க்ஷணப்பித்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 12, 2022
பார்வையிட்டோர்: 4,163 
 

(1973 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மக்களுக்காக ஓடிக்கொண்டிருக்கும் பஸ்ஸில் மக்கள் ஓடிச் சென்று ஏறிக்கொள்கின்றனர். வெள்ளவத்தை பஸ் நிறுத்துமிடத்தில் ஏறிய ஒரு கிழவன். ஒரு பெண், ஒரு வாலிபன் ஆகியோருக்கு இருக்க இடமில்லை. ஆடிச்சென்று கொண்டிருக்கும் பஸ் அதிலிருந்தவர்களையும் ஆடவைத்துக் கொண்டு இருக்கிறது.

கிழவனுக்கு பின்னால் நிற்கும் வாலிபனின் வசீகரம் பெண்ணின் மனதைக் கவர்கிறது. அது காதல் அல்ல. ஒரு வகையான கவர்ச்சி. சுமார் ஆறடி உயரம், சிரிக்கும் அழகான முகம், சிவந்த நிறம், எவரையும் கவரும் எழிலான தோற்றம் இவற்றோடு அவன் ஒயிலாக நிற்பது, பஸ்ஸின் ஆட்டத்திற்கேற்ப மெதுவாக ஆடுவது எல்லாமே பெண்ணின் மனதை கவர்கின்றது.

அவள் ஏங்குகின்றாள் “ திரும்பி ஒரு முறை என்னைப் பார்க்க மாட்டரா?”

அவனும் எண்ணுகிறான் “திரும்பிப் பார்;த்தால் எங்கே என்னைத் தவறாகப் புரிந்து விடுவாளோ?”

“எவ்வளவு வடிவானவர்!”

“என்ன ஸ்டைலாக நிற்கிறாள்”

“அவர் சிரிப்பதே தனி அழகு!”

இப்படியெல்லாம் ஒருவரைப் பற்றி ஒருவர் இனிமையாகச் சிந்திக்கின்றனர்.

பஸ் நிற்கிறது. இருவர் இறங்குகின்றனர். பெண்ணுக்கு இருக்க இடம் கிடைக்கிறது. அவள் இருக்கும் சீற்றுக்கு முன்னாலுள்ள இருக்கையிலும் ஓரிடம் காலி.

அந்த இடத்துக்காக கிழவனும் வாலிபனும் போட்டி போட்டபேர்து வாலிபனுக்கு வெற்றி.

“பாவம்! அவருக்கு ஒரு மாதிரி இடம் கிடைத்தது” அவனுக்காகப் பரிதாபப்பட்டவள் கிழவனைப் பார்க்கிறாள்.

“ஐயோ! பார்க்கவே சகிக்கவில்லை. நடக்கவே முடியாது. இந்தக் கிழடுகள் எல்லாம் ஏன் பஸ்ஸிலை வருவான்? வீட்டிலை பேசாமல் இருக்கலாமே!”

மூக்குச் சளியும் சிந்திக்கொண்டு. சீ….வாயாலை வீணியும் வடியுது.”

“கை காலிலையிருக்கிற புண்ணுக்கு மருந்தும் கட்டாமல்..”

எல்லாம் வெறுப்பான எண்ணங்கள்.

வாலிபன் பஸ் கண்ணாடிக்கூடாக வெளியே பார்ப்பதுபோல அவளைப் பார்க்கிறான். அவளும் அவனைப் பார்;க்கிறான். அவளும் அவனைப் பார்க்கிறாள். கண்கள் ஏதோவெல்லாம் பேசுகின்றன.

பஸ் பம்பலப்பிட்டியில் நிற்கிறது.

அவளுக்குப் பக்கத்தில் இருந்தவர் இறங்க, அந்த இடத்தைக் கிழவன் பிடித்துக் கொள்கின்றான்.

அவளின் அவருவருப்பு- “ஐயே…சீ…’

பஸ் வேகமாகச் செல்வதாலும் திடீர் பிரேக்குள் பிடிப்பதாலும் ஒருவரோடொருவர் மோதிக் கொள்கின்றனர். வாலிபன் பக்கத்தில் இருந்தவருடன் மோத, கிழவன் அந்தப் பெண்ணுடன் முட்டிக் கொள்கின்றான்.

திரும்பி முறைத்துப் பார்க்கிறாள். “நான் சென்ஸ்.”

நாலைந்து மாதங்களாக, சவரக் கத்தியே பட்டறியாத முகம். அழுக்குச் சட்டை. பரட்டைத் தலை. ஒரு வகையான வெடில் வேறு வீசியது.

வாந்தி வருவது போன்ற அருக்குவிப்பு. நகர்ந்து இருந்தாள். வெறுப்பு வெடித்தது. “இந்த இடத்திலை அவர் மட்டும் இருந்திருந்தால்” மனக்குரங்கு கிளைக்குக் கிளை தாவியது.

“கொஞ்ச நேரம் என்னுடன் பேச மாட்டாரா, இவர்?”- வடிவான சட்டை, அந்தச் சிரிக்கும் பார்வையொன்றே போதுமே, எப்பவும் பார்த்துக் கொண்டேயிருப்பதற்கு!”

“ஹம்!” என்று ஆழ்ந்த பெருமூச்சொன்றை வெளியிட்டாள், அவள்.

பஸ் நிற்கிறது.

ஒருவரையும் இறக்கிக் கொள்ளாத பஸ் கர்ப்பிணி ஒருத்தியை ஏற்றிக்கொண்டு புறப்படுகின்றது. இளமை குலுங்கும் அவள் பெருத்த வயிறுடன் கம்பியை பிடித்துத் தொங்கிய வண்ணம் வாலிபனுக்குப் பக்கத்தில் வந்து நிற்கிறாள்.

அவனுக்கும் அது தெரிகிறது. திரும்பிப் பார்த்தால் எழும்பி இடங்கொடுக்க வேண்டி வருமோ என்ற அச்சம் அதனால் வீதியைப் பார்க்கிறான். முன்னாலே இருக்கும் பெண்ணைக் கடைக்கண்ணால் நோக்குகிறான்.

“வாலிபன் எழும்பி இடம் கொடுக்கப் போகிறான்” என்ற நினைப்பு மனசில் சுழியிட இருந்தவளுக்கு “நீ இங்கே வந்திரு, தங்கச்சி” என்ற கிழவனின் குரல் திகைப்பை அளிக்கிறது.

கிழவன் எழும்ப இவளுக்குப் பக்கத்தில் அமர்கின்றாள்.

பக்கத்தில் அவள் வந்து இருந்ததுமே, இவளது கனவுகள் சிதைந்தன. “சீ” இவனும் ஒரு மனிசனா?

முன்னர் எனக்கிவன் எப்படிக் கவர்ச்சியாக தென்பட்டான்? என்று இப்போது இவள் அதிசயப்பட்டாள்.

“கவர்ச்சி ஒரு கண நேர மயக்கம். உயர் நடத்தை தான் சிறந்த ஆண்மை!” என்று இவள் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

கிழவனை நிமிர்ந்து பார்த்தாள். இப்பொழுது கிழவன் மேல் வெறுப்பில்லை. துவேசமில்லை. அசூசையில்லை. மாறாக, மனதிற்குள் பரிவுணர்ச்சி குடிகொண்டது. பஸ் ஓடிக்கொண்டிருக்கிறது. இவள் தற்செயலாகக் கூட அந்த நவநாகரீக ரோமியோவின் பக்கம் திரும்பிப் பார்க்கவேயில்லை.

– மல்லிகை 1973 – நிர்வாணம் (சிறுகதை) – பதிப்பு: ஒக்டோபர் 1991 – புனித செபத்தியார் அச்சகம், மட்டக்களப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *