிற்று என்று கூவுவார்கள். இவனை மாதிரிச் சின்ன பையனாக இருந்தால் கேட்கவே வேண்டாம். எல்லோருக்கும் கிள்ளுக்கீரை. ஆனால் ரகுநாதன் வந்த அன்றைக்கே வேலையைப் புரிந்து கொண்டு விட்டான். கிடுகிடுவென்று பெயர்களை அகர வரிசைப்படுத்திக் கொண்டான். இந்தத் தேதியில் இன்ன ஊர் என்று திட்டம் செய்தான். செய்தவற்றை என்னிடம் காண்பித்து ‘ சரியா சார் ’ என்று ஒப்புதல் வாங்கிக் கொண்டான்.

இதையெல்லாம் பார்த்து நான் பிரமித்துப் போனேன். இத்தனை சின்னப் பையன் இப்படித் துருதுருவென்று காரியம் செய்வதைக் காண ஆனந்தமாய் இருந்தது. இதே நேரத்தில் கூடவே ஒரு உறுத்தல். இத்தனை புத்தியும், கூர்மையும் உழைப்பும் இருந்தும் இவனுக்கு ஒரு கடைநிலை குமாஸ்தாவாகத்தான் வாழ்க்கையைத் துவக்க முடிந்திருக்கிறது. குறுக்கே விழுந்த முட்டுக்கட்டை படிப்பு. அதற்கு உண்டான விலை, மூச்சுப் பிடித்து எஸ்.எஸ்.எல்.சி, வரை படித்தான். அதற்குமேல் படிக்க ஐவேஜ் இல்லை. அப்பா இல்லாத பையன். அம்மா சமையல்காரி. அண்ணா தாலுகா ஆபீஸ் குமாஸ்தா. பணமும் படிக்க வாய்ப்பும் கிடைத்திருந்தால் பையன் கிடுகிடுவென்று முன்னேறி இருந்திருப்பான். விதி வேறுவிதமாக இருந்திருக்கும். இந்த நேரத்தில் அநேகம் பேருடைய வாழ்க்கையைத் தீர்மானிப்பது, திசை திருப்புவது எல்லாம் பணம், புத்தி இல்லை. உழைப்பு இல்லை. இந்தப் பரிதாபத்திற்குப் பலியாகிப் போனவன் ரகுநாதன்.

மொத்தம் மூன்று மாதம் வேலை செய்திருப்பான். ஒரு வியாழக்கிழமை மத்தியானம் விடுமுறைக்கு விண்ணப்பம் போட்டான்.

“ என்னப்பா ? ”

சற்று முன்னே வந்து வேட்டியை விலக்கிக் காண்பித்தான். முட்டியில் இருந்து கணுக்கால் வரை செவ செவ என்று தடித்திருந்தது. துடைப் பக்கத்தில் வீக்கம். அரையிடுக்கில் நெறிகட்டிக் கொண்டு இருக்கிறது என்று கூசிக் கூசிச் சொன்னான். “ விஷக்கடி போலிருக்கிறது சார். மந்திரிக்கணும், மாரியம்மன் கோவில் போக வேண்டும். ”

நிமிர்ந்து முகத்தைப் பார்த்தேன். நீர் கோர்த்துக் கொண்டிருந்தது மாதிரி ஒரு உப்பல். இது விஷக்கடி இல்லை. வேறுவிதம் என்று பார்த்ததும் தெரிந்துவிட்டது.

“ சாமி வேண்டாம். டாக்டரை பாரப்பா ” என்ற சொல்லி அனுப்பி வைத்தேன். மறுநாள் வரவில்லை. ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருப்பதாக செய்தி வந்தது. அதற்கடுத்த நாள் பதறிக் கொண்டு சேகர் வந்து நிற்கிறான்.

தலைவர் கண் விழித்ததும் டாக்டர் முகத்தைப் பார்த்தார். முறுவலித்தார். “ களைப்பாய் இருக்கிறது ” என்றார். யாரோ சில்லிட்ட பழரசம் கொண்டு வந்தார்கள். “ வேண்டாம் ” என்று நிறுத்தினார் டாக்டர். “ அதிகம் தண்ணீர் கொடுக்க வேண்டாம். கிட்னி செயலிழக்கத் துவங்கி இருக்கிறது. நல்ல வேளையாக ஒரு கிட்னி மட்டும். உடனே ஆஸ்பத்திரியில் சேர்ந்து கொள்ளுங்கள். ”

“ ஆஸ்பத்திரி. அவசியம்தானா ? ”

“ இடைவிடாத கண்காணிப்பு வேண்டும். இங்கு அது சாத்தியமா ? ”

“ முடியும் டாக்டர். கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள முடியும். இன்றைக்கு நீங்கள் இங்கு தங்கி விடலாமே. ”

“ இங்கேயா ? அரசாங்க டாக்டர் நான். ஒரு அவசரத்திற்கு பரவாயில்லை. ஆனால் இங்கேயே தங்கி விடுவது … ”

“ அதற்கான பெர்மிஷன்தானே… இதோ வாங்கி விடுகிறோம் ” அந்தரங்க உதவியாளர் முதல்விரிடம் அவசரக் கால் போட்டுப் பேசினார். ‘ அடடே ’ என்று பதறினார் முதல்வர். உடம்பைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி அறிவுரை சொன்னார். டாக்டர் விஷயத்திற்கு, தாமதமின்றி, சரி என்றார்.

கேஷுவாலிட்டி வாசலின் வழியே புகுந்து கிடுகிடுவென்று வார்டுக்குப் போனேன். பொது வார்டு படுக்கையிலும், தரையிலும் முனகிக் கொண்டிருந்த வியாதிகள்.

ரகுவைச் சுற்றி சின்னக் கூட்டம். கையும், காலும் கிடுக்காய் பின்னிக் கொள்ள வாயில் நுரை தள்ளி இருந்தது. பல்லுபட்டு, நாக்கிலும், உதட்டிலும் ரத்தம். நர்ஸுகளோ, டாக்டர்களோ யாரும் காணோம். வார்டு பையன் யாருக்கோ காபி வாங்க கடைக்குப் போயிருப்பதாகத் தகவல். நான் வேகமாய் நகர்ந்து மேஜை மீது பேப்பர் வெயிட் போலிருந்த ரப்பர் துண்டைக் கழுவி, பற்கள் மோதிக் கொள்ளாதபடி வாயில் திணித்தேன். கையையும், காலையும் சூடுபறக்க தேய்த்தேன். உடலின் துள்ளல் அடங்கிற்று. ஒரு அரை நிமிடம் கண்ணை விழித்துப் பார்த்தான். உடம்பு முழுக்க ஊதிக் கிடந்தது.

எப்படியோ செய்தி போய் எங்கிருந்தோ ஒரு நர்ஸ் வந்தாள். ‘ விலகிப் போங்க ’ என்று அதட்டல் போட்டாள். “ இதை யார் வைத்தது ? ” என்று உறுமினாள்.

“ டாக்டர் யாரும் இல்லையா ? ”

“ யாரு நீங்க ? ”

இதற்கு பதில் சொல்வது அநாவசியம் என்று நினைத்தேன்.

“ இது யார் யூனிட் ? ”

“ நீங்க யாரு, ஸ்டூடண்டா ? ”

கட்டிலில் மாட்டி இருந்த சார்ட்டிலிருந்து யூனிட் சீஃப்பின் வீட்டு நம்பரையும் தெரிந்து கொண்டேன். வார்டிலிருந்த போனை எடுத்தேன். தஞ்சாவூரில் ஒரு சௌகரியம். டயல் கிடைக்காது. நம்பர் ப்ளீஸ் தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *