உயரம் தாண்டுதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 3, 2021
பார்வையிட்டோர்: 3,298 
 

சாரல் மெதுவாக பூமியை நனைக்க வேண்டுமா, வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருந்தது.

சேகர் குடையை மடக்கி மகள் கையில் கொடுத்து விட்டு, பள்ளிக்குள் நுழைந்தார். “மித்ரா நனையாமல் ஒதுங்கி நில்லு.” என்று உள்ளிருந்து சொல்லிக் கொண்டு சைகை காட்டினார்.

காக்கிச் சீருடையாளன் “என்ன ஐயா? என்ன விசயம்?” எனக் கேட்டான்.

“பிரின்சிபலை பார்க்க வேண்டும். உடற் பயிற்சியாளர் வேலைக்கு வரச் சோல்லியிருந்தார்கள்.” என்றார் சேகர்.

“ஆச்சரியமாக இருக்கிறதே. நேற்று இரண்டு மூன்று பேர் வந்து போனதில் யாரையோ தேர்ந்து விட்டதாகச் சொன்னார்களே.” என்றான் சீறுடைக் காரன்.

“காலையில் தான் மொபைலில் பேசினேன். வரச் சொன்னார்கள்.? என்றார் சேகர்.

“அந்தப் பெஞ்சிலே உட்காருங்கள். கூப்பிட்டதும் உள்ளே போங்க.” என்றான் உதவியாளன்.

“சரிப்பா.” என்றவர் மகளைக் கைகாட்டி அழைத்து தன்னுடைய பெஞ்சில் அமரச் சொன்னார்.

கொஞ்சம் நேரம் கழித்து தூறல் நின்று விட, பள்ளியின் முதல்வரே ஓடிவந்து “என்ன சேகர் எப்படியிருக்கீங்க? என்ன சாப்பிடிறீங்க? பயணம் எப்படியிருந்தது? வாங்க.” என அழைத்தார்.

வெளியே நின்ற உதவியாளரிடம் “மூணு காப்பி கொண்டு வரச் சொல்லு.” என்றார். “அப்புறம் நாளையிலேயிருந்து எங்கள் பள்ளியிலே சேர்கிறீர்கள் அல்லவா? என்றார் முதல்வர்.

“ஐயா நீங்கள் வேறே யாரையோ செலக்ட் பண்ணிட்டதா…..” இழுத்தார் சேகர்.

“நீங்கள் வருவதாக நம்பவில்லை. அதனால் ஒருவரிடம் சோல்லி வைத்திருந்தேன். நீங்கள் உடற்பயிற்சிக் கல்வியில் எத்தனைப் பரிசுகள் வாங்கியவர்கள் என்பது உலகம் அறிந்த செய்தி. அத்தோடு எத்தனையோ விளையாட்டு வீரர்களை தயாரித்து ஒலிம்பிற்கே அனுப்பியிருக்கிறீர்கள்.” அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதேஉள்ளே வந்து, ஜே.கே “வணக்கம்” என்றார்.

“சேகர் இவர்தான் ஸ்கூல் கரஸ்பாண்டெண்ட்” என்று அறிமுகம் செய்தார் பள்ளி முதல்வர்.

“விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கிறீர்கள் என்று அறிந்தேன். நாளையிலிருந்து வேலையில்சேர்ந்து விடுங்கள். நம்ம பழைய வீடு ஒன்று சும்மாவே இருக்கு. அங்கேயே தங்கிக் கொள்ளுங்கள்…. அந்தப் பெண் பிள்ளை யார்?” என்றார் ஜே.கே.சார்.

“அது என் மகள் சுமித்ரா. நான் ஏற்கனெவே வேலை செய்த பள்ளியில் 9ம் வகுப்புப் படிக்கிறாள். அங்கே மாகாண அளவிலே உயரம் தாண்டுதலில் பரிசும் வாங்கியிருக்கிறாள். இருந்தாலும் பள்ளியிலும் அரசியல் விளையாடியது.

கல்விச் சாலையில் தகுதியைப் பார்க்காமல் மேலாளரின் மகளுக்கு நாடு தழுவிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுத்துன் விட்டார்கள். இவளை அவர்கள் டெல்லிக்கு அனுப்ப விருப்ப வில்லை.

எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். என் மகள் மாகாண அளவில் வெற்றிப் பெற்றறதுபோல் தேசிய அளவில் கண்டிப்பாக வெற்றிப் பெறுவாள் என்று வாதாடிப் பார்த்தேன். கல்லூரிக்குச் செல்லும்போதுஎன் மகள் பெரிய வீராங்கனையாகப் போக வேண்டுமென நான் கண்ட கனவுகள் சிதறடிக்கப் பட்டன. ஒரேயடியாக மேலாளரின் மகள்தான் கண்டிப்பாக தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப் பட்டு என் மகள் சுமித்ரா ஒதுக்கப் பட்டாள்.

“என் மகளை ஒரு பெரிய விளையாட்டு வீராங்கனையாக்க நான் கண்ட கனவு பொய்த்தது. அப்போதுதான் உங்கள் பள்ளியிலிருந்து வெளிவந்த விளம்பரத்தை பார்த்தேன். பிரின்ஸ்பல் சாரும் எல்லாவற்றையும் கேட்டு விட்டு நமது பள்ளிக்குச் சிறப்புதானே என்று சந்தோசமாக அழைத்தார். அதுதான் உடனடியாகக் கிழம்பி வந்து விட்டேன்.” என்றார் சேகர்.

“ரொம்ப நல்ல காரியம். நம்ம பள்ளியில் படிக்கும் பெண் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிக்குப் போகிறாள் என்பது நம் கல்விச் சாலைக்கும் பெருமைதான். உங்கள் மனைவியை பிறகு அழைத்து வாருகிறீர்களா?” எனக் கேட்டார் ஜே.கே.

“அவள் ஒரு விபத்திலே இறந்துபோனாள். எங்கள் வீட்டிலே நானும் சுமித்ராவும் தான்.” என்றார் சேகர்.

உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் “நீங்கள் முதலில் பணி செய்த பள்ளியில் எல்லாம் முறைப்படி பணி விடுப்பு எல்லாம் செய்து விட்டுதானே வந்தீர்கள்?” எனக் கேட்டார்.

“ஆமாம். எல்லாம் சரியாக முடித்து விட்டு அதற்கான அத்தாட்சியோடு மகளுக்கு டிரான்ஸ்பர் கடிதமும் வாங்கி வந்திருக்கிறேன்.” என்றார் சேகர்.

“சரி, போய் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள். நாளையிலிருந்து நீங்கள் உடற்பயிற்சி ஆசிரியராகவும், உங்கள் மகள் ஒன்பதாவது வகுப்பு மாணவி யாகவும் சேர்ந்து இந்த ஆண்டில் நமது பள்ளியில் ஒரு தேசிய அளவில் பரிசு பெறும் வீராங்கனையை உருவாக்குங்கள்.” கை கொடுத்தார் ஜே.கே.

“ரொம்பா நன்றி” என சேகர் கைகூப்பி விட்டு வெளியேற, பள்ளியின் முதல்வர் காக்கிச் சீருடை உதவியாளனை அழைத்து, ஒரு சாவி கொத்தைக் கொடுத்து ‘’இவங்களை அய்யாவுடைய பழைய வீட்டிலே கொண்டு விட்டு விட்டு ஏதாவது தேவையிருந்தால் கொடுத்து விட்டு வா” என்றார். சேகர் திரும்பவும் நன்றி சொல்லி விட்டு வேகமாக நடந்தார் மகளுடன்.

உடற்பயிற்சி ஆசிரியராக பதவியேற்று அந்தப் பள்ளியில் நல்ல முறயில் விளையாடும் இளைஞர்களையும், இளம் பெண்களையும் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு விளையாட்டிற்கும் அவர்கள் தகுதிக்கேற்ப பயிற்சிக் கொடுத்தார் சேகர்.

ஒரு நாள் ஓட்டப் பந்தயத்திற்கு, இளம் பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கு பள்ளி மைதானத்தில் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் போது “அய்யா உங்களை ஆபீஸிற்கு வரச் சொன்னாங்க.” என்று பள்ளி உதவியாளன் சொல்லி விட்டுப் போனான்.

வியர்வை சொட்ட அலுவலகத்திற்கு வந்தபோது “வாங்க சேகர் இப்படி ஃபேனுக்கு கீழே உட்காருங்கள்.” என்று ஜே.கே.சொல்ல, அருகில் பள்ளியின் முதல்வர் பவ்யமாக அமர்ந்திருந்தார்.

“இந்த வருட தேசிய விளையாட்டிலே நம்முடைய மாநிலத்திலுருந்து உங்கள் மகளைத் தேர்ந்தெடுத்திருப்பதாக அறிந்தேன். எதிலே…?” என ஜே.கே.கேட்டார்.

“சார், அவள் உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் இரண்டு போட்டி களிலும் கலந்து கொள்ளப் போகிறாள்.” என்றார் சேகர் மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன்.

“நம் பள்ளிக்கு எவ்வளவு பெரிய பெயர்வாங்கித் தந்திருக்கிறீர்கள்” என்றார் ஜே.கே.

“இந்த வருடம் நம்ம மித்ரா கண்டிப்பாக தேசிய அளவில் பரிசு வாங்கி விடுவாள் சார்.” என்றார் சேகர் அசாத்திய நம்பிக்கையுடன்.

“மிக்க மகிழ்ச்சி. இந்த 100 மீட்டர், 500 மீட்டர் ஓட்டப்பந்தயத்திற்கு…..” என்று ஜே.கே கேட்கும்முன் “சார் பிரியசகி என்ற எட்டாம் வகுப்புப் படிக்கும் பெண் ஏறக் குறைய ஒலிம்பிக் போட்டியிலே வென்ற பெண்ணின் வேகத்தத் தொட்டிருக்கிறாள். அவளைக் கண்டிப்பாக அனுப்பி பரிசு பெற்று விடலாம்.

“அது சரிதான். ஆனால் எட்டாம் வகுப்பில் படிக்கும் சில்வியாவும் நன்றாக ஓடுவதாச் சொன்னார்கள். மகளிர் பிரிவில் அவளை டெல்லிக்கு அனுப்பினால்.. “ என்று ஜே.கே. முடிக்கும்முன் “அது எப்படி சார்முடியும்? பிரியசகி வேகமாக ஓடுகிறாள். அவளை விட சில்வியா வேகமாக ஓட முடியாமல் பலமுறை தடுமாறி இருக்கிறாள்.” என்றார் சேகர்.

ஜே.கே. எழுந்து “மூணு கலர் வாங்கிட்டு வா” எனக் காக்கிச் சீருடை உதவியாளனை அழைத்து சொல்லி விட்டு “சார் உங்கள் மகள் மித்ரா கண்டிப்பாக டெல்லிக்கு தேசிய விளையாட்டில் கலந்து கொள்ளப் போகிறாள்.” என்றார்.

“சரி” கொஞ்சம் புரியாத மாதிரி சொன்னார் சேகர்.

“இந்தப் பிரியசகி யார் உங்களுக்கு?”

“என் மனைவி. ஓட்டப்பந்தயத்தில் சிறந்த விளையாட்டு வீராங்கனை.”

“சில்வியா என் அக்கா பெண். அவளுக்கு பயிற்சிக் கொடுங்கள். அவளை நான் எப்படியும் தேசிய அளவில் ஓட்டப்பந்தயத்தில் சேர்த்து விடுவதாக என் அக்காவிற்கு வாக்குக் கொடுத்து விட்டேன்.” என்றார்.

உதவியாளன் வந்து கொடுத்த கலர் குப்பியைத் திறந்து ஒன்றை சேகருக்குக் கொடுத்து விட்டுஅவரும் ஒன்றை எடுத்துக் கொண்டார்.

“சார், பிரியசகி இந்த ஆண்டு தேசிய அளவில் ஓட்டப்பந்தயத்தில் பரிசு வாங்கி வருவாள். அவளை இந்தியாவிலிருந்து ஒலிம்பிற்கு அனுப்ப அடுத்த ஆண்டு என்னால் தயார் செய்ய முடியும்.” என்றார் சேகர் சுரத்தையில்லாமல்.

“இந்த வருடனம் சில்வியாவை அனுப்புங்கள். அடுத்த ஆண்டு பிரிய சகியை அனுப்பி விட்டால் போகிறது. என்ன முதல்வரே, நீங்கள் என்ன சொல்கிரீர்கள்” என்றார் ஜே.கே.

“ஆமாம் அதுவும் சரிதான்.” பக்க தாளம் போட்டார் பள்ளியின் முதல்வர்.

“சாரி சார், மன்னிக்கவும். தகுதியானவர்களைத்தான் நாம் டெல்லிக்கு தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிக்கு அனுப்ப வேண்டும். அதுவும் நாம் நம் தமிழ் மாநிலத்தைச் சார்ந்த ஒரு விளையாட்டு வீராங்கனையை அனுப்புகிறோம். அவர் பரிசு வாங்கினால் நமக்கு மட்டுமல்ல, நம் பள்ளிக்கும் தமிழகத்திற்குக் கூட பெருமைதான்”.

“சரி சிவியாவை தயார் செய்யுங்கள்.” என்றார் ஜே.கே

“சார் அவளுக்கு உடல் தகுதி வேண்டும். உடம்பு கொஞ்சம் குண்டு. அதனாலே நீங்கள் பிரிய சகியை அனுப்புவதுதான் சரி.”

“சேகர், நீங்கள் எங்கள் பள்ளியில் நல்ல வேலை செய்கிறீர்கள். நீங்கள் விரும்பிய படி உங்கள் மகளும் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறாள். எங்கள் ஊரும் உங்கள் இருவருக்கும் பிடித்துப் போய் விட்டது. என் வீட்டை தங்களுக்கு கொடுத்தேன். ஒரு காசுகூட வாடகை வாங்க வில்லை…” என ஜே.கே. சொல்லிக்கொண்டே போக “சார் என்ன சொல்ல வருகிறீர்கள்.?” என்றார் சேகர் விபரம் புதிந்த வாறு.

“நான் என் தமக்கைக்கு வாக்குக் கொடுத்து விட்டேன்.”

“ஆனால் தமிழ்நாடு ஒரு தேசிய அளவின் விளையாட்டுப் போட்டியின் பரிசை இழந்து விடும்”.

“அதனால் உங்களுக்கு என்னப் பிரச்சனை?”

“சார் தகுதி உள்ளவர்கள்தான் போட்டிக்குச் செல்ல வேண்டும்.”

“மன்னித்துக் கொள்ளுங்கள். நானும் என் மகளும் நாளைக்கே இந்தப் பள்ளியை விட்டுக் கிளம்புகிறோம்.” என சேகர் எழுந்து கொள்ள, பள்ளி முதல்வர் “சேகர்…” என அவர் கையைப் பிடிக்க முயல. அவர் விறு விறுவென வெளியேறி நடந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *