”எனக்கு ஒரு பிரச்சனை” என்று வந்து நின்ற இளைஞனை நிமிர்ந்துப் பார்த்தார் குரு.
“சொல்லுப்பா, என்ன ஆச்சு?”
“என்னை யாருக்கும் பிடிக்கவில்லை. நான் எப்போதும் குறை கூறிக் கொண்டே இருக்கிறேனாம். குறையிருந்தால் அதை சுட்டிக் காட்டுவதில் என்ன தப்பு?” என்று கோபமாய் கேட்டான் இளைஞன்.
அவன் பிரச்சனையை அவனுக்கு உணர்த்த ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார் குரு.
“ஒரு வீட்டுல காலை நேரம். அப்பா வேலைக்கு கிளம்பிக்கிட்டு இருந்தார். பையன் காலேஜுக்கு கிளம்பிக்கிட்டு இருந்தான்.ரெண்டு பேரும் டிபனை அவசரமா சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. சட்னில உப்பு கொஞ்சம் அதிகமாயிருந்தது.உடனே பையனுக்கு கோபம் வந்துருச்சு. ‘என்னது சட்னில இவ்வளவு உப்பு, சாப்பிடவே முடில’ என்று கத்தினான்.
‘அப்படியா?’ என்று கணவனிடம் கேட்டாள் அம்மா. அதற்கு கணவன், ‘எனக்கு சரியா இருக்கிற மாதிரிதான் இருக்கு’ என்று சொல்லிவிட்டான். பையனுக்கு கோபம் வந்துவிட்டது. ‘என்னப்பா இப்படி சொல்றிங்க?’ என்று சாப்பாட்டை தள்ளி வைத்து விட்டு காலேஜுக்கு கிளம்பிப் போய்விட்டான்.அம்மாவுக்கு வருத்தமாக போய்விட்டது.
அன்று இரவு குடும்பத்தினர் அமர்ந்திருக்கும்போது மகனிடம் காலையில் அவன் நடந்துக் கொண்டவிதம் சரியில்லை என்று சொன்னார் அப்பா. உடனே மகன், ‘ காலைல சட்னில உப்பு ஜாஸ்தியாதானே இருந்துச்சு. நீங்க ஏன் சரியா இருக்குனு சொன்னீங்க?’ என்று திருப்பிக் கேட்டான்.
அதற்கு அப்பா சற்று யோசித்துவிட்டு, ‘மகனே, நீ சட்னில உப்பைதான் பார்த்தாய். நான் அதில் உங்க அம்மாவின் அன்பைப் பார்த்தேன். காலைல நமக்காக எழுந்து நாம கிளம்பறதுக்குள்ள சமையல்லாம் செஞ்சு தராங்க. அதுல ஒருநாள் உப்பு அதிகமா இருந்தாலும் குறைவா இருந்தாலும் பொருட்படுத்தக் கூடாது.அவங்களோட அன்பைதான் பாக்கணும். உலகத்துல எல்லாமே கச்சிதமா இருந்துராது’ என்று சொன்னார்.
தந்தை சொன்னதை கேட்டதும் தனது தவறை உணர்ந்தான் மகன்.
இந்த சம்பவத்தை குரு சொன்னதும் இளைஞனுக்கும் தன்னுடைய தவறு புரிந்தது.
அப்போது குரு அவனுக்கு சொன்ன WINமொழி: குறைகளையே பெரிதுப்படுத்திக் கொண்டிருந்தால் நிறைவாய் வாழ இயலாது.
– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)
அமரர் அப்துல்கலாம் ஐயாவின் கருகிய தோசை நிகழ்வை தழுவியது.