தேவரும் குருவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 6,808 
 

“சிருங்கார ரசம் இருந்தால்தான் காவியம் சோபிக் கும்”என்றார் ஒரு புலவர்.

“வடமொழியில் எவ்வளவோ காவியங்கள் இருக் கின்றன. தமிழில் இல்லை. சில காவியங்கள் இருந்தா லும் நன்றாக அமையவில்லை” என்றார் அவருடைய அருகில் இருந்த மற்றொரு புலவர். “நல்ல கவிஞர்கள் தமிழில் இல்லையா? ஏன் புதிய காவியங்களைப் பாடக் கூடாது?”

“புலவர்கள் இல்லாமல் என்ன? இப்பொழுது நம்முடன் பழகும் திருத்தக்க தேவர் நல்ல வாக்கு வன்மையுடையவர். சிறந்த புலவர். அவர் எதையும் பாடலாம்.”

“போயும் போயும் ஒரு ஜைனத் துறவிதானா உம் முடைய கண்ணிற் பட்டார்! ஜைனர்களுக்குத் துறவைப்பற்றிப் பாடத் தெரியுமே யல்லாமல் இன்பச் சுவை என்ன தெரியும்?”

“அப்படிச் சொல்லக் கூடாது. துறவியாக இருப்ப தனாலேயே இன்பச் சுவையைப்பற்றிப் பாடும் வன்மை இராதென்று கொள்வதற்கில்லை. அவர்களால் இன்பச் சுவையை உணரமுடியாதா? காவியங்களைப் படித்தால் அறிய மாட்டார்களா? துறவுள்ளம் பற்றற்றது. எதனையும் உள்ளவாறே உணரக் கூடியது.”

இவ்வாறு பேசிச் சில புலவர்கள் திருத்தக்க தேவருக்கு ஊக்க மூட்டி விட்டார்கள். அவர்களுடைய தூண்டுதலால் சீவகனுடைய சரித்திரத்தைக் காவியமாகப் பாடுவதென்று நிச்சயம் செய்தார் தேவர். ஆயினும் தம்முடைய குருவினிடம் சென்று அநுமதி பெற் றுப் பிறகே தொடங்க வேண்டுமென்பது அவர் எண்ணம். சீவகனது சரித்திரம் ஜைனர்களுக்குள் ராமாய ணம் போலப் பரவியிருந்தது. அதைக் கவிச் சுவை அமையப் பாடிவிடலாம் என்ற துணிவு தேவருக்கு உண்டாயிற்று.

குருவினிடம் போனார். “அடியேன் சீவகனது சரிதையைக் காவியமாகப் பாட எண்ணியிருக்கிறேன். அருள் புரிய வேண்டும்” என்று விண்ணப்பித்தார்.

துறவரசராகிய குருநாதர் தம் மாணாக்கரின் ஆற் றலை நன்கு உணர்ந்தவர். ஆனாலும் அவரைச் சோதிக்க எண்ணி, “பெருங் காவியம் செய்வதற்கு முன்பு சிறிய நூல் ஏதேனும் ஒன்றை இயற்றிப் பழகவேண்டும்” என்று சொன்னார். அங்ஙனம் சொல்லிக்கொண் டிருந்த போதே எதிரில் ஒரு நரி ஓடிற்று. உடனே ஆசிரியர் அதைச் சுட்டி, ”அதோ ஓடுகிறதே, நரி; அதை விஷய மாக வைத்து ஒரு சிறு நூல் இயற்று, பார்க்கலாம்” என்று கட்டளையிட்டார்.

திருத்தக்க தேவரின் தீவிரமான அறிவுக்கு அது ஒரு பெரிய வேலையா? மிக விரைவில் ‘நரி விருத்தம்’ என்ற சிறு நூலைப் பாடிக் காட்டினார். ‘மனித வாழ்க்கை நிலையற்றது, செல்வம் நிலையற்றது’ என்பன போன்ற உண்மைகளை விளக்கிக்கொண்டு நின்றது அந் நூல். அதைக் கண்ட ஆசிரியர் வியந்து பாராட்டினார். “இன்று நான் நரி முகத்தில் விழித்தேன்” என்று மகிழ்வுற்றார் திருத்தக்க தேவரும்.

“சீவகன் சரித்திரத்தைப் பாடும் தகுதி உமக்கு இருக்கிறது. நீர் சிறிதும் கவலையின்றிப் பாடலாம். கடவுள் திருவருள் அது நன்கு நிறைவேறும்படி செய்யவேண்டும்”என்று சொல்லி வாழ்த்தினார் ஆசிரியர்.

பால சந்நியாசியாகிய தேவர் உவகையால் பூரித் தார். தம் ஆசிரியர் பாதத்தில் விழுந்து பணிந்து எழுந்து, ”அடியேனுக்கு இந்தக் கட்டளை கொடுத் தது பெரிதன்று. தேவரீரே ஆரம்பித்துத் தரவேண் டும்” என்று விநயமாக இரந்து நின்றார்.

அறிவின் தலையெல்லையிலே நின்ற அந்த இளந் துறவியின் அடக்கம் ஆசிரியரின் உள்ளத்தைப் பிணித்தது. அவரது வேண்டுகோளைப் புறக்கணிக்க முடி யுமா?

ஜைனர்கள் அருகன், சித்தன், சாதுக்கள் என் போரையும் தர்மத்தையும் வணங்கித்தான் நூல் தொடங்குதல் மரபு. இவற்றை முறையே அருகசரணம், சித்தசரணம், சாதுசரணம், தர்மசரணம் என்று சொல் வார்கள்.

ஆசிரியர் அருகசரணத்தைப் பாடி முடித்தார். அருக பரமேஷ்டியின் திருவுருவ எழிலை அதில் வருணித்தார்.

‘சிவந்த பொன்மலையைப் போலச் சோதி வீசுவது அருக பரமேஷ்டியினது திவ்விய மங்கள விக்கிரகம். அவருடைய திருமேனியிலே அங்கங்கே எழுதினாற் போலவும் அழகமையப் பிதிர்ந்தாற் போலவும் ஆயி ரத்தெட்டு மறுக்கள் திகழ்கின்றன. யாவரும் விரும்பி நோக்குதற்குரிய இளஞ் சூரியனைப் போன்ற தேசு வீசும் அந்த மூர்த்தியின் அடித்தாமரையைத் தேவர் களெல்லாம் முடிமேல் தரிக்கின்றனர். யாமும் நம் சென்னியிலே அணிவோம்’ என்று அமைந்தது பாட்டு:

“செம்பொன் வரைமேற் பசும்பொன் எழுத்து இட்ட தேபோல் அம்பொன் பிதிர்வின் மறுஆயிரத் தெட்டு அணிந்து வெம்புஞ் சுடரிற் சுடருந்திரு மூர்த்தி விண்ணோர் அம்பொன் முடிமேல் அடித்தாமரை சென்னி வைப்பாம்.”

[வெம்பும்-யாவரும் விரும்பும். சுடரின்-சூரியனைப் போல.
சுடரும்-ஒளிவிடும். மூர்த்தி-திருவுருவத்தையுடையவன்.]

இச் செய்யுளை முடித்து எழுதி மாணாக்கரை அழைத்து அவர் கையில் ஆசீர்வாதம் செய்து அளித் தார். ஆசிரியர் அருகசரணத்தை முடிப்பதற்குள் திருத்தக்க தேவர் சித்தசரணத்தைப் பாடியிருந்தார். ஆசிரியர் அளித்த அச் செய்யுளைப் பணிந்து பெற்றுத் தலைமேல் வைத்துப் படித்தார். “அடியேன் பெற்ற பாக்கியம்! இதனை முன்வைத்துத் தொடங்கும் சீவ கன் சரிதை இடையூறின்றி நிறைவேறும்” என்று ஆனந்தம் பொங்கக் கூறினார். அப்பால், “அடியேன் இயற்றிய சித்தசரணப் பாடலைக் கேட்டருள வேண் டும்” என்று அதனை விண்ணப்பித்தார்.

அந்தப் பாடல் சித்தனுடைய திருவுருவ வர் ணனையாக இருக்கவில்லை. அவனது குணச்சிறப்பைச் சொல்லுவதாக இருந்தது.

‘ஈறும் முதலும் இல்லாத மூவுலகத்துள்ள உயிர் களும், கெடுகின்ற சிற்றின்பத்தையே இன்பமெனக் கொண்டு உழலுகின்றன. அவை நிலையாதனவென்று கண்டு துறக்கும்பொழுது, கெடாத பேரின்பத்தை எய்துகின்றன. அந்த இன்பமே தலையாகியது. அதனை எவனால் உயிர்கள் அடைகின்றனவோ அவன் குணங்களெல்லாம் நிறைந்தவன், அக்குணங்களையே நிதியாக உடைய செல்வன் என்று சாதுக்கள் கூறுகின்றனர். அவனே தேவா திதேவன். அவனுடைய சேவடிகளை நாம் வணங்குவோம்’ என்ற கம்பீரமான பொருளோடு விளங்கியது அப்பாடல்.

“மூவா முதலா உலகம்மொரு மூன்றும் ஏத்தத்
தாவாத இன்பந் தலையாயது தன்னின் எய்தி
ஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வன் என்ப
தேவாதி தேவன் அவன்சேவடி சேர்தும் அன்றே.”§§

[மூவா- அழியாத. முதலா-முதலில்லாத,
தாவாத-கெடாத ஓவாது-நீங்காமல். சேர்தும்-சேர்வோம்]

§§ இச்செய்யுளின் உரையில் நச்சினார்க்கினியர், எய்தி என் பதனை எச்சத்திரிபாகக் கொண்டு பொருளுரைத்தார். இன்பந் தன்னினெய்தி உலகம் ஏத்த நின்ற செல்வனென்று கூட்டிப் பொருள் கொள்ளலாமென்று தோற்றுகின்றது.

அச் செய்யுளை இரண்டு மூன்று முறை சொல்லச் செய்து ஆசிரியர் கேட்டார். அதன் பொருளாழத்திலே அவர் உள்ளம் சென்று தங்கியது. ‘ஜைன சமய உண்மைகளை இச் செய்யுள் எவ்வளவு நன்றாகச் சொல்கிறது! காமச் சுவை அமைந்த காவியம் இயற்றத் தொடங்கும்போதும் இவன் மனம் சிற்றின்பத்தின் நிலையாமையையும் பேரின்பத்தின் பெருமையையும் நினைத்துப் புகுகின்றதே. என் பாட்டு வெறும் உருவ வருணனை; இவன் பாடலோ அறிஞர்கள் அறிவுக் கண்ணால் பார்க்கும் குண வருணனை. இதுதான் அழகு. இவன் பேரறிஞன். குருவுக்கு மிஞ்சின சிஷ் யன்’ என்று பலவாறு அவர் மனத்துள் யோசனை படர்ந்தது.

சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தார். பிறகு மௌனத்தினின்றும் கலைந்து, “தேவா, ஒன்று சொல் கிறேன்; அப்படிச் செய்” என்று சொன்னார். அந்த வார்த்தைகள் அவர் உள்ளம் உருகி வந்தன என் பதைத் தொனியே குறிப்பித்தது.

“தேவரீர் கட்டளைக்குக் காத்திருக்கிறேன்.”

“உன்னுடைய செய்யுளை முதலிலே வைத்து அதனை அடுத்து இரண்டாவதாக என் செய்யுளை வை.:

திருத்தக்க தேவர் திடுக்கிட்டுப் போனார். தம் ஆசிரியர் ஏன் அப்படிச் சொல்லுகிறார் என்பது விளங்கவில்லை; மயங்கினார்.

“என்ன யோசிக்கிறாய்? நீ இயற்றிய சித்த சரணத்தை முதற் பாட்டாக அமைத்துக்கொள்” என்று மீட்டும் முனிவர்பிரான் கனிவு ததும்பக் கூறினார்.

“அது சம்பிரதாய விரோதமாயிற்றே. அப்படிச் செய்தால் இரண்டு வகையில் நான் குற்றவாளி ஆவேனே!”

“இல்லை; அதைத்தான் முதலில் வைக்கவேண்டும்.”

“குருநாதருடைய செய்யுளுக்குத் தலைமை அளிக் காத குற்றமும், அருக சரணத்திற்குப் பின் வைக்க வேண்டியதை முன் வைத்த குற்றமும் என்னைச் சாருமே!”

“குற்றமே இல்லை; உன்னுடைய செய்யுள் பொருட் சிறப்பால் முதலில் நிற்கத்தக்கது. யோசிக்க வேண்டாம். என் பாடல் உன்னுடைய பாடலை அடுத்து நிற்கும் பெருமை பெற்றால் போதும்.”

“என் மனம் துணியவில்லையே!”

“நான் உன்னுடைய ஆசிரியனென்ற எண்ணத் தினால்தானே இப்படிக் கலங்குகிறாய்?”

இந்தக் கேள்விக்குத் தேவர் பதில் சொல்லவில்லை.

“அந்த உரிமையை நான் ஒப்புக்கொண்டே கட்டளையிடுகிறேன். உன்னுடைய காவியத்திற்கு உன்னுடைய பாடலே முன் நிற்கட்டும். ஆசிரியன் கட்டளையை மறுக்கும் குற்றத்தைச் செய்யப் போகிறாயா?”

இதற்கு மேல் ஒன்றும் வழி தோன்றவில்லை. திருத்தக்கதேவரை ஆசிரியர் சிக்கவைத்துவிட்டார். அவர் வார்த்தையை மீறத் தேவர் துணியவில்லை. அவர் பாடலை இரண்டாவதாக வைத்துச் சீவக சரித் திரத்தைப் பாடத் தொடங்கினார்.

பேராற்று வெள்ளம்போலத் தேவருக்குச் செய் யுள் நடை அமைந்தது. கதையும் கம்பீரமானது. ஆகவே அவர் பாடிய சீவகசிந்தாமணி புலவர்களுக்குச் சிந்தாமணியாக விளங்குதற்கு ஏற்றதாயிற்று. சீவகன் பல மகளிரை மணம் புரிந்து இன்புற்ற செயல்களை யெல்லாம் காவிய இலக்கணங்கள் செறிந்து விளங் கும்படி தேவர் பாடினார். கடைசியில் முத்தி யிலம்பக மென்னும் பகுதியில் சீவகன் துறவு பூண்டு முக்தி பெற்றதாகக் கதையை அமைத்தார். அதில் ஜைன சமய உண்மைகளை விரிவாகச் சொன்னார்.

காவியத்தை முடித்துவிட்டுக் கடைசியில் அருகக் கடவுள் துதியொன்றையும் பாடிச் சேர்த்து ஆசிரியப் பிரானிடம் கொண்டு போய்ப் படித்துக் காட்டினார். காவியத்தைத் கேட்கக் கேட்க ஆசிரியர் தம்மை மறந்தார். “தேவா, உன் பெயர் உலகுள்ளளவும் அழியாது” என்றும், “உன்னை மாணாக்கனாகப் பெற்றது என் பாக்கியம்” என்றும் அவர் வாயி லிருந்து அவரை அறியாமலே வார்த்தைகள் வந்தன.

இறுதிப் பாட்டைக் கேட்டு முடித்தார் குரு. தேவரை வாயார வாழ்த்தவேண்டுமென்று அவருக்குத் தோற்றியது. உள் உருகிவந்த அவர் வார்த்தைகள் செய்யுளாக அமைந்தன. “கடலிலே பிறந்த வலம்புரிச் சங்கில் தோற்றிய முத்துக்களையும் மாணிக்கத்தையும் கோத்து அமைத்த அழகிய வடம்போலே இருக்கிறது. இந்தச் சிந்தாமணியென்னும் காவியம். இதனை ஓதி உணர்ந்தவரும், கூறிக் கேட்டோரும் சுவர்க்க பதவி பெற்று இன்புற்றுப் பின்பு முத்தி பெறுவர்; இம்மை யிலும் திருமகள் திருவருளைப் பெறுவர்” என்ற பொருள் அமைந்த ஒரு செய்யுளால் குருநாதர் தேவரைப் பாராட்டினார்.

தேவர் நன்றியறிவிலே மூழ்கினார். அந்தச் செய் யுளையும் ஆசிரியர் கட்டளைப்படி சிந்தாமணியில் சேர்த்து அதற்குமேல் இரண்டு பாடல்களில் தமக்கு ஆசிரியர்பாலுள்ள நன்றியறிவைப் புலப்படுத்திக் காவியத்தை நிறைவேற்றினார்.

இங்ஙனம் ஆசிரியரது உள்ளத்தைக் கவர்ந்து நின்ற அக் காவியம் தமிழ்ப்புலவர் போற்றிப் பாது காக்கும் இலக்கியச் செல்வமாக விளங்கலாயிற்று.

நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *