சூது நகரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 12,486 
 

நகரம் முழுதும் தீப்பிடித்து எரிவதைப் போன்று வெக்கை. நாள் முழுதும் சங்கர் நகர்ந்துகொண்டே இருந்தான். நிலையாக நிற்க முடியவில்லை. நடந்தோ, பஸ்ஸில் ஏறியோ, தன் நகர்வை நிறுத்தாமல் தொடர்ந் தான். யாரையேனும் தன் மீது கவனம் செலுத்த வைப்பதுதான் அவனது இன்றைய நோக்கமாக இருந்தது. வாழ்வின் மிகப் பெரும் சூது தன் மேல் செலுத்தப்பட்டதாக உணர்ந்தவன் அதன் ஆட்டத்துக் குள் மிக மெதுவாக நுழைந்தான்…

வேலை பார்த்த எந்த இடத்திலும் அவனை யாரும் மரியாதையாக நடத்தியது இல்லை. படித்த பி.ஏ., வரலாறுக்கு நாற்காலியில் உட்கார்ந்து வேலை செய் யும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தவனுக்கு, பல மாதங்கள் அலைந்து திரிந்ததில் கிடைத்த முதல் கௌரவமான வேலை, துணிக் கடையில் சேல்ஸ்மேன் வேலை.

துணிக் கடையின் பிரமாண்டம் முதலில் அவனை மயக்கியது. அந்தக் கடையில் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து கணக்கு பார்க்கவேண்டும் என்ற கற்பனை யில் உள்ளே நுழைந்தான். சேல்ஸ்மேன் வேலை மட் டும்தான் இருக்கிறது என்றார்கள். பசி அவனை விழுங் கிக்கொண்டு இருந்தது. மறுப்பு ஏதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டான்.

அவன் யாரோடும் பேசிப் பழக்கம் இல்லாதவன். எவரிடமும் பேசாமல், வரும் போகும் கஸ்டமர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான். முதல் நாள்தானே, வேலை பழகட்டும் என்று விட்டார்கள். அடுத்தடுத்த நாட்களிலும் அவன் வேடிக்கை பார்ப் பவனாக மட்டுமே இருந்தான். கஸ்டமர்களிடம் நயமாகப் பேசி துணிகளை வாங்கவைக்க முடியவில்லை. ஓர் ஊமையைப் போல துணிகளை எடுத்துப் போடுவதும், மடித்துவைப்பதுமாக இருந்தான். இப்படி யாரோடும் பேசாமல் இருந்தால், வேலையைவிட்டு எடுத்துவிடுவோம் என்று சூப்பர்வைஸர் பலமுறை எச்சரித்துவிட்டார்.

எப்படியும் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்என்ற முனைப்பில், மேன்ஷனில் அறைவாசிகள் யாரும் இல்லாத நேரத்தில், மற்ற விற்பனையாளர்கள் பேசுவதைப் போல் தானாகப் பேசிப் பார்த்தான். இளம் பெண்களிடம் ‘இந்த கலர் உங்க ஸ்கின் கலருக்கு கரெக்டா இருக்கும்’ என்று இவன் சொல்ல, அவர் களும் சிரித்துக்கொண்டே அந்தத் துணியை வாங்கிச் செல்வது போல் கற்பனை செய்தான். மறுநாள், எப்படி யும் கஸ்டமர்களிடம் கலகலப்பாகப் பேசி துணிகளை வாங்கவைத்துவிட வேண்டும் என்ற முடிவுடன் சென் றால், அவன் திட்டம் எல்லாம் விற்பனைப் பிரிவுக்கு உள்ளே நுழையும் வரைதான். அதன்பின், அவன் வாய் விலங்கிட்டது போலாகிவிடும். சாதாரண நாட்களில் இருப்பதைவிட, அப்படித் திட்டமிட்ட நாட்களில் முகம் இன்னும் காய்ந்து இறுகிக்கொள்ளும்.

தான் இருக்கும் இடத்தில் அடுக்கப்பட்டு இருக்கும் துணிகளைப் பார்க்காமல் எல்லோரும் கடந்து செல்வதாகவே நினைத்தான். எல்லோர் மீதும் எரிச்சலாக வந்தது. விற்பவன் எதையாவது பேச வேண்டும் என்று கஸ்டமர்கள் ஏன் நினைக்கிறார்கள்? பிடித்திருந்தால் துணியை வாங்கிச் செல்ல வேண்டியதுதானே! எதற் காக பேசிச் சிரிக்க வேண்டும்? எல்லாமே அவனுக்கு விகாரமாகப்பட்டது.

அவனால் ஒருபோதும் கஸ்டமர்களை கவர முடி யாது என்று நினைத்த நிர்வாகம், எல்லா விற்பனைப் பிரிவுகளிலும் மலை மாதிரி குவிந்துகிடக்கும் துணி களை மடித்துவைக்கும் வேலையை மட்டும் செய்தால் போதும் என்று விற்பனைப் பிரிவிலிருந்து மாற்றிவிட் டது. நாளெல்லாம் துணிகளை மடித்து மடித்து அவன் மணிக்கட்டிலும் முழங்கையிலும் எப்போதும் நீங்காத வலி இருந்துகொண்டே இருந்தது.

உடன் வேலை பார்க்கும் ஆண்களும் பெண்களும் சிநேகமாக பேச மறுப்பதும், யாரும் தன்னை விரும்பாதவர்களாக இருப்பதும் ஏன் என்று அவனுக்குத் தெரிய வில்லை. எந்தப் பெண்ணும் தன்னிடம் நட்போடு கைகுலுக்கிக்கொள்ளவில்லை என்பது அவனுக்குப் பெரும் பாரமாக இருந்தது. இதுவரை ஒரு பெண்ணின் முத்த ஸ்பரிசத்தை தான் அடையவில்லை என்று நினைக்கும்போது, துக்கம் கழிவிரக்கமாகி உள்ளுக்குள் உடைந்துபோனான். அந்த முதல் முத்தம் ஒரு பிச்சைக் காரியிடமிருந்தோ, அல்லது ஒரு பைத்தியக்காரியிட மிருந்தோ கிடைத்தால்கூடப் பரவாயில்லை என்று தோன்றியது.

எல்லோரும் எதன் நிமித்தமாகவோ விடாமல்பேசிக் கொண்டு இருக்கிறார்கள். பேசவிடாமல் தன்னைக் கட்டிப்போட்டு இருப்பது எது என்று புரியவில்லை. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு ஃபெயிலானவர்கள் எல்லாம் அங்கே வாய்கொள்ளாச் சிரிப்பும் பேச்சுமாக நிறைய ஆடைகளை விற்றுத் தீர்க்கிறார்கள். தான் படித்த டிகிரி இங்கே பேச்சற்று கேவலமாக மதிப்பிடப் பட்டுக் கிடக்கிறது. பேச்சுதான் எல்லாம் என்றால், படிக் காமல் சிறுவயது முதல் பேசுவதை மட்டுமே தகுதியாக வளர்த்து இருக்கலாம். அதுவும் கொஞ்சம் பொய்யாகப் பேச பழகிவிட்டால், வாழ்க்கை சிரமம் இல்லாமல் கழியும்!

சங்கருக்கு விவரம் தெரிந்த நாளில், உடம்பெல்லாம் புண்களோடு ஒரு சிறு நகரத்தில் ஆதரவற்றோர்இல்லத் தின் ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தான். எங்கிருந்து எப்படி அங்கே வந்தான் என்று யாரும் அவனுக்குச் சொல்லவில்லை. அவனும் யாரிடமும் அதைக் கேட்க விரும்பவில்லை. முன்பு இருந்த பசி என்ற ஒரு விஷயம் இல்லை என்பது மட்டுமே அவனுக்கு விடுதலையாக இருந்தது. சீழ் ஒழுகிய புண் ஏற்படுத்திய வேதனையால், அவன் இரவெல்லாம் கத்திக்கொண்டு இருந்தான். அவன் கதறல் எல்லோருடைய தூக்கத்தையும் கெடுப் பதாகவும், அப்படிச் செய்தால் மீண்டும் தெருவில் கொண்டு விட்டுவிடுவோம் என்று அவர்கள் சொல்ல, பற்களைக் கடித்து வலியைப் பொறுத்துக்கொண்டான்.

வலியடக்கிப் பழக்கப்பட்ட நாளில், தானாக யாரி டமும் போய்ப் பேசுவதை நிறுத்திக்கொண்டான். யாராவது பேசினால் மட்டும் பதில் சொல்பவனாக இருந்தான். அங்கே இருந்தவர்கள் என்ன செய்யச் சொன்னார்களோ, அதை மட்டும் செய்தான். நான்குமூலைக்குள் படிப்பு, நான்கு மூலைக்குள் தூக்கம். இது மட்டுமே வாழ்க்கை என்றாகிப் போனது. வரிசையாகச் சாப்பாட்டுக்குச் செல்வது, வரிசையில் நின்று குளிப்பது இது மட்டுமே உலகத்தின் ஒழுக்கம் என்று அங்கே கற்பிக்கப்பட்டது. அரசு கல்லூரி, அரசு விடுதி என்று அவனுடைய கல்லூரிக் காலமும் குறுகியே இருந்தது. கல்லூரிப் படிப்பை முடித்ததும், மிகப்பெரும் ஜன நெரிசலில் சுதந்திரமாக வாழவேண்டும் என்பது ஒரு கனவாக இருந்தது. ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து ஒருநாள் சொல்லிக்கொள்ளாமல் வெளியேறி, இந்த பெரு நகர வாழ்க்கைக்குள் கரைந்தான்.

அக்கா வீட்டில் இல்லாத சமயங்களில் எல்லாம் படுக்கைக்கு அழைக்கும் மாமாவைச் சமாளிக்கமுடி யாமல் ராஜலட்சுமியும், கொடுமைப்படுத்தும் சித்தியை தட்டிக்கேட்காமல் மௌனசாட்சியாக அமர்ந்திருக்கும் அப்பாவைச் சகிக்கமுடியாத கவிதாவும் ஊரைவிட்டு வெளியேற முடிவு செய்தனர். ராஜலட்சுமிக்கு 18 வயது; கவிதாவுக்கு 17.

இருவரும் ஒன்றாக கயிறு மில்லுக்கு பஸ்ஸில் ஏறி வேலைக்குச் செல்லும் நாளிலிருந்து சிநேகிதிகள். எப் போதும் சோகம் அப்பியிருக்கும் முகத்துடன் காணப் படும் அவர்களின் கற்பனை ஒன்றாக இருப்பதைக் கண்டுகொண்டனர். இந்த ஊருக்கு வெளியே எங்கோ தூர நகரத்தில் தங்களுடைய வாழ்க்கை சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது என்று நினைத்த அவர் கள், கிராமத்தைவிட்டு வெளியேறி, கனவுகள் சுமந்து கோயம்பேடு பஸ் நிலையத்தில் வந்து இறங்கினர்.

ஆதரவற்றோர் இல்லத்துக்கு வாசகர்கள் நிதி அனுப்புமாறு நாளிதழில் வந்த விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்த முகவரியைத் தேடிச் சென்றனர். அந்த இல்லம் நகரிலிருந்து விலகி ஒதுக்குப்புறமாக இருந்தது. யாருமே இல்லாத அநாதைகளுக்கு மட்டும்தான் இங்கே இடம் என்று சொல்லி, இல்லத்தைச் சேர்ந்த வர்கள் அந்தப் பெண்களை வெளியே போகச் சொன் னார்கள். தங்களால் ஊருக்கு திரும்பிப் போகமுடியாது; தற்கொலை செய்துகொள்வதைத் தவிர, வேறு வழிஇல்லை என்று இரண்டு பெண்களும் அழுதபடி அங் கேயே உட்கார்ந்தனர். மனமிரங்கிய இல்லத்தினர் தங்க இடம் கொடுத்து, தையல் பயிற்சியும் அளித்தனர்.

அதன்பின், இரண்டு பெண்களும் தூங்கும் நேரத் தில் பெருங்கனவுகளைப் பேசிக்கொண்டு இருந்தனர். அந்த இல்லத்தைவிட்டு வெளியேறி எப்போதும்வாகனங் கள் இரையும் நகரத்தின் மையத்தில் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆறு மாதத்தில் தையல் பயிற்சி முடித்து, அவர்கள் பெரிய துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்யவேண்டி, பகல் முழுதும் நகரத்தில் அலைந்தார்கள். அந்த நேரங்களில் பைக் கில் ஆண்களை கட்டிப்பிடித்துப் பறக்கும் பெண்களை பார்த்து ஏங்கினார்கள். சினிமா தியேட்டருக்குள் உள்ளே போகாமல் வெளியே இருந்தபடி சந்தோஷமாக பேசி சிரித்துக்கொண்டு இருக்கும் மனிதர்களை உற்று நோக்கினார்கள். அவர்களைப் போல் தங்களுடைய சந்தோஷம் எதில் ஒளித்துவைக்கப்பட்டு இருக்கிறது என்பதை அறியும் நோக்கில், அவர்கள் தேடுதல் நகர வீதிகளில், பிரமாண்டமான கட்டடங்களில், வாகன நெரிசல்களில் தொடர்ந்துகொண்டு இருந்தது.

ஒன்றுக்கொன்று பொருத்தம் இல்லாத நிறத்தில் பாவாடை தாவணி அணிந்திருந்த இரு பெண்களும், சங்கர் வேலை பார்த்த அந்த பிரமாண்டமான கடைக் குள் நுழைந்தார்கள். அந்தக் கடையில் வேலை கேட் பதே அவர்கள் நோக்கமாக இருந்தாலும், தாங்கள் அணிந்திருக்கும் ஆடைகளைப் பார்த்து வேலை தர மாட்டார்கள் என்று முடிவு செய்து, புது சுடிதார்வாங் கும் பொருட்டு அந்தக் கடைக்குள் நுழைந்தார்கள்.

அன்று சுடிதார் செக்ஷனில் தள்ளுபடி போட்டதால் பெருங்கூட்டம். துணியை மடித்துக்கொண்டு இருந்த சங்கரை கஸ்டமர்களை கவனிக்கும்படி அங்கேஅனுப் பினார் சூப்பர்வைஸர். அதை நிரந்தரமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில், வரிசையாகத் தொங்கவிடப்பட்ட துணிகளுக்கு மத்தியில் புன்ன கையை வரவழைக்கும் பாவனையில் நின்றுகொண்டு இருந்தான். 300 ரூபாய் மதிப்புள்ள சுடிதார் 80 ரூபாய் என்று போடப்பட்டிருந்த சுடிதார் செக்ஷனுக்கு வந்த ராஜலட்சுமியும் கவிதாவும் ஆளுக்கு ஒரு சுடிதாரைத் தேர்வுசெய்து, பில் போடுமாறு அவனிடம் கொடுத் தனர். அவர்கள் இருவருக்கும் அந்த சுடிதார் பொருத்த மாக இருக்கும் என்று அவன் சொல்ல நினைத்தான். ஆனால், எதுவும் சொல்லாமல் கவுன்ட்டரை நோக்கிப் போனான். பின்னால்போனஇரு பெண்களும் பஸ் சுக்கு செல்ல பணம் மீதம் இருக்கிறதா என்பதைப் பல தடவை உறுதி செய்த பின்னரே பணத்தைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்கள்.

முன்பு போல் இல்லாமல், கொஞ்சம் சுமாராகதுணி களை விற்பனை செய்திருப்பதால், இனி தன்னை விற்பனை செக்ஷனில் போடுவார்கள் என்று நம்பி னான் சங்கர். ஆனால், அடுத்த நாளும் துணிகளை மடித்துவைக்குமாறு சூப்பர்வைஸர் சொல்லிவிட்டார். கொஞ்ச நேரம் பதில் சொல்லாமல் இருந்த சங்கர், தன்னால் நிற்க முடியவில்லை, மயக்கமாக வருகிறது என்று லீவு கேட்டான். கீழே போய் மேனேஜரிடம் கேட்டுவிட்டுப் போகுமாறு சொன்னார்.

அவன் கீழே இறங்கிச் செல்ல, அங்கே நேற்று சுடி தார் வாங்கிச் சென்ற பெண்கள் அந்த சுடிதாரை அணிந்து கொண்டு மேனேஜரிடம் தங்களுக்கு இந்தக் கடையில் வேலை கிடைக்குமா என்று கேட்டுக்கொண்டு இருந் தார்கள். அவன் நினைத்தது போலவே அந்தப் பெண் களுக்கு சுடிதார் பொருத்தமாக இருந்தது. உடனடியாக அதை அவர்களிடம் சொல்ல நினைத்தான். இவன்நிற் பதைப் பார்த்த மேனேஜர், மிகக் கேவலமாக முகத்தை வைத்துக்கொண்டு என்ன என்று கேட்டார். இவன் விவரம் சொல்ல, ‘செய்யற வேலைக்கு லீவு வேற… போ’ என்று அவமரியாதையாக அனுப்பிவைத்தார். இதற்கு மேல் இங்கே வேலையைத் தொடர முடியாது என்று அவனுக்குத் தோன்றியது. வாங்கும் சம்பளம் தங்கும் இடத்துக்கும் சாப்பாட்டுக்குமே போதவில்லை. பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்தபடி அங்கிருந்து நடந்தான். ‘இங்கே வேலை எதுவும் இல்லம்மா’ என்று கறாரான குரலில் மேனேஜர் கத்த, அந்தப் பெண்களும் இவனைப் பின்தொடர்ந்து கடையைவிட்டு வெளியேறினார்கள்.

எங்கே போவது என்று தெரியாமல் பஸ் ஸ்டாண்டில் சிமென்ட் திட்டில் அமர்ந்து ஒவ்வொரு பஸ்ஸாக கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்த சங்கர், ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறிக் கிளம்பினான். புகையோடு வெக்கையைக் கிளப்பிக்கொண்டு சென்ற பஸ்ஸின் ஜன்னல் ஓரத்திலிருந்து பார்த் தான். அந்தப் பெண்கள் இருவரும் பஸ் ஸ்டாண்டில் சிமென்ட் திட்டில் அமர்ந்து இருந்த இரண்டு இளைஞர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்படியே பஸ்ஸிலிருந்து இறங்கி, அவர்களிடம் போய்ப் பேசலாமா என்று யோசித்தான். ஏனோ அந்தப் பெண்கள் அவனுக்கு மிக நெருக்கமான தோழிகளைப் போல் தோன்றினார்கள். அவன் யோசிக் கும்போதே, பஸ் அங்கிருந்து நகரத் தொடங்கியது.

நகரம் விரித்த வலையில் தான் வசமாக மாட்டிக் கொண்டதாக நினைத்த அவனது பயணம் இலக்கு இல்லாமல் சென்றுகொண்டு இருந்தது. ஓயாமல் எங்கேயோ நடந்து போய்க்கொண்டு இருக்கும் மக்கள், நிரம்பி வழியும் ரயில்கள், பஸ் நிலையங்கள், இரவெல் லாம் ஒளிரும் விளக்குகள்… இவை எல்லாம் தன் வாழ்வை மாற்றிவிடும் என நம்பினான். நாள்கள் செல்லச் செல்ல நகரத்தின் சூழ்ச்சி புரிந்தது. தன்னைப் போல் தனிமைகொண்டு அலையும் மனிதர்களையும் நகரம் விடாமல் பிடித்திருந்தது என்பதைக் கண்டு கொண்டான். தனித்துவிடப்பட்ட பிச்சைக்காரன், பிச்சை எடுப்பவனையே பார்த்துக்கொண்டு இருக்கும் மனிதன், ஒவ்வொரு ரயிலையும் தவறவிட்டு தண்ட வாளங்களை வெறித்தபடி இருக்கும் பெண் என்று கைவிடப்பட்டவர்களை நகரம் தன்னுள் வைத்து சிரித்துக்கொண்டு இருக்கிறது.

பஸ் ஸ்டாண்டில் பார்த்த இளைஞர்கள் வேலை வாங்கித் தருகிறோம் என்று சொல்ல, ராஜலட்சுமியும் கவிதாவும் அவர்களுடன் சென்றார்கள். எக்ஸ்போர்ட் கம்பெனியில் நாளைக்கே வேலை கிடைச்சுடுமா என்று நம்பமுடியாமல் திரும்பத் திரும்ப அந்த இளைஞர்களைக் கேட்டுக்கொண்டே வந்தாள் கவிதா. ரோஸ் கலர் சட்டை போட்ட இளைஞன் தனக்குக் காதலனாகக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த ராஜலட்சுமி, அவன் பெயரைக் கேட்டாள். அவன் அவள் கைகளைப் பிடித்து சுரேஷ் என்றான். அவள் கைகளைப் பின்னால் இழுத்து வெட்கத்துடன் சிரித்துக்கொண்டாள். நீலநிற பனியன் அணிந்த இளைஞன் கவிதா கேட் காமலேயே தன் பேர் ரமேஷ் என்றான். இரண்டு பெண்களும் ஏதோ ஜோக் கைக் கேட்டது போல் சுரேஷ், ரமேஷ் என்று அவர்களின் பெயர்களைச் சொல்லிச் சிரித்தார்கள். பின்பு நகரத்துக் காதலர்களைப் போல சினிமாவுக்குப் போனார்கள். படம் பார்க்கும்போது கைகளைக் கோத்துக் கொண்டார்கள். இடைவேளையில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டார்கள்.

அந்தப் பெண்களுக்கு நகரம் மிகச் சுதந்திரமானதாகத் தெரிந்தது. இருட்டில் நகரம் இன்னும் அழகாக இருப் பதாக நினைத்தார்கள். நகரத்தின் நடுவில் ஓடிய கூவம் ஆறும், அதைச் சுற்றியகுடிசைகளும், பழைய அடுக்கு மாடிக் கட்டடங்களும்அவர்களுக்கு வசீகரமாகவே தெரிந்தன.

இருட்டின் நிறமும் நகரத்தின் வெளிச்சமும் சங்க ரின் தனிமையை அதிகப்படுத்தின. இனி யாரிடமும் கைகட்டி நின்று வேலை பார்க்கக்கூடாது. ஆனால், பணத்தை எப்படியாவது சம்பாதித்து விட வேண்டும்! வெளிச்சம் குறைந்த நகரத்தின் புறநகர்ப் பகுதியில் யாருக்கோகாத்து இருப்பதைப்போல் இருட்டில் நின்று தன்னைக் கடந்து செல்லும் பெண்களின் கழுத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தான். ஒடிசலான தேகம் கொண்ட ஒரு பெண் ரோட்டில் நடந்து செல்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் போய்க்கொண்டு இருந்தாள். பஸ் நெரிசலில் பின்னால் நின்று இடித்தவனின் கோர முகமோ, புழுக்கம் குடிகொண்டு இருக்கும் சமையல் அறையின் வாசனை பற்றியோ, அல்லது ராத்திரி படுக்கையில் கேட்கப் போகும் கணவனின் வசைச் சொல்லோ ஞாபகத்தில் வந்து அவளைக் கலக்கமுறச் செய்திருக்கலாம். தன் கழுத்தில் விழுந்த கை, செயினை அறுத்துக்கொண்டு ஓரடி முன் வைக்கும் வரை அவள் எதையும் உணரவில்லை. அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்த்தபடி ஓடத் துவங்கினான் சங்கர்.

அவள் கண்களில் தெரிந்த மிரட்சியையும் சோகத் தையும் பார்த்த அவனால் வெறிகொண்டு ஓட முடிய வில்லை. நடை தளர்ந்தது. அவன் பின்னால் கூக்குர லுடன் ஆட்கள் ஓடிவந்துகொண்டு இருந்தார்கள். எப்படிக் கீழே விழுந்தோம் என்றே தெரியாமல், அவன் முதல் திருட்டில் பிடிபட்டான். அன்று முழுதும் அவன் சாப்பிட்டிருக்கவில்லை.

புறநகர் காவல் நிலையத்தில், பிளந்த உதடுடன் மூலையில் உட்கார்ந்திருந்தான் சங்கர். அவன் கடையில் சுடிதார் வாங்கிய ராஜலட்சுமியும் கவிதாவும் கிழிந்த நாராய் அவன் பக்கத்தில் இருந்த மரபெஞ்சில் கிடத்தப்பட்டனர். நேற்று முழுவதும் அந்தப் பெண்களுடன் சுற்றிய முன்பின் தெரியாத அந்த இளைஞர்கள், நகரத்தின் ஒதுக்குப் புறத்தில் ரயில்வே தண்டவாளத்தின் பின்புறம் இருந்த புதருக்கு அடியில், இரு பெண்களையும் பாலியல் பலாத் காரம் செய்து இருக்கிறார்கள். அதோடு அடங்காத வெறிபிடித்த நாய்கள் அவர் களின் மற்ற நண்பர்களையும் வர வழைத்துப் பெண்களை நாசம் செய்து இருக்கிறார்கள். அந்தப் பெண்கள் தங்கள் சக்தியை எல்லாம் ஒன்று சேர்த்துக் கத்த, பக்கத்தில் செங்கல் சூளையில் வேலை பார்த்தவர்கள் வந்து காப்பாற்றி இருக்கிறார்கள்.

‘எவன் கூப்பிட்டாலும் பின்னாடியே போயிருவீங் களா? அப்படி உடம்பு தெனவு எடுத்துத் திரிஞ்சிருக் கீங்க…’ இன்னும் வாய் கூசும் கெட்ட வார்த்தைகளால் பெண் காவலர்கள் இரு பெண்களையும் ஏசினார்கள். கூனிக் குறுகி அவமானத்தில் நெளிந்தபெண்களின் கண்களிலிருந்த கனவு எல்லாம் தொலைந்திருந்தது.

இப்போது நகரம் அவர்களுக்குச் சாப இடமாகக் காட்சியளித்தது. நகரத்தின் எந்த மூலையிலிருந்தும் கொடும் வாள்கள் தங்கள் மீது பாய்ச்சப்படலாம் என்று பயந்தார்கள். நேற்று பஸ்ஸிலிருந்து இறங்கி அந்தப் பெண்களிடம் பேசி இருந்தால், இன்றைய நிகழ்வு எதுவுமே நடந்திருக்காது என்று சங்கர் நினைத்தான்.

இன்னும் இன்னும் மனிதர்களை உள்ளிழுக்கும் வசீகரத்துடன், பரபரப்பாகவும் பகட்டாகவும் வெளியே செயல்பட்டுக்கொண்டு இருந்தது நகரம்!

– ஜூன், 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *