சொந்தம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 10, 2016
பார்வையிட்டோர்: 8,584 
 

“ஏம்பா, ஊர்ல இருந்து வந்து ரெண்டு நாளாச்சே, பெரியப்பா, சித்தப்பா, மாமா வீட்டுக்கு எல்லாம் போகலையா?”

“போவோம்மா, என்ன அவசரம்?, முதல்ல பிரண்ட்ஸ் வீட்டுக்குகெல்லாம் போய்ட்டு வந்துர்றேன். சொந்தகாரங்க வீட்டுக்கு போனா பிரச்சனைதான். அட்வைஸ் மழை. இங்க இருந்தப்ப, யாரு வந்து பார்த்தா? இப்ப வெளி நாட்டிலிருந்து வந்ததால, ஏதாவது நான் கொண்டு வந்திருப்பேன்னு அவங்க என்னை எதிர் பார்க்கிறாங்க. இல்லாட்டி என்னை பத்தி என்ன கவலை.

“தப்பு தப்பா பேசாதடா. யாருக்குடா வேணும் உன் காசு. நீ வெளி நாட்டில இருக்கிறப்ப என்னை யாருடா பார்த்துக்கிட்டா. எல்லாம் அவங்க தானே.”

எல்லாம் சரிதான். ஆனா, எதுக்கு உன்னை பார்த்திக்கிட்டாங்க. வெளி நாட்டில சம்பாதிச்சு காசு அனுப்புறேன். அது அவங்களுக்கு கிடைக்கும் தானே. உள்ளுர்ல காசு இல்லாம இருக்கிறப்ப, யாரு வந்தா? பழசெல்லாம் மறந்து போச்சு உனக்கு.

எனக்கு ஒன்னும் மறக்கல. உனக்கு தான் காசு சம்பாதிக்கிறோம்ன்னு திமிர் ஏறி போச்சு. நீ போனா போ, போகாட்டி போ. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நா, என்னையும் இப்படிதான் ஏளனமா பேச போற. என்ன இருந்தாலும் சொந்தத்தை விட முடியுமா” என திட்ட ஆரம்பித்தாள்.

“சரி, சரிம்மா, இரண்டு நாள் என் பிரண்ட்ஸ் பார்த்துகிறேன். அப்புறம் கண்டிப்பா உன் திருப்திக்கு சொந்தகாரங்க எல்லாரையும் போய் பார்க்குறேன், போதுமா” என அம்மாவை சமாதான படுத்தி விட்டு, சிவகங்கையில் உள்ள அவன் பிரண்ட் பாஸ்கரை பார்க்க கிளம்பினான்.

வானம் மேக மூட்டமாக இருந்தது. பஸ்ல போகனும்னா பஸ் ஸ்டாண்ட் போய் பஸ் பிடித்து அங்க சிவகங்கையில அவன் வீட்டுக்கு ஆட்டோ பிடிச்சு, திரும்பி வர்றதுக்கும் அதே மாதிரி, ஒரே போர். பைக்குல போனா நம்ம சௌகரியத்திற்க்கு போய்ட்டு வந்துடலாம். 20 கிலோ மீட்டர்தானே என, எதுக்கும் முன்னேற்பாடா ஜெர்கினன மாட்டிக்கிட்டு கிளம்பினான்.

“ இருட்டுக்கு முன்னாடி வந்துடுடா என்றாள் அம்மா.

————————-
வழி நெடுக தூறல். ஹெல்மெட் எதுக்கு உபயோகபடுதோ இலலையோ, மழை நேரத்தில் தலை நெனையாம இருக்க நல்லா யூஸ் ஆகுது. நல்ல வேகத்தி போகும் போது, தூரத்தில் ஒரு இளைஞன் கையைச்சு லிப்ட் கேட்பது தெரிந்தது. பரவாயில்லையே, ந்ம்ம நாட்டிலும் இந்த கலாசாரம் வந்து விட்டது. அருகில் பைக்கை நிறுத்தி, எங்க போகனும்?

“சார் நீங்க சிவகங்கைதானே போறீங்க. போற அவுட்டர்லதான் என் கிராமம். இறங்கிருறேன் என டக்குன்னு அமர்ந்து கொண்டான்.

பைக் விரைந்தது. மழை தீடிரென வலுத்தது. ஒரு டீ கடை ஒரமாக வண்டிய நிறுத்தினான்.”இறங்குப்பா, டீ சாப்பிட்டு போகலாம். கொஞ்சம் மழை நிக்கட்டும்.”

“ நீங்க குடிங்க சார், நான் ஒரமா நிக்கிறேன்”

“ சும்மா குடிங்க பிரதர்”

“சார், என்ன வெளி நாட்டில வேலையா?”

“ ஆமாம், நீங்க என்ன பண்றீங்க”

“ விவசாயம் தான். எங்க கிராமத்துல எல்லாரும் விவசாயம் தான் இல்லனா கட்டட வேலைக்கு போவோம்”

“படிக்கலையா?’

10வது படிச்சேன். அதுக்கு மேல நிறுத்திட்டாங்க. எங்க ஊருல, அம்பளைனாலும், பொம்பளைனாலும் பத்தாவதுக்கு மேல படிக்க வுடமாட்டாங்க. வேலைக்கு போகனும்.

இது என்ன கட்டுபாடு. பழைய ஆளுங்கதான் சொல்றாங்கன்னா, சின்ன பசங்க, நீங்க ஏன் கேட்கிறீங்க. மேற் கொண்டு படிக்க வேண்டியது தானே?

கரெக்ட் சார். அப்படிதான் நானும் நினைக்கிறேன். வெளிய போய் நாலு காசு சம்பாதிச்சு வந்தா தானே மரியாத. உள்ளுருல எவ்வளவு நாள் உட்கார்ந்திருக்க முடியும். சும்மா சொந்தத்த கட்டி அழுதுகிட்டே இருக்க முடியுமா? சும்மா மாமன் மச்சான், சித்தப்புன்னு இவங்க பஞ்சாயத்தே இம்சை. கட்டிட வேலைக்கு துபாயில் டிமாண்ட்ன்னு சொல்றாங்க. அதுக்குதான் டிரை பண்ணிட்டு இருக்கேன். மழை நினன மாதிரி இருக்கு போலாமா சார்” என்றான்.

இவனுக்கு சிரிப்பு, சொந்ததாலே எல்லாருக்கும் இம்சைதான். எப்படி புலம்புறான். இவன் புலம்பல அம்மாவை கேட்க வைக்கனும் என்று நினைச்ச படி வண்டியை ஒட்ட ஆரம்பிச்சான்.

————————————

சிவகங்கையை நெருங்க ஆரம்பிச்சாச்சு, இவன் எங்க இறங்க போறான்னு நினைச்ச படி, வளைவுல திரும்ப,

“அய்யோ, டக்குன்னு கிராஸ் பண்றான்னே கடங்காரன் என பதறி, பைக்க ஒடிச்சு, அவன உரசி விட்டு சாய்த்து நிறுத்தினான்.

“ அய்யோ என் மாமால்ல என பினனாடி வந்தவன் இறங்கி ஒடினான்.

உரசினதால், நல்ல வேளை கீழே உட்கார்ந்த மாதிரி தான் அந்த ஆள் விழுந்திருந்தான்.. பின்னாடி உட்கார்ந்து வந்தவன் அந்த ஆளை எழுப்பினா, அவனால நிக்க கூட முடியல, அவ்வளவு போதை.

கூட்டம் கூடி விட்டது. ஏம்பா மெதுவா வர கூடாது. இப்படி இடிச்சுட்டயே என்றான் ஒருவன்.

இல்லை சார், இவர்தான் டக்குன்னு வந்துட்டாரு. வேணா என் பின்னாடி உட்கார்ந்து வந்தவரை கேளுங்க” என்ற படி அவனை பார்த்தான்.

ரொம்ப வேகமா போகாதீங்க, இடை இடையே ஊரு வரும்ன்னு சொன்னேன். கேட்காம ரொம்ப வேகமா ஒட்றான் சித்தப்பு. இடிச்சிட்டு பேச்ச பாருன்னு, என்னை முன்ன பின்ன தெரியாத மாதிரி ஓங்கி ஒரு அறை விட்டான்.

அடி வலியை காட்டிலும், அம்மா சொன்னதுதான் ஞாபகத்திற்க்கு வந்தது. “என்னதான் ஆனாலும் சொந்தத்தை விட முடியுமா?”. முதல்ல எல்லா சொந்தகாரங்களையும் பார்க்கனும்.

Print Friendly, PDF & Email

1 thought on “சொந்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *