வாசகனும் எழுத்தாளனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 4,664 
 

இடம்: பம்பாய்

நாள்: 01.01.1970

எழுத்தாளர் கமலனாதன் அவர்களுக்கு உங்கள் “கற்பனையில் வாழும் மனிதர்கள்” என்னும் சிறு கதையை படித்தேன். மேலாக வாசித்ததில் நன்றாக இருந்தது. ஆனால்.அந்த சிறு கதையில் நீங்கள் என்ன சொல்ல வந்திருக்கிறீர்கள் என்று என்னை போல வாசகர்களுக்கு புரியும்படி இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நன்றாக இருக்கிறது என்று சொல்லி விட்டு புரியவில்லை என்று எழுதி இருப்பதால் கவலை வேண்டாம். இந்த கதையில் அந்த பெண் தன் கணவனின் ஆடம்பர செலவுகளினாலும், குதிரை பந்தயம், சீட்டாட்டம்,சூதாட்டம் இவைகளால் அவன் கெட்டழிவதை கண்டு மனம் பொறுக்காமல் கடைசியில் மனம் வெதும்பி தற்கொலை செய்து கொண்டாள். இது எல்லோருக்கும் புரிந்திருக்கும். ஆனால் நீங்கள் இந்த சமுதாயத்துக்கு சொல்ல வருவதென்ன? கடைசியில் வாழ்க்கையை முடித்துக்கொள்வதுதானா?

இப்படிக்கு

வாசகன் தமிழ் செல்வன்

இடம்: கோயமுத்தூர்

நாள் : 15.01.1970

வாசகர் தமிழ் செல்வன் அவர்களுக்கு நன்றி ! எனது சிறு கதையை படித்ததற்கு.என் கதையை படித்து விட்டு இந்த கதையில் சமுதாயத்திற்கு என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டிருக்கிறீர்கள். இந்த கதையில் வரும் நாயகியை நான் பெரிய தைரியசாலியாக காட்டி இருந்தால் கதையின் போக்கை மாற்றி இருக்க முடியும்.இன்னொன்று கதாசிரியன் கதையை நகர்த்தும்போது அதன் முடிவை வாசகன் எப்படி ஏற்றுக்கொள்வான் என்றுதான் சிந்திக்கிறான்.அதனால் சமுதாயத்திற்கு அறிவுரை சொல்லும்படி கதையை நகர்த்துவது சில நேரங்களில் நடப்பதில்லை.

இடம்:பம்பாய்

நாள் :03.03.1980

திரு கமலநாதன் அவர்களுக்கு, நமது முதல் கடிதத்திற்கு, பிறகு இந்த பத்து வருடங்களாக பத்திரிக்கைகளில் வரும் உங்களுடைய கதைகளை படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஒரு சில நேரங்களில் கதையை யதார்த்தமாய் முடித்தாலும்,ஒரு சில முடிவுகளை அசாதாரணமாய் முடிக்கிறீர்கள். இப்படி முடிக்குபோது வாசகர்கள் ஏற்றுக்கொள்வார்களா, மாட்டார்களா என்று யோசித்து பார்த்த்துண்டா? உங்களது கதையான “இவள் பெண்” என்னும் கதையில் மனைவி தன் கணவன் கையில் அவன் கட்டிய தாலியை கொடுத்து விட்டு வெளியேறியதாக முடித்து உள்ளீர்கள்.இது ஒரு விதத்தில் புரட்சி என்று சொன்னாலும், அதை வாசகர்கள் ஏற்றுக்கொண்டார்களா? வெளியேறியவள் என்ன செய்யப்போகிறாள், அல்லது இந்த செயலுக்காக அவள் சார்ந்த சமுதாயம் அவளை எப்படி பார்க்க போகிறது என்பதை எப்படி அனுமானிப்பீர்கள்.

இப்படிக்கு

வாசகன் தமிழ் செல்வன்

இடம்:கோயமுத்தூர்

நாள் : 20.03.1980

வாசகர் திரு.தமிழ்செல்வன் அவர்களுக்கு, பத்து வருடங்களுக்கு முன்னால் நீங்கள் எழுதி இருந்த கடிதத்தில் கதையின் முடிவை இப்படி முடித்து விட்டீர்களே? என்று கேட்டிருந்தீர்கள். இந்த முறை கதையின் நாயகி கோபம் தாளாமல் கணவன் கட்டிய தாலியை அவன் கையிலே கொடுத்து விட்டு சென்று விட்டாள் என்று முடித்ததையும் சமுதாயம் என்ன சொல்லும்? என்று கேட்டிருக்கிறீர்கள். அன்று சொன்னதுதான் இன்றும் சொல்கிறேன், அன்றைய காலகட்டத்தில் பெண்ணின் முடிவு அப்படி.. இன்றைய கால கட்டத்தில் இவள் எடுக்கும் முடிவு இப்படி.. இதில் அடுத்து என்ன செய்வாள் இந்த சமுதாயத்தில் என்ற கவலை எழுத்தாளனுக்கு வந்து விட்டால் கதையை அவனால் நகர்த்தவே முடியாது. ஏனெனில் சமுதாயம் எப்படி வாழ்ந்தாலும் குறைகளை சொல்லிக்கொண்டேதான் இருக்கும்.இது என் கருத்து மட்டுமே. அதனால் கதையின் முடிவு என்பது அதன் போக்கே தவிர சமுதாயம் எடுக்கும் முடிவு அல்ல.

நன்றி !

இப்படிக்கு

எழுத்தாளன் கமலக்கண்ணன்.

இடம்: மும்பை

நாள் : 12.02.1990

வணக்கம் எழுத்தாளர் கமலக்கண்ணன் அவர்களுக்கு !

இப்பொழுதெல்லாம் உங்கள் கதைகளை அதிகம் பத்திரிக்கைகளில் பார்க்க முடிவதில்லை.

புதிய புதிய எழுத்தாளர்கள் நிறைய பேர் வந்து விட்டதால், உங்கள் கதைகள் பிரசுரிக்கபடுவதில்லையா? இல்லை நீங்களே எழுத்திலிருந்து ஒதுங்கி விட்டீர்களா? உங்களது கடைசி கதையை நான்கு வருடங்களுக்கு முன்னால் படித்த ஞாபகம் “வாழ்க்கை” என்று பெயரிட்டிருந்ததாய் ஞாபகம்,அதில் கொஞ்சம் சோகமான முடிவாக இந்த முறை ஆண் வீட்டை விட்டு போவதாக முடித்து இருந்தீர்கள். எப்பொழுதும் பெண்ணை பற்றியே எழுதிய நீங்கள் திடீரென ஆண்களை பற்றி எழுத ஆரம்பித்து விட்டீர்கள்? நான் சென்னைக்கு அடுத்த

வருடம் மாற்றலாகி வர உள்ளேன். வரும்பொழுது கோயமுத்தூர் வந்து உங்களை சந்திக்க ஆசைப்படுகிறேன்.

நன்றி

இப்படிக்கு

வாசகன் தமிழ் செல்வன்

இடம் :கோயமுத்தூர்

நாள்:20.02.1990

உங்களது கடிதம் கண்டேன். மிக்க மிக்க மகிழ்ச்சி கொண்டேன். இன்னும் இந்த எழுத்தாளனையும் ஞாபகம் வைத்து வாசகர்கள் கடிதம் எழுதுகிறார்களே. மிக்க நன்றி நண்பரே.

நீங்கள் ஏன் எழுதுவதில்லையா என்று கேட்டிருந்தீர்கள், அது போல் புது புது எழுத்தாளர்கள் வந்து விட்டதாலா? என்ற கேள்வியையும் தொடுத்திருந்தீர்கள்.

வாழ்க்கையில் மாற்றங்கள் மட்டுமே மாறாது இருக்கும்.இதன் பொருள் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். மாற்றங்களை ஏற்றுக்கொண்டு நாமும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பாதையில் போய்க்கொண்டே இருக்க வேண்டும். இதை அனுபவத்தில் புரிந்து கொண்டவன் சமாளித்துக்கொள்கிறான். புது புது எழுத்தாளர்களை இரு கரம் கூப்பி வரவேற்போம்,மற்றபடி கதை எழுதுவதில்லையா? என்றும், ஆண்களை பற்றி எழுதி இருந்தீர்கள் என்றும் கேட்டிருந்தீர்கள்.

உண்மைதான், நான் கதை எழுதி நான்கு வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. காரணம் அடுத்த பதிலில் உங்களுக்கு புரியும், எந்தவொரு ஆணின் இயக்கத்துக்கும் காரணம் பெண்தான் என்பது உலக நியதி என்பது என்னை பொறுத்த வரை உண்மை. நான்கு வருடங்களுக்கு முன்னால் என் மனைவி என்னை விட்டு மறைந்து விட்டாள். அதன் பின் ஆண் என்பவன் இந்த சமுதாய்த்தில் பரிதாபத்துக்குரியவன் ஆகி விடுகிறான். அதை உறுதிப்படுத்தத்தான் அந்த கதையில் ஆணை மையப்படுத்தினேண். அதன் பின் கதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டேன்.

என்னை ஞாபகம் வைத்து கடிதம் எழுதியதற்கு மிக்க நன்றி !

அன்புடன்

எழுத்தாளன் கமலக்கண்ணன்.

பழைய வீடாய் சுண்ணாம்பை கண்டு நீண்ட நாட்களாகி இருந்த அந்த வீட்டின்

எதிரே ஒரு கார் சம்பந்தமில்லாமல் வந்து நின்றதை கண்ட அங்கு விளையாண்டு கொண்டிருந்த சிறுவர்கள் கூட்டமும், அங்கங்கு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த ஆண் பெண்கள், கூட்டமும், ஆவலுடன் அந்த காரருகில் வர அதிலிருந்து ஐம்பது வயது மதிக்கத்தகுந்த ஒருவர் பளீரென்று வெண்மை பளிச்சிடும் வேட்டி சட்டையுடன் இறங்கினார்.

இங்க கமலக்கண்ணன் வீடு? சுற்றியுள்ளவர்களை பார்த்து கேட்டார்.

யாரு? அந்த வயசான அய்யனையா கேட்கறீங்க? எப்ப பார்த்தாலும் எழுதிகிட்டு உட்கார்ந்திருப்பாரே அவருதானே. நீங்க நிக்கறீங்களே அந்த வீடுதான், ஆனா அய்யன் போன மாசமே இறந்துட்டாருங்க. அவரு பையனும், அவன் சம்சாரமுந்தான் இருக்குது, அவங்க இரண்டு பேரும் வேலைக்கு போயிட்டாங்க. அந்த ஆத்தா செத்ததுக்கப்புறம் எப்ப பார்த்தாலும் அந்த அய்யனை கரிச்சு கொட்டிகிட்டே இருப்பாங்க, அவரு என்னதான் செய்யமுடியுங்க, அந்த அந்த ஆத்தா இருந்த வரைக்கும், அவருக்கு மேலுக்கு, துடைச்சு,எல்லாத்தையும் பாத்துட்டு இருந்துச்சு. ஆத்தா போன பின்னாலே மனசு விட்டு இதா இந்த திண்ணையிலதான் படுத்து கிடப்பாருங்க.

வீட்டின் நிலைமையை பார்த்து அவரின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று எண்ணி கண்ணில் எட்டி பார்க்கும் கண்ணீரை யாரும் அறியா வண்ணம் துடைத்தவாறு மீண்டும் அந்த காரில் ஏறினார் தமிழ் செல்வன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *