வைர மோதிரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 14, 2021
பார்வையிட்டோர்: 4,720 
 

1

ராஜாராமன், பி.ஏ. (ஆனர்ஸ்) கடற்கரைச் சாலை ஓரமாய் நடந்து கொண்டிருந்தான். மாலை சுமார் நாலு மணியிருக்கும். ஹைக்கோர்ட்டிலிருந்து திரும்பும் மயிலாப்பூர் வக்கீல்களின் வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாய்ச் சரசரவென்று போய்க் கொண்டிருந்தன. அந்த வண்டியில் அமர்ந்திருந்த கனதனவான்களுக்கு மட்டும், அப்போது ராஜாராமனுடைய மன நிலைமை தெரிந்திருந்தால், அப்படி அலட்சியமாய் போயிருப்பார்களா? அன்றிரவு அவர்களால் கவலையின்றித் தூங்கியிருக்க முடியுமா?

சுருங்கச் சொன்னால், அப்போது ராஜாராமனுடைய உள்ளம் ஒரு லட்சம் செங்கல்லை வேகவைக்கக்கூடிய காளவாயைப் போல் எரிந்து கொண்டிருந்தது. அந்தத் தீயினால் அவன் அந்தக் கடற்கரைச் சாலையிலிருந்த கட்டிடங்களையெல்லாம் சுட்டெரித்துவிட விரும்பினான். முக்கியமாக, அந்த ஸெனட் மண்டபம், பிரஸிடென்சி கலாசாலை, புதிதாய்க் கட்டியிருக்கும் பரீட்சை மண்டபம் இவை அவன் கண்களை உறுத்தின. எதற்காக இந்தக் கட்டிடங்கள்? எதற்காக இவற்றில் ஒருவன் படிப்பதும் பரீட்சை தேறுவதும்? பி.ஏ. (ஆனர்ஸ்) பரீட்சையில் முதல் தரத்தில் தேறிய தன்னுடைய கதி இப்போது எவ்விதம் இருக்கிறது?

‘பட்டினியினால் இறந்தான்’ என்று கதைகளிலாவது, பத்திரிகைச் செய்திகளிலாவது படித்தபோதெல்லாம் ராஜாராமன் ஆச்சரியப்படுவான். ‘யாராவது பட்டினியினால் சாவார்களா? என்னதான் தரித்திரமானாலும், வயிற்றுக்குச் சோறு கிடைக்காமலா போய்விடும்? சுத்தப் பொய்யும் புளுகும்’ என்று நினைப்பான்.

இப்போது அவனுக்கே அந்த கதி நேர இருந்தது. இராத்திரி சாப்பாட்டுக்கு வழியில்லை! தனக்கு மட்டுமல்ல; தன் தம்பி ரகுவுக்கும் அதே கதிதான்.

ஆம்; தான் மட்டுமாயிருந்தால் கூடப் பாதகமில்லை. சமுத்திரத்தில் விழுந்து உயிரை விட்டாலும் விடலாம்; அல்லது போலீஸ்காரன் மேல் கல்லை விட்டெறிந்து சிறைக்குப் போகலாம். ஆனால் ரகுவை என்ன செய்வது? தனக்கு ஏதாவது நேர்ந்தால் அந்தக் குழந்தையினுடைய கதி என்னவாகும்?

ரகு சாயங்காலம் வழக்கம்போல விளையாடிவிட்டு ஆறரை மணிக்குத் திரும்பி வருவான். வரும்போதே, “அண்ணா! பிஸ்கோத்து வாங்கி வந்திருக்கிறாயா?” என்று கேட்டுக் கொண்டு வருவான். அறையிலே தன்னைக் காணாவிடில் அவன் என்ன செய்வான்? தவித்துப் போக மாட்டானா?… சரிதான்; ஆனால் தான் அறையில் உயிரோடு இருந்துதான் என்ன பிரயோஜனம்? குழந்தைக்குப் பிஸ்கோத்து வாங்கிக் கொண்டு போகக் கையில் காசு எங்கே இருக்கிறது?

இரண்டு வருஷத்திற்கு முன்னால் ராஜாராமனுடைய தாயார் – கிராமத்திலிருந்தவள் – திடீரென்று இறந்து போனதாகத் தந்தி வந்து அவன் உடனே புறப்பட்டுச் சென்றான். அதற்கு முன்னாலேயே அந்த அம்மாள் விற்கக் கூடிய நகை, நட்டு எல்லாவற்றையும் விற்றுவிட்டிருந்தாள். அவ்வளவையும் ராஜாராமனுடைய படிப்பும், பட்டணவாசமும் விழுங்கி விட்டன. தாயாருடைய மரணத்தினால் அந்த வருஷம் அவனுடைய படிப்பு தடைபட்டது. சில மாதம் ஊரில் இருந்து, பாக்கி இருந்த வீட்டையும் நிலத்தையும் மிகவும் பிரயாசையின் பேரில் கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு, ரகுவையும் அழைத்துக் கொண்டு சென்னைப் பட்டணம் வந்து சேர்ந்தான்.

அந்த வருஷம் நன்றாய்ப் பரீட்சையிலும் தேறினான். அதற்குள் கையில் கொண்டு வந்திருந்த பணமெல்லாம் கரைந்துவிட்டது. சாமான்களை ஒவ்வொன்றாக விற்க ஆரம்பித்தான். கடைசியாக மிஞ்சியிருந்த கைக்கடிகாரத்தையும் விற்றாய்விட்டது.

இந்த மூன்று மாதமாக அவன் உத்தியோகந் தேடி அலையாத இடம் சென்னையில் கிடையாது; அவன் ஏறி இறங்காத ஆபீஸ் கிடையாது.

அன்று மாலை கடற்கரைச் சாலை ஓரத்தில் அவன் ஏன் அவ்வளவு உள்ளக் கொதிப்புடன் நடந்து கொண்டிருந்தான் என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா?

2

“ஹலோ! ராஜாராம்!” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். ஒரு பெரிய மோட்டார் வண்டி அவன் பின்னால் நின்றது. அதில் ஒரு பெரிய மனிதர் உட்கார்ந்திருந்தார்.

“நமஸ்காரம்” என்றான் ராஜாராமன்.

“ஏதாவது வேலையாய்ப் போகிறாயா?” என்று அப்பெரிய மனிதர் கேட்டார்.

“வேலையா? வேலையிருந்தால் தான் எவ்வளவோ தேவலையே?”

“அப்படியென்றால் என்னுடன் வா! உட்கார்!”

ராஜாராமன் வண்டியில் ஏறி அவர் அருகில் உட்கார்ந்தான். வண்டி கிளம்பியது.

அந்தப் பெரிய மனிதர் ஒரு மாஜி திவான். ஒரு தடவை, ராஜாராமன் கலாசாலைத் தமிழ்ச் சங்கத்தின் காரியதரிசியாயிருந்தபோது, அவரை ஓர் உபந்நியாசத்துக்காக அழைத்திருந்தான். அச்சமயம் அந்த மாஜி திவானின் சில முக்கிய குணாதிசயங்களைப் பற்றி அவன் வெகுவாகப் புகழ்ந்து பேசினான். அவரிடம் அந்தக் குணங்கள் உண்டென்பதை அதற்கு முன் யாரும் கண்டு பிடிக்கவில்லை. உண்மையில், அவருக்கே கூட அது புதுமையாய்த்தான் இருந்தது. இன்னும் புகுந்து பார்த்தோமானால், அந்தப் புகழுரை ராஜாராமனுடைய சொந்த சரக்குமன்று. ஓர் ஆங்கில நூலாசிரியர் “கனவான் யார்?” என்ற தலைப்புடன் எழுதியிருந்த கட்டுரையை அதற்கு முதல் நாள் அவன் படித்திருந்தான். அதில் குறிப்பிட்டிருந்த குணாதிசயங்களையெல்லாம் மாஜி திவான்மேல் அவன் ஏற்றிப் பேசினான்.

அது எப்படியானாலும், அன்றைய தினம் மாஜி திவான், ஜாம்பவந்தனால் புகழப்பட்ட அனுமாருடைய நிலையை அடைந்தார். அவருடைய இருதயம் குதூகலத்தினால் விரிந்தது. மேலும் ராஜாராமனிடம் அவருக்கு ஓர் அபிமானம் விழுந்து விட்டது.

இப்போது ராஜாராமன் தம் பக்கத்தில் உட்கார்ந்ததும் அவன் முதுகில் ஒரு பெரிய ‘ஷொட்டு’க் கொடுத்துவிட்டு, “என்ன செய்து கொண்டிருக்கிறாய் இப்போது?” என்று கேட்டார். தன் கஷ்டங்களுக்கு ஒரு வேளை முடிவு வந்துவிட்டதோவென்று ராஜாராமனுக்குத் தோன்றியது. பி.ஏ. (ஆனர்ஸ்) பாஸ் செய்து விட்டு மூன்று மாதமாய் வேலைக்கு அலைந்து கொண்டிருப்பதைப் பற்றிச் சாங்கோபாங்கமாய் எடுத்துச் சொன்னான்.

அதைக் கேட்டதும் மாஜி திவான் தமது பிரசங்கத்தை ஆரம்பித்தார்: “நமது தற்கால நாகரிகம் அவ்வளவு இலட்சணத்தில் இருக்கிறது. வேலையில்லாதவர்கள் ‘வேலை, வேலை’ என்று அலைகிறார்கள். வேலை இருப்பவர்களோ எப்படி வேலை செய்யாமல் தப்பித்துக் கொள்ளலாம் என்று பார்க்கிறார்கள். நம் பெரியோர்கள் எவ்வளவு நல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள் என்று இப்போது தெரிகிறதா? வர்ணாசிரமத்தை இகழ்கிறீர்களே. பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்று பிரித்து, அந்தந்தச் சாதிக்கு அந்தந்த வேலையென்று ஏற்படுத்தினார்களே அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள்!… தற்கால நாகரிகத்தைப் போய் நீங்கள் ஒசத்தியாய்ச் சொல்கிறீர்கள்!…”

“நான் சொல்லவில்லையே…” என்று ஆரம்பித்தான் ராஜாராமன்.

“நீ என்றால் நீயா? நீ சொல்லாவிட்டால், உன்னைப் போன்றவர்கள் சொல்கிறார்கள். என் பிள்ளையாண்டான் ஆக்ஸ்போர்டில் படிக்கிறான். அவன் என்ன எழுதுகிறான் தெரியுமா? ஜவாஹர்லால் நேருவின் சரித்திரத்தைப் படித்தானாம். அவர் சொல்கிறதுதான் சரியாயிருக்காம். இந்தியாவுக்கு ‘ஸோஷலிஸ’ந்தான் வேண்டுமாம். சுத்த முட்டாள்கள்! இவர்களுக்கெல்லாம் என்ன தெரியும்? இந்தியாவுக்கு வேண்டியது என்னவென்பதை எத்தனையோ ஆயிரம் வருஷங்களுக்கு முன்னால் நம் ரிஷிகள் எழுதி வைத்துவிட்டார்கள். தைத்திரீய உபநிஷத் என்ன சொல்கிறது. ‘அன்னாத் பிராணா: பிராணபான:…”

உபநிஷத் பிரசங்கம் முடிவதற்குள் வண்டி லாயிட்ஸ் ரோட்டிலிருந்த ஒரு பெரிய பங்களாவின் கேட்டில் புகுந்து நின்றது. அப்போது ராஜாராமன் அவனைப் புளகாங்கிதமாகச் செய்த ஒரு காட்சியைக் கண்டான்; தன்னையும், தன் வேலையில்லாத் திண்டாட்டத்தையும், மாஜி திவானிடம் உத்தியோகம் கேட்க வேண்டுமென்ற நினைவையும் மறந்தான். வண்டியிலிருந்து இறங்குவதற்குக் கூட மறந்து போனான். அப்படி அவனை மெய் மறக்கச் செய்தவை. ஒரு பெண்மணியின் முகத்திலிருந்த இரண்டு கண்கள் தான்.

‘கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப் பெரியவாய கண்களென்னைப் பேதைமை செய்தனவே!’

என்று ஆழ்வார் பகவானைப் பற்றிப் பாடியவாறு போல, தன்னைப் பேதைமை செய்த அந்தக் கண்களையும் அவற்றைப் படைத்த பெண்ணையும் இனித் தன் வாழ்நாளில் பார்க்கப் போகிறோமென்ற எண்ணமே அவனுக்கிருக்கவில்லை. அப்படியிருக்க, இங்கே, சற்றும் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில் அவளைப் பார்த்ததும் அவன் மெய்மறந்ததில் வியப்பென்ன?

“இறங்கு! ஒரு சின்ன டீ பார்ட்டி கொடுக்கப் போகிறேன். நீயும் இருந்துவிட்டுப் போகலாம். பாதகமில்லை, இறங்கு! வருகிறவர்கள் எல்லாரும் ரொம்ப வேண்டுமென்கிறவர்கள் தான்” என்று மாஜி திவான் வற்புறுத்திச் சொன்ன பிறகு, ராஜாராமன் கொஞ்சம் சுய ஞாபகம் வந்து வண்டியிலிருந்து இறங்கினான்.

3

போலீஸ் டிபுடி கமிஷனர் மிஸ்டர் கபாலி அவர்களுக்குச் சமீபத்தில் ‘ராவ் சாகிப்’ பட்டம் அளிக்கப் பெற்றதை முன்னிட்டு நம் மாஜி திவான் அந்தச் சிற்றுண்டி விருந்தை ஏற்பாடு செய்திருந்தார். ரொம்பவும் பொறுக்கி எடுத்த அத்தியந்த சிநேகிதர்கள் மட்டுந்தான் அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.

அவர்களின் அண்ணனும் தங்கையுமாகிய ஓர் இளைஞனும் யுவதியும் இருந்தனர். அவர்கள் முக்கிய விருந்தினராகிய ராவ்சாகிப் கபாலியின் மருமகனும் மருமகளும். அவர்கள் பெயர்: பாலகோபால், வத்ஸலை. அவர்களுக்கு ராஜாராமனை மாஜி திவான் அறிமுகம் செய்து வைத்தார்.

“உங்களை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன் போல் இருக்கிறதே? ஸெயிண்ட் ஜான் காலேஜில் படித்தீர்களா?” என்று பாலகோபால் கேட்டான்.

“ஆமாம்; கொஞ்ச நாள் தான் படித்தேன். நீங்களும் உங்கள் சகோதரியும் தினம் காரில் வருவீர்கள். உங்களை மட்டும், இறக்கிவிட்டு வண்டி உங்கள் சகோதரியுடன் போய் விடும் இல்லையா?”

அதற்குள் வத்ஸலை, “நீங்கள் காலேஜ் மாடி வராண்டாவில் மூன்றாவது தூணில் சாய்ந்து கொண்டு நிற்பீர்கள், இல்லையா?” என்றான்.

ராஜாராமனுக்கு ரோமம் சிலிர்த்தது. இவள் தன்னைக் கவனித்திருப்பது மட்டுமல்ல; நன்றாய் ஞாபகம் வைத்துக் கொண்டும் இருக்கிறாள்! பழைய நினைவுகள் எல்லாம் அவன் உள்ளத்தில் குமுறிக் கொண்டு வந்தன.

சென்ற வருஷத்துக்கு முந்திய வருஷம் கலாசாலை திறந்து சில நாளைக்கெல்லாம் ஒரு நாள் சற்று முன்னதாகவே ராஜாராமன் கலாசாலைக்குச் சென்றுவிட்டான். எனவே, மணி அடிக்கும் வரையில் மாடித் தாழ்வாரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு மோட்டார் வண்டி வந்து கலாசாலை வாசலில் நின்றது. அதில் ஒரு யுவனும் யுவதியும் இருந்தார்கள். முக ஒற்றுமையிலிருந்து அவர்கள் அண்ணனும் தங்கையுமாய்த்தான் இருக்க வேண்டுமென்று தெரிந்தது. இளைஞன் வண்டியிலிருந்து இறங்கினான்; வண்டி அந்த யுவதியுடன் போய்விட்டது. அவள் பெண்கள் கலாசாலைக்குப் போகிறாள் போலும்!

வண்டி போன பிறகும், அந்தப் பெண்ணின் கண்கள் மட்டும் ராஜாராமனின் எதிரில் தோன்றிக் கொண்டிருந்தன. அம்மா! அந்தக் கண்கள் தான் எவ்வளவு விசாலமானவை! ‘கடலினும் பெரிய கண்கள்’ என்று கவி வர்ணித்திருப்பது இப்படிப்பட்ட கண்களைப் பற்றித் தான் இருக்க வேண்டும்!

அடுத்த நாளும் ராஜாராமன் சற்று முன்னதாகவே கலாசாலைக்குச் சென்றான். அதே இடத்தில் நின்றான். வண்டியும் அதே நேரத்துக்கு வந்தது. இளைஞன் வண்டியிலிருந்து இறங்கியதும் என்னவோ சொன்னான். ஏதோ வேடிக்கையாக அவன் சொல்லியிருக்க வேண்டும். அதைக் கேட்டு, அந்தப் பெண் புன்னகை புரிந்தாள்; பளீரென்று ஒரு மின்னல் மின்னுவது போல் இருந்தது.

பரந்த விழிகளுடன் கூடிய அந்தப் புன்னகை பூத்த முகம் ராஜாராமனுடைய உள்ளத்தில் பதிந்தது. “இவள் ஒரு ‘ஸினிமா ஸ்டார்’ ஆக வேண்டும்; அப்படி ஆனால் மேனாட்டின் பிரசித்த நடிகைகளையெல்லாம் தோற்கடித்து உலகத்தையே விலைக்கு வாங்கிவிடுவாள்” என்று அவன் முதலில் நினைத்தான். ‘சீ? இவ்வளவு சௌந்தரியமும் அப்படியா வீணாய்ப் போக வேண்டும்? இவள் மட்டும் தேச சேவையில் ஈடுபட்டால், எவ்வளவு நல்ல வேலை செய்யலாம்? இவளுடைய தலைமையின் கீழ் யார் என்ன தியாகந்தான் செய்யப் பின் வாங்குவார்கள்?’ என்று கருதினான். பிறகு, ‘இதெல்லாம் நம் தேசத்தில் நினைத்து என்ன பிரயோஜனம்? எந்த அசடு இவளைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறதோ? அல்லது ஒரு வேளை முன்னமே ஆகிவிட்டதோ என்னவோ? கலியாணம் ஆகிவிட்டால் பிறகு எல்லாரையும் போல் ஜனத்தொகையை அபிவிருத்தி செய்து கொண்டு, வாழ்க்கையைத் தள்ளவேண்டியதுதானே?’ என்றெல்லாம் எண்ணமிட்டான்.

ராஜாராமன் மறுநாளும் அதே நேரத்தில் அதே இடத்தில் நின்றான். அன்று வண்டி அங்கே நின்றுவிட்டுக் கிளம்பிச் சென்றபோது, அந்தப் பெரிய கண்கள் ஒரு தடவை சுழன்று அவன் மேல் ஒரு வீச்சு வீசி, அவனைத் திகைக்கச் செய்து விட்டு, மறுவினாடி மறைந்தன.

பிறகு, இதே மாதிரி அநேக நாட்கள் நடந்தது. அந்தக் கண்கள் என்னதான் சொல்கின்றன? அந்தப் பார்வையின் அர்த்தந்தான் என்ன? பரிகாசமா? கோபமா? மமதையா? அல்லது…

மூன்று மாத காலம் ராஜராமன் ஒரு சொப்பன உலகத்தில் வாழ்ந்து வந்தான். திடீரென்று ஒரு நாள் அம்மா இறந்த செய்தி வர, ஊருக்குப் புறப்பட்டுச் சென்றான். அடுத்த வருஷம் அவன் மறுபடி அதே கலாசாலையில் வந்து சேர்ந்தபோது, அந்தப் பச்சை வர்ண மோட்டார் வண்டி இந்த வருஷம் அங்கு வருவதில்லையென்று தெரிந்தது.

4

நமது மாஜி திவானுடைய வாழ்க்கையில் பழைய நாகரிகமும் புது நாகரிகமும் அழகாகக் கலந்திருந்தன.

இந்தச் சிற்றுண்டி விருந்துக்கு மேஜைகள், விரிப்புகள், கிண்ணங்கள், கோப்பைகள் சகிதமாக மேனாட்டு முறையில் தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் புருஷர்களுக்குத் தனி மேஜையும் ஸ்திரீகளுக்குத் தனி மேஜையும் போடப்பட்டிருந்தன.

விருந்துக்கு வந்திருந்தவர்களுடைய பிரபாவங்களை இப்போது கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்ரீமான் கங்கோத்ரி அய்யர் ஒரு வக்கீல், அவருடைய காலத்திலே அநேகம் கட்சிக்காரர்களைத் தலை மொட்டையடித்தவர். இப்போது அவருடைய முக்கியமான வேலை என்னவென்றால், உலகத்திலுள்ள பெரிய மனிதர்களுக்கெல்லாம் கடிதம் எழுதுவதுதான். அவரவர்களுக்கு எந்தெந்த விஷயத்தில் பிரமை உண்டென்று அவர் தெரிந்து கொண்டு அதைப் பற்றி எழுதுவார். மகாத்மாவுக்கு ஹரிஜன சேவையைப் பற்றியும், கிராம நிர்மாணத்தைப் பற்றியும் அவர் அநேக கடிதங்கள் எழுதியிருக்கிறார். மகாத்மாவிடமிருந்து அவருக்கு ஒரு தடவை பதில் வந்தது. “தங்களுடைய கடிதங்கள் மிகவும் ருசிகரமான விஷயங்களை உட்கொண்டவை என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதை நான் நம்புகிறேன். ஆனால், நான் புலன்களை அடக்கும் விரதம் கொண்டிருக்கிறேனாதலால் அவற்றை அனுபவிக்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லை” என்று மகாத்மா எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை நமது வக்கீல் கண்ணாடி போட்டு மாட்டியிருக்கிறார். அதே மாதிரி, பெர்னாட்ஷாவிடமிருந்து, “தங்கள் கடிதத்தைப் படித்தேன்; இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்” என்று வந்த கடிதத்தையும், ரொமேன் ரோலண்டிடமிருந்து, “தங்கள் முப்பது பக்கங்கொண்ட கடிதம் கிடைத்தது; தங்கள் பாஷை எனக்குப் புரியாததற்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன்” என்று வந்த கடிதத்தையும் கண்ணாடி போட்டுச் சுவரில் மாட்டியிருக்கிறார்.

அவர் அப்படிக் கண்ணாடி போட்டு மாட்டியிருக்கும் கடிதங்களில் நடுநாயகமாக விளங்குவது சென்னை மாஜி கவர்னர் ஒருவருடைய கடிதந்தான். சீமைக்குப் போய் விட்ட அந்த மாஜி கவர்னருக்கு ஸ்ரீமான் கங்கோத்ரி அய்யர் எத்தனையோ கடிதங்கள் எழுதினார்; ஒன்றுக்கும் பதில் வரவில்லை. கடைசியாக, கடவுள் அருளால் அவருடைய மனோரதம் நிறைவேறும் காலம் வந்தது. ஐயருடைய அருமை மனைவி காலஞ்சென்றாள். அவள் கைலாசப் பிராப்தி அடைந்த வரலாற்றை மிகவும் உருக்கமாக ஒரு கடிதத்தில் எழுதி, “தங்களிடமிருந்து ஓர் ஆறுதல் மொழி வந்தால் தான் உயிர் தரிப்பேன்” என்று முடித்திருந்தார். இம்மாதிரி விஷயங்களில் வெள்ளைக்காரர்கள் சம்பிரதாயத்தைக் கண்டிப்பாக அநுசரிப்பவர்கள். உடனே மாஜி கவர்னரிடமிருந்து பதில் வந்தது. “தங்கள் மனைவி தங்களைவிட்டுச் சென்று கைலாசத்தை அடைந்த விஷயம் தெரிந்து மிகவும் வருத்தப்படுகிறேன். அவளுக்கு நல்ல புத்தி ஏற்பட்டுத் திரும்பி வந்தால், மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று அந்தக் கடிதம் சொல்லிற்று. அதன் பொருள் என்னவென்று ஸ்ரீமான் கங்கோத்ரி அய்யருக்கு இன்றுவரை நன்கு விளங்கவில்லையென்றாலும், கடிதம் என்னவோ கண்ணாடி போடப்பட்டு தொங்குகிறது.

விருந்தினரில் இன்னொருவர் ஒரு பத்திரிகாசிரியர், அவருடைய பெயர் ராவ் பகதூர் அச்சுதராயர், முப்பத்திரண்டு வருஷமாக நடந்து வரும் அவருடைய பத்திரிகையின் பெயர் ‘குடும்பநேசன்’. அவருடைய குடும்பத்துக்கு அந்தப் பத்திரிகை நேசனாயிருப்பதில் சந்தேகமேயில்லை. அந்தப் பத்திரிகையை யார் படிக்கிறார்கள் என்பது மட்டும் ஒரு பரம ரகசியம்; மொத்தத்தில் அந்தப் பத்திரிகையில் எத்தனை விளம்பரங்கள் வருகின்றனவோ, அவ்வளவு பிரதிகளும் அதற்குமேல் பத்துப் பிரதிகளும் அச்சிடப்படுவதாக வதந்தி. ஒரு தடவை, ‘குடும்பநேச’னில் விளம்பரம் கொடுப்பது பற்றி நகர சபையில் விவாதம் வந்த போது, ‘குடும்பநேச’னில் விளம்பரம் செய்வதை விட நாமே தலைக்கு ஒரு பிரதி கையால் எழுதி விநியோகம் செய்துவிட்டு, விளம்பரப் பணத்தைப் பங்கு போட்டுக் கொள்ளலாமே!” என்று ஓர் அங்கத்தினர் யோசனை சொன்னாராம். ஆனாலும் மேற்படி பத்திரிகையும் ஒரு முக்கியமான பொதுஜன சேவை செய்துதான் வருகிறது. மற்றப் பத்திரிகைகளில் வராத நமது மாஜி திவான் போன்றவர்களின் உருவப் படங்களும், அவர்களுடைய உயர் குணாதிசயங்களும் ‘குடும்பநேச’னில் அடிக்கடி வெளியாவதுண்டு.

இன்னொருவர் ஒரு பெரிய ரயில்வே உத்தியோகஸ்தர். மாதம் இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறவர். அந்த அந்தஸ்த்துக்குத் தகுந்தபடி தலையில் வழுக்கை விழுந்தவர். அவருக்குச் சங்கீதத்தில் ரொம்ப பிரமை. மாதம் ரூ.100 ஒரு வித்வானுக்குக் கொடுத்து அவரிடம் மூன்று வருஷம் சங்கீதம் கற்றுக் கொண்டார். முடிவில் அந்த வித்வான், “உமது மூளையில் சங்கீதம் ஏறாது” என்று ஸர்ட்டிபிகேட் கொடுக்கவே, இவர் கோபங்கொண்டு “சங்கீத வித்தையையே சீர்திருத்துகிறேன்” என்று ஆரம்பித்துவிட்டார்! அவர் இதுவரையில் புதிதாக ஒன்பதரை ராகங்களும், பதிமூன்றேகால் தாளங்களும், 356 ஸ்வரங்களும் கண்டுபிடித்திருக்கிறார். இவற்றைக் கேட்டு ஆனந்திப்பவர்களில் நம் மாஜி திவான் ஒருவராதலால், அவரிடம் ஸ்ரீமான் சி.ஆர்.சந்தர் அவர்களுக்கு அதிக மதிப்புண்டு.

அடுத்தவர் ஒரு மாஜி ஸப் ஜட்ஜ். அவர், “இந்தியாவுக்கு வேண்டியதென்ன?” என்னும் பெயர் கொண்ட பிரசித்தி பெற்ற புத்தகத்தின் ஆசிரியர். அந் நூலில், கிராப்புத் தலை மோகத்தைக் கண்டித்துக் குடுமியின் அவசியத்தை வலியுறுத்தும் அத்தியாயம் மட்டும் 28 பக்கங்கள் அடங்கியது. இந்த அருமையான புத்தகத்தை அவர் இங்கிலாந்தின் பார்லிமெண்ட் சபை அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் அனுப்பி, புத்தகம் பெற்றுக் கொண்டதற்கு அவர்களுடைய அத்தாட்சிக் கையெழுத்துக்களை வாங்கி வைத்திருக்கிறார். இந்த அரிய பெரிய நூலுக்கு முன்னுரை தந்திருக்கிறவர் நம் மாஜி திவான் தான் என்றால், இவர்களுடைய பரஸ்பர நன்மதிப்பைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.

ஐந்தாவது பிரமுகர் அந்த டிவிஷனின் கார்ப்பரேஷன் கௌன்ஸிலர் என்பதை அவரிடமிருந்து கிளம்பிய கார்ப்பரேஷன் வாசனையே பிரசித்தப்படுத்திக் கொண்டிருந்தது. ஆகையால் நாம் அவரைப்பற்றி ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.

இந்த ஐந்து பிரமுகர்களோடு மாஜி திவான், ராவ் சாகிப் கபாலி, பாலகோபால், ராஜாராம் இவர்கள் சேர்ந்து மொத்தம் ஒன்பது பேர் புருஷர்களுடைய மேஜையை அலங்கரித்தார்கள். ஸ்திரீகளுடைய மேஜையில் இருந்தவர்களைப் பற்றி நாம் ஏதாவது சொன்னால், மாஜி திவான் கட்டாயம் ஆட்சேபிப்பாராதலால், மேலே கதையைத் தொடர்வோம்.

சிற்றுண்டி விருந்து நடந்து கொண்டிருந்தது. அதே சமயத்தில் மாஜி திவான் விருந்தினரின் செவிக்கும் விருந்து அளித்துக் கொண்டிருந்தார்.

“சோஷலிஸமாம்! இந்த ஜவஹர்லால் நேற்று பையன். இவன் பிறப்பதற்கு மூவாயிரம் வருஷங்களுக்கு முன்னால், மனு எழுதிவிட்டுப் போயிருக்கிறார். மனு எங்கே, இந்தக் காரல் மார்க்ஸ் எங்கே? தற்கால நாகரிகம் நமது பிள்ளையாண்டான்களுடைய கண்களை மறைத்து வருகிறது…”

இடையிடையே பாலகோபால் அவருடைய வாயைக் கிளறி விட்டுக்கொண்டிருந்தான். “தற்கால நாகரிகம் தற்கால நாகரிகம் என்று மண்ணை வாரி இறைக்கிறீர்களே! தற்கால நாகரீகத்தில் எந்த அம்சத்தை நீங்கள் ஆட்சேபிக்கிறீர்கள்? இங்கிலீஷ் படிப்பதில், உத்தியோகம் பார்ப்பதில், பென்ஷன் வாங்குவதில், பட்டம் பெறுவதில், பிள்ளையைச் சீமைப் படிப்புக்கு அனுப்புவதில், மோட்டார் வைத்துக் கொள்வதில் – இது ஒன்றிலும் உங்களுக்கு ஆட்சேபமில்லை; பின் எதைக் குறித்துத்தான் வாயைச் செலவழிக்கிறீர்கள்?”

“கேட்டீர்களல்லவா?…” என்று மாஜி ஸப் ஜட்ஜ் ஆரம்பித்தார்.

மாஜி திவான் அவரைப் பேச விடுவாரா? “நீங்கள் இருங்கள். அவனுக்கு நானே சொல்கிறேன் பதில். பாலகோபால்! நீ கேட்டது சரியான கேள்வி. அந்தக் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. அந்தக் கேள்விக்கு அடிப்படையான மனப்பான்மை இருக்கிறதே, அதைத்தான் ஆட்சேபிக்கிறேன். உங்களுக்கெல்லாம் நமது புராதன நாகரிகத்தில் நம்பிக்கை போய்விட்டது. அதனால் தான் இந்தக் காலத்துப் பிள்ளைகள் இப்படிப் பேசுகிறீர்கள். ஒருவனுடைய வெளிநடத்தை எப்படியிருந்தாலும், மனப்பான்மை சரியாயிருந்தால் அவனுக்குக் கதி உண்டு. உங்களுக்கு நமது புராதன நாகரிகத்தில் பக்தி சிரத்தை கிடையாது. ஜவஹர்லால் நேருவினிடம் உள்ள தப்பு இது தான்…”

5

மாஜி திவானுடைய பேச்சில் ஒவ்வொரு வார்த்தைதான் ராஜாராமன் காதில் விழுந்தது. காரணம் வாசகர்களே யூகித்துக் கொள்ளலாம். அவனுடைய கவனமெல்லாம் ஸ்திரீகள் மேஜையிலிலேயே இருந்தது. அவர்களில் அதிகமாகப் பேசிய குரல் வத்ஸலையினுடையதுதான் என்பதை அவன் அறிந்தான். இந்த மாஜி திவானுடைய வாய் சற்று ஓயாதா என்று அவனுக்குத் தோன்றிற்று.

இரண்டொரு சமயம் மிகவும் தயக்கத்துடன் அவன் ஸ்திரீகள் இருக்கும் பக்கம் திரும்பிப் பார்த்தான். அதே சமயத்தில் அவளுடைய பரந்த கண்களின் கருவிழிகளும் சுழன்று தன்னை நோக்குவதைக் கண்டபோது அவனுக்கு இந்த உலக ஞாபகமே இல்லாமல் போயிற்று.

‘நிலவு செய்யு முகமும் – காண்பார் நினைவு அழிக்கும் விழியும் கலகலென்ற மொழியும் – தெய்வக் களிதுலங்கு நகையும்’

என்று கவி பாடியபோது, இத்தகைய ஒரு பெண்ணை நினைத்துதான் பாடியிருக்க வேண்டும்.

இப்படி அவன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில், அவன் தேனினும் இனியதென்று நினைத்த அந்தக் குரலிலே பின்வரும் சொற்கள் அமுதமும் நஞ்சும் தோய்ந்தனவாய் வெளிவந்தன:

“ஆமாம்! மனப்பான்மைதான் சரியாயிருக்க வேண்டும்! காரியம் என்ன பிரமாதம்? இந்த சென்னைப் பட்டணத்தில் இன்றைய தினம் இரவு உணவுக்கு என்ன செய்வோம் என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழைகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். குடிப்பதற்குப் பாலில்லாமல் ஒட்டி உலரும் குழந்தைகள் எத்தனையோ இருக்கின்றன. நாமோ இங்கே ஒவ்வொன்று இரண்டு அணா விலையுள்ள சீமை பிஸ்கோத்துகளில் தலைக்கு நாலைந்து தின்கிறோம். அதனாலென்ன மோசம்? நம்முடைய மனப்பான்மை சரியாயிருக்கிறதல்லவா?”

மாஜி திவான் சொன்னதற்குப் பதிலாக வத்ஸலை மேற்கண்டவாறு கூறினாள். அதற்குள் திவான், “நீ கூட உன் அண்ணனுடன் சேர்ந்து விட்டாயா? ரொம்ப பேஷ்! தேசம் உருப்பட்டால் போலத்தான்” என்று கூறி, மேலே ஏதோ பேசிக் கொண்டு போனார்.

ஆனால், வத்ஸலையின் வார்த்தைகள் ராஜாராமனுடைய மனத்தில் வேறோர் எதிர்பாராத பலனை உண்டாக்கின. ‘இராத்திரிச் சாப்பாடு…குழந்தை…பிஸ்கோத்து…’ இவ்வார்த்தைகள் செவியில் விழுந்ததும் ராஜாராமன் கனவு உலகத்திலிருந்து விழித்துக் கொண்டான். ரகுவின் நினைவு வந்தது. ‘அந்தோ! குழந்தை ராத்திரி என்ன செய்வான்? இங்கே நாம் வயிறு புடைக்கச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். கடவுளே! ஸ்திரீ சௌந்தர்யத்தின் சக்திதான் என்ன? தன்னைத் தவிர வேறு கதியில்லாத அருமைத் தம்பியைக் கூடச் சற்று நேரம் மறக்கச் செய்துவிட்டதே! – ராஜாராமனுடைய உள்ளம் வெட்கத்திலும் வேதனையிலும் ஆழ்ந்தது. “ரகு! நீ வழக்கம்போல் ஆறரை மணிக்கு ‘அண்ணா!’ என்று கூப்பிட்டுக் கொண்டு வருவாயே? உனக்கு என்ன கொடுப்பேன்? இராத்திரி நீ பட்டினி கிடக்கவா வேண்டும்?” என்று அவனுடைய இருதயம் அலறிற்று. கண்களில் துளித்த கண்ணீர்த் துளிகளை வெகு சிரமப்பட்டுப் பிறருக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டான்.

மாஜி திவான், மேலே பிரசங்கம் செய்து கொண்டு போனார்: “ஏற்கனவே உலகில் தர்மக் குழப்பம் அதிகமாயிருக்கிறது. எது சத்தியம், எது மித்தை என்பதை அறிய முடியாமல் ஜனங்கள் திண்டாடுகிறார்கள். ஸ்திரீகள் வேறு பொது விவகாரங்களில் புகுந்துவிட்டால் கேட்க வேண்டியதில்லை. உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? உண்மை வைரம் ஒன்றையும், இமிடேஷன் வைரம் ஒன்றையும் கொடுத்தால், எது வைரம், எது இமிடேஷன் என்று கண்டு பிடிக்க முடியுமா? இதோ, பாருங்கள்; இந்த மோதிரத்தை இன்று வாங்கினேன். இதை நிஜ வைரமல்லவென்று யாராவது சொல்ல முடியுமா?” என்று கூறிப் பக்கத்திலிருந்த மாஜி ஸப் ஜட்ஜினிடம் மோதிரத்தைக் கொடுத்தார். அதில் பதித்திருந்த ஒரு பெரிய வைரமும் இரண்டு சிறு வைரங்களும் பளபளவென்று கண்களைப் பறித்தன. மாஜி ஸப்-ஜட்ஜ் அதைப் பார்த்துவிட்டு, “ஆமாம்; அசல் வைரம் மாதிரிதான் இருக்கிறது. இருந்தாலும் கவனித்துப் பார்த்தால் தெரிந்துவிடும்” என்றார். பிறகு, அதை அடுத்தாற் போலிருந்த ராவ்சாகிப் கபாலியிடம் கொடுத்தார். அவர் அதைப் பார்த்துவிட்டு, “ரொம்ப நன்றாயிருக்கிறது. இது நிஜ வைரமென்று யாராவது நம்புவார்களா, என்ன? பைத்தியந்தான்” என்றார். மோதிரம் கைமாறிப் போய்க்கொண்டேயிருந்தது. அடுத்தபடி, வக்கீலும் அந்த மாதிரியே அபிப்பிராயப்பட்டார். பத்திரிகாசிரியர், “எனக்கு வைரங்களில் அவ்வளவு அநுபவம் இல்லை. இருந்தாலும் இதைப் பார்த்தால் சந்தேகம் ஏற்படாமலிராது” என்றார்.

மாஜி திவான், “ஹஹ்ஹஹ்ஹா!” என்று சிரித்தார். “பார்த்தீர்களா? கேவலம் ஒரு வைரத்தை நிஜம், பொய் என்று கண்டுபிடிக்க முடியாதவர்கள், சத்தியத்தின் ஸ்வரூபத்தை எப்படிக் கண்டுபிடிக்கப் போகிறோம்? அது நிஜ வைரந்தான். ரூபாய் 750க்கு இப்போதுதான் வாங்கினேன் – லவனபுரம் ஜமீன்தாருக்காக” என்றார்.

6

ராஜாராமனுடைய செவிகளில் இதெல்லாம் ஏறவேயில்லை. ‘வைரம்’, ‘வைர மோதிரம்’ என்பது மட்டும் காதில் விழுந்தது. அவனுடைய ஞாபகத்தில் ரகு இன்னும் சற்று நேரத்தில் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி விடுவானே என்பதிலேயே ஈடுபட்டிருந்தது. மாஜி திவானுடைய பிரசங்கமோ முடிகிற வழியாய்க் காணவில்லை. அவரிடம் தன்னுடைய நிர்ப்பந்தமான நிலையைச் சொல்லி ஏதாவது அவசரமான உதவி வேண்டுமென்று கேட்க அவன் விரும்பினான். அவரிடம் அவனுடைய நம்பிக்கை இதற்குள் ரொம்பவும் குறைந்து விட்டது. தன்னில் தானே ஆழ்ந்து போயிருக்கும் அந்த மனிதருக்குப் பிறருடைய சுக துக்கங்களை உணரும் சக்தி இருக்குமா? எப்படியிருந்தாலும் இன்றைய தினம் அவரிடம் தனியாகப் பேசுவது சாத்தியமில்லை. நாளைக் காலையில் வந்து பார்க்க வேண்டியதுதான்.

“எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. போனால் தேவலை” என்று அருகிலிருந்த பாலகோபாலிடம் தெரிவித்தான். அவன், “உங்களை அடிக்கடி பார்க்க விரும்புகிறேன். எங்கே வசிக்கிறீர்கள்?” என்று கேட்டான்.

“திருவல்லிக்கேணி சுந்தரமுதலியார் தெருவில் 48ஆம் நம்பர் வீட்டு மாடி அறையில் இருக்கிறேன். ஆனால் அங்கே எத்தனை நாள் இருப்பேன் என்பது நிச்சயமில்லை” என்றான் ராஜாராம்.

“எங்கள் வீடு எழும்பூரில் இருக்கிறது. நீங்கள் ஒரு நாள் கட்டாயம் வரவேண்டும்” என்று பாலகோபால் சொல்லி, தன் விலாசம் எழுதிய சீட்டை அவன் கையில் கொடுத்தான்.

ராஜாராம் விடைபெற்றுக் கொள்வதற்காக எழுந்து நின்றான்.

அப்போது மாஜி திவான், ஏதோ பேசிக் கொண்டிருந்தவர், பேச்சை நிறுத்தி, “மோதிரம் எங்கே?” என்று கேட்டார்.

எல்லாரும், “எங்கே? எங்கே?” என்றார்கள். சுற்று முற்றும் பார்த்தார்கள். மோதிரத்தைக் காணோம்.

“எனக்குக் கொஞ்சம் காரியம் இருக்கிறது. நான் போய் வரட்டுமா?” என்றான் ராஜாராமன், மாஜி திவானைப் பார்த்து.

அவரும் இவனைப் பார்த்தார். ஆனால் பதில் ஒன்றும் சொல்லவில்லை. மற்றவர்களைப் பார்த்து, மோதிரம் எங்கே?” என்று கேட்டார்.

எல்லாரும் மேஜையைப் பார்த்தார்கள். பக்ஷணத் தட்டுகளைப் பார்த்தார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். பிறகு, ஆகாயத்தைப் பார்த்தார்கள். எங்கும் மோதிரத்தைக் காணவில்லை.

ராஜாராமன் நின்று கொண்டேயிருந்தான். “நான் வரட்டுமா?” என்று மறுபடியும் கேட்டான்.

அப்போது டிபுடி கமிஷனர் கபாலி, இனிமேல் காரியங்களை நடத்தும் பொறுப்பு தம்முடையது என்பதை உணர்ந்தார். உடனே, எழுந்து நின்று, “நண்பர்களே! ரூ.750க்கு வாங்கிய ஒரு வைர மோதிரத்தை ஐந்து நிமிஷத்துக்கு முன்னால் நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது அந்த மோதிரத்தைக் காணோம் என்று நமக்கு விருந்தளித்த பெரிய மனிதர் கூறுகிறார். இது நம்மெல்லாருக்கும் அவமானம் தரக்கூடிய விஷயம். கண்யமுள்ளவர்கள் இத்தகைய சந்தர்ப்பத்தில் செய்யக் கூடியது ஒன்றுதான் இருக்கிறது. நம்மை நாமே சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவேண்டியதுதான். முதலில் ஒவ்வொருவரும் சட்டைப் பைகளை உதறுங்கள்!” என்றார்.

“அது தான் சரி” என்றார் மாஜி ஸப் ஜட்ஜ்.

“எனக்கு ஆட்சேபமில்லை” என்றார் வக்கீல். மற்றவர்கலும் சம்மதத்துக்கு அறிகுறியாக முணுமுணுத்தார்கள். கபாலி, ராஜாராமனுடைய முகத்தைப் பார்த்தார். அவன் முகத்தில் ஏற்பட்ட குழப்பத்தைக் கவனித்தார். திருடன் அகப்பட்டுவிட்டான் என்று தீர்மானித்துக் கொண்டார். போலீஸ் இலாகாவில் முப்பது வருஷம் இருந்து தலை நரைத்துப் போன அவருக்கு இந்தத் திருட்டைக் கண்டுபிடிப்பது ஒரு பெரிதா?

அந்தச் சமயம் பாலகோபால் புன்னகையுடன், “சட்டையை மட்டும் உதறினால் போதுமா? வேட்டி மடிப்பில் செருகிக் கொண்டிருந்தால்? குடுமியில் வைத்து முடிந்து கொண்டிருந்தால்?…” என்றான்.

கபாலி, “பாலகோபால்! இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் கூடவா விளையாட்டு? துளிக்கூட நன்றாயில்லை. முதலில் சட்டைப் பைகளை உதறுவோம். அதில் அகப்படாவிட்டால், பிறகு எல்லாரும் தனி அறைக்குப் போய்ப் பூரண சோதனை செய்து கொள்வோம். நல்ல வேளையாக, ஸ்திரீகள் இதில் சம்பந்தப்படவில்லை” என்றார்.

“ஏன் அப்படி எங்களை ஒதுக்குகிறீர்கள்? மற்ற எல்லாவற்றிலுந்தான் நாங்கள் மட்டமாயிருக்கிறோம்; திருட்டுப் பட்டம் கட்டிக் கொள்வதில் கூடவா மட்டமாயிருக்க வேண்டும்?” என்று வத்ஸலை கேட்டாள். அவளுடைய குரலில் ஏளனம் அதிகமாயிருந்ததா, கோபம் அதிகமாயிருந்ததா என்று சொல்வதற்கு முடியாமலிருந்தது.

கபாலி, “திருட்டு என்று யார் சொன்னார்கள்? ஞாபக மறதியாய் யாராவது சட்டைப் பையில் போட்டுக் கொண்டிருக்கலாம். அப்படியின்றி, மோதிரம் மாயமாய்ப் போயிருந்தாலும், நம்முடைய பொறுப்பை நான் கழித்துக் கொள்ளலாமல்லவா?” என்று கூறி, தமது கோட்டை அவிழ்த்து உதறினார்.

“எனக்கு ஆட்சேபமில்லை, ஸ்வாமி!” என்று பாலகோபாலும் தன் கோட்டை எடுத்து உதறினான். மற்றவர்களும் அப்படியே செய்தார்கள்.

ராஜாராமன் மட்டும் நின்றபடியே இருந்தான்.

“மிஸ்டர் ராஜாராம்! ஏன் நிற்கிறீர்கள்? அவசரமாய்ப் போக வேண்டுமென்றீர்களே! சட்டையை உதறிவிட்டால், உடனே போகலாமே!” என்றார் கபாலி.

ராஜாராமனுக்கு என்ன நேர்ந்து விட்டது? அவன் ஏன் அப்படித் தேம்புகிறான்? அவனுடைய கண்களில் ஏன் நீர் ததும்புகிறது?

ஒரு நிமிஷம் அவ்வாறு நின்றுவிட்டுக் கோபமும் துக்கமும் பொங்கிய குரலில், “நான் மாட்டேன்; என் சட்டையைக் கழற்ற மாட்டேன். எனக்குத் தெரியும் உங்கள் சமாசாரம்; என்னை அவமானப்படுத்துவதற்காகவே இப்படிச் செய்திருக்கிறீர்கள். அது வைர மோதிரமேயல்ல; அது கெட்டுப் போகவுமில்லை; சுத்தப் பொய். நீங்கள் எல்லாரும் பெரிய மனிதர்கள். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நான் ஏழை!…” என்று அலறினான்.

கபாலி, தொண்டையைக் கனைத்துக் கொண்டு, சாவதானமாக, “தம்பி! பதறாதே!…” என்று ஆரம்பித்தார்.

அதற்குள், ராஜாராமன், “ஆமாம்; பதறாதே! உங்களுக்கென்ன உபதேசம் செய்வதற்கு? முடியாது. நான் இந்த அவமானத்துக்கு உட்படமாட்டேன். சட்டையை உதறமாட்டேன். இதோ நான் போகிறேன். உங்களால் ஆனதைச் செய்து கொள்ளுங்கள்” என்று விம்மிய குரலில் சொல்லிவிட்டு, விரைவாக நடந்து வெளியே சென்றான்.

ராவ்சாகிப் கபாலி, கடகடவென்று சிரித்தார். ஆனால் மற்றவர்கள் யாருக்கும் சிரிப்பு வரவில்லை. ராஜாராமனுடைய ஆத்திரமான பேச்சும், அவனுடைய குரலில் தொனித்த துக்கமும் அவர்களையெல்லாம் பிரமை பிடித்தவர்கள் போல் ஆக்கிவிட்டன. கிணறு வெட்டப் போய்ப் பூதத்தைக் கண்டவனுடைய நிலையை அவர்கள் அடைந்திருந்தார்கள்.

கபாலி மட்டுந்தான் தம்முடைய நிதானத்தை இழக்கவில்லை. வெளியில் கொஞ்ச தூரத்தில் நின்று கொண்டிருந்த ஓர் ஆளை அவர் சமிக்ஞை செய்து கூப்பிட்டார். அருகில் வந்ததும் அவன் காதில் ஏதோ சொன்னார்.

அப்போது வத்ஸலை தான் இருந்த இடத்தில் எழுந்து நின்று, “மாமா! நீங்கள் என்ன சொல்கிறீர்களென்று எனக்குத் தெரியும். மிஸ்டர் ராஜாராமைப் பின் தொடர்ந்து போகச் சொல்கிறீர்கள். ஆனால், அது தேவையில்லை…” என்றாள்.

எல்லாரும் அவள் முகத்தை வியப்புடன் நோக்கிக் கொண்டிருக்கையிலேயே, “இதோ அந்த வைர மோதிரம், பத்திரமாயிருக்கிறது!” என்று எடுத்துக் காட்டினாள். “பரிசாரகன் உங்கள் மேஜையிலிருந்த காராபூந்தித் தட்டை இங்கே எடுத்து வைத்தான். காராபூந்திக் குவியலுக்குள் இது இருந்தது. உங்களில் ஒருவர் பேச்சு ஸ்வாரஸ்யத்தில் ஞாபக மறதியாய்த் தட்டில் போட்டிருப்பீர்கள்…”

“அடடா! அந்தப் பையனைப் போய்ச் சந்தேகித்தோமே? என்ன அநியாயம்! நீ ஏன் முன்னமே சொல்லியிருக்கப்படாது?” என்று மாஜி திவான் கேட்டார்.

“ஏனா? உங்களுடைய புத்திசாலித்தனம் எவ்வளவு தூரம் போகிறதென்று பார்க்கத்தான்!” என்றாள்.

7

சற்று நேரத்துக்கெல்லாம், பாலகோபாலும் வதஸ்லையும் மாஜி திவானின் பங்களாவுக்கு வெளியே வந்து தங்களுடைய காரில் ஏறிக் கொண்டார்கள்.

“டிரைவர்! திருவல்லிக்கேணிக்குப் போ!” என்றாள் வத்ஸலை.

“திருவல்லிக்கேணிக்கா? எதற்காக?” என்றான் பாலகோபால்.

“அவரைப் பார்ப்பதற்குத்தான்.”

“ஐயோ! ஏதோ விலாசம் சொன்னான்; மறந்து விட்டேனே!”

“நீ மறந்து விட்டால் எனக்கு ஞாபகம் இருக்கிறது. சுந்தர முதலியார் தெரு, 48ஆம் நெம்பர்.”

“அவனுக்கு ஏன் அவ்வளவு கோபம் வந்தது? சட்டைப் பைகளை உதறமாட்டேனென்று அவ்வளவு பிடிவாதம் ஏன் பிடித்தான்? அதுதான் எனக்குத் தெரியவில்லை.”

“எனக்குந்தான் தெரியவில்லை. ஆனால் ஏதோ காரணம் இருக்கவேண்டும். அதை நான் கண்டுபிடிக்காவிட்டால், என் பெயர் வத்ஸலை அல்ல; நான் டிப்டி கமிஷனர் கபாலியின் மருமகளல்ல” என்றாள்.

பத்து நிமிஷத்துக்கெல்லாம் வண்டி மேற்படி வீட்டின் வாசலை அடைந்தது.

கீழ்க்கட்டில் குடியிருந்த ஒருவர் வாசலில் நின்று கொண்டிருந்தார்.

“ராஜாராமன் இங்கேதானே இருக்கிறார்?” என்று பாலகோபால் கேட்டான்.

“ஆமாம்; இப்போதுதான் வெளியிலிருந்து வந்து மாடிக்குப் போனார்” என்று பதில் வந்தது.

பாலகோபாலும், வத்ஸலையும் மெதுவாக அடிவைத்து மச்சுப் படிகளின் மீது ஏறினார்கள்.

மேலே சற்று விஸ்தாரமான திறந்த மாடி இருந்தது. அதன் ஒரு பக்கத்தில் ஒரு சின்ன அறை இருந்தது. இவர்கள் மெதுவாக நடந்து சென்று அறையின் கதவண்டை நின்று எட்டிப் பார்த்தார்கள்.

ராஜாராமன் தன்னுடைய கோட்டைக் கழற்றித் தன் சட்டைப் பைகளிலிருந்து ஏதோ சாமான் எடுத்துக் கொண்டிருந்தான். அது என்ன? ஆ! மாஜி திவானுடைய விருந்தில் வைத்திருந்த பிஸ்கோத்து; அதை மேஜை மீது வைத்துவிட்டு மறுபடியும் பையில் கையை விடுகிறான். இன்னொரு பிஸ்கோத்து. இம்மாதிரி ஆறு பிஸ்கோத்துகளை எடுத்து அடுக்கி வைக்கிறான். உஸ்! தனக்குத்தானே ஏதோ பேசிக் கொள்கிறானே!

“ரகு! ரகு! அவளைப் போன்ற ஆயிரம் தேவகன்னிகைகளின் காதலைக் காட்டிலும் உன்னுடைய அன்புதான் எனக்குப் பெரிது!”

இது காதில் விழுந்தபோது, வத்ஸலையின் அழகிய கன்னங்கள் குழிந்தன. “அவள்” என்று அவன் குறிப்பிடுவது யாரை என்பது வத்ஸலைக்குத் தெரியாதா, என்ன?

அதே சமயத்தில், “அண்ணா! அண்ணா!” என்று குதூகலமாய்க் கூவிக்கொண்டு, யாரோ மாடிப்படி ஏறி வரும் சப்தம் கேட்டது.

“ரகு ஓடி வா!” என்றான் அறையிலிருந்தபடியே ராஜாராமன்.

அடுத்த நிமிஷத்தில், குருகுருவென்று கண்களும், சுருட்டை மயிரும், களை சொட்டிய முகமும் படைத்த ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவன் மாடிக்கு வந்தான். “அண்ணா! பிஸ்கோத்து வாங்கி வந்திருக்கிறாயா?…” என்று கேட்டவன் அறையின் வாசலில் இருவர் நிற்பதைக் கண்டு திகைத்துப் போனான். உள்ளே வந்து, அண்ணாவிடம் மெதுவான குரலில், ‘வெளியில் நிற்பவர்கள் யார்?’ என்று கேட்டான்.

ராஜாராமன் ஆச்சரியத்துடன் வெளியே வந்து பார்த்தான். பாலகோபாலையும் வத்ஸலையையும் கண்டதும் முதலில் அவனுக்கு கோபம் வந்தது. ஆனால், வத்ஸலையின் புன்னகை பூத்த முகத்தையும், அந்தக் கண்களையும் கண்டதும் கோபம் பறந்தது. அதற்குப் பதில் வெட்கம் பிடுங்கித் தின்னத் தொடங்கியது.

“தங்களுடைய விலாசம் மறந்து போவதற்குள் வீட்டைக் கண்டுபிடித்து வைக்கலாம் என்று வந்தோம்” என்றான் பாலகோபால்.

“இவ்வளவுதானா? திருட்டுக் கண்டுபிடிக்க வந்தீர்களென்றல்லவா பார்த்தேன்?”

வத்ஸலை சொன்னாள்: “ஆமாம்; திருட்டைக் கண்டுபிடிக்கத்தான் வந்தோம். ஆனால் மோதிரத் திருட்டையல்ல. மோதிரம் என்னிடந்தான் இருந்தது. காராபூந்தித் தட்டிலிருந்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். அதை நான் காட்டியதும் அந்தக் கிழங்களின் முகத்தில் அசடு தட்டியதை நீங்கள் பார்க்காமல் வந்து விட்டீர்கள். ஆனால், நாங்கள் வந்தது வேறு திருட்டைக் கண்டுபிடிக்க. மேஜையில் இருந்த பிஸ்கோத்துகளில் ஐந்தாறு பிஸ்கோத்துகளைக் காணோம். ஒருவேளை இங்கே இருக்குமோ என்று வந்தோம். அடடா! இதோ இருக்கே!”

இவ்வாறு சொல்லி, ராஜாராமனுடைய பதிலுக்கு இடங் கொடாமல், வத்ஸலை மேஜையண்டைப் போய் அந்தப் பிஸ்கோத்துகளைக் கையில் எடுத்துக் கொண்டாள். திகைத்துப் போய் நின்ற ரகுவை பலவந்தமாகப் பிடித்திழுத்து அவன் வாயில் பிஸ்கோத்துகளைத் திணிக்கத் தொடங்கினாள்.

அப்போது, பாலகோபால், தனக்குள், “சரி, சரி! இந்த ராஜாராமன் பிஸ்கோத்துகளை மட்டும் திருடவில்லை. ஒரு மகா அதிகப் பிரசங்கியான பெண்ணின் இருதயத்தைக் கூடத் திருடி விட்டான் போலிருக்கிறது?” என்று எண்ணமிடலானான்.

“இவள் எந்த முட்டாளைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறாளோ?” என்று ராஜாராமன் முன்னொரு நாள் நினைத்தானல்லவா? ஆறு மாதத்திற்கெல்லாம் வத்ஸலைக்குக் கலியாணம் நடக்கத்தான் செய்தது. ஆனால், அவளைக் கலியாணம் செய்து கொண்டவனை முட்டாள் என்பதாக ராஜாராமன் இப்போது ஒப்புக்கொள்வதில்லை.

அவ்வளவு ஆத்ம நிந்தனை செய்து கொள்ள யாருக்குத்தான் மனம் வரும்?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *