கந்து வட்டியும் கந்தசாமி பிள்ளையும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 17, 2018
பார்வையிட்டோர்: 6,511 
 

பகல் உணவு நேரம். அந்தப் பிரமாண்டமான அரசு அலுவலகத்தில் ஊழியர்களுக்கு பகல் உணவு சாப்பிட ஒதுக்கியுள்ள விடுதியில் கண்காணிப்பாளர் கந்தசாமி பிள்ளை டிபன் பாக்ஸை பிரித்து வைத்துக் கொண்டு சாப்பிடாமல் மோட்டு வளையைப் பார்த்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தார்.

அருகில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சரவணன் ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்து விட்டு, “..சார்!…டிபன் கேரியரைப் பிரித்து வைத்து விட்டு சாப்பிடாமல் அப்படி என்ன சார் யோசனை செய்திட்டு இருக்கீறீங்க?…”என்று கேட்டார்.

சுய நினைவு வந்த கந்தசாமி பிள்ளை சரவணனைத் திரும்பிப் பார்த்தார். அடுத்த பதவி உயர்வு லிஸ்டில் இருக்கும் சரவணன் கந்தசாமி பிள்ளையின் நெருங்கிய நண்பரும் கூட!

சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் இல்லை. எல்லோரும் சாப்பிட்டு விட்டு ‘தம்’ அடிக்கப் போய் விட்டார்கள்.

“சரவணன்!….எப்படிச் சொல்வதென்றே தெரிய வில்லை!…இன்ஜினீயருக்குப் படிக்கும் என் பையனுக்கு இதுதான் கடைசி வருஷம்!…. இதுவரை எப்படி எப்படியோ புரட்டி சமாளித்து விட்டேன்….இன்னும் இரண்டு நாளில் அவனுக்கு பீஸ் நாற்பதாயிரம் கட்ட வேண்டியிருக்கு!…. கேட்ட பக்கம் எங்கும் கிடைக்கவில்லை…அடகு வைக்க நகையும் இல்லை…என்ன செய்வது என்று புரியவில்லை!..கந்து வட்டி கணேசனிடம் போய் வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்…..”
பற்றாக் குறை பட்ஜெட்டில் குடும்பம் நடத்தும் அந்த ஆபிஸில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தினர் அனைவருக்கும் கந்து வட்டி கணேசனைத் தெரியும்! வெற்றுப் பேப்பரில் ரெவுன்யூ ஸ்டாம்பு ஒட்டி எதுவும் எழுதாத கடன் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தர வேண்டும். அது போக கடன் வாங்குபவன் எவ்வளவு படித்திருந்தாலும், ஒரு எழுதாத ஒரு வெள்ளைப் பேப்பரில் கடைசில் கையெழுத்துப் போட்டு அடிஷனலாகத் தர வேண்டும். தேவையானால் அவர் எதை வேண்டுமானாலும் அதில் எழுதிக் கொள்வார். நூற்றுக்கு மாதம் ஒன்றுக்கு பத்து வட்டி. பத்தாயிரம் கேட்டால் முதலில் ஆயிரம் வட்டி எடுத்துக் கொண்டு ஒன்பதாயிரம் தருவான். தவணைத் தேதியில் அந்தப் பத்தாயிரத்தைக் கொடுத்து விட்டு தேவையானால் அன்றே தேவையான தொகையை அதே மாதிரி புதியதாக எழுதிக் கொடுத்து மீண்டும் கடன் வாங்கிக் கொள்ளலாம். வெறும் வட்டியை மட்டும் தந்தால் ஒத்துக் கொள்ள மாட்டான். தான் கடன் கொடுக்கும் நபருக்கு அசலை திருப்பித் தரும் தகுதி இருப்பதை அவன் ஒவ்வொரு மாதமும் உறுதி செய்து கொள்ள வேண்டுமாம்! அவன் நிபந்தனைகளில் அதுவும் முக்கியமான ஒன்று.
அவனாக யாருக்கும் தேடிப் போய் கடன் தர மாட்டான். அவனைப் பற்றி கேள்விப் பட்டு அவனை தேடிப் போய் கேட்பவர்களுக்கு மட்டும் தான் கடன் தருவான். நிபந்தனைகளை தெளிவாக ஆரம்பத்திலேயே சொல்லி விடுவான். நிபந்தனையைப் பூர்த்தி செய்ய முடிந்தவர்கள் மட்டுமே அவனிடம் கடன் வாங்கிக் கொள்ளலாம். முடியாதவர்கள் முதலிலேயே ஒதுங்கிப் போய் விட வேண்டும்! ‘….நான் ரொம்ப கண்டிப்பான பேர்வழி. பின்னர் அநாவசியமா என்னைக் குறை கூறக் கூடாது…’ என்பதை ஆரம்பத்திலேயே தெளிவாகச் சொல்லி விடுவான்.

கணேசன் தவணைத் தேதியில் பணம் வராவிட்டால் அவன் வீடு தேடி வசூலுக்குப் போகும் பொழுது யாராவது ஏதாவது காரணம் சொல்லி தவணை கேட்டால், குடும்பத்தில் மனைவி மக்கள் முன்னிலையில் “நீ வயிற்றுக்கு என்ன சாப்பிடறே?..”. என்புது தான் அவன் நாகரிகமாக கேட்கும் முதல் கேள்வியாக இருக்கும்!. அவன் எதற்கும் தயாராகத் தான் வசூலுக்குப் போவான்! அவனுக்கு வெளியில் அரசியல் கட்சி செல்வாக்கும் உண்டு. காவல் துறையிலும் நல்ல அறிமுகம் உண்டு.
யாராவது போலிஸூக்குப் போனால், அந்த ஏரியா இன்ஸ்பெக்டருக்கு பத்தாயிரம் ரூபாயை ஈஸியாக எடுத்துக் கொடுத்து விடுவான். அப்புறம் எல்லாம் அவனுக்கு சாதகமாகத் தான் நடக்கும்!. அந்தப் பணத்தையும் கடன்காரன் கணக்கில் ‘ அவனுக்குப் புத்திக் கொள் முதல்!’ என்று எழுதி அவனிடமே அதையும் வசூலித்து விடுவான்.

“சார்!…உங்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை!… உங்களால் சமாளிக்க முடியும் என்றால் மட்டும் அவனிடம் போங்கள்!…சிரமம் என்றால் வேறு இடம் பார்த்துக் கொள்வது நல்லது!”

“வேறு வழி இல்லை சரவணன்! நானும் நிறைய முயற்சி செய்து விட்டேன்… கடைசியா நம்ம கூட்டுறவு நாணய சங்கத்தில் கடனுக்கு ஒரு விண்ணப்பம் கொடுத்து விட்டு, தலைவரையும் போய் பார்த்தேன். முப்பதாம் தேதி சொசைடி மீட்டிங் இருக்கு….. அதில் வைத்து உங்க கடனை சாங்சன் செய்து, முதல் தேதி கட்டாயம் செக் தருவதாகச் சொல்கிறார். பையனுக்கு பணம் கட்ட நாளை மறுநாள் தான் கடைசி! வேறு வழி தெரியவில்லை!……..வட்டி போனால் போகிறது…சத்தம் இல்லாமல் கணேசனிடம் வாங்கி கட்டி விட்டு லோன் செக் வந்தவுடன் அதை மாற்றி கணசனுக்கு கொடுத்து விடலாம் என்று நினைக்கிறேன்…..”.

“அப்புறம் எதற்கு சார் தயங்குகிறீங்க? …கணேசன் வீட்டிற்குப் போனால் எந்த நேரமும் பத்தே நிமிஷத்தில் பணம் கைக்கு வந்து விடும்!”

மாலை ஆபிஸ் முடிந்ததும் கந்து வட்டி கணேசன் வீட்டிற்குப் போனார் கந்தசாமி பிள்ளை.

“வாங்க சார்!…நீங்க எங்கே சார்…இந்தப் பக்கம்?..”

“ உங்களைப் பார்க்கலாம் என்று தான் வந்தேன்”.

“ சார் தப்பா நினைக்காதீங்க!…உங்க ஆபிஸிலே நிறையப் பேர் என் கஷ்டமர்கள் தான்!. அதனால் உங்களைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன்! எனக்குத் தெரியும் நீங்க கௌரவமான மனுஷன்… நான் பிஸினஸ் விஷயத்தில் ரொம்ப மோசமான ஆளு… வசூல் விஷயத்தில் தராதரம் எல்லாம் நான் பார்க்க மாட்டேன்……என் வட்டித் தொழிலில் நல்லவன் கெட்டவன் நியாயம் அநியாயம் எல்லாம் பார்க்க முடியாது!…அப்படிப் பார்த்தா தொழில் நடத்த முடியாது… கொடுக்காமல் இருப்பதற்கு எல்லோரும் ஒரு காரணம் நிச்சயம் வச்சிருப்பாங்க!……..பைனான்சியரிடம் கிட்டப் பயம் போய் விட்டா கொடுத்த கடனை எங்களால் வசூல் செய்ய முடியாது…. வேற வழியில்லே! நாங்க அப்படித்தான் நடந்தாக வேண்டும்!…….நீங்க நல்ல மனுஷன் அதுதான் யோசிக்கிறேன்!…”

“ உங்களைப் பற்றியும் எனக்குத் தெரியும்!…உங்க கண்டிஷன் பற்றியும் தெரியும் என் பணம் …உரிய காலத்தில் உங்க வீடு தேடி வரும்…யோசிக்காம எனக்கு ஒரு மாச தவணைக்கு நாற்பதாயிரம் கொடுங்க!…இன்னைக்கு தேதி ஐந்து… அடுத்த ஐந்தாம் தேதிக்குள் நானே உங்க வீடு தேடி வந்து கொடுத்து விடுகிறேன்! “

“ சரி உங்க இஷ்டம்… நான் எதுவும் சொல்லத் தேவையில்லை…ஒரு பத்து நிமிஷம் பொறுங்க!..” என்று உள்ளே போய் பணத்தோடு வந்து, சில ‘டாக்குமெண்ட்’ களில் அவருடைய கையெழுத்தை வாங்கிக் கொண்டு பணத்தை கணேசன், கந்தசாமி பிள்ளையிடம் கொடுத்தார்.

அடுத்த மாதம் முப்பதாம் தேதி. கந்தசாமி பிள்ளை ஆபிஸுக்குள் நுழையும் பொழுது ஒரே பரபரப்பு! எல்லோரும் வெளியில் கும்பல் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

கந்தசாமி பிள்ளை பக்கத்தில் நின்று கொண்டிருத்த நண்பரிடம் “என்ன சேதி?..”. என்று விபரம் கேட்டார்.

“என்ன சார்!…உங்களுக்கு விஷயம் தெரியாதா?…நம்ம சுந்தர் சாருக்கு நேற்றிரவு ஹார்ட் அட்டாக்..”

“ஐயோ!…என்னாச்சு?..”

“ மாசிவ் அட்டாக்…..அப்பவே உயிர் போய் விட்டது… நாங்க எல்லாம் கேள்விப் பட்டு காலையிலேயே போய் பார்த்து விட்டு வந்திட்டோம்!….உங்களுக்குத் தகவல் தெரியாதா?…நெருங்கிய உறவுகள் வர இன்று மாலை ஆகி விடும்…மாலை தான் சவத்தை எடுப்பாங்க… எதற்கும் நீங்க ஒன் அவர் பர்மிஷன் போட்டு விட்டு ஈவினிங் போய் விட்டு வந்திடுங்க!……” என்றார்.

சுந்தர் நல்ல மனுஷன். திடகாத்திரமான உடம்பு. யாரும் எதிர் பார்க்காத முடிவு. மாலை கந்தசாமி பிள்ளை சுந்தர், வீட்டிற்கு மாலை மரியாதை செய்து விட்டு, இறுதி ஊர்வலத்தில் மின் மயானம் வரை போய் வந்தார். மின் மயானத்தில் சரவணன் கந்தசாமி பிள்ளையைப் பார்த்து அவர் அருகில் வந்தார்.

திரும்பி வரும் பொழுது நண்பர்கள் எல்லோரும் சுந்தரின் குணம் பற்றிப் பேசிக் கொண்டு வந்தார்கள்,

கந்தசாமி பிள்ளை தன் வீட்டிற்கு புறப்படும் முன், சரவணன் அவரைத் தனியாக நிறுத்தி, சொன்னார்.

“ சார்!…எனக்கு உங்களை நினைத்தால் தான் ரொம்ப கஷ்டமாக இருக்கு…சுந்தர் சார் தான் நம்ம சொசைடி பிரசிடெண்ட். அவருக்கு இப்படி ஆகி விட்டதால் இன்று மாலை நடக்க வேண்டிய லோன் கமிட்டி கூட்டம் நடக்க வில்லை!…லோன் கமிட்டிக் கூட்டத்தை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்து விட்டார்கள். புதிய தலைவர் தேர்ந்தெடுத்து தான், லோன் சாங்ஷன் பண்ணுவாங்களாம்!……அடுத்த மாசம் வரை நீங்க சமாளிக்க வேண்டிருக்கும்! …கந்து வட்டி கணேசனுக்கு நீங்க சொன்ன தவணைக்கு இன்னும் நாலைந்து நாள் தான் இருக்கு!…உஷாரா வேறு எங்காவது கைமாத்து வாங்கி நிலைமையை சமாளித்து விடுங்க!…” என்று எச்சரிக்கை செய்து விட்டுப் போய் விட்டார் சரவணன்.

. கைமாத்து அதுவும் நாற்பதாயிரம் அவருக்குத் தரக் கூடியவர்கள் யாரும் இல்லை! கந்தசாமி பிள்ளைக்குத் தலை சுற்றியது!

அதற்காக இனி சும்மா இருக்க முடியுமா? ஆபிஸ் டைம் முடிந்தவுடன், தெரிந்த நண்பர்கள், உறவுக்காரர்கள் என்று எல்லோரிடம் அதே வேலையாக அலைந்துக் கொண்டுதானிருந்தார்.

அன்று தேதி ஆறு ஆகி விட்டது! அன்று மாலை கூட தன்னோடு பள்ளியில் படித்து, படிப்பு வராமல் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து இன்று எம். எல். ஏ. வாக இருக்கும் ஒரு பழைய நண்பரைப் பார்க்கப் போயிருந்தார்.

காப்பி கொடுத்து அவர் இவரை உபசரித்து, ஒருமணி நேரம் பழைய கதை எல்லாம் ஜாலியாக பேசி பொழுது போக்கி விட்டு, பொய்யான காரணங்கள் சொல்லி சிரித்துக் கொண்டே வெறும் கையோடு அந்த அரசியல்வாதி கந்தசாமி பிள்ளையை அனுப்பி வைத்து விட்டார். பாவம்! கந்தசாமி பிள்ளை சோர்ந்து போய் வேதனையோடு வீடு திரும்பினார்.

மாலை ஆறு மணி.

காலிங் பெல் தொடர்ந்து அடித்தது. கந்தசாமி பிள்ளையின் பெண் இந்துமதி வந்து கதவைத் திறந்தாள்,

“இது கந்தசாமி பிள்ளை வீடு தானே?”

“ ஆமாம்…சார்!….நீங்க யாரைப் பார்க்க வேண்டும்?…”

“கந்தசாமி பிள்ளை வீட்டிற்கு கந்தசாமி பிள்ளயைத் தான் பார்க்க வருவாங்க… நீ அவர் பொண்ணா…என்ன படிக்கிறே?…”

“ பிளஸ் டூ படிக்கிறேன்!…”

அதற்குள் இந்துவின் பக்கத்தில் வந்த கணேசன், அவள் கன்னத்தை லேசாகத் தட்டிக் கொடுத்து “ நீ ரொம்ப அழகாக இருக்கிறே பாப்பா!…” என்றான்.

உடனே கணேசனின் கையை தட்டி விட்டு, “ அம்மா!…இங்கே வாயேன்!..” என்று சத்தமாக கூப்பிட்டாள் இந்து.

என்னவோ ஏதோ என்று பதறியடித்துக் கொண்டு சமையலறையில் இருந்து பார்வதியும், உள் ரூமில் இருந்த மகன் அரவிந்தனும் ஓடி வந்தார்கள்!

கணேசன் சிரித்துக் கொண்டே இந்துவின் பக்கத்தில் போய் நெருக்கமாக நின்று கொண்டு “பாப்பா ரொம்ப அழகாக இருக்குனு சொன்னேன்..அதற்குப் போய் கோபித்துக் கொண்டு சத்தம் போடுது பாப்பா.” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் கணேசன்.

“ நீங்க யாரு…யாரை பார்க்க வந்தீங்க?…” என்று கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டாள் பார்வதி.

“ நம்ம கந்தசாமி பிள்ளையின் வீட்டுக்கார அம்மா தானே நீ….. எதற்கு இப்படி கோபமா கேட்கிறே?…என் கடங்காரன் கந்தசாமி பிள்ளையைத் தான் பார்க்கத் தான் இங்கு வந்தேன்!..அவன் எங்கே?…”

அரவிந்தன் கையை ஓங்கிக் கொண்டு கணேசன் பக்கத்தில் வந்தான். கணேசன் உடனே எட்டி அரவிந்தனின் ஓங்கிய கையைப்பிடித்து முறுக்கி முதுகுப் பக்கம் கொண்டு போனான். அரவிந்தன் வலியில் துடித்தான்.

பார்வதி பக்கத்தில் வந்து “முதலில் அவன் கையை விடுங்க…மூட்டு விலகிடப் போகுது..” என்று பதறினாள்.

“இவன் படிச்ச பையன்…நாளைக்கு வேலைக்குப் போக வேண்டியிருக்கும்!…… ஊனமா போயிட்டா வேலை கிடைக்காதம்மா…. உங்க பையனுக்குச் சொல்லி வைங்க!…”

அதற்குள் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டு கனகா எட்டிப் பார்த்தாள். நாளைக்கு மார்க்கெட்டில் பிடித்து என்ன ஏது என்று உயிரை எடுத்து விடுவாள்.

நல்ல வேளை. அதற்குள் கந்தசாமி பிள்ளையின் பைக் வெளியில் நிறுத்தும் சத்தம் கேட்டது.

விழுந்தடித்துக் கொண்டு வீட்டிற்குள்ளே ஓடி வந்தார் கந்தசாமி பிள்ளை.

“என்ன கந்தசாமி பிள்ளை! …ஆபிஸ் முடிந்தா ஒழுங்கா வீட்டிற்கு வர மாட்டாய் போலிருக்கு!…ஊரைச் சுற்றிக் கொண்டு ஏழு மணிக்கு வருகிறே?…உன்னைத் தேடி உங்க வீட்டிற்கு வந்தா இங்கு .கொஞ்சம் கூட எனக்கு மரியாதை இல்லே!… உம் பொண்ணு அழகா இருக்கா…அதைச் சொன்னா அவ கோவிச்சுக்கிறா இந்த விபரம் தெரியாத பையன் கையை ஓங்கிட்டு வாரான்…இது நல்லாவா இருக்கு? ..நான் நெனச்சா அவன் கை காணமே போயிடும்!… அது உனக்குத் தெரியாதா கந்தசாமி பிள்ளை?…என்னைப் பற்றி பையனிடம் கொஞ்சம் சொல்லி வைக்கக் கூடாது? ..”

கணேசனின் பேச்சில் இவ்வளவு காலம் இருந்த மரியாதை இல்லை. கந்தசாமி பிள்ளையும் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு, “கணேசன்!… சத்தமாகப் பேசாதே!…அக்கம் பக்கம் தெரிந்தா நாளைக்கு வெளியே நான் தலை காட்ட முடியாது!” என்று கெஞ்சினார்.

கந்தசாமி பிள்ளையிடம் இதுவரை யாரும் மரியாதைக் குறைவாகப் பேசியதில்லை! அவரும் யாரிடமும் கெஞ்சிப் பேசியதும் இல்லை!

அவர் மனைவி பார்வதி, மகன் அரவிந்தன், மகள் இந்துமதி ஆகிய அனைவருக்கும் அன்று நடப்பது அதிசயமாவும் வேதனையாகவும் இருந்தது!

பார்வதிக்கு ஒரு பொறி தட்டியது! கணேசன் பேசும் பொழுது கடங்காரன் என்று ஒரு வார்த்தை சொன்னான்.

காலையில் எழுந்தவுடன் பத்திரிகையைப் பிரித்தால் கந்து வட்டிக் கொடுமையால் குடும்பத்தோடு அங்கு தற்கொலை இங்கு தற்கொலை என்று அடிக்கடி செய்தி வருகிறது…அது போல் எவனாவது கந்து வட்டிக்காரனிடம் போய் இவர் மாட்டிக் கொண்டிருப்பாரோ…..இருபது நாட்களிக்கு முன்பு கூட அரவிந்தன் காலேஜூக்கு நாற்பதாயிரம் கொண்டு போய் கட்டி வந்தாரே!.. பார்வதிக்குப் புரிந்து விட்டது!

பார்வதி தைரியமாக கணேசன் பக்கத்தில் வந்து “ மிஸ்டர்!…உனக்கு அவர் எவ்வளவு பணம் தர வேண்டும்?….வந்த காரியத்தை விட்டு விட்டு தேவையில்லாத விஷயம் எல்லாம் பேச வேண்டாம்?…”

“ உங்க வீட்டுக்காரன் நாற்பதாயிம் தர வேண்டும்…பணத்தை எடுத்து வச்சா நான் எதற்கு இங்கு நிற்கிறேன்? நான் பாட்டுக்குப் போய் விடுவேன்!…”

“ கொஞ்சம் மரியாதையா பேசுங்க…உங்க பணத்தை நான் தருகிறேன்…”

“ ..அடரா சக்கை!… இப்பவே பணத்தைக் கொண்டாம்மா.. நான் வாங்கிக் கிட்டு போயிடறேன்!…”

“ என்னமோ பெரிய பிஸினஸ் செய்யறேன் என்று சொல்றே?…ஒரு சாதாரணமான விஷயம் கூட உங்களுக்குத் தெரியலையே?…”

“ என்னம்மா சொல்றே?…எனக்கு உண்மையாப் புரியலே?..”

“ நாற்பதாயிரத்தை ரொக்கமா இந்தக் காலத்தில் யார் வீட்டில் வச்சிருப்பாங்க….இப்பத் தானே எனக்கு தகவல் சொல்றீங்க?…. காலையில் பாங்கு திறந்தவுடன் ரொக்கம் எடுத்து வைக்கிறேன் மூன்று மணிக்கு அவர் எழுதிக் கொடுத்த எல்லாப் பேப்பரை கொண்டு வந்து கொடுத்து விட்டு உங்க நாற்பதாயிரத்தை வாங்கிக் கொண்டு போங்க!….இப்ப கிளம்புங்க!…” என்று தைரிய லக்ஷ்மியாக கந்து வட்டி கணேசன் முன்பு நின்று பார்வதி பேசியதைப் பார்த்து கந்தசாமி பிள்ளை, அரவிந்தன், இந்துமதி எல்லோரையும் வியப்பில் ஆழ்ந்து விட்டார்கள்!

இரண்டு நிமிடம் நின்ற கணேசன் “கந்தசாமி பிள்ளை…..சார்!………..இந்த ஆம்பிள்ளைகளே சுத்த மோசம்!….முக்கியமான விஷயங்களைக் கூட தாலி கட்டிய மனைவிகளிடம் கூட கலந்து கொள்வதில்லை!….அப்படி நீங்க கலந்து கொண்டிருந்தா…உங்களுக்கு இப்படி தவிக்கும் நிலைமை வந்திருக்குமா? எல்லா ஆம்பிள்ளைகளும் வேண்டாத விஷயங்களைத் தான் வீட்டுக்காரியிடம் சொல்றாங்க………அதனால் தானே உங்களுக்கு இந்தக் கஷ்டம்?… சரி.. அப்ப நாளை மூணு மணிக்கு வாரேன்!…” என்று சொல்லி விட்டு வெளியேறினான்.

கந்தசாமி பிள்ளைக்கு ஒன்றும் புரியவில்லை! “என்னிடம் ஒரு பைசாக் கூட இல்லை!….காய்கறி வாங்க வேண்டும் ஒரு முன்னூறு ரூபாய் இருந்தாக் கொடுத்திட்டுப் போங்க!….” என்று காலையில் ஆபிஸுக்குப் போகும் பொழுது வழி மறித்து முன்னூறு ரூபாய் கேட்டு வாங்கினாள் பார்வதி.

பார்வதியைப் பற்றி கந்தசாமி பிள்ளக்கு நன்றாகத் தெரியும்! ரகசியமாக பணம் சேர்க்கும் பழக்கம் எல்லாம் அவளுக்கு கிடையாது. அப்படி இருக்க எந்த தைரியத்தில் பணம் பாங்கில் இருக்கிறது. நாளைக்கு எடுத்துத் தருகிறேன் என்று சொன்னாள்.

“பார்வதி நீ பாட்டுக்கு அவனை நாளைக்கு வரச் சொல்லி விட்டாய்!..எந்த தைரியத்தில் அப்படிச் சொன்னாய்?..”.

“ மறுபடியும் எதற்கு வீணா கவலைப் படுகிறீங்க…இதோ இந்த தாலி செயின் இருக்கு…இது ஐந்து பவுன்….எந்த பாங்கில் வைத்தாலும் நாற்பதாயிரம் சுலபமாக தருவாங்க!….நாளைக்கு நீங்க முதல் வேலையா பாங்கு திறந்ததும் இதை கொண்டு போய் அடகு வச்சு பணத்தை வாங்கி வந்து எங்கிட்டே கொடுத்திட்டு ஆபிஸுக்குப் போங்க!…”

“ அது சரி….பார்வதி! உங்கிட்ட வேறு எந்த நகையும் இல்லே!..இந்த தாலிச் செயின் தான் தங்கம் என்ற பெயரில் உன் கழுத்தில் இருக்கு!…அதையும் கழட்டிக் கொடுத்திட்டா எப்படி வெறும் கழுத்தோடு வெளியில் போவே?.”

“ மஞ்சள் கயிறு ரொம்ப புனிதங்க!.. நகையை விட..நம்ம மாதிரி மக்களுக்கு மானம் தான் முக்கியம்!…. இந்த கந்து வட்டிகாரங்க அதை நல்லா தெரிஞ்சு வச்சிருக்காங்க….அவங்க சொத்தை எல்லாம் நம்பி பணம் கொடுத்திட்டு அதற்காக கோர்ட் கோர்ட்டா அலைய அவர்கள் விரும்புவதில்லே!..மானம் ஒன்றே முக்கியம் அது போனா உயிரையே விட்டு விடுவேன் என்று நினைக்கிற நடுத்தர மக்களைப் பார்த்துப் பார்த்துத் தான் கடன் தருகிறாங்க!…நம்ம தமிழ் குடும்பங்களின் மானம் என்பது அவங்க வீட்டுப் பெண்களிடம் இருப்பதாக நினைக்கிறாங்க! அதனால் அவங்க வீட்டுக்கு முன்னால் கூட்டத்தைச் சேர்த்து அவன் மனைவி, மகளைப் பற்றி அசிங்க அசிங்கமாப் பேசினாலே தமிழ் நாட்டில் மானம் உள்ளவன் செத்துப் போய் விடுவான்…அது தெரிந்து தான் இந்த கந்து வட்டி பிஸினஸ் செய்யறவங்க நம்ம மாதிரி நடுத்தர மக்களாப் பார்த்து கடன் தருகிறாங்க!

சொத்து மேல கடன் கொடுத்து அதை கைப் பற்றுவதை விட இது சுலபங்க! … மானமே பெரிதென வாழ்கிற இந்த நடுத்தர மக்களை அசிங்கப் படுத்துவது அதை விட ரொம்ப சுலபமுங்க!..அதை தெரிஞ்சு கொண்டுதான் இந்த கந்து வட்டிக்கு கொடுக்கிறவங்க சொத்தைப் பற்றிக் கவலைப் படாமல் மானமுள்ள நடுத்தர மக்களாகப் பார்த்து கடன் தருகிறாங்க!…” என்று பார்வதியின் பேச்சைக் கேட்டு கந்தசாமி பிள்ளை அசந்து போய் விட்டார்!

கந்து வட்டி கணேசனிடம் கடன் வாங்கும் முன்பு யார் யாரிடமோ யோசனை கேட்ட கந்தசாமி பிள்ளைக்கு, பிரச்னைக்கு சரியான தீர்வு சொல்லும் தகுதியும் அக்கறையும் உள்ள தாலி கட்டிய தன் மனைவி தன் பக்கத்திலேயே இருக்கும் பொழுது, ஊரில் இருப்பவர்களிடம் எல்லாம் போய் யோசனை கேட்டதை நினைக்கும் பொழுது கந்தசாமி பிள்ளைக்கு கொஞ்சம் வெட்கமாக தான் இருந்த து! அதே சமயம் எல்லா ஆண்களும் அப்படித்தானே இருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது சற்று ஆறுதலாக இருந்தது!

– மக்கள் குரல் பத்திரிகை 1-7-2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *