கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 7,434 
 

நமது கதை 1941-ஆம் வருஷத்தில் ஆரம்பமாகிறது. இது கதை என்று வாசகர்களை நம்பச் செய்வதற்கு எனக்கு வேறு வழி ஒன்றும் தோன்றவில்லை. இந்த நாளில் நிஜத்தை நிஜம் என்று நம்பச் செய்வதே கடினமாயிருக்கிறது. கதையை, கதை என்று நம்பச் செய்வது அதை விடக் கஷ்டமானதல்லவா?

ஸ்ரீமதி ஸுசீலா அந்த 1941-ம் வருஷத்திலேதான் எம்.ஏ. பரீட்சையில் புகழுடன் தேறினாள். 1939-ம் ஆண்டில் ஸுசீலாவுக்கு பி.ஏ. பட்டம் கிடைத்து விட்டது. அத்துடன் திருப்தியடையாமல் மேலே எம்.ஏ. பரீட்சைக்குப் படிக்கத் தீர்மானித்தாள். அந்த வருஷத்தில் சென்னை யுனிவர்சிடிகாரர்கள் எம்.ஏ. பரீட்சைக்கு ஒரு புதிய பாடத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். அது தான் பாக சாஸ்திரம். இந்தக் காலத்து யுனிவர்ஸிடி கல்வியானது ஸ்திரீகளைக் குடும்பத்துக்கு லாயக்கற்றவர்களாகச் செய்கிறது என்று தேசத்தில் பெரிய கிளர்ச்சி நடந்ததின் பேரில், யுனிவர்ஸிடி இந்த சீர்திருத்தத்தைச் செய்தது. புதிய விஷயமான பாகசாஸ்திரத்தையே ஸுசீலா எம்.ஏ. பரீட்சைக்கு எடுத்துக் கொண்டாள். அவளுக்கு அந்த சாஸ்திரத்தைப் போதிப்பதற்கென்று ஒரு ஐரோப்பிய ஆசிரியை மாதம் ரூ.950 சம்பளத்தில் யுனிவர்ஸிடியினால் நியமிக்கப்பட்டாள். இதிலிருந்தே, நமது காங்கிரஸ் மந்திரிகளின் ஜம்பம் ஒன்றும் யுனிவர்ஸிடியினிடம் மட்டும் பலிக்கவில்லையென்று அறிந்து கொள்ளலாம்.

அந்த ஆசிரியையின் உதவியுடன் பாக சாஸ்திர ஆராய்ச்சியிலும் அப்பியாசத்திலும் இரண்டு வருஷம் பரிபூரணமாக அமிழ்ந்திருந்தாள் ஸுசீலா. இந்த நாட்களில் வேறு எந்த விஷயத்துக்கும் அவளுடைய மனதில் இடம் இருக்கவில்லை. ஒவ்வொரு சமயம், சீமையிலே எலெக்ட்ரிக் என்ஜினியரிங் படிக்கப் போயிருக்கும் அவளுடைய அத்தை மகன் பாலசுந்தரத்தின் நினைவு மட்டும் அவளுக்கு வருவதுண்டு. ஆனால், அடுத்த நிமிஷம், டெமொடோ அப்பத்துக்கு உப்புப் போட வேண்டுமா வேண்டாமா என்ற விஷயத்தில் அவளுடைய கவனம் சென்று, பாலசுந்தரத்தை அடியோடு மறக்கச் செய்து விடும்.

பாக சாஸ்திரம் சம்பந்தமான ஸுசீலாவின் சரித்திர ஆராய்ச்சிகள் அபாரமாக இருந்தன. திருநெல்வேலித் தோசை என்பது ஆதியிலே எப்போது உண்டாயிற்று. எப்போது அது சதுர வடிவத்திலிருந்து வட்ட வடிவமாகப் பரிணமித்தது, எப்போது தோசைக்கு மிளகாய்ப் பொடி போட்டுக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டது என்பது போன்ற விஷயங்களை ஆராய்ந்து நூறு பக்கத்தில் ஸுசீலா ஒரு கட்டுரை எழுதினாள். இம்மாதிரியே, கோயமுத்தூர் ஜிலேபி, தஞ்சாவூர் சாம்பார், மைசூர் ரசம், கல்கத்தா ரஸகுல்லா ஆகிய ஒவ்வொன்றைப் பற்றியும் பல நூறு பக்கம் எழுதினாள்.

இன்னும் ஸுசீலா மகஞ்சதாரோவுக்கு நேரில் சென்று அங்கே கண்டெடுக்கப்பட்ட 5000 வருஷத்துக்கு முந்திய சிலாசாஸனங்களை ஆராய்ந்து, இந்தியாவில் புராதன பாகசாஸ்திரத்தைப் பற்றிப் பல அற்புதங்களைக் கண்டுபிடித்தாள். உதாரணமாக, தமிழ்நாட்டில் கொழுக்கட்டை என்பது ஏற்பட்டு முந்நூறு வருஷங்கள் தான் ஆயின என்று ஸுசீலா கண்டுபிடித்துச் சொன்னாள். இதற்கு அவள் 5000 வருஷத்துக்கு முந்திய மகஞ்சதாரோ கிலாசாஸனத்திலிருந்து அத்தாட்சி காட்டியபோது, அதைப் பார்த்தவர்கள் அவ்வளவு பேரும் பிரமித்தே போனார்கள். கொழுக்கட்டையின் மேல் அவர்களுடைய மோகம் பறந்தே போய்விட்டது.

இம்மாதிரி வெறும் ஆராய்ச்சிகளுடன் ஸுசீலா ஒன்றும் நின்று விடவில்லை. அப்பியாச சோதனைகளும் செய்து வந்தாள். ஸுசீலாவின் சோதனைகளுக்காகவே பெண்கள் கலாசாலை ஹாஸ்டலில் ஒரு தனிப் பகுதி ஒழித்து விடப்பட்டது.

ஆரம்பத்தில், ஹாஸ்டலில் வசித்த சக மாணவிகள் அவளுடைய சோதனைகளில் ஒத்தாசை புரிந்து வந்தார்கள். அதாவது, அவள் கண்டுபிடித்த புதிய பட்சணங்களை அவர்கள் ருசி பார்த்து அபிப்பிராயம் சொல்லி வந்தார்கள். ஆனால் வர வர, இது விஷயத்தில் அவர்களுடைய ஒத்துழைப்புக் குறைந்து வந்தது. கடைசியில், ஒருநாள், ஸுசீலா செய்திருந்த ‘குளோரோபாரம் பச்சடி’யை அவர்கள் ருசி பார்த்த பிறகு, நிலைமை விபரீதமாகப் போய்விட்டது. ருசி பார்த்தவர்கள் அவ்வளவு பேரும் மூன்று நாள் வரையில் தூங்கிக் கொண்டே வகுப்புக்குப் போனார்கள்; தூங்கிக் கொண்டே படித்தார்கள்; தூங்கிக் கொண்டே தூங்கினார்கள்! இந்த சம்பவத்துக்குப் பிறகு, ஹாஸ்டல் மாணவிகள் ஒருவரும் ஸுசீலாவின் ‘லபரேடரி’க்கு அருகிலேயே வருவது கிடையாது. எனவே, ஸுசீலா ‘தன் வயிறே தனக்குதவி’ என்னும் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று. கடைசியாக, பரீட்சை நெருங்கியது. அந்த வருஷம் எம்.ஏ. வகுப்பில் பாக சாஸ்திரப் பரீட்சைக்கு ஆஜரான மாணவி ஸுசீலா ஒருத்திதான். ஆனால், பரீட்சகர்களோ ஒன்பது பேர். அவர்கள் ஸுசீலா எழுதியிருந்த ஆராய்ச்சிகளையெல்லாம் படித்துவிட்டு, 100க்கு 90 மார்க் வீதம் கொடுத்தார்கள். பிறகு ஸுசீலா செய்து கொடுத்த பட்சணங்களைத் தூரத்தில் இருந்தபடியே வாசனந பார்த்து விட்டு, 100க்கு 110 மார்க் வீதம் கொடுத்தார்கள். எனவே, அந்த வருஷம் எம்.ஏ. பரீட்சையில், சென்னை மாகாணத்திலேயே முதலாவதாக ஸுசீலா தேறினாள். அவளுடைய விசேஷ ஆராய்ச்சி முடிவுகளைக் கௌரவிப்பதற்காக ‘டாக்டர்’ பட்டம் அவளுக்கு அளிப்பதென்றும், ஸிண்டிகேட் சபையார் முடிவு செய்தனர்.

இவ்வளவு மகத்தான கௌரவங்களை அடைந்த ஸுசீலாவுக்கு இந்த இரண்டு வருஷத்தில் ஒரு சின்ன நஷ்டம் ஏற்பட்டது என்பதையும் சொல்லத்தான் வேண்டும். அவளுடைய பாக சாஸ்திர ஆராய்ச்சிகளின் பயனாக அவளுடைய ஜீரணசக்தி அடியோடு போய்விட்டது!

பரீட்சை முடிவு வெளியாயிற்றோ, இல்லையோ, ஸுசீலாவுக்கு வாழ்த்துச் செய்திகள் வந்து குவிந்த வண்ணமிருந்தன. அவற்றுடன், டீ பார்ட்டிகளுக்கும், டின்னர் பார்ட்டிகளுக்கும் அழைப்புகள் வரத் தொடங்கின. முதன் முதலில் ராஜதானியில் முதலாவதாக எம்.ஏ. பரீட்சையில் தேறிய பெண்மணி அன்றோ? ஆதலின், மாதர் சங்கங்களின் ஸ்திரீகள் கிளப்புகளிலும் ஸுசீலாவுக்கு உபசார விருந்துகள் நடந்தன. அவள் திருநெல்வேலியைச் சேர்ந்தவளாதலால், திருநெல்வேலி சங்கத்தார் ஒரு விருந்து கொடுத்தார்கள். தங்கள் கலாசாலைக்கே கௌரவம் கொண்டு வந்ததற்காக, கலாசாலை ஆசிரியைகள் ஒரு விருந்து அளித்தார்கள்.

‘வீரத் தமிழ் மகளிர் சங்க’த்தாரும் இவர்களுக்கெல்லாம் பின்வாங்கிவிடவில்லை. அப்புறம் சினேகிதர்கள் சினேகிதரல்லாதவர்கள், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் எல்லார் வீடுகளிலும் வரிசையாக விருந்து சாப்பிட வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று சிற்றுண்டி விருந்துகளுக்குப் போக வேண்டியதாயிற்று. இந்த விருந்துகளில் எல்லாம் ஸுசீலா ஒன்றும் சாப்பிடாமல் மரியாதைக்கு உட்கார்ந்து விட்டு எழுந்து வர முடிந்தது என்கிறீர்களோ? அதுதானே முடியவில்லை? ஸுசீலா வெறுமனே உட்கார்ந்திருந்தால், “இந்தச் சாப்பாட்டையெல்லாம் நீங்கள் சாப்பிடுவீர்களா? பாக சாஸ்திரத்தில் பரீட்சை கொடுத்தவராயிற்றே?” என்று பக்கத்திலுள்ளவர்கள் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். இதற்காக ஸுசீலா ஒவ்வொரு விருந்திலும் கொஞ்சமாவது சாப்பிடத்தான் வேண்டியிருந்தது.

சென்னையில் பிரசித்தமான ‘நியோவஞ்சக லஞ்ச் ஹோம்’ என்னும் ஹோட்டலைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த ஹோட்டல் முதலாளி ஓரு கெட்டிக்கார மனுஷர். அவர் மேற்படி லஞ்ச் ஹோமின் வருஷாந்தரக் கொண்டாட்டம் நடத்தத் தீர்மானித்தார். பலமான சிபாரிசுகள் பிடித்து, அந்தக் கொண்டாட்டத்துக்கு ஸ்ரீமதி ஸுசீலா அக்கிராசனம் வகிக்கும்படி செய்தார். அவ்வளவுதான்; பிறகு சென்னையிலுள்ள ஒவ்வொரு ஹோட்டல்காரரும், ஸ்ரீமதி ஸுசீலாவைத் தங்கள் ஹோட்டலுக்கு வந்து விட்டுப் போக வேணுமென்று அழைக்கத் தொடங்கினார்கள். அவர்கள் எல்லோரிலும் படுகெட்டிக்காரர் ஒருவர் தமது ஹோட்டலின் பெயரையே மாற்றி, “ஸுசீலா லஞ்ச் ஹோம்” என்று போட்டு விட்டார்! இதற்கு மேல் சென்னைப் பட்டணத்தில் இருப்பதே அபாயம் என்று கருதிய ஸுசீலா உடனே திருநெல்வேலிக்குப் பிரயாணமானாள்.

திருநெல்வேலிக்குப் போனால் இந்த விருந்துத் தொந்தரவு ஒழியுமென்று அவள் நினைத்தது பெரிய பிசகாய் முடிந்தது. ஸுசீலாவின் தகப்பனார் திவான் பகதூர் கோமதி நாதப்பர் திருநெல்வேலியில் மிகப் பிரசித்தமானவர். பெரிய வக்கீல் என்பதோடு கூட, பொது வாழ்க்கையிலும் ஈடுபட்டவர். அந்த ஊரில் ‘சமதர்ம சமாதி சங்க’த்துக்கு அவர்தான் தலைவர். ‘கட்டாய விதவா விவாக சபை’க்கு உபதலைவர். ‘தனித் தமிழ் வசை மொழிக் கழக’த்தில் அங்கத்தினர். சமூகச் சீர்திருத்தங்களில் அவருக்கு எவ்வளவு அக்கரை உண்டு என்பதை, அவர் மகள் ஸுசீலாவைப் பார்த்தே நாம் நன்கறியலாமல்லவா?

இப்படிப்பட்ட சீர்திருத்தப் பிரமுகரைத் தகப்பனாராகப் பெற்ற ஸுசீலா, அவர் வாழும் ஊரில் தனக்கு விருந்து உபசாரத்தொல்லை இராது என்று நினைத்தாளென்றால், எம்.ஏ. படித்ததின் பலனாக உலக விவகாரங்களில் அவளுடைய அறிவு மழுங்கி விட்டதென்றே நாம் முடிவு செய்ய வேண்டியதாயிருக்கிறது. எப்படியோ, ஸுசீலா திருநெல்வேலி போய்ச் சேர்ந்தாள். ரயில்வே ஸ்டேஷனிலேயே அவளை வரவேற்பதற்காக அநேகம் பேர் கூடியிருந்தார்கள்.

வீடு சேர்ந்ததும் அன்றைக்குப் பெரிய விருந்து. எம்.ஏ. படித்த தமது மகளைத்தம் சிநேகிதர்களுக்கெல்லாம் பெருமையுடன் அறிமுகப்படுத்தி வந்தார் கோமதி நாதப்பர். பெருமை இராதா, ஐயா! இருபது வருஷத்துக்கு முன்னால், திருநெல்வேலியில் ஒருவர் எம்.ஏ. பட்டம் பெற்றபோது ஊரெல்லாம் தடபுடல் பட்டது. அந்த மனுஷருக்கு எம்.ஏ. முதலியார் என்றே பெயர் வந்து விட்டது. இப்போது, முதன் முதலாகத் திருநெல்வேலிப் பெண் ஒருத்தி எம்.ஏ. பட்டம் பெற்றிருக்கிறாள். அதிலும் அவள் ராஜதானியிலேயே முதலாவதாக – மீசை முளைத்த ஆண் பிள்ளைகளையெல்லாம் தோற்கடித்து விட்டு – புகழுடன் தேறியிருக்கிறாள். அப்படிப்பட்டவள் தம்முடைய பெண் என்று நினைக்கும்போது, அந்தத் தகப்பனாரின் தோள்கள் பூரித்து உயராமல் இருக்குமா?

வீட்டு விருந்துக்குப்பிறகு வெளியிலும் விருந்துகள் ஆரம்பமாயின. ‘சமதர்ம சமாதி சங்க’த்தில் விருந்து; ‘கட்டாய விதவா சங்க’த்தில் டீ பார்ட்டி; ‘வக்கீல்களின் சங்க’த்தில் விருந்து; கோ ஆபரேடிவ் யூனியனில் டின்னர்; அஞ்ஞான வாசக சாலையில் சிற்றுண்டி; முனிசிபாலிடியில் உபசாராம்; அப்புறம், சிநேகிதர்கள், பந்துக்கள் வீடுகளில் வரிசையாக விருந்து. சாப்பாட்டுக்கோ, சிற்றுண்டிக்கோ உட்கார்ந்தால், பேச்சு ஒரே மாதிரிதான். “ஏனம்மா, ஒன்றும் சாப்பிட மாட்டேனென்கிறாயே? ஆனால், உனக்கு இதெல்லாம் பிடிக்குமா? எங்கள் சாப்பாடெல்லாம் நன்றாயிருக்குமா? பாக சாஸ்திரப் பரீட்சை கொடுத்து மெடல் வாங்கியவளாச்சே?” என்று சொல்லுவார்கள்.

இதனாலெல்லாம் ஸுசீலாவுக்குச் சாப்பாடு என்றாலே விஷமாய்ப் போயிற்று. உணவுப் பண்டத்தைப் பார்த்தாலே குமட்டிக் கொண்டு வந்தது. சாப்பாட்டைப் பற்றிய பேச்சு எதுவும் காதில் நாராசமாக விழுந்தது. இதையெல்லாம் வாய் விட்டு யாரிடமும் சொல்ல முடியாதிருந்த படியால் சாப்பாட்டில் வெறுப்பும் துவேஷமும் பன்மடங்கு பெருகின. ஐயோ! தன்னுடைய வேதனை தன் தகப்பனாருக்குக் கூடவா தெரியாமல் போக வேண்டும்? ‘குழந்தைப் பிராயத்தில் தாயை இழந்த தன்னைத் தாமே தாயும் தந்தையுமாயிருந்து வளர்ந்தவருக்கே தன் கஷ்டம் தெரியவில்லையென்றால், மற்றவர்களுக்கு என்ன தெரியப் போகிறது?’

இந்த உலகத்தில் ஒரே ஒரு மனுஷர் தான் தன்னுடைய மனோநிலையை அறிந்து அநுதாபப்படக்கூடியவர். நல்லவேளை, அவர் சீமையிலிருந்து கப்பல் ஏறி விட்டார். சீக்கிரத்தில் வந்து விடுவார். அவர் வந்தவுடன், இரண்டு பேருமாக எங்கேயாவது மனுஷர்களே இல்லாத இடத்துக்குப் போய்க் கொஞ்ச நாள் இருந்து விட்டு வரவேணும்! அப்பா! இந்த எழவெடுத்த சமையல், சாப்பாட்டுப் பேச்சே இல்லாமல் சில நாளாவது கழியாதா?

அந்த ஒரே ஒரு மனுஷர் ஸ்ரீ பாலசுந்தரம் பி.ஏ.பி.இ. என்று சொல்ல வேண்டியதில்லை. பால சுந்தரத்தின் சொந்த ஊர் தென்காசிக்கு அடுத்த நெறிஞ்சிக்காடு. சென்னையில் என்ஜீனியரிங் பரீட்சை தேறி விட்டு, சீமைக்கு உயர்தர எலெக்டிரிக் என்ஜீனியரிங் படிப்பதற்காகப் போயிருந்தான். அங்கும் புகழுடன் பரீட்சை தேறி இப்போது திரும்பி வருகிறான். இவர்கள் இரண்டு பேருக்கும் முன்னமேயே கல்யாணம் நிச்சயமாகி விட்டது. ஆனால், ஸுசீலா, எம்.ஏ. தேறிய பிறகு தான் கல்யாணம் என்று கோமதியப்பர் சொல்லியிருந்தார்.

பாலசுந்தரம் பம்பாய்க்கு வந்து சேர்ந்த செய்தியை ஸுசீலா தினந்தோறும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள். கடைசியாக, ஒரு நாள் தந்தி வந்தது. ஸுசீலா குதூகலமடைந்தாள். அந்த நேரத்தில் அவள் தன்னுடைய படிப்பையும் எம்.ஏ. பட்டத்தையும் மறந்து, சாதாரணமாக, டாக்கிகளில் நாம் பார்க்கும் கதாநாயகிகளைப் போல் காரியம் செய்யத் தொடங்கினாள். ஆடினாள்; பாடினாள்; முகத்தில் பவுடரைப் பூசினாள்; நெற்றியில் பொட்டு இட்டாள்; நிலைக் கண்ணாடிக்கு முன்னால் நின்று அழகு பார்த்தாள்; இன்னும் என்னவெல்லாமோ அசட்டுக் காரியங்களைச் செய்தாள். பாலசுந்தரம் வந்தவுடனே, இந்தத் திருநெல்வேலியிலிருந்து தொலைந்து போய் டின்னர்களும் டீ பார்ட்டிகளும் இல்லாத இடத்தில் சிறிது காலம் நிம்மதியாக இருக்கலாம் என்ற ஆசையினால், அவள் உள்ளம் குதித்துக் கொண்டிருந்தது.

இரண்டு நாளைக்குப் பிறகு பம்பாயிலிருந்து ஒரு கடிதம் வந்தது. பாலசுந்தரந்தான் எழுதியிருந்தான். ஆரம்பத்தில், ஸுசீலாவிடம் தன் கரைகாணாத காதலை வெளியிட்டிருந்தான். அவளைப் பார்க்க வேணுமென்ற ஆசையினால் தன் இருதயம் துடியாய்த் துடித்துக் கொண்டிருப்பதைத் தெரிவித்திருந்தான். பிறகு, பம்பாயில் தான் இன்னும் சில நாள் தங்கியிருத்தல் அவசியமாயிருப்பதையும், அங்குள்ள பருத்தித் தொழிற்சாலைகளில் மின்சார சக்தியை உபயோகப்படுத்தும் விதத்தை ஆராய்ந்து விட்டு, ஒரு மாதத்திற்குள் திரும்பி வந்து விடுவதாயும் உறுதி கூறியிருந்தான். கடைசியாக, அவன் எழுதியிருந்ததாவது:

“நம் மாகாணத்தில் நான் செய்ய உத்தேசித்திருக்கும் வேலைகளைத் தொடங்குவதற்கு இந்த ஆராய்ச்சி மிகவும் அவசியமாயிருக்கிறபடியால் தான் இங்கே தங்கியிருக்கிறேன். இல்லாவிட்டால், இதற்குள் அவ்விடத்துக்குப் பறந்து வந்திருப்பேன். உன்னைப் பார்ப்பதற்கு எனக்கு இருக்கும் ஆசை கடலை விடப் பெரியது. அது மட்டுந்தானா? நம் ஊருக்கு வந்து எப்போது தோசையையும், இட்லியையும், சாம்பாரையும், ரஸத்தையும் கண்ணால் காணப் போகிறோமென்று இருக்கிறது. நல்ல சாப்பாடு என்று சாப்பிட்டு இரண்டு வருஷத்துக்கு மேலாகி விட்டது. இந்த நிமிஷத்தில் ஒரு தோசைக்காக இந்த பம்பாய் நகரையே விற்று விடுவதற்கு நான் தயாராயிருக்கிறேன். ஆகா! ஒரு முறுக்கு மட்டும் இப்போது கிடைத்தால்? சீச்சீ! என்ன காரியம் செய்கிறேன்? பாக சாஸ்திர எம்.ஏ. ஆகிய உனக்குக் கேவலம் தோசையையும் முறுக்கையும் பற்றி எழுதுகிறேனே? தயவு செய்து மன்னிக்க வேணும். கூடிய சீக்கிரம் அவ்விடம் வந்து, நீ செய்யப் போகிற முருங்கைக்காய் ஹல்வா, புளியம்பழப் பாயாஸம், வேப்பங்காய்ப் பொரியல், பம்புளிமாஸ் பொடித் துவட்டல் முதலியவற்றை ருசி பார்க்க நாக்கைத் தீட்டிக் கொண்டிருக்கிறேன்.

இப்படிக்கு, பாலசுந்தரம்

இதை வாசித்ததும், ஸுசீலா கிட்டத்தட்ட வெறி பிடித்தவள் போலானாள். அந்தக் கடிதத்தைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்து எறிந்தாள். பிறகு, அந்தச் சுக்கல்களைப் பொறுக்கிச் சேர்த்து, பம்பாயில் பாலசுந்தரத்தின் விலாசத்தைக் கண்டு பிடித்தாள். பிறகு அவனுக்கு ஒரு கடிதம் எழுதினாள்.

“உன் கடிதம் கிடைத்தது. உன்னை நான் மனப்பூர்வமாக வெறுக்கிறேன்; அடிவயிற்றிலிருந்து உன்னைத் துவேஷிக்கிறேன். உன் முகத்தில் விழிக்கவும் விரும்பவில்லை.

“சீ! இந்தப் பாழும் மனுஷர்களுக்கு உண்பதையும் தின்பதையும் தவிர உலகத்திலே வேறொன்றிலும் ஞாபகம் செல்லாதா?

இப்படிக்கு, ஒரு காலத்தில் உன்னைக் காதலித்த ஸுசீலா.”

மேற்படி கடிதத்தை உறையில் போட்டுத் தபாலுக்கு அனுப்பி விட்டு, ஸுசீலா மிகுந்த மனச்சோர்வுடன் ஸோபாவில் சாய்ந்தாள். அப்போது உலகமே அவளுக்கு ஒரு வரண்ட பாலைவனமாகத் தோன்றியது. பூமியில் எதற்காகப் பிறந்தோம், எதற்காக உயிரோடிருக்கிறோம் என்று சிந்திக்கத் தொடங்கினாள். அச்சமயம், வேலைக்காரப் பையன் ஒரு பத்திரிகையைக் கொண்டு வந்து கொடுத்தான். ஸுசீலா அதைப் பிரித்து மேலெழுந்தவாரியாகப் பார்த்துக் கொண்டு போனாள். கொட்டை எழுத்தில் இருந்த ஒரு தலைப்பு அவளுடைய கவனத்தைக் கவர்ந்தது.

“ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரதம்”

என்று படித்ததும், பளிச்சென்று நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

“தமிழ்க் கோவில்கள் தமிழ்த் தெய்வங்களுக்கே!”

“ஆரியத் தெய்வங்களின் அட்டூழியம்”

“சாகும் வரையில் பட்டினி; அதற்குப் பிறகு?”

மேற்படி தலைப்புகளை வரிசையாகப் படித்ததும் ஸுசீலாவின் உள்ளத்தில் பொங்கிய உணர்ச்சிகளை யாரால் வர்ணிக்க முடியும்? அளவிலாத ஆவலுடன் அந்தத் தலைப்பின் கீழ் கொடுத்திருந்த விவரங்களைப் படிக்கலானாள். ஹிட்லர் குருசாமியைப் பற்றித் தமிழர் எல்லாருக்கும் கட்டாயம் தெரிந்திருக்கும். “ஆம்; தெரியும்” என்று மரியாதையாக ஒப்புக் கொண்டு விடுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் தமிழர்களே இல்லை என்று நான் சொல்லி விடும்படி நேரிடும், ஜாக்கிரதை!

அவருடைய பெயருக்கு முன்னால் ‘ஹிட்லர்’ என்னும் அடைமொழி ஏன் வந்தது என்று நீங்கள் கேட்கலாம். கேளுங்கள், கேளுங்கள்; நன்றாய்க் கேளுங்கள். ஆனால் அதற்குப் பதில் மட்டும் உங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. அதற்கு ஒரு காரணம் உண்டு என்பது மட்டும் நிச்சயம். ஆனால் அது என்னவென்பது எனக்குத் தெரியாது; குருசாமிக்குந் தெரியாது; உங்களுக்கு அது தெரிய வேண்டுமென்று, விரும்புவது வீண் ஆசையேயல்லவா?

நமது ஹிட்லர் குருசாமி தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் செய்திருக்கும் தொண்டுகளைச் சொல்வதைக் காட்டிலும், சொல்லாமலிருப்பதே நலமாகும். ஏனெனில், அவற்றைச் சொன்னால், நீங்கள் “இப்போதே அவருக்கு ஓர் உருவச் சிலை செய்து ஒருவரும் பார்க்காதவிடத்தில் வைத்தாக வேண்டும்” என்று கிளம்பி விடுவீர்கள். அவர் செய்துள்ள தொண்டுகள், ஒன்றல்ல, இரண்டு அல்ல, எவ்வளவோ! உதாரணமாக, அவர் தமது இரண்டாவது வயதிலேயே தமிழின் சுவையைக் கண்டு அனுபவித்தவர். அந்த நாளிலேயே “அம்மா” “அப்பா” என்னும் இனிய தனித் தமிழ்ச் சொற்களைச் சொல்வதற்காக, வாயிலிருந்த விரலை எடுப்பதற்குக்கூட அவர் தயாராயிருந்தார். இன்னும் அவருக்குக் கொஞ்சம் வயதான பிறகு, “அ, ஆ, இ, ஈ” என்னும் தமிழ் எழுத்துக்களைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். அந்தத் தமிழ் எழுத்துக்களின் மேல் அவருக்கு இருந்த மோகம் காரணமாக, மொத்தம் மூன்று வருஷம் “அ, ஆ” கற்றுக் கொள்வதிலேயே கழித்தார். இன்னும் தமிழன்பு காரணமாகவே அவர் ஸ்கூல் பைனல் பரீட்சையில், இங்கிலீஷில் மட்டும் நாலு வருஷம் ‘கோட்’ அடித்துக் கொண்டிருந்தார்.

பிறகு, பெரிய இடத்துச் சிபாரிசு காரணமாக அவருக்கு ஒரு சர்க்கார் காரியாலயத்தில் குமாஸ்தா வேலை கிடைத்தது. ஒரு நாள் காரியாலயத்தில் வேலை செய்ய வேண்டிய நேரத்தில் அவர் தமிழின் இன்பத்தில் மிதமிஞ்சிச் சொக்கி விட்டார். அவருடைய கண்கள் மூடின; தலையும் சாய்ந்தது; பெருமூச்சு வந்தது. அப்போது அங்கே வந்த தலைமை அதிகாரி, “குருசாமி தூங்குகிறார்!” என்று முட்டாள்தனமாக எண்ணினார். எண்ணியதோடு இல்லாமல், அவரை வேலையை விட்டும் தள்ளி விட்டார்! எனவே, ஹிட்லர் குருசாமி தமிழுக்காக இந்தப் பெரிய தியாகத்தைச் செய்யும்படியாக நேர்ந்தது.

பின்னர், அவர் வேலை தேடுவது என்ற வியாஜத்தை வைத்துக் கொண்டு, தமிழ் நாடெங்கும் சுற்றிப் பார்த்து வந்தார். தமிழ் நாட்டைப் பார்ப்பதென்றால், தமிழ்நாட்டுக் கோவில்களைப் பார்க்காமல் முடியுமா? தமிழ் நாட்டுக் கோயில்களைப் பார்க்கப் பார்க்க, அவருக்கு வயிற்றைப் பற்றிக் கொண்டு எரிந்தது. “தமிழ்நாடு தமிழர்களுக்கே” என்ற பேச்சு அவர் காதில் எப்போதோ விழுந்திருந்தது. அப்படியானால், தமிழ்நாட்டுக் கோவில்களும் தமிழ் நாட்டுத் தெய்வங்களுக்கே உரிமையாக வேண்டுமல்லவா? ஆனால், இப்போதைய நிலைமை என்ன? தமிழ் நாட்டுக் கோவில்களில் இருக்கும் தெய்வங்கள் தமிழ் நாட்டுத் தெய்வங்களா?

இல்லவே இல்லை. பரமசிவன் எந்த தேசத்தவர்? சிவ சிவா! அவருடைய இருப்பிடம் கைலையங்கிரியன்றோ? கைலையங்கிரி, வடகே, ரொம்ப ரொம்ப வடக்கேயல்லவா இருக்கிறது? ஆகவே, பரமசிவன் அசல் வடக்கத்தித் தெய்வம். அவர் பத்தினி பார்வதியோ, இமவானின் புத்திரி. விநாயகர், சுப்பிரமணியர் எல்லோரும் அசல் ஆரியக் குஞ்சுகள். பெருமாள் கோவிலோ கேட்க வேண்டியதில்லை. மகா விஷ்ணு – பெயரைப் பார்த்தாலே, ஆரியத் தெய்வம் என்று தெரிகிறது. அவருடைய அவதாரங்களும் வடநாட்டிலேதான். இராமர், கிருஷ்ணர், நரசிம்மர் – ராம ராமா! தமிழ் நாட்டுக்குக் கோவில்களில் போயும் போயும் ஒரே திராவிடத் தெய்வத்துக்குத்தான் இடமளிக்கப்படுகிறது. அவர்தான் அனுமார்! – ஆனால் அந்த அநுமாரோ ஆரியத் தெய்வமான ராமரின் சேவகர்; அவருடைய அடிமை!

இந்த மாதிரி அவமானம் தமிழ் நாட்டுக்கும் தமிழர்களுக்கும் வேறு உண்டா? இந்த அவமானத்தைத் துடைக்கும் வழிதான் என்ன? நமது கோவில்களிலிருந்து இந்த வடநாட்டு ஆரியத் தெய்வங்கள் அவ்வளவு பேரையும் அப்புறப்படுத்தி விட வேண்டும். பரமசிவனையும் பார்வதியையும், மகா விஷ்ணுவையும், பூதேவி ஸ்ரீ தேவிகளையும், ராமனையும், கிருஷ்ணனையும், நடராஜாவையும், தக்ஷிணா மூர்த்தியையும் கழுத்தைப் பிடித்துத் தள்ளி விட்டு, அவர்கள் இருந்த இடத்தில் தூய தமிழ்த் தெய்வங்களாகிய வீரன் இருளன், சங்கிலிக் கறுப்பன், பெத்தண்ணன், பாவாடை ராயன், வழி மறிச்சான் ஆகியவர்களைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இது தான் வழி. இதைச் செய்யாத வரையில், தமிழர்களின் அவமானம் தீர்ந்ததாகாது.

ஆனால், தமிழர்கள் இந்தக் காரியத்தைச் செய்வதற்கு இலேசில் முன் வருவார்களா? வர மாட்டார்களே? மானமற்ற மக்களாயிற்றே இவர்கள்? இவர்களுக்கு மானத்தை ஊட்டித் துள்ளி எழச் செய்வதற்கு வழி என்ன? ஆ! இதோ கண்டு பிடித்தாயிற்று! காந்தி தான் காட்டியிருக்கிறாரே! உண்ணா விரதம் இருப்பதுதான் வழி. அப்போதுதான் இந்த மானமற்ற தமிழர்களுக்குக் கொஞ்சமாவது சூடு சுரணை வரும்! இந்த எண்ணம் தோன்றியதுதான் தாமதம்; ஒரு மின்னல் மின்னும் நேரத்தில் ஹிட்லர் குருசாமி ஒரு முடிவுக்கு வந்தார். “இதோ உண்ணாவிரதம் ஆரம்பித்து விட்டேன். தமிழ் நாட்டிலுள்ள கோவில்களிலிருந்து ஆரியத் தெய்வங்கள் அத்தனையும் துரத்தப்படவேண்டும். அவை என்னிடம் வந்து இத்தனை நாளும் தமிழ் நாட்டுக் கோவில்களில் குடியிருந்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு போக வேண்டும். அதற்குப் பிறகுதான் நான் உண்ணா விரதத்தை நிறுத்துவேன். இல்லாவிடில் உயிர் போகும் வரையில் சாப்பிட மாட்டேன். அதற்கு பிறகு உசிதம் போல் செய்வேன். இது நிச்சயம்! இது சத்தியம்! வீரன், இருளன், காட்டேரி ஆணையாக இது முக்காலும் சத்தியம்!” என்று அவர் ஓர் அறிக்கை விடுத்தார்.

அவ்வளவுதான், உடனே ஓடி வந்தார்கள். நாலா பக்கத்திலிருந்தும், நாலைந்து வீரத்தியாகிகள், “ஹிட்லர் குருசாமிக்கு ஜே!” என்றார்கள். அவரைச் சென்னைப் பட்டணத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஒரு மச்சு வீடு பிடித்து அதில் கொண்டு போய் வைத்தார்கள். இந்த நெருக்கடியான நிலைமையில், ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரதம் சரிவர நடந்தேறுவதற்காகச் செய்ய வேண்டிய முயற்சிகளைப் பற்றித் தீவிரமாக ஆலோசித்தார்கள். கடைசியில், ஒரு முக்கியமான முடிவுக்கு வந்தார்கள். அதாவது, “ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரத நிதி!” என்று ஒரு நிதி திரட்டத் தீர்மானித்தார்கள்.

ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரதச் செய்தி தமிழ் நாடெங்கும் விஷப் புகையின் வேகத்தில் பரவியது. அந்தச் செய்தியானது ஏற்கெனவே விழித்திருந்தவர்களுக்கு இன்னும் அதிக முழிப்பை உண்டாக்கிற்று; தூங்கினவர்களையோ முதுகில் தட்டி இன்னும் நன்றாய்த் தூங்கப் பண்ணியது; முக்கியமாக அந்த வருஷம் நடக்க இருந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உத்தேசித்தவர்களிடையில், அச்செய்தி மிகவும் பரபரப்பை உண்டாக்கியது.

இந்தப் பரபரப்பை நேயர்கள் உள்ளபடி அறிந்து கொள்வதற்கு, அப்போது தமிழ் நாட்டின் அரசியல் நிலைமையைப் பற்றி அவர்களுக்குக் கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும். இன்னும் காங்கிரஸ் மந்திரிகள்தான் ஆட்சி புரிந்து கொண்டிருந்தனர். ஆனால் மாகாண சுயாட்சி ஏற்பட்டு நாலு வருஷம் ஆகிவிட்டபடியால் சீக்கிரத்தில் பொதுத் தேர்தல் நடக்க இருந்தது. காங்கிரஸுக்கு விரோதிகள் எல்லாரும், காங்கிரஸுடன் போட்டி போடலாமா, வேண்டாமா, போட்டியிட்டால் என்ன சாக்கை வைத்துக் கொண்டு போட்டியிடுவது என்று யோசனை செய்து கொண்டிருந்தார்கள்.

அப்போது, இந்த உண்ணாவிரதத்தின் செய்தி பரவவே, பரபரப்புக்குக் கேட்கவா வேண்டும்? உடனே அவரவர்களும், “ஹிட்லர் குருசாமி உண்ணாவிரத நிதி”க்குப் பணம் வசூலிக்கத் தொடங்கினார்கள். மேற்படி உண்ணா விரதத்துக்குக் காங்கிரஸ் சர்க்காரால் ஏதும் பங்கம் விளையாமல் பார்த்துக் கொள்ளும் பொருட்டு ஆங்காங்கே தொண்டர்படை சேர்த்தும் சென்னைக்கு அனுப்பினார்கள்.

உண்ணாவிரதம் ஆரம்பித்து ஒரு வாரம் இருக்கும். ஒரு நாள் காங்கிரஸ் எதிர்ப்புப் பத்திரிகையில் பின்வரும் வீராவேசத் தலையங்கம் வெளியாயிற்று:

“ஒரு தமிழ் மகன் பட்டினி கிடக்கிறார்!

ஏழு நாளாக அன்ன ஆகாரமின்றிக் கிடக்கிறார்! எனினும்,

அவருடைய மன உறுதி குன்றவில்லை!

அவருடைய தேக நிறை குறையவில்லை

அவருடைய உள்ளம் தளரவில்லை!

அவருடைய உடம்பு மெலியவில்லை!

ஆனால் இந்தக் கல்மனக் காங்கிரஸ் மந்திரிகள் சும்மா பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாதிரி ஒரு காந்தியோ, ஒரு ஜவஹர்லாலோ, ஒரு சுபாஷ்போஸோ பட்டினி கிடந்தால், இந்தப் பாவிகள் பார்த்துக் கொண்டிருப்பார்களா? ஆம்; அவர்கள் எல்லாம் வட நாட்டு ஆரியர்கள் – ஆகையால் விழுந்தடித்து ஓடுவார்கள்.

ஆனால் நமது ஹிட்லர் குருசாமி கேவலம் ஒரு தமிழ் மகன் தானே? அவன் பட்டினி கிடக்கட்டும்; பட்டினி கிடந்து சாகட்டும் அல்லது சாகாமலிருக்கட்டும் என்று சும்மா இருக்கிறார்கள்.

தமிழர்களே! மானமில்லாத தமிழர்களே! மதியில்லாத தமிழர்களே! இந்த அநியாயத்தை, அக்கிரமத்தை, அநீதியை, ஆரியக் கொடுமையை எத்தனை நாள் சகித்துக் கொண்டிருப்பீர்கள்!” மேற்கூறிய பத்திரிகை அலறல் பயன்படாமற் போகவில்லை. மறுநாள் முதல், மந்திரிகளின் வீட்டு வாசலில் நாலு பேர் அல்லது மூன்று பேர் அல்லது இரண்டொருவர் பெருங் கூட்டமாக வந்து நின்று கூச்சலிடத் தொடங்கினார்கள்.

“ஹிட்லர் குருசாமி அடியோடு வாழ்க!”

“ஆரியத் தெய்வங்கள் நீடூழி ஒழிக!”

என்ற இவ்விதமான கோஷங்கள் வானத்தைப் பிளந்து கொண்டு சென்று அண்டை அயல் வீடுகளில் கூடக் கேட்கத் தொடங்கின. ஆனால், ஆலயங்களிலுள்ள தெய்வங்கள் மட்டும் கொஞ்சமும் அசைந்து கொடுப்பதாயில்லை; காங்கிரஸ் மந்திரிகளும் காது கொடுப்பதாயில்லை. ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரதம் ஆரம்பமானதிலிருந்து, அதைப் பற்றிய செய்திகளைத் தினந்தோறும் வெகு ஆவலுடன் ஸுசீலா கவனித்து வந்தாள். குருசாமியின் பேரில் அவளுக்கு ஏற்பட்ட நன்மதிப்புக்கு ஒரு அளவேயில்லை. “சாப்பாட்டைத் துச்சமாகக் கருதும் ஒரு மனுஷனாவது உலகில் இருக்கிறானல்லவா? வயிற்றைக் கட்டிக் கொண்டு அழாதா இவனல்லவோ வீர புருஷன்? ஆஹா! அவன் தான் எப்படியிருப்பானோ? என்னமாய்ப் பேசுவானோ?” என்று எண்ணாததெல்லாம் எண்ணி, எட்டாத கோட்டையெல்லாம் கட்டினாள்.

ஒரு வாரம் ஆயிற்று. பத்து நாள், பதினைந்து நாள், இருபது நாளும் ஆயிற்று. அதற்கு மேல் ஸுசீலாவுக்குத் திருநெல்வேலியில் இருப்புக் கொள்ளவில்லை. அந்த வீர புருஷனை, இலட்சிய புருஷனை, இருபது நாள் சமையலையும் சாப்பாட்டையும் மறந்திருக்க கூடிய மகாதீரனை, உடனே சென்று நேரில் பார்க்காவிடில் தன் ஆவி ஒரு கணமும் தரிக்காது என்று தீர்மானித்தாள். தகப்பனாரிடம் சொல்லவே, இந்த மாதிரி முன்னேற்றமான இயக்கங்களில் அதி தீவிர அநுதாபங் கொண்டவரான கோமதியப்பர் உடனே தயங்காமல் விடை கொடுத்தார். ஸுசீலா சென்னைக்கு ரயில் ஏறினாள். ஆனால் அந்தோ! அந்த ரயிலுக்கு வழியில் ஆபத்து ஒன்றும் நேரிடவில்லையென்பதை ஆச்சரியத்துடன் தெரிவிக்கிறோம். நிற்க.

ஸுசீலா எம்.ஏ. சென்னைக்குப் பிரயாணமான சமாசாரம் அவள் வருவதற்கு முன்பே சென்னைக்கு வந்து சேர்ந்து விட்டது. ஹிட்லர் குருசாமி தங்கியிருந்து வீட்டில் இந்தச் செய்தியானது மிகவும் கலக்கத்தை விளைவித்தது. குருசாமி தானே ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று ஸுசீலாவை வரவேற்பேன் என்றதால் மேற்படி கலக்கம் நேர்ந்தது. மற்றவர்கள் அவனை ரொம்பவும் கேட்டுக் கொண்டு அப்படிச் செய்யாமல் தடுத்தார்கள். தாங்கள் போய் அவளைத் தக்கபடி வரவேற்று அழைத்து வருவதாகச் சொன்னார்கள். அப்படியே சென்று அழைத்து வந்தார்கள்.

ஸுசீலா அந்த வீட்டுக்குள் காலை வைத்ததும், அவள் கேட்ட முதல் கேள்வி என்னவென்று நினைக்கிறீர்கள்? அவளுடைய இருதய அந்தரங்கத்திலிருந்து, “அவர் எங்கே?” என்னும் வார்த்தைகள் மகத்தான தாபத்துடன் வெளிவந்தன. “மாடியில் இருக்கிறார்” என்றதும் அவளுடைய கால்கள் மெத்தைப் படிகளின் வழியாக அவளை மாடியில் கொண்டு போய்ச் சேர்த்தன! ஆஹா! அங்கே ஸுசீலா தன் ஆயுளிலேயே முதன் முதலாக ஹிட்லர் குருசாமியைப் பார்த்தாள்; குருசாமியும் ஸுசீலாவைப் பார்த்தான். வலது கண் வலது கண்ணுடனும் இடது கண் இடது கண்ணுடனும் இரு கண்கள் இரு கண்களுடனும் ஏக காலத்தில் சந்தித்தன. ஆஹா! அந்தச் சந்திப்பின் பெருமையை என்னால் வர்ணிக்க முடியுமா? அதை வர்ணிப்பதற்கு ஒரு கம்பனோ ஒரு காளிதாஸனோ அல்லது ஒன்றரைக் கம்பனோ ஒன்றரைக் காளிதாஸனோ தான் வல்லவர்களேயன்றி என் போன்றோர்களால் அது நினைக்கவும் முடியாத காரியமல்லவா?

ஸுசீலா வந்து சேர்ந்த செய்தி அறிந்ததும், சென்னை ‘வீரத் தமிழ்’ மகளிர் சங்கத்தைச் சேர்ந்த பெண்மணிகள் நாலைந்து பேர் வந்து சேர்ந்தார்கள். அன்று முதல், இவர்களே ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரதத்தை நடத்தி வைக்கத் தொடங்கினார்கள்.

இரண்டொரு நாளைக்கு முன் ஒரு பொல்லாத தமிழ்ப் பத்திரிகையில், “ஹிட்லர் குருசாமி உண்ணாவிரதம் ஆரம்பித்து இருபது நாளாகிறது. அவர் இதே முறையில் இன்னும் எண்பது நாள் உண்ணாவிரதம் நடத்தத் தீர்மானித்திருப்பதாக அறிகிறோம். இந்த நூறு நாள் உண்ணாவிரதத்தில் தமது தேக நிலையில் ஒரு அணுவளவு கூடக் குறைவதில்லையென்றும் அவர் விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறாராம்!” என்பதாக ஒரு கேலிக் குறிப்பு வெளியாகியிருந்தது. ரயில் பிரயாணம் செய்யும் போது ஸுசீலா இதைப் பார்த்தாள். அப்போது அவளுடைய மனதிலும் சிறிது ஐயம் தோன்றியது. இப்போது ஹிட்லர் குருசாமியைப் பார்த்த பிறகு அந்த சந்தேகம் எவ்வளவு அநியாயமானது என்பதை உணர்ந்தாள். ஆகா! சூதுவாதற்ற இத்தகைய சாது முகத்தையுடையவர், இப்படி அசட்டு முழி முழிக்கும் கண்களையுடையவர் – எங்கேயாவது ஏமாற்றும் வேலையில் இறங்குவாரா? ஒரு நாளும் இல்லை. எனினும், சந்தேகப் பிராணிகளுடைய சந்தேகங்களையெல்லாம் தீர்க்கும் பொருட்டு ஸுசீலா ஒரு ஏற்பாடு செய்தாள். அன்று முதல், தினந்தோறும் ஹிட்லர் குருசாமியின் எடையை நிறுத்து அவர் வசிக்கும் வீட்டு வாசலில் போர்டில் எழுதப் போவதாக அறிவித்தாள்.

ஸுசீலா வந்தது முதல், ஹிட்லர் குருசாமி இருந்து வீடு ஜே ஜே என்று ஆயிற்று. அந்த அதிசயமான உண்ணாவிரத வீரனைப் பார்ப்பதற்கும், வீரத் தமிழ் மங்கை ஸுசீலாவைப் பார்ப்பதற்குமாக ஜனங்கள் வந்து குவிந்து கொண்டிருந்தார்கள். அந்த வீட்டில் நிரந்தரமாக வசிப்பவர்கள் முப்பது, நாற்பது பேர் ஆகி விட்டார்கள். ‘உண்ணாவிரத நிதி வசூல் கமிட்டி’யைச் சேர்ந்தவர்கள், மந்திரிகள் வீட்டு மறியல் தொண்டர்கள், வெளியூர்களிலிருந்து ஹிட்லர் குருசாமிக்குத் தொண்டு செய்ய வந்தவர்கள், ‘வீரத் தமிழ் மகளிர்’, இவ்வாறு நாளடைவில் கூட்டம் பெருகிற்று. இவர்களுக்கெல்லாம் கீழே தினம் மூன்று வேளை சமையல், சாப்பாடு எல்லாம் ஒழுங்காக நடந்து கொண்டிருந்தது. ஆனால், அந்தோ! மேலே ஹிட்லர் குருசாமி, சமையல் வாசனையை மட்டும் முகர்ந்து கொண்டு கிடந்தான். ஸுசீலா வந்தது முதல் அவனுடைய தேகத்தின் நிறையும் மளமளவென்று குறைந்து வந்தது. தோற்றத்திலும் நாளுக்கு நாள் மெலியத் தொடங்கினான்.

முதலில் இரண்டு மூன்று நாட்கள் குருசாமிக்கு இது கஷ்டமாகவே இல்லை. உண்மையில் அவனுக்குப் பசியே தோன்றவில்லை. இடைவிடாமல் ஸுசீலாவின் ஞாபகமாகவே இருந்தான். ஆஹா! இத்தகைய ஒரு பெண்மணியின் நன்மதிப்பைப் பெற்றோமே! இந்த பாக்கியத்துக்காக உண்ணாவிரதம் மட்டுந்தானா இருக்கலாம்? ஒன்றும் சாப்பிடாமலே கூட இருக்கலாமே? – என்று இவ்விதம் எண்ணமிட்டான். முதல் சந்திப்பில், அவளிடம் அவனுக்கு ஏற்பட்ட வியப்பு – இவள் தானா எம்.ஏ. ஸுசீலா என்ற ஆச்சரியம் – அந்த இரண்டு மூன்று நாள் நெருங்கிய பழக்கத்தில் பரிபூர்ணமான காதலாகவே மாறிவிட்டது. ஆஹா! இத்தகைய பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு வாழ்வதல்லலவா வாழ்வு? மற்றதெல்லாம் வாழ்வு ஆகுமா? தகப்பனார் பெரிய வக்கீல் ; சொத்தோ ஏராளம்; இவளோ எம்.ஏ. படித்தவள்; ஓ! இவளுடன் நடத்தும் இல்வாழ்க்கைதான் எவ்வளவு இன்பகரமாயிருக்கும்?

இந்த நினைவுகளுக்கிடையில் இன்னொரு பயங்கரமான எண்ணம் வந்து குறுக்கிடும். சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும்? முதலில் தான் உயிரோடிருக்க வேண்டுமே? அப்போதுதானே காதல், கல்யாணம், இல்வாழ்க்கை, இவற்றினாலெல்லாம் பிரயோஜனம் உண்டு? நாளாக ஆக அவனுக்கு இந்த நினைவே அதிகமாக வந்து கொண்டிருந்தது. நாலைந்து நாள் பட்டினிக்குப் பிறகு அவனுக்கு மாரை அடைக்கத் தொடங்கிய போது, உடம்பை என்னமோ செய்த போது, அவன் ஒரு முக்கியமான தீர்மானத்துக்கு வந்தான். அதாவது ஸுசீலாவுக்காக, அவளுடைய காதலுக்காக, தான் உயிர் வாழத்தான் வேண்டும் என்று முடிவு செய்தான். அதற்குரிய வழிகளைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினான். திடீரென்று அவளுக்கு ஏமாற்றமளித்து, அவளுடைய காதல் முறிந்து போகும்படியும் செய்யக் கூடாதல்லவா?

இதற்கிடையில், சென்னை நகரெல்லாம் அமளி துமளியாயிருந்தது. தினந்தோறும் ஏழெட்டுப் பிரம்மாண்டமான பொதுக் கூட்டங்கள் நடந்தன. அவற்றில் கூடியிருந்தவர்களில் ஒருவர் விடாமல் அத்தனை பேரும் ஆச்சரியமான நீள அகலங்கள் வாய்ந்த சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்கள். “பார்க்கப் போனால், இந்தக் கோவில்களிலுள்ள தெய்வங்கள் வெறுங் கல்லே அல்லவா? கல்லுக்கு உயிர் உண்டா? உயிரில்லாத கல்லுக்காக வேண்டி உயிருள்ள மனுஷன் உயிரை விட வேண்டுமா? இந்தக் கொடுமையைப் பார்த்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் சர்க்காரின் அநியாயத்தை என்னவென்று சொல்வது?” என்று பிரசங்கிகள் கர்ஜித்தார்கள்.

ஸுசீலா சென்னைக்கு வந்து சேர்ந்த ஐந்தாம் நாள் மாலை, கடற்கரையில் ஒரு பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் கூட்டினார்கள். அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மாகாணம் முழுவதிலிருந்தும் பிரமுகர்கள் வந்திருந்தார்கள். அப்படிப்பட்ட கூட்டத்திற்குத் தமிழ்த்தாய் ஸுசீலாவும் வந்து பேசுவது அவசியம் என்று கருதப்பட்டது. அதிகமான வற்புறுத்தலின் பேரில், ஸுசீலா கிளம்பினாள். அவ்வளவு முக்கியமான கூட்டத்திற்குப் போகாமலிருக்கக் கூடாதென்று உண்ணாவிரத விடுதியிலிருந்து ஒவ்வொருவராக எல்லோருமே கிளம்பிச் சென்றார்கள்.

ஆரம்பத்திலேயே ஸுசீலாவைப் பேசச் சொன்னார்கள். ஸுசீலா பேசினாள். பொதுக் கூட்டத்திலே அவள் பேசுவது இதுதான் முதல் தடவையானாலும் அற்புதமாய்ப் பேசினாள். மனம் உருகப் பேசினாள். கடைசியில், “இங்கே நாம் பொதுக் கூட்டம் போட்டுக் கொண்டும் பேசிக்கொண்டும் கரகோசம் செய்து கொண்டுமிருக்கிறோம். இந்த நேரத்தில் அங்கே அந்த வீர புருஷரின் – உயிர்…” இந்த இடத்தில் ஸுசீலாவின் தொண்டையை அடைத்துக் கொண்டது. கண்ணில் ஜலம் பெருகிற்று. மேலே பேச முடியாமல் உட்கார்ந்து விட்டாள். இந்தக் காட்சி, கூட்டத்தில் ஒரு மகத்தான கிளர்ச்சியை உண்டாக்கிற்று. ஆண் பிள்ளைகள் “அந்தோ! அந்தோ!” என்றார்கள். வீரத் தமிழ் மகளிர் விம்மி அழத் தொடங்கினார்கள்.

ஸுசீலாவுக்கு அப்போது மனதில் உண்மையாகவே ஒரு கலக்கம் உண்டாகியிருந்தது. தான் அங்கு உட்கார்ந்திருக்கையில், ஹிட்லர் குருசாமிக்கு ஏதோ பெரிய ஆபத்து நேர்ந்து கொண்டிருப்பதாக அவளுடைய உணர்வு சொல்லிற்று. உடனே போய் அவனைப் பார்க்க அவள் இருதயம் துடிதுடித்தது. அருகிலிருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டு அவள் மேடையிலிருந்து பின்புறமாக இறங்கிச் சென்றாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் கழுகுக் கண் படைத்த பத்திரிகை நிருபர்கள். ‘ஏதோ ஹிட்லர் குருசாமியைப் பற்றிச் செய்தி வந்துதான் இவள் இப்படிக் கூட்டத்தின் நடுவில் எழுந்து போகிறாள்’ என்று அவர்கள் நினைத்தார்கள். ஆகவே, அவர்களும் ஒவ்வொருவராக நழுவிச் சென்றார்கள்.

ஸுசீலா இருதயம் படபடவென்று அடித்துக் கொள்ள, விடுதியின் வாசலில் போய் இறங்கினாள். கதவைச் சப்தமிடாமல் திறந்து கொண்டு மாடி மீது ஏறிச் சென்றாள். அங்கே ஹிட்லர் குருசாமியைக் காணாததும், அவளுக்கு உயிரே போய்விட்டது போலிருந்தது. கீழே இறங்கி வந்தாள். வீட்டில் சமையற்காரன் ஒருவன் தான் இருந்தான். அவனைக் கேட்கலாமென்று சமையலறையின் கதவைத் திறந்தாள். அந்தோ! அங்கே அவள் கண்ட காட்சியை என்னவென்று சொல்வது? எப்படிச் சொல்வது? சுருங்கச் சொன்னால் தலையில் விழ வேண்டிய இடி தவறிக் கீழே விழுந்தால் எப்படித் திகைப்பாளோ, அப்படித் திகைத்துப் போனாள் ஸுசீலா!

எதிரில் இலையைப் போட்டுக் கொண்டு, அதில் சாம்பார் சாதத்தைத் துளாவிப் பிசைந்து சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தான், ஹிட்லர் குருசாமி. அவனுடைய ஆயுள் பலம் கெட்டியாயிருந்த படியால்தான் அந்தச் சமயம் ஸுசீலா வந்தாள் என்று சொல்ல வேண்டும். இல்லாவிடில், ஐந்து நாள் பட்டினிக்குப் பிறகு அப்படி ஒரேயடியாகக் குழம்புச் சாதத்தைத் தீட்டியிருந்தால், அவன் கதி என்ன ஆகியிருக்குமென்று சொல்ல வேண்டுமா?

ஸுசீலாவைக் கண்டதும், ஹிட்லர் குருசாமி ஒரு நிமிஷ நேரம் அசட்டு முழி முழித்தான். அப்புறம் துள்ளி எழுந்து வந்து, ஸுசீலாவின் முன்னால் மண்டியிட்டுக் கை குவித்தான். “ஸுசீலா! ஸுசீலா! என்னை மன்னி! உன்னுடைய காதலுக்காகத்தான் நான் இந்த காரியம் செய்தேன்…” என்றான். அப்போது, குருசாமி ஒரு கணம் நிமிர்ந்து ஸுசீலாவின் முகத்தைப் பார்த்தான். பிறகு, அந்த முகத்தை அவன் தன் வாழ்நாளில் எப்போதும் பார்க்கவேயில்லை!

அடுத்த நிமிஷத்தில், அந்தோ! அந்தச் சமையலறைக்குள் திமுதிமுவென்று ஐந்தாறு பத்திரிகை நிருபர்கள் வந்து நுழைந்தார்கள்.

ஸுசீலா இன்னும் இரண்டு நாள் சென்னையில் இருந்தாள். இத்தனை நாளும் ஹிட்லர் குருசாமியின் உண்ணாவிரதத்தை நடத்தி வைத்தவர்கள் ஸுசீலாவைச் சூழ்ந்து கொண்டு, இனிமேல் இயக்கத்தை அவளே தலைமை வகித்து நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். “ஹிட்லர் குருசாமி காங்கிரஸின் ஒற்றன்” என்று அவர்கள் ஆணையிட்டார்கள். இதைத் தாங்கள் முன்பே சந்தேகித்ததாகவும், ஆனால் அன்றிரவு, உண்ணாவிரத நிதிக்கு அதுவரை வசூலாகியிருந்த ரூ. 350யும் அமுக்கிக் கொண்டு அவன் ஓடிப்போனதிலிருந்துதான் அது நிச்சயமாயிற்று என்றும் சொன்னார்கள். இனிமேல் ஸுசீலாதான் தங்களுடைய தலைவி என்றும், அவள் மட்டும் உண்ணாவிரதம் ஆரம்பித்தால் தாங்கள் முன்போலவே கூட இருந்து நடத்தி வைப்பதாகவும் உறுதி கூறினார்கள்.

ஆனால், ஸுசீலாவுக்கு இதனாலெல்லாம் போன உற்சாகம் திரும்பி வரவில்லை. அன்றிரவு வெளியான பத்திரிகையைப் பார்த்த பிறகு, அவளுக்கு நிராசையே உண்டாகி விட்டது. பத்திரிகையில் இரண்டு விஷயங்கள் வெளியாகியிருந்தன. ஒன்று, ஹிட்லர் குருசாமி வெளியிட்டிருந்த அறிக்கை. அது வருமாறு:-

“நான் உண்ணாவிரதத்தை நிறுத்தியது குறித்து பலர் பலவிதமான சந்தேகங்கள் கொள்ளாமலிருப்பதாகத் தெரிவதால், இந்த அறிக்கையை வெளியிடுவது என் கடமையாகிறது. நான் உண்ணாவிரதத்தைக் கை விட்டது, தமிழ் நாட்டின் மேன்மையைக் காப்பதற்காகவே தவிர வேறில்லை. அதாவது, நமது அருமைத் தமிழ் மூதாட்டியாகிய ஔவையாரின் அருள்மொழியை மெய்யாக்குவதற்குத்தான் அவ்வாறு செய்தேன். ஔவை என்ன சொல்லியிருக்கிறாள்?

“மானங் குலங்கல்வி,

வண்மை அறிவுடைமை,

தானந்தவ முயற்சி

தாளாண்மை – தேனின்

கசிவந்த சொல்லியர்மேற்

காமுறு தல்பத்தும்

பசி வந்திடப் பறந்துபோம்”

என்று சொல்லியிருக்கிறாரல்லவா? அப்படியிருக்க, தீவிரமான பசி எடுத்த பிறகும் நான் அந்தப் பத்தையும் பறந்து போகச் செய்யாமலிருந்தால், ஔவை வாக்கல்லவா பொய்த்து விடும்? நிற்க.

என்னுடைய உண்ணாவிரதத்தின் போது எனக்குத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் மர்மங்களைப் பற்றியும் ஸ்திரீகளின் ஆழங் காண முடியாத உள்ளத்தின் இயல்பைப் பற்றியும் அநேக விஷயங்கள் தெரிய வந்தன. அவையெல்லாம் தமிழ் மக்களைத் திகைத்து, திடுக்கிட்டு, திக்கு முக்காடச் செய்பவையாயிருக்கும். சமயம் வரும் போது அவற்றை யெல்லாம் தைரியமாக வெளிப்படுத்த நான் கொஞ்சமும் பின் வாங்க மாட்டேன்.”

ஸுசீலா இதைப் படித்து விட்டு ஒரு பெருமூச்சு விட்டாள். ஹிட்லர் குருசாமியின் மேல் அவளுக்கு முதலில் வந்த கோபம் மாறி அநுதாபம் உண்டாயிற்று. பாவம், கள்ளங்கபடில்லாத சாது. தற்சமயம் தன்னைச் சூழ்ந்திருக்கிறவர்களை விட அவன் எவ்வளவோ மேலல்லவா?

அவளுடைய கவனத்தைக் கவர்ந்த இன்னொரு விஷயம் பின்வரும் பெரிய தலைப்புகளின் கீழ்க் காணப்பட்டது.

“இந்தியாவின் பயங்கரமான ஜன அபிவிருத்தி”

“உணவுப் பஞ்சத்தைத் தடுக்க வழி என்ன?”

இந்தத் தலைப்புகளின் கீழே, சீமையிலிருந்து சமீபத்தில் திரும்பி வந்த ஸ்ரீ பாலசுந்தரம் பி.ஏ., எம்.இ.ஓ.பி.எச். சின் படமும், அவரைப் பத்திரிகை நிருபர் பேட்டி கண்ட விவரமும் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அதில், ஸ்ரீ பாலசுந்தரம் எல்லாருக்கும் தெரிந்த சில ஆச்சரியமான விஷயங்களை எடுத்துக் காட்டியிருந்தார். 1930-ல் இந்தியாவின் ஜனத்தொகை 35 கோடி. 1940-ம் வருஷ ஜனக் கணிதியின்படி 39 1/2 கோடு, பத்து வருஷத்தில் 4 1/2 கோடி அதாவது 100-க்கு 12 1/2 வீதம் ஜனத்தொகை பெருகியிருக்கிறது. ஆனால், உணவு உற்பத்தியோ 100-க்கு 2 1/2 வீதம் தான் அதிகமாயிருக்கிறது. இப்படியே போய்க் கொண்டிருந்தால் கூடிய சீக்கிரம் தேசத்தில் பயங்கரமான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுத்தானே தீர வேண்டும்? ஆகையால், தேசத்தில் உள்ள அறிவாளிகள் எல்லாரும் உடனே இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினாலன்றி, அப்புறம் நிலைமை சமாளிக்க முடியாமல் போய்விடும்.

இது சரிதான்; ஆனால் அப்படிப்பட்ட நெருக்கடி ஏற்படாமல் தடுப்பதற்கு ஸ்ரீ பாலசுந்தரத்தின் யோசனைகள் தான் என்ன? அவர் இரண்டு யோசனைகள் கூறியிருந்தார். ஒன்று, உணவுப் பொருள் உற்பத்தியை அதிகப்படுத்தும் முயற்சி. இதற்காக, மேனாட்டார் கைக்கொள்ளும் நவீன விவசாய முறைகளை நாமும் மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக, நமது நாட்டில் உள்ள மலை அருவிகளிலிருந்தெல்லாம் மின்சார சக்தி உண்டு பண்ணவும், அந்த மின்சார சக்தியைப் புதுமுறை விவசாயத்துக்குப் பயன்படுத்தவும் முயல வேண்டும். தாம் உடனே இந்த முயற்சியில் இறங்கப் போவதாகத் தெரிவித்து விட்டு அவர் மேலும் கூறியதாவது:-

“ஆனால், இது மட்டும் போதாது. எவ்வளவுதான் இந்த வழியில் முயற்சி செய்தாலும், நாற்பது கோடி ஜனங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள் தயாரிப்பதற்கே இன்னும் பத்து வருஷம் செல்லும். இதற்கிடையில் ஜனத் தொகை பெருகிக் கொண்டே போனால்…? ஆகவே, இந்தியாவில் குறைந்தது ஒரு கோடிப் பேர் கல்யாணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாகவே இருப்பது என்ற விரதத்தைக் கைக் கொள்வது அவசியம். நான் அத்தகைய விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். இதற்காக ஒரு அகில் இந்திய சங்கம் ஸ்தாபிக்கலாமென்றும் எண்ணியிருக்கிறேன். ஆனால் சில சந்தர்ப்பங்களில், அதாவது…”

ஸுசீலா அவ்வளவுதான் படித்தாள். அளவிலாத அருவருப்புடன் பத்திரிகையைக் கீழே போட்டாள். இதற்கு முன்னால், இவ்வுலகம் வரண்ட பாலைவனமாக அவளுக்குத் தோன்றிற்று என்றால், இப்போது புயற் காற்றினால் அலைப்புண்டு கொந்தளிக்கும் கடலைப் போல் காணப்பட்டது. இந்த தொல்லைகளையெல்லாம் மறந்து, எங்கேயாவது சில காலம், அமைதியாக இருந்து விட்டு வரவேணும். மனுஷ்ய சஞ்சாரமே இல்லாத இடமாக இருந்தால் ரொம்ப நல்லது. அத்தகைய இடம் எங்கே இருக்கிறது? ஏன்? வேறு எங்கே போய்த் தேட? குற்றாலம் ஒன்றுதான் அத்தகைய இடம்! ஆம்; குற்றாலத்துக்குப் போவதுதான் சரி. அங்கே பங்களா இருக்கிறது. பக்கத்தில் தோட்டக்காரன் குடித்தனமாயிருக்கிறான். அங்கே நேரே போய்விட வேண்டியது. அங்கிருந்து தகப்பனாருக்குக் கடிதம் எழுதி விட்டால் போகிறது.

ஸுசீலா குற்றாலத்துக்குப் போவது என்று தீர்மானித்த போது இரவு எட்டரை மணி. அதற்குள் எக்ஸ்பிரஸ் வண்டி போய்விட்டது. ஆனால் மறுநாள் வரையில் காத்திருக்கவும் அவளுக்கு மனம் வரவில்லை. ஆதலின் பாஸஞ்சர் வண்டியிலேயே பிரயாணம் ஆனாள். இந்த வண்டி சாவகாசமாக அசைந்து ஆடிக் கொண்டு தென்காசிக்குப் போய்ச் சேர்ந்த போது மாலை ஆறு மணியிருக்கும். உடனே, வண்டி வைத்துக் கொண்டு குற்றாலத்துக்குப் புறப்பட்டாள்.

குற்றாலத்தில் ‘கோமதி பங்களா’வின் வாசலில் போய் வண்டி நின்றது. ஸுசீலா இறங்கினாள். பங்களாவுக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டதும் பெரிய ஆச்சரியமாகப் போயிற்று. பங்களாவில் யார் இருக்கக் கூடும்?

இதற்குள் வாசலில் வண்டி வந்து நின்றதைக் கண்டு, தோட்டக்காரன் ஓடி வந்தான். ஸுசீலாவைப் பார்த்ததும், ஒரு நிமிஷம் திகைத்துப் போய் நின்றான். அப்புறம், “இது என்ன, அம்மா, இது? எங்கிருந்து வரீக? தனியாகவா வந்தீக? ஐயா பின்னாலே வராகளா?” என்றான்.

“ஐயா வரவில்லை. நான் மட்டுந்தான் வந்தேன். வீட்டிலே யாரு, மாடசாமி!” என்று கேட்டாள்.

“தெரியாதுங்களா? நம்ம நெறிஞ்சிக்காடு ஐயாதான்.”

ஸுசீலாவுக்குத் தலை சுழன்றது. இந்த மாதிரி நேரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. பாலசுந்தரத்தின் மேல் ஏற்கெனவே வெறுப்பு. அதிலும், தான் இப்படி அவமானப்பட்டு வந்திருக்கும் நிலைமையிலா அவரைப் பார்ப்பது? ஆனாலும் இப்போது திரும்பிப் போவது இயலாத காரியம்.

“நான் வந்திருக்கேன், வீட்டை ஒழித்துக் கொடுத்தால் தேவலை என்று போய்ச் சொல்லு.”

தோட்டக்காரன் தயக்கத்துடன் போனான். சற்று நேரம் கழித்துத் திரும்பினான்.

“இராத்திரியிலே இத்தனை நேரத்துக்கப்புறம் எங்கே போறது என்று கேக்கறாக. மெத்தை அறை காலியாய்த்தான் இருக்கு. அதிலே உங்களை இருந்துக்கும்படி சொல்றாக” என்றான். ஸுசீலாவுக்கு இது சிறிது திருப்தியையளித்தது. மாடசாமியைச் சாமான்களை எடுத்து வரச் சொல்லிவிட்டு, நேரே மெத்தை அறைக்குப் போனாள்.

சற்று நேரத்துக்கெல்லாம் சமையற்காரப் பையன் வந்தான். “சாப்பாடு கொண்டு வரட்டுமா, அம்மா?” என்று கேட்டான்.

“ஐயா கேக்கச் சொன்னாகளா?”

“நான் தான் ஐயாவைக் கேட்டேன். ‘அந்த அம்மாகிட்ட போய்ச் சாப்பாடுன்னு சொன்னாச் சண்டைக்கு வருவாகடா. நீ. வேணாப் போய்க் கேட்டுப்பாரு’ என்றாக.”

ஸுசீலாவுக்கு ஆத்திரமாய் வந்தது. “எனக்குச் சாப்பாடு வேண்டாம்” என்றாள். சமையற்காரன் போய்விட்டான்.

அப்போது ஸுசீலா, என்னதான் எம்.ஏ. படித்தவளாயிருந்தாலும், பெண்ணாய்ப் பிறந்தவள் பெண்தான் என்பதை நிரூபித்தாள். குப்புறப்படுத்துக் கொண்டு விம்மி அழுதாள்.

அன்றிரவு ஸுசீலா வெகு நேரங் கழித்துத்தான் தூங்கினாள். ஆதலின், காலையில் எழுந்திருப்பதற்கும் நேரமாயிற்று. ஏழு மணிக்கு மேல் எழுந்திருந்து கீழே வந்தபோது, தோட்டக்காரன் சமையல் பாத்திரங்களை எடுத்து வெளியில் வைத்துக் கொண்டிருந்தான். சமையற்காரன் கையில் ஒரு பொட்டலத்துடன் கிளம்பிக் கொண்டிருந்தான்.

“என்ன இதெல்லாம்? ஐயா எங்கே?” என்று கேட்டாள்.

“ஐயா மலை மேல மரப் பாலத்துக்குப் போயிருக்காக. அவகளுக்குத் தோசை எடுத்துண்டு போறேன். ஜாகையை மாற்றிவிடச் சொல்லிட்டாக” என்றான்.

ஸுசீலாவின் கண்களில் நீர் துளித்தது. தோட்டக்காரனைப் பார்த்து, “நானும் மரப்பாலத்துக்குத்தான் போறேன். ஐயாவைப் பார்ப்பேன். நாங்க திரும்பி வரும் வரை ஐயா சாமான் இங்கேயே இருக்கட்டும்” என்றாள்.

குற்றாலம் மலையில் மரப் பாலத்துக்குச் சமீபத்தில், அருவி விழுந்து விழுந்து ஒரு சிறு சுனை ஏற்பட்டிருக்கிறது. அதன் நாலு பக்கத்திலும் வெள்ளை வெளேரென்ற சுத்தமான பாறைகள். அந்தப் பாறை ஒன்றின் மேல் பாலசுந்தரம் உட்கார்ந்திருந்தான். காலடிச் சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். சமையற்காரனுடன் ஸுசீலாவைப் பார்த்ததும் அவன் சிறிதும் வியப்புக் காட்டவில்லை. “ஏது, இப்படி எதிர்பாராத சந்தோஷம்?” என்றான். “எதிர்பாராதது என்பது சரி; ஆனால் சந்தோஷமா என்பது தான் சந்தேகம்” என்றாள் ஸுசீலா. இதற்குப்பதிலாக பாலசுந்தரம் ஒரு புன்னகை புரிந்தான். “அது எப்படியாவது இருக்கட்டும். ஜாகை மாற்றச் சொன்னீர்களாமே? அது வேண்டியதில்லை. நான் இன்று சாயங்காலமே ஊருக்குப் போய் விடுவேன்” என்றாள்.

“ரொம்ப வந்தனம். ஜாகை மாற்றுவது எனக்கும் அசௌகரியந்தான்” என்றான் பாலசுந்தரம். உடனே, சமையற்காரனைச் சற்று எட்டி அழைத்துப் போய், அவனிடம் ஏதோ சொல்லி விட்டு வந்தான்.

“இதே இடத்தில் உட்கார்ந்து கொண்டு நாம் எத்தனை நாள் பொழுது போக்கியிருக்கிறோம்? அதெல்லாம் நினைத்தால் கனவு மாதிரி இருக்கிறது” என்றாள் ஸுசீலா. அப்புறம் இரண்டு பேரும் சற்று நேரம் பழைய ஞாபகங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“இருக்கட்டும்; எனக்குப் பசிக்கிறது. தோசை எங்கே? சாப்பிடலாம்” என்றாள் ஸுசீலா.

“ஐயையோ! இதென்ன கூத்து?” என்றான் பாலசுந்தரம்.

“என்ன? என்ன?” என்றாள் ஸுசீலா.

“உனக்குப் பசிக்கிறது என்கிறாயே? தோசை கீசை என்றால் உனக்குக் கோபம் வரப்போகிறதென்று, பழனியைத் திருப்பி எடுத்துக் கொண்டு போய்விடச் சொன்னேனே?” என்றான்.

ஸுசீலா இடி இடியென்று சிரித்தாள். அந்த மாதிரி அவள் சிரித்து எத்தனையோ காலமாயிற்று.

“சரி; இப்போது என்ன செய்யலாம்?” என்றாள். செய்வது என்ன? மத்தியானம் வரையில் காத்திருக்க வேண்டியதுதான். மத்தியானச் சாப்பாடு தேனருவிக்குக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறேன். அங்கே போய் விடலாம்” என்றான் பாலசுந்தரம்.

தேனருவிக்குப் புறப்பட்டார்கள். வழி நெடுகிலும் தங்களுடைய பழைய ஞாபகங்களைப் பற்றியே பேசிக் கொண்டு போனார்கள். வழியில் அநேக இடங்களில் பாறைகளில் ஏறியும், பள்ளங்களைத் தாண்டியும் போக வேண்டியதாயிருந்தது. அங்கெல்லாம், பாலசுந்தரம் ஸுசீலாவின் கையைப் பிடித்துத் தூக்கி விடுவது அவசியமாயிற்று. கடைசியில் பதினொரு மணிக்குத் தேனருவிக்கு வந்து சேர்ந்தார்கள்.

!!!!!

இந்த ஆச்சரியக் குறிகளையே தேனருவியின் வர்ணனையாக நேயர்கள் பாவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தேனருவியின் சுனையில் இருவரும் ஸ்நானம் செய்தார்கள். துணிமணிகளை உலர்த்திக் கட்டிக் கொண்டார்கள். பிறகு, மேலே கவிந்த ஒரு பாறையின் நிழலில் உட்கார்ந்து, பழனியை எதிர்பார்க்கலானார்கள். பசி தெரியாமல் பொழுது போவதற்காக, பாலசுந்தரம் தன்னுடைய சீமை அனுபவங்களைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான். ஆனால் நடுநடுவே, ஸுசீலா, தன் மணிக்கட்டு கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டும், “இன்னும் பழனி வரவில்லையே?” என்று கேட்டுக் கொண்டும் இருந்தாள். கடைசியாக, ஒன்றரை மணிக்கு, பழனி தலையில் கூடையுடன் தூரத்தில் காணப்பட்டான். உடனே இருவரும் எழுந்து போய்ச் சுனையின் அருகில் உட்கார்ந்தார்கள். பாறையை ஜலத்தை விட்டு நன்றாய் அலம்பிச் சுத்தமாக்கி வைத்துக் கொண்டார்கள்.

ஆச்சு! இதோ பழனி கிட்ட வந்துவிட்டான். அங்கே ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்கு அவன் தாவிக் குதித்தாக வேண்டும். “அடே! ஜாக்கிரதை! கூடையைப் போட்டுக் கொண்டு விழாதே!” என்றான் பாலசுந்தரம். இப்படி அவன் சொல்லி வாயை மூடினானோ இல்லையோ, பழனியின் கால், தாவிக் குதித்த பாறையில் வழுக்கிற்று. ஒரு ஆட்டம் ஆடினான். கையை விரித்துச் சமாளிக்க முயன்றான். திடீரென்று விழுந்தான். விழுந்தவன் நல்ல வேளையாகக் கையை எட்டி இரண்டு பாறைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கினான். ஆனால், கூடை! ஐயோ! கீழே பள்ளத்தில் தண்ணீரில் விழுந்து உருண்டு கொண்டிருந்தது. அதிலிருந்த உணவுப் பண்டங்களை மீன்கள் போஜனம் செய்து கொண்டிருந்தன.

பாலசுந்தரம் ஓடி வந்து, பழனியைக் கையைக் கொடுத்துத் தூக்கி விட்டான். அவனும் ஸுசீலாவும், பாவம், பழனியைத் திட்டு திட்டு என்று திட்டினால், பசி நீங்குமா? என்ன செய்வதென்று யோசித்தார்கள். “காலையில் திருப்பிக் கொண்டு போன தோசை வீட்டில் இருக்கு. இதோ போய்க் கொண்டு வந்து விடுகிறேன்” என்றான் பழனி. “சரி! போ! மரப்பாலத்துக்கே கொண்டு போ. அதற்குள் நாங்களும் அங்கே வந்து விடுகிறோம்” என்றான் பாலசுந்தரம்.

மாலை ஐந்து மணி சுமாருக்கு மரப்பாலத்துக்கருகில் உட்கார்ந்து தோசை சாப்பிட்டு விட்டு, ஸுசீலாவும் பாலசுந்தரமும் கீழே போகக் கிளம்பினார்கள். “பசி என்றால் எப்படி இருக்கும் என்று இன்றைக்குத்தான் எனக்குத் தெரிந்தது” என்றாள் ஸுசீலா. “நமது நாட்டில் தினந்தோறும் இம்மாதிரி பசிக் கொடுமையை அனுபவிக்கிறவர்கள் கோடிக்கணக்கான பேர்” என்றான் பாலசுந்தரம். “நிஜமாகவா! ஐயோ! எப்படித்தான் பொறுக்கிறார்கள்? இத்தனை நாளும் எனக்கு யாராவது பிச்சைகாரன் ‘பசி எடுக்குது, அம்மா! பிச்சைபோடு, அம்மா! பிச்சைபோடு, அம்மா!’ என்றால் கோபம் கோபமாய் வரும்” என்றாள் ஸுசீலா. “இந்தியாவின் ஜனத்தொகை 40 கோடி. இதில் பாதிபேர் – 20 கோடிப் பேர் ஓயாமல் பசித்திருப்பவர்கள். கூடிய சீக்கிரத்தில், நமது தேசத்தில் உணவு உற்பத்தி அதிகமாக வேண்டும். இல்லாவிட்டால்…”

ஸுசீலாவுக்கு, பத்திரிகையில் வாசித்ததெல்லாம் ஞாபகம் வந்தது. அவள் பெருமூச்சு விட்டாள்.

அப்போது பாலசுந்தரம் ஸுசீலாவைக் கையைப் பிடித்து நடத்திக் கொண்டிருந்தான். “இப்போது நாம் போவது போலவே, வாழ்க்கை முழுவதும் கைகோத்துக் கொண்டு போக முடியுமானால்…” என்றான்.

ஸுசீலா வெடுக்கென்று கையைப் பிடுங்கிக் கொண்டாள். “நீங்கள்தான் கல்யாணம் பண்ணிக் கொள்ளாத விரதம் எடுத்தவர்களாயிற்றே!” என்றாள்.

பாலசுந்தரம் விழுந்து விழுந்து சிரித்தான். பிறகு, விஷயம் என்னவென்று விசாரித்தான். ஸுசீலா தான் பத்திரிக்கையில் படித்ததைச் சொன்னாள்.

“படித்ததை முழுதும் படிக்காமல் பாதியில் விட்டு விட்டால், அதற்கு நான் என்ன செய்வது?” என்றான்.

“பின்னால் என்ன சொல்லியிருந்தது?” என்று கேட்டாள்.

“ஆனால், இந்த விரதத்துக்கு ஒரு விதிவிலக்கு உண்டு. ‘இந்தப் பெரிய தேசத் தொண்டில் ஒருவனுக்கு உதவி செய்யக் கூடிய வாழ்க்கைத் துணைவியாகக் கிடைத்தால், அந்த நிலைமையில் கல்யாணம் செய்து கொள்வதே அதிக பயனுள்ளதாகும்’ என்று கடைசியில் சொல்லியிருந்தேன்.”

ஸுசீலா சற்று நேரம் யோசித்து விட்டு, “அம்மாதிரி நான் உங்களுக்கு உதவியாயிருப்பேன் என்று தோன்றுகிறதா?” என்றாள்.

“உன்னைப் போல் உதவி எனக்கு வேறு யார் செய்ய முடியும்? நான் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தால், அவற்றை எப்படி சரியாக உபயோகிப்பது என்று நீ ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லலாமல்லவா?”

ஸுசீலா இப்போது விழுந்து விழுந்து சிரித்தாள். “ஆமாம்; நீங்கள் ஒரு பக்கம் ஜனங்களின் பசிக்கு உணவு உற்பத்தி செய்தால், நான் இன்னொரு பக்கத்தில் அவர்களுக்குப் பசியேயில்லாமல் அடித்து விட முடியும்!” என்றாள்.

“ஆனால், அவர்கள் குற்றாலத்துக்கு வந்தால், மறுபடியும் பசி உண்டாகி விடும்!” என்றான் பாலசுந்தரம்.

இரண்டு பேரும் சேர்ந்து சிரித்தார்கள். அந்தச் சிரிப்பின் ஒலி அருவியின் சலசல சப்தத்துடன் கலந்தது!

– ஆனந்தவிகடன் தீபாவளி மலர் – 1938

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *