சுடலைத் தெய்வம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 16, 2013
பார்வையிட்டோர்: 12,799 
 

சொடலமாடன் ரொம்பத் துடிப்பான சாமியப்பா. மகாசக்தியுள்ள தெய்வம் சொடல. நாம வேண்டிக் கொண்டா அதக்குடுக்கிற சாமி சொடலதான்.

அதில என்னப்பா சந்தேகம்? ஆனா ஒன்னு. சொடலைக் கோயிலுக்கு வர்றவங்க ரொம்பச் சுத்தமா வரணும். சுத்தம் இல்லாம வந்தா அது சாமிக்குத்தம். அவங்களைச் சொடல சும்மா விடமாட்டான். பொலி (பலி) வாங்கிடுவான்.

கிராமவாசிகள் சுடலைமாடன் மகிமை-களை வாயாரப்பேசி மனமார பக்திப் பரவசமாவார்கள். பல ஊர் ஜனங்களும் சுடலைக் கோயிலுக்குப் போனால் கேட்டது கிடைக்கும் என்று திரளாய் சுடலைக் கோயிலுக்கு வருவார்கள்.

unmai - Mar 16-31 - 2010சாமியூர் கிராமத்திலிருந்து வடக்குப்புறமாக வண்டித்தடத்தில் 3 கி.மீ. தூரம் நடந்து சென்றால் பிரமாண்டமாய் எழுந்தருளி நிற்கும் சுடலைமாடன் கோயிலைக் காணலாம்.

சுடலைக் கோயிலுக்கு ஒரு ஸ்தல புராணமே உண்டு. எப்பொழுதோ நடந்த செவிவழிக்கதை ஒன்று கிராமத்தில் உலாவி வந்தது. பக்கத்து ஊர் இளைஞனும் பணக்கார இளம்பெண்ணும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினாங்களாம். இது பெத்தவங்களுக்குப் பிடிக்கல. ஊரைவிட்டு ஓடி வந்த காதல் ஜோடி சுடலைக்கோயிலில் தங்கி ராத்திரி உல்லாசமாக இருந்தாங்களாம். விடிஞ்சி பாத்தா அவங்க பொணமா கெடந்தாங்களாம். ( இரவில் விஷப்பாம்பு கடித்து இறந்து இருக்கலாம் ). கோயிலில் சத்தமில்லாம இருந்த ஜோடியை சுடலை பொலி வாங்கிவிட்டதாக ஊரில் பேசிக்கொண்டார்கள். அன்றுதொட்டு சுடலை துடிப்பான சாமி என்றே ஜனங்கள் சுடலையிடம் பயபக்தியுடன் நடந்து வந்தார்கள்.

சுடலைக்கோயில் பூசாரி ரொம்ப நல்ல மனுஷர். அவரின் அகன்ற நெற்றியில் விபூதி குங்குமம் அளவோடு துலங்கும். ஆனால், பூசாரிக்கு சுடலை மீது அளவில்லாத அளவு பக்தி. காலையும் மாலையும் பூசாரி சுடலைக்குப் பயபக்தியோடு தீபாராதணை காட்டுவார். கோயிலுக்கு வரும் பக்த கோடிகளுக்குப் பிரசாதம் கொடுப்பார். பக்தர்களோ தங்களால் முடிந்ததை தீபாராதணைத் தட்டில் போடுவார்கள்.

குறைவாகத்தான் சுடலைக்கோயிலில் வரும்படி கிடைத்தது. ஆனால், பூசாரி மனநிறைவோடு சுடலைக்கோயிலுக்குப் பணிகள் செய்துவந்தார். ஒரே ஒரு குறைதான் பூசாரியைக் குடைந்தது! அதைப்பற்றி பூசாரி தன் தர்மபத்தினியிடம் குறைப்பட்டுக்கொண்டார்.

கௌரி நமக்குக் கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆகியும் புத்திரபாக்யம் இல்லை. இந்த வருஷமாவது ஒரு புள்ளையைப் பெத்துக்குடுக்-கணும். இல்லன்னா உன்ன நா விவாகரத்து செஞ்சிட்டு வேற ஒரு பொண்ணக் கட்டிக்கு-வேன் மிரட்டிவிட்டு பூசாரி கோயிலுக்குப் போய்விட்டார்.

அன்று இரவு, கௌரி தூக்கம் வராமல் பாயில் புரண்டாள். கணவர் விவாகரத்து செய்துவிட்டால் அவர் இல்லாமல் ஒரு வினாடிகூட உயிர்வாழ முடியாதே. புருஷன் தன்னைப் பிரியாமல் இருக்க எப்படியும் பெத்துக் கொடுக்கணும் என்று கௌரி தீர்மானித்துக் கொண்டாள்.

பூசாரி தம்பதி அனுதினமும் சுடலைக்கு தேங்காய், பழம் உடைத்து, சுடலைத் தெய்வமே புள்ளவரம் குடு என்று வேண்டிக் கொண்டார்கள்.

சுடலைமாடன் கொடை நெருங்க நெருங்க கிராம ஜனங்களின் வாய் அதைப்பற்றியே அசைப்போட்டது.

ஏலே ….. மாசானம் வர்ற செவ்வாய்க்கிழமை சொடலைக்குக் கொடை. பெரிய செட்டு மேளம், கேரள இளம் பொண்ணுங்க கரகாட்டம் எல்லாம் உண்டு.

சொடல ரொம்பத் துடிப்பான சாமியாச்சே. மகாசக்தியுள்ள தெய்வம் நம்ம சொடல. -சுடலைக் கொடைக்கு பணத்த தண்ணியா செலவழிப்பாங்க. ஏன்னா சொடலையிடம் கேட்டது எல்லாம் கெடைக்குதே.

சுடலைமாடன் கொடைவிழாவைக் காண பட்டித்தொட்டி பதினெட்டு ஊர்ஜனங்களும் வந்தார்கள்.

சுடலைமாடன் கோயில் கொடை தூள் கிளப்பியது. பல ஊர் ஜனங்களின் கூட்டத்தில் சுடலைக்கோயில் திணறியது. நையாண்டி மேளமும், கரகாட்டமும் போட்டிபோட்டன. வில்லுப்பாட்டும் ஒருபுறத்தில் நடந்து கொண்டிருந்தது.

கோயிலின் உள்ளே சுடலை அரிவாளை ஓங்கியபடி நிற்க –_ ஜனங்கள் சுடலைமாடன் கழுத்து நிறைய பூமாலைகள் போட்டு தேங்காய் பழம் உடைத்தார்கள். சுடலைக்கு மாக்காப்பு, சந்தனக்காப்பு செய்து கொடையைக் கோலாகலமாகக் கொண்டாடினார்கள்.

சுடலைமாடன் கோயிலின் முக்கிய அம்சம் அருள்வாக்குக் கேட்பது. அதற்காகவே பல ஊர் மக்களும் சுடலைக் கோயிலில் கூடுவார்கள். சாமக் கொடையில்தான் சாமியாடி அருள்-வாக்குச் சொல்வார். அருள்வாக்கு அப்படியே பழிக்கும் என்பது ஜனங்களின் நம்பிக்கை. கோயில் கொடையில் மேளக்காரர்களும் கனஜோராக மேளம் அடிக்க, சாமியாடிகள் சாமி வந்து ஆடினார்கள். சில இளம்பெண்-களும் தலையை விரித்துப்போட்டு சாமியாட ஆரம்பித்தார்கள். கொடையைப் பார்க்க வந்த வாலிபர்களுக்கு கரகாட்டத்தைவிட இளம்-பெண்கள் சாமியாடுவதுதான் கவர்ச்சியாக இருந்தது. சாமக்கொடை நெருங்கியதும் சாமியாடி ஆடி இருளைக் கிழித்துக்கொண்டு மயானக்கரைவரை ஓடிப்போய் ஆவேசமாய் பந்தலுக்குள் நுழைய ஜனங்கள் பயபக்தியுடன் கைகட்டி வாய்ப்பொத்தி நிற்க, மேளதாளத்தில் சாமியாடி வானத்திற்கும் பூமிக்கும் குதித்தபடி ஆடினார். எவ்வளவு நேரம்தான் ஆடுவார்? சாமி-யாடி களைத்துச் சோர்ந்ததும் அருள்வாக்குச் சொல்ல ஆரம்பித்தார். குறி கேட்பதற்கு ஜனத்திரள் சாமியாடியிடம் நெருங்கினார்கள்.

சாமி… என் பொஞ்சாதி ஒரு நோயாளி. அவளுக்கு நா சேவியம் பார்த்தே என் ஜென்மம் கழிஞ்சிடுமோன்னு பயமாய் இருக்கு.

சட்டுன்னு சொல்லப்பா சாமியாடி எரிந்து விழுந்தார். சாமி ரொம்பச் சின்ன வயசுல சிவப்பு நிறத்துல அழகான ஒரு பொண்ணு எனக்கு இரண்டாந்தாரமாகக் கிடைக்குமா?

நா _ இருக்கேன் பயப்படாதே. உன் காரியம் அனுகூலமாகும்.

அப்படி நடந்தா, என் சொந்த சிலவில் உனக்கு கொடை கொடுக்கேன் சாமி என்று நிலக்கிழார் தனது நரைத்த மீசையைத் திருகியபடி வேண்டிக்கொண்டார். பக்தர் கூட்டம் சாமியாடியிடம் அலைமோத பூசாரி தம்பதி முண்டித்தள்ளியபடி சாமியாடி முன்வந்தார்கள்.

சாமி …. ரொம்ப வருஷமா எங்களுக்குப்புள்ள இல்ல. இந்த வருஷமாவது புத்திரப் பாக்கியம் கிடைக்குமா? பூசாரி கை தொழுதபடி கேட்டார்.

ஏ… பூசாரி இந்த வருஷம் கண்டிப்பா உம்ம பொஞ்சாதிக்கு குழந்தையைக் கொடுப்பேன். சாமியாடி அருள்வாக்குச் சொன்னதும் பூசாரி தம்பதியினர் பூரித்துப் போனார்கள். எங்களுக்கு நீ புள்ளவரம் கொடுத்தா உனக்கு கெடா வெட்டிப் படப்பு சோறு போடுறோம் பூசாரி தம்பதி வேண்டிக்கொண்டார்கள்.

இப்படியே பல பக்தர்கள் சாமியாடியிடம் அருள்வாக்குக் கேட்டபடி நின்றார்கள்.

அன்று, கௌரி குடத்தை இடுப்பில் சுமந்தபடி கிணற்றுக்குப் போனாள். தலை லேசாகச் சுற்றியது. இரண்டு எட்டு நடந்திருப்பாள். கண்கள் இருட்டிக்கொண்டுவர கௌரி மயக்கமாய்ச் சாய்ந்தாள். அக்கம்பக்கம் நின்ற பெண்கள் பதறியபடி கௌரியைத் தூக்கிக்கொண்டு பூசாரி வீட்டில் கொண்டு-போய்ச் சேர்த்தார்கள். பூசாரிக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. மருத்துவச்சி-யைக் கூட்டிவந்தார். மருத்துவச்சி கௌரியின் நாடி பார்த்துவிட்டு பூசாரி அய்யா உம்ம பொஞ்சாதி கர்ப்பமாய் இருக்கா என்று மருத்துவச்சி சொல்லவும் பூசாரி மகிழ்ச்சியில் துள்ளினார்.

சொடலைத் தெய்வமே எல்லாம் உன் மகிமை பூசாரி பக்திப் பரவசமானார்.

பூசாரி தம்பதி கேட்டபடியே பிள்ளை வரம் சுடலை கொடுத்து விட்டான் என்ற பக்தியில் கெடா வெட்டி படப்புச் சோறு போட நினைத்தார்கள். பணத்திற்கு வழி? பூசாரி தனக்குத் தெரிந்த இடங்களில் கேட்டுப் பார்த்தார். ஏமாற்றமே மிஞ்சியது. பூசாரி சோர்வில் சுருண்டு போய் வீடு திரும்பும்போது ஸ்பீக்கர் கட்டிய ஜீப் அவர் முன்னே விளம்-பரத்தை அறிவித்தபடி வந்தது. நமது ஊரில் குடும்பநல அறுவைச் சிகிச்சை முகாம் நடைபெறும். அறுவைச் சிகிச்சை செய்து-கொள்ளும் நபருக்கு ரூ. 5000/—–_ (அய்யாயிரம்) சன்மானம் வழங்கப்படும் என்ற செய்தி செந்தேனாய் பூசாரி காதில் பாய்ந்தது. பூசாரி உற்சாகமானார். முதல் ஆளாக பூசாரி முகாமில் நுழைந்தார்.

மறுநாள் சுடலைக்கோயில் உள்ளே பூசாரி மனைவி கௌரி செத்துக்கிடப்பதாகச் செய்தி பரவ, ஊர்ஜனங்கள் பதறியபடி கோயிலுக்கு ஓடினார்கள். தெய்வக்குத்தம் செய்திருப்பாள். அதான் சொடலைப் பொலி வாங்கிட்டான் என்று ஊர்க்காரர்கள் பேசிக்கொண்டார்கள்.

பிரேதமாய் கௌரி கிடப்பதைக் கண்ட ஊர்ஜனங்கள் கண்கலங்கினார்கள். ஊர்க்காரர்-கள் பூசாரிக்காகக் காத்து நின்றார்கள். சிறிது நேரத்தில் பூசாரியின் முகம் சோகம் அப்பி வேர்க்க விறுவிறுக்க வந்தார்.

பூசாரி உம்ம சம்சாரம் சுத்தம் இல்லாம வந்ததால் சுடலை பொலி வாங்கிட்டான் நாட்டாமை சொல்லவும் பூசாரி கோயில் உள்புறம் சென்று மனைவியைப் பார்த்தார். கௌரி விழி பிதுங்கி வாய் கோணியபடி பிரேதமாய்க் கிடந்தாள். அதைக்கண்ட பூசாரி உடனே திரும்பி நாட்டாமையை நெருங்கினார்.

நாட்டாமை… இந்தாங்க கோயில் சாவி. இனிமேல் இங்க பூசாரியா இருக்க விரும்பல. சாவிக்கொத்தை நாட்டாமையிடம் நீட்டினார். ஆனால், நாட்டாமை சாவியை வாங்கவில்லை.

பூசாரி நீர் எவ்வளவு பெரிய பக்திமான். சுடலை உம் சம்சாரத்தைப் பொலி வாங்கி-விட்டான்னு கோயிலை விட்டுப் போறது சரியாப்படல

சுடலை சக்திவாய்ந்த தெய்வம்னு நம்பியிருந்தேன். அந்த நம்பிக்கை நாசமாயிட்டு பூசாரி நிதானமாகச் சொன்னார்.

யோவ் பூசாரி சொடலை சாமியிடம் வேண்டிக்கொண்ட காரியங்கள் அனுகூல-மாகுதே. அவ்வளவு ஏன்? உமக்கு சாமி சொன்ன அருள்வாக்குப்படியே உம்ம சம்சாரம் கர்ப்பமானா.

நானும் அப்படித்தான் நம்பினேன். வேண்டிக்கிட்டபடியே நமக்குப் புத்திர-பாக்கியம் சுடலை கொடுத்துட்டார்ன்னு, ரொம்ப சந்தோஷப்பட்டேன். வேண்டிக்-கிட்டபடி கிடாவெட்டி படப்பு சோறு போட விரும்பினேன். குடும்பநல அறுவைச் சிகிச்சை செய்தால் ரூ. 5000/_ (அய்யாயிரம்) கிடைக்கும்னு கேள்விப்பட்டு அங்க போனேன். டாக்டர்ங்க என்ன சோதிச்சு உமக்குப் புள்ளையே பொறக்காது. உன் ரத்தத்தில் உயிரணுக்கள் இல்லன்னு சொன்னாங்க. அப்பத்தான் கௌரி பேரில் எனக்கு சந்தேகம் வந்தது. சுடலை கோயிலுக்கு அவளை வரச்சொன்னேன். அவளும் வந்தாள் எனக்குப் புள்ள குடுக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு. உன் கர்ப்பத்துக்கு யார் காரணம்? என்று கேட்டேன். பிள்ளை இல்லைன்னு நான் பிரிஞ்சிடக்-கூடாதுன்னு சோரம் போனதாகச் சொன்னா. எனக்குப் பயங்கர ஆத்திரம். அப்படியே கௌரி கழுத்த நெறிச்சுக் கொன்னு கோயில்ல போட்டுட்டு வெளியே போயிட்டேன். சொடலை பொலி வாங்கிட்டதாக ஊராரை நம்ப வைச்சேன். நீங்களும் சுடலை மகிமை ன்னு நம்பிட்டீங்க.

ஒரு குடும்பப் பொண்ணு கெட்டுப் போகவும் ஈ, எறும்புக்குக்கூடத் தீங்கு செய்யாத நான் கொலைகாரனா ஆகவும் சொடலைதானே காரணம். இப்பச் சொல்லுங்க. இந்த சொடலைக் கோயில் நமக்குத் தேவையா?

கிராம ஜனங்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள்.

– அக்டோபர் 2010

Print Friendly, PDF & Email

1 thought on “சுடலைத் தெய்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *