ஒட்டுண்ணிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 6,970 
 

வணிகவரி அலுவலகத்தில் இருந்து அமீனா வந்திருந்தான். “உங்க கம்பெனி ரெண்டு லட்சம் சொச்சம் வரிபாக்கி கட்ட வேண்டியிருக்குது,” என்று சொன்னான்.

அலட்சியமாக சொன்னவன், பவுச்சை உடைச்சுப் “பாக்குத்தூளை” இடது கைப் பாதத்தில் போட்டு, வலது பெருவிரலை வைத்து நன்றாக நசியம் பண்ணி, தட்டி வாயில் போட்டுக் கொண்டான். பின்னர் ஒட்டியிருந்த பாக்குத்துகள்கள் முற்றிலும் அகலும் வண்ணம், இரண்டு கைகளையும் நன்றாகத் தட்டி விட்டுக் கொண்டான்.

“அப்படியா? எந்த வருசத்து வரி?” நான் ஆர்வமின்றி கேட்க, அமீனா ஆபிஸை ஒரு சுற்று சுற்றிப் பார்வை இட்டான். நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், “ஆபிஸிலே நீங்க ஒருத்தர்தான் ஸ்டாபா?” என்று கேட்டான்.

“ஆமாம்.. ஆனா உதவிக்கு ஒரு அசிஸ்டெண்டை, கான்டிராக்டில் வச்சிருக்கோம்,” என்று நான் சொன்னதைப் பெரிதாய் அவன் சட்டைச் செய்யவில்லை. அடுத்த கேள்வியைத் தொடுத்தான். “இந்த ஆபிஸிலே உள்ள பிர்ட்ஷ், ஏர்கூலர், ஹீட்டர், இந்த மேஜை, ஸ்டோர்வெல் எல்லாம் கம்பெனியுடையதுதானா?”

“ஆமாம்,” என்று எரிச்சலாய் சொன்ன நான், “நான் கேட்டதற்குப் பதிலைச் சொல்லுங்க. எந்த வருசத்து வரிப்பாக்கி?” என்று மறுபடியும் கேட்டேன்.

“1998-99ம் வருசத்துக்கானது.. இன்னும் ரெண்டு நாளில் கட்டலைன்னா, நாங்க உங்க ஆபிஸிக்கு ‘சீல்’ வைக்க வேண்டியிருக்கும். பிறகு பத்து நாளைக்குள் இங்கே ஆபிஸிலுள்ள சாமான்களை ஏலத்துலே விட்டுடுவோம்.” காவிப்பல் தெரிய இளித்தான். உன்னை இந்த இக்கட்டில் இருந்த மீட்க, எவ்வளவு பணம் தரத் தயாரா இருக்கே என்பதுதான், இந்த இளிப்புக்கு அடையாளம் என்பதை அனுபவசாலிகள், எளிதில் புரிந்து கொள்வார்கள்.

அவர் கொடுத்த டிரேட் வரி நோட்டிஸைக் கையெழுத்துப் போட்டு வாங்கிக் கொண்டேன். லக்னோவிற்கு வந்து இந்த ஆபிஸை ஒப்புக் கொண்டதில் இருந்து, இப்படி ஏதாவது பிரசினை, ஒன்று விட்டால் இன்னொன்று முளைத்துக் கொண்டிருக்கிறது.

அமீனாக்கள் பொதுவாக நேரடியாக விசயத்துக்கு வர மாட்டார்கள். “சாமி போட்டோவே ஆபிஸிலே இல்லையே? நீங்க நாஸ்திகரா?” என்றான்.

“ஏன் சாமி போட்டோ வச்சிருந்தா, வரி கட்டாட்டாலும், ‘சீல்’ வைக்காமல் விட்டு விடுவீங்களா?’

அவர் சிரித்ததில் சாறு முகத்தில் தெளித்தது போலிருந்தது. “அப்படியில்லை, பையா ஸாப்! நீங்க வச்சிருக்கிற சாமிப் படத்தை வச்சு, நீங்க என்ன கோத்திரமுனு கண்டு பிடிச்சுடுவேன்.”

”நான் பிராமணன் இல்லை. ஷத்திரியனும் இல்லை. அதற்காக என்னை வைசிக் என்று நினைத்தால், தப்பாப் போகும். நான் மெளரியா கெளதமும் இல்லை. என் பேர் பிரபாகரன். அதுக்காக என்னை எல்.டி.டி.யின் ஆதரவாளர் என்று நினைத்துக் கொண்டால், அதுவும் தவறு. மாறாக நான் தமிழ்பற்று கொண்ட எல்.டி.டி.யின் எதிர்ப்பாளர். என் பேரை வச்சு, என் கோத்திரம், குலம், சாதி எதையும் கண்டுப்பிடிக்க முடியாது.. எல்லாம் பெரியார் தமிழனுக்குக் கொடுத்த கொடை..”

எனது இந்த பதிலால், பிரசினை வந்தால் நேரடியாகப் பதில் சொல்லாமல், புரியாத மாதிரி குழப்பி, பிரசினையில் இருந்த தப்பிக்க முயலும் ஆசாமி என, என்னை யாரும் எடை போட்டு விட வேண்டாம். எனக்கும் சவால் விடும் வேலைகளை எதிர் கொண்டு சாதனைப் புரிவது, பிடிக்கதான் செய்யும். ஆனால் இந்தச் ‘சரிகட்டும் வேலை’களைச் சரியாகச் செய்வதை, நான் சாதனையாகக் கருதுவதில்லை.

“நீங்க ஏன் முன்னுக்கு வரலை? உங்களை மட்டும் ஏன் லக்னோ டிரான்ஸ்பர் செஞ்சாங்க?” என என் பத்னி என் மீது குற்றம் சாட்டினாள். குழந்தைகள் கூட, என்னை ‘உர்’ரென முறைத்தார்கள்.

‘சரிகட்ட தெரியாதவன் சரியான முட்டாள்’ என்பது அவர்கள் அபிப்ராயம். சொல்லப் போனால், அதுதான் பொது அபிப்ராயம். இந்த மாதிரியான அபிப்ராயம், குடும்பத்துக்குள் வளர்வது, வருங்கால இந்தியாவிற்கு நல்லது இல்லைதான்.

யு.டி.ஐ. ஊழலில் ராமசுப்பு மாட்டிக் கொண்ட போது, தாங்கள் சுத்தவான் போல் கைக்கொட்டிச் சிரித்தது பல இந்திய குடும்பங்கள். டிட்கோ வழக்கில் தமிழக அரசியல்வாதி மாட்டிக் கொண்ட போது, தான் சுத்தவான் போல் புளங்காகிதம் அடைந்தது பல தமிழக குடும்பங்கள். இதோடு விட்டால் பரவாயில்லை! இன்னும் சில குடும்பங்கள் பல படிகள் முன்னேறி, இப்படி ஊழல் புரிந்தவர்களை, பொதுமக்கள் பார்வையில் பொதுவிடத்தில் தூக்கில் போட வேண்டும் என பரிந்துரைத்தது.

இப்படியெல்லாம் பேசிய பல குடும்பங்களில் ஒன்றான என் குடும்பம்தான், ராமசுப்புக்கு உள்ள, அந்தத் தமிழக அரசியல்வாதிக்கு உள்ள திறமையில் 1சதவீதம் கூட எனக்கு இல்லை என்று பகடி செய்தது. “ஏதோ கைச்சுத்தமாய் இருக்கப் போய் நான் இன்னும் தப்பித்துக் கொண்டிருக்கேன்,” என்று நான் ஏகப் பெருமூச்சு விட்டதும், என் பத்னி சீறினாள். “யாரையும், எப்ப வேணாலும், ஏதாவது காரணம் சொல்லி குற்றம் சுமத்தி, தண்டிக்கிறது ஒண்ணும் இப்ப உள்ள சூழ்நிலையில் பெரிய கஷ்டமான காரியம் இல்லை.”

“இதனாலே என்னச் சொல்ல வருறே?”

“நீங்க சுத்தமாய் இருக்கிறதுனாலே உங்களை வச்சுகிட்டு, உங்க கம்பெனியிலே அழறாங்கனு தப்பால்லாம் நெனைச்சுட்டு இருக்காதீங்க.. உங்க கம்பெனிக்கும் உங்க அழுகுணித்தனம் தெரியும். முன்னேயும் போக மாட்டீங்க.. பின்னேயும் வர விட மாட்டீங்க. உங்களை லக்னோ டிரான்ஸ்பர் பண்ணினாலே போதும், நீங்க சரியாயிடுவீங்கனு நம்பிதான், உங்களை இங்கே மூட்டைக் கட்டி, அனுப்பி இருக்காங்க. ராமசுப்பு மாதிரியோ, இல்லை நமது தமிழக அரசியல்வாதி மாதிரியோ, பெரிசா பண்றதுக்கு, அவங்களில் நீங்க ஒண்ணும் 1% கூட, புத்திசாலியில்லை..”

என் ‘சுயம்’ மறுபடியும் அடிபட்டு விழுந்தது. குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் ஒப்பிட்டு, அதிலும் நான் தேறவில்லை என்பது, சம்மட்டி அடிதான்.

விவாகரத்து வாங்கிட்டு, வானபிரஸ்தனாய் ஆகிடலாம்னு பலமுறை யோசித்து இருக்கிறேன். ஒருமுறை ஆத்திரத்தில், “டைவர்ஸ் பண்ணிடுவேண்டி!” என்று கூட கத்தி இருக்கேன்.

“அதுக்குக் கூட, துணிச்சல் வேண்டும். உங்ககிட்டே இல்லலாததை பற்றி எல்லாம் பேசாதீங்க..” என்று என் மிரட்டலைத் தூசி மாதிரி தட்டி விட்டாள் என் பத்னி.

ஆக பல மாதங்களாய் முடிவெடுத்து, ‘திட்டவட்டமாய் செயற்புரிவது’ என முடிவெடுத்தேன். அப்பதான் மற்றவர்களால் அசட்டைச் செய்யபடும் அவலத்திற்கு ஆளாகாமல், தப்பிக்க முடியும்.

“அமீனா.. சாரி… வெரி சாரி… உங்க பேர் என்ன? ஆர்.டி.துபே… சரியா? ஆங்.. மிஸ்டர் துபே! நீங்க ரெண்டு நாளில் பணம் கட்டச் சொல்றீங்க.. நான் என் தலைமையலுவகத்துக்குத் தகவல் அனுப்பி, உடனடியா பணம் கட்ட ஏற்பாடு செய்றேன். கண்டிப்பா 28ம் தேதிக்குள் பணத்தைக் கட்டிடுவோம்..”

துபே விபரமான ஆசாமி.. எங்களால் கட்ட முடியாது என்ற அனுமானத்திற்கு என்னக் காரணத்தினாலோ உறுதியாக வந்திருந்தான். “ஐயா! நீங்க தலைமை அலுவகத்துக்குத் தகவல் அனுப்புவீங்களோ, இல்லையோ. அது பற்றியெல்லம் எனக்குக் கவலையில்லை. பாக்கியை ‘டாண்’ணு 28ம் தேதி கட்டிடணும். பணம் அப்படிக் கட்டாட்டா, 29ம் தேதி உங்க ஆபிஸிக்குச் ‘சீல்’தான்..” சொல்லி விட்டு, மரியாதைக் குறைவாக ஏதோ சைகைச் செய்து காட்டினான். ஆபிஸிக்குச் ‘சீல்’ வைப்பதைப் புணர்வதுடன் தொடர்பு படுத்தி அதைச் சைகையாக்கி, விகடம் பண்ணினான்.

“அப்படியா??? நன்றி!!! நீங்க போயிட்டு 29ம் தேதி வாங்க! அப்பவும் நாங்க பாக்கியைக் கட்டா விட்டால், ‘சீல்’ வச்சிடுங்க!” நானும் துபேயைப் போலவே, அசிங்கமாகக் கையாட்டிக் காண்பித்தேன். ஒரு வினைக்கு, எதிர்வினை புரியும் போது, நாமும் எவ்வளவு மட்டமான ஆசாமியாகி சாக்கடையில் விழுந்து புரள்கிறோம் என்பது அப்போதுதான் புரிந்தது.

கோபத்தில், துபேயின் தலையில் நீராவி பறந்தது. ஒரு சல்லிக்காசு என்னிடம் இருந்து பெயராது என்று தெரிந்ததும், தனது அடுத்த அஸ்திரத்தைப் பிரயோகித்தான். “கவர்ன்மெண்ட் ஆபிஸ்கிட்டே மொறைச்சுக்காதீங்க.. எங்க சேல்ஸ் டாக்ஸ் கமிஷனருக்கு இருக்கிற ‘டிஸ்கிரிஷனரி பவர்’ பற்றி, உங்களுக்கு என்னய்யா தெரியும்?”

‘டிஸ்கிரிஷனரி பவர்’ என்பது எனது அகராதிபடி, ஒரு கெட்ட வார்த்தை. என்னை லக்னோ டிரான்ஸ்பர் பண்ணினதும், ‘ஏன்?’னு கேட்க எங்க சீஃப்பிடம் சென்றேன். அவர் உடனே அவரது சுப்ரியரிடம் பேசினார். கடைசியாகச் சொன்னார்: “டிரான்ஸ்பர் செய்றது, நிர்வாகத்தோட ‘டிஸ்கிரிஷனரி பவர்.’ அதை நாம் கேள்வி கேட்க முடியது…”

ஒருவர் மற்றவரை ஏமாற்றுவதற்கு, தண்டிப்பதற்கு, சுரண்டுவதற்குக் காரணம் சொல்ல முடியாத போது, உபயோகிக்கும் நாகரீகமான நவீன வார்த்தைதான், இந்த ‘டிஸ்கிரிஷனரி பவர்.’

“எங்கெல்லாம் ‘டிஸ்கிரிஷனரி பவர்’ இருக்குதோ, அங்கெல்லாம் அதிகாரமும், ஊழலும், சுரண்டலும் இருக்கும் என்பது என் அபிப்ராயம், துபே! ஆனா அதைப் பற்றி, விபரமா பேச எனக்கு நேரமும் இல்லை, சொன்னால் புரிந்து கொள்ளும் மனோநிலையில் நீங்களும் இல்லை. நீங்க இப்ப இடத்தைக் காலி பண்ணிட்டு போங்களேன்.. நான் வேற வேலைப் பாக்கணும்..”

“நீங்க உங்க வேலையை இன்றைக்குப் பாருங்க. நாங்க எங்க வேலையை 29ம் தேதி காட்றோம்.” துபே விட்டால், இன்றைக்கே தனது வேலையைக் காட்டி விடுவது போல துள்ளினான்.
###

தொலைப்பேசியைச் சுற்றினேன். எதிர்முனையில் எனது சீஃப் லைனில் வரும் வரை காத்திருந்தேன். வழக்கமான வந்தனம் முடிந்து, விசயத்திற்குள் புகுவதற்குள், எஸ்.டி.டி. பணம் 10 ரூபாய்க்கு மேல் எகிறி விட்டது.
”சார்! டிரேட் டாக்ஸ் டிபார்ட்மெண்டில் இருந்து வந்த நோட்டிஸை, நான் பெற்றுக் கொண்டேன். அதன் நகல்களை இன்றைய கூரியரில் அனுப்பி இருக்கிறேன். நாம் டாக்ஸ் 2 லட்சம் சொச்சமும், அதற்கு வட்டு ஒரு லட்சம் சொச்சமும் சேர்த்து, 4 லடசம் சொச்சம் மொத்தமா கட்ட வேண்டியிருக்குது…”

“என்னய்யா கணக்குப் போடுறீர்? டாக்ஸ் அரியர்ஸ் லட்சம் சொச்சம்.. வட்டி ஒரு லட்சம் சொச்சம்.. சரிதானே? நீர் சொன்னதைதான் நானும் ரிப்பிட் பண்றேன்.. அப்ப ரெண்டும் சேர்து, 3 லட்சம சொச்சம்தானே வரணும்?”

“அது வந்து சார்… டாக்ஸ் அரியர்ஸ் சொச்சமும், வட்டி சொச்சமும் சேர்ந்து, ஒரு லட்சம் சொச்சம் வந்துடுது சார்…”

சீஃப் முகத்தில் கொசு ஆடுவதை, மானசீகமாய் பார்த்து, என்னால் ரசிக்க முடிந்தது.

“இவ்வளவு பெரிய அமெளண்டை, உடனடியா கட்ட முடியாதுய்யா!” ஒரு தமுக்கடி அடித்தார்.

“சரி சார்! அப்படின்னா, நான் போனை வச்சுடறேன்..” நான் பதில் தமுக்கடி அடித்தேன்.

“என்னய்யா? பணத்தைக் கட்டிட்ட மாதிரி போனை வச்சிடுறேன்ங்கிறே? டாக்ஸைக் கட்டாட்டா, என்ன பண்ணுவாங்க தெரியுமா?” கொஞ்சம் பயம் குரலில் உறைந்திருந்தது.

“நம்ப லக்னோ ஆபிஸை, ‘சீல்’ பண்ணிடுவாங்களாம்…”

“தெரிஞ்சுமா, பதறாம இருக்கே?”

“பதறி என்னப் பண்ண? லக்னோ வந்தப்பவே, சித்தார்த்தனுக்குப் போதி மரத்துலே கிடைச்ச ஞானம் போலவே, நமக்கும் இந்த ஊருலே கிடைச்சுப் போசசு. என்னோட வேலை 28ம் தேதிக்குள் பணம் கட்டணும் என்ற விபரத்தை உங்களுக்குத் தெரிவிப்பதோட, முடிஞ்சுப் போச்சு.. இனி பணம் கட்றதா வேண்டாமா என்று முடிவு பண்றது, உங்க டிஸ்கிரிஷனரி பவர்..”

தொலைப்பேசியைக் ‘கட்’ செய்தேன். எஸ்.டி.டி. டிஸ்பிளே, ஏற்கனவே அம்பது ரூபாய் சொச்சம் ஆனதைக் காட்டி உறைந்து நின்றது. பிரிண்டர் பில்லைப் பிரிண்ட் செய்து, துப்பியது.

‘திட்டவட்டமாய் செய்ற்படுவது’ என்பது இதுதான். சரியான நேரத்தில் கழண்டு கொள்வது….

என்னை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, லக்னோ ஆபிசில் ஏற்கனவே இருந்த டெலிபோன் கனெக்சனைக் கூட, ‘வேண்டாம்’னு எழுதிக் கொடுத்து விட்டார் சீஃப். இனி என்னைப் பிடிக்க தில்லிக்கு ஃப்ளைடில் வந்து, அங்கிருந்து சதாப்தியைப் பிடித்து, லக்னோ வந்தால்தான் உண்டு.
###

எங்க ஆபிஸில் உள்ள எனது சொந்த சாமான்களை எல்லாம் வீட்டிற்குக் கொண்டு சென்று வைத்து விட்டேன். ஆபிஸை எப்ப வேணா ‘சீல்’ வைக்கலாம். அதனால் நமக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லை. இன்னொரு ஆபிஸிக்கு மாற்றி அடிப்பார்கள். அவ்வளவுதான்.

கதறிக் கொண்டு, ஆபிஸ் முன் ஒரு ஜீப் வந்து நின்றது. உள்ளே இருந்தது சீஃப்தான். அவர் வந்தால், என்ன பேச வேண்டுமென முதலிலேயே திட்டமிட்டு வைத்திருந்தேன். “வாங்க சார்! செளக்கியமா இருக்கீங்களா? வீட்டுலே பாப்பா +2வில் ஸ்கூல் பர்ஸ்டாமே? தெரிந்ததும் ரொம்ப சந்தோசமாய் இருந்தது.” நான் இப்படி வரவேற்றதும், அப்படியே பெட்டிப்பாம்பாய் அடங்கி பஸ்பமாகி விட்டார்.

“எம் பொண்ணு ராத்திரி 2 மணி வரைக்கும் படிச்சுகிட்டே இருப்பா.. வெரி ஹார்ட் ஒர்க்கிங்..” என்று சொல்லி உருகினார். நான் அவரது மகள் ஒரு மனப்பாடம் செய்யும் இயந்திரம் என்று, எண்ணிக் கொண்டேன்.

திடீர்னு ஞாபகம் வந்தது போல, “இந்த டிரேட் டாக்ஸ் தொந்தரவுதான் தாங்க முடியலை. நேரா டிபார்ட்மெண்டுக்குப் போய் பேசிட்டேன். இன்னும் ஒரு மாசம் வட்டியோட கட்ட எக்ஸ்டன்சன் கேட்டேன். சரின்னு சொன்னவன், 25000ரூபாய் கேட்டுப் பல்லைக் காட்றான்..” என்றார். 25000 ரூபாயைக் கொடுத்தாரா, கொடுக்கப் போகிறாரா, அல்லது கொடுக்காமல் வந்தது வரட்டும் என பார்ப்பது என முடிவு பண்ணினாறா என்ற, எந்த விபரத்தையும் என்னிடம் சொல்லவில்லை.

“ஓ.. மை காட்…” என நம்ப முடியாதது போல, நான் கண்களை அகல விரித்து, ரொம்பவும் ஆச்சரியப் படுவது போல நடித்தேன். “ஏங்கிட்டே பத்தாயிரம் கொடுத்தால், போதும்னான். உங்களைப் பார்த்ததும், 25000 ரூபாய் ஆக்கிப் புட்டானே?” என்றேன்.

“இதுதான்ய்யா இந்த கவர்ன்மெண்டோட உள்ள பிரச்சினையே.. இதுதான் டிரேட் டாக்ஸ் டிபார்ட்மெண்ட் எல்லாத்தையும், பிரைவேட் ஆக்கணும்ங்கிறது..”
“டிரேட் டாக்ஸ் டிபார்ட்மெண்டைப் பிரைவேட் ஆக்கியிருந்தால், ஒண்ணாம் தேதியே டிரேட் டாக்ஸ் கட்டாததற்கு, அவங்க டிபார்ட்மெண்டிலே வைத்தே நம்மைத் தூக்கிலே தொங்க விட்டு இருந்திருப்பான்!”
###

ஒருவாரம் கழித்து, ஒரு காரியமாய் சேல்ஸ் டாக்ஸ் டிபார்ட்மெண்டுக்குப் போக வேண்டி வந்தது. துபே வெற்றி புன்னகையை உகுத்துக் கொண்டு, என்னிடம் வந்தான். “எட்டணா காசு கொடுக்க முடியாதுனு சொன்னியே.. பாத்தியா? உன் சீஃப் சென்னையில் இருந்து வந்தான். வெறும் ஐயாயிரம்தான் கொடுத்தான். காரியம் சல்லிசாய் முடிஞ்சுப் போச்சு.. ஒரு மாசத்துக்கு எக்ஸ்டென்சன் வாங்கி கொடுத்துட்டோம்..”

‘இருபத்தையாயிரம் கொடுத்ததா, சீஃப் சொன்னாரே? ஐயாயிரத்தை மட்டும் கொடுத்து விட்டு, பாப்பா பர்தர் ஸ்டடிக்காக இருபதாயிரத்தைச் சீஃப் சுருட்டி விட்டார் போலிருக்குது,’ என நான் நினைத்துக் கொண்டேன்.
என் முகபாவம் அடைந்த பரிணாம மாற்றத்தைக் கொண்டு, சரியாய் ஊகித்து விட்டான் துபே. காவிப்பல் தெரிய இளித்தான். “உன் சீஃப் இன்னும் அதிகமா கொடுத்ததா சொன்னானா? பதினையாயிரம் சொல்லியிருப்பானா?”

“அப்படியெல்லாம் இல்லை.” அசடு தெரிய சிரித்தேன்.

“எல்லாம் ஒட்டுண்ணிகள். இப்பல்லாம் ஒட்டுண்ணிகளோட எண்ணிக்கைதான் அதிகமா ஆயிடுச்சு.. அதுதான் பிரச்சினையே!” நசியம் பண்ணின ‘பவுச்’சில் இருந்த பாக்குத்தூளை வாயில் தட்டி, பின்னர் கைகளில் தூசு முழுவதுமாய் போகும் வரை, இரண்டு கைகளாலும் தட்டி விட்டுக் கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *