திருடனுக்கு ஜே !

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 6,475 
 

மாணிக்கம்:

மாணிக்கம் ஒரு கை தேர்ந்த திருடன். இப்போது ஒரு வீட்டைக் குறி. 14, காந்தி தெரு, இதுதான் அவனது இலக்கு,.

பெரிய பங்களா. வாசல் செக்யூரிட்டி, தோட்டக்காரன், வேலைக்காரர்கள். மூணு பெரிய கார். பசையுள்ள பார்ட்டிதான். நோட்டம் போட்டுக்கொண்டு இருந்தான் பத்து நாளாக..

அந்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு வேலைக்காரன், முத்து, இவனுக்கு இன்பார்மர்.

“மாணிக்கம் அண்ணே எங்க எஜமானி அம்மா, அவங்க பையன் , அப்புறம் அம்மாவோட அண்ணா, மூணுபேரும் , இன்னிக்கு வைத்தீஸ்வரன் கோவில் போறாங்கண்ணே! நாளைக்கு தான் வராங்க. இன்னிக்கு ராவே தேட்டை போட்டுடலாம். அம்மா அறை மாடியிலே. அங்கே தான் நகை, ரொக்கம் வெச்சிருக்காங்க.”

“சரி, வேறே யாராவது குடும்பத்திலே?”

‘வேறே யாரும் இல்லேண்ணே! மூணு பேரு மட்டும் தான். சின்ன குடும்பம் வேலைக்காரங்க அவுட் ஹௌஸ் லே இருப்ப்பங்க. நான் அம்மா ரூம் கதவை திறந்து வெச்சிடறேன்..”

மாணிக்கத்திற்கு தெரியாது, அப்போது விதியின் விளையாட்டு பற்றி !

***

வேணு என்கிற ராபர்ட் வேணு:

மேற்சொன்ன அந்த வீட்டின் செல்ல மகன். ஒரே மகன். ஒரு 22 வயது இருக்கும். வேணுவின் அப்பா ராபர்ட் ஒரு வெள்ளைக்காரர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். அவர் இப்போது உயிருடன் இல்லை. இப்போது வேணு அவனது அம்மா, மாமாவுடன்.

இந்த குடும்பத்தில் கொஞ்ச நாளாகவே நிம்மதி இல்லை. வேணுதான் காரணம்.

வேணு ஒரு நோயாளி. சிறு வயது முதலே வயிற்று வலி, எப்போதும் ஓய்ச்சல், முட்டி வலி. நாளாக நாளாக நோயின் தீவிரம் அதிகமாகி கொண்டிருக்கிறது. முடி உதிர ஆரம்பித்து விட்டது, உடல் இளைக்க ஆரம்பித்து விட்டது.

பார்க்காத டாக்டர் இல்லை, எடுக்காத டெஸ்ட் இல்லை. என்னென்னமோ செய்து பார்த்தாகிவிட்டது. ஒன்றும் பிரயோசனமில்லை. கடந்த ஒரு வருடமாக வேணுவின் உடல் நிலை மோசமாகி கொண்டிருந்தது.

இரப்பை பழுதாகி விட்டது , குடிப்பது தான் காரணம் என்றார் ஒரு டாக்டர். ஆனால், வேணுவிற்கு குடிப்பழக்கமே இல்லை.

கான்சர் ஆக இருக்கலாமென்று ஒரு டாக்டர். டெஸ்ட் அது இல்லை என வந்து விட்டது.

மன அழுத்தம் தான் காரணம் என்றார் வேறொரு ஸ்பெஷலிஸ்ட். ‘இது எதுவுமில்லை! வேறே டெஸ்ட்கள் எடுக்கணும்’ என்றார் ஒரு வெளி நாட்டு டாக்டர். மொத்தத்தில் டோட்டல் கன்பியுஷன். ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிந்தது.

டாக்டர்களின் கணக்குப் படி, வேணுவின் உலக வாழ்க்கை மிஞ்சினால் ஒரு வருடம்.

நோயென்னவென்று தெரிந்தால்தானே வைத்தியம் செய்ய முடியும்? கண்ணெதிரே மகன் இறந்து கொண்டிருப்பதை எந்த தாயால் பார்த்து கொண்டிருக்க முடியும்?

தாய்க்கு தெரிந்த ஒரே வழி! கடவுளிடம் முறையிடுவது தான். அதுதான் இப்போது கிளம்பி விட்டார்கள், சீர்காழி பக்கத்தில் இருக்கும் வைதீஸ்வரன் கோவிலுக்கு. பரிகாரம் பண்ண.

கூட வருவதாக இருந்த வேணு, கடைசி நிமிஷத்தில் உடல் நிலை காரணமாக போகவில்லை. இந்த விஷயம் திருடன் மாணிக்கத்திற்கு தெரியாது.

***

ராபர்ட் வேணுவின் பங்களா : 20 -06-2012

இரவு மணி 2.00. பங்களா வாட்ச்மேன் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த நேரம்.

மாணிக்கம் காம்பவுண்ட் சுவர் எகிறி குதித்தான். மெதுவாக வீட்டின் கதவை கள்ள சாவி போட்டு திறந்து மாடிக்குப் போனான். எஜமானி அறைக்குள் புகுந்தான். மெதுவாக இரும்பு பீரோவை திறக்க ஆரம்பித்தான்.

பக்கத்து அறையில், நோயின் தாக்கத்தால், தூங்காமல் விழித்திருந்த வேணு, அம்மாவின் அறையில் சத்தம் கேட்டு, தட்டு தடுமாறி வந்தான். அவனது உதவீக்கிருந்த வேலையாள், கண்ணயர்ந்து தூக்கம்.

அம்மாவின் அறையில் திருடன்.

“திருடன்” “திருடன்” என்று சத்தம் போட்டபடியே , அறை வாசலில் வழி மறைத்து நின்றான்.

தப்பிக்க நினைத்த மாணிக்கம், ஓர் கத்தியை காட்டி “சத்தம் போடாதே, கொன்னுடுவேன் “ என்று மிரட்டினான். இளங்கன்று பயமறியாது.

வேணு தனது உடல் நோயை மறந்து, மாணிக்கத்தை நோக்கி முன்னேறினான். “சதக்”. மாணிக்கத்தின் கத்தி வேணுவின் வயிற்றில், ஆழமாக பாய்ந்தது. ரத்தம் பீறிட்டது. ‘அம்மா” அலறியபடியே, வேணு கீழே சாய்ந்தான். சத்தம் கேட்டு மற்ற வேலைக்காரர்களும் ஓடி வந்தனர்.

மாணிக்கம், மற்ற வேலையாட்கள் வரு முன் தப்பி ஓடினான். வேலைக்காரர்கள் ‘பிடி பிடி’ என பின்னாடியே ஓடினர். அதற்குள் விட்டான் மாணிக்கம் ஜுட்.

***

போலீஸ் ஸ்டேஷன்: 21-06-2012

இன்ஸ்பெக்டர் நேர்கொண்டான். மகா திறமைசாலி. அவர் திருடன் மாணிக்கத்தை வலை போட்டு தேடிக் கொண்டிருந்தார். மாணிக்கத்தால் குத்தப் பட்டு ஒரு பையன் ஆஸ்பத்திரியில். உயிருக்கு போராடிக் கொண்டு. பணக்கார குடும்பம். அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள். மேலதிகாரிகள் குடைகிறார்கள். நேர்கொண்டான் எல்லோரையும் விரட்டிக்கொண்டிருந்தார்.

வேலைக்காரன் முத்து, இப்போது போலீஸ் கஸ்டடியில். எல்லாவற்றையும் சொல்லிவிட்டான்.

போன் கால். “ சார், மாணிக்கத்தை பிடிச்சிட்டோம். நேரே ஸ்டேஷனுக்கு வரோம்”.

“வெரி குட். கொண்டு வாங்க. ரெண்டு தட்டு தட்டி விசாரிப்போம்”.

***

தனியார் ஹாஸ்பிடல்: 21-06-2012

வேணு ஐ.சி.யு வில். மூக்கில், கையில் குழாய்கள். ஆழ்ந்த மயக்கத்தில். சுற்றி டாக்டர்கள், நர்ஸ்கள். அறை வெளியே , வேணுவின் அம்மாவும், மாமாவும் , கவலை தோய்ந்த முகத்துடன். பெரிய டாக்டரை பார்த்தவுடன் அம்மா ஓடி வந்தாள்.

“டாக்டர்! என் பையனுக்கு இப்போ எப்படி இருக்கு டாக்டர்?- ஒண்ணுமில்லையே!” நோயினால் உலகத்தை விட்டு எப்படியும் போகப்போறான் என்று தெரிந்தும், பெத்த மனது தனது பையன் பிழைக்க வேண்டுமென்று வேண்டியது.

“ரொம்ப ரத்தம் போயிருக்கு. கிட்டத்தட்ட இரண்டு லிட்டர். ட்ரீட்மென்ட் பண்ணிண்டிருக்கோம் இப்போ எதுவும் சொல்ல முடியாது.. பாக்கலாம். தைரிமாயிருங்க” – டாக்டர் ஸ்டாண்டர்ட் பதில்.

“என்ன அண்ணா ! வேணு பிழைப்பானா?. டாக்டர் இப்படி சொல்றாரே.”-அம்மா கதறினாள்.

“கவலைப்படாதே! கடவுள் நம்மை நிச்சயம் கைவிட மாட்டார்”- மாமா.

***

போலீஸ் ஸ்டேஷன்: 22-06-2012

மாணிக்கம் போலீஸ் கஸ்டடியில். தான் திருடப் போனதையும், யதேச்சையாக வேணுவை கத்தியால் குத்தியதையும் ஒப்புக்கொண்டு, ஸ்டேட்மெண்ட் கொடுத்துவிட்டான்.

எப்.ஐ.ஆர் ரெடி. இன்ஸ்பெக்டர் கையெழுத்திட வேண்டியது தான் பாக்கி.

அப்போது வாசலில் இரண்டு பெரிய கார்கள் வந்து நின்றன. வேணுவின் மாமா, அம்மா மற்றும் இரண்டு வக்கீல்கள் உள்ளே வந்தனர். இன்ஸ்பெக்டர் நேர்கொண்டான் எழுந்து வரவேற்றார். ஒரு வேளை வேணு இறந்து விட்டாரோ? கொலை கேஸ் ஆகி விட்டதோ? எண்ணங்கள் ஓடின அவர் மனதில்.

“இன்ஸ்பெக்டர்!. அந்த மாணிக்கத்தை…” – ஆரம்பித்தார் மாமா.

“சார், உங்க பையனுக்கு ஒண்ணும் ஆகலியே? இப்போ எப்படி இருக்கார்? – நேர்கொண்டான். அவர் கவலை அவருக்கு.

“ஒண்ணும் ஆகலை. நல்லா இருக்கான். அது விஷயமாக பேசத்தான் வந்திருக்கோம்”.

“சொல்லுங்க சார்! மாணிக்கம் இப்போ எங்க கஸ்டடியில் தான் இருக்கான். எல்லா குற்றத்தையும் ஒப்புக்கொண்டான். கேஸ் போட்டு குறைந்தது ஐந்து வருடமாவது ஜெயில் தண்டனை வாங்கிடலாம்.”

பதறினார் மாமா. “வேண்டாம்! வேண்டாம்! அதை சொல்லத்தான் ஓடோடி வந்தோம். அவன் பேரிலே இருக்கற கேசை வாபஸ் வாங்கி அவனை வெளியே விட்டுடுங்க. இதோ என் மருமான் கையெழுத்திட்ட லெட்டர். எவ்வளவு செலவானாலும், நாங்க கொடுக்கிறோம், கேசை க்ளோஸ் பண்ணிடுங்க.”

நேர்கொண்டானுக்கு ஒன்றும் புரியவில்லை. யாராவது திருடனுக்கு வக்காலத்து வாங்குவாங்களா? . பெரிய இடத்து விஷயம். நமக்கு எதுக்கு பொல்லாப்பு.

நேர்கொண்டான் “சரி சார், அப்படியே ஆகட்டும்.” பிழைக்க தெரிந்தவர். கேஸ் க்ளோஸ் பண்ண ரூபாய் கைமாறியது. வாயெல்லாம் பல்லோடு நேர்கொண்டான். மாணிக்கம் விடுதலை. வெளியே வந்து விட்டான். என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை அவனுக்கு.

வேணுவின் மாமா, மாணிக்கத்தை பார்த்து, “ தேங்க்ஸ் மாணிக்கம், உன்னால் தான் என் பையன் பிழைத்தான். உனக்கு நாங்க ரொம்ப கடமை பட்டிருக்கோம். நாளை வீட்டுக்கு வா. என் பையன் கையால் உனக்கு எங்கள் அன்பளிப்பாக ரூபாய் ஐந்து லட்சம் தருகிறோம். நல்லபடியாக இரு”

மாணிக்கத்திற்கு தலை சுற்றியது. கத்தியால் குத்தியதற்கு காசா? இதிலே ஏதேனும் உள் குத்து இருக்குமோ? சரியான பைத்தியக்கார குடும்பமாக இருக்கிறதே? திரு திரு வென்று விழித்தான் திருடன்.

“ஐயா! நான் பண்ணின காரியத்திற்கு எப்படி தம்பி முகத்திலே விழிக்கறது? அவரை கத்தியாலே குத்தி இருக்கேனே?”

“மாணிக்கம்! உன்னை பார்க்கணும்னு வேணு தான் சொன்னான். உனக்கு தெரியாது . எங்கள் வேதனை தீர்த்த தெய்வமப்பா நீ!. கட்டாயம் வா!”

“ஐயா! ரொம்ப நன்றிங்க! கட்டாயம் வரேனுங்க.”. வருவதை விடுவானேன்? ஆனாலும் பயமாக இருந்தது. போலீஸ் ஸ்டேஷன்லேருந்து நம்பளை கூட்டிண்டு போய், கொன்னுடுவாங்களோ?

“ இன்ஸ்பெக்டர் சார், நீங்களும் வாங்க. நம்ம வீட்டிலே விருந்து. அங்கே வெச்சு எல்லா விஷயமும் சொல்றேன்”

விடை பெற்றார்கள் வேணுவின் குடும்பத்தினர். .

***

பங்களா : 23 -06-2012

இந்த தடவை மாணிக்கம் சுவரேறி குதிக்காமல், வாசல் பெரிய கேட் வழியாக சென்றான். வாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு வாட்ச்மன் துரத்தாமல் அவனுக்கு சலாம் போட, வீட்டிற்குள் சென்றான்.

“வாங்க மாணிக்கம்! வாங்க” வரவேற்றது வேணு. சிரித்தபடி, வயிற்றில் பெரிய கட்டோடு.

மாமாவும் அம்மாவும் அங்கே வந்தனர், மாணிக்கத்தை வரவேற்று அமர செய்தனர். இன்ஸ்பெக்டர் நேர்கொண்டானும் ஆஜர்.

வேணுவின் கையில் ஒரு பெட்டி. பெட்டியில் ரூ ஐந்து லட்சம். “இந்தாங்க மாணிக்கம்”. தலை கால் புரியவில்லை மாணிக்கத்திற்கு. காண்பது கனவா அல்லது நனவா! பெட்டியை வாங்கிகொண்டான். கள்ள நோட்டா இருக்குமோ?

இன்ஸ்பெக்டருக்கு அரிப்பு தாங்கவில்லை. எப்படி ஒரு திருடனுக்கு இந்த வாழ்க்கை? இந்த அன்பளிப்புக்கு என்ன காரணம்? முடியாமல் கேட்டு விட்டார். “திருடனுக்கு இவ்வளவு சன்மானம் தரீங்களே! ஆச்சரியமாக இருக்கு! ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“சொல்றேன்! சொல்றேன்!” ஆரம்பித்தார்.

“வேணுவிற்கு வந்திருக்கும் நோய் ஒரு பரம்பரை நோய். ஹீமொக்ரோமடோசிஸ். (hemochromatosis – iron over load) . அதாவது உபரி இரும்பு நோய்.. அவன் அப்பா ஒரு ஐரோப்பியர். அவரது வம்சாவளி நோய். இது.

”வேணுவிற்கு பிரச்னையே அவனது உடலில் உள்ள அதிகப்படியான இரும்பு சத்து தான். சர்க்கரை, கொழுப்பு மாதிரி இரும்புச்சத்தும் எல்லாருக்கும் அவசியம். நமது உடலில் உபரி இரும்பு வெளியேறி விடும், கழிவாக. ஆனால், வேணுவிற்கு அவனது உபரி இரும்பு சத்து வியாதியால், தேவைக்கதிகமான இரும்பும் அவனது உடலிலேயே தங்கி விடும்.“

” இதனால், நாளாவட்டத்தில், இந்த நோய், அவனது இரப்பை, முட்டிகளை பாதிக்க ஆரம்பித்து விட்டது. வைத்தியம் பார்க்காவிட்டால், மரணத்தில் கொண்டு விடும் கொடிய குறைபாடு.”

“நம்பவே முடியலியே. இன்னிக்கு இருக்கிற மருத்துவ வசதிக்கும், உங்கள் வசதிக்கும், ஏன் ட்ரீட்மென்ட் பண்ணலே?” நேர்கொண்டான் சந்தேகம் கேட்டார்.

மாணிக்கம், ஈ உள்ளே போவது தெரியாமல் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தான்.

மாமா தொடர்ந்தார். “இந்த ஹீமொக்ரோமடோசிஸ் நோயைக் கண்டு பிடிப்பது கடினம். ஏனெனில் நோயின் அறிகுறிகள் எல்லா பொதுவான நோய்களுக்கும் உரியது. எவ்வளவோ டெஸ்ட் எடுத்தும், இந்த நோய்தான்னு கண்டு பிடிக்க முடியலே. வேணு கொஞ்சம் கொஞ்சமாக, இரும்பு அதிகமாகி, துரு பிடித்து செத்துக் கொண்டிருந்தான்.”

மாணிக்கத்தை பார்த்தார். “இந்த நேரத்தில் தான் இறைவன் அனுப்பியது போல் நம்ம வீட்டிலே மாணிக்கம் திருட வந்தான்.”

மாமா நிறுத்தினார். மாணிக்கத்தை பார்த்து சிரித்தார். வேணுவும் முறுவல் பூத்தான்.

“மாணிக்கம் கத்தியால் வேணுவை குத்தினான். நிறைய ரத்தம் வேணுவின் உடலிலிருந்து வெளியேறியது. வேணு பிழைத்து விட்டான். ”

நேர்கொண்டான் நெற்றியை சுருக்கினார். “என்ன சொல்றீங்க! புரியலியே!”

மாமா விளக்கினார். “ஹீமொக்ரோமோடோசிஸ் நோய்க்கு ஒரே வைத்தியம், ரத்தத்தை உடலில் இருந்து வெளியேற்றுவது தான். கிட்டத்தட்ட 4-5 யூனிட் (2 லிட்டர்) ரத்தம் போனதும் , உபரி இரும்பு குறைந்து போய், வேணு குணமாகிவிட்டான். கோமா நிலைக்கு போக வேண்டியவன் விசுக்கென்று எழுந்து உட்கார்ந்து விட்டான். உடல் வலி குறைந்து விட்டது.

முதலில் டாக்டர்களுக்கே ஒன்றும் புரியவில்லை. பின்னர்தான் பல பரிசோதனைக்கு பிறகு உபரி இரும்பு நோய் இருப்பது தெரிந்தது. இப்போது வாரா வாரம் வேணுவின் ரத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுத்து, ஆறு மாதத்தில் பூரண குணமாகி விடுவான் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். மாணிக்கத்திற்கு தான் முழு நன்றி”

அப்போது அங்கே வந்த வேணுவின் அம்மா சொன்னாள் “கடவுள் தான் மாணிக்கம் ரூபத்தில் வந்து எங்க பிள்ளையை எங்களுக்கு திருப்பிக் கொடுத்திருக்கார். எங்க வேண்டுதல் எங்களை கைவிடலே. வைதீஸ்வரன் கோவிலுக்கு போய் வந்த நேரம் !”

நேர்கொண்டானுக்கு சிரிப்புதான் வந்தது. எப்படியெல்லாம் படிச்சவங்களும் கூட நம்பறாங்க !.

எப்படியோ எல்லாம் சுபமாக முடிந்ததே. அது போதும். நேர்கொண்டான் விருந்து முடிந்தவுடன் விடை பெற்றார்.

ரத்த வங்கி (20-10- 2012)

ரத்த வங்கியின் வாசலில் கார் வந்து நின்றது. வேணு இறங்கினான். கூடவே அவனது மாமா அம்மா. அடடே, கார் டிரைவர் நம்ம மாணிக்கம்! எல்லாரும் ரத்த தானம் கொடுக்க உள்ளே போனார்கள்.

“வாங்க வாங்க” வரவேற்றார், உள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் நேர்கொண்டான். “இப்போதான் நான் ரத்தம் கொடுத்துட்டு வரேன்.” என்றார் பெருமையுடன். வேணுவிற்கு ஆச்சரியம். “ நீங்க கூடவா? நீங்க எதுக்கு ரத்தம் கொடுத்தீங்க?”

நேர்கொண்டான் சிரித்தார். “அதெல்லாம் ஒண்ணுமில்லே. எனக்கும் வழக்கம் தான். நல்லது செய்யணும் போல இருந்தது. அதுவும் இல்லாமல் ரத்தம் கொடுக்கிறவங்களுக்கும் லாபம் இருக்கே. ‘ஒரே கல்லிலே இரண்டு மாங்காய்”.

மாணிக்கத்திற்கு புரியவில்லை. “அதெப்படி கொடுக்கறவங்களுக்கு லாபம் ?”

நேர்கொண்டானுக்கு இப்போ சான்ஸ்: விளக்கினார். “இல்லே மாணிக்கம், இங்கே ரத்தம் எப்போ கொடுத்தாலும், ரத்த அழுத்தத்தை ப்ரீயா செக் பண்ணிடுவாங்க. அடிக்கடி ரத்த தானத்தால் இதய நோய் வரும் ஆபத்து குறையுதாம். மத்தவங்களுக்கு உதவி செய்தோம்னு ஒரு திருப்தி. உடம்பு வெயிட் கூட குறையுமாம்! புது ரத்தம் கூடுதாமே?”

அடுக்கிக்கொண்டே போனார். வேணு இடை மறித்தான். “இவ்வளவு விஷயம் ரத்த தானத்திலே இருக்கிறதாலே தான், கடவுளே என்னை நிறைய தானம் பண்ண வழி கொடுத்திட்டார்.”.

நேரமாகிகொண்டிருந்தது. நேர்கொண்டான் விடை பெற்றார். மற்றவர் உள்ளே சென்றனர். ரத்த தானம் செய்ய…

************************************************************************
ரத்த தானம் செய்யும் நல்ல உள்ளங்களுக்கு சமர்ப்பணம்.
************************************************************************
ஹீமொக்ரோமோடோசிஸ் பற்றி தெரிந்து கொள்ள கூகுளில் தேடவும் . ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0001368/

ரத்த தானம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கூகுளில் தேடவும்:
forum.xcitefun.net/benefits-o…er-t57483.html

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *