கள்ளநோட்டு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 1, 2015
பார்வையிட்டோர்: 7,044 
 

அவனுடைய செம்மஞ்சள்,பச்சை நிறமுடைய டாக்சி தென்மேற்கு நகரத்தில் உள்ள வீதிகளில் ஓடிக்கொண்டிருந்தது.அவனுடையது! சிரிப்பு வந்தது.அவன் பல கார்களை வைத்து வியாபாரம் செய்கிற கராஜ் ஒன்றிலிருந்து அதை வாடகைக்கு எடுத்திருக்கிறான்.மேலே உள்ள கூரை லைட் எரிந்து காலியாக இருக்கிறதைக் காட்டிக் கொண்டிருந்தது.டாக்சி நிறுத்தல் நிலையங்களில் எல்லாம் 4-5 கார்கள் ரேடியோ ஓடருக்காக காத்து நின்றதால்,அவனும் போய் வீணே பின்னுக்கு நிற்க விரும்பாததால்..செலுத்திக் கொண்டிருக்கிறான்.காலும்,கையும் உளைந்தன.அதை விட மனம் உளையிறது தான் அதிகம்.இந்த அலுப்புப் பிடித்த டாக்சிக்கு என்ன தமிழ்ப் பெயர்?மூளை யோசித்தது.உடனேயே கண்டு பிடித்து விட்டான்.பஸ்சுக்கு பேரூந்து,அவனுடையது சிற்றூர்ந்து.

“சிற்றூர்ந்து செலுத்துவதில் அலுத்துக் கொள்ளாதே”என்று அவனுடைய அண்ணன் ரவி அடிக்கடி சொல்றது ஞாபகம் வந்தது.சிறிது உண்மை தான்.இப்படி ஓடுற போது..இதோ யாரோ முறுக்கலான இளம் பெண் மறிக்கிறாள்.பணக்காரி டைப் கிடையாது.டெர்னிம் ஜீன்சும்,டிசெர்ட்டும் அணிந்திருந்தாள்.முகத்தில் பொலிவு இல்லை.என்ன வேலை செய்யிறாள்?என மட்டுக் கட்டமுடியவில்லை.சிறு குழந்தைகளை பகலில் கவனிக்கிறவளில் ஒருத்தியாக இருக்கலாம்.அல்லது மகளை அங்கே விட்டு விட்டு காத்திருந்தவளாக இருக்கலாம்.அதற்கு கிட்டேயிருந்தே மறித்தாள்.சிற்றூர்ந்தை நிறுத்தினான்.ஏறினவள்”காவட்,குரோபோர்ட்..க்கு போகணும்” என்றாள்.காரை செலுத்தினான்.பிறகு அவர்களே வழி காட்டிச் செல்வார்கள்.”செல் போன் ஒருக்காய் பேச தருவாயா” கேட்டாள்.அவனுக்கு அவள் மேல் அனுதாபமே இருந்தது. கொடுத்தான்.”ம்மா ..”என்று தாயுடன் அன்புடன் ஏதோ பேசினாள்.பிறகு தந்து விட்டாள்.பிளோர் வீதியால் போய் ஒசிங்டனில் திரும்ப முதல் “திரும்பாதே அப்படியே நேர விடு.இன்னொரு தடவை போனை தருவாயா?”கேட்டாள்.”மினிட் ஒ மந்திலி பே ஃபோர் போன்” கேட்டாள்.

“மந்திலி” பதிலளித்தான். கொஞ்சம் கூட நேரம் எடுத்து அலட்டப் போறாள்..என்று புரிந்தது.”பம்கின்..”என்றழைத்து பேசிக் கொண்டிருந்தாள்.செல்ல மகளுடன் பேசுவது போல கொஞ்சி கொஞ்சி பேசினாள்.ரெடியாய் நிற்கச் சொன்னாள். காரை கோப்பிக் கடைக்கு பக்கத்திலே இருக்கிற வீதியில் திரும்பச் சொன்னாள்.போனை திரும்ப தந்து விட்டாள்.சிறிது தொலைவில் தலையில் துணியைக் கட்டிய கறுவல்கள் 2 பேர் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். கிட்ட நெருங்க “நிறுத்து,நிறுத்து”என்றாள்.”பேபி வைத்திருக்கிறாயா?” கேட்டாள்.”ஏறு ஏறு” என்றாள்.”காசு கொண்டு வந்தாயா” கேட்டான்.”வா அம்மாட்ட வாங்கி தாரேன்” என்றாள்.ஏறினவன் உடனே இறங்கி விட்டான்.”எனக்கு இப்ப நேரம் இல்லை.நீ காசை வாங்கிட்டு இங்கே வா.இங்கே தான் நிற்பேன்” என்றான்.அவள் முகம் சோர்ந்து விட்டது.”சரி”என்றவள் காரைச் செலுத்தச் சொன்னாள்..கார், காவட் அன் குரொபோர்ட்டுக்கு போனது.அது ஒன்றும் தொலைவில் இல்லை,பக்கத்தில் தான்.’இன்ன நம்பர் வீட்டிலே நிறுத்து என்று சொன்னவள்,அவன் தேடிப் பார்க்க அவளே வீட்டை காட்டி நிறுத்தினாள்.தாய்யோடு வாசலில் வாரப்பாடாகக் கதைத்து விட்டு திரும்பவும் வந்து ஏறினாள்.மீற்றர் $10 ஆகி விட்டிருந்தது.”திரும்ப அதே இடத்தில் இறக்கி விடுவாயா..இந்த $10 ஃபிளட் உடன்”கேட்டாள்.அது பக்கத்தில் என்பதாலும்,அவனும் ஒரு கோப்பி வாங்க இருந்ததாலும் “சரி” என்றான்.ஆனால் இப்ப அந்த இடத்திற்கு அருகே பொலிஸ் கார் பார்க் பண்ணி இருந்தது.”கண்றாவி பொலிஸ் வந்து விட்டது போனை ஒருக்காய் தருவாயா?” கேட்டாள்.அவனுக்கு இந்த போதை மருந்து வாங்க்குவதால் சலிப்பு வந்ததால்..மறுத்து விட்டான்.”இங்கே இறங்கிறனி தானே..” என்று நிறுத்தினான். அவள் ஒரு பழைய $20 நோட்டை தந்தாள்.”நல்ல பழையது இல்லை” என்று சிரித்தாள்.அவனுக்கு ‘சீ’ ‘என்று போனது.தார நோட்டும் கள்ள நோட்டாக இருக்குமோ?.. தெரியாது.வாங்கி விட்டு $10 மிச்சம் கொடுத்து கை கழுவி விட்டான்.இப்ப அவனுக்கு அவள் மேல் உள்ள அனுதாபம் முற்றாக வடிந்து விட்டது.$10 நட்டம்.அவனுக்கு அனேகமாக அது கள்ளநோட்டாகத் தான்! இருக்கும் என தீர்மானமாகப் பட்டது.

எடுத்து காத்திலே பார்த்தான்.ஒரு ஈயக் கோடோ.. சதுர மினுங்கல் அடையாளமோ இருக்கவில்லை.கோப்பிக்கடை வழியே வைத்திருக்கிற கள்ளநோட்டு பரிசீலிக்கும் மெசினில் வைத்தால் நிச்சியம் கள்ள நோட்டு என்றே காட்டும் போலயிருந்தது.அதை எடுத்து பிறிம்பாக வைத்துக் கொண்டு,கோப்பியை வாங்கிக் கொண்டு ஏறினான். மனதில் அலை அடித்துக் கொண்டேயிருந்தது.அவனுக்கு பெரிய ஈய்யிற இயல்பு இல்லை தான். ஏறும் பயணிகளால் ‘ டிப்ஸ்’ என கிடைக்கிற காசுகள் ஒரு நாளைக்கு $20 மட்டிலே கிடைக்கும் தான்.ஓரே ஒரு தடவை அதை வீடற்ற ஒருத்தருக்கு கொடுக்கணும் என விரும்புகிறான்.ஆனால் இன்னமும் கொடுக்கிறதுக்கு மனம் வரவில்லை.அவ்வளவு தொகையை கொடுக்க அவரும் அதிசயமாகப் பார்ப்பார் என்பது வேற விசயம்.ஆனால் அது பரீட்சையாக அவனால் பாஸ் பண்ண முடியாமலே இருந்தது.$10,$5,$2..என கொடுத்திருக்கிறான்.பெண்ணும் பாவமானவளாக இருக்கிறாள். அப்படி ‘ஈய்ந்த தொகையாக அந்த $10 இருக்கட்டுமே’ஆனால் மனம் ஒப்புக் கொள்ள மறுத்தது.

அவள் $20 தாளை தந்து கண்முன்னாலே ஏமாற்றி விட்டு பறித்திருக்கிறாள்.பொலிஸ் கார் எதிரே நிற்கிறது தான்.பொலிஸ்காரரிடம் போய் கள்ளநோட்டை தந்து விட்டு போறாள்”என்று புகார் கொடுக்கலாமா?யோசித்தான்.ஆனால்,பொலிஸ் அவனுக்கு பிடிக்காதவைகளில் ஒன்று.குடுத்தால் ..அவளை பிடித்து தேவையில்லாமல் கிழமைக் கணக்கில் சிறையில் போட்டு விடுவார்கள்.பிறகு,இன்னும் பல குற்றங்களை சுமத்தி..மாசக் கணக்காக்கி விடுவார்கள்.பொலிஸ் சிற்றூர்ந்துகளைப் பிடித்தால்…சிலவேளை ஒரு டிக்கற் மட்டும் கொடுப்பதில்லை,2-3 டிக்கற்றுக்களை எழுதி கொடுத்து விடுவதும் வழக்கமாக இருந்தது.அவள் போதைப் பொருளை வாங்கவே அங்கே வந்தவள்.அவன் எதிர் பார்க்கிறது போல எதுவும் நடக்காமலும் விடலாம்.ஆனால் பொலிஸ் அவளை கட்டாயமாக அவமரியாதை செய்தே விடும்.பின்னுக்கு கைகளைக் கட்டி விலங்கு போட்டு..அல்லது எப்படியோ..? . வெறும் $10 ஏமாற்றி பறிக்கப்பட்டதாக இருந்து போய் தொலையட்டும்.

ஆனால் பெண் ஜென்மங்கள் தான் பெரும்பாலும் இப்படி போதைப்பொருள் வாங்க அலையிறதைப் பார்க்கிறான். ஏன் பெண்களாக இருக்கிறார்கள்? இயல்பாகவே பெண்களுக்கு டாக்டர்களும்..தலையிடிக்கு ஒரு மாத்திரை,மன இறுக்கத்திற்கு ஒரு மாத்திரை,எலும்பு கல்சியத்துக்கு கல்சியம்,தூக்கத்திற்கு ஒரு மாத்திரை, பிள்ளையை பெத்துக்கிற போது பல மாத்திரைகள்…இப்படி நிறைய மாத்திரைகளை எழுதி பாவிக்க பழக்கிறார்கள். அந்தப் பழக்கம் தான் இவர்களை இங்கே கொண்டு விட்டதோ?முந்தி சில தடவை இரவிலும் கொஞ்சநாட்கள் சிற்றூர்ந்து ஓடி இருக்கிறான்.அப்பவெல்லாம் பள்ளிக்கூட பெட்டைகளை நைட்கிளப்புக்களில் இருந்து பல தடவை நகரத்திற்கு வெளிய இருக்கிற அவர்களிட வீடுகளில் இறக்க ஏற்றி சென்றிருக்கிறான்.குடிவெறியில் அவர்களுள் பேசி வருகிறவர்கள் ..சிலவேளை அவனைக் குறித்தும் கேள்விகள் கேட்பார்கள்.”நீ அசீஸ் பாவித்திருக்கிறாயா?”

“இல்லை”என ..”இந்த இதை பார்த்திருக்கிறாயா”காட்டுவார்கள்.மாத்திரை வடிவில் ஒன்றாக இருக்கும்.16,17,18..வயசுப் பெட்டைகள்.இங்கே போதைப்பொருள் பாவிக்காத பெட்டைகளே இருக்க மாட்டார்கள் போல இருக்கே..என்று அவனுக்கு தோன்றியிருக்கிறது.பொலிஸ், நகரத்து அரசியல்வாதிகள்,நைட்கிளப்புகள்,இந்தப் பெட்டைகள்..நகரத்திற்கு இயந்து வாழப் பழகி விட்டார்கள்.எல்லாம் இயல்பு.அவன் புலன் சொல்லுற ஆளும் இல்லை,திருத்துற ஆளும் இல்லை.ஆனால்,அவனுக்கு அனுதாபமாக இருக்கும்.ஏன் ஆண்களை விட பெண்கள் அதிகமாக இழுக்கப் படுகிறார்கள்? இளம் வயதிலே அவர்களுள் ஏற்பட்டு தொடர்கிற வலியுடன் கூடிய மாதர்..வட்டங்களாலும், அச்சமயத்தில் ஏற்படுற நாத்தங்களாலும் அவர்களே அருவெறுப்படைகிறார்கள் ..போலவே படுகிறது.ஓரளவு ஆரோக்கியமான விசயங்களில் வெளிநாட்டுப் பெண்கள் நாட்டம் பதித்திருந்தாலும்…கூட எல்லாப் பெண்களும் ஒன்று தான்.அவர்கள் போதைப்பொருளுக்குப் போகிறார்கள்.கூடுதலாக சிகரட் புகைத்து தள்ளுகிறார்கள்.நம்மவர்கள்… அதீதமாக தங்களை முக்கியப்படுத்த வேண்டும் என்பதற்காக..உறவுகளை எல்லாம் காயப்படுத்தி..,சண்டை பிடிக்கிறார்கள்..,சந்தோசமின்மையை விதைக்கிறார்கள்.மனுநீதிகள் எல்லாம் கவனிக்கப்படுவதில்லை.

ஆண்களும் போதைபொருள் இல்லை என்று சொல்லி விட முடியாது.ஆனால்,அவர்கள் வெளிப்படையாக காட்டிக் கொள்வதில்லை.ஆனால் தலைகெட்ட வெறியில் பெண்களைப் பற்றிய தமது அபிப்பிராயங்களை ..அனுபவங்களை எல்லாம் உதிர்ப்பார்கள்.ஆனால் எல்லாரும் அவனுக்கு மீற்றருக்கு மேலே டிப்ஸும் கொடுத்து விட்டே போவார்கள்.சிலர் ‘அவனுடைய ரைவிங் நல்லாயிருந்தது’என்பார்கள்.”குறைவான தூரத்தில் கொண்டு வந்து விட்டாயே..நன்றி”என்பார்கள்.

மனதின் அலை சற்று ஓய்ந்திருக்க..நகரத்திற்குள் வந்து ஒரு கொட்டேலின் முன் நின்று கொண்டிருந்த சிற்றூர்ந்து தொடரில் ஒருத்தனாக அவனும் நின்றான்.ரோயல் சிற்றூர்ந்துக்காரன் வெளிய இறங்கி நெட்டி முறித்து கைகள்,கால்களை உதறிக் கொண்டிருந்தான்.அவன் ஜன்னல் கண்ணாடியை இறக்க அவனுடைய காருக்கு கிட்ட வந்தான்.அவன் அந்த $20 நோட்டைக் காட்டி “இது கள்ள நோட்டா”என்று கேட்டான்.”ஒரு பயணி தந்தது,எனக்கு அப்படி தான் படுகிறது.”அவன் அதை வாங்கி பார்த்து விட்டு..”இது ஒரிஜினல் தான்.ஆண்டு1976பார்.இந்த பழைய நோட்டுகளில் கள்ள நோட்டு அடிக்கிறவர்களில்லை.புதிய நோட்டுக்களில் தான் கள்ளநோட்டுக்கள் வருகின்றன.”என்றான்.தொடர்ந்து”இதே போல பழைய நோட்டுக்கள் $5,$10, $20..கூட நான் மாற்றாமல் வைத்திருக்கிறேன்”என்றான் சிரித்துக் கொண்டு.”ஒரு மினுங்கல்களும் ,கோடுகளும் இல்லையே”என்று கேட்டான்.”பழைய நோட்டுகளில் அதெல்லாம் இல்லை தான்.வங்கியிலே,காஸ் நிலையத்திலே கொடுத்துப் பாரு .எடுப்பார்கள்”என்றான் அந்த அனுபஸ்தன்.அவனுக்கு அந்தப் பெண் ஏமாற்றவில்லை என்பது புரிந்தது.ஒரு நொடியில் என்னென்னவோ எல்லாம் எண்ணி விட்டானே.பெரும்பாலானவர்கள் ஏமாற்றுக்காரர்களில்லை. அவனிடத்தில் தான் ..இருக்கிற ஈயும் குணத்தின் குறைவுகளால் சந்தேகப் புத்தியும் களையாக மண்டிக் கிடக்கிறது.

– டிசம்பர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *