அந்த போலீசிடம் பயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 4,477 
 

என்னுடைய குடும்பம் முதல் அக்கம் பக்கம் உள்ள நண்பர்கள் வரை என்னிடம் கேட்டுவிட்டார்கள். ஏன் சார் அந்த போலீஸை கண்டா மட்டும் இப்படி பயந்துக்கறீங்க.ஏதாவது அவர்கிட்ட தப்பு கிப்பு பண்ணிட்டீங்களா? கேட்டவர்களிடம் எப்படி சொல்வது?தப்பு பண்ணி அந்த போலீஸ்காரர் தண்டனை கொடுத்திருந்தால் பரவாயில்லையே.தண்டனையே கொடுக்காமல் தன்னை பார்த்தவுடன் தினம் தினம் பயப்பட செய்துவிட்டாரே.

அன்றைக்கு என்னுடைய ராசி எப்படி இருக்கும் என்று பார்க்காமல் விட்டுவிட்டேன்.இல்லாவிட்டால் இப்படி “வாய் வார்த்தை விட்டு” போலீஸ் ஸ்டேசன் சென்று கொண்டிருக்கிறேன். என்றைக்கும் ‘உடை’ விசயத்தில் அக்கறை காட்டுபவன், அன்றைக்கு ஏடாகூடமாய் ஒரு ‘உடையை’ போட்டு வந்திருக்கிறேன். என்னையும்,என் நண்பனையும் அழைத்துப்போகும் முன் என் உடையை மேலும் கீழும் பார்த்த போலீஸ்காரர், அதனால் கூட “வாருங்கள்” என்று சொல்ல வந்ததை ‘வா’ என்று ஒற்றை வார்த்தையில் குறைத்து கொண்டாரோ என்று எனக்கு தோன்றியது.எங்களை நடத்திவேறு கூட்டிச்சென்றார். ஜீப்பில் ஏற்றிகூட்டிச்செல்லாமல் நடந்து சென்றதால்,பார்ப்பவர்களுக்கு விகல்பமாய் படாவிட்டாலும், அவ்வப்பொழுது தெரிந்தவர்கள் கண்ணில் படும்போது ஒரு கேள்விக்குறி தென்படுவதை சங்கடத்துடன் எதிர்நோக்க வேண்டி இருந்தது.

வீட்டில் இருந்து நல்லபடியாகத்தான் கிளம்பினேன்.எப்பொழுதும் நல்ல பிள்ளையாய் பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறுபவன், இன்று நெடு நாள் கழித்து பால்ய நண்பணை பார்த்தவுடன் இருவரும் கட்டிப்பிடித்து சேம நலன் விசா¡¢த்துக்கொண்டோம். அதன் பின் வா ஒரு காப்பி சாப்பிடலாம் என்று கூப்பிட்டேன். யோசித்தவன் சரி வா என்று பஸ் நிறுத்தத்தின் எதிரில் உள்ள காபி பாருக்கு அந்த வாகன நொ¢சலூடே கடக்க முற்பட்டோம்.

தீடீரன்று ஒரு கார் என் நண்பனின் மீது மெல்ல உரசுவது போல நின்றது.

காரை விட்டு இறங்கியவன் “உனக்கு அறிவிருக்கா? நீ சாகறதுக்கு என் கார்தானா கிடைச்சுது? என்று ஏக வசனத்தில் பேச, நண்பனுக்கு முதலிலேயே இரத்த கொதிப்பு இருந்திருக்க வேண்டும் போல இருக்கிறது. “நீ முதல்ல வண்டிய ஒழுங்கா ஓட்ட பழகிட்டு ரோட்டுல வந்து ஓட்டு” என்று அங்கேயே நின்று கத்த ஆரம்பித்துவிட்டான்.நான் மெல்ல அவன் அருகே சென்று பரவாயில்லை வா போகலாம் என்று மெல்ல சொன்னேன். அதற்குள் காரை ஓட்டி வந்தவன் இவனுடைய கூச்சலை எதிர்பார்க்கவில்லை. அவன் எந்த மன நிலையில் வந்திருக்கிறானோ யார் கண்டது? கொஞ்சம் மோசமான வார்த்தையை வீசினான்.

எனக்கும் கொஞ்சம் கோபம் வந்துவிட்டது.அவனை நோக்கி நானும் சில வார்த்தைகளை வீசினேன். அந்த இடத்தில் “ட்ராபிக் ஜாம்” ஆகி வண்டிகள் ‘பாம்’ ‘பாம்’ என ஹாரனகளை இஷ்டத்திற்கு அலறவிட்டனர். ஒரு சிலர் இறங்கி சமாதானம் பேசவும் முற்பட்டனர். சிலர் தேமே என்று எங்கள் சண்டையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். அதற்குள் போக்குவரத்தை ஒழுங்கு படுத்த அந்த இடத்திற்கு ஒரு போலீஸ்காரர் வந்துவிட்டார்.அவர் எங்கள் இருவரையும் கொஞ்சம் இந்த பக்கம் வாருங்கள் என்று கூட்டி வந்தவர், கார்காரனை நீ போப்பா என்று விரட்டுவது போல சொல்ல என் நண்பன் “அரசாங்க உத்தியோகஸ்தன்” கோபம் வர என்ன சார் அவனை போகச்சொல்லிட்டீங்க உறுமினான்.

போலீஸ்காரர் அமைதியாய் எங்களை பார்த்து இப்ப என்ன பண்ணனும்கறீங்க, உங்களையும்,அவனையும் கூட்டிட்டு போய் “நியூசென்ஸ் கேஸ்” அப்படீன்னு போட சொல்றீங்களா?நீங்க போடுங்க நான் பார்த்துக்கறேன் வாய் விட்டான் நண்பன். நான் அவன் கையைப்பற்றி அமைதிப்படுத்தி வா போகலாம் என்றேன். அவனுக்கு கொதிப்பு மண்டைக்கு ஏறியிருந்தது. நான் மெல்ல சொன்னதை சட்டைசெய்யாமல் சார் நீங்க முதல்ல கேஸ் புக் பண்ணுங்க பிடிவாதம் பிடித்தான். எனக்கு உதறல் ஆகிவிட்டது. அவனை அமைதிப்படுத்த முயற்சி செய்தது பலன் தரவில்லை.போலீஸ்காரருக்கு முகம் மாற ஆரம்பித்துவிட்டது. என்னையும் அவனையும் சரி “வா” ஒற்றை வார்த்தையில் கூறி கோபத்தை காண்பித்து நடக்க ஆரம்பித்து விட்டார்.

நண்பன் பேசிவிட்டானே தவிர போலீஸ்காரர் இப்படி தீடீரென்று கூப்பிட்டு நடக்க ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கவில்லை. தயங்கினான். எனக்கும் கொஞ்சம் உதறல்தான். வெளியில் இருக்கும் வரைதான் நாம் அனைவரும் வாய் வீச்சு பராக்கிரமசாலிகள். ஸ்டேசன் என்று சொன்னவுடன் மனசு “கருக்” என இயல்பாகவே பயம் வந்துவிடுகிறது. இனிமேல் பேசி என்ன பிரயோசன்ம், போலீஸ்காரர் அவர் பாட்டுக்கு வேகமாக சென்று கொண்டிருக்கிறார். பயத்துடனே நாங்களும் நடக்க தொடங்கினோம்.

இதுவரை போலீஸ் ஸ்டேசன் எங்கிருக்கும் என்று கூட தெரியாது. இன்று யார் முகத்தில் விழித்தேனோ, என்று மனதுக்குள் புலம்பியவாறு நண்பனை பார்த்தேன். அவன் என்னை விட பயந்திருந்தான்.அவனும் மனதுக்குள் என்னைப்போல் புலம்புகிறானோ யாருக்கு தெரியும்? இல்லை இவனால்தான் இந்த பிரச்சனை என்று என்னை மனதுக்குள் திட்டிக்கொண்டிருக்கலாம் யார் கண்டது !

முன்னே சென்று கொண்டிருந்த போலீஸ்காரர் திரும்பி இங்க கொஞ்ச நேரம் நில்லுங்க என்று எங்களை நிற்கச்சொல்லிவிட்டு எங்கோ சென்றார். நாங்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம். நடு ரோட்டில் நின்று கொண்டிருக்கிறோம்.

எதற்கு என்று யாராவது கேட்டால் என்ன பதில் சொலவது. போலீஸ்காரர் நிற்க சொல்லியிருக்கிறார் என்று சொல்லவா முடியும். எங்களிடமிருந்து இப்பொழுது பெருமூச்சுதான் வந்தது. நண்பன் தன்னையே நொந்து கொண்டவன் போல தலையை குனிந்து கொண்டான்.

போலீஸ்காரர் போய் பத்து நிமிடங்களுக்கு மேல் ஆயிற்று, இப்பொழுது எங்கள் இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை, போய்விடலாமா என்று பார்த்தால் நாளை அவர் பார்த்தால் என்ன சொல்வாரோ அல்லது செய்வாரோ என்ற பயம் வந்தது.

போலீஸ் சொல்லி கேட்காவிட்டால் அதற்கு ஏதாவது கேஸ் போட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயம் வேறு.அப்பொழுதுதான் எங்களிடம் “செல்போன்”இருப்பது ஞாபகம் வந்தது.
நண்பன் தன் தலையில் தானே அடித்துக்கொண்டு செல்லை எடுத்தான்.

யாரிடம் பேசப்போகிறாய்?கேட்டேன். நண்பன் கிட்டதான், என்ன சொல்லி அவனை கூப்பிடுவ?யோசித்தான். போலீஸ் ஸ்டேசன் உள் இருந்தாலாவது நண்பன் வருவது உபயோகமாய் இருக்கும். அல்லது சண்டை போடும்போது வந்திருந்தாலும் உபயோகமாய் இருக்கும் இப்படி நடு ரோட்டுல நிக்கும்போது அவன் வந்துதான் என்ன செய்யமுடியும்?

அவனும் புரிந்தது போல் தலையாட்டினான். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.அந்த போலீஸ்காரர் வருவதாக தெரியவேயில்லை. அதற்குள் போவோர் வருவோர், மற்றும் அங்குள்ளோர் எங்களை வேடிக்கை பொருளாய் பார்ப்பது போல் ஒரு பிரமை.பேசாமல் போய் விடுவோமா?நண்பன் கேட்க சரி என்று சொல்லாமலும், இல்லை என்று சொல்லாமலும் ஒரு விதமாய் தலையசைத்தேன்.இன்னும் பத்து நிமிடம் பார்க்கலாம், என்றவன். அடுத்த கால் மணி நேரம் காத்திருந்து சரி போகலாம் என்று கிளம்பிவிட்டோம்.

நேராக ஸ்டேசனுக்கு போயிடலாமா என்று கேட்ட நண்பனை முறைத்தேன். உனக்கு இவ்வளவு பட்டும் அறிவு வரையிலயா? பேசாம கிளம்பு அவங்கவங்க இடத்துக்கு போயிடுவோம், அதுக்கப்புறம் ஏதாவது ஆச்சுன்னா பார்த்துக்கலாம் சொன்னவர்கள் விரு விருவென இடத்தை காலி செய்தோம்.

மறுநாள் வழக்கம்போல பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். ஏதேச்சையாக எதிர்ப்புறம் பார்க்க அந்த போலீஸ்காரர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். உள்ளத்தில் பயம் ஐஸ் கட்டியாய் தலையிலிருந்த பாதம் வரை பாய்ந்தது.நல்ல வேளையாய் நான் ஏறும் பஸ் வர பாய்ந்து சென்று ஏறினேன். ஏறி இடம் கிடைக்காமல் நின்று கொண்டிருந்தபோதும் திரும்பி திரும்பி பார்த்து கொண்டேன். எங்கே பின்னாடியே வந்து பஸ்ஸை நிறுத்தி என்னை கைது செய்து கொண்டி போய்விடுவாரோ என்ற பயம் மனசை பட படவென அடிக்க செய்தது.

நண்பன் வேறு அடிக்கடி போலீஸ்காரர் என்னை கூப்பிடுகிறாரா என்று கேட்டு என்னை பயமுறுத்திக்கொண்டே இருக்கிறான்.

இப்படியாக தினம் தினம் அவரை பார்த்து இ.பி.கோ.எத்தனையாவது சட்டப்படி சொல்லாமல் வந்தது குற்றம் என்று சொல்லி கைது பண்ணுவாரோ என்று பயந்து கொண்டிருக்கிறேன். அல்லது கொண்டிருக்கிறோம்.

அன்று போலீஸ்காரர் வேண்டுமென்றே எங்களை அங்கே நிற்க சொல்லிவிட்டு அவர் வீட்டுக்கு போய்விட்டார் என்பது அவர் அந்த ஊரை விட்டு மாற்றல் ஆகி போகும் வரை எங்களுக்கு தெரியவேயில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *