தேனீயார்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 7, 2019
பார்வையிட்டோர்: 6,048 
 

பஸ் ஸ்டேண்ட் பக்கம் வந்து பல ஆண்டுகளாகிறது. வண்டி தற்காலிகமாக மண்டையைப் போட்டதால் இன்று ஆபிஸுக்கு பஸ் சர்வீஸ்தான். மூச்சிரைக்க எட்டரை மணிக்கு நடந்து வந்து சேர்ந்தேன். செப்டம்பர் மாதம் கூட காலையிலேயே வெயில் மண்டையைக் கொளுத்துகிறது. குளோபல் வார்மிங். ஸ்டேண்டில் நின்றிருந்த பஸ் ஒன்று காலியாக இருந்தது. ஆட்சி அருமையாக நடக்கிறது. இப்போதெல்லாம் எத்தனை சொகுசு பஸ்?

வசதியாக ஜன்னலோர சீட் ஒன்றில் அமர்ந்ததும் கையோடு வைத்திருந்த குமுதம் ரிப்போர்ட்டரை பிரித்தேன். மெதுவாக ஜன்னல் பக்கம் பார்வையை திருப்பினேன். எதிரே பிரம்மாண்டமாக நிறுவப்பட்டிருந்த ப்ளெக்ஸ் போர்ட் ஒன்று கவனத்தை கவர்ந்தது. நாய்ச்சங்கிலி கனத்தில் பத்து சவரன் கழுத்துச் சங்கிலி, பட்டையாய் கையில் பிரேஸ்லேட், தாமரைக்கனி பாணியில் துணைமுதல்வர் படம் போட்ட அதிரசம் சைஸ் மோதிரம் என்று சர்வபூஷித அலங்காரத்தோடு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தவரை எங்கேயோ பார்த்த நினைவு.

பட்டையாக எழுதப்பட்டிருந்த வாசகத்தை கண்டதுமே நினைவு வந்துவிட்டது. “ஒன்றிய பிரதிநிதியாக தேனீயாரை நியமித்த தலைவருக்கு வாழ்த்துகள்”. ஆஹா தேனீயாரா? அசத்துறாங்களே? அதுவும் ஒன்றியப் பிரதிநிதி போஸ்டிங்? கட்சியின் ஜனநாயக மாண்பே மாண்பு!

நினைவுச்சக்கரம் மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்பாக சுழலத் தொடங்கியது. தேனீ டீ ஸ்டால். அப்போதெல்லாம் வேலை வெட்டி இல்லாத வெட்டி ஆபிஸர்களின் வேடந்தாங்கல். ஒரு கோல்ட் பில்டரை பற்றவைத்துக் கொண்டு, சிங்கிள் டீயை ஆர்டர் செய்துவிட்டு, நாள் முழுக்க ஃபேன் காற்றில் உட்கார்ந்து தினத்தந்தி படிக்கலாம். அரசியல் பேசலாம். வசூல் மன்னன் விஜய்யா? அஜீத்தா? என்று சினிமாவை விவாதிக்கலாம்.

யாராவது ஆளிருந்தாலும் சரி, ஆளில்லா விட்டாலும் சரி. ‘சர்ர்ர்’ரென்ற சவுண்டோடு, டீ போடுவதற்கென்றே பிறப்பெடுத்தவர் மாதிரி டீ ஆற்றிக் கொண்டிருப்பார் தேனீ ராமசாமி. ரொம்ப நேரம் ஆற்றிய டீக்கு கஸ்டமர் வரவில்லை என்றால் அவரே குடித்து விடுவார்.

“மச்சான் எலெக்‌ஷன் வரப்போவுதுடா, சிட்டிங்குக்கு சீட் கிடைக்குமா?”

“கிடைக்கும் மாதிரி தெரியலை மாமு. இந்த வாட்டி குன்றத்தூர் பார்ட்டிக்கு லக்கு இருக்குன்னு நெனைக்கிறேன். முழுக்க இளைஞர்களுக்கு வாய்ப்புன்னு தலைவர் சொல்லியிருக்காரே?”

“புது ஆளு வந்தா நல்லதுதான்யா. பழைய பெருசுங்க எல்லாம் எலெக்‌ஷன் வந்தா மட்டும் வந்து வேலை வாங்குறானுங்க. மத்த டைமுலே கலெக்‌ஷனுலே பிஸி ஆயிடுறானுங்க!”

இந்த மாதிரியாக விவாதங்கள் நடக்கும். சில நேரங்களிலும் ராமசாமியும் விவாதத்தில் கலந்து கொள்வார்.

“அப்போன்னா சிட்டிங்குக்கு பவர் இனிமே இல்லைன்னு சொல்லுங்கண்ணே!” – ‘சர்ர்ர்’ரென்று டீ ஆற்றியபடியே.

“யோவ் ராமு உனக்கெதுக்குய்யா கேடுகெட்ட அரசியலு எல்லாம். கடையை திறந்தமா? பொழைப்பை பார்த்தோமானு இல்லாம…”

ஜமாவில் இருந்து யாராவது நோஸ்கட் செய்வார்கள். ராமுவின் முகம் தொங்கிப் போகும். பாவமாக இருக்கும். அரசியல் என்றில்லை, வேறு எது பேசினாலும் ராமு ஆவலாக கலந்துகொள்ள வருவார். ஏனோ தெரியவில்லை. அவரை எனக்குத் தெரிந்தவரை யாரும் செட்டில் சேர்த்துக் கொள்ள தயாராக இருந்ததேயில்லை.

விடிகாலை மூன்றரை நாலு மணிக்கு கடையைத் திறந்து சுப்ரபாதம் போடுவார். நாள் முழுக்க டீ ஆற்றுவது. இரவு பத்து மணிக்கு கடையை மூடிவிட்டு வீட்டுக்குப் போய்விடுவார். வாரவிடுமுறை எதுவும் கிடையாது. ஊரிலிருந்து அழைத்துவந்த ஒரே ஒரு பையன் மட்டும் ராமுவுக்கு துணை. மாதவன் கன்ஸ்ட்ரக்‌ஷனுக்கும், பார்பி பேன்ஸி ஸ்டோருக்கும் ஒரு நாளைக்கு ரெண்டு முறை டீ எடுத்துச் சென்று சப்ளை செய்வது அந்தப் பையனின் வேலை.

செக்குமாடு மாதிரியான வாழ்க்கை ராமுவுடையது. அவருக்கு தோராயமாக முப்பத்தைந்து வயது இருந்திருக்கலாம். “என்ன வயசுண்ணே ஆவுது?” என்று கேட்டால் சொல்லத் தெரியாது. எழுதப் படிக்கவும் தெரியாது. அவருக்குத் தெரிந்த ஒரே வேலை டீ போடுவது.

பிற்பாடு ராமுவை தெரிந்த ஒருவரிடம் பேசியபோது ‘பகீர்’ தகவல்கள் நிறைய கிடைத்தன.

பாட்ஷா ரஜினி மாதிரி ராமுவுக்கும் பிளாஷ்பேக் இருந்திருக்கும் என்று நாங்கள் யாருமே நினைத்துப் பார்த்ததில்லை. பதிமூன்று வயதில் தேனீயில் சின்னம்மாவால் அடித்துத் துரத்தப்பட்ட ராமு செங்கல்பட்டில் சில டீக்கடைகளில் வேலை பார்த்திருக்கிறார். கடின உழைப்புக்குப் பிறகு டீமாஸ்டராக பதவி உயர்வு. அடுத்த சில வருடங்களில் செங்கல்பட்டு பைபாஸ் ரோட்டில், ரோடு ஓரமாக சின்ன அளவில் டீக்கடையை சொந்தமாக திறந்திருக்கிறார்.

இந்த நேரத்தில் ராமுவுக்கு திருமணம் ஆகியிருக்கிறது. ஒரு பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது. ராமு இல்லாத நேரத்தில் டீக்கடைக்கு வந்த ரவுடி ஒருவன் ராமுவின் மனைவியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்திருக்கிறான். விஷயத்தை கேள்விப்பட்ட ராமு அருவாளை எடுத்து ரவுடியின் கழுத்தில் ஒரே ‘சர்ர்ர்ர்ரரக்’.

கேஸ் செங்கல்பட்டு கோர்ட்டில் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறதாம். ராமுவின் இந்த கொலைவெறி பிளாஷ்பேக்கை கேட்டதில் இருந்து அவரிடம் கொஞ்சம் உஷாராகவே நடந்துகொண்டோம். முன்புபோல யாரும் நோஸ்கட் விட்டு விடுவதில்லை.

அரசியல், இளைய தளபதி ரசிகர் மன்றம் என்றெல்லாம் சுற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு திடீரென்று ஒருநாள் பள்ளிக்கரணை பனைமரத்தடி ஒன்றில் திடீர் ஞானம் பிறந்தது. எல்லா கந்தாயங்களையும் விட்டு ஒழித்து வேலை வெட்டி, குடும்பம் குட்டி என்று பிஸியாகிவிட்டோம். தேனீ டீ ஸ்டால் புதிய தலைமுறை வெட்டி ஆபிஸர்களால் நிறைய ஆரம்பித்தது.

இந்த கட்டத்தில் ராமு வேறு சில பிஸினஸ்களிலும் புகுந்து கலக்கி வந்ததாக கேள்விப்பட்டோம். ரியல் எஸ்டேட் தொழில் மடிப்பாக்கத்தில் கொடிகட்டிப் பறந்த காலம் அது. டீக்கடைக்கு வரும் யாராவது ஆட்கள் ‘வேங்கைவாசல்லே மொத்தமா 10 கிரவுண்டு கஸ்டமர் கிட்டே இருக்குண்ணே. ரெண்டரை ‘சி’க்கு பார்ட்டி கிடைச்சா முடிச்சிடலாம்’ என்று பேசிக்கொண்டிருப்பார்கள். வழக்கம்போல அவர்கள் பேச்சை ராமு செவிமடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்.

அடுத்து வரும் கஸ்டமர்கள் யாராவது ‘மேடவாக்கம் தாண்டி மொத்தமா பத்து கிரவுண்டு கிடைச்சா நல்லாருக்கும்’ என்று பேசிக்கொள்வார்கள். இரண்டு பார்ட்டிகளையும் இணைக்கும் பாலமாக ராமு செயல்பட்டார். அடுத்தடுத்து தடாலடியாக ஏழெட்டு ‘சி’ பிஸினஸ்களை முடித்துக் கொடுத்ததுமே டீக்கடையை மூடிவிட்டார்.

‘தேனீ டீ ஸ்டால்’ சடக்கென்று ஒரு நாள் ‘தேனீ ரியல் எஸ்டேட்’ ஆக மாற்றம் பெற்றது. கண்ணாடிக் கதவெல்லாம் போட்டு, கூலிங் பேப்பர்கள் ஒட்டி கடையின் தன்மையே கார்ப்பரேட் ஆகிவிட்டது. ராமுவும் லுங்கியெல்லாம் கட்டுவதில்லை. டீசண்டாக கருப்பு பேண்ட், வெள்ளைச்சட்டையில் ஹீரோ ஹோண்டாவில் வலம் வந்தார். கூடமாட ஒத்தாசைக்கு இருந்த பையனும் ஜீன்ஸ், டீசர்ட் என்று பரிமாணம் பெற்றான்.

நினைவுச்சக்கரம் நின்று விட்டது. இப்போது பஸ்ஸின் ஜன்னலோரச் சீட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். எதிரில் சில கடைகளில் ’எட்டாவது வள்ளலே!’ என்று விளித்து ஒட்டப்பட்டிருந்த கலர் போஸ்டர்களில் கூலிங் கிளாஸ் போட்டு தேனீயார் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இதுவரை இந்த கதையை படித்துக் கொண்டிருப்பவர்களில் சிலர் தேனீயாரின் வளர்ச்சிக்காக மகிழ்ச்சி அடைந்திருக்கலாம். அல்லது ஆச்சரியம் அடைந்திருக்கலாம். கதையை எழுதும் நான் அதிர்ச்சி மட்டுமே அடைகிறேன். ஏனெனில் போஸ்டரில், ப்ளக்ஸ் போர்டிலும் இருக்கும் தேனீயார், ஒரிஜினல் தேனீயார் அல்ல. ஆமாம் ராமசாமி அல்ல. ராமசாமியிடம் எடுபிடியாக இருந்தானே ஒரு பயல், அவன்தான் –மன்னிக்கவும்- அவர்தான் இப்போதைய ஒன்றியப் பிரதிநிதி தேனீயார். இந்த எதிர்பாராத மாற்றம் எவ்விதம் நிகழ்ந்த்து, எந்தக் கணத்தில் நேர்ந்த்து என்பது பற்றிய தகவல்களை எல்லாம் இனிமேல் விசாரித்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.

சரி, ஒரிஜினல் தேனீயார் என்ன செய்கிறார்?

தெரிந்தவர்களிடம் விசாரித்ததில் ரியல் எஸ்டேட் தொழிலில் குறுகிய காலத்தில் உச்சிக்கு வந்து, அதைவிட மிகக்குறுகிய காலத்திலேயே அதலபாதாளத்துக்கு வீழ்ந்து விட்டாராம். இப்போது பல்லாவரம்-பெருங்குடி ரேடியல் சாலை ஓரத்தில் டீக்கடை பழையமாதிரியே டீக்கடை நடத்துவதாக சொல்கிறார்கள். இன்னேரத்தில் அங்கும் நாலு பேர் பெஞ்சில் உட்கார்ந்து அரசியலோ, ரியல் எஸ்டேட்டோ, சினிமாவோ பேசிக்கொண்டிருக்க கூடும்.

– செப்டம்பர் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *