கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 19,195 
 

“எனக்கு முதலில் பயமாய் இருந்தது; ஹாஸ்டலில் யாருமில்லை. ராணியும் ஜேனும் `ஷாப்பிங்’ சென்றிருந்தார்கள். எங்கள் மூவரைத் தவிர மற்றவர்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். நானும் கிளம்புவதாகத் தான் இருந்தேன். ஆனால் ராணிதான் இருவரும் ஒரு சினிமாப் பார்த்து விட்டுச் செல்லலாம் என்று வற்புறுத்திக்கொண்டிருந்தாள். மேலும் அந்தக் காதர் நான் குளிக்கப் போகும்போது, `பாப்பா, ஒரு நா இருந்திட்டுப் போயேன்’ என்றான். காதரை உனக்குத் தெரியுமே. மொட்டை மண்டை; பொக்கை வாய். அவனை நோட்டுப் புத்தகம், காகிதம், ஏதாவது வாங்கிக் கொண்டு வரச் சொல்லும்போது சமயங்களில் அவன் கை என்மீது பட்டுவிடும். அப்போது எனக்கு ஒரு மாதிரி இருக்கும். அவன் முகத்திலும் கள்ளத்தனம் தெரியும். ஆடவரே இல்லாத இடத்தில் அவன் ஒரே ஆடவனாக இருந்ததால் இருக்கும் என்று நினைத்துக்கொள்வேன்.

நான் என் அறையில் தனியே இருந்தேன். கொஞ்சம் பயம். இருந்தாலும் காதர் வர வேண்டும்போல் இருந்தது. அவன் வராது போய்விடுவானோ என்றுகூடப் பயம். ஹாஸ்டலில் அவனுக்கென்று ஒரு அறை உண்டு. அங்கு போய் ஏÊதாவது சாக்குச் சொல்லி அவனைப் பார்த்துவிடலாம் என்றுகூட நினைத்தேன். ஹாஸ்டலில் ஸ்டோர் ரூம்தான் அவனுடைய அறை. ஓரிரு தடவை அவனைக் கூப்பிட அங்கு சென்றிருக்கிறேன். மிகவும் சிறிய அறை, எப்படித்தான் காலை நீட்டிப் படுத்துறங்குவானோ? அந்த அறைக்குள் சென்று சுருண்டு படுத்துறங்க வேண்டும் என்ற ஆசை எனக்கு சில தடவைகள் வந்ததுண்டு.

காலடிச் சத்தம் கேட்டது. வழக்கமான மெல்லிய காலடிச் சத்தம். காதர் என் அறையைக் கடந்து இரண்டு எட்டு சென்றுவிட்டுத் திரும்பி நடந்து என் அறைக்குள் நுழைந்தான். `பாப்பாவுக்கு என்ன வேணும்?’ என்று கேட்பான் என்று எதிர்பார்த்தேன். உள்ளே நுழைந்து கதவைத் தாளிட்டான். `என்ன காதர்?’ எனக் கத்தினேன். `ஏம் பாப்பா, கத்தறே, நான் கிளவன்’ என்றான் காதர். `ஏங் கதவே அடச்சே?’ என்றேன். `ஒன்னெத் தொட்டுக் கும்பிட’ என்று சொல்லிக்கொண்டே, காதர் மண்டியிட்டு என் இரு பாதங்களையும் பற்றினான். அவன் கை பட்டது எனக்கு இதமாக இருந்தது’’.

ஹெட்கிளார்க் சுகுணா உள்ளே வரவும் நிர்மலா கடிதத்தை மேஜைமீது வைத்து அதன்மீது ஒரு டேபிள் வெய்ட்டை வைத்தாள். “பாரதி மூப்பனார் வந்திருக்காரு’’ என்றாள் சுகுணா. “மூப்பனாரா? அவர் பில் பாஸ் ஆயிடுச்சின்னு சொல்லு. நாளைக்கழிச்சு வந்து செக்கை வாங்கிட்டுப் போகட்டும்’’ என்றாள் நிர்மலா. சுகுணா அறையை விட்டகலவும் கடிதத்தைத் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று தோன்றவில்லை நிர்மலாவுக்கு. அவள் ஏற்கனவே ஒருமுறை படித்த கடிதம்தான். இருந்தாலும் அது அவள் கையைச் சுற்றிச் சுற்றிக்கொண்டிருந்தது. இப்போது அவள் நினைவு அவளது மாணவிக் காலத்துக்குச் சென்றது. மூன்று மணி நேரம் மெய் மறந்து, ஒரு முக்கோணத்தின் ஒன்பது புள்ளி வட்டம் அதன் உள்வட்டத்தைத் தொட்டுச் செல்லும் என்று நிரூபித்தது; பதினேழு பக்கங்கள் கொண்ட ஒரு ஒழுங்குப் பல கோணம் வரைய ஒரு மாதம் தொடர்ந்து முயன்று தோல்வியுற்றது; ஒரு கோணத்துக்கு இரு சமவெட்டி உண்டு என்று ஏற்றுக்கொண்டாலன்றி, அதனை வரைய முறை காணமுடியாதென்று ஆசிரியரோடு வாதிட்டது; இறுதியில் ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்தை மெய்ப்பிக்க முயன்று `ரிசேர்ச்’ உதவித்தொகையை இழந்தது, எல்லாமே அவள் மனத்தினூடே பாய்ந்து சென்றன.

மறக்க முடியாத அப்பாவின் நினைவு! `நீ எம் மூத்த குழந்தையாப் பிறந்த பாவத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட்டுட்டேம்மா! இன்னைக்கு நெனெவிலே இருக்கு. உன்னை ஹாஸ்டல்லே வந்து பார்க்க வந்தேனே, அப்ப எல்லாக் குழந்தைகளும் விதவிதமாய் போட்டிட்டு, கவலையே இல்லாம, வரதும் போறதுமா இருக்கும்போது, நீ ஒரு கிழிஞ்ச ரவிக்கையைப் போட்டுக்கிட்டு எங்கூட ஸ்டேஷனுக்கு வரேனியே!’ `அய்யோ, அப்பா! இப்ப இதெல்லாம் பத்தி என்ன பேச்சு? நீங்க நிம்மதியா இருங்க. உங்களுக்கு ஒரு கவலையும் வேண்டாம். நான் எப்பவும் சந்தோஷமாத்தான் இருந்தேன்; இப்பவும் சந்தோஷமாத்தான் இருக்கேன். சாந்தாவைப் பத்தியோ, மனோகரைப் பத்தியோ கவலைப்படாதீங்க. எல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீங்க ரொம்ப நல்லவர். ஆனா, நீங்க வாழத் தெரியாம வாழ்ந்திட்டீங்க…’

நிர்மலா மேஜை மீது இருந்த கடிதத்தை எடுத்துத் தொடர்ந்து படிக்கலானாள்.

“நிமிர்ந்து நின்றேன். என் பாதங்களைப் பற்றியிருந்த காதரின் கரங்கள் உயர்ந்துவந்து என் கணுக்கால்களை வருடின. காதரின் கைகள் மெல்ல உயர்ந்தன. என்னால் நிற்க முடியவில்லை; அப்படியே கட்டிலில் அமர்ந்தேன். `நில்லு பாப்பா, நில்லு’ என்று கெஞ்சினான் காதர். நான் மீண்டும் நிற்கவும், பொக்கை வாய் சிரிப்போடு, மண்டியிட்டு, காதர் என்னை நோக்கிக் கொண்டிருந்தான்…’’

நிர்மலா கடிதத்தை மேஜை மீது வைத்துவிட்டு இரு கைகளையும் அகல விரித்து சோம்பல் முறித்தாள்.

வருஷம் பூரா இரண்டு சேலை; மூணு ஜம்பர். அத்தனை அவமானமும் எதுக்கு? என்னத்தை சாதித்துவிட்டேன்? அர்த்தமில்லாத தியாகம். அது தியாகமா? அதுவுமில்லியே! ஒரு வகையில் நிர்ப்பந்தம்தானே? ஒன்றையும் காணவில்லையே! ஒரு தெய்வமும் எனக்குத் தட்டுப்படவில்லையே! ஒரு உண்மையும் பிடிபடவில்லையே! இருபது வருடங்களுக்கு முன் தோன்றிய வினாக்களுக்கு இன்னும் விடைகளில்லையே? சாந்தா சந்தோஷமாக இருக்கிறாள்; மனோகர் முன்னுக்கு வந்துவிட்டான். இப்ப இருவரும் சேர்ந்து `அக்காளுக்கு உலகம் தெரியவில்லை’ என்கிறார்கள்.

நிர்மலா கடிதத்தை எடுத்துத் தொடர்ந்து படித்தாள்.

“… என் கால்கள் தடுமாறின. எனக்குப் பசுவிடத்துப் பால் உண்ணும் கன்றின் நினைவு ஏற்பட்டு, அருகில் லயித்துத் தடுமாறினேன். காதர் எழுந்து என்னை அணைக்க வேண்டும்போல் இருந்தது. நான் விழுந்து விடாதபடி அவன் கைகள் ஆதரவாக என் பின்புறத்தைப் பற்றியிருந்தன.’’

மிஸ் நிர்மலா வாசித்த கடிதம் கடந்த ஆண்டு அவளது கல்லூரியில் படித்த லைலா தற்போது ஹாஸ்டலில் தங்கிப் படித்து வரும் இந்திராவுக்கு எழுதிய கடிதம். இந்திரா கவனக்குறைவாக அதைத் தனது சினிமா சஞ்சிகைக்குள் வைத்திருந்தாள். அந்த சஞ்சிகையை எடுத்த அண்ணன் மூலம் அது இந்திராவின் தகப்பனார் டாக்டர் சந்திரசேகரன் கைக்குப் போய்விட்டது. “நான் ஒரு டாக்டர். எனவேதான் அளவுக்கு மீறிக் கலவரப்படாது, இந்தக் கடிதத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவதோடு நிறுத்திக்கொண்டு, மேலும் பல்கலைக்கழக, அரசாங்க மட்டங்களில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்’’ என்று பயமுறுத்தாது, பயமுறுத்தியிருந்தார் டாக்டர்.

`அடேயப்பா, டாக்டரின் விசால புத்தியைப் பாராட்டத்தான் வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டே, நிர்மலா காதரைப் பற்றி நினைத்தாள். கிழவனுக்கு அப்படி ஒரு ஆசை! உம். எதைப்பற்றி ஆச்சரியப்படுவது? எல்லாமே ஆச்சரியப்பட வேண்டியதுதானே! நாமாக அது இயற்கை, இது இயல்பு, அது பகுத்தறிவு, இது நடைமுறை அனுபவம் என்று கற்பனை செய்துகொள்வதால்தானே இத்தனைப் `புதுமைகளும்’, `முரண்பாடுகளும்’, `இயற்கைக்கு மாறானவையும்!’ சன்னல் வழி வந்த சூரிய ஒளியின் பக்கம் நிர்மலா திரும்பினாள். ஒளி என்ன? புரியவில்லையே! மனிதனின் கணிதக் கட்டுக்கோப்புகள் அதை அடைத்து விடுவதால் அதைப் புரிந்துகொண்டதாகிவிடுமா? விஞ்ஞானிகளை முற்றிலும் புரிந்துகொள்ள முடிகிறதா? ஆமாம். `லாசரை’யும், `டி.வி.’யையும் படைத்துவிடுகிறார்கள். இருந்தாலும் அந்தக் காதர்! அந்தக் காதர்!! அவள் கல்லூரியில் முதலாண்டில் படித்த புத்தகம் ஒன்று இப்போது அவள் நினைவுக்கு வந்தது. அழகழகான படங்களைக் கொண்ட புத்தகம். ஐன்ஸ்டைனின் வியப்பு நிறைந்த கண்கள். நீல்ஸ்போரின் பெருமிதம். மிலிக்கனின் சாமர்த்தியம். டிப்ராலியின் அழகு… காதர் முகத்திலும் எப்படி அப்படி ஒரு ஒளி? இல்லை, வெறும் கற்பனையா? எல்லாமே நாமாக நினைத்துக் கொள்வதுதானா?

நிர்மலா மணியை அழுத்தவும் சுகுணா வந்தாள்.

“ஹாஸ்டல் வாச்மேன் காதரை வரச் சொல்லு.’’

“சரிங்க, மிஸ்.’’

மிஸ், மிஸ், மிஸ்… ஆனால், படிப்புக்குக் குறைச்சல் இல்லை. அந்தஸ்துக்குக் குறைச்சல் இல்லை. ஆமாம், அவமானத்துக்கும் குறைச்சல் இல்லை. எதுக்குமே குறைச்சல் இல்லை! ஆனால்… நிர்மலா தனது வலது கையைக் கொண்டு சேலையைச் சரி செய்துகொள்வதுபோல், இல்லை, மார்பகத்தைத் தடவிக்கொள்வது போல், சேலையைச் சரி செய்துகொண்டாள். லேசாக ஏதோ தட்டிற்று; அவ்வளவுதான்.

காதர் வந்து நின்றான். மொட்டை மண்டை. பொக்கை வாய்.

“ஹாஸ்டலுக்கு வேறே வாச்மேன் போட்டிருக்கேன்.’’

“நல்லதுங்க’’ என்றான் காதர்.

அரை நிமிடம் இருவரும் பேசவில்லை. நிர்மலா அந்தக் கடிதத்தைப் படிப்பதாகப் பாவனை செய்தாள்.

“உனக்குத் தோட்ட வேலை தெரியுமா?’’

“தோட்ட வேலைக்குத்தானே நம்ம காலேசுக்கு வந்தேன்?’’

“அப்படியா, எனக்குத் தெரியாதே! இனிமே எம் பங்களாத் தோட்டத்தெ கவனிச்சுக்க. ரத்தினம்மா ஹாஸ்டலைப் பார்த்துக்கட்டும்.’’

“உத்தரவு அம்மா’’ என்றான் காதர். இருந்தாலும் அவன் முகத்தில் ஒரு கள்ளத்தனம் இருந்ததாகப் பட்டது, மிஸ் நிர்மலாவுக்கு.

காதர் அறையை விட்டு வெளியேறவும், நிர்மலா தனது வலது கையைக் கொண்டு சேலையைச் சரி செய்துகொள்வது போல், இல்லை, மார்பகத்தைத் தடவிக்கொள்வது போல், சேலையைச் சரி செய்து கொண்டாள். லேசாக ஏதோ தட்டிற்று; அவ்வளவுதான்.

Print Friendly, PDF & Email

1 thought on “கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா

  1. படிக்க படிக்க …. திகைப்பூட்டும் எழுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *