வாழ்க்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 3,282 
 

“போயும் போயும் நிலம் வந்து வாங்கினோமே, பாழாய்ப்போன ஊரிலே! குடி தண்ணிக்கு வழி இல்லை. எடுத்துக்கிட்டு வாடா அரிவாளை, பெட்டியிலே இருந்து” என்ற வார்த்தைகளுக்கு முன்பு நடந்த விஷயங்கள் வருமாறு:

பட்டுப் பட்டுப் பழகிப்போன மிராசுதார் மாமா வுக்கே தாங்க முடியாத வெப்பம். அறுப்புக் களம். பட்டுப் படைக்கிற வெயில். நிழலின் சாயை பர்லாங்கு தூரத்துக்கு விழாத ஒரு பொட்டலிலே – சுடுகாட்டிலே என்று கூடச் சொல்லலாம் – அறுகங்கட்டை வெளியிலே களம் கூட்டி இருந்தாள் பள்ளி. ஏறிப் போயிருந்த ஒற்றை வண்டி நிழலிலே ஏறும் வெயிலுக்குத் தக்கபடி ஒதுங்கி ஒதுங்கி ஒண்டுவதைத் தவிர வேறு ஒரு வழியும் இல்லை. கண் முன்னே அனல் பூச்சி பிடித்து ஓடிக்கொண்டிருக்கிறது.

மாமாவின் வாயிலிருந்து வார்த்தை சீறி விழுந்தது. ஏன் புள்ளே, ஏன், அந்தக் கரட்டுமேலே கூட்டி வைக்கிறது தானே? குத்துக்கல்லு குத்துக்கல்லா இருக் குமே ; களத்துலே நெல்லு கனமாக் கிடக்கும்.”

“இல்லேப்பா. வகையாக் களம் சிக்கல்லே. வேணுமினா…”

“அது எப்படிச் சிக்கும்? அருகங்கட்டையிலே செதுக்கினாத்தானே களம் கூட்டறபோது அறுப்புக் காரன், ‘இதுக்கு மேலே கூட்ட வல்லீங்க. நெல்லு நின்னுக்கிது’ன்னு விட்டுட்டுப் போயிடுவான்? அதெல்லாம் கோளாறாகத்தான் செய்யவே, உன் பாட்டைப் பார்த்துக்கிறதுக்கு?”

“அவருதான் இங்கிட்டுக் கூட்டச் சொன்னாரு.”

“அவன் சொன்னானா? ஏன் சொல்லமாட்டான்? வீடு அந்தா இருக்குது. தலைச்சுமையா வெக்கக் கட்டைக் கொண்டுட்டுப் போயிரலாம். பள்ளக் களத்திலே வச்சு மழை பெய்தால் அவதிப்படறது ஐயன் தானே? அவனவன் பாடு தாண்டா அவனுக்கு! என்னடா , மணி இரண்டாச்சு. பொளுது சாஞ்சுக் கிட்டு வருது. இன்னும் களத்திலே கட்டைக் காணோம். இவனெல்லாம் கொத்துக்காரன்னு வந்து பேசிக் கிட்டான்.”

மிராசுதார் மாமாவின் படபடப்பை அதிகரிக்கச் செய்வதற்கு அங்கு இருந்த சந்தர்ப்பம் ஒவ்வொன்றும் உதவி செய்ததே தவிர, ‘குளுமை’க்கும் சுமுகத்துக்கும் அங்கே ஹேது இல்லை.

பகவான் கொடுத்த சொத்து, பூமி என்றெல்லாம் தாம் சொல்லிக் கொள்ளும் அந்தக் களிமண் கட்டிப் பரப்பு அத்தனைக்கும் அந்த வெயிலில் கொத்துக் காரன் தான் ராஜா. அவன் இஷ்டப்படி தான் அங்கே. இருபது ஆட்கள் நாலைந்து நடை கம்மாய்க் கரை மேலே அரை மைலுக்குமேல் சுருட்டி நடந்து கதிரடித்துக் காற்றுப் பார்த்துப் பொலி விட்டு அளவு பிடித்துக் குறி போட்டு நெருஞ்சியும் கள்ளியும் புடை சூழ ஊருக்குத் திரும்பப் பவனி போகவேண்டும்.

இருட்டிலே போக வேண்டிய அந்தப் பாதையைப் பற்றி ஒரு வார்த்தை; புழுதி ஒட்டிக்கொள்ளும் பாதையில் நேரே, ஒரு பக்கம் நெருஞ்சி , மறு பக்கம் கொடிக்கள்ளி , இரண்டோடும் உறவு கொண்டாடாமல் நடந்து போனால் தான் பிழைக்கலாம். வண்டிப்பாதையும் அதுதான். வலத்துக் காளையின் கால்கள் கள்ளிக்கட்டை களுக்கு இடுக்கிலும் இடத்துக் காளையின் குளம்புகள் நெருஞ்சி படர்ந்த மணல் புற்றுக்கள் மீதும் சதக் சதக்கென மிதித்துப் போடும்போது உள்ளுக்குள்ளே உட்கார்ந்து போகிற ஆத்மாவுக்கு கோயில் கட்டி வைத்து விடலாம். வண்டிக்காரன் பாடு தீராப்பொறி.

இந்த ரீதியில் பவனி வந்து இறங்கின நிலையில் அறுகங்கட்டைக்களம், பள்ளி தந்திரம், பொட்டலடி., காலிக் களம், அனல் ஓட்டம் இத்தனையும் சேர்ந்தன. களத்திலே தான் கட்டைக் காணோம்; வயிற்றிலே இரண்டு இளநீரையாவது போட்டு வருவோம்” என்று அரிவாளை எடுத்து வரச் சொன்னார் மிராசுதார் மாமா. குடி தண்ணீ ருக்கு வசதி இல்லாத ஊரில் நிலம் வாங்கின சலிப்பு, குரலில் கலந்தது.

அதற்குப் பதில் உடனே வந்தது ; ”சாமி, சாமி! அப்படிச் சொல்லாதீங்க. தங்கம் பெத்த நிலமில்லொ மவராசன் கையிலெ தங்கமான்னா சொரியுது? என்ன ஐயா கவுண்டரே! நீ சொல்லு.” இதைச் சொன்ன உருவம் முறுக்கு மீசையும் முண்டாசும் தடிக்கையுமாக வண்டி அணைப்பில் நின்று கொண் டிருந்தது. அந்தப் புரவுக்கு அவன் தலைக்காவல்.

“காளிமுத்தண்ணன் சொல்றது சரிதான். ஜமீன் தார் காலத்துலே ஒருதவா இங்கிட்டு வந்திருப்பாருன்னா நினைச்சே? அவனவன் சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டுப் போனது போனது, வந்தது வந்தது தான்” என்பது கவுண்டரின் பதில். பிரஸ்தாப ஸந்தர்ப்பத்தில் மிராசு தார் மாமாவின் வயலை வாரத்துக்கு ஒப்புக்கொண்ட உழுபடைக்காரன் அவன்.

“ஆமடா, எல்லாரும் மச்சு வீடு கட்டித்தானே பிழைக்கிறீங்க? பார்க்கிறேனே. ஐயனும் அசந்தா ஒரு கை…”

“ஹும். இந்தா சொல்றீகளே. துரோகம் நினச்ச நாய் அந்தா பாருங்க : செட்டியாருக்கு அரை மா, ராவுத்தருக்குக் காணி கிரயம்.”

“ஏன்? வீடு நிலக்கோட்டையானுக்குன்னு ஒத்தி வைத்துப் போட்டுப் பருத்திக் காட்டிலே பழி கிடக்குது, அண்ணாந்து பாத்துக்கிட்டு என்று சேர்வையும் கவுண்டருமாக ஆளுக்குப் பாதி சொல்லி நிறுத்தினார்கள்.

“ஹம்! நீங்க சொல்றேள். எல்லாத்துக்கும் புத்தி இருந்துச்சுன்னாத் தானே? கால் கஞ்சி அரை வயித்துக் காவது குடிக்கணுங்கிற நினைப்பு வேண்டாம்? சரி, தோப்பைப் பாத்துட்டு வறேன். கவுண்டா, கருதுக்கட்டு வந்தவுடனே குறுக்கிக் கிழக்காலே போடச் சொல்லிப் படப்பை நெட்டுக்குப் போட்டு ரெவ்வெண்டு அடி அடிச்சு போடச் சொல்லு.”

“சரி; போய் வாங்க. என்னவோ, எங்கப்பன், பெரிய ஐயா காலத்துலே இருந்து தர்மதுரை காலிலே விழுந்து கிடக்கிறோம். நீங்க பாத்து எதுவும் பண்ணிக் கிட்டாத்தான். உங்க கையை விட்டு மாத்திரம் நிலம் பறந்திச்சு, அப்புறம் இது நிலம்னு ஆகும்னு பாத்திங்க? ஹும். ஏது?”

“அதெல்லாம் குழையக் குழையத்தான் பேசுவே! சரி, சந்தணக் குடும்பா! நட. காளிமுத்தா, சும்மாத் தானே நிக்கிறே?”

“வாறேன், போங்க.”

மாமர் புறப்படவும் இரண்டு மூன்று முண்டாசுகள், தடிக் கம்புகள், அரிவாள்கள் எல்லாம் துணை புறப் பட்டன. இத்தனை பேச்சுக்கும் இடையில் மௌனக் குரலாக – ஆனால் எனக்குள்ளே பேசிக்கொண்டிருந்த – என் உருவமும் சேர்ந்து கொண்டது.

நாவறட்சி உண்டாகும் இந்த வெப்பத்தை எதிர்த்து எவ்வளவு நேரந்தான் சமாளிக்க முடியும் , ஹாஸ்டல் அறைகளிலும் கடற்கரை ஓரத்திலும் ஜிலுஜிலுவென்ற காற்றை வாங்கிக் குஷியாகக் காலங் கழித்த உடலுக்கு? என்னவோ நப்பாசை , ஒரு தரம் களத்துக்குப் போய் அறுவடை முழுவதும் தெரிந்து கொண்டு விடவேண்டு மென்று. அப்புறம் நானும் கிராமவாசி: ‘கிராமத்துக்குப் போ’ என்று கூவும் கூட்டத்தில் கோவிந்தா போடலாம் அல்லவா?

மேலே சொன்ன ரீதியிலே பேசிப் பேசிக் கிராமங்கள் அலுத்துப் போனதாகத் தெரியவில்லை. அலுப்புச் சலிப்பு இல்லாமல் பரஸ்பரம் முகஸ்துதி யையும் எச்சையுமே பரிமாரிக்கொண்டு பண்பட்டுப் போன நாக்குகளாக அத்தனையும் பட்டன. எனக்கு அங்கு நடந்து வரும் செய்கைகளுக்கு மேலே பேச்சு அதிகம் என்ற நினைப்பு ஊறியது. கீழே வரும் சம்பாஷணைகள் இதை வலியுறுத்தின.

அந்தரத்தில் கம்பிமேல் நடப்பதற்கும் வரப்பு மேலே நடப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரிய வில்லை. அத்தனை கைவீச்சும் நிதானமும் வேண்டியிருந்தன, சமாளித்து எட்டு வைப்பதற்கு. தார் ரோடிலே எட்டிப் போடும் எட்டு அங்கே செல்லாது. நண்டு வளைகளுக்கும், மடைகளுக்கும், மேலே குத்துக் குத்தாக நின்ற களிமண் கட்டிகளுக்கும் மேலாகத் தாறு மாறாக நிதானம் இல்லாமல் போட்ட என் கால்களைப் பார்த்துப் பின்னாலே வந்த முண்டாசு, “சின்ன ஐயா வுக்கு நடந்து பழக்கமில்லே போல் இருக்கு; பையப் போங்க, சாமி” என்று கூறவும் அதை ரஹித்து அத்தனை பட்டிக்காட்டுச் சிரிப்புகளும் கிளம்பின. ‘பட்டிக்காட்டானா?’ என்று ஓர் இடத்தில் ஏளனமாகப் பேசப்படுகிறது. இங்கேயோ இந்தச் சிரிப்புகள் “பட்டினத்தானா?” என்று ஏளனம் செய்கின்றன.

வரப்பு வரப்பாகக் கடந்து கொண் டிருந்தோம். திடீரென்று, “ஸ்ஸ்…இருடா. அதென்ன சாய்தம்? அழுகை மாதிரி இருக்கே? அதென்னடா, சந்தணம்?” என்று மாமா கேட்டார். என் காதிலும் அப்போது ஓலக் குரல் விழுந்தது.

சந்தணம் விளக்கினான்: “ஆமாங்க நம்ப செங்குளத்து ஐயரு மவன் இறந்து போயிருச்சு , அந்தா பொழுது உச்சிக்கு வர நாலு நாழிக்கு முந்தி. சின்னப் பள்ளிக்கூடத்திலே படிச்சுக்கிட்டு இருந்துச்சுங்க இல்லையா?”.

“ஆமடா. பத்து நாளா உடம்பு குணமில்லேன்னு பேசிண்டா. ஒரே பிள்ளை. போயிருச்சா? அட பாவமே!”

“அந்தக் கிழட்டு ஐயரு போடற சப்தம் எம்மாந் தூரத்துக்குக் கேக்குது? அடேயப்பா! சகிக்கலீங்க” என்று காளிமுத்தன் தொடர்ந்து சொன்னான்.

“ஹூம்! போகுது. அதுக்குத் தலைவிதி முடிஞ்சுது. அல்பாயுசு ; அவ்வளவுதான். யாருடா அது அங்கே? வேலுதானே, கொடிக்காலுக்கு அங்கிட்டு?”

‘பார்’ வேலைக்காரன் கைமாதிரி மாமாவின் வாயி லிருந்து சடாரென்று மாறின தொனியில் வார்த்தை கிளம்பினதை நான் க்ஷணத்தில் கிரஹிக்காமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால் ஒரு மரணச் செய்தி காதில் விழதும் சாவின் தன்மையைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்கிற உள்ளத்தில் நினைவு மறைந்து போகுமுன் புது அர்த்தபுஷ்டியான வார்த்தைகளைத் தொடர முடியவில்லை .

“ஆமாங்க, வேலுதான் – ஏ , தேவரய்யோய் ..” என்று கூவினான் சந்தணம்.

“அட , அவனாக வரானா பார்ப்போமே. கெடுத்து விட்டாயே காரியத்தை. அவசரக் குடுக்கை ! விட்டுப் பார்க்காமே? ஒளிஞ்சுக்கிட்டுத் திரியறான் அவன்.”

“இல்லீங்க. இங்கிட்டுத்தான் வருவாரு” என்றான் காளிமுத்தன்.

செங்குளத்து ஐயர் மகன் சாவுப் பேச்சிலிருந்து மாறின சம்பாஷணைக்கு அந்தச் சுற்றுப்புறமே ஒத்துக் கொண்டு விட்டது. தேவனும் காது கேட்கும் தூரத்தில் வரவே மாமா , “சந்தணம், தேவரு இங்கிட்டு எதுக்கு வாராரு? அவருக்கு இப்போ பெரிய இடமா சிக்கிக்கிச்சு. லக்ஷியமா பண்ணுவார்?” என்று கிண்டல் செய்து கொண்டே நடந்தார்.

வேலு மேல் துண்டை எடுத்து மரியாதைக்காகப் புஜங்களில் வளைத்துக்கொண்டே , “ஆமா , பண்ணையை விடப் பெரிய பண்ணை இந்தச் செங்கட்டான் பட்டியிலே ரொம்பப் பேரல்ல இருக்காங்க?’ என்றான்.

மறுபடியும் பல்லவி ஆரம்பம்.

“ஆமடா, சக்கரையாப் பேசுவே இல்லே? போன வருசத்துக்குக் குத்தகைப் பணம் பாக்கி கிடக்குது. தீர்க்க வழியில்லே, போகிற இடம் வருகிற இடம்னு.”

“அது இல்லாமே எங்கிட்டுப் போயிருங்க? பருத்தி போட்டிருக்கேங்க. அந்த விளைச்சலை அப்படியே கொண் டிட்டு வந்து கொடுத்திரணும்னுதான் நேத்துக்குடச் சந்தணங்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேங்க. என்னப்பா , சந்தணம்?”

“வேலிக்கு ஓணான் சரியான சாக்ஷிதான் – தோப் புக்குக் கடவு எங்கேடா? மேற்கே இருந்தா?”

“இல்லீங்க. ஆட்டுக்காரப் பசங்க துரட்டுப் பண்ணு துங்கன்னு அடைச்சுப்புட்டேங்க. கிழக்காலே வாங்க” என்று சந்தணம் முன் ஓடிக் கடவு பிடுங்கிவிட்டு வழியில் கிடந்த முட்களை ஒதுக்கி எறிந்து தள்ளி நின்றான்.

அழுகைச் சப்தம் பலத்து வந்து விழுந்தது.

“மாமா, அதோ பாருங்க” என்று தோப்பை அடுத் துள்ள ஓடையின் மறுகரையைச் சுட்டிக் காட்டினேன்.

“இதுதான் இந்த ஊருக்கு மசானம்; இப்போ பேசிக்கொண்டிருந்தோமே, அந்தப் பையனைத் தகனம் செய்ய வந்திருக்கிறார்கள். சரி, நாம்ப மேற்கே போவோம். அவர்கள் போன பிறகு இங்கே வருவோம். கண்ணராவியைப் பார்க்காமே திரும்பு” என்று கால் களைத் திருப்பிக் கிழக்கு நோக்கிப் போட்டார்.

“அதான் சரீங்க. எதிர்க்க நின்னா மாதிரியாகத் தான் இருக்கும். வாங்க சாமி சின்னச் சாமி” என்று என்னை அழைத்த பிறகுதான் நானும் சேர்ந்து அடி எடுத்து வைத்தேன். அந்தத் தோற்றத்தையே அது வரையில் பார்த்துக்கொண் டிருந்து விட்டேன்.

முதல் தடவையாக மசானத்தை அப்போது தான் பார்க்கிறேன். நகரத்துத் தெருக்களில் பாடைகள், அழுகை, சங்கு, தம்பட்ட முழக்கங்களோடு எங்கேயோ மூலை திரும்பிப் போவதைத்தான் பார்த்திருக்கிறேன். வாழ்க்கை ஓய்ந்து போய் அலுப்பு ஆற்றிக் கொள்வதற் காக ஏற்படுத்தி இருந்த அந்த இடத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. விவரந் தெரியாத, ஆனால் மிகவும் கோரமான ஒரு கற்பனை தான் எனக்கு யூகம், கேள்வி இரண்டின் மூலமாகவும் பதிந்திருந்தது. அந்தக் கோர மான கற்பனையை நடப்போடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே நடந்தேன். சில எட்டுக்களுக்கு ஒருதரம் கண்மட்டும் திரும்பித் திரும்பி, அலறலும் கூட்டமும் நிறைந்த அந்த இடத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தது.

முதல் பார்வையில் ஓடையின் எதிர்க் கரையில் ஒரு மேட்டின் நடுவே அடுக்கி இருந்த விறகு எருக் களிடையே பளிச்சென்று தெரிந்தது, அந்தச் சின்ன உருவம். அடுத்த கண் வீச்சின் போது மேலே மேலே அதன்மீது எருக்களை அடுக்கிக்கொண் டிருந்தார்கள். ஐயோ! ஒவ்வோர் எருவும் அந்தச் சிறு உடலை மறைக்கும் போது எத்தனை குரல்கள் அலறித்துடித்தன! ஒவ்வோர் அலறலும் என்னைக் குலுக்கி எடுத்தது. சகிக்க முடியாமல், “என்ன கண்ணராவி இது!” என்று எல்லோருக்கும் முன்னால் காலடிகளை எட்டிப்போட் டேன். அழுகைக் குரல்கள் என் பின் மெதுவாகக் குறைந்து தங்கிவிட்டன. ஆனால் அந்தச் சித்திரம் மாத்திரம் என் கண்ணிலே தங்கிவிட்டது.

எத்தனையோ மேட்டுத் துண்டுகள் ஆற்றோரங் களிலும் ஓடைகளிலும் படிந்து கிடக்கின்றன. அவற்றின் மீது மிதித்துப் போயிருக்கிறேன். குப்பையும் கூளமும் சாம்பலும் அமோகமாகக் கிடக்கும். ஒருவித விசேஷமும் அவைபற்றின நினைவுகளில் சம்பந்தப்பட்ட தில்லை. அந்த மேட்டுத் துண்டுகளைப் போலத்தான் இதுவும் ஒன்று; மேடு பள்ளம் நிரம்பின மண் தரை. இதற்கு மட்டும் மசானம் என்ற தனிக்குறிப்பு எதற்கு?. ஆமாம். இதோடு சாவு சம்பந்தப்பட்டிருப்பதனால் தான்; மற்ற இடங்களோடோ வாழ்வு இணைக்கப்பட்டிருக்கிறது. அதுதான் வித்தியாசம். சந்தர்ப்ப பேதத்திலே அர்த்தம் கொடுக்கும், நாம் இட்ட காரணப் பெயர் அது.

வேறு எந்த விதத்தில் இயற்கையானது மசானத் துக்கும் அடுத்துள்ள இடங்களுக்கும் மாறுபாடு காட்டுகிறது? ஊருக்கு வெளியே தனித்து ஓடிவரும் இதே ஓடை ஊருக்குள்ளும் ஓடி வருகிறது. சாவு குடி இருக்கும் சின்ன மண்மேடு இந்த மசானம். என் வாழ்வு குடி இருக்கும் பெரிய மண்மேடு அந்தக் கிராமம். இயற்கையின் ஆதரவில் எந்த இடத்தையும் மசான மாகச் செய்து விடுவதில் என்ன கஷ்டம் இருக்கிறது?

“இதுதான் அம்பி, நம்ப பெரிய தோப்பு ஐயாயிரம் தென்னைக்குக் குறைச்சல் இல்லை” என்று தோப்பைக் காண்பிக்கும் மாமாவின் குரல் காதில் விழவும் மனத்தோடு பேசுவதை நிறுத்திச் சுற்று முற்றும் பார்த்தேன். தென்னந் தூறுகளிடையே வந்து கொண்டிருந்தோம்.

வேலு முன்னோடி இரண்டு தென்னங் கீற்றுகளை இழுத்து வந்து போட்டான். உட்கார்ந்து கொண்டோம். அண்ணாந்து பார்த்தேன். சிலந்திக் கூடுகள் போல் பசுந்தென்னோலைகள் பின்னி வீசிப் பரந்த மட்டை களுக்கு அடியில் மரத்தோடு ஒட்டிப் பச்சைப் பசேலெனக் குலை குலையாகச் சிறிதும் பெரிதுமாகக் காய்கள் தொங்கிக்கொண்டிருந்தன. தாக உணர்ச்சி உடடூன உண்டாயிற்று. “சீக்கிரம் இளநீர் போடச் சொல்லுங்க, மாமா” என்று அவசரப்படுத்தினேன்.

“இங்கே தோப்பு இல்லாட்டா” என்று மாமா சிரித்துக்கொண்டே கேட்டார்.

“அது வேறே கேள்வி” என்றேன்.

“எந்த மரத்துலே போட்ட்டுங்க?” என்று இடுப்பில் அரிவாளைச் செருகிக்கொண்டே சந்தணம் அண்ணாந்து பார்த்தான்.

“தோப்புக்காரன் – உனக்குத் தெரியாதா? போடு வளுக்கைப் பதமா.”

“முத்தினதா இருந்தா அப்புறம் பாத்துக்கோ” என்று நான் சேர்த்தேன்.

சந்தணம் மரத்தில் ஏறி இளநீர்களை வெட்டித் தள்ள, வேலு வெட்டிக்கொடுக்க, மாமாவும் நானும் மாறி மாறி உள்ளே தள்ளிக்கொண் டிருந்தோம். தொண்டை இனித்துக் குடல் குளிர்ந்தது.

திடீரென்று வேலு ஆரம்பித்தான் : “பாவம், செங் குளத்து ஐயரு பாடு இனிமே ரொம்ப – அம்பலமாப் போயிருச்சுங்க. அந்த ஒரே மவன் மேலே உசிரை வச்சுக்கிட்டு இருந்தாரு.”

இளநீர் சாப்பிடும் உற்சாகத்தில், அது உடலில் ஏறின குளுமையில், கொஞ்சம் மறந்திருந்த அந்தக் காட்சி மறுபடியும் ஞாபகத்துக்கு வந்து விட்டது.

“ஆமடா. அந்த மருமகன் வீட்டோடே வந்து இருந்து விடலாம்; ஐயருக்கு வேறு வழியில்லை” என்று மாமா தொடர்ந்தார்.

“நல்லதுக்கா மருமவன் வாச்சு இருக்கிறாரு! அவர் மூணே நாள்ளே எல்லாத்தையும் கொட்டை பரத்திட்டுப் போயிடுவாரு. ஊரிலே அவரைப்பற்றி என்னென்ன பேச்சுக் கிளம்புதுங்க” என்று சந்தணம் கலந்து கொண்டான்.

“இன்னைக்குத்தானா தெரியும்? வேணும் அந்த ஐயருக்கு! அன்னைக்கே நாலு சாத்துச் சாத்தி லஜ்ஜையை வாங்கிட்டு இருந்தா வழிக்கு வந்திருக்கும். அதை விட்டுப் போட்டு…” என்று மாமா இழுத்தார்.

“அதைச் சொல்லுங்க. அப்படிச் செய்துட்டு இருந்தா இந்தாத் தொலைக்கு வந்திருக்காதுங்க” என்று பண்ணையின் தீர்ப்புக்கும் நியாய உணர்ச்சிக்கும் பண்ணைக்காரச் சந்தணம் ஒத்து ஊதினான்.

“போகுது; அவனவன் தலை விதிப்படி நடக்கிறது. நமக்கு என்ன? ஆமாம், அந்த முருகங்குளத்துக் காணியை ராவுத்தர் விலைக்குப் பேசிக்கிட்டு இருக்கிறாராமே? அதை இழுத்துப் போட்டிடலாமா? என்ன யோசனை?” என்று பேச்சைச் சடாரென்று மறுபடியும் முறித்து எங்கேயோ திருப்பினார் பண்ணை. திடீர் திடீ ரென மாறின தோரணை காட்டுவது அவருக்கு எவ்வளவு சுளுவாக இருந்தது என்பது தான் எனக்குத் திகைப்பை ஊட்டியது வாஸ்தவம் : செங்குளத்து ஐயரின் பிள்ளை மரணம், அவர் குடும்பவிஷயம். அந்தப் பேச்சுக்கு அவ்வளவு அவகாசந்தான் கொடுக்க முடியும். மீதிநேரம் தம் குடும்பத்தின் சுகம், தம் சம்பந்தமான அக்கறை களுக்குத்தான். இது யதார்த்தந்தானே?

என் மனப்போக்கு இப்போதும் தன் வழியே தொடர்ந்தது. ஆனாலும் வெளி வார்த்தைகள் காதிலே வந்து தாக்கிக்கொண்டிருந்தன.

சந்தணம் கொஞ்சம் கிட்ட நெருங்கி மெல்லிய குரலில் இழுத்தான். “என் காதிலேயும் பட்டதுங்க. இணை சேர்ந்த நிலம்; ஒரே தாக்கா அமஞ்சு போயிருங்க; புரவிலேயே ஓங்கின கை நம்முது தான். எப்படியாவது முடிச்சுப்புடுங்க.”

கலகலத்த சிரிப்பு மாமா உதடுகளிலிருந்து வெளி வந்தது : “ஆமடா, உனக்கு இன்னும் இரண்டு காணி பார்வைக்கு வகையாகச் சேருதில்லே! சிபார்சு செய்ய மாட்டே? வேலு! சந்தணம் யோசனையைக் கேட்டியா?”

“சொல்றது சரிதாங்க. வாங்கிருங்க. காலத்துக்கு – நான் உழுதுப்படறேன்க” என்று வேலு கண்களைச் சிமிட்டிக்கொண்டே பல்லைக் காட்டிக் கூறினான்.

“பாருடா! அவனவன் தன் தன் பாட்டைப் பாத்துக்கப் பேசறான்; திருட்டுப் பயலுக!”

இருவரும் அசட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டு டார்கள். ”பண்ணை நிழல்லே.. நிக்காட்டி எங்களுக்கும் பிழைப்பு ஏது?” என்றான் வேலு.

“அதைச் சொல்லுங்க” என்று ஆமோதித்தான் சந்தணம்.

மாமா குரலை உயர்த்தி, “நிலமா! போங்கடா போங்க. கிஸ்திக்குப் பணம் இல்லே. களஞ்சியத்து நெல்லை ஏன்னு கேப்பாரில்லே. மேலைக்குத்தான் அதைப்பத்திப் பேச்சு. நெல்லு ஏறின விலைக்கு இப்போ போகல்லேன்னா…? சரி களத்திலே கட்டு வந்திருக்கும். போகலாம் வா, அம்பி” என்று துவடை உதறிக்கொண்டு எழுந்தார்; “சந்தணம், அங்கிட்டு எட்டிப்பாரு , அவுங்க போயிட்டாங்களான்னு. தோப்பைச் சுத்திப் பாத்துட்டுப் போவோம்” என்றார்.

சந்தணம் போய் வந்து, அவர்கள் போய் விட்டதாகச் சொன்னான்.

தோப்பைச் சுற்றிக்கொண்டு மேலைக் கோடிக்குப் போனோம். என் கண்கள் தாமாகத் தோப்புக்கு வெளியே பார்த்தன. சற்று முன் அலறல் நிறைந்து கிடந்த அந்த இடத்தில் அமைதி பதிந்து இருந்தது. அவர்கள் எல்லோரும் தங்களால் முடிந்தமட்டும் அழுது விட்டுப் போய்விட்டார்கள். இப்போது அங்கே ஒன்றி யாகக் கிடந்த உடலுக்குக் காட்டின மரியாதையும் அவ்வளவுதான்.

விறகும் எருவும் அரைகுறையாக முன்பு அடுக்கி இருந்த இடத்தில், பூரணமாக மேலே ஈரமண் அப்பி மெழுகி இருந்தது. லேசான புகைச் சுருள்கள் அதன் பக்கங்களில் வெளியேறிக்கொண்டிருந்தன. ஒன்றியாகக் கிடந்த உடல் என்று சொன்னேன் ; தவறு. இரண்டு உருவங்கள் ஏதோ முனகிக்கொண்டிருந்தன. வார்த்தை தெளிவில்லை செய்கை கண்களில் விழுந்து கொண் டிருந்தது. அந்தப் புது ஈர மண் மேட்டைச் சுற்றி வந்து புகை வரும் இடுக்குகள் வழியே குச்சியை விட்டுக் குத்திக்கொண் டிருந்தன ; உள்ளே கனியும் கனலைத் தூண்டி விடும் முயற்சி அது. பிணத்தின் சாந்தியைக் குலைக்கும் வேலையில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகத் தோன்றவில்லை. அதைப் பூரணமாக்கும் வேலையில் தான் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் வேலை அது.

இத்தனை பேரும் அலக்ஷியமாய் விட்டுப்போன உடல் அது. மசானத்தில் கொண்டு போட்டதோடு கூட இருந்து பழகின அத்தனை பேருடைய பொறுப்பும் தீர்ந்துவிட்டது. எங்கேயோ சம்பந்தமில்லாத இரண்டு ஜீவன்களிடம், மேற்கொண்டு அந்த உடலோடு உறவு கொண்டாடும் பொறுப்பைச் சுமத்திவிட்டுத் தம் தம் வேலையைக் கவனிக்கப் போய்விட்டார்கள். எரிந்து கிடக்கும் சாம்பலை மிகுந்த அக்கறையோடு பார்க்க நாளை வரப்போகிறார்கள். அதுவரை இந்த மேட்டிலே பழி கிடக்கும் இந்த இரண்டு உருவங்களும் சாம்பலைப் பத்திரமாக அவர்களிடம் ஒப்படைக்கப்போகின்றன.

என்ன அக்கறையடா இவர்களுக்கு; விசித்திரம்!

என் நடையிலே, மசானம் என்ற அந்த மேடு என் முதுகுக்குப் பின் விழுந்து கொண்டிருந்தது.

பண்ணை பார்க்கும் பள்ளிக்குக் களத்துச் சிந்து மணி’யில் கவனம். காளிமுத்தனுக்கும் உழுபடைக் கவுண்டனுக்கும் பண்ணையோடு உறவு கெடாதிருப்பதில் சிரத்தை. மிராசுதார் மாமாவுக்குக் குத்தகை ஜரூராக வசூலாவதிலும், நிலம் இணை சேர்ப்பதிலும் அக்கறை. சந்தணத்துக்கு இன்னும் இரண்டு காணி பார்வைக்குச் சேருவதில் ஆத்திரம். வேலுவுக்கு நிலம் உழுவதில் ஆசை. பொசுக்க வந்த கூட்டத்துக்கு வீடு திரும்பும் அவசரம். எனக்கு இளநீர் சாப்பிடுவதில் உற்சாகம் என்று வைத்துக்கொள்ளுங்களேன் – இப்படி அவ னவன் பாடு அவனவனுக்குப் பெரிது. சின்ன ஆத்மா பிரிந்ததில் ஒன்றிற்கும் குந்தகம் ஏற்பட்டதாகத் தெரிய வில்லை. ஆனால் இந்த இரண்டு ஆத்மாக்களுக்கு மட்டும் அதைக் கரை யேற்றுவதில் இவ்வளவு அக்கறையா? இவ்வாறெல்லாம் மறுபடியும். நிழலோட்டம். எட்டி நடந்தோம் களம் நோக்கி.

திடீரெனப் பின்னாலே ஓர் ஒற்றைக் குரல் வெடித்துக் கிளம்பியது.

“மாயப் பிரபஞ்சத்தில் ஆனந்தம் வேறில்லை.”

அந்த இடமே எதிரொலித்தது. எங்கிருந்து என்று அறியத் திரும்பப் போனேன்.

“வஞ்சமில் லாதமெய்க் காதல் அல்லாதில்லை” என்று இரண்டு குரல்கள் ஜதையாக முடித்தன.

பிரமித்துப் போய் நின்றேன். அந்த ஆனந்த கீதம் மண் மேட்டிலே பிணத்தைக் குத்திக்கொண்டிருந்த அவ்விரண்டு உருவங்களின் உச்சரிப்பு. என் பிரமிப்பு அடங்கு முன்னரே அடுத்து எத்தனையோ வரிகள் மளமளவென்று காற்றில் கலந்து விட்டன.

பிரபஞ்சம் மாயம்: சந்தேகம் இல்லை. வேதாந்தம் அந்தத் தத்துவத்தை வேண்டிய மட்டும் மூளையில் திணித்திருக்கிறது. ஆனால் எது ஆனந்தம்? சாவா? சாவாக இருந்தால் பொருத்தந்தான். ஓய்வில் ஆனங் தந்தானே! இல்லை, இத்தனை பிணங்களையும் குத்திக் குத்திச் சாந்தி கொடுக்கும் அந்த ஜீவன் களின் வேலையில் ‘ஆனந்தமா? – அதுவும் சரிதான். உணர்ச்சிக்கு இடம் கொடுத்து, வரும் பிணத்துக்கெல்லாம் கண்ணீர் விட்டுக்கொண் டிருக்க அந்த ஜீவன்களுக்கு அவகாசம் கிடையாது. மரமரத்துப்போன யந்திரவேலை அவர்களுடையது. வேலையில் உற்சாகம் வேண்டும், அலுப்புத் தெரியாதிருக்க. அந்த உற்சாகத்திலே உதட்டிலிருந்து கிளம்புகிறது பாட்டு. அவ்வளவு தான். முதலடி அந்த இடத்திலிருந்து தனித்து வந்து விழுந்திருந்தால் பொருத்தமற்றதாகச் சொல்லமுடியாது. ஆனால் அந்த இரண்டாவது அடியோடு கலக்கவும் எவ்வளவு அசந்தர்ப்பமாகிவிடுகிறது! சாதல் குடி இருக்கிற இடத்தில் காதலின் ஸ்தானத்தை நிர்ணயிக்கிறது; மசான பூமியினின்று காதலர் சோலையை உண்டாக்கி விடுகிறது, கற்பனை உள்ளத்தில். இந்த நினைப்பில் என் உள்ளம் சிலிர்த்தது. இயற்கையின் பகைப்புலத்தில் என்ன முரணான சித்திரம்!

உழன்றேன் ; அதன் மறு பக்கம் நினைவுக்கு வந்தது. வாஸ் தவம்! சாதலுக்கும் காதலுக்கும் இயற்கை ஒரு விதமான பார பக்ஷமும் காட்டுவதில்லை. அதன் அணைப் பில் தான் காதல் பிறக்கிறது. நிலவும் தென்றலும் மணமும் குளுமையும் காதல் போதையைச் சிருஷ்டிக் கின்றன. சாவுக்கும் இயற்கை தான் தாய். மூச்சு நிற்றலும் காற்றுப் போக்கின் தடையும் சக்தியின் ஓய்வும் சாதல் மயக்கத்தைச் சிருஷ்டிக்கின்றன. இந்தத் தென்னந்தோப்பிலே காதல் கூவும் பக்ஷி! எதிர் மேட்டிலே சாதல் ஓலமிடும் ஜ்வாலைத் தீ! – எல்லாம் இயற்கையின் பகைப் புலத்தில்!

ஆனாலும் சாவின் எதிரில் காதலை நினைக்கவே முடியவில்லை.

இவ்வளவு எல்லாம் முரண்பாட்டை நினைத்து நான் குழம்பினேனே. எதிரே இருந்த குரல்கள் அந்த வரிகளைக் கொஞ்சமாவது சிந்தித்து உச்சரித்திருக்குமா? நிச்சயமாக இருக்கவே இராது. பிரமாதமாக அவர்கள் காட்டும் அக்கறையைச் சிலாகித்துப் பேசினேனே; அது எவ்வளவு தப்பு! அவர்களுக்கும் பொறுப்பில்லை. அவர்கள் செய்வது ஒரு முறை வேலை, ஊதியத் தொழில், பள்ளி, காளிமுத்தன், கவுண்டர், மிராசுதார் மாமா, சந்தணம், வேலு, நான் இவாளைப் போன்றவர்களே அவர்களும். இது தான் வாழ்க்கை.

– ஸரஸாவின் பொம்மை (கதைகள்), முதற் பதிப்பு: 1942, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *