ஒரு ஆரம்பம் இப்படி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 27, 2021
பார்வையிட்டோர்: 4,132 
 

குற்றமுள்ள நெஞ்சு… சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, சந்திரன் மேசை மேலிருந்த புது பென்சிலை இயல்பாக எடுத்து பாக்கெட்டில் வைத்தான்.

நேற்றுதான் வேலைக்கென்று மேசைக்கு ஆறு பென்சில்கள் நிர்வாகம் கொடுத்தது. அதில் ஒன்று… இப்போது சுவாகா !

‘அப்பாடா!’ – என்று நிமிர்ந்து பார்க்கும்போது சிவா இவனைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.

சொரக் !

கை மெய் களவு!!

சந்திரனுக்கு உடல் குப்பென்று வியர்த்தது. தர்மசங்கடமாக இருந்தது.

‘எல்லாம் நேரம். தன்னால் வந்த வினை.!’ தலைக் கவிழ்ந்தான் .

நேற்றைக்கு முதல் நாள் காலை.

ஒன்றாம் வகுப்பு படிக்கும் இவன் மகன் சதிஷ்.

“அப்பா பென்சில்…” கை நீட்டினான்.

“சாயந்தரம் தர்றேண்டா கண்ணா..”என்று சொல்லிவி ட்டு… அன்றைக்கே அலுவலகத்திலிருந்து ஒரு பென்சிலை எடுத்து கொண்டு வந்து நீட்டினான்.

பையன் சும்மா இருந்திருக்கலாம். ! – அவன் தன்னோடு படிக்கும் தன் சித்தி மகனிடம்…

“அப்பா புது பென்சில் தந்தார் !” என்று காட்ட அவன் அன்று சாயந்தரம் வந்து…

“பெரியப்பா ! எனக்கும் ஒரு புது பென்சில் வேணும் …”கையை நீட்டினான்.

“அதுக்கென்ன..! நாளைக்குத் தர்றேன் !” என்று சொன்னவன் இதோ எடுத்துவிட்டான்.

சிவா பார்த்துவிட்டான்.

இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. சாதாரண பென்சில். இரண்டு ரூபாய் காசு. ஆனாலும் சல்லிக்காசு பொருளாய் இருந்தாலும் எடுத்தது தப்பு.

‘ஏதோ நெனப்புல போட்டேன். வைச்சுடுறேன் !’ என்று சொல்லாமலேயே வைத்து விடலாம்.

‘இதையே மேலாளர் பார்த்தியிருந்தால்..?’

“எதுக்குய்யா அல்ப புத்தி..?” எகிறலாம், திட்டலாம்.

இல்லை… நேற்றைக்கு முறைத்துக் கொண்டதற்குப் பழிவாங்கும் படலமாக….

“சந்திரன்! அலுவல பென்சில், துரும்பாய் இருந்தாலும் வீட்டுக்கு எடுத்துப் போறது தப்பு. சட்டப்படி குற்றம் !” சொல்லி….உடனே ஒரு குற்றப் பத்திரிகை தயார் செய்து தரலாம்.

இல்லை…. இவரைத் தாண்டிய மேலதிகாரியிடம் சென்று ரகசியமாய்ப் போட்டுக் கொடுத்து….அலுவலகத்தை விட்டு வெளியில் செல்லும்போது வாசலில் நிற்கும் காவலனை விட்டு பரிசோதிக்கச் செய்து கையும் மெய்யுமாகப் பிடிக்க வைத்தால்..

அந்த ஆள்…

“ஏன் எடுத்துப் போறீங்க..? மறதியா தூக்கி பாக்கெட்டுல போட்டேன்னு சொல்றேதெல்லாம் தப்பு. இப்படி எத்தினி நாளாய் என்னென்ன பொருள் எடுத்துக் போயிருக்கீங்க…?” அப்படி இப்படி என்று காட்டு கத்தலாகக் கத்தி….தற்காலிக பணி நீக்கம் செய்யவும் வாய்ப்புண்டு.

அப்புறம் அலுவலகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது. முக்கியம் அந்த முண்டக்கண் மோகனா… முகத்தில் விழிக்க முடியாது. நக்கல் சிரிப்பு சிரிப்பாள். அருகில் செல்லும்போது…

“திருட்டுப் பையா !” இவன் காதுக்கு மட்டும் கேட்கும்படி ரகசியமாய் முணுமுணுப்பாள்.

இதெல்லாம் அவளைக் காதலிக்காத காண்டு. நூறு பவுன் நகை, ஒரு காராரோடு கலியாணம் செய்து வந்த காழ்ப்பு.

உள்ளுக்குள் கம்பளிப் பூச்சி ஊற… நெளிந்தான்.

கேவலம் இரண்டு ரூபாய் பென்சில்.!! டீ பத்து ரூபாய். இது கேவல காசு. இது செலவு செய்ய துணிவில்லாமல் கிடைக்கிறதே என்று எடுத்தது தவறு.

“ஏன் இப்படி செய்தோம்?”

நேற்று எடுத்த துணிச்சல்.

யாருக்காக எடுத்தோம்..?

அன்று மகனுக்காக. இன்று மைத்துனி பிள்ளைக்காக.

இது சரியா..?

தவறு. ஒரு சின்ன திருட்டு முதலில் தன்னலத்தில் ஆரம்பிக்கிறது. அடுத்து அதுவே ஆசையாய் உருவெடுத்து அதிகம் செய்யச் சொல்கிறது. தின்னற ருசி அப்புறம் அதுவே ஒரு தொழிலாக மாற… மாட்டிக்கொள்ளும்போது மானம் போகிறது. தண்டனை கிடைக்கிறது.!

இப்படித்தான் திருடர்கள் உருவாகிறார்களா..? ஆமாம். அப்படித்தானிருக்க வேண்டும். ! எவ்வளவு பெரிய கேவலமான செய்கை செய்துவிட்டோம். இன்றைக்கு சிறிசு. நாளைக்குப் பெரிசு. நாமே இப்படி செய்தால்….நம்மால் வளர்க்கப் படும் குழந்தைக்கு இது தொற்றி…!’ சந்திரனுக்கும் நெருப்பு சுட…

சட்டென்று எடுத்த பென்சிலை எடுத்து மேசை இழுப்பறையில் போட்டு மூடினான்.

உடன் மனசு லேசாகிப் போன்றது போல் ஒரு உணர்வு வந்து நிம்மதி வர…

‘மன்னித்துக் கொள் மனமே.! மறந்துவிடு மனசாட்சியே !’ – உள்ளுக்குள் மெல்ல சொல்லிக்கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *