புகையின் பின்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 15, 2019
பார்வையிட்டோர்: 6,854 
 

பக்கத்தில் இருந்த அமுதனின் கையை வினோதன் சுரண்டினான். வேலை முடித்துப் போகும் களைப்பில் அந்தரித்த அமுதனுக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. இன்று மத்தியானம் அவன் சாப்பிட நேரம் கிடைக்கவில்லை. ஒரு நாளும் மறக்காத, மீறாத செயலை இன்று அமுதன் மீறிவிட்டான். அது அவனுக்குத் தன் மீதே அளவு கடந்த கோபத்தைத் தந்தது. கோபத்திற் குமைந்தவனை வினோதன் சுரண்டினான். அந்தச் சுரண்டல் ரௌத்திரமாய்ப் பற்றிக் கொண்டது.

எரிச்சலோடு ‘என்னடா?’ என்ற வண்ணம் வெறுப்பும் கோபமும் இறுகிப் பிணைந்த பார்வை ஒன்றை அவன் மீது அனல் தெறிக்க வீசினான். அமுதனுக்கு நுனி மூக்கில் கோபம் என்பதுவினோதனுக்குத் தெரியும். அவன் அமுதனின் கோபத்தை அலட்சியப் படுத்திய வண்ணம் கண்ணால் வெளியே பார்க்குமாறு சைகை காட்டினான்.

அந்த நீலநிற றாம் தரிப்பில் நின்றது. றாம் வந்து நின்றவுடன் சாரதி இறங்கும் முன்பே வினோதனும் அமுதனும் அதற்குள் ஏறிவிட்டார்கள். அதன் பின்பு சாரதி இயந்திரத்தைநிறுத்திவிட்டார். இயந்திரத்தை நிறுத்திவிட்டால் கதவுகள் மூடிக்கொண்டுவிடும். மீண்டும் இயந்திரம் இயங்கும் போதுதான் அவை திறக்கும். அது ஓர் பெரிய மருத்துவமனைக்கு முன்பு இருக்கும்தரிப்பிடம். இங்கு இரண்டு பாதையால் செல்லும் வேறு வேறு எண்களைக் கொண்ட றாம் தரித்து நிற்கும். இப்பொழுது பதினேழு வந்து நின்றவுடனேயே அமுதனும் வினோதனும் பாய்ந்துஏறிவிட்டார்கள். கதவு சாத்தப்பட்ட பின்பு இருக்கையில் இருந்த வண்ணம் இருவரும் விடுப்புப் பார்த்தார்கள். அப்பொழுது வினோதன் எதையோ கண்டுவிட்டான். அத்தால் அமுதனின் கையை அவன் சுரண்டினான்.

மருத்துவமனைக்கு முன்பு நிற்கும் இந்த றாம்களில் பயணிக்கும் பலவித மனிதர்கள். அதில் யாரைக் கண்டதால் வினோதன் சுரண்டினான் என்பது அமுதனுக்கு விளங்கவில்லை. பசியில் கோபம் மட்டும்பாம்பு சீறுவதாய்ச் சீறியது.இந்த றாமில் ஏறுவதற்கு சூட்கேஸ் பெட்டிகளுடன் காத்திருக்கும் சில நோயாளிகள். அவர்கள் சில நாட்கள் தங்கியிருந்து வைத்தியம் செய்ததற்கான அடையாளம் அது. அன்று வந்து அன்றேசெல்லும் நோயாளிகள் பலர். வருத்தமான பிள்ளைகளைக் கூட்டிவரும் பெற்றோர்கள் பலர். முதியோரைக் கூட்டிவரும் தாதிகள் சிலர். மருத்துவமனையில் வேலைசெய்யும் மனிதர்கள் பலர். அவர்கள் மட்டுமே ஐந்தாயிரத்தைத் தாண்டும் என்கிறார்கள். இந்த மனிதர்களின் கலவை றாம் கதவு திறப்பதற்காய் காத்திருந்தது.

இயந்திரம் நிறுத்தப்பட்டு றாம் கதவு பூட்டிய பின்பு அது புறப்படுவதற்கு எழு நிமிடங்கள் இருப்பதாக மின் எண்களை நேர அட்டவணைப் பலகை காட்டியது. அந்த அவகாசத்தில் அவசர அவசரமாய் புகையை இழுத்து விடும் மனிதர்கள். மருத்துவமனைக்குள் புகைபிடிக்க முடியாது. இதுதான் அவர்களுக்கு இன்று கிடைத்த முதல் சந்தர்ப்பம் போன்ற அவதி அவர்களிடம்.

வினோதன் மீண்டும் அமுதனின் கையைச் சுரண்டினான்.

‘ச்…’ என்கின்ற எரிச்சலோடு அமுதன் அந்தத் திசையை திரும்பிப் பார்த்தான்.

அங்கே நின்றவர்களில் அனேகர் சுதேசிகள். அவர்கள் புகைப்பது ஒன்றும் விசித்திரம் இல்லை. ஒரு ஆபிரிக்காப் பெண்ணும் புகைத்தாள். அதுவும் அடிக்கடி பார்க்கும் காட்சிதான். அதற்கு மத்தியில் ஒரு தமிழ்ப் பெண். அவளை இரண்டாவது முறையாக அவன் இந்தக் கோலத்தில் பார்க்கிறான். இந்த மருத்துவமனையில் பல தமிழ்ப் பெண்கள் வேலை செய்கிறார்கள். குங்குமப் பொட்டு மறந்த முகங்களை அவன் அதிகம் கண்டதில்லை. குங்குமப் பொட்டுடன் ஒரு முகத்தைப் பார்த்தாலே அவனுக்குச் சகோதர உணர்வு வந்துவிடும்? அவர்கள் முகங்களில் நாம் நாடு கடந்தாலும் எங்கள் விழுமியங்கள் குங்குமப் பொட்டுக்களாய் நிலைத்திருந்தன. பொட்டு வைத்தால் இங்கு கேள்வி பிறக்கும். அதற்கு என்ன அர்த்தம் என்று சுதேசிகள் கேட்பார்கள். அந்த அசௌகரியத்திற்காய் பொட்டு வைக்காத தமிழிச்சிகளும் உண்டு. பொட்டுக்குப் பின்னும் பூதங்கள் பதுங்கலாம் என்கின்ற எண்ணமும் சிலவேளை அவனுக்கு வருவதுண்டு. அப்படி என்றால் யாரைத்தான் நம்புவதென தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொள்வான் அமுதன்.

இரண்டு ஆசனம் தள்ளி அமர்ந்து இருந்த தேவி அமுதனை பார்த்துச் சிரித்தாள். அவள் புகை பிடிப்பதில்லை. குங்குமப் பொட்டு இல்லாமல் வேலைக்கு வந்தது கிடையாது. அவளைப் பார்க்கும் போதெல்லாம் அமுதனுக்குச் செல் விழுந்து செத்த அக்காவைப் பார்ப்பது போலவே இருக்கும். அமுதனும் சிரித்தான்.

வெளியே நிற்பவளுக்கு என்ன பெயர் என்பது அமுதனுக்குத் தெரியாது. முதல் நாள் அவளை அந்தக் கோலத்தில் பார்த்தது தொடக்கம் அவளைப் பார்க்கவே அமுதனுக்குப் பிடிப்பதில்லை. அவளும் யாருடனும் வலிய வந்து கதைப்பதில்லை. சிகரெட் புகைக்கும் தமிழ் பெண்ணோடு மற்றைய தமிழ்ப் பெண்கள் நட்பை விரும்புவதில்லை. தங்களையும் அவளைப் போல் பார்த்து விடுவார்களோ என்கின்ற நடுக்கம். அந்தப் பெண் தனது சுதேசத் தோழியோடு மட்டும் ஏதோ கதைப்பாள். இப்பொழுதும் ஏதோ சுவாரசியமாய் கதைத்துக் கொண்டு நிற்கிறாள்.

அவள் நல்ல நிறம். அழகிய வட்ட முகம். துரு… துருவெனப் பாயத் துடிக்கும் மீன்கள் போன்ற அவள் கருவிழிகள். சிகரெட் புகையால் கறுக்கப் போகும் அவள் சிவந்த மெல்லிய இதழ்கள்.

கயிறாகத் திரித்து வைத்திருக்கும் தலைமுடி. ஜீன்ஸ். முழங்கால் வரையும் நீண்ட ஜெக்கெற். அதற்குள் என்ன அணிந்திருக்கிறாள் என்பது அமுதனுக்குத் தெரியாது. அப்படியான பூதக்கண்ணாடி அவன் கையில் இப்போது இல்லை. குதி உயர்ந்த சப்பாத்து. நெற்றியில் பொட்டுக் கிடையாது. கலியாணம் செய்தவளா? செய்யாதவளா? அதுவும் வெளிச்சமில்லை. என்னவாக இருந்தால் எனக்கு என்ன? என அமுதன் எண்ணினாலும் அவளைப் பார்ப்பதை வெறுத்தாலும், பார்வை அவளை அடிக்கடி நோட்டமிட்டது. அதை அவனால் தடுக்க முடியவில்லை.

வினோதன் காட்டிய திசையில் அவள் நின்றாள். கையிலும் வாயிலும் புகை. இறங்கிச் சென்று மென்னியில் குத்தவேண்டும் போன்ற கோபம் முதலில் வந்தது. நோர்வேக்கு வந்தவுடன் இவர்களுக்கு தாங்களும் ஐரோப்பியர் என்கின்ற நினைவு. காகம் பாலிற் குளித்துக் கொக்காகும் முயற்சியென அமுதன் தனக்குள் நினைத்துக் கொண்டான்.

அவள் காசு, அவள் சுதந்திரம். அவள் புகைத்தால் என்ன? குடித்தால் என்ன? எண்ணிய அமுதன் தனது வெப்பியாரத்தை மறைக்க வினோதன் மீது பாயத் தாயாரானான்.

‘என்னதான் நோர்வேக்கு வந்தாலும் நாங்கள் தமிழர் எண்டதை மறந்து ஆடக்கூடாது.’ என்றான் வினோதன்.

‘ஆடினா உனக்கு என்ன? உன்னால என்ன செய்ய முடியும்?’

‘நான் என்ன செய்ய முடியும். எங்கட கலாச்சாரம்…?’

வினோதனுக்குத் தொண்டை கட்டிக்கொண்டது போன்ற அதிர்ச்சி. அழுது விடுவானோ என அமுதனுக்குப் பயமாக இருந்தது. வினோதன் நாட்டிற்காக வீரமரணத்திற்குச் சென்றவன். வீரமரணம் சந்திப்பதற்கு முன்பே விலகி வந்து விட்டான். காணாமல் போகும் கல்லறைகளில் ஒன்றாக அவன் சரித்திரம் முடியவில்லை. இந்த மருத்துவமனையின் களஞ்சியம் அவனது வேலைத்தளம் ஆகியது. இனி நோர்வேயில் கல்லறை அவனுக்காக எழும். இன்று எங்களுக்கு நாடில்லை. உரிமை இல்லை. எங்களுடன் கொண்டு வந்த கலாச்சாரமும் சாயம் கலையும் பழைய உடுப்பாகிப் போய்விட்டது என்கின்ற அந்தரம் அவனுக்கு.தமிழீழக் கற்பனையில் வாழ்ந்த அவனால் தமிழர் என்கின்ற அடையாளத்தையே காற்றில் பறக்கவிடும் நாள் வந்த ஆற்றாமை. அதுவும் எங்கள் கண்முன்னே எங்கள் குலப் பெண்களால் அழிக்கப்படுவதான சினம். ஆண்கள்? அவன் அவர்கள் பற்றி கதைப்பதில்லை. அவனும் ஆணாய் இருப்பது அதற்குக் காரணமாய் இருக்கலாம்.

‘மண்டையில போடோணும்.’ என்று முணுமுணுத்தான் வினோதன். கண்ணகிப் பார்வை ஒன்றை அமுதன் வினோதன் பக்கம் செலுத்தினான்.’மண்டையில போட்டு யாற்ற மயிரப்பிடுங்கினியள்? எங்களை நாங்களே மொட்டையடிச்ச மாதிரி ஒரு போராட்டம். அதுல படிச்சிருக்கிற ஒண்டே ஒண்டு இந்த மண்டேல போடுகிறதுதான்.’

‘அது பெரிய விசயம். அதைவிடு அமுதன். இவள் இப்பிடிச் செய்யலாமே?”கோழி களவெடுத்தவனுக்கெல்லாம் மண்டையில போட்டதைவிட இது ஒண்டும் பெரிய விசயம் இல்ல.’ என்றான் அமுதன். அமுதன் விடாது வினோதனின் ரோச நரம்புகளைச் சுண்டினான். அவன் கோபம்யாரில் என்பது வினோதனுக்கு விளங்கவில்லை.

‘நீங்கள் எல்லாம் அவங்களைப் பற்றிக் கதைக்கக் கூடாது. வேலையால போற நேரம் உன்னோட நான் கதைச்சிருக்கக் கூடாது.’ வினோதனிடம் கோப நாதம் கொஞ்சம் எழுந்தது.’எல்லாத்துக்கும் தொடர்புண்டு.’ என்றான் அமுதன்.

‘அவள் பத்துறத்துக்கும் எனக்கும்?’ வினோதன் விளங்காது கேட்டான்.

‘ம்…’

வினோதன் திரும்பி அவளைப் பார்த்தான். மீண்டும் அமுதனை விசித்திரமாய்ப் பார்த்தான். அவள் சுதேசப் பெண்ணொருத்தியுடன் நின்ற வண்ணம் புகைப்பதும் கதைப்பதுமாய் சந்தோசித்தாள். அவள் ஒரு முறை ஓரக் கண்ணால் இவர்களைப் பார்த்தாள். இவர்கள் தன்னைப் பார்ப்பதையும் குசுகுசுப்பதையும் அவள் அவதானித்துக் கொண்டாள். நீங்கள் யார் என் சுதந்திரத்தில் தலை நுளைக்க என்பதான திமிருடன் அவள் ஆழமாய் புகைத்தாள். இரசனையோடு அதை வெளியே விட்டாள்.வினோதன் மீண்டும் புகைந்தான். அமுதனிடம் வாய் திறந்தால் மீண்டும் வள்ளென்று விழுவான் என்பது தெரியும். றாம் சாரதி தனது ஆசனத்திற்கு வந்தான். உயிர் பெற்றுக்கொண்ட றாம் கதவுகள் திறந்தன. அவள் அவசரமாகச் சிகரெட்டின் தலையை நசித்துக் கொலை செய்தாள். பாய்ந்து வந்து றாமில் ஏறிக்கொண்டாள். இங்கு அண்ணை றைற் சொல்லுவதற்கு ஆள் கிடையாது. கதவுகள் சாத்தப்பட்டதும் றாம் புறப்பட்டது. இந்த றாமில் இரண்டு நிறுத்தங்கள் மட்டும் பிரயாணம். அதன் பின்பு சுரங்க இரதத்திற்கு மாறவேண்டும்.

வேலை அவசரத்தில் மத்தியானம் அமுதன் சாப்பிடவில்லை. கட்டாயம் சாப்பிட்டிருக்க வேண்டும். அமுதனுக்குத் தலை சுற்றுவது போல இருந்தது. மயக்கம் வருவதான அவஸ்தை. வினோதனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

‘தலை சுத்துதடா?’ என்றான்.

‘மத்தியானம் சாப்பிட்டியா?’

‘இல்லை. தலை சுத்துதடா.’

வினோதன் தேவி அக்கா என்றான். அவள் திரும்பிப் பார்க்கவில்லை. அவனுக்குக் கோபம் வந்தது. பல்லை நறுமிக் கொண்டான். அமுதன் அவஸ்தைப்பட்டான். அவள் இவர்களை நோக்கி வந்தாள். வினோதன் அவளைப் பார்த்தான். மனதிற்குள் முதேவி என்றான். அவள்,

‘நான் சீக்கபிளையர். இவருக்கு என்ன வருத்தம் இருக்கெண்டு தெரியுமா?’ என்றாள்.

‘ம்… சுக்கர் சீக். மத்தியானம் சாப்பிடேல்ல.’ என்றான் வினோதன்.

அவள் அவசரமாக ஒரு மிட்டாய் எடுத்து அமுதனின் வாயில் திணித்தாள்.

றாம் அடுத்த நிறுத்தத்தில் நின்றது.

தேவி அக்கா அவசரமாக இறங்கி ஓடினா. புருசா சேவகம் செய்வதற்கான ஓட்டமா? கொக்கென்று நினைத்தாயா என்கின்ற கேள்வியா? வினோதன் வெறுப்போடு தேவியக்கா ஓடுவதைப் பார்த்தான். அவள் அமுதன் றாமைவிட்டு இறங்குவதற்கு உதவி செய்தாள். அமுதனின் நிலைமை சகஜம் ஆகியது. அமுதனை அவள் பார்த்தாள். பின்பு சிரித்த வண்ணம்,

‘அண்ண ஒரு இனிப்புப் பக்கேற் வாங்கிப் பொக்கெற்றுக்க வைச்சிருங்கோ.’ என்று சிரித்த வண்ணம் கூறினாள். அமுதனின் கைக்குள் இன்னும் ஒரு இனிப்பைத் திணித்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *