அந்த வீடு வரை வழக்கம் போல சாதாரணமா வந்துட்டு அங்க இருந்து மாமி வீடு வரைக்கும் போகும் போது
இறுக்கமான முகத்தொட..
ஒரு பயங்கரமான ஆள் போல..
முரட்டு தனமா போறது எழுதபடாத விதியாகவே மாறி..போக போய்கிட்டு இருக்கேன்..
சில வீட்டு கதவுகள் டமார்னு சாத்தப்படும் சத்தமும் சடார்னு திறக்கப்படும் சத்தமும் என் காதுகளில் ஊடுறுக்க.. வாசல்கள்ல விளையாடி கிட்டு இருந்த குட்டி பசங்க..கிடு கிடுனு வீட்டுக்குள்ள கத்திக்கிட்டே ஓடி ஒளிய ..குட்டி பொண்ணுங்களில் கீச்சிடும் அழுகை சத்தம் ஒவ்வோர் வீட்லயும் கேக்குது..
உள்ளுக்குள்ள ஒரு பயங்கர சிரிப்பு வந்தாலும் அத வெளில காட்டாமல்
“என்ன சத்தம் ஆ..??”
யாரு குழப்பம்..? கொண்டு போகவா ஆ” னு
நான் அக்கம் பக்கம் பாத்து முரட்டு குரலில் ஒலித்து கொண்டே விறைப்பா போய்கிட்டு இருக்கேன்.. ஓவ்வொரு வீட்ல இருந்து பதில் வருது..
இந்தா பாருங்க தம்பி இவரு தான் குழப்பம்..
இவுங்க தான் சாப்பிட மாட்டிகிறாங்க..
இவன தூக்கிட்டு போங்க.. அப்டி இப்டினு வீடு வீடா என்கிட்ட பிராது வைக்கிறாங்க..
அதுக்கேத்த பதில்கள நாட்டாமை பொண்ணம்பலம் கோட்டா சீனிவாசன் குரல்களை கலந்து நம்ம ஊரு சிங்கள துறைமார் தமிழ்ல பேசுறத போல அதட்டி மிரட்டிகிட்டே போறேன்..
யார் மேலயாச்சம் பயம் வேணும்
யாராச்சம் ஒராலு மேல சரி பயம் இருக்கனும்னு ஒரு சிலர் வாசற்படி கிட்ட நின்னு என்னை பாத்து கூறும் நியாயக்கதைகள்..
என் காதுகளில் மாறி மாறி அடிபட,
இப்படி பிள்ளைகள் பயந்து போன திருப்தியில் நிம்மதி வாசகங்களை அந்த அந்த வீட்டு காரங்க வெளியிட்டு கொண்டிந்ததை கேட்டுகிட்டே.. உள்ளுக்குள்ள சிரிச்சபடி மாமி வீட்டுகுள்ள போய்..
ஒரு பெரு மூச்சோட,
நான் நானா மாறி குசன் நாட்காலில அப்பாடானு உட்காருறேன்…
சில மாதங்களுக்கு முன்ன ஒரு நாள் மாமி வீட்டு பக்கம் வந்த போது ஒரு வீட்டு சின்ன பையன் மூக்கு ஒழுக அழுக்கான உடுப்போட மண்ல பிறண்டு உருண்டு அவுங்க அம்மா கூட சண்ட போட்டுகிட்டு வாடி போடினு கத்தி அடம்பிடிகிறத பாத்து ஒரு ஆர்வ கோளாறுல எதேச்சையா அவன் கிட்ட போய்..
விறுட்டுனு அவன பிடிச்சி ஒரு உளுக்கு உளுக்கி.. அப்டியே ஒத்த கைலயே தூக்கிட்டு போய் ஒரு உயரமான கல்கட்டில் உட்கார வச்சி.. ஒரு பயங்கரமான தொனியில
என்ன தைரியம் இருந்தா அம்மா கூடவே சண்ட போடுவ..ஆ???
வாடி போடினுலாம் பேசுவியா..
பிளடி நான் சென் ..
எங்க அந்த யூரியா பேக் டக்னு தாங்க..புடிச்சி போட்டு கொண்டு போறேனு தான் சொன்னேன்..
அவன் மிரண்டு நடுங்கி.. வீச்சுனு கத்த.. சத்தம் வர கூடாதுனு ஒரு அதட்டுபோட்டேன்.. அவனோட சேத்து அந்த இடமே அமைதியாகி போனது..
அங்க இங்க வாசல்ல திரிந்து கொண்டிருந்த அத்தன வாண்டுகளும் பயந்து நடுங்கி ஓடி ஒளிய.. அன்னைக்கி ஆரம்பிச்சது என்னோட இந்த வித்தை..பயங்காட்ற வித்தை..
அன்னைல இருந்து இன்னைக்கி வர நான் தான் அந்த சின்னவிங்களுக்கு பயங்கரவாதி
அரக்கன் கொடூரன் எல்லாமே நான் தான்..
தெரிஞ்சோ தெரியாமலோ ஆரம்பிச்ச இந்த ஆட்டம்.. தவிர்க்கவே முடியாத ஒன்னா மாறிவிட நானும் வேற வழி இல்லாம வரும்போதெல்லாம் இப்டி ஆட்டம் காட்டியே ஆகனும்ற நிலைக்கு தள்ளப்பட்டேன்..
நா வராத நாட்கள்ல கூட பசங்க குழப்பம் பண்ணுனா எங்க மாமி வீட்டுகிட்ட இழுத்துட்டு வந்து அவரு உள்ளுக்குதான் இருக்காரு அவர்கிட்ட புடிச்சி குடுக்குறேன்..,
அவர கொஞ்சம் வெளிய வர சொல்லுங்களே னு சொல்லி பசங்கள பயங்காட்டுவாங்கனு மாமி சொல்லி சிரிப்பாங்க.. எனக்கும் ஒரு மாதிரி வெக்கமா கூட போய்டும்.. நீங்க அதட்ட ஆரம்பிச்ச பிறகு தான்பே இந்த குழவாரிங்க ஒழுங்கா இருக்காங்கப்பே..
வரும் போதுலாம் ஒரு அதட்டு போட்டுட்டு போங்கனு மாமி சொல்லுவாங்க..
ஐயோ மாமி.. பாவம் சின்னவிங்க..
நா சும்மா ஒரு நாள் மிரட்ட போய்ட்டு இப்ப இத ஒரு வேலையாவே ஆக்கிட்டாங்கனு சொல்லுவேன்..
சுட சுட மாமி குடுத்த டீ ய குடிச்சிகிட்டே யோசிக்கிறேன்..
என் மனசுக்குள்ள ஒரு எரிச்சல்..
குழந்தைகள பயங்காட்றதெல்லாம் ஒரு வேலையா??
என்னை எவ்ளோ கொடூரமா பாப்பானுங்க???
ச்சீ.. இத இனி விட்டு தொலச்சிடனும்.. மனசுகுள்ள பேசிகிட்டே டீ குடிக்கிறேன்..
கொஞ்ச நேரம் போக.. மாமி டைம் ஆகிடுச்சி வரட்டானு சொல்லி கிளம்ப ரெடி ஆகுனேன்..
வெளில இருந்து ஒரு மெல்லிய குரல்..
அக்கா அந்த தம்பி வந்திருக்காரோ னு..
இதோ உக்காந்திருக்காரு ஏன்டினு மாமி கேக்க.. நான் எழும்பி யாருனு பாக்குறேன்…
ஒரு அக்கா..நல்லா தெரிஞ்சவங்க தான்.. கொஞ்சம் தள்ளி தொங்க வீட்ல இருக்காங்க..
தம்பி.. நல்லா இருக்கிங்களா..
அம்மா நல்லா இருக்காங்கலாப்பா னு விசாரிக்கிறாங்க..
இருக்காங்க கா.. சொல்லுங்க கா..னு கேட்டேன்..
கொஞ்சம் அமைதிக்கு பிறகு..
தம்பி நம்ப மகனுக்கு ஒரு அதட்டு போட்டு விடுங்க ப்பா..
சரியான குழப்படி எந்த நேரமும் சல்லி கேட்டு கரச்ச பண்றானு சொல்றாங்க..
நா சிரிச்சிகிட்டே ஐயோ அக்கா..
பாவம் சின்ன பசங்க நா ஏதோ விளையாட்டுக்கு பயமுறுத்துறது.. அவ்ளோ தான்க்கா..
ஐயோ தம்பி.. இவரு இருக்கும் போது கூட பரவல்லா இப்ப இவரும் இல்ல நா ஒத்த ஆளு.. எப்டியாச்சம் நல்ல வளத்து எடுக்கனும் படிக்க வைக்கனும்.. ஆனா முடில தம்பி.. சின்னது ஒன்னும் இருக்கு.. இவனுக்கு நாலு வயசு தான் ஆவுது.. எங்க பழகுனானோ தெரில அவ்ளோ குழப்பம் கெட்ட பேச்சி கூட பேசுறான்..
பயமா இருக்கு புருசன் இல்லாதனால தான் இப்டி களுசறயா வளத்துட்டானு ஊரே சொல்லுமே தம்பி.. அவன நினச்சா நெஞ்செல்லாம் வலிக்குது எப்டி ஆளாக்க போறேனே தெரில தம்பி னு.. சொல்லும் போதே அவுங்க கண் கலங்கி மனசுல புரளுர ஆயிரம் படபடப்போட கண்ண துடைக்கிறாங்க..
ஐயோ அக்கா.. இதுக்கு போய் அழுறிங்களே..
எனக்கு மனசு முழுக்க சங்கட்டமா போச்சி.. கணவரில்லாம பிள்ளைகள வளத்து எடுக்குற ஒவ்வொரு தாய்க்கும் பின்னால எத்தன வலிகள் இருக்கும்..
ஒரு பிள்ளைய வளத்தெடுக்க எத்தனை பாடு படுறாங்க..
நா ஏதோ ஒரு விளையாட்டா செய்ற மிரட்டல்கள் அந்த பையன மாத்துமா னு எனக்குள்ள ஒரு கேள்வி கூட எழுந்துகிட்டே இருக்கு..
நீங்க அதட்ட ஆரம்பிச்ச பிறகுதான் இந்த பக்கம் புள்ளைங்க கரச்ச குறஞ்சிருக்கு தம்பி.. கூட பொறந்த தம்பி மாரி நினைச்சி கேக்குறேன்.. வரும் போதுலாம் ஒரே ஒரு அதட்டு போடுங்க..அப்ப சரி பயம் வறட்டும் தம்பினு கண்ண துடைச்சிகிட்டே சொல்றாங்க..
அவங்களுக்காக சரி இத செய்யனும்னு தோனுது.. எனக்கு மனசுக்கு ஒரு மாதிரியாவே இருந்தாலும் அந்த அக்கா கேட்டதுக்காக செய்யனும்..
ஐயோ சரிக்கா சரிக்கா.. நீங்க போங்க நா வாரேனு சொல்லிட்டு..
அடி தொண்டையில இருந்து
யாரு குழப்பம் போடுறதுனு..
உறுமிக்கிட்டே மீண்டும் ஒரு பயங்கரவாதியாய் அந்த அக்கா வீட்டு பக்கம் போறேன்..
என் கர்ஜனை அவங்க காதுகளை துளைக்க ஏதோ ஒரு பெருத்த நம்பிக்கையோடு என் முன்னால அவுங்க வீட்ட நோக்கி விரைந்து ஓடிகிட்டு இருக்காங்க.. அந்த அக்கா…