குமார் தையலகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 9,117 
 

குமாரைச் சுற்றி வட்டம், சாய் சதுரம், செவ்வகம், அருங்கோணம், முக்கோணம்

போன்ற ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். அது குமாரின் நண்பர்கள் கூட்டம். அவரது ஆத்மார்த்த நண்பர்கள் என ஒரு பட்டியல் எடுத்தால், அதற்கான ரேஷன் கார்டை 50 பேர் வைத்திருப்பார்கள். குமாருக்கு அலியார் ராவுத்தர் உரக் கடை மாடியில் ஒரு தையலகம் இருந்தது. ஸ்கூலைக் கட் அடித்துவிட்டு வரும் ஜேக்கப் புத்தகப் பை வைக்க, அலியார் மகன் அக்பர் திருட்டு தம் அடிக்க, பாண்டியன் ‘டன்… டன்’ முரட்டுச் சங்கீதத்தோடு தூங்க, தவசி அரசியல் பேச எனப் பல்நோக்குத் திட்டத்தில், தையல் தவிர அங்கு எல்லாம் நடந்தது. வந்து போகிறவர்களுக்கான டீ செலவுக்கு அவ்வப்போது துணி தைப்பார் குமார்.

“எடே… சீட்டு விளையாட ஒரு கை குறையுது வந்து உட்காருடே” என தளவாய் அழைத்தால் போதும், வெட்டிக்கொண்டு இருக்கும் துணியை அப்படியே போட்டுவிட்டு வந்து அமர்வார் குமார். தையல் கடை, சீட்டாட்டக் களமாகும். கார்டைக் கையில் பிடித்தபடி, “குமாரே… நீ துணி குடுக்கலங் கறதுக்காக எவனும் அம்மணமா போவ மாட்டான்டே, கவலைப்படாம விளையாடு!” என்பான் தளவாய்.

குமார் எல்லோரையும் கெடுக்கிறார் என்கிற பேச்சு ஊருக்குள் இருக்கிறது. உண்மையில் குமாரைத்தான் எல்லோரும் கெடுத்துக்கொண்டு இருந்தார்கள். யார் வேண்டுமானாலும் ஒருமுறை வந்து கெடுத்துவிட்டுப் போகலாம் என்கிற அளவுக்கு, குமார் நல்லவர்.

அடிப்படையில், குமார் ஒரு நாத்திகர். ஆனால், அவரது நாக்கில் எப்போதும் சனி குடிகொண்டு இருக்கும். அந்த சனி எழுந்து ஒருநாள் கரகாட்டம் ஆடியபோதுதான், அவர்கள் ஒரு நாடகம் போடுவது என முடிவு எடுத்தார்கள். அவர்கள் எடுத்த முடிவில் தவறு இல்லை. அதை நாகராஜன் முன்னிலையில் எடுத்ததுதான் தவறு.

நாகராஜன் அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தையே கிடையாது. ‘இமய மலையைத் தூக்கி கூனி குளத்துக் கரையில் வைக்கணும் நாகராஜன்’ என்றால், ‘இந்தா, குளிச்சுட்டு வந்து வெச்சுர்றேன்!’ என்பான். அவன் சொல்லும்விதத்தில் அதை நாகராஜன் செய்து முடிப்பான் என நம்பத் தோன்றும். அவன் பேச்சு சாதுர்யம் அப்படிப்பட்டது. அதுவும் இல்லாமல், இரண்டொரு நாடகங்களில் நடித்து, நாடகத் துறையில் முன் அனுபவம் பெற்றவனாகவும் இருந்தான். இந்தக் காரணங்களை மனதில்கொண்டு நாகராஜனை முன்னிறுத்தி இந்த நாடகத்தை நடத்துவது என்று முடிவெடுத்தார் குமார்.

“நீ எதைப்பத்தியும் கவலைப்படாத குமார். நான் சொல்றத மட்டும் செய். மத்தத நான் பாத்துக்கறேன்” – நாகராஜனின் இந்த வார்த்தை அங்கே இருந்த எல்லோருக்கும் தெம்பூட்டுவதாக இருந்தது.

எல்லோரையும் கர்வமாகப் பார்த்தபடி, “யேய்… நல்லா கேட்டுக்கங்கப்பா… இந்த நாடகத்துக்கு உங் கைலயிருந்து ஒரு பைசா செலவு பண்ணக் கூடாது. அது இந்த நாகராஜனுக்குப் பெரிய அவமானம். நான் வசூல் பண்ணித் தர்றேன். இல்லன்னா, நானே செலவு பண்றேன்!”

“சர்தாம்டே… எப்படி வசூல் பண்றது? குறைச்சுப் பாத்தாலும் 10 ஆயிரம் ரூபாயாவது வேணுமே” என்றான் அக்பர்.

“நான் இருக்கும்போது எதுக்கு குறைச்சுப்பாக்கறே..?” என்றபடி மோவாயைத் தடவிக்கொண்டு “ம்… சரி, அக்பர் ஒரு லிஸ்ட்டைப் போடு!”

அக்பர் பேப்பர் எடுக்க, கடகடவென நாலைந்து பண்ணையார்கள் பெயரைச் சொல்லி, தலைக்கு

1,000 ரூபாய் எனப் போட்டான். “ஏம்ப்பா, இவ்வளவு பணம் தருவாங்களா? 500 ரூபா போடேன்” என்ற தளவாயிடம், “நான் இதை எடுத்துச் செய்யணுமா வேணாமா? ‘500 ரூபா குடுங்க பண்ணையார்’னு கேட்டா, அவங்க என்னை அசிங்கமா நெனப்பாங்களா… இல்லையா?” என ஏகத்துக்குக் கோபப்பட்டான் நாகராஜன். அவன் கோபத்தைப் பார்த்து எல்லோரும் அமைதி ஆனார்கள்.

நாகராஜனின் கணக்குப்படி 15 ஆயிரம் ரூபாய் வந்தது. “சரிதானாடே போதுமா? இல்ல, இன்னும் கொஞ்சம் வசூல் பண்ணித் தரட்டுமா? அடுத்த நாடகத்துக்கு இருக்கட்டுமேன்னு இன்னும் சிலரை விட்டு வெச்சிருக்கேன்!” – நாகராஜன் இதைச் சொன்னதும் எல்லோரும் கோரஸாக, “இல்லல்ல… இது போதும். மத்ததை அடுத்த நாடகத்துல பார்த்துக்கலாம்” என்றார்கள்.

குமார் செலவில் டீ, வடை சாப்பிட்டுவிட்டு, மிச்சம் இருக்கும் 5,000 ரூபாயை ஒரு அக்கவுன்ட் ஓப்பன் பண்ணி அதில் போட்டுவைத்தார்கள். நாடக மன்றத்துக்கு ‘பாரதிதாசன் நாடக மன்றம்’ எனப் பெயர்வைத்து, செப்டம்பர் 17 அன்று நாடகம் நடத்துவது என்று முடிவானது. நிர்வாகக் குழுவை உருவாக்கி சங்கத்தைக் கலைக்க யத்தனித்தபோதுதான், அக்பர் முக்கியமான கேள்வி ஒன்றைக் கேட்டான். ‘எல்லாம் சர்தாம்… கதை என்ன..?’ என்ற அக்பரின் கேள்விக்கு குமார் இன்னொரு ரவுண்ட் டீ, வடை சொல்ல வேண்டியதாக இருந்தது. வடை வரும் வரை தீவிர சிந்தனையில் இருந்த நாகராஜன், வடை வந்ததும் ஒரு வடையை எடுத்துக் கடித்தபடி, “நான் ஒரு கதை சொல்றேன்” என்றான். ஆளுக்கு ஒரு வடையாக எடுத்து தட்டைக் காலி செய்தபோது, “ஒரு ஊர்ல ஒரு பண்ணையார்” எனக் கதையைத் துவங்கினான் நாகராஜன். “ரொம்ப நல்லா இருக்குடே” என்ற தளவாயின் வடை விமர்சனத்தை நாகராஜனின் கதை விமர்சனமாக எல்லோரும் புரிந்துகொண்டார்கள். அந்த உற்சாகத்தில் முழுக் கதையையும் சொல்லி முடித்தான் நாகராஜன்.

நாகராஜன் கதையைவிட, அவன் வசூல் பண்ணித் தருவதாகச் சொன்ன கணக்கு எல்லோருக்கும் பிடித்ததாக இருந்தது. இரண்டு நாட்களில் கதையை முடித்துத் தருவதாகச் சொல்லி, நாகராஜன் விடைபெற்றுச் சென்றதும், தளவாய் அடக்க முடியாமல் சிரித்தான்.

“எல்லாப் பயலுவளையும் முட்டாளாக்கிட்டுப் போய்ட்டானே, கெட்டிக்காரம்பா நாகராஜன். ரெண்டு டீ, வடைக்கு எம்புட்டுப் பேச்சு… அது எப்படி குமாரு, இல்லாத பணத்தை அக்கவுன்ட் ஓப்பன் பண்ணிப் போடப்போறியளோ? இது ஒப்பேறாது!”- தளவாயின் அவநம்பிக்கை யாருக்கும் பிடிக்கவில்லை. எல்லோரும் நாகராஜனை நம்பினார்கள்.

“வசூல் பண்ண முடியலேன்னா, நான் செலவு பண்றேன்னு சொல்லி இருக்கான்டே… செய்வான்”- கோபமாகச் சொன்னார் குமார்.

“கிழிச்சாரு… குடிச்ச டீக்கே காசு குடுக்கல. இவரு செலவு பண்ணுவாராக்கும்!”- தளவாயின் பேச்சில் கிண்டல் இருந்தது. யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை. எல்லோருடைய மனதுக்குள்ளும் 15 ஆயிரம் ரூபாய் பற்றிய நம்பிக்கை பிரதானமாக இருந்தது.

சொன்னபடியே இரண்டு நாட்களில் இடுப்பு சாரத்தில் ஒரு 40 பக்க நோட்டைக் கட்டிக்கொண்டு வந்தான் நாகராஜன். அதற்குள் நாடகத்துக்கான மேடைக் கதை இருந்தது.

“யேய் குமாரு… நீ யோகக்காரனப்பா, கதை பிரமாதமா வந்திருக்கு!”

“அதை நாங்க சொல்லணும், முதல்ல கதையைச் சொல்லு” – அக்பர் இதைச் சொன்னதும் நாகராஜனுக்கு முகம் சுருங்கிப்போனது. அதைக் காட்டிக்கொள்ளாமல், “திருச்சி பண்ணையார்கிட்ட பேசினேன் குமாரு. எல்லா செலவையும் நானே பண்றேன்னார். நான்தான் வேணாம் 1,000 ரூபா மட்டும் குடுங்கன்னேன்!”

நாகராஜன் பண விவகாரத்தை ஒரு துருப்புச் சீட்டைப்போல உபயோகித்தான். எல்லோரும் அமைதியானார்கள். அந்த அமைதியோடு, எழுதிவைத்த நோட்டை எடுத்துக் கொடுத்தான். நிதானமாக படித்துப்பார்த்த அக்பர், “கதையில நிறைய ஓட்டை இருக்கடே” என்று சொல்லவும், சட்டென்று “அந்த ஓட்டையை அடைக்கறதுக்குத்தான உன்னை வசனம் எழுதச் சொல்றேன்” என்றான் நாகராஜன். தன்னை வசனகர்த்தாவாக்கிய, நாகராஜனைத் தனது சோடாபுட்டி கண்ணாடி வழியே கண் கலங்கிப் பார்த்தான் அக்பர். அந்தக் கலக்கத்தில் நன்றி இருந்தது.

” ‘பண்ணையார்… உன்னை அழிக்காம விட மாட்டேன் ஹா… ஹா… ஹா..!’ன்னு ஒரு மர்மக் குரல் ஒலிக்கும். பண்ணையார் பயப்படுவாரு. இதுதான் நாடகத்தோட மொத ஸீனு. இதை மட்டும் மாத்திராத. அப்பதான் நாடகம் முடியற வரைக்கும் ஆடியன்ஸுக்கு ஒரு சஸ்பென்ஸ் இருந்துக்கிட்டே இருக்கும். எழுதி முடிச்சுட்டு, என்கிட்ட ஒரு தடவ காட்டிரு!” என இன்ஸ்ட் ரக்ஷன் கொடுத்துவிட்டுச் சென்றான் நாகராஜன்.

அன்றில் இருந்து அக்பர் காலையில் தூங்கி எழுந்தால், இரவு படுக்கும் வரை ஏதாவது ஒரு வசனத்தைப் பேசியபடியே இருந்தான். குமார் தையலகம் ஒரு தற்காலிக நாடக மன்றமானது. தனது இயல்பான சோம்பேறித்தனத்தையும் மீறி, குமார் பரபரப்பாக இயங்கினார். நடிக்க விருப்பம் தெரிவித்தவர்கள் பெயர்ப் பட்டியலைப் பார்த்ததும் குமாருக்கு அதிர்ச்சியாக இருந்தது. எல்லோருமே கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பைக் கேட்டார்கள். இரண்டு டூயட் வேண்டும் என்பது குறைந்தபட்சக் கோரிக்கையாக இருந்தது. தங்களுக்கு ஒரு ஜோடி இருக்கும்படி பார்த்துக்கொண்டால், நடிகை செலவை ஏற்றுக்கொள்ளவும் சிலர் தயாராக இருந்தார்கள்.

குமாருக்கு தனது நாடகத் திட்டம் இத்தனை வரவேற்பைப் பெற்றதில் தலைகால் புரியவில்லை. ஆண்டியாப் பிள்ளையிடம் பந்தலுக்கும், வேலு ஆசாரியிடம் மேடைக்கும் சொன்னார். நாகர்கோவிலுக்குச் சென்று அரசு செட்டிங்ஸுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்தார். எல்லாம் கைக்காசு. குமாரின் இந்த வேகமும் பரபரப்பும் தளவாய்க்கு வேடிக்கையாக இருந்தது.

“என்னடே… துட்டு செழிப்பா இருக்குபோல. அந்த 15 ஆயிரத்த வசூல் பண்ணியாச்சா?” தனது கடை வாசலில்வைத்து இதைக் கேட்டான் தளவாய். அவனது கேள்வி மிகவும் நக்கலாக இருந்தது. அதே நேரத்தில் குமார், இந்த நாடகத்தின் மூலம் அழிந்துவிடக் கூடாது என்கிற ஆதங்கமும் இருந்தது.

“இப்ப நாம் கைலருந்து போடுவோம். பொறவு எடுத்துக்குவோம். வசூல் பண்ணிக் குடுத்துருவான். வேற என்ன!”- குமாரின் இந்தப் பதில் தளவாய்க்குத் திருப்தியாக இல்லை. “கடனக் கிடன வாங்கி மாட்டிக்கிடாத. பொறவு பஜார்ல லாந்த முடியாது!” என்றான். அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே, ‘நாகராஜன் குடுத்தான்’ என திருநெல்வேலியில் இருந்து ஒரு பார்சலைக் கொண்டுவந்து கொடுத்தான் சாகுல். “பார்சல் பெருசா இருக்கடே! 15 ஆயிரத்தையும் 1 ரூபா நோட்டாக் குடுத்துவிட்டு இருக்கானோ” என்றபடி பார்சலைப் பிரித்தான் தளவாய். அதற்குள் டொனேஷன் புக்கும், பிட் நோட்டீஸும் இருந்தது. “குமாரே… உன்னை வசூல் பண்ணி எடுத்துக்கிடச் சொல்லி இருக்கான் புரியுதா?”

தளவாய் சொன்ன இந்த வார்த்தைகளின் உண்மை சில நாட்களில் குமாருக்குப் புரிந்தது. நாடகத்துக்கான ரிகர்சல் ஆரம்பித்த பிறகும் நாகராஜனிடம் இருந்து பணம்பற்றி எந்தத் தகவலும் இல்லை. ’10 ஆயிரத்தை வசூல் பண்ணிவிட முடியுமா?’ என்கிற கேள்வி எழுந்தது.

“எனக்கு ஒரு டூயட் குடு குமாரு. 500 ரூபா தாறேன்” என்று பேரம் பேசினான் காஜா. “யே… நீ நடிக்கவே இல்லியே? டூயட் மட்டும் எப்படிப் பாடுவே?” என்றான் குமார். “கதாநாயகி, கதாநாயகனை சின்ன வயசுல எப்படி இருப்பான்னு கற்பனை பண்ணிப் பாடறானு ஸீன் வை” என்ற காஜா, நான்கு அடிக்குச் சற்று கூடுதல் உயரம். இப்படி ஆளாளுக்குக் கிண்டல் செய்யும் நிலை ஏற்பட்டுவிட்டதே என்கிற ஆதங்கம் இருந்தாலும், குமார் எந்தவிதமான சமரசத்துக்கும் தயாராக இல்லை. நாகராஜனை முன்னிறுத்தி ஆரம்பிக்கப்பட்ட நாடகம், நாகராஜனின் கண் முன்னால் இந்த நாடகத்தை நடத்திக் காட்டிவிட வேண்டும் என்கிற வெறியை ஏற்படுத்தியது. இத்தனை இளைஞர்களை வைத்துக்கொண்டு, ஒரு நாடகத்தை நடத்த முடியாதா… அதையும்தான் பாத்துருவோம் என முடிவெடுத்தார் குமார்.

“நாம ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டுத் தான் நாடகத்தை நடத்தணும், என்ன சொல்லுதிய?” – ரிகர்சல் நடக்கும் இடத்துக்கு வந்து குமார் இதைச் சொன்னதும், “கவலப்படாதீங்க குமாரண்ணே… நாங்க வசூல் பண்ணித் தாறோம்” என உற்சாகப்படுத்தி னார்கள். ஆளுக்கு ஒரு டொனேஷன் புத்தகத்தை வாங்கிச் சென்றார்கள். உடையாரும் குமாரும் வெளி வசூலுக்குப் போவது என்றும், அக்பரும் தவசியும் ரிகர்சலைப் பார்த்துக்கொள்வது என்றும் முடிவானது. பம்பரமாகச் சுழன்று வசூல் வேட்டையை நடத்தினார்கள். எதிர்பார்த்த மாதிரி பணம் வசூலாகவில்லை.

ஒருநாள் வசூல் முடித்துவிட்டு வரும் வழியில், குமார் நாகராஜனைச் சந்தித்தார். இந்த நாடகத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதவனைப்போல, “அப்புறம் குமாரு வசூல் எப்படி இருக்கு?” என்று கேட்டான். குமாருக்கு வெறிகொண்ட கோபம் வந்தது. அத்தனையும் அடக்கிக்கொண்டு “ஏன்டே… இப்படிக் கழுத்தறுத்தே?” என அமைதியாகக் கேட்டார்.

“நீ நெனைக்கிற மாதிரி நாடகம் நடத்துறது சாதாரண விஷயம் இல்ல. நானும் நிறையப் பேருகிட்ட பேசிப்பாத்தம்டே. எவனும் காச இளக்க மாட்டேங்கறான்!”

“அதையாவது சொல்லலாம்ல… 15 ஆயிரம் ரூபா வசூல் பண்ணித் தாறேன்னுட்டு நீ பாட்டுக்குக் காணாமப்போயிட்டே!”

“தப்புதான்… ஆனா, நீ ஒண்ணு புரிஞ்சுக் கணும். நான் வசூல் பண்ண முடியலன்னு சொல்லி இருந்தா, நீ என்ன பண்ணி இருப்பே? ‘சரி, நாடகம் நடத்த வேணாம்’னு முடிவு பண்ணி இருப்ப. இப்ப, எம் மேல இருக்கற கோபத்துல இறங்கி வேலை செய்றே… உன்னை வேலை செய்யவெச்சிருக்கேன். இந்த நாடகத்தை நடத்தறது நீ இல்ல குமாரு… நான்தான். எப்படியாவது நீங்க நாடகத்தை நடத்தணும்கறதுக்காக நான் ஊருக்கே வராம இருக்கேன் தெரியுமா?”- நாகராஜன் பேசுவது குமாருக்கு நியாயமாகவேபட்டது. நாகராஜன் கெட்டவனோ, ஏமாற்றுக்காரனோ இல்லை… தன் சக்திக்கு மீறிப் பேசுகிறவன்.

“சரிடே, வசூல நான் பாத்துக்கறேன். நாடகத்துக்கு வந்து சேரு!” என்றான் குமார். “ஒண்ணு பண்ணு குமாரு… வசூல் எப்படி இருக்குன்னு பாரு. கையைக் கடிக்கும்னா, நாடகத்தைத் தள்ளிப்போடு. நம்மள எவன் கேப்பான்!” குமாரைப் பேராபத்தில் இருந்து காப்பாற்றும் முனைப்போடு இதைச் சொன்னான். ‘நாடகத்தை நிறுத்து’ என்கிற நாகராஜனின் வார்த்தை குமாரை மேலும் தூண்டிவிட்டது. அதுவரை கூடவே அமைதியாக வந்துகொண்டு இருந்த சனி வாய் திறந்தது. “நாயேன்வே நாடகத்தை நிறுத்தறேன். மெஷினை வித்து செலவு பண்ணுவம்வே!” என்றார் குமார்.

எல்லோரும் அசந்துபோற மாதிரி இந்த நாடகத்தை நடத்த வேண்டும் என்கிற வெறியோடு ஓவியன் செல்வகுமாரை அழைத்து ஊர் முழுக்கச் சுவர் விளம்பரம் செய்தார். ஊர் களை கட்டியது.

நாடகத்தன்று வந்து சேர்ந்தான் நாகராஜன். அவன் மீது யாரும் எந்தவிதமான கோபத்தை யும் காட்டவில்லை. “நீ செஞ்ச வேலைக்கு உன்னய ஊனிதான் பந்தல் போட்டிருக்கணும். போனாப் போகுதுன்னு மன்னிச்சுவிட்ருக்கோம்!”- அக்பர் மட்டும் இதைச் சொன்னான்.

“யே… என்கிட்ட நீ கோவப்பட முடியாது. மானத்தோட மல்லுக்கட்டறது வேஸ்ட்டுனு அதைத் தூக்கி எறிஞ்சவன் நான். போய் வேலையைப் பாருடே”- சிரித்தபடி சொன் னான் நாகராஜன்.

2,000 பேர் ஒரு பொட்டல் வெளியில் கூடியதை மூலக்கரைப்பட்டி அன்றுதான் பார்த்தது. ஒரு திருவிழாவைப்போல நாடகம் நடந்த அந்த இரண்டரை மணி நேரமும், கைத்தட்டலும் சிரிப்புமாகக் கழிந்தது. “நாடகம் நல்லாருக்கு. நீங்க தர வேண்டிய பாக்கித் தொகையைத் தர வேணாம்!” என்றார் அரசு செட்டிங்ஸ்காரர். அப்படி இருந்தும் 2,000 ரூபாய் துண்டு விழுந்தது. குமார், சொன்ன சொல்லைக் காப்பாற்றும் விதமாக மெஷினை விற்றுதான் செட்டில் செய்தார்.

இப்போது அந்த ஊரில் குமார் தையலகம் இல்லை. பாரதிதாசன் நாடக மன்றம் இல்லை. ‘என்ன இருந்தாலும் குமார் போட்ட நாடகம் மாதிரி வராதுடே!’ என இன்னமும் மக்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

– நவம்பர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *