உள்ளும் புறமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 7, 2022
பார்வையிட்டோர்: 2,486 
 

(2005 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நல்ல வெம்பு மணலில் கால் புதைக்கக் குழந்தைகளும் அவர்களின் எண்பது வயதுத் தாத்தாவும் உலாவந்தனர்.

வெட்டித்தழைத்த நாவல் பற்றைகளில் குழந்தைகள் ஓடி ஓடிக் கனித்த நாவல் பழங்களை தேடித்திரிந்தனர்.

முருங்கை, கிளா, ஈச்சை, துவரை என வெவ்வேறு பற்றைகளிலும் பழங்களைக் காணும்போது தாத்தாவின் ஆலோசனையுடன் அவற்றையும் ருசி பார்த்தபடி மிகவும் சந்தோசமாகப் பொழுது போனது.

தாத்தாவால் வேகமாக நடக்க முடியவில்லை . என்றாலும் அவர் அதைக் காட்டிக்கொள்ளவில்லை. அவருடைய ஒரு கால் பொய்க் கால் ஆகும். குழந்தைகளின் கண்களில் தெரிந்த பிரகாசமே அவருக்கு போதுமானதாக இருந்தது.

பாடசாலைகளின் கோடை விடுமுறைக்கு அவர்கள் வந்திருந்தனர். அணில்களும், குருவிகளும் அந்தப் பற்றைக் காட்டில் ஓசை எழுப்பிய வண்ணம் இருந்தன. அது ஒரு சரணாலயம் என்னும் அளவிற்கு சிறு பற்றைகளின் நுனிகளில் வெள்ளைக்கொக்குகள் ஓய்வெடுத்துக் கொண்டன.

“தாத்தா தாத்தா நாங்கள் உங்களை கஸ்டப்படுத்துகிறோமா” என ஒரு குழந்தை கேட்டது “இல்லடா கண்ணு இது உன் அப்பாவை தூக்கிச் சுமந்த தோளடா உன்னைத் தூக்கிச் சுமப்பதில் நான் எவ்வளவு சந்தோசம். அடைகிறேன் என்பது எனக்குத்தான் தெரியும்” என்று தாத்தா கண்ணீர் கசியச் சொன்னார். தாத்தாவின் தோளில் இருந்தபடியே முன்னால் பாய்ந்து ஓடி ஒழித்த முயலின் பாய்ச்சலை ரசித்தான் அந்தப் பையன்.

“வெளிநாட்டில் கூட்டில் அடைத்த மிருகங்களைத்தான் காணலாம். அல்லது அந்த அந்த நாட்டுப்பிள்ளைக்குத்தான் இப்படியான அனுபவங்கள் வரும். அப்பா தொடர்ந்து வேலைக்குப் போவார். அம்மா பாட்டைம் ஜொப், நாங்க பள்ளிக்கூடம் ரி. வி. இப்படி ஒரே இயந்திரமயம்.

கண்ணாடிக்குப் பின்னால் நின்று கட்டிடங்களையும் வாகனங்களையும் பார்த்துப் பார்த்து மனம் கல்லுமாதிரித்தான் ” என்று அவர்களின் மூத்த பிள்ளை கூறினாள்.

“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்…..”

அந்தக் காலத்துல அரிவரியில் படித்தது, சொல்லிப்பார்த்தார் தாத்தா. “ம்…. காலம் மாறிப்போச்சு மக்காள் எல்லாம் ஈசன் செயல்” என்றார் தாத்தா ”அம்மா காவலுக்காகவும் பொழுது போக்குக்காகவும் கனடாவில் ஒரு நாய் வளர்த்தார், இலங்கைக்கு வரும்போது அது பெரிய பிரச்சினையாகப் போச்சு தாத்தா” என்றாள் பெரியவள்.

“நான் சொல்றன் அக்கா, அப்புறம் தாத்தா நாங்க எங்கட நாயோடுதான் சிறிலங்காவுக்கு வந்தமா? அதே பெரிய பிரச்சினையாச்சு” என்றாள் சின்னவள் தொடர்ந்தாள் பெரியவள் “இங்கு வந்து இறங்கினா! வே(b)ட்ஸ்புளுநோய் பரவாமல் இருக்க இலங்கைக்கு வரும் எல்லா மிருகங்களும் ஊசிமருந்து பாச்சணுமாம் என்று, அது வேறு பிரச்சினை. எல்லாம் முடிந்து இங்கே வரும் வழியில் வீதியில் போன தெரு நாய்களைப் பார்த்து அம்மாவின் நாய் திறந்திருந்த கார் கண்ணாடியினூடாகப் பாய்ந்துபோக; வீதியில் வந்த அடுத்த கார் அதை அடிச்சுப்போட, பெரிய கூத்தாப் போச்சு தாத்தா. அம்மா உழைத்த காசெல்லாம் நாயோடே போச்சு தாத்தா” என்று பெரியவள் முடித்தாள்.

“கனடாவில் தெருவில் நாயை அலைய விட்டா தண்டக் காசு கட்டவேண்டும். இங்கு எல்லா வீதிகளிலும் நாய்கள் தான். ஒரே தொல்லையாப் போச்சு தாத்தா” என்றாள் சின்னவள்.

“பொலிஸ் என்றி போடப்போனாப் பெரிய தொல்லை என்று பேசாமவிட்டா, அது இன்னொரு கூத்தாக மாறிப் போச்சு தாத்தா” என்றாள் பெரியவள். தாத்தாவுக்கு மீதிக்கதையும் கேட்க ஆசை ஆனால் குழந்தைகளுக்கு மூச்சு வாங்கியது. “இளனி குடிச் சித்து கதைப்பம் பிள்ளையாள்” என்று கூறிய தாத்தா நல்லசெவ்விளனியைப் பார்த்து பக்கத்து தோட்டத்தில் வாங்கிக் கொடுத்தார்,

“ம். இப்ப சொல்லுங்க” என்றார் தாத்தா. “அக்கா அம்மாவும் அப்பாவும் எங்க போயிட்டாங்க அக்கா” எனச் சின்னவள் கேட்டாள்.

“செத்துப்போன நம்மட றொபின் மாதிரி ஒரு நாய் தேடப்போயிருக்காங்க. கிடைக்குமோ, கிடைக்காதோ கொலிடேய்ஸ் முடிஞ்சும் நாங்க ஸ்கூல் போகமுடியுமோ தெரியாது தங்கச்சி” என்றாள் அக்கா. “அது கிடக்கட்டும் தாத்தா உங்கட கால் உடைந்து போனதும் ஏதோ நாயால்தான் என்றார் அம்மா. உண்மையா தாத்தா?” எனச் சின்னவள் கேட்டாள்.

“நான் சிறியவனாக இருந்தபோது அது நடந்தது. புனாணைக்கு மேல் கரடி உரிச்சகல் குளம் பகுதியில் புதிதாக 1970களில் காடு வெட்டி வயல் செய்தோம். சுற்றிவரக்காடு. இப்ப இருக்கிறமாதிரி இரவு முழுவதும் வாகனம் ஓடாது. கலைவு இல்லாத படியால் யானைப்புழக்கம் அதிகம். யானையின் சத்தம் கேட்டால் போதும் காவலுக்கு இருந்த நாய் வேலியோரம் போய்நின்று அட்டகாசம் காட்டும். சில யானைகள் பெரிசா எடுக்காமல் போயிடும். சில யானைகள் வேலியோரத்தில் வந்து தும்பிக்கையால் துளாவிப் பார்க்கும். சில யானைகள் வேலியை உடைக்கும் நாங்களும் நெருப்புப் பந்தம் காட்டி அல்லது தகரத்தில் அடித்து வாணம் விட்டு விரட்டுவம். ஒரு நாள் துவக்கால் சூடு பட்டு தப்பிய யானை ஒன்று வேலியை உடைத்துக் கொண்டு வந்து விட்டது. அன்று பகல் முழுவதும் நாங்கள் எல்லோரும் மிகவும் கஸ்டப்பட்டு வேலை செய்ததால் மேல் நோவில் மரணப்படுக்கையில் படுத்து விட்டோம். காவல்நாய் நாங்கள் படுத்திருந்த வாடியினுள் புகுந்து மறுபுறத்தில் ஓடி விட்டது. நாயைத் துரத்தி வந்தயானை நாங்கள் படுத்திருந்த வாடியை தனது தலையில் தூக்கிக் கொண்டு நாயைத் துரத்திக் கொண்டு ஓடியது. எங்களை வெறும் மரக்கட்டை என நினைத்ததுபோல் ஏறி உளக்கிக் கொண்டு போனது. எங்கள் எல்லாருக்கும் காயம். ஆனால் ஒருவரும் சாகவில்லை. அந்த நாள்தான் என்னுயை கால் எலும்பு தூள் ஆகப் போனது… அந்த நேரம் உங்கட அப்பா கொஸ்டலில் நின்று படித்தான், ம்… அதெல்லாம் பழைய கதைகள். வெளிநாய் என்ன? உள்நாட்டு நாய் என்ன, முறைப்படி பழக்கி எடுக்காட்டா தொல்லைதான். வெயில் ஏறிப்போச்சு மக்காள் வாருங்க போவம். கறுத்துக்கிறுத்துப்போனா அதுவேறு ஆக்கின” என்று தாத்தாவும் பிள்ளைகளும் வீட்டுக்குச்சென்றனர்.

– மறுபக்கம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜனவரி 2005, எழுத்தகம் தமிழ் எழுத்தாளர் பேரவை, மட்டக்களப்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *