கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 12,691 
 

கல்யாண விநாயகர் கோவில் எதிரில் ஒரு நடுத்தரமான வீடு. அந்த வீட்டின் முன்புறம் விசாலமான காலியிடம். அந்தக் காலியிடத்தில் வரிசையாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த வீட்டினை ஒட்டிய இடத்தில் ஒரு தனியார் வங்கியும் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அந்த வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் வந்த இரு சக்கர வாகனங்கள்தான் அந்த வீட்டின் முன்புற காலியிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக தினமும் யாரிடமாவது உரத்த குரலுடன் சப்தம் போடுவது வழக்கமாகக் கொண்டிருந்தான் பட்டதாரி சம்பத்குமார்.

அன்றும் அப்படித்தான் ஒருவர் வங்கியில் தான் வந்தவேலை முடிந்து, சம்பத்குமார் வீட்டிற்கு முன்பு நிறுத்தியிருந்த தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு இருக்கும்போது , அப்போது தற்செயலாக வீட்டிற்கு வெளியே வந்த சம்பத்குமார் ,வேகமாக வந்து இரு சக்கர வாகனத்தை மறித்து நின்றான். இரு சக்கர வாகனத்துகுரியவருக்கு நாற்பது வயது இருக்கும்.

அவர் “ என்ன தம்பி வண்டியை எடுக்க முடியாமல் , மறித்து நிற்கரே. நீ யார் ? “ என்று அமைதியாகத்தான் சம்பத்குமாரைப் பார்த்துக் கேட்டார்.

“நான் யாரா ?! இந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் , தினமும் இதே எனக்கு வேலையாய்ப் போச்சு . எங்க வீட்டுவாசலை மறித்து இப்படி எங்க வீட்டுக்கு முன்னாடி இப்படி வரிசையாக வண்டியை நிறுத்திடுறாங்க . இது என்ன வாகனக் காப்பகமா? இதே தொந்தரவாப் போச்சு. ஏனய்யா இங்க வண்டியை நிறுத்தினே…”

“ தம்பி. நான் என்ன உங்க வீட்டுக்குள்ளே வந்து நிறுத்தியிருப்பதுபோல கோபப்படரயே, என்னோட வண்டியை யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் வெளியேதானே நிறுத்தியிருக்கேன்” என்று அவர் அமைதியாகத்தான் பதில் சொன்னார்.

“ என்னய்யா பேசுறே எங்க வீட்டுக்கு முன்னாடி உள்ள இந்தக் காலியிடம் எங்களுக்கு சொந்தமானது. நீங்க வீட்டுக்குள்ளே வேறு வந்து நிறுத்துவீங்களா ! ” என மேலும் சம்பத்குமார் உரக்கக் கத்தினான்.

மேலும் அவனிடம் பேசினால் தனக்குத்தான் அவமானம் என அந்தப் பெரியவர் தனக்குள் நினைத்துக்கொண்டு அமைதியாக வண்டியை எடுத்துச் சென்றுவிட்டார்.

சம்பத்குமாரின் தந்தையார் சிறு விவசாயி. ஆனால் பெருங்குடும்பம். அவருக்கு சம்பத்குமார் மூத்த மகன் மற்றும் திருமணத்திற்கு காத்திருக்கும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர் தனது மகனை மிகவும் கஷ்ட்டபட்டுத்தான் எம்.காம். வரை படிக்க வைத்தார். தந்தை கஷ்ட்டப்பட்டு தன்னைப் படிக்க வைத்ததை நினைத்து ,தான் படித்து முடித்தவுடன், வேலைக்குச் சென்று விடலாம் என சம்பத்குமார் நினைத்திருந்தான்.

அவன் பட்டப்படிப்பு முடித்து ஆறு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அவனும் பல இடங்களுக்கு மனுப் போட்டும், தனியார் நிறுவனங்களிலும், வேலைக்காக ஏறி இறங்கியும் அவனுக்கு அலுத்து விட்டது. அவன் வேலை கிடைக்காமல் விரக்தி அடைந்ததைப் பார்த்து, அவனுடைய அப்பா தினமும் ஆறுதல் கூறிக் கொண்டுதானிருந்தார். இருந்தாலும் விரக்தியின் மிகுதியில், தன்னோட வீட்டிற்கு முன் நிறுத்தும் இரு சக்கர வாகனக்காரர்களிடம் , அவன் ஏதாவது வம்புக்கிழுத்து கத்திக்கொண்டே இருப்பான். அப்போதெல்லாம் அவன் தந்தை வந்து அவனது கோபத்தைத் தணித்து சமாதானப்படுத்துவார்.

அன்றும் அப்படித்தான் சம்பத்குமார் வீட்டை விட்டு வாசலுக்கு வரும்போது, ஓர் இளைஞர் தன் இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து சம்பத்குமார் வீட்டின் முன்பாக நிறுத்தப் போனான். அப்போது அங்கே வேகமாக வந்த சம்பத்குமார் “ சார் இங்கே வண்டியை நிறுத்தக்கூடாது ” எனக் கூறித் தடுத்தான்.

அந்த இளைஞரும் மெதுவாக “ சார் பாங்கில் ஒரு வேலை, பத்து நிமிடத்தில் முடிந்து விடும். நான் வந்து உடனே வண்டியை எடுத்துக் கொள்கிறேன் ” என்றான்.

அவன் கூறியதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் “சார் எங்க வீட்டுக்கு முன்பாக வண்டியை நிறுத்தக்கூடாது. இந்தக் காலியிடம் எங்களுக்குச் சொந்தமானது. வண்டியை வேறு எங்கேயும் கொண்டு போய் நிறுத்துங்கள்” எனக் கத்தினான்.

அந்த இளைஞனுக்கு உடனே கோபம் வந்து விட்டது. “உங்க காலியிடம்னா . ‘பென்ஸ்’ போட்டு இருக்கணும். ‘பென்ஸ்’ போட்டால் யாரும் இங்க வந்து என்னை மாதிரி வண்டியை நிறுத்த மாட்டங்க “ என பதிலுக்கு கத்த ஆரம்பித்தான்.

“ ஆமா துரைகள் வந்து வண்டியை நிறுத்தக்கூடாதுன்னு பென்ஸ் போடுவாங்க. மிஸ்டர் அநாவசியமாக பேசாமல், வண்டியைக் கொண்டு வேறு இடத்தில் நிறுத்துங்கள்.” எனக் கத்தினான்.

இருவருக்கும் வாக்குவாதம் அதிகமானதை கண்டு சிறு கூட்டமே கூடி, வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது. கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் சம்பத்குமாரைப் பார்த்து “தம்பி அவர்தான் வண்டியை அரைமணி நேரத்திலே வந்து எடுத்துக் கொள்கிறேன்னு சொல்றாரில்லே. சரி உங்க இடம்தான் உங்களுக்கும் போக வர இடஞ்சல்தான் , நீங்க சொல்வதிலும் நியாயம்தான்” என சமாதானப்படுத்தும் நோக்கில் பேசினார்.

சம்பத்குமார் “ அய்யா அவர் என்ன சொல்றார்னு பாருங்க. நான் அவர் வண்டியை நிறுத்தக்கூடாதுன்னா பென்ஸ் போடணுமாம் அப்பத்தான் அவர் வண்டியை இங்கே நிறுத்தமாட்டாராம் என்கிட்டே வந்து சட்டம் பேசுறார். அதனாலே அவர் வண்டியை இங்கே நிறுத்தக்கூடாது “ என்று சம்பத்குமார் பிடிவாதம் பிடித்தான்.

அப்போது அவ்வழியே வந்த தனியார் வங்கி மேலாளர் கூட்டத்தை விலக்கி விட்டு, வாக்குவாதம் செய்து கொண்டிருந்த சம்பத்குமாரிடம் என்ன விபரம் எனக் கேட்டார். சம்பத்குமார், வங்கி மேலாளர் என்பதால் மரியாதையுடன் அவரிடம் அந்த இளைஞன் தன்னிடம் பேசியதையெல்லாம் ஒன்றுவிடாமல் எடுத்துக் கூறினான்.

வங்கி மேலாளர் சம்பத்குமார் கூறியதையெல்லாம் கவனமாகக் கேட்டு விட்டு , இரு சக்கர வாகனத்தை வைக்க வந்த அந்த இளைஞனைப் பார்த்து “ தம்பி வண்டியை இங்கு வைத்து விட்டுப் போங்கள். நான் இவரிடம் பேசிக்கொள்கிறேன். “ என்று சமாதானப்படுத்தி, அந்த இளைஞரை அனுப்பி வைத்தார். அந்த இளைஞர் இரு சக்கர வாகனத்தை வைத்து விட்டுச் சென்றவுடன், வேடிக்கை பார்த்தக் கூட்டமெல்லாம் கலைந்து சென்றது.

அந்த இளைஞரும் கூடிய கூட்டமும் சென்ற பிறகு வங்கி மேலாளர் சம்பத்குமாரிடம் ,அவன் படிப்பு வேலை மற்றும் அவன் குடும்ப சூழ்நிலை அனைத்தையும் விசாரித்து விட்டு, சம்பத்குமாரிடம் வேறு எதுவும் பேசாமல் “ தம்பி இன்று ஈவினிங் ஆறு மணிக்கு மேலே நீங்க என்னைப் பாங்குக்கு வந்து பாருங்க “ என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார்.

சம்பத்குமார் வேகமாக வீட்டிற்குள் ஓடினான். அவன் சந்தோஷத்துடன் தந்தையைப் பார்த்து “அப்பா நம்ம வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் பாங்க் மானேஜர் நான் இன்னிக்கி சாயந்திரம் அவரை வந்து தவறாமல் பார்க்கும்படி கூறியிருக்கிறார். நான் அவரை நம்ம வீட்டு வழியாக செல்வதை அடிக்கடி பார்த்திருக்கிறேன்.அனேகமாக அவருடைய வங்கியில் அவர் செல்வாக்கிலே எனக்கு வேலை ஏதாவது போட்டுக் கொடுப்பார்ன்னு நெனைக்கிறேன்.” என்று கூறினான்.

சம்பத்குமார் தனக்கு எப்படியும் பாங்க் மானேஜர் மூலம் அல்லது அவர் செல்வாக்கினால் வேலை கிடைத்து விடும் படித்த படிப்பு வீண்போகவில்லை என மனதிற்குள் கற்பனையை வளர்த்துக் கொண்டான். தனக்கு வேலை கிடைத்தவுடன் முதலில் வீட்டுக்கு முன்னால் பென்ஸ் போட்டு விடவேண்டும். அப்போதுதான் இந்த இரு சக்கர வாகனங்கள் வீட்டுக்கு முன்னாடி நிறுத்தும் தொந்தரவு இல்லாமல் இருக்கும். என்று அவன் யோசித்துக் கொண்டு இருக்கும்போது, அவன் அம்மா சாப்பிட அழைத்தபோதுதான் தன் நினைவுக்கு வந்தான்.

அவன் சாப்பிட்டு முடிந்தவுடன் தான் இதுவரை படித்த சான்றிதழ்களை வரிசையாக எடுத்து அடுக்கி வைத்தான். மணியைப் பார்த்தான் மணி ஐந்தைக் காட்டியது. அப்போது கடிகாரம் மெதுவாக ஓடுவதுபோல் அவனுக்கு தோன்றியது.

சம்பத்குமார் அன்று மாலை ஆறு மணியானதும் வங்கி மேலாளரை சான்றிதழ்களுடன் சென்று பார்த்தான். வங்கி மேலாளர் சம்பத்குமாரைப் பார்த்தவுடன் புன்முறுவலுடன் அவனை எதிரில் இருக்கும் நாற்காலியில் அமரும்படி கூறினார். அவன் கொடுத்த சான்றிதழ்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தார்.

சான்றிதழ்களை பார்த்துக்கொண்டே “ மிஸ்டர் சம்பத்குமார் நீங்க ஏன் சுயதொழில் செய்யக்கூடாது. எல்லாருமே கவர்மெண்ட் வேலையை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கலாமா ! நீங்கள் சுயதொழில் செய்தால் உங்கள் மூலம் ஒரு சில பேருக்காவது நீங்கள் வேலை கொடுக்கலாமே “ என்று விளக்கிக் கூறினார்.

“ சார் சுயதொழில் செய்ய வேண்டுமெனில் சிறிய முதலீடுக்காவது பணம் வேண்டுமே மேலும் என்னைப் பொறுத்தவரை எந்தவிதத் தொழிலும் எனக்குத் தெரியாது “ என்று சம்பத்குமார் வெளிப்படையாகப் பேசினான்.

“ சம்பத்குமார் உங்க வீட்டு முன்னாடி டூ வீலர்ஸ் நிறுத்தி இடைஞ்சல் பண்ணுகிறார்கள் என்று நீங்க நினைப்பது, அவர்கள் மீது கோபப்படுவது எல்லாமே , உங்களுக்கு ஒரு வேலையோ , ஒரு வருமானமோ இல்லாத விரக்தியில்தான் அப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. நீங்களே அதைக் கொஞ்சம் சிந்தித்து மாத்தி யோசித்துப் பாருங்களேன்.

உங்க வீட்டு முன்பாக போதுமான காலியிடம் இருக்கு. அதில் ஒரு டீக்கடையை ஒரு டீ போடத் தெரிந்தவரை வைத்து ஆரம்பிக்கலாமே.” என்று யோசனை கூறினார்.

“ ஏன் சார் என்னை டீக்கடையை ஆரம்பிக்கச் சொல்கிறீர்கள் எனக்குப் புரியவில்லையே “

“ எங்க வங்கிக் வரும் வாடிக்கையாளர்கள் எல்லாம் இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் போய்த்தான் டீயோ காபியோ சாப்பிட வேண்டியிருக்கு. ஏன் எங்க பாங்க் ஸ்டாப்களுக்கு எல்லாம் அவ்வளவு தூரம் போய்த்தான் டீயோ காபியோ வாங்கி வந்து அவர்களுக்கு கொடுக்கிறார்கள்.”

“ மேலும் இந்த வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் உங்க வீட்டு முன்னாடி டூ வீலர்களை நிறுத்தி விட்டு டீயோ காபியோ கண்டிப்பாக சாப்பிட்டு விட்டு செல்வார்கள். அதனால் உங்களுக்கும் டீக்கடையில் வியாபாரம் நல்ல லாபத்தில் ஓடும். அப்போது உங்களுக்கும் டூ வீலர்கள் உங்க வீட்டு முன்னால் வைப்பது இடஞ்சலாகத் தோன்றாது. மாறாக சந்தோசப்படுவீர்கள். என்ன சம்பத்குமார் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ” என்று நீண்ட விளக்கம் வங்கி மேலாளர் கொடுத்தார்.

‘வங்கி மேலாளர் கூறியபடி நான் ஏன் மாத்தி யோசிக்காமல் இதுவரைக்கும் இருந்து விட்டேன். நல்லவேளையாக, இப்போதாவது என்னை வங்கி மேலாளர் மாத்தி யோசிக்க வைத்து விட்டாரே, அதை நினைத்து சந்தோசப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான் ‘ என்று சம்பத்குமார் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது…..

“ என்ன சம்பத்குமார் “ வங்கி மேலாளர் குரல் கொடுத்த பிறகுதான் தன் நிலைக்கு வந்த சம்பத்குமார் அவரிடம் “ சார் நீங்க சொன்னபடி டீக்கடை ஆரம்பிக்க முடிவு செய்து விட்டேன். என்னை மாத்தி யோசிக்க வைத்த உங்களுக்கு ரெம்ப நன்றி சார் “ என நம்பிக்கையுடன் எழுந்து சென்றான்.

– ஜனவரி 2017 பாக்யா தமிழ் வார இதழில் பிரசுரமானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *