ரமா, நான் போய் வருகிறேன், என தனது மனைவியிடம் சொல்லிவிட்டு தனது இரு சக்ர வாகனத்தை உருட்டிக் கொண்டு வேலை நிமித்தமாக புகை வண்டி நிலையம் செல்கிறார். முரளி.
முரளி, மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர், தனது பயிற்று விக்கும் திறமையால், பல மாநிலங்கள் சென்று கற்று, மனித ஆற்றலை பெருக்கும் கலையை கை வரப் பெற்றவர். தற்போது காரைக்குடியில் அமைந்துள்ள சுமார் ஐநூறு நபர்கள் வேலை செய்யும் தொழில் நிறுவனமான Ram Tech என்ற கம்பெனியில், HR ஹெட் ஆக பணியில் சேரப் போகிறார்.
திங்கள் கிழமை.. விடியற்காலை ஐந்தரை மணி…..
ரயிலைப் பிடித்தாக வேண்டும் எனும் அவசரத்தில் கடைத் தெருவில் சென்றுக் கொண்டு இருந்தார்.
வழியில் பிள்ளையார் கோவிலில் நின்று வழிபாடு செய்ய எத்தனிக்கும் போது, பளீர் உடையில் ஒரு பெரியவர் வயது 65 இருக்கும், முரளி முன் வந்து..
சார், ரயில்வே ஸ்டேஷன் ,எங்க இருக்கு? என்றார்.
வாங்க, நானும் அங்கேதான் போகிறேன். என்றுக் கூறி அவரையும் அமர வைத்து கிளம்பினான்.
மெளனமாய் நகர்ந்தன..
திடீரென நாய்கள் இரண்டு குறைத்துக் கொண்டே இவர்களது வாகனத்தை விரட்ட ஆரம்பித்தன.
வண்டியை நிறுத்திய பின்னும் குறைத்துக் கொண்டே இருந்தன.
புகை வண்டி நிலையம்..வந்ததும் இறங்கிக் கொண்டார் பெரியவர்.
காலை நேர ரயிலைப் பிடிக்க அவரவர் அவசரமாய் போய்க் கொண்டு இருந்தனர்.
முன்பதிவு பிரிவில் இருக்கையைத் தேடி அமர்ந்துக்கொண்டு, தனது குறிப்புகளை எடுத்து பார்க்கலானான். முரளி.
நிலைய வாசலில் இறக்கி விடப்பட்ட பெரியவரும், அதே கோச்சில் ஏறி இவனின் பக்கத்தில் அமர்ந்தார்.
சார், நீங்களா?
நானும் காரைக்குடிதான் போகனும்.
ஓ..அப்படியா!
நீங்க என்ன விஷயமாப் போறிங்க?
சொன்னான் முரளி.
ரொம்ப சந்தோஷம். அந்த கம்பெனி பற்றி எனக்கு நல்லா தெரியும்.
ரொம்ப நாட்களாக, சிறப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் பல நிறுவனத்திலே அதுவும் ஒன்னு.
ஆனா, வேலைப் பார்ப்பவர்கள் அனைவரும் தொழிலாளி, முதலாளி வேற்றுமை இல்லாமல் பழக கூடியவர்கள்.
நல்ல சம்பளம், வசதிகள் பெற்று குடும்ப உறுப்பினர் போல இருப்பாங்க!
அவங்க கிட்டே மட்டும் நீங்க அன்பா பழகினா அவ்வளவுதான்..அந்த கம்பெனியே உங்களுடையது மாதிரி ஆகிடும். வாழ்த்துக்கள்,
எனக் கூறிக் கொண்டு இருக்கையில், டிக்கெட் பரிசோதகர் வந்து சென்றார்.
முரளி படித்தபடி இருக்க, காரைக்குடி நிலையம் வந்து இருந்தது..
இறங்கி நடக்க முற்பட்ட முரளி..
தன்னுடன் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு வந்த நபரைக் காணலையே? என யோசித்தபடி,
சரி அவர் பெயரையாவது பார்ப்போம் என பெட்டியின் வாயிலில் இருந்த அட்டவனையில் பார்ப்போம் , அது சொன்னது அவர் பெயர் சிவராம செட்டியார், என்று.
நல்ல அறிவுரைகள் சொன்னார். கிட்டத்தட்ட முரளியின் அதே அலைவரிசை அவரின் பேச்சிலும் இருந்தது. அதுவும் பணியாளர் பற்றி பேசும்போது கண்ணில் கருணை மிளிர்ந்தது.
நிலைய வாசலுக்கு வந்த முரளி ஆட்டோவை அழைத்தான்..
அமரும் தருவாயில், தன்னோடு பயணம் செய்த பெரியவர் புகைப்படம் போட்டு சிவ ராம செட்டியார், நிறுவனர் , Ram டெக் என்று கண்ணீர் அஞ்சலி அச்சிட்ட போஸ்டர் ஒட்டி இருந்ததைக் காணும்போதே, நானும் உங்களுடன் வருகிறேன் என்று வந்தார்,
அந்த பெரியவரும்.
பாவம் சார்.. நேற்று இதே ரயில்லேந்து வந்து இறங்கின முரளினு ஒருவரும், அவரை அழைத்து வந்த Ramtec நிறுவனர் சிவராம செட்டியாரும் கம்பெனி போகிற வழியிலே விபத்திலே இறந்திட்டாங்க! என்ற ஆட்டோக்காரர், கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியச் சுவற்றைப் பார்த்து,
உறைந்துப் போய் திரும்ப்பிப் பார்த்தார்..
ஆட்டோவில் இருவருமே இல்லை.