தன் முன் வந்து நின்றவனைப் பார்த்தார் குரு. “வாழ்க்கையே வெறுப்பாய் இருக்கிறது, குரு” “ஏன்? என்னாச்சு? நல்லாதானே இருந்த? சாஃப்ட்வேர் கம்பெனில நல்ல வேலை, நிறைய சம்பளம், அமெரிக்கா, இங்கிலாந்துனு பறந்துட்டு இருந்தியே!”
“எல்லாம் நல்லா போறா மாதிரிதான் இருந்துச்சு குரு. ஆனா இப்ப பாத்தா யாருமே என் கூட இல்ல. தனியாளா நிக்கிற மாதிரி இருக்கு”
குருவுக்கு வந்தவனின் பிரச்சனை புரிந்தது. அவனுக்காக ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தார்.
வியாபாரி ஒருத்தன் குடும்பத்துடன் பிக்னிக் போனான். போன இடத்தில் படகு சவாரி செய்யும் போது அவனது செல்போன் ஏரிக்குள் விழுந்துவிட்டது. செல்போன் போனதில் வியாபாரிக்கு ரொம்ப வருத்தம். ஏரி ஓரத்திலிருந்து கடவுளிடம் வேண்டினான். ‘ கடவுளே என் செல்ஃபோனை தயவுசெய்து எனக்கு கிடைக்க செய்’ என்று மனம் உருகி வேண்டினான். என்ன ஆச்சர்யம். அவனது பிரார்த்தனையைக் கேட்ட கடவுள் அவனுக்கு உதவ ஒரு தேவதையை அனுப்பினார்.
வந்த தேவதை சட்டென்று தண்ணிருக்குள் மூழ்கி ஒரு செல்ஃபோனை எடுத்துவந்தது. விலையுயர்ந்த ப்ளாக் பெரி செல்ஃபோன் அது.
“இதுவா உன் செல்ஃபோன்?” என்று தேவதை கேட்க, ‘இல்லை’ என்றுவேகமாக தலையசைத்தான் வியாபாரி.
தண்ணீருக்குள் மீண்டும் மூழ்கிய தேவதை, மிக நவீனமான ஐஃபோனை எடுத்து வந்து, ‘ இந்த ஃபோனா?’ என்று விசாரித்தது. அதுவும் தனது இல்லை என்று மறுத்துவிட்டான் வியாபாரி.
மூன்றாவது முறை முழ்கிய தேவதை, மிகச் சாதரண தேய்ந்த, பழைய செல்ஃபோன் ஒன்றை எடுத்து வந்தது. அதைப் பார்த்ததும் வியாபாரிக்கு சந்தோஷம்.
“இதான் என் போன், இதான் என் போன்” என்று கத்தினான்.
தேவதைக்கு ரொம்ப ஆச்சர்யம்.
“அவ்வளவு விலையுயர்ந்த போனையெல்லாம் காட்டினேன். அதெல்லாம் வேண்டாம்னுட்டு இந்த சாதாரண போனை கேட்கிறியே,இதுல அப்படி என்ன இருக்கு?” என்று கேட்டது.அதற்கு வியாபாரி என்ன சொன்னான் தெரியுமா?.
“ அதெல்லாம் விலையுயர்ந்ததா இருக்கலாம், ரொம்ப நவீனமா இருக்கலாம். ஆனா அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது. இதில்தானே என்னுடைய உறவினர்கள், நண்பர்கள், வியாபார தொடர்புகள் என எல்லா முக்கியமான செல்போன் எண்களும் இருக்கிறது. இவர்கள் இல்லாமல் என் வாழ்க்கையே இல்லை”
வியாபாரியின் பதிலைக் கேட்ட தேவதை மூன்று செல்ஃபோன்களையுமே அவனிடம் கொடுத்து கிளம்பியது.
இந்தக் கதையை சொல்லிய குரு, வந்தவனிடம் சொன்னார், ” பணத்தை மட்டும் தேடினால் வாழ்க்கை வெறுமையாகதான் இருக்கும். பணத்தை தேடும் அவசரத்தில் நம் சொந்த பந்தங்களை மறந்துவிடக் கூடாது”
வந்தவனுக்கு அவன் செய்த தவறு புரிந்தது.
Win மொழி: வாழ்க்கையில் உயரும்போது உதவுவதற்கும் விழும்போது தாங்குவதற்கும் நண்பர்கள் வேண்டும்.
– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)