கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 9, 2021
பார்வையிட்டோர்: 13,649 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலை பதினோரு மணி. ஜனக் கூட்டம் கணிசமாய்ப் புழங்கும் அந்த மெயின் ரோட்டின் வலைவில் பலகைகளால் தடுக்கப் பெற்ற, சுப்பையனின் டீக்கடையில் வியாபாரம் சுறுசுறுப்பாய் நடந்து கொண்டிருந்தது.

பக்கத்துக் கிராமமான வடவள்ளியில் மாரியம்மன் திருவிழா கடந்த பத்து நாட்களாய் அமர்க்களமாய் நடந்து உச்சகட்டமான கடைசி நாள் அன்றைக்கு. பஸ்ஸ்டான்டுக்குப் போகும் கூட்டம் சுப்பையனின் டீக் கடையைத் தாண்டித்தான் போக வேண்டும்.

kalki1980-01-13_0034-pic

வியாபாரம் அவன் எதிர்பார்த்ததற்கு மேலாகவே பிய்த்துக் கொண்டு போயிற்று. இந்த ஜாக்பாட் வியாபாரத்தை எதிர்பார்த்துத்தானே இருந்த பெரிய அண்டா இரண்டிலும் வழிய வழியப் பாலை வாங்கி நேற்றிரவே ஸ்டாக் பண்ணியிருந்தான் சுப்பையன்.

டீ அடிக்கும் அய்யாசாமி டீத்தூளை அள்ளி அலுமினியப் போகினியில் போட்டு பாய்லரின் மூக்கைத் திருகி வெந்நீரைக் தாராளமாகக் கலந்து துணிச் சல்லடைஇல் அரையும் குறையுமாக டிகாக்க்ஷனை இறக்கி சாக்ரீனை விநாடி நேரத்தில் சேர்த்து – பாலை டிகாஷனில் ஊற்றுவதாக பாவ்லா காட்டி மழைக் காலத்தில் ரோட்டில் தேங்கியிருக்கும் மழைத் தண்ணீரைப் போல் டீத்தண்ணியை உருவாக்கிக் கண்ணாடி டம்ளர்களில் நுரை தட்ட ஊற்ற – கடைப் பையன் சின்னு மரப் பெஞ்சுகளில் உட்கார்த்திருக்கும் அப்பாவி கிராம ஜனங்களுக்கு உடனுக்குடன் விநியோகம் செய்ய வியாபாரம் தூள் பறந்தது.

கல்லாப்பெட்டியை மூடிவிட்டு எழுந்தாள் சுப்பையன், டீ அடித்துக் கொண்டிருந்த அய்யாசாமிக்கு அருகே சென்று மெல்ல முணு முணுத்தான்:

“அய்யாசாமி! இன்னிக்கு பூராவும் இந்த ரெண்டு அண்டாப் பால் குறையலே கூடாது. ஒரு சொம்பு பால் எடுத்தா உடனே ஒரு சொம்பு வெந்தண்ணியை ஊத்திடு….”

அய்யாசாமி சுப்பையாவைப் பார்த்துக் கண்ணடித்துப் புன்னகை செய்தபடியே சொன்னான்.

“அதப்பத்தி நீங்க சொல்லவே வேண்டியதில்லே… காத்தாலே புடிச்சு அப்படித் தான் பண்ணிக்கிட்டு வர்றேன்…”

சுப்பையன் கழுத்தில் மைனர் செயின் டாலடிக்க – நிறைவாய்ச் சிரித்துக்கொண்டே திரும்பவும் கல்லாவில் வந்து உட்கார்ந்தான். “அய்யா….” குரல் கேட்டுத் திரும்பினான் சுப்பையன். கடைக்கு வெளியே வாசலில் அந்தப் பிச்சைக்காரக் கிழவன் நின்று கொண்டிருந்தான்.

“ம்… போ….போ..வியாபார நேரத்தில தொந்தரவு பண்ணாம..” கையை ஆட்டி ஆத்திரமாய்த் துரத்தினாள் சுப்பையன்.

கிழவன் மெலிவான குரலில் கண்கள் சோர சொன்னான்: ”அய்யா…. ரா பிச்சை கேக்க வரலே… ஒரு பால்டீ கொடுங்கய்யா… மூனு நாள ஜொரம்…. ஒரு டாக்டர் புண்ணியவான் இந்த மாத்திரையைக் குடுத்தாரு..”

“பால்டி வேணுமா… காசு இருக்கா? சரி…. மொதல்ல காசை எடுத்து மேசை மேலே வையி…”

இழவன் தன் கந்தல் துணிப்பையில் கையை நுழைத்து – பைசா பைசாவாய் எண்ணி சுப்பையன் மேஜை மேல் வைத்தான்.

“உன்னிட்ட டம்ளர் இருக்கா? எங்க கடை டம்ளர்லே தரமாட்டோம்…” கிழவன் தன் கந்தல் மூட்டையினின்றும் அந்த நகங்கிப்போன அது மினிய டம்ளரை எடுத்தான், “இதுலே ஊத்துங்கய்யா….”

சுப்பையன் மறுபடியும் கல்லாப் பெட்டியைப் பூட்டிவிட்டு அய்யாசாமியின் பக்கமாய்ச் சென்றான். மெல்லிய குரலில் கேட்டான். “அய்யாசாமி… சித்த முந்தி ஒரு பால்டீ’யில் ஈ ஒண்ணு விழுந்திட்டதா வாபஸ் வந்துச்சே. அதை என்ன பண்ணினே?”

அய்யாசாமி டீ அடிப்பதை நிறுத்திவிட்டுக் சொன்னான்: “இதோ இங்கதான் வெச்சிருக்கேன். ஏன்?”

“நல்லவேளை… அந்தப் பால்டீயைக் கீழே கொட்டிட்டியோன்னு பார்த்தேன். அந்த டம்ளரிலேயே கொஞ்சம் வெந்தண்ணியை ஊத்திக் குடு. ஒரு பிச்சைக்காரக் கிழம் வாசல்ல காத்திட்டிருக்கு. ஊத்திடலாம்…”

“அண்ணே … அதுல விழுந்து ரொம்ப நேரமாச்சு. “

“பரவாயில்லே…எடு…”

அய்யாசாமி சுவரோரமாய் இருந்த அந்த ஈ விழுந்த டீ டம்ளரை எடுத்தான். பாய்லரின் பைப்பைத் திருகி – ஆறிப்போன அந்தப் பால் டீயில் வெந்நீரை நிரப்பி சுப்பையாவிடம் நீட்டினான்.

சுப்பையா கடைப் பையன் சின்னுவிடம் “டேய், அந்தப் பிச்சைக்காரக் கிழவனுக்கு இந்த டீயை ஊத்திட்டு டம்ளரை நல்லாக் கழுவி வை. அந்தக் கிழவனை வாசலை விட்டுக் தள்ளி நின்னு குடிக்கச் சொல்லு” என்று கூறிவிட்டு, மீண்டும் கல்லாவில் வந்தமர்ந்து ஒரு ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது.

கடைப் பையன் சின்னு உள்ளே யிருந்து கத்தினான்; ”ஐயோ பல்லி… பால் அன்டாவிலே பல்லி விழுந்துடுச்சு….”

டீக் குடித்துக் கொண்டிருந்த அத்தனைப் பேரும் சரேலென சுப்பையாவைப் பார்க்க சுப்பையா வெளிறிப்போய் எழுந்தான்.

குடித்துக் கொண்டிருந்த டீ டம்ளர்கள் பாதியிலேயே வைக்கப்பட்டன. எல்லோருமாய் எழுந்து பார்த்தபோது –

இரண்டு அண்டாக்களிலும் வழிய வழியத் ததும்பிக் கொண்டிருந்த பாலில் இரண்டு மரப்பல்லிகள் – கட்டை விரல் பருமனுக்கு விழுந்து உயிருக்குப் போராடின.

“இப்பத்தான் மேலே இருந்து ‘தொப்’ புன்னு விழுந்துச்சு… அதுல ஒன்னு இதுல ஒண்னு” கூடிவிட்டிருந்த கும்பலுக்கு விளக்கம் கூறிய சின்னுவைச் சுட்டெரித்து விடுவதைப் போல் பார்த்தான் சுப்பையன்.

அய்யாசாமியிடம் கரண்டியை வாங்கிக் குற்றுயிராகிவிட்ட பல்லிகளை எடுத்து வாசலில் வீசி எறிந்தான்.

“இந்தப் பாலில் இனி டீ போடக்கூடாது.” – கூட்டத்தில் ஒரு பெண் சொல்ல அதையே எல்லோரும் திருப்பிச் சொல்ல –

சுப்பையா கோபத்தோடு கத்தினான், “பல்லி செத்தாத்தானய்யா வெஷம். அதான் சாகலியே…”

“அது செத்தாலும் சரி, உயிரோடு இருந்தாலும் சரி, பால்லே முளுசா உளுந்து மூங்கிடுச்சே. அது போதாதா.. அதுவுமில்லாம மரப் பல்லிக மாதிரி தெரியுது…” – இளவட்டம் இரைந்தது.

“பாலைக் கிழே கொட்டிடு.”

“ஆமா. கொட்டிடு….”

“கொட்ட மாட்டேன். என்னய்யா பண்ணுவீங்க…?” சுப்பைய்யா முறைத்தான்.

“யோவ்…. இந்த ஆளு நியாயமாச் சொன்னா கேக்க மாட்டானய்யா… முனிசிபாலிடி ஹெல்த் ஆபீசருக்குப் போன் பண்ணிச் சொல்லிட வேண்டியது தான்…. ஐயா அப்ராதத்தையும் கட்டிட்டு உள்ளார போயிட்டும் வரட்டும்….” – ஒருவன் மிரட்ட…

சுப்பையா வெல வெலத்துப் போனான்.

“வேண்டாங்க பாலைக் கொட்டிடறேன்.”

“அந்த ஆளை நம்ப முடியாது… நாம்பளே கொட்டிடலாம். ஆளுக்கொரு கையைக் குடுங்க..”

நான்கைந்து பேர் உள்ளே நுழைந்து பால் அண்டாக்கள் வளைத்துத் தூக்கி வெளியே கொண்டு வந்து, சகதி தேங்கியிருந்த அந்தச் சாக்கடையில் கொட்ட…அந்த ரெண்டு அண்டா பாலும் கொட்டப் படுவதை நெஞ்சம் பதை பதைக்கப் பார்த்துக் கொண்டிருந்தான் சுப்பையன்.

ஓர் அநியாயமான சிறிய லாபத்துக்கு இவ்வளவு பெரிய நஷ்டமா? அதற்கு இது “ஈடுதான்!” சுப்பையாவின் உள் மனம் சொல்லிற்று.

– 13-01-1980

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *