கோவை மாநகரில் வீற்றிருக்கும் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத் திருவிழா.
கோவில் அருகே வாகனங்கள் வராதபடி போக்குவரத்தை ஒரு நாள் முன்பே காவல் துறையினர் மாற்றி அமைத்து விட்டார்கள்.
இருந்தாலும் பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் காலை ஐந்து மணிக்கே கோவில் முன்பு ‘ஜே! ஜே!’ என்று கூடி விட்டார்கள்!
பட்டு சேலை பள பளக்க இந்துப் பெண்கள் தேங்காய், பழத்தட்டுகளை ஏந்தி கும்பல், கும்பலாகப் போவதே ஒரு கண் கொள்ளாக் காட்சி!
கோவை வாழ் பெண்களுக்கு இந்தப் பத்ர காளியம்மன் மேல் தனி மரியாதை! ஒரு குறிப்பிட்ட வருஷங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வது தான் சாஸ்திரம் என்று சில ஆன்மிக வாதிகள் சொன்னவுடன், கும்பாபிஷேகத் திருப்பணி குழு பக்தர்களால் அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டியில் அரசியல் செல்வாக்கு மிக்க கோகுல கிருஷ்ணன் எப்படியோ நுழைந்து விட்டார். கமிட்டி மெம்பர்களுக்கு அது பிடிக்க வில்லை என்றாலும் அவர்களால் தடுக்க முடியவில்லை! அவருக்கு மேலிடத்தில் நிறைய செல்வாக்கு உண்டு. தாங்கள் ஏதாவது சொன்னால், தனிப்பட்ட முறையில் அவர் தங்களுக்குத் தொல்லை கொடுப்பார் என்று தெரிந்து யாரும் கண்டு கொள்ள முடிய வில்லை!
பல வழிகளிலும் நன்கொடை திரட்டப் பட்டது. நன்கொடை ரசீது புத்தகங்கள் அச்சிட்டு அதன் மூலமும் நன்கொடை வசூலித்து வந்தார்கள்.
கோகுல கிருஷ்ணன் கோவையிலிருக்கும் மிகப் பெரிய வியாபார நிறுவனங்களை எல்லாம் அணுகி நன்கொடை வசூலித்தார். அவர் கூட அவர் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலரையே கூட்டிக் கொண்டு போனார்.
நகரத்தின் மத்தியில் இருக்கும் காவல் தெய்வம் என்பதால் எல்லாப் பெரிய நிறுவனங்களும் கொஞ்சம் கூட தயங்காமல் நன்கொடையை வாரி வழங்கினார்கள்!
வசூலான தொகையில் பாதியைக் கூட அவர் கும்பாபிஷேகக் கணக்கிற்கு கொண்டு வரவில்லை. காரணம் தனிப்பட்ட முறையில் அவரும் நன்கொடைப் புத்தகங்கள் அச்சிட்டிருந்தார். கமிட்டி அவருக்கு கொடுத்த ஐந்து ரசீது புத்தகங்களில் வசூலித்த தொகைகளை மட்டும் கும்பாபிஷேகத் கணக்கில் கொண்டு வந்து விட்டார். மீதி பத்து புத்தகங்கள் மூலம் வசூலித்த தொகை அவர் வங்கிக் கணக்குக்குப் போய்விட்டது! அது சுமார் நாற்பது லட்சம் இருக்கும் என்று கூடப் போன கட்சித் தொண்டர்கள் பேசிக் கொண்டார்கள்! கமிட்டி மெம்பர்களுக்கு இது அரசல் புரசலாகத் தெரிந்தாலும் அதை பெரிசு படுத்தினால் ஒரு புண்ணியமும் இல்லை. கும்பாபிஷேகத்திற்குத் தான் தடை ஏற்படும் என்று அதை பேசாமல் விட்டு விட்டார்கள்!
காவல் தெய்வம் அருளால் எதிர் பார்த்ததை விட தாராளமாக நன்கொடைகள் வந்து குவிந்தன. அதனால் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து முடித்து விட்டார்கள்!
அன்று பள்ளிகள் அனைத்தும் லீவு விட்டிருந்தார்கள். குழந்தைகளும் கும்பாபிஷே நிகழ்ச்சியில் குதூகலத்துடன் கலந்து கொண்டார்கள். கோவையே பத்தி பரவசத்தில் மூழ்கி விட்டது.
காவல் துறைக்குத் தான் கடுமையான வேலை. காவல் துறையின் மாவட்ட அதிகாரி காவல் தெய்வத்திற்கு நடக்கும் பூஜையை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் பெண்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அவர் கையில் வைத்திருந்த போன் மெதுவாக கூப்பிட்டதால் அதை எடுத்து காதில் வைத்தார்.
ரிஷிகேஷில் இருந்து ஒரு காவல் துறை உயர் அதிகாரி அவரை தொடர்பு கொண்டார்.
“ சார்!…இங்கு கங்கை பாலத்தின் மேல் நடந்து மறு பக்கம் போகும் பொழுது, கோவையைச் சேர்ந்த ஒரு நபர் தவறி விழுந்து விட்டார்…அவரைப் பற்றி கூட வந்தவர்களிடம் விசாரித்த பொழுது, அவர் கோவையில் பிரபலமான அரசியல் வாதி என்றும், அவர் பெயர் கோகுல கிருஷ்ணன் என்றும் சொன்னார்கள்….பிரேதம் தேடப் பட்டு வருகிறது!…கிடைத்தவுடன் தகவல் கொடுக்கிறோம்!…”
செய்தி மெதுவாக கமிட்டி மெம்பர்களுக்குப் பரவியது!
‘ தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்கிறார்களே!..அது நிஜமா…..அதுவும் சரியான நேரத்தில் தான் கொல்லுமோ?……’ என்று பலவாறு பேசினார்கள்!
– ஆகஸ்ட்29-செப் 4 பாக்யா இதழில் வந்தது