”குருவே, எனக்கு சில லட்சியங்கள் இருக்கின்றன. அவற்றை அடைவது எப்படி?” என்று ஆர்வமாய் கேட்ட இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.
“லட்சியங்களை அடைய நீ என்ன செய்திருக்கிறாய்?” என்று கேட்டார்.
“என்ன செய்வதென்று தெரியவில்லை” என்று சொன்ன இளைஞனுக்கு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார் குரு.
‘ஜப்பானில் ஒரு இளைஞன் இருந்தான். அவனுக்கு மோட்டார் தொழிலில் ஆர்வம். இயந்திரங்களை சரி பார்க்கும் திறமை அவனிடம் இருந்தது. அந்த சமயம் ஜப்பானில் டோயோட்டா கம்பெனி துவக்கப்பட்டு பிரபலமாகிக் கொண்டிருந்தது. இளைஞனுக்கு அந்த கம்பெனியில் பணி புரிய வேண்டும் என்று ஆசை. அங்கே வேலைக்கு விண்ணப்பித்தான்.நேர்காணலுக்கு அழைத்தார்கள். இளைஞனும் சென்றான். ஆனால் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. திறமை போதாது என்று அனுப்பிவிட்டார்கள். இளைஞனுக்கு வருத்தம்தான். ஆனால் மனம் தளரவில்லை. மேலும் சில நிறுவனங்களில் முயற்சி செய்தான். சிலவற்றில் அவனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. சிலவற்றில் வேலை கிடைத்தது. ஆனால் அவன் லட்சியத்துக்கு ஏற்றவாறு இல்லாததால் அந்த வேலைகளை விட்டான். அப்போது அந்த இளைஞனுக்கு நாமே மோட்டார் வாகனங்களை உருவாக்கினால் என்ற எண்ணம் தோன்றியது. வீட்டிலே சின்ன பட்டறையை நிறுவி இரு சக்கர வாகனத்தை உருவாக்கி விற்றான். மெல்ல அவன் இருந்த பகுதியில் அவனது இரு சக்கர வாகனங்கள் பிரபலமாக தொடங்கியது. தனது சிறு பட்டறையை கொஞ்ச கொஞ்சமாய் விரிவுப்படுத்தினான்.
இன்று அவனது நிறுவனம் உலகம் முழுவதும் பல கோடிகளை சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. அந்த இளைஞனின் பெயர் சோய்ச்சிரோ ஹோண்டா. அவன் உருவாக்கிய நிறுவனம் உலகப் பிரசித்திப் பெற்ற ஹோண்டா நிறுவனம்.
ஒரு முறை இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு காரணம் என்ன என்று கேட்டபோது அதற்கு ஹோண்டா சொன்ன ஒரே வார்த்தை பதில் முயற்சி.’
இந்த சம்பத்தை குரு சொன்னதும் தனது லட்சியத்தை அடைய நினைக்கும் இளைனனுக்கு தான் செய்ய வேண்டியது என்ன என்பது புரிந்தது.
அப்போது குரு அவனுக்கு சொன்ன WINமொழி: மனம் தளராத முயற்சி வெற்றிகளைக் கொடுக்கும்.
– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)