‘பதிவிரதை’ காந்தாரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2021
பார்வையிட்டோர்: 3,471 
 

(இதற்கு முந்தைய ‘வாத்ஸ்யாயனர்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

ஒருபெண் காதல் கடிதம் எழுதும் சிலையை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செதுக்கியவர்கள் இந்தியர்கள், அதுவும் ஒரு கோவிலில்!!

ஆனால் இருபதாம் நூற்றாண்டில் ஆங்கில நாவல்கள் எழுதும் காலம்வரை இதைப் பற்றிப் பேசக்கூட அஞ்சினர் மேலைநாட்டார்.

வாத்ஸ்யாயனரோவெனில் தனக்கு முன்னால் இந்த சாத்திரத்தை எழுதிய பலருடைய பெயர்களைக் குறிப்பிடுகிறார். அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நாற்பொருளையும் மனிதனுக்குத் தேவையான இன்றியமையாத நான்கு பகுதிகளாகவே கருதினர். உலகில் எந்தஒரு சமுதாயத்திலும் இவ்வளவு தெளிவான பகுப்பு கிடையாது.

இந்தியாவின் மேற்குப் பகுதியிலுள்ள குகைக் கல்வெட்டுகளில் புத்தமதப் பெண்களின் பெயர்களே அதிகம் காணப்படுகின்றன. இவர்கள் மூன்றாம் நூற்றாண்டு வரையான பிக்குனிகளும் பெண் நன்கொடையாளர்களும் ஆவர்.

பெண்களில் பலர் ஆசிரியைகளாகவும், துறவிகளாகவும் இருந்ததற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. பாணினியின் சமஸ்கிருத இலக்கண சூத்திரங்களுக்கு எழுதப்பட்ட உரையில் ஆசிரியைகள் (காசிகா) இருந்ததை உறுதி செய்கிறது.

இதேபோல யாக்ஞவல்க்கியரின் தர்மசாஸ்திரத்துக்கு எழுதிய உரையில் போதாயன சூத்ரம் ஒன்றைக் குறிப்பிடுகின்றனர். பெண்களும் துறவிகள் ஆகலாம் என்று அதிலுள்ளது.

பதஞ்சலி எழதிய மஹாபாஷ்யத்தில் சங்கரா என்ற பெண்துறவியின் பெயரைக் காண்கிறோம். காளிதாசனும் தனது காவியத்தில் கெளசினி என்ற பெண்துறவியைக் காட்டுகிறான். மேலும் தன்னுடைய ரகுவம்ச காவியத்தில் வயதான அரச தம்பதியர் வானப்ரஸ்தம் செல்வதைக் காண்கிறோம். பாணினி இலக்கணத்துக்கு உரை எழுதிய காத்யாயனார் அத்யாயிகா, உபாத்யாயி என்ற பெண்பால் சொற்களைக் கொடுக்கிறார்.

ரிக்வேதம் பெண்ரிஷிகளை ‘ரிஷிகா’ என்றழைக்கிறது. பிரம்மச்சர்யத்தை அனுஷ்டித்து கல்விகற்ற பெண்களை ‘பிரம்மவாதினி’ என்றழைக்கிறது. பெண்கள் பிரம்மச்சர்ய விரதத்தைக் கடைபிடித்து கல்விகற்பதை ரிக்வேதம் குறிப்பிடுகிறது. அவர்கள் திருமணமானவுடன், கடலில் நதிகள் சங்கமமாவதைப் போல கணவனுடன் கலக்கிறார்கள் என்றும் கூறுகிறது. வேறுசில வேதமந்திரங்கள் கல்விகற்ற பெண்களை அவர்களுக்கு நிகரான ஆண்களுக்கு திருமணம் முடிக்கவேண்டும் என்றும் கூறுகின்றனர்.

பாணினியத்துக்கு மாபெரும் உரை (மஹாபாஷ்யம்) எழுதிய பதஞ்சலி, ஈட்டி தாங்கிய பெண்ணை சக்திகி என்று குறிப்பிடுகிறார். சங்க இலக்கியமான முல்லைப்பாட்டும் பாசறையில் வாளேந்திய பெண்ணைக் குறிப்பிடுகிறது.

சந்திரகுப்த மெளரியனின் அரசவையில் ஆயுதம் தாங்கிய பெண்கள் இருந்ததாக கிரேக்கதூதன் மெகஸ்தனிஸ் கூறுகிறான். மெளரியர் அவையில் இருந்த கெளடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் வில்அம்பு தாங்கிய வீராங்கனைகளைக் குறிப்பிடுகிறார்.

பாருத் நகரிலுள்ள (கிமு இரண்டாம் நூற்றாண்டு) சிற்பங்களில் குதிரைப்படைக்கு முன்னால் ஒருபெண் கொடியைப் பிடித்தவாறு செல்வதைக் காணலாம்.

புத்தமத பிட்சுக்களின் சங்கத்தில் பெண்களைச் சேர்க்க முதலில் புத்தர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவருடைய பிரதம சீடரான ஆனந்தன் புத்தரிடம் மன்றாடி பெண்களைச் சேர்க்க அனுமதி பெற்றான். ஆரம்பகாலத்தில் புத்தமதம் ஏராளமான பெண்களைக் கவர்ந்திழுத்தது. கருணையே வடிவான புத்தர் தாய் உள்ளங்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை.

விசாகா என்ற பெண்கொடுத்த நன்கொடைக்கு ஈடாக ஆனந்தபிண்டிகன் என்ற வணிகன் ஒருவனால்தான் கொடுக்கமுடிந்தது. வைசாலிநகர அம்பாலிகா; காசிநகர சுப்ரியா ஆகியோர் அப்பெண்மணியின் குழுவிலிருந்து புத்தரின் கொள்கைகளைப் பரப்பினர். சுள்ளவக்கா என்ற நூல் உப்பலவர்ணா என்ற பிக்குணிக்கு ஒருபெண் சீடர் இருந்ததாகக் கூறுகிறது. புத்தப் பெண்துறவியர் “தேரி” என்றழைக்கப்பட்டனர்.

தேரிக்களை புத்தர் பிரதம சீடராகக் கருதியதாகவும், அவர்களில் தம்மதின்னா, கணவர் விட்டுச்சென்ற பெரிய செல்வத்தையும் ஏற்கமறுத்து பெண் துறவியானதாகவும் ‘அங்குத்தநிகாய’ நூலுக்கு உரைஎழுதிய புத்தகோஷர் கூறுகிறார்.

“தாமரைத்தண்டை வாளால் வெட்டுவதைப் போல” அவர் எந்த தத்துவக் கேள்விக்கும் விடைதருவாராம். (ஒரு வில்லாளனின் கையிலிருக்கும் பளபளக்கும் இரண்டு அம்புகளைப்போல கேள்விக்கணைகளைத் தொடுப்பேன் என்று பிருகதாரண்ய உபநிஷத்தில் கார்க்கி வாஸக்னவி என்ற பெண்மணி கூறுவதை ஒப்பிடுக).

‘தேரிகதா’வுக்கு உரை எழுதிய தர்மபால, ஏழுபெண் தலைவிகளின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். இவர்கள் அனைவரும் ஏறத்தாழ 2600 அண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பதை எண்ணும்போது வியப்பாக இருக்கிறது.

ராஜக்ருஹநகர் பெண்மணி சோமா; பேரழகி அனுபமா; ஷமா; சுஜாதா; கணவனையும் துறவியாக்கி தானும் துறவறம்பூண்ட சாபா; பெண்களின் கன்னிமடத்துக்கு கண்காணிப்பாளராக அமர்த்தப்பட்ட கிசகெளதமி; சகோதரன் இறந்தவுடன் துக்கம் தாளாமல் புத்ததர்மத்தை ஏற்ற அழகி சுந்தரி ஆகியோர் அந்த ஏழ்வர்.

சுக்க என்கிற பெண்ணின் பேச்சைக்கேட்க மக்கள்கூட்டம் அலைமோதியதாகவும்; பிள்ளையை இழந்த படசாரா என்ற பெண், தன்னைப்போல குழந்தைகளை இழந்த மேலும் 500 தாய்மார்களுக்கு ஆறுதல் வழங்கியதாகவும், புத்தமத நூல்கள் கூறுகின்றன. 2600 ஆண்டுகளுக்கு முன்னரே சமுதாயத் தலைவிகளையும், துறவிகளையும், தொண்டர்களையும் காண்கிறோம்.

புத்தமத பெண்துறவிகளின் மாதிரியை வைத்துதான் கிறிஸ்தவ கன்னிமாடங்கள் உருவாக்கப்பட்டதாக மேல்நாட்டு அறிஞர்களே எழுதியுள்ளனர். தமிழ்நாட்டில் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த மணிமேகலையும் அவளுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அசோகனின் மகள் சங்கமித்திரையும் புத்தமதத்துக்கு ஆற்றிய தொண்டும் அனைவரும் அறிந்ததே.

வேதகாலத்தில் மைத்ரேயி போன்ற பெண் தத்துவ ஞானிகள் இருந்ததைப்போல, இதிகாச காலத்திலும் பலர் இருந்தனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் சபரி. இவர் தமிழ்நாட்டு ஒளவைப்பாட்டி போன்றவர். இவரை தவஅரசி என்று கம்பன் போற்றுகிறான்.

“அருந்தவத்து அரசி தன்னை அன்புற நோக்கி, எங்கள் துயரம் தீர்த்தாய்..” என்றார். ஆரண்யகாண்டம் – சபரிபடலம்.

ராம லட்சுமனரைக் கண்டபின்னர் பிறவிப்பயனை எய்தியதாகக் கருதி உயிர்துறக்கிறாள் சபரி. வாழ்நாள் முழுதும் தவம் செய்தவர்கள் தாங்கள் விரும்பும் நேரத்தில் உடலைத் துறக்கமுடியும். பீஷ்மர், சம்பந்தர், சங்கரர், வள்ளலார், ஆண்டாள், விவேகானந்தர் போன்றோர் இதற்கு எடுத்துக்காட்டு.

சபரி வாழ்ந்த இடம் (ஆஸ்ரமம்) சொர்க்கலோகம் போலத் திகழ்ந்ததாகவும் கம்பராமாயணம் கூறுகிறது. “எண்ணிய இன்பம் அன்றி, துன்பங்கள் இல்லை ஆன, புண்ணியம் புரிந்தோர் வைகும் துறக்கமே போன்றது அன்றே!” — ஆரண்யகாண்டம் – சபரிபடலம்.

முதல் இரண்டு வரிகள் மதங்க முனிவரின் ஆஸ்ரமத்தையும் அதன் எழிலையும் வர்ணிக்கிறது. அடுத்த இரண்டு வரிகள், ‘அங்கே உலகத்தார் விரும்பும் இன்பம் தவிர துன்பம் என்பதே இல்லை. மேலும் அது நல்வினை செய்தவர்கள் தங்கியிருக்கும் சொர்க்கலோகம் போல இருந்தது’ என்று போற்றுகிறார்.

தற்காலத்தில் கணவனும் மனைவியும் வேலைக்குப் போவதால் குழந்தைகளை கவனிக்கமுடியாமல் போகிறது. அவர்களுக்குத் தாயன்பும், தாயின் மூலமான அறிவும், அறிவுரையும் கிடைக்காமல் போகிறது. பணத்தையும், வசதிகளையும் தியாகம் செய்தாவது குழந்தைகளைப் பராமரிப்பது ஒருபெண்ணின் தலையாய கடமையாகும். இந்த உண்மையை விளக்கும் அருமையான கதை ஒன்று மஹாபாரதத்தில் உள்ளது.

மஹாபாரதம் யுத்தம் முடிந்து துரியோதனன் முதலியோர் இறந்தபின்னர், திருதராட்டிரன் அவனுடைய மனைவி காந்தாரிக்கு ஆறுதல் கூறுகிறான். அப்போது அவன் மனைவி காந்தாரியின் தவற்றையும் சுட்டிக்காட்டுகிறான். கண்பார்வையற்ற திருதராட்டிரன், “தவிர்க்கமுடியாத சோகம் ஏற்பட்டுவிட்டது தேவி. இதற்கு நீயும் ஒருகாரணம். நான் உன்னைத் திருமணம் செய்துகொண்ட நாளில் முதலிரவில் கூறிய வாசகங்கள் நினைவிருக்கிறதா? நீ உன் கண்களை துணியால் கட்டிக்கொண்டு வெளி உலகைப்பார்க்க மறுத்தாய்… நானோ பிறவிக்குருடன். உன்மூலமாக உலகைக் காணலாம் என்று நம்பியிருந்தேன். ஆனால் கண்களைக் கட்டிக்கொண்டு ‘பதிவிரதை’ என்றபெயர் எடுப்பதிலேயே கவனமாக இருந்தாய்…

“துரியோதனன் பிறந்தவுடனேயே குழந்தையை உன் மடியிலிட்டபோது, நீ கண்களைத் திறந்துபார்த்து தாயின் அன்பைப் பொழியவேண்டும் என்று உன்னிடம் கெஞ்சினேன். தாயன்பு காட்டுவதைவிட ‘பதிவிரதை’ என்ற பெயர் எடுப்பதில்தான் உன்கவனம் இருந்தது. தாயின் அன்பு இல்லாததால்தான் உன் பிள்ளைகள் சுயநலக்கரர்களாகவும், அதர்மவான்களாகவும் வளர்ந்தார்கள்…

“ஆனால் குந்திதேவியோவெனில், கணவன் பாண்டுவுடன் முதல்மனைவி மாத்ரியை அனுப்பிவிட்டு, தன் குழந்தைகளையும் மாத்ரி குழந்தைகளையும் (பஞ்ச பாண்டவர்கள்) தாயன்போடு வளர்த்தாள். அதனால்தான் அவர்கள் அறநெறிச்செல்வர்களாக வளர்ந்தார்கள்…” என்றான். எவ்வளவு உண்மையான வேதனையான கூற்று..!!

போருக்கு முன்பாக துரியோதனனைக் காப்பாற்ற ஒரேயொரு வாய்ப்பு கிடைத்தது காந்தாரிக்கு. அவள் கண்கட்டை அவிழ்த்து துரியோதனனின் உடலைப் பார்த்தால் அவளுடைய பார்வை விழுந்த இடமெல்லாம் வலுப்பெறும். துரியோதனனை யாரும் அழிக்கமுடியாது என்றும் கூறப்பட்டது.

ஆனால் துரியோதனனின் கெட்டகாலம், காந்தாரி தன் கண்கட்டை அவிழ்த்தபோது, துரியோதனன் வெட்கப்பட்டு தன் தொடையை துணியால் மறைத்துக்கொண்டானாம். இறுதியில் அந்த பலவீனமான தொடையில் கதையால் அடிக்கப்பட்டு அவன் உயிர் இழந்தான். பீமனுக்கு துரியோதனனின் பலவீனமான பகுதி ரகசியம் தெரிந்திருந்தது. ஒரு தாயின் பார்வைக்கு எவ்வளவு சக்தி என்பதை இந்தச் சம்பவம் நிரூபிக்கிறது.

பெண்ணின் சக்தி ‘ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே’ என்பதுதான் வேதவிதியின் கதை…

பிருஹஸ்பதியின் மகன் குஷத்வஜன் பெரிய ரிஷி. அவருடைய மகள் வேதவதி ஒரு பேரழகி. அவளை விஷ்ணுவுக்கே திருமணம் செய்யவேண்டும் என்பது தந்தையின் ஆசை.

தைத்தியர்களின் அரசனான ஷம்பு, வேதவதியை மணம்புரிய வந்தான். குஷத்வஜன் மறுக்கவே சண்டை மூண்டது. குஷத்வஜன் கொல்லப்பட்டான். ஷம்பு மணம்புரிய முடியாமல் திரும்பினான்.

தந்தையின் விருப்பப்படி விஷ்ணுவை மணம்புரிய எண்ணி வேதவதி இமயமலைக்காட்டில் துறவிபோல தவவேடம் பூண்டு தவம் செய்தாள். அப்போது ராவணன் அந்தப்பக்கம் வந்தான். வேதவதியின் அழகைக்கண்டு மனதைப் பறிகொடுத்தான். அவளை மணக்க விருப்பம் தெரிவித்தான். அவள் விஷ்ணுவைத் தவிர வேறு எவரையும் கல்யாணம் செய்யமுடியாது என்றாள்.

ராவணனோ தான் விஷ்ணுவுக்கும் மேலானவன் என்று கூறி அவள் தலைமுடியைத் தொட்டான். வேதவதி சீறினாள். தன்னைத் தீண்டியவனை மறு பிறவியில் கொல்வேன் என்று சபதம் செய்து தீக்குளித்தாள்.

அவளே மறுபிறவியில் சீதையாக அவதரித்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *