வசந்தியின் நட்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 30, 2019
பார்வையிட்டோர்: 12,911 
 

வசந்தி நீண்ட காலத்துக்குப் பின்னர் தனது ஆருயிர்த் தோழி சுந்தரவள்ளியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். பாடசாலைப் பருவத்தின் அந்த இனிய நாட்கள் இன்னும் பசுமையாக அவள் மனதில் பதிந்து போயிருந்தன. அவள் எத்தனையோ முறை அவளைச் சென்று பார்த்துவிட்டுவந்துவிட வேண்டுமென்று யோசித்தாலும் அவளுக்கிருந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் அந்த யோசனை தள்ளிக் கொண்டே போகிறது. அவர்கள் அந்த விசாலமான பெரு நகரத்தின் இரண்டு மூலைகளில் வாழ்ந்தார்கள். இருந்தாலும் ஒருவரை ஒருவர் சந்திக்க ஒரு மணித்தியால நேரமே பிடிக்கும். என்றபோதும் அவர்களால் சந்தித்துக் கொள்ள முடியாமலேயே இருந்தது.

சுந்தரவள்ளியை கடைசியாகப் பார்த்து சுமார் பத்து வருடங்கள் இருக்கும். எவ்வாறு அவளைப் பார்க்காமல் இத்தனை வருடம் தம்மால் இருக்க முடிந்தது என்பதை நினைத்துப் பார்க்கும் போது அவளுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது.

அவர்கள் பாடசாலைக் காலத்திலும், அதற்குப் பின்னரும் கூட இணைபிரியாத நல்ல நண்பர்களாக இருந்தனர். கோயிலுக்கோ வேறு உற்சவங்களுக்கோ, கொண்டாட்டங்களின் போதோ அவர்களை அனைவரும் சேர்த்து பார்த்து இது என்ன நட்பு என்று வியந்திருக்கின்றனர். பல்வேறு பிரச்சினைகளின் போது அவர்கள் இணைந்தே எதிர்கொண்டு ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருந்தனர். இதனால் வாழ்க்கை மிக
சந்தோஷமாகவும், எளிமையானதாகவும் நகர்ந்து கொண்டிருந்தது.

ஆனால் அவர்கள் இருவருமே பராயமடைந்த இளம் பெண்கள். திருமணம் முடிக்க வேண்டியவர்கள். அவர்கள் வீட்டார்கள் அவர்கள் இருவருக்குமே திருமணம் முடித்து வைக்க ஏற்பாடுகள் செய்யத் தொடங்கினர். முதலில் சுதந்திர வள்ளிக்கே திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவள் வேறு வழியின்றி கணவனுடன் வசிக்க நகரத்தின் வேறொரு ஒரு பிரதேசத்திற்கு செல்ல வேண்டி ஏற்பட்டுவிட்டது. அவள் தன் நண்பி வசந்தியிடம் மிகச் சோகத்துடன் பிரியாவிடை பெற்றுக்கொண்டாள். அவர்கள் இருவரும் எப்படியாவது அடிக்கடி சந்திக்க வேண்டுமென்று தமக்குள் முடிவெடுத்துக் கொண்டனர். அப்படி சந்தித்துக் கொள்ளவும் செய்தனர். தமது சுக துக்கங்களை பகிர்ந்தும் கொண்டனர்.

இப்படி இருக்கும் போதுதான் வசந்தியின் திருமணம் நிகழ்ந்தது. அந்தத் திருமணத்தின் போது சுதந்திரவள்ளி முன் கூட்டியே வந்திருந்து எல்லா
ஒத்தாசைகளையும் செய்தாள். சுதந்திரவள்ளியைப் போலவே வசந்தியும் நரகத்தின் மற்றுமொரு பிரதேசத்தக்கு அவளின் கணவனிக் குடும்பத்துடன் வசிக்கச் சென்று விட்டாள். அதற்குப் பின்னர்தான் அவர்களிடையே இடைவெளி ஏற்படத்தொடங்கியது.

அவர்கள் இப்போது இரண்டு குடும்பத்தினர் ஆனார்கள். சுதந்திரவள்ளிக்கு மூன்று குழந்தைகளும், வசந்திக்கு இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.

இக்காலத்தில்தான் அவர்கள் நட்பில் தளர்ச்சி ஏற்பட்டது. அவர்கள் இருவருக்குமே குடும்பச்சுமைகள் அதிகரித்தன. கணவனதும் பிள்ளைகளதும்
தேவைகளை கவனிக்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை. கணவன்மார்கள் வேலைக்குப் போவதற்கு உதவுதல், பிள்ளைகளை தயார்படுத்தி பாடசாலைக்கு அனுப்புதல், உணவு தயாரித்தல், வீட்டை ஒழுங்குபடுத்துதல், பிள்ளைகள் பாடசாலை முடிந்து வந்த
பின்பு டியூசனுக்கு அனுப்புதல் என இப்படி அன்றாடம் வேலைகள் தலைக்குமேல் குவிந்துபோயின.

அவர்கள் இந்த வேலைகளில் மூழ்கிக் கிடந்தபோது வெளியுலகத்தையே மறந்திருந்தனர். நட்புப்பாராட்டி ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளக்கூட அவர்களுக்கு நேரங்கிடைக்கவில்லை. நேரடி சந்திப்புக்கள் படிப்படியாக குறைந்துபோக தொலைபேசியில் மாத்திரமே இடைக்கிடை பேசிக்கொண்டனர்.

காலவோட்டத்தில் அதுவும் குறைந்துபோய் ஒரு கட்டத்தில் அவர்களிடையேயான தொடர்பு முற்றிலும் அற்றுப்போனது. அவர்கள் தமக்கிடையே முறிந்து போன உறவை மீண்டும் தாபித்துக்கொள்ள மனதளவில் முயற்சித்தபோதும் அது தொடர்பான தீர்மானங்கள் சந்தர்ப் சூழ்நிலைகளால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தன.

ஆனால் ஒருவருடைய நினைவு மற்றவர் மனங்களில் முற்றாக அற்றுப் போய்விடவில்லை. அவை அவ்வப்போது நீறுபூத்த நெருப்புப்போல் புகைந்து கொண்டுதான் இருந்தன.

சுந்தர வள்ளியை விட வசந்தியே தன் நண்பி மீது மிகுந்த பாசமும் நட்பும் கொண்டிருந்தாள். சுந்தர வள்ளி ஏன் தன்னுடன் பேசாமல் இருக்கிறாள் என்று நினைத்தபோது அவள் மீது கோபம் கோபமாய் வரும் சிலவேளை தானும் பதிலுக்கு பேசக்கூடாது என்று மனதுக்குள் கனங்கணம் கட்டிக் கொள்வாள். ஆனால் இத்தகைய கோபங்கள் அதிக நாள் நீடிப்பதில்லை. அவளுக்கு என்ன பிரச்சினைகளோ என்று எண்ணி மனதை சமாதானப்படுத்திக் கொள்வாள். என்ற போதும் அண்மைக் காலமாக அவர்கள் இருவருமே ஒருவருடன் ஒருவர் பேசிக் கொண்டதுமில்லை. சந்தித்துக் கொள்வதற்கு முயற்சித்ததுமில்லை.

அவர்களது நட்பை அறிந்தவர்கள் து தொடர்பில் ஆச்சியப்பட்டார்கள். அவர்கள் வசந்தியையோ, சுந்தர வள்ளியையோ சந்தித்த போது வசந்தியானால் சுந்தர வள்ளியைப் பற்றியும் சுந்தரவள்ளியானால் வசந்தியைப் பற்றியும் விசாரித்தார்கள். ஆனால் அவர்கள் அண்மைக்காலத்தில் வசந்தியும் சுந்தரவள்ளியும் சந்தித்துக் கொள்வதில்லை என்று அறிந்ததுமே வியப்படைந்து ”என்ன நடத்தது” என்று விசாரித்து விசனப்பட்டார்கள். அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் தான் வசந்தியின் மண்டையில் எப்படியாவது சுந்தர வள்ளியைப் போய் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டுமென்பது உரைத்தது. அதனால் இவ்வளவு நாளைக்கு பிறகு தொலைப்பேசியில் அழைத்து அவளை சமாதானப்படுத்துவது தமது நட்பைக் கொச்சைப் படுத்துவதாக இருக்கும் என்று கருதினாள். ஆதலால் எப்படியாவது நேரில் சென்று சந்தித்து விடுவதே நல்லது என்றும் கருதி அதற்கு ஒரு நாளை தேர்ந்தெடுப்பதற்காக சுவரில் தொங்கிய நாட்காட்டியை நோக்கினாள்.

அவள் அந்த காரியத்தை செய்வதற்காக அடுத்துவரும் போயா தினத்தைத் தேர்ந்தெடுத்தாள். அந்தத்தினத்துக்காக அவள் மிக ஆவலுடன் காத்திருந்தாள்.

அவள் இவ்வளவு நீண்ட காலத்துக்குப் பின் தன் உற்ற நண்பியை சந்திக்கச் செல்வதால் வெறுங்கையுடன் செல்லக்கூடாது என்பதற்காக சிலப்பரிசுப் பொருட்களையும் பிள்ளைகளுக்கு சில தின்பண்டங்களையும் வாங்கி வைத்துக் கொண்டாள்.

அன்று அவள் மிகவும் சந்தேசமாகக் காணப்பட்டாள். அதிகாலையிலேயே எழுந்திருந்து வீட்டு வேலைகள், கணவன் மற்றும் பிள்ளைகளின் வேலைகள் எல்லாவற்றையும் முடித்து வைத்துவிட்டு உற்சாகத்துடன் புறப்பட்டாள்.

பஸ்சேறிச் செல்வதைவிட முச்சக்கர வண்டியில் போவது வசதி என்று நினைத்து தெரிந்த வண்டியொன்றை அமர்த்திக் கொண்டாள். போகும் வழியெல்லாம் சுந்தரவள்ளியுடனான தனது பழைய நட்பின் குறித்த சம்பவங்களை மீட்டுப் பார்த்து குதூகளித்தவாறே சென்றாள்.

சுந்தரவள்ளி வசித்த வீடு அவளுக்கு பழக்கப்பட்டதென்றபோதும் அண்மைக்காலமாக சில மாற்றத்துக்குட்பட்டிருந்தது.

இருந்தும் அதனை அடையாளம் கண்டு முன் கதவை சென்றடைந்தாள். கதவில் போடப்பட்டிருந்த பெரிய பூட்டொன்றே அவளை வரவேற்றது. ஏமாற்றமடைந்த வசந்தி சுற்றுமுற்றும் பார்த்தாள். அந்த வீட்டில் அண்மைக்காலமாக யாரும் வசித்ததற்கான அடையாளமொன்றையும் காணவில்லை. வேறு வீட்டிற்கு சென்றிருக்கக் கூடும் என்று கருதிய வசந்தி அது பற்றி விசாரிக்க அடுத்த வீட்டுக்குச் சென்றாள்.

அடுத்த வீட்டில் வசித்தவர்கள் வசந்திக்கு பரிச்சயமானவர்கள்தான். அங்கிருந்த வீட்டுக்காரம்மா வாங்க வசந்தி உங்களுக்கு ஒரு விசயமும்
தெரியாதா? சுந்தரவள்ளி இறந்து போய் மூன்று மாதங்கள் ஆகின்றன. நெஞ்சு வலி வந்த ஆஸ்பத்திரிக்கு போகும் வழியிலேயே அவள் உயிர் பிரிந்து போய் விட்டது. அவளது கணவனும் பிள்ளையும் அவங்க அம்மா விட்டுக்கே போய்ட்டாங்க”

வசந்திக்கு இந்த செய்தியை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. யாரோ திடீரென அவள் தலையில் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. அவளால் அசையக்கூட முடியவில்லை. அப்படியே அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்து தலையைப் பிடித்துக் கொண்டாள். இவ்வளவு நாள் அவளை வந்து பார்க்காதது எவ்வளவு தவறு என்று அவள் மனம்வருத்தப்பட்டது. அவள் கண்களில் இருந்து நீர் பொல பொலவென உதிர ஆரம்பித்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *