மார்த்தாண்டத்திலிருந்து களியக்காவிளை நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் வேகமாய் போய்க் கொண்டிருந்தான் விமல்.
வழியில் குழித்துறை ஸ்டாப்பில் பஸ்ஸுக்கு காத்துநின்ற ஒருவன் லிஃப்ட் கேட்டு வழி மறித்தான். விமலின் கால்கள் பிரேக்கை தொடாமலேயே அவனைக் கடந்து போனது.
வீட்டில் வந்ததும் தனது மனைவியிடம் நடந்த நிகழ்வுகளை பட்டியலிட்டபோது வழியில் லிஃப்ட் கேட்ட விஷயமும் சேர்ந்து கொண்டது.
“ஏங்க… அவருக்கு லிஃப்ட் குடுத்திருக்கலாமில்ல… இதெல்லாம் ஒரு மனிதாபிமானம் தானே… இத ஏன் செய்ய மாட்டேங்கறீங்க…?’ செல்லமாய் கடிந்து கொண்டாள் அவனது மனைவி.
“மனிதாபிமானம் இல்லாம இல்ல.. அவன் லிஃப்ட் கேட்டு நின்ற இடம் ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு பஸ் வந்து போற இடம், இதுவே ஒரு மணி நேரத்துக்கு ஒரு பஸ் வர்ற இடமா இருந்தா நிச்சயம் லிஃப்ட் கொடுத்திருப்பேன். டிக்கெட் செலவ மிச்சப்படுத்துறதுக்காக லிஃப்ட் கேட்கிறவங்களுக்கு உதவறதுக்கு பேரு மனிதாபிமானம் இல்ல…!’
தனது கணவர் சொல்வதும் சரிதான் என்று மௌனமாகவே விழி தாழ்ந்தாள் அவரது மனைவி.
– மார்ச் 2013
Nice