சின்னாம்பி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2012
பார்வையிட்டோர்: 11,034 
 

சின்னாம்பியைப் பற்றிச் சொல்லமுன், என்னைப் பற்றிச் சொல்லவேண்டும். நான் ஒரு சாதாரண பதிவன். காலை 8 மணிக்கு ஒரு பதிவு போட்டுவிட்டு 8:00:02 இலிருந்து யாராவது புண்ணியவான் ‘கொமென்ட்’ போடுகிறானா என்று பார்க்கத் தொடங்கும் சாதாரண பதிவன். இரண்டு மூன்று ‘அப்பாவிகள்’ தொடர்ந்து ‘கொமென்ட்’ போடுகிறார்கள். அவர்கள் சீரும் சிறப்பும் பெற்றுப் பல்லாண்டு வாழ்க. எனக்கு ஒரு சின்னப் பிரச்சினை ‘தலைப்பு’ப் போட்டால் அதைப்பற்றி எழுதாமல் என்னவோ எல்லாம் எழுதுவேன். எனது பெறாமகள் ஒருத்தி 4ம் வகுப்புப் படிக்கிறாள். தமிழ்ப்பாடத்தில் ‘ஆடு’ என்று தலைப்புப் போட்டு “எங்கள் வீட்டிலுள்ள ஆடு வேப்பங்குழை சாப்பிடும்” என்று தொடங்கி நிறைய எழுதி ‘…இப்படி சவர்க்காரத்திற்குப் பல பயன்பாடுகள் உண்டு’ என்று முடித்தாள். இப்பதானே எல்லாம் ஜீன்ஸ், ஜெனிடிக் என்று ஆராயிறாங்கள். அதொன்றுதான் பரம்பரையிலே ஒடுதுபோல.

சரி, நான் சொல்லப்போற விஷயம் கொஞ்சம் சிக்கலானது. சரியாகப் புரியாவிட்டால் என்னை லூசு என்றுதான் நினைப்பீர்கள். இதைச் சொல்லுறது கொஞ்சம் கஷ்டம். முயற்சிக்கிறேன். முதல்ல எச்சரிக்கை நான் சொல்லப்போறது உண்மை, கற்பனையில்லை. பின்நவீனத்துவப் பிசுக்கோத்தும் இல்லை. அவன் ஒரு விநோதன். சின்னாம்பி என்பது நான் அவனுக்கு வைத்த பெயர்தான். அவனுக்குப் பெயர் இல்லை. “உனக்கு பெயர் என்னடா” என்று அவனை ஒருமுறை கேட்டேன்.

“எனக்கு ஏன் பெயர் இருக்கவேண்டும்” என்றான். இந்த இடத்தில் நான் குழம்பித்தான் போனேன். சின்ன வகுப்பிலை கணக்கு வாத்தியார் சொல்லுவார், “நீ உன்னையும் குழப்பி, என்னையும் குழப்பி, வகுப்பையும் குழப்புறாய்” என்று. அந்தப் பாவம்தான் என்னவோ திருப்பித் தாக்குது.

நான் குழம்பினமாதிரிக் காட்டிக் கொள்ளவில்லை. “சரி உனக்குப் பெயர் சின்னாம்பி” என்று வைத்துவிட்டேன். சரி உங்களுக்குச் சொன்னால் என்ன? சின்னாம்பியைப் பற்றி உங்களுக்குத்தான் முதல்லே சொல்லுகிறேன். பெண்டாட்டிக்குக் கூடச் சொல்லவில்லை. அவள் முந்தியே ‘மனிசன் லூசு சந்திப்புக்களுக்கு (அதுதான் ‘இலக்கியச் சந்திப்புக்கள்’) போகிறார் என்கிறாள். அதிலே இதைச் சொல்லி ஏன் வீண்வேலை. கடைசியாப் போன சந்திப்பிலே வேட்டியை உருவிறமாதிரி நாலு கேள்வி கேட்டாங்கள்;சரி அது இருக்கட்டும். திருப்பப் பாருங்கோ சின்னாம்பியில் தொடங்கி வேட்டியில் வந்து நிற்கிறேன்.

சின்னாம்பியை எப்ப முதலில் சந்தித்தேன்? அதுவுமொரு சின்ன அதிர்ச்சிதான்.நானும் ‘நானுண்டு என் மொக்கைப் பதிவுண்டு’ என்றுதான் இருந்தேன். யாரைவாவது திட்டி எழுதிப் கொஞ்சம் பிரபலமாகுவமென்று ஒரு பதிவு எழுதிக் கொண்டிருந்தேனாம். பின்னும் “கீக் கீக்”என்று ஒரு சாதியாச் சிரித்துக் கேட்டுது. ‘ஷிவ்ட்’ கீ வேலை செய்யவில்லையென்றுதான் யோசனை ஓடியது. என்றாலும் திருப்ப “கீக் கீக்”என்று சிரித்துக் கேட்டது. சத்தம் அந்தக் காலத்து ‘கட்டை ஸ்பீக்கர்’இலிருந்து வருகிறமாதிரி, ஸ்டீரியோ இல்லை. “யாரடா அது?” என்று அதட்டினேன்.

எதிரில் பணிவாக “ஐயா வணக்கம்” என்று வந்தான். சாதாரண உயரம், சாதாரண உருவம், சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லை. அதுதான் எனக்குக் கொஞ்சம் கவலை. இரண்டு பந்தி வர்ணித்து உங்களை இம்சைப்படுத்தி இருக்கலாமில்லையா?

“எப்படி வந்தாய், முன்கதவு பூட்டியிருக்கே?”
“நான் ஏன் வரவேண்டும், நான் இங்குதான் எப்பவும் இருக்கிறேன்!”
“ஓஹோ தாங்கள்தான் கடவுளோ?”
“அதுதான் இல்லை, நானும் உன்னைமாதிரி ஒரு சாதாரணன்”.
“கண்டுபிடித்து விட்டேன் நீ யாரென்று, பழைய நாடகங்களில் நீ நல்ல பேமஸ். நீதான் என் மனச்சாட்சி”
“கஸ்மாலம், கொஞ்சம் வித்தியாசமாக யோசி, இன்னும் பழைய காலத்திலை நிக்கிறாய். ‘நனைவிடை தோய்தல்’ சக்கரவர்த்தி என்று மெல்பனில் இருந்து விருதெல்லாம் வரப்போகுது!”
“விருதா, நல்லதுதானே யப்பா!”
“இது நக்கல் விருது ஓய்,உமக்கு வயது போட்டுது என்று பூடகமாசச் சொல்லுறாங்கள்”

நானும் ‘பதிவுலகத்திலே இது சகஜமப்பா’என்று இருந்துவிட்டேன்.

என்னோடு அந்தக் காலத்திலே படித்த உதயன் அடிக்கடி சொல்லுவான் “xyz இலே இதெல்லாம் சகஜமப்பா” என்று. இதிலே xyz என்னவாகவும் இருக்கலாம். உதாரணம் ‘வாழ்க்கை, யானைபிடிப்பது, கொய்யாக்காய் களவெடுக்கிறது”. இப்ப அவன் phD முடித்து அமெரிக்காவிலே. இவனைப்பற்றிச் சொல்லப்போனால் அது பெரிய கதை. ஆறாம் வகுப்பிலே தமிழ் வாத்தியாரைப் பிடிக்கவில்லை என்று கவிதை எழுதினான். வாத்தியாருக்கு ஒவ்வொரு நாளும் காலைச் சாப்பாடு இடியப்பமும் சொதியும் மட்டுமே என்பது ஊரறிந்த இரகசியம், மத்தியானச் சோற்றிலும் மீந்துபோன சொதியை ஊற்றித் தின்னுவார். சொதியர் என்றுதான் அவரை ஊரிலே தெரியும்.

“கொக்கு மூக்கனே, குதிரைச் செவியனே
நித்தமுனக்கு சொதி செய்வாள் உன்னில்லாள்
காட்டுவாய் உன் கொதியை எம் மீது
முறிந்தது பிரம்பு, என் பாவம் செய்தோம் யாம்?”

எப்பவுமே சிரிக்காத தமிழ் வாத்தியார் இதை வாசித்த பிறகு விழுந்து விழுந்து சிரித்தார். கடைசி வரி சரியில்லை என்று ‘கொமெண்ட்’ போட்டும் கொடுத்தார். கேதீஸ்வரனுக்கு இந்தச் சந்தங்களொன்றும் பிடிக்காது.

“முறிந்த பிரம்பொன்று
சொல்லிச் சென்றது
வாத்தியாரின் கொதியை…”

என்று எழுதவேண்டும் என்று திருத்தம் கொடுத்தான். நான் தலையைப் பிறாண்டிக் கொண்டேன்.

“டேய் உனக்குக் கவிதை எல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது, விட்டுர்ரா!”

திடுக்கிட்டு விட்டேன். இவனுக்கு நான் நினைப்பதுவும் தெரிகிறது.

“சின்னாம்பி” பரிதாபமாத் தொடங்கினேன்,”உனக்கு நான் நினைப்பதுவும் தெரியுதா?”
மீண்டும் “கீக் கீக்” என்று சிரித்தான் சின்னாம்பி. “அந்த ‘அறிவில்’ நான் கொஞ்சம் வீக்… நீ நினைப்பதில் ஒரு பகுதிதான் எனக்குத் தெரிகிறது, முழுக்கத் தெரியுதில்லை ” என்று கொஞ்சம் வெட்கப்பட்டான்.

“சரி இப்ப சொல்லு நீ ஆர்?” பரிதாபமாகக் கெஞ்சினேன்.

“கேள்விக்குக் கேள்வி, மனிதனுக்கு எத்தனை அறிவு உண்டு?”

ஏழு என்று சொல்ல யோசித்து, “ஆறு” என்றேன்.

“எமக்குப் பன்னிரண்டு” என்றான்.

(தொடரலாம்)

———–
கொதி -கடுங்கோபம்
சவர்க்காரம்- soap

– June 13, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *