உலகம் யாவையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 11,957 
 

வெள்ளைத்தோல் கொண்ட எவரிடமும் முதலில் கேட்கும் கேள்வியை நான் அவரிடம் கேட்டேன் ‘நீங்கள் எந்த நாட்டைச்சேர்ந்தவர்?’. ஆனால் அவரிடம் கேட்கக்கூடாத முதல் கேள்வியே அதுதான். அல்லது இப்போது தோன்றுகிறது, அவரை உண்மையில் அறிந்துகொள்ள வேண்டுமென்றால் கேட்டுப்பார்க்கவேண்டிய கேள்வியும் அதுதான் என.

அவருக்கு எழுபத்தைந்து வயதிருக்கும். வாய் நன்றாக மடிந்து உள்ளேசென்று உதடுகளே இல்லாமலிருந்ததும், நேரான ஜெர்மனியமூக்கு வாயை நோக்கி சற்றே வளைந்திருந்ததும், வாய்க்கு இருபக்கமும் இருந்த மடிப்புகளும் மட்டுமே அவரது வயதைச் சொல்லின. ஏழடி வரை உயரமிருப்பார். அந்த உயரம் இருப்பவர்களுக்கு தங்களைவிட குள்ளமானவர்களிடம் பேசிப்பேசி ஒரு சிறு கூனல் வந்திருக்கும். வெயிலில் வெந்த முன் வழுக்கை , வளைந்த நெற்றி, சற்று தொங்கிய கன்னம் எல்லாம் செம்மண் நிலத்தை உழுதுபோடப்பட்டதுபோல மடிப்புகள். பழுத்த உலோகக் கண்கள். விளையாட்டுவீரனுக்குரிய பச்சை நரம்பு தடித்த இறுகிய கைகள். விரிந்த தோள்கள். திடமாக ஒடுங்கிய வயிறு. இரும்பு ஸ்பிரிங்கால் இறுக்கிய மூட்டுஇணைப்புகள் கொண்ட நடை. காக்கி கால்சட்டையும் சட்டையும் அணிந்திருந்தார்.

அவர் சற்று கனத்த மூக்குக்கண்ணாடிச்சில்லு வழியாக நட்புடன் என்னை நோக்கி பதிலுக்கு ‘’நீ எந்த நாட்டவன்?’ என்றார். நான் கொஞ்சம் குழம்பி ‘இந்தியன்’ என்றேன். ‘ஓ…’என்றார். ‘நீ இந்தியன் என யார் சொன்னது?’ நான் கொஞ்சம் யோசித்து கவனமாக ‘சட்டப்படி நான் இந்தியன்’ என்றேன். ‘அதாவது, இந்தியா என்று சொல்லப்படுகிற ஒரு நிலப்பரப்பில் அமைந்திருக்கும் ஒர் அரசு உனக்கு ஒரு அடையாளத்தை அளிக்கிறது. இந்தியாவின் குடிமகன் என்று அது உன்னைச் சொல்கிறது, இல்லையா?’

நான் வில்லங்கமான ஒருவரிடம் மாட்டிக்கொண்டதை உணர்ந்தேன். ஆனால் ஊட்டியின் கிராமப்பகுதிகளில் அது சாதாரணம். ஊட்டி நகருக்குள் அல்லது கேளிக்கையிடங்களுக்குச் செல்லும் வழியில் காணப்படும் வெள்ளைக்காரர்கள் வேறுவகை. தோளில் பெரிய சுமைப்பைகளுடன் பெரிய பூட்ஸ் அணிந்து மலை ஏறச்செல்பவர்கள், காமிராக்களுடனும் பைனாக்குலர்களுடனும் காட்டுக்குள் செல்பவர்கள், ஜோடிகளாக நாலடிக்கு ஒருமுறை முத்தமிட்டுக்கொள்பவர்கள். .. ஆனால் பொதுவாக கொடைக்கானலில் காணப்படுமளவுக்கு போதையடிமைகள் இங்கே இருப்பதில்லை. கொடைக்கானலில் ஒருவகை காளானுக்காக பரட்டைத்தலைவெள்ளை இளைஞர்கள் வந்து குவிகிறார்கள். ஊட்டியில் தென்படுபவர்கள் அனேகமாக அனைவருமே ஆரோக்கியமானவர்கள்.

ஊட்டிக்கு வெளியே சிதறிக்கிடக்கும் கிராமங்களில் பல்வேறு குருகுலங்களும் ஆசிரமங்களும் உள்ளன. கிறித்தவ மடாலயங்களும் தியானமையங்களும் ஏராளம். அங்கெல்லாம் செல்பவர்களே கிராமச்சாலைகளில் தென்படுவார்கள். அந்த வெள்ளையர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தன்மை உண்டு. பிற வெள்ளையர்களை விட உள்ளூர்க்காரர்களுடன் பழகவும் பேசவும் சின்னஞ்சிறு டீக்கடைகளில் டீ குடிக்கவும் ஆர்வம் காட்டுவார்கள். மற்றவர்களைப்போல எங்கும் எதையும் ஃபோட்டோ எடுத்துக்கொள்ளும் வெறி இருப்பதில்லை. சடைமுடி வளர்த்தவர்கள், காவி அணிந்தவர்கள், மொட்டைபோட்டு ருத்திராட்சம் அணிந்தவர்கள் என பல்வேறு வகை தோற்றங்கள். ஆனால் முகத்தில் எப்போதும் ஒரு சிரிப்பு அல்லது விடுபட்ட தன்மை இருந்து அவர்கள் வேறு என்று அடையாளம் காட்டும். இவர் வைக்கோல்நிறமான கூந்தலை பின்பக்கம் குதிரைவால் கொண்டையாக கட்டியிருந்தார்.

கோழிக்கோட்டில் இருந்து ஊட்டி நிலையத்தில் இறங்கி ஃபேர்ன்ஹில் செல்வதற்காக நின்றபோது அவரைப்பார்த்தேன். அன்று பேருந்துகள் ஓடாது என்றார்கள். ஆட்டோக்களும் வேன்களும்கூட கிடையாது. ஊட்டி பந்த். தேயிலை விலைசம்பந்தமான ஏதோ பிரச்சினை. நடந்துதான் ஆகவேண்டும். நடக்க ஆரம்பித்தபோது கொஞ்சநேரம் முன்பு இன்னொரு கேரள பஸ்ஸில் இருந்து இறங்கி என்னைத்தாண்டிச்சென்ற அவர் எனக்கு முன்னால் சிறுத்தை போல நடப்பதை உணர்ந்தேன். நான் அவரை பின் தொடர்ந்துசென்று வணக்கம் சொன்னேன்.

சரி, மேலே பேசித்தான் பார்ப்போமே என்ற எண்ணம் வந்தது. ‘எனக்கு இந்த நாடு அடையாளத்தை மட்டும் தரவில்லை. எனக்கு இது பாதுகாப்பை அளிக்கிறது…’ என்றேன். ‘எவரிடமிருந்து?’ என்றார். ’பிற நாட்டினரிடமிருந்து’ ‘பிறநாட்டினர் என்றால்? அங்குள்ள அரசாங்கத்தால் உன்னைப்போல அடையாளம் கொடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களிடமிருந்தா? அவர்கள் உன் எதிரிகளா? உன்னை அழிக்க நினைக்கிறார்களா?’ என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ‘உன் நாட்டு அரசின் மீது படைஎடுப்பது பிற நாட்டு அரசு. அது அரசுகள் நடுவே உள்ள போராட்டம். உன்னை வைத்து அந்த போரை நிகழ்த்துபவர்களை நீ உனக்கு பாதுகாப்பு தருபவர்கள் என்று நினைக்கிறாய்…’

சட்டென்று எனக்கு அது புரிந்தது. பெரும்பாலான ரவுடிகள் ஒரு ஏரியாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே பக்கத்து பேட்டை ரவுடியிடமிருந்து பாதுகாப்பதாகச் சொல்லித்தான். ஆனால் நான் அதை அப்படியே விட்டுவிட மனமில்லாமல் ‘நாடு என்று இருந்தால்தான் மக்கள் ஒற்றுமையாக இருப்பார்கள்’ என்றேன். ‘எந்த மக்கள்? பாகிஸ்தானியர்களும் இந்தியர்களுமா?’ நான் கோபமாக ’ இல்லை, இந்தியர்கள்’ என்றேன். ‘அப்படியானால் ஏன் ஊட்டி இந்தியாவுடன் இருக்க வேண்டும்? இந்த மலைப்பகுதியை தனி நாடாகச் சொல்லிவிடலாமே இந்த மலையில் உள்ள அனைவரும் ஒருவரோடொருவர் ஒற்றுமையாக இருப்பார்களே? ஏன் மசினகுடியைக்கூட தனி நாடாக ஆக்கலாமே’

நான் அவர் செல்லும் திசையை புரிந்துகொண்டு அமைதி காத்தேன். ‘ஊட்டி தமிழ்நாட்டுடன் இணைந்து ஒற்றுமையாக இருக்க முடியும் என்றால், தமிழ்நாடு இந்தியாவுடன் இருக்க முடியும் என்றால், ஏன் உலகம் ஒன்றாக இருக்க முடியாது?’ என்றார். அந்த கேள்வியிலிருந்த ஏதோ ஒன்றால் நான் நான் புன்னகை செய்தேன். ஊட்டியின் அந்த மலைச்சாலையில் ரிஷிகளைப்போல சிந்திக்கத்தோன்றும்போலும்.

‘நீ சிரிக்கிறாய். இதை கிறுக்குத்தனம் என்கிறாய். நான் உலகின் இருநூற்று ஐம்பது நாடுகளில் பல்லாயிரம் பேர் இந்தச் சிரிப்பை சிரிப்பதை கவனித்திருக்கிறேன்… நூறுவருடங்களுக்கு முன் கறுப்பனும் வெள்ளையனும் சமம் என்று சொன்னபோது இப்படித்தான் சிரித்திருப்பார்கள். இருநூறுவருடம் முன்பு மனிதனை அடிமையாக விற்பதும் வாங்குவதும் பாவம் என்ற போது இப்படித்தான் சிரித்திருப்பார்கள். பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்று சொன்னபோது வாய்விட்டு சிரித்திருப்பார்கள்’ அவர் வேகமாகவும் உரத்தும் பேசினாலும் கொஞ்சம் கூட கோபம் இல்லாமல்தான் பேசினார்

‘எத்தனையோ முற்போக்குக் கருத்துக்களைப் பேசுகிறோம். ஏன் இந்த எண்ணத்தைப்பற்றி நாம் யோசிப்பதில்லை? யோசிப்போமே. விவாதிப்போமே. சிறிய அளவிலேனும் நடைமுறைப்படுத்திப் பார்ப்போமே. எல்லா நல்ல சிந்தனைகளும் ஆரம்பத்தில் கிறுக்குத்தனமாகத்தான் தோன்றும். சில கிறுக்கர்களால்தான் முன்னெடுத்துச் செல்லப்படும். சிவில் உரிமைகளைப்பற்றிப் பேசிய தோரோ கிறுக்கனாகத்தான் கருதப்பட்டான். அவன் செய்த சிறிய செயலுக்கு நேரடியான அர்த்தம் என ஒன்றும் இல்லை. ஒரு மனிதன் வரிகொடுக்க மறுத்து ஒரு குளக்கரை காட்டில் மரக்குடிலில் வாழ்ந்தால் என்ன நிகழ்ந்துவிடும்? ஆனால் அது ஒரு குறியீட்டு நிகழ்ச்சி…இதைப்பார்’

அவர் தன் பையில் இருந்து நீலநிறமான ஒரு கனத்த டைரியை எடுத்து நீட்டினார். அது ஒரு பாஸ்போர்ட் என கையில் வாங்கியபிறகே எனக்குத்தெரிந்தது. அமெரிக்க பாஸ்போர்ட்டின் அதே நிறம் வடிவம். அமெரிக்க பாஸ்போர்ட் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அதில் சிவந்த அட்டை மீது ஓர் உலக உருண்டையின் படமிருந்தது. கீழே ’One world ,One nation’ என்ற குறிக்கோள் வாசகம். அதன் கீழே பெரிய நீல எழுத்துக்களில் ’World Passport for World citizens’

உலகின் எந்த நாட்டையும் சேராமல் உலகை ஒட்டுமொத்தமாக தன் நாடு என நினைக்கும் உலகக் குடிமகன்களுக்கான பாஸ்போர்ட் அது என்ற விளக்கக் குறிப்பு இரண்டாம் பக்கத்தில் இருந்தது. பலமொழிகளில் அந்த வாசகங்கள் காணப்பட்டன. அந்த பாஸ்போர்ட்டை அமெரிக்காவில் மேய்ன் பகுதியில் எல்ஸ்வர்த் நகரில் உள்ள உலகக் குடிமகன்களின் பதிவகம் (International Registry of World Citizens) வழங்கியிருந்தது. அந்த பாஸ்போர்ட் பெறுவதற்கான நிபந்தனை ஒன்றுதான், வேறெந்த நாட்டின் பாஸ்போர்ட்டும் வைத்துக்கொண்டிருக்கக் கூடாது. எந்த நாட்டிலும் ராணுவசேவையில் இருக்கக் கூடாது. உலகத்தை தன் நாடாக மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு உறுதிமொழி எடுக்கவேண்டும்

அந்த பாஸ்போர்ட்டில் அவரது படம் இருந்தது. நாற்பது வருடம் முன்புள்ள கறுப்பு வெள்ளை படம். நீளமுகத்துடன் சற்றே மேலேறிய நெற்றியுடன் உற்சாகமான சிரிப்புடன் இருந்தார். லாரல் ஹார்டி இரட்டையரில் லாரலுக்கு கொஞ்சம் சதை போட்டது மாதிரி. அவர் பெயர், காரி டேவிஸ். உலகக்குடிமகன். 1921ல் அமெரிக்காவில் பிறந்தவர். 1948 முதல் உலகக் குடிமகனாக தன்னை அறிவித்துக்கொண்டிருந்தார்.

நான் அதை அவரது சொந்தக் கிறுக்குத்தனம் என்றுதான் நினைத்தேன். அதற்குள் அவர் ’இந்த பாஸ்போர்ட் இப்போது அறுபதுநாடுகளுக்கு செல்லுபடியாகக்கூடிய ஒன்று. இந்த பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு ஏழாவது தடவையாக நான் இந்தியா வருகிறேன்’ என்றார். நான் பாஸ்போர்ட்டை பிரித்து பார்க்கப்பார்க்க ஆச்சரியத்தில் என் கைகள் நடுங்கின. அந்த பாஸ்போர்ட் மேலும் மேலும் பக்கங்கள் இணைக்கப்பட்டு கிட்டத்தட்ட இருநூறு பக்கம் இருந்தது. அதன் பக்கங்களில் ஏராளமான முத்திரைகள். சிவப்பு,பச்சை எழுத்துகளாலான குறிப்புகள். அடித்தல்கள் திருத்தல்கள். பலமொழிகளில் பல கைவண்ணங்களில்…உலக வரைபடத்தில் விழுந்துபுரண்டு உடலெங்கும் வண்ணங்களுடன் வந்த ஒரு அணில் போல.

சட்டென்று அதில் ஜவகர்லால் நேருவின் கையெழுத்தை கண்டேன். பச்சை வண்ண மையில் ‘இந்திய குடியரசு இந்த பாஸ்போர்ட்டை அதிகாரபூர்வ ஆவணமாக அங்கீகரிக்க நான் பரிந்துரை செய்கிறேன், ஜவகர்லால் நேரு இந்திய பிரதமர்’ என 1954 ஜூலை 18 ஆம் தேதியில் கையெழுத்திட்டிருந்தார். அவரது அதிகாரபூர்வ இலச்சினை. அதன் கீழே ‘ஒரு உன்னதமான இலட்சியம். இந்திய அரசு இதை அங்கீகரித்துள்ளது’ என்று இந்திராகாந்தியின் கையெழுத்து. அவர் அதை வாங்கி ஒரு பக்கத்தைப் பிரித்து ‘இதைப்பார்’ என்றார். ‘உலகக்குடிமகனாகிய நான் உலகக்குடிமகனாகிய காரி டேவிஸ் பிரான்ஸில் நுழைய இதனால் அனுமதி அளிக்கிறேன்’ என்று அல்பேர் காம்யூ கையெழுத்திட்டிருந்தார்

இதென்ன கோமாளித்தனம் என்றுதான் மீண்டும் தோன்றியது. ஆனால் எகிப்தின் நாசரும் யூகோஸ்லாவியாவின் மார்ஷல் டிட்டோவும் கையெழுத்திட்டிருந்தார்கள். ஏராளமான உலகத்தலைவர்கள் அவர்கள் நாடுகளின் அதிகாரபூர்வ அனுமதிக்கு பரிந்துரை செய்திருந்தார்கள். அமெரிக்க அரசுதான் அதை முதலில் அங்கீகரித்திருந்தது. நான் அதை திரும்ப கொடுத்தேன். ‘நீ விரும்பினால் இந்த அமைப்பில் சேரலாம். நான் உனக்கு பாஸ்போர்ட் தருகிறேன்’ என்றார்

‘நீங்கள் எங்கே போகிறீர்கள்?’ என்றேன். ‘இங்கே நாராயணகுருகுலம் என்ற இடம் உள்ளது. அங்கேதான் தங்கியிருக்கிறேன்’ ‘அட!’ என்றேன். ‘நானும் அங்கேதான் போகிறேன். நான் நித்ய சைதன்ய யதியின் மாணவன்’

அவர் என் கைகளை தன் வலிமையான கைகளால் பற்றிக்கொண்டார். ‘ஆச்சரியம்…நான் நித்யாவின் நெருக்கமான நண்பன். உண்மையில் நான் அவருடைய குருவின் நண்பன்..உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி..’. நான் ‘உங்களுக்கு நடராஜகுருவை தெரியுமா?’ என்றேன். அவர் ‘நானும் அவரும் இருபதைந்தாண்டுக்காலம் ஒன்றாக வேலைசெய்தோம். நான் அவரை என் குருவாக ஏற்றுக்கொண்டவன்’ என்றார்

நான் ஆச்சரியத்துடன் அவரை பார்த்தேன். ‘…எனக்கு ஹென்றிபெர்க்ஸனின் தொடர்பு இருந்தது. அவரைப்பார்க்க 1945 ல் நான் சார்போன் பல்கலைக்கு போனேன். அப்போது அங்கே நடராஜ குரு ஒரு கருத்தரங்குக்காக வந்திருந்தார். அவரையும் ஜான் ஸ்பியர்ஸையும் அப்போதுதான் சந்தித்தேன். அதன்பின்னர் ஒரே உலகம் என்ற கருத்துக்காக நாங்கள் சேர்ந்து பணியாற்ற முடிவு செய்தோம்’

அவரிடம் பேசிக்கொண்டே குருகுலம் நோக்கிச் சென்றேன். எட்டரை மணிக்குத்தான் ஊட்டியில் காலை கொஞ்சம் தயங்கித்தயங்கி விடிய ஆரம்பித்திருந்தது. உருளைக்கிழங்கு வயலைநோக்கி ஒரு கிளிக்கூட்டம் சாலையை மறித்துக்கொண்டு பறந்து இறங்கியது. பக்கவாட்டின் பசும்புல்வெளி ஈரத்துடன் மின்ன அதில் மேய்ந்துகொண்டிருந்த கனத்த பசுக்களின் உடல்கள் வானில் இருந்து ஒளிக்கோடு ஒன்றால் பிரிக்கப்பட்டிருந்தன. ஒளியில் துழாவியபடி வால்கள் சுழல சிறு பூச்சிகள் தீப்பொறிகள் போல சுற்றிப்பறந்தன.

நான் நித்ய சைதன்ய யதியை அறிமுகம் செய்துகொண்டு குருகுலத்திற்குச் செல்ல ஆரம்பித்து அப்போது ஒரு வருடம்கூட ஆகவில்லை. குருகுலம் பற்றியும் அதன் பல்வேறு உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் பற்றியும் எனக்கு அதிகமாக ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. அங்கே ஒவ்வொருமுறையும் எனக்கு ஆச்சரியங்கள் இருந்தன. உலகின் மிகமுக்கியமான கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், பயணிகள் நித்யாவின் நண்பர்களாகவும் மாணவர்களாகவும் அங்கே வந்துகொண்டிருந்தார்கள்.

வழியில் நான்கு குதிரைகள் எதிரே வந்தன. ஒன்று வெண்ணிறம். பிற மாந்தளிர் நிறமானவை. காலைமஞ்சளில் அவை பொன்னாலும் வெள்ளியாலும் ஆனவை போல ஒளிவிட்டன. சருமத்தை சிலிர்த்துக்கொண்டு வால் சுழல இறுகிய தசைகளின் மிடுக்குடன் குளம்புகள் ஒலிக்க நடந்து வந்தன. ஒன்று எங்களை பிடரி மயிர் நலுங்க திரும்பிப்பார்த்தது. நான் நினைத்ததையே அவரும் சொன்னார்.’வெள்ளியும் பொன்னும்..’ நின்று அவற்றை பார்த்துக்கொண்டு முகம் மலர ‘எவருக்கும் சொந்தமில்லாத செல்வங்கள். கட்டற்ற செல்வங்கள்…’ அவர் மனம் முழுக்க அந்த அடிப்படைச்சிந்தனை எப்போதும் ஓடிக்கொண்டே இருந்தது என்று புரிந்துகொண்டேன்.

மஞ்சணகொரே கிராமத்தை அடைந்து நாராயணகுருகுலத்தை நோக்கி திரும்பினோம். திரும்பும் வழியில் ஒரு புதிய வீடு கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. காரி டேவிஸ் என்னிடம் ‘ஐம்பத்திநான்கில் நான் இங்கே முதல்முறையாக வந்தபோது இந்தப்பகுதியெங்கும் ஒரு வீடு கூட இல்லை. பள்ளங்களில் கொஞ்சம் உருளைக்கிழங்கு வயல்கள். மேடுகள் முழுக்க புதர்க்காடுகளும் யூகலிப்டஸ் மரங்களும்தான். குருகுலம் காட்டுக்குள் ஒரு தகர டப்பாவை யாரோ விட்டுவிட்டுச் சென்றது போல் இருக்கும்…’

நடராஜ குரு அந்த அத்துவானக்காட்டில் அன்பளிப்பாக கொடுத்த நிலத்தில் அவரே கையால் கட்டிக்கொண்ட தகரக்குடிசையில் தனியாக தங்கியிருந்த நாட்கள் அவை. அன்று அவரை சிலரே அறிந்திருந்தார்கள். அவர் ஏற்கனவே செயல்பட்ட நாராயணகுருவின் அமைப்புகள் அனைத்துடனும் தன் தொடர்புகளை வெட்டிக்கொண்டு உலகறியாமல் ஒளிந்து வாழ்ந்துகொண்டிருந்தார். நடராஜகுரு ஆவதற்கான கூட்டுப்பருவத்தில் இருந்தார். ஐம்பதுகளின் தொடக்கத்தில் ஜான் ஸ்பியர்ஸ் வந்துவிட்டார். நித்ய சைதன்ய யதி சென்னை பல்கலை பேராசிரியர் வேலையை துறந்து வந்து சேர்ந்தார்.

‘நீங்கள் வரும்போது நித்யா இருந்தாரா?’ என்றேன்.’ஆம், ஆனால் நான் முதலில் வந்தபோது அவரைப்பார்க்கவில்லை. அவர் வற்கலையில் இருந்தார். ஜான் ஸ்பியர்ஸ் பெங்களூரில் இருந்தார். அங்கிருந்து வேல்யூஸ் மாத இதழை வெளியிட்டுக்கொண்டிருந்தார். இங்கே நடராஜகுருவும் சிதம்பர தீர்த்தரும் மட்டும்தான் இருந்தார்கள். சிதம்பர தீர்த்தர் அப்போது துறவி ஆகவில்லை. பர்மாவில் இருந்து அப்போதுதான் வந்து இங்கே ஏதோ வேலை செய்துகொண்டிருந்தார்’

குருகுலத்திற்குள் நுழைந்த காரி டேவிஸ் ‘நான் மேலே அந்த சிறிய குடிலில் தங்கியிருக்கிறேன். நீ தயங்காமல் என்னைச் சந்திக்க வரலாம்’ என்று சொல்லிவிட்டு தண்ணீர் தொட்டி வழியாக ஏறிச் சென்றார். நான் நேராக நித்யாவின் அறைக்குச் சென்று வணங்கிவிட்டு பேசிக்கொண்டிருந்தேன். ‘குரு, காரி டேவிஸை பார்த்தேன்’ என்றேன். ‘நாங்கள் சேர்ந்து வந்தோம்’ நித்யா சிரித்துக்கொண்டு ‘வந்துவிட்டாரா? பேசிக்கொண்டே வந்தீர்களா?’ என்றார். நான் ‘ஆமாம். அவரைப்பற்றி நான் இதுவரை கேள்விப்படவில்லை’என்றேன்

நித்யா ‘அதற்குரிய ஆர்வம் உனக்கு இல்லை என்று பொருள்’ என்றார். ‘நடராஜகுருவின் சுயசரிதையான ‘The Autobiography of an Absolutist’ வாசித்திருக்கிறாயா?’ நான் வாசிக்க ஆரம்பித்து இரு அத்தியாயங்களுடன் நின்றிருந்தேன். ‘அதில் காரி டேவிஸ் பற்றி விரிவாகவே வருகிறது. நடராஜ குருவின் ஓருலகம் பற்றிய கருத்து அவரும் காரியும் சேர்ந்து உருவாக்கிக்கொண்டது. இருவரும்சேர்ந்துதான் ஈஸ்ட் வெஸ்ட் யூனிவர்சிட்டிக்கான முன்வரைவை உருவாக்கினார்கள்’ ’நான் அவரை இதுவரை கேள்விப்படவில்லை என்று நினைக்க வருத்தமாக இருக்கிறது…’ ‘சரி, இப்போது கேள்விப்பட்டாயிற்றே…அப்புறம் என்ன? அவரைச் சந்திக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது’

நித்யா விருந்தினர்களைப் பார்க்க ஆரம்பித்தபோது நான் சமையலறைக்குச் சென்றேன். டாக்டர் தம்பான் சாமி சமையலில் ஈடுபட்டிருக்க அருகே கருணாகரன் முள்ளங்கி நறுக்கிக் கொண்டிருந்தாண்டிருந்தார். நான் சென்றதும், ’வாங்கோ வாங்கோ வாங்கோ’ என்று மலையாளத்தமிழில் தம்பான் சாமி வரவேற்றார். ‘எலக்கியமெல்லாம் எப்புடி இருக்கு?’ என்றார். ‘அதுபாட்டுக்கு இருக்கு’ என்றபடி அலுமினியக்குண்டானில் இருந்து எனக்கு ஒரு சூடான கறுப்புடீ மொண்டுகொண்டேன். கருணாகரன் அருகே பெஞ்சில் அமர்ந்தேன்.

‘காரி டேவிஸை பாத்தாச்சா?’ என்றார் டாக்டர். ‘எப்டி தெரியும்?’ ‘நமக்கு எல்லாம் தெரியும் சாமி. முக்காலமும் உணர்ந்த ஞானியாணு’ என்றார். நான் கொல்லைப்பக்க சன்னலைபார்த்தேன். அதன் வழியாக நாங்கள் வந்த பாதை தெரிந்தது. ‘பெரிய மனிதர்’ என்று மலையாளத்தில் சொன்னேன். ‘எழுத்தாளர் சாரே, ஹென்றிச் இப்சனின் எனிமி ஆஃப் த பீப்பிள் வாசித்ததுண்டா?’ என்றார் தம்பான் சாமி மலையாளத்தில்.

நான் ‘ஆமாம் என்றேன். ‘உலகம் முழுக்க சிந்தனையாளர்களுக்கு அது ஒரு ஆளுமை முன்வரைவை அளித்தது… ஐரோப்பாவில் பதினேழாம் நூற்றாண்டு முதல் தனிமனித சிந்தனைக்கு அதிகமான முக்கியத்துவம் வந்தது. தனித்து நின்று சிந்திப்பவனை அன்றைய மதமும் அரசாங்கமும் ஒட்டுமொத்த சமூகமும் அன்னியனாக வெளியேற்றின. அவனை ஒழுக்கமில்லாதவன் என்றும் கலகக்காரன், அராஜகவாதி என்றும் முத்திரை குத்தின. இந்த முத்திரைகள் பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் மிகமிக அபாயகரமானவை’

டாக்டர் தொடர்ந்தார் ‘அன்று ஆயிரக்க்கணக்கான சிந்தனையாளர்களும் அறிவியல்வாதிகளும் இப்படி பொதுச்சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டார்கள். ஆனால் அவர்கள்தான் ஐரோப்பிய நாகரீகத்தையே உருவாக்கினார்கள். அந்த அத்தனை மனிதர்களின் பிரதிநிதியாகத்தான் இப்சன் டாக்டர் தாமஸ் ஸ்டாக்மான் என்ற மனிதரை உருவாக்கினார். அந்த காலத்தில் ஐரோப்பா முழுக்க எத்தனையோ ஸ்டாக்மான்கள் இருந்தார்கள். அந்த நாடகம் அவர்களைப்பற்றிய வெகுஜனக்கருத்தை மாற்றியமைத்ததில் பெரும்பங்கு வகித்தது. தன்னை சமூகத்தில் இருந்து வெளியேற்றிக்கொண்டவனே சமூகத்திற்கு புதிய வழியைக் காட்டமுடியும் என்று அந்நாடகம் காட்டியது. அந்த அன்னியர்கள் எந்த ஒரு சமூகத்திற்கும் பெரும் சொத்துக்கள்…’

சர்ர் என்று வாணலியில் தழைகளை போட்டு கிண்டி அதை கூர்ந்து பார்த்து கொஞ்சம் மிளகாய்ப்பொடி தூவிய பின் என்னிடம் ‘இன்றைய ஐரோப்பா உலகுக்கே அறிவையும் தொழில்நுட்பத்தையும் கொடுக்கும் ஞானபூமியாக இருக்கிறதென்றால் அது அன்னியர்களைக் கொண்டாடக் கற்றுக்கொண்டதுதான் காரணம்.கிறுக்கர்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த மானுட நாகரீகம். எழுத்தாளர் சார், நீங்கள் கார்ல் சகனின் புரோக்காஸ் பிரெய்ன் என்ற புத்தகத்தை வாசித்தீர்களா?’

‘இல்லை’ என்றேன். ‘சரியான பதில்’என்றார் வெளியே இருந்து வந்து அவ்வழியாகச் சென்ற தியாகீஸ்வரன் சாமி ‘ஒரு புத்தகத்தை தோற்கடிக்க மிகச்சிறந்த வழி இந்த ஒரு சொல்தான். அது பக்கம் பக்கமாக என்ன சொன்னால் என்ன? இந்த ஒரு சொல்லைக்கேட்டதும் திகைத்து வாய் பிளந்து நின்றுவிடும்’ நான் சிரித்தேன்.

டாக்டர் சாமி அவரைப்பார்த்து புன்னகை செய்து ‘அந்த புத்தகத்தில் ’நைட் வாக்கர்ஸ் ஆண்ட் மிஸ்ட்ரி மாங்கர்ஸ்’ என்று அத்தியாயம் இருக்கிறது. அறிவியலின் விளிம்புகளைப்பற்றிய அற்புதமான கட்டுரை அது. நாம் என்ன நினைக்கிறோம் என்றால் அறிவியல் மிகவும் தர்க்கபூர்வமானது, அதில் கிறுக்குத்தனங்களுக்கு இடமே இல்லை என்று. அது பாடப்புத்தக அறிவியல். நமக்கு தெரிந்தது அதுதான். நம் பையன்கள் அதற்குமேல் வாசிப்பதும் இல்லை. ஆனால் அறிவியல் வளர்ந்துகொண்டே இருக்கிறதே அந்த தளிர்நுனியில் அது கிறுக்கர்களால்தான் முன்னெடுக்கப்படுகிறது. விதவிதமான கிறுக்குத்தனமான ஊகங்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள். அவற்றில் சில ஊகங்கள்தான் அறிவியல் கொள்கைகளாக நிரூபிக்கப்படுகின்றன. மிச்சமெல்லாம் குப்பைக்கூடைக்கு போகும். ஆனால் அந்த ராத்திரியில் உலாவும் கிறுக்கர்கள் இல்லாவிட்டால் அறிவியலே இல்லை.’

வாணலியை இறக்கி வைத்துவிட்டு டாக்டர் சாமி ஒரு பானையை அடுப்பில் ஏற்றினார். நான் பச்சைமுள்ளங்கியை உப்பில் தொட்டு தின்றேன் ‘பச்சை முள்ளங்கியை உப்பு தொடாமல் தின்ன வேண்டும். உப்பு பட்டால் அதன் இயல்பு திரிந்துவிடும். எது ஒன்றின் இயல்பை மாற்றுகிறதோ அது அந்த உணவுக்கு எதிரி…பாகற்காயை புளி சேர்த்து ஊறவைத்து சாப்பிட்டால் கசப்பு இருக்காது. கசப்பு இல்லாவிட்டால் பாகற்காயை ஏன் சாப்பிடவேண்டும்? வெள்ளரிக்காயே போதுமே? இலக்கியம் இல்லாவிட்டால் ஜெயமோகன் எதற்கு? பிஎஸ்என்எல் கிளார்க்கே போதுமே… இல்லையா சாமி?’ என்றார்.அதே மூச்சில் ‘அறிவியலுக்கே இப்படி என்றால் தத்துவமும் கலையும் எல்லாம் எப்படி இருக்கும்? சமநிலையும் லௌகீகவிவேகமும் உள்ளவனுக்கு உள்ளே போவதற்கு அனுமதிச்சீட்டே கிடையாது…’

நான் ‘நம்முடைய நாட்டிலும் அன்னியர்களுக்கு இடமிருக்கிறதே’ என்றேன். ‘இந்தியா அதன் உச்சநிலையில் இருந்தபோது இரவு உலாவுபவர்களையும் மர்மங்களை தேடி அலைபவர்களையும் தான் கொண்டாடி இருக்கிறது. அவர்களுக்கு சமூகம் ஆதரவும் பாதுகாப்பும் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியது. நெடுங்காலம் இந்த மனநிலை இருந்ததனால் அதை சமூக விதியாக மாற்றிக்கொண்டார்கள். அந்த விதிகள் மத நம்பிக்கைகளாக ஆனதனால் அவை கணிசமானவர்களிடம் இன்றும் நீடிக்கின்றன. ஆகவேதான் நடராஜகுரு ஆறுவருடம் இந்த நாட்டில் பிச்சை எடுத்து அலைந்தார். நித்யா நான்கு வருடம் அலைந்தார். எப்படியும் ஒரு ஐந்தாறுலட்சம்பேர் அப்படி அலைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை இச்சமூகம் பேணுகிறது’

டாக்டர் கொதிக்கும் நீரில் உருளைக்கிழங்குகளை போட்டார். என்னருகே வந்து அமர்ந்து காரட் நறுக்க ஆரம்பித்தார். ‘..ஆனால் எங்கே இந்து அல்லது பௌத்த, சமண, சீக்கிய, மதநம்பிக்கைகள் வலுவாக இருக்கின்றனவோ அங்கு மட்டும்தான் இந்த மனநிலை இன்று உள்ளது. நம்முடைய படித்த வர்க்கம் அவற்றை மூடநம்பிக்கை என்று நினைக்கிறது. அவர்கள் ஐரோப்பாவில் இருந்து அற்பமான தொழில்நுட்பக்கல்வியை அல்லது பொருளியல் கல்வியை மட்டுமே பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதுதான் ஐரோப்பா என்று நினைக்கிறார்கள். ஐரோப்பாவின் ஆன்மா பற்றிய அறிவே அவர்களிடம் இல்லை’

நான் அதைப்பற்றியே சிந்தனை செய்துகொண்டிருந்தேன். டாக்டர் சொன்னார் ‘சொல்லப்போனால் இந்த அடிப்படை மனநிலை ஐரோப்பாவில் என்றுமே இருந்தது. கிறிஸ்தவத்தை உலகமெங்கும் கொண்டுசென்ற பிரச்சாரகர்கள் அப்படிப்பட்ட அன்னியர்கள்தான். கப்பலில் ஏறி புதிய உலகை கண்டுபிடிக்கச்சென்ற கொலம்பஸும் வாஸ்கோ ட காமாவும் அப்படிப்பட்டவர்கள்தான். ஹெர்மான் குண்டர்டை நினைத்து பார்த்து நான் சின்ன வயதில் ஆச்சரியப்படுவேன். மிஷனரிகளுக்கு மிகச்சிறந்த உதாரணம் அவரே. பதினெட்டு வயதில் ஏதோ ஒரு அன்னிய நாட்டுக்கு கப்பல் ஏறி பல கடல்களைக் கடந்து சென்று அங்கே வாழ்நாள் முழுக்க தங்கி அந்தமொழியை கற்று அந்த மொழிக்கு இலக்கணநூலையும் அகராதியையும் அமைத்து முன்னோடியாக இருப்பதென்பது எவ்வளவு மகத்தான விஷயம். நம்மில் எத்தனை பேர் அதைச்செய்திருக்கமுடியும் என்று நினைத்தால் அந்த தீவிரத்தின் அர்த்தமென்ன என்று புரியும்’

’ஒருகாலத்தில் இந்தியாவில் அந்த வேகம் இருந்திருக்கிறது. வெறும் ஒரு ஆலிலையுடன் போதிதர்மர் ஜப்பான் வரை சென்றார். ஆனால் அந்த ஆன்ம வலிமையும் உலகையே அணைத்துக்கொள்ளும் பிரக்ஞையும் நம்மிடம் பிறகு இல்லாமலாகிவிட்டது. நாம் மனம் குறுகிய சமூகமாக ஆகிவிட்டோம். அந்த மனநிலையை திரும்ப மீட்டெடுத்தவர் சுவாமி விவேகானந்தர் மட்டும்தான். துறவுமனம் கொண்ட இளைஞர்கள் தனக்குத்தேவை என்று சொன்னபோது விவேகானந்தர் உத்தேசித்ததும் அதுதான். ஆனால் நாம் இன்னும் லௌகீகச்சேற்றில் கால் புதைந்துதான் கிடக்கிறோம்… நம் இளைஞர்களில் சாகச உணர்வோ கனவுகளோ கொண்டவர்களை பார்ப்பதே அரிதாக இருக்கிறது…’ டாக்டரின் கை அவருக்குச் சம்பந்தமில்லாமல் காரட்டுகளை அடுக்கப்பட்ட பொன் நாணயங்களாக ஆக்கிக்கொண்டிருந்தது.

’காரி டேவிஸ் அந்த ஐரோப்பிய மனம் கொண்டவர். சாகசம் செய்வது, வித்தியாசமாக இருப்பது, மகத்தான கனவுகளுடன் இருப்பது, திடமான நம்பிக்கைக்காக சாகவும் தயாராக இருப்பது, உலகைநோக்கி பேசும் தன்னம்பிக்கை இதெல்லாம் அவருக்கும் உண்டு. அதுதான் அவரை இப்படி ஆக்கியது…. அவரைப்பற்றி ஒரு நல்ல கட்டுரை இருக்கிறது..தருகிறேன்’ டாக்டர் சொன்னார்.

நான் எழுந்தேன். ‘குளித்துவிட்டு வருகிறேன் டாக்டர் சாமி’ என்றேன். டாக்டர் சாமி ‘இந்த இரண்டு பாத்திரத்தையும் காரி சாகிப்பிடம் கொண்டுசென்று கொடு’ என்றார். நான் ‘எதற்கு?’ என்றேன். ‘அந்த பெரிய பாத்திரம் நிறைய கிறுக்கும் சின்ன பாத்திரம் நிறைய கனவும் மொண்டுதருவார்… ஊதி ஊதி குடிக்கலாம்’ நான் சிரித்தேன். ’கொண்டுபோய் கொடு சாமி’ என்றார் டாக்டர்.

நான் மேடேறி குடிலை அடைந்தேன். குடில் வாசலில் காரி டேவிஸ் இளவெயிலில் ஒரு குட்டைக் கால்சட்டை மட்டும் அணிந்துகொண்டு பெரிய காரட் போல நின்றிருந்தார். வெயில் காய்கிறார் என்று தெரிந்தது. அருகே அவரது காக்கிநிற உடைகள். நான் கொண்டுசென்று கொடுத்த பாத்திரங்களை வாங்கிக்கொண்டு புன்னகையுடன் நன்றி சொன்னார். அந்த பாத்திரங்களில் கொஞ்சமாக நீர் மொண்டு துணிகளை அதற்குள்ளேயே போட்டு சிறிய பிரஷ்ஷால் உரசி விசித்திரமான முறையில் துணி துவைக்க ஆரம்பித்தார். மிகக்கொஞ்சமாக நீர் செலவிட்டு துணிதுவைப்பதற்கான ஒரு முறையை அவர் ஐரோப்பிய இயற்கைவாதிகளிடமிருந்து கற்றுக்கொண்டிருந்தார்.

காரி டேவிஸைப்பற்றி வாசித்தபின்னர்தான் அன்று நான் அவரை மீண்டும் சந்திக்கச் சென்றேன். அவர் நியூயார்க் பிராட்வேயில் நடிகராக இருந்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவரது தெளிவான உச்சரிப்பும் துல்லியமாக முகபாவனைகள் மூலம் தொடர்புறுத்தும் தன்மையும் அங்கே பெற்ற பயிற்சியினால்தான் என்று அப்போது தோன்றியது. அவரது பயிற்சிகளே விதவிதமானவை. பாதிரியாருக்கான படிப்பில் பள்ளியிறுதி. அதன்பின் தொழில்நுட்பக் கல்வி. அதன்பின்னர் நடிகர். அதன்பின் விமானமோட்டி. மிகச்சிறந்த இளம் விமானிக்கான விருதுபெற்றிருக்கிறார்.

அவரது வாழ்க்கையில் எப்போதுமே ஏதோ ஒரு மீறல் இருந்துகொண்டே இருந்திருக்கிறது. பலமுறை வீட்டைவிட்டுச் சென்றிருக்கிறார். பலமுறை பல படிப்புகளை முயற்சிசெய்திருக்கிறார். அவருக்குள் இருந்த அடிப்படை வல்லமை வெளியே பீரிட வழிதேடி தவித்துக்கொண்டே இருந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போரில் விமானியாகச் சென்று ஜெர்மனிய ஆதிக்கத்தில் இருந்த நகரங்கள் மேல் குண்டு வீசினார். அவர் சென்ற பி 17 விமானத்தின் வால் எடுத்த படங்களை பின்னர் அவரே பார்க்க நேர்ந்தது

அபாயகரமாகக் கீழே இறங்கிச்சென்று குறிப்பாக குண்டு வீசி மீண்ட அவரது சேவையைப் பாராட்டுவதற்காக அவரது மேலதிகாரி அவரைத் தன் அறைக்கு அழைத்து அந்த படங்களைக் காட்டினார். மேஜைமேல் விரிந்துகிடந்த கருப்புவெள்ளைப் படங்களைக் கண்டதும் தன் நெஞ்சு மேல் கனத்த இரும்புக்குண்டு ஒன்று வந்து மோதியதாக உணர்ந்தார். மூச்சடைத்து விழப்போனவர் மேஜை விளிம்பை பற்றிக்கொண்டு நின்றார். எரியும் இல்லங்கள். சிதறி ஓடும் மக்கள். வானைநோக்கி நா நீட்டி எழும் தீ. நரகத்தை படமெடுத்ததுபோல தோன்றியது.

அன்றிரவெல்ல்லாம் தன்னுடன் தானே போராடினார் காரி. தன்னுள் உறங்கும் பழைய பாதிரிதான் தன்னை கோழையாக ஆக்குகிறாரா? ஆண்மை என்ற ஒற்றைச்சொல்லை வைத்து தன் வளர்ப்புடன் தன் மெல்லுணர்வுகளுடன் அதுநாள் வரை அவர் போராடி வென்று வந்திருக்கிறார். சாகசம் இல்லாமல், வெற்றி இல்லாமல் ஆண்மைக்கு ஏது பொருள்? ஆனால் இதில் என்ன சாகசம் இருக்கிறது? பூதம்போன்ற ஒரு பெரும் இயந்திரத்தின் ஒரு திருகாணியாக அதனுள் இருப்பதா வீரம்? ஆனால் அந்த இயந்திரத்துக்கு உள்ளம் இல்லை. அது செய்த அழிவுக்கு அது பொறுப்பில்லை. அதற்கு கருணையற்ற உள்ளத்தை அளித்தவர் அவர். அதன் வெற்றிக்கு அவர் பொறுப்பல்ல, பாவத்துக்கு மட்டுமே அவர் பொறுப்பு.

சிகரெட் பிடித்துக்கொண்டு, மது அருந்திக்கொண்டு, முகாமெங்கும் இருளில் அலைந்துகொண்டு அந்த இரவைக் கழித்தார். காலையில் எல்லாம் சமநிலைகொண்டு எல்லாம் நியாயப்படுத்தப்பட்டு சரியாக இருக்கும். மெல்லிய குதுகுதுப்பாக ஒரு சிறு சஞ்சலம் மட்டும் உள்ளே எங்கோ எலிபோல கரம்பி சத்தமெழுப்பிக் கொண்டிருக்கும். இரவில் இருளில் அவர் தனிமையில் படுத்ததும் அக்கணம் வரை இருந்த அவரது எல்லா உறுதிகளும் குலையும். தனக்குள் ஓடும் எண்ணங்களின் வதை தாங்காமல் தன் தலையைத் தானே கைகளால் அறைந்துகொள்வார். மூர்க்கமாக குடித்து, குடல் அதிர, உடம்பு குழைய, தன்னுணர்வு மூழ்கி மூழ்கி மிதக்க, இரவெல்லாம் கிடப்பார்.

ஒருமாதம் கழித்து மீண்டும் குண்டு வீசும் வேலைக்கு அனுப்பப்பட்டார். இல்லை என்னால் முடியாது என்று தனக்குள் ஆக்ரோஷமாக அலறிக்கொண்டார். இல்லை, முடியாது இனிமேல் சகமனிதர்களைக்கொல்லமாட்டேன் என்று தன் மூத்த அதிகாரிகளிடம் சொல்வதை மீண்டும் மீண்டும் பலநூறு நாடகக்காட்சிகளாக மனதுக்குள் நிகழ்த்திக்கொண்டார். தனிமையில் அந்த சொற்களை உள்ளூரச் சொல்லிக்கொண்டு அந்த தீவிர உணர்ச்சிகள் நெளியும் முகத்துடன் நடக்கும் அவரைக்கண்டு நண்பர்கள் குழம்பினார்கள். கடைசியில் ஒரு கணம் தோன்றியது ‘இது கோழைத்தனம். கோழைத்தனத்தை நியாய உணர்ச்சியாக எனக்கு நானே விளக்கிக்கொள்கிறேன்’

அந்த வீராப்புடன், தனக்குத்தானே ஒரு காயத்தை உருவாக்கிக்கொள்ளும் மனநிலையுடன், விமானத்தில் ஏறினார். விமானம் மேலே சென்றதும் மண்ணில் இருந்து எல்லா தொடர்புகளும் இல்லாமலாயின. அப்போது ஓர் எண்ணம் வந்தது. அப்படியே பறந்து காணாமலாகிவிடவேண்டும். வேறேதாவது மண்ணில் சென்று இறங்கவேண்டும் என்றல்ல, காற்றில் அப்படியே கரைந்து மறைந்துவிடவேண்டும் என்று. வேகம் அதிகரிக்க அதிகரிக்க அப்படி கரையும் உணர்வு அதிகரித்தது. உச்சகட்டவேகத்தில் வானில் குட்டிக்கரணமடித்தார்.

ஜெர்மானிய நிலம் மீது பறந்தபோது கீழிருந்து அவரை நோக்கி குண்டுகள் வெடித்தன. தன் இருபக்கமும் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்களில் பூப்பூவாக மலர்ந்து கருகி அணையும் ஷெல்களை கண்டபடி அங்கே பறந்தபோது அளப்பரிய ஆனந்தம் ஒன்றை உணர்ந்தார். அந்த குண்டுகளில் ஒன்று தன் மேல் படவேண்டுமென விரும்பினார். ஆனால் அது தன்னை தேர்ந்தெடுக்கவேண்டும். தன்னை அது வென்று வீழ்த்தவேண்டும். மிகமிக அபாயகரமான பறத்தல். ஆனால் ஆச்சரியமாக ஒன்றும் நிகழவில்லை. அவர்மேல் ஒரு குண்டுகூட படவில்லை

மிகத்தாழ்வாக பறந்து கீழே நகரத்தை, பாம்புச்சட்டை போன்ற ஓடைகளை, பெண்களின் கைப்பைக் கண்ணாடிபோன்ற குட்டைகளை, மரங்களின் பச்சை அலைகளை, மலைக்குவைகளைக் கண்டார். அவர் கையருகே இருந்தது குண்டு வீசும் விசை. ஆனால் அவரால் தன் கையை அங்கே கொண்டுசெல்ல முடியவில்லை. நாலைந்துமுறை முழு உளச்சக்தியாலும் கையை அங்கே கொண்டுசெல்ல முயன்றார். ஆனால் கை கனத்து இறுகி இரும்பாக இருந்தது. பின் அதை விட்டுவிட்டு கீழே பார்த்து ரசிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் மனம் முழுக்க களிவெறி நிறைந்தது. அது ஓர் உற்சாக விளையாட்டாக ஆகியது. வேண்டுமென்றே அவர்களைச் சீண்டும்படி பறந்தார். அவர்களின் குண்டுகள் நடுவே சீறிப்பாய்ந்தபோது ‘ஹே’ என்று கத்தினார். கீழே இறங்கிச் சென்று அவர்களிடம் கைதூக்கி வெற்றிக்குறி காட்டவேண்டும் என்று தோன்றியது

எரிபொருள் தீர்ந்தபோது ஒரு குண்டுகூட சுடப்படாமல் மீண்டு முகாமுக்கு வந்தார். அங்கே ஏற்கனவே அவரைப்பற்றி செய்தி சென்றிருந்தது. அவரை உடனடியாக கூட்டிச்சென்று விசாரணை செய்தார்கள். காரி அதே உற்சாக மனநிலையில் இருந்தார். உடம்பெங்கும் ஒவ்வொரு மயிர்க்காலிலும் உற்சாகம் பரபரத்தது. ‘இப்போதுதான் எனக்கு தெரிந்தது. இது ஓர் அற்புதமான விளையாட்டு. இன்னும் தாமதித்துவிடவில்லை. வாஷிங்டனுக்கு உடனே தகவல் சொல்லுங்கள்..நாம் போரை அப்படியே விளையாட்டாக மாற்றிக்கொள்வோம். அதில் மரணமிருந்தாலும் துன்பம் இருக்காது. வாழ்க்கை என்ற விளையாட்டுக்குள் நாம் இன்னும் அற்புதமான ஒரு விளையாட்டை உருவாக்கி பிதாவைத் தோற்கடிப்போம். வாருங்கள்’ என்றார். விசாரணை அதிகாரியை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். நடுவே காபி கொண்டுவந்த உதவியாளரை கட்டிக்கொண்டு நடனமிட்டார்

விளைவாக நேராக அவரை மனநோய் சிகிழ்ச்சைக்கும் அங்கிருந்து சிறைக்கும் கொண்டு சென்றார்கள். கட்டாய உழைப்புக்கும் வதைக்கும் ஆளானார். அதற்குள் போர் முடிந்தது. ராணுவத்தில் இருந்து விடுதலையானதும் காரி சட்டென்று ஒரு வெறுமையை உணர்ந்தார். ராணுவத்திலும் சிறையிலும் வாழ்க்கையின் உச்சங்கள் வழியாக வாழ்ந்துவிட்டு அர்த்தமில்லாத அன்றாடச் செயல்களின் வெறும்தரைக்கு வந்து நிற்பதுபோலிருந்தது. அதை வெல்ல பயணங்கள் மேற்கொண்டார். தோளில் ஒரு சிறு பையுடன் நினைத்த போது கிளம்பி நினைத்த இடங்கள் வழியாகச் சென்றார். சுற்றுலாத்தலங்கள் அவரை கவரவில்லை. மலைகள் மேல் பெரிய மோகம் இருந்தது. ஆனால் ஒருசில மாதங்களிலேயே மலை ஏறுவது சலித்தது. எளிய அடித்தட்டு மக்களுடன் நகர்ப்புறச் சேரிகளில் வாழ்வது மட்டுமே ஆர்வமூட்டுவதாக இருந்தது.

திடீரென்று ஓர் எண்ணம் எழுந்து ஜெர்மனிக்குச் சென்றார். ஜெர்மனியின் வறுமையையும் அம்மக்கள் அடைந்திருந்த அவமான உணர்வையும் கண்டார். அத்தனை பெரிய அழிவின் நடுவில், பிள்ளைகள் பட்டினியில் துடிக்கையில் அந்த குற்றவுணர்வை அம்மக்கள் அடைவதே அவர்களின் ஆன்மவல்லமைக்குச் சான்றல்லவா என்றுதான் அவருக்குத்தோன்றியது. அதற்கிணையான பேரழிவை அமெரிக்கா ஜப்பானுக்கு இழைத்திருந்தாலும் அமெரிக்காவில் அதுபற்றிய குற்றவுணர்ச்சியே இல்லை என்பதுதான் அவர் எண்ணமாக இருந்தது. அந்த பேரழிவையே உலக அமைதிக்காக நிகழ்த்திக்கொண்ட இன்றியமையாத செயல் என்றுதான் அவர்கள் நினைத்தார்கள். அந்த அரசும் தேசியவாதிகளும் அப்படி நம்பும் இடத்துக்கு அவர்களை கொண்டு சென்றிருந்தார்கள். ஒருவேளை ஜெர்மனி போரில் வென்றிருந்தால் படுகொலை முகாம்கள் உலக அமைதிக்கானவை என இந்த நேர்மையான நியாய உணர்வுள்ள மக்கள் நம்பவைக்கப்பட்டிருப்பார்கள்.

அவர் வானிலிருந்து குண்டுவீசிய நிலப்பகுதிகளுக்குச் சென்றார். அந்த இடங்களில் புதிய தாவரங்கள் முளைத்து, இடிபாடுகளையும் இரும்புக்குப்பைகளையும் மூடி புதிய உயிர்துடிப்பை நிறைத்திருந்தன. மக்கள் அழிவை மறந்து மீண்டும் வாழ்க்கையை உருவாக்க ஆரம்பித்திருந்தார்கள். வெளிறிய கன்னங்களுடன் சீருடை அணிந்த குழந்தைகள் உற்சாகமாக கூவிப்பேசியபடி பள்ளிக்குச் சென்றார்கள். சாலையோரங்களில் புதியபழங்களும் காய்கறிகளும் நிறைந்த கூடைகளுடன் பெண்கள் அமர்ந்து விற்றார்கள். எங்கும் வாழ்க்கை, வாழ்க்கை மட்டும்தான் இருந்தது. அங்கே மரணத்தை நிறைக்க ஒருநாள் கொலையந்திரத்தில் வந்த அவரை அந்த வாழ்க்கை பொருட்டாகவே நினைக்கவில்லை. அவர் உயிருள்ள சதையால் சீழ்கட்டிப் பொருக்காக்கி வெளியேதள்ளப்பட்ட முள் போல அன்னியமாக அங்கே நின்றிருந்தார்

‘நான் உங்கள் அனைவரையும் கொல்ல வந்தவன் தெரியுமா?’ தன்னுள் பெருங்குரலில் காரி டேவிஸ் கூவினார். ’என்னை நீங்கள் கல்லால் அடிக்கலாம். சிலுவையில் அறையலாம். ஏனென்றால் எந்தவிதமான பகையும் இல்லாமல், நீங்கள் யாரென்றே தெரியாமல், உங்களை கூண்டோடு அழிக்கவந்தவன் நான்’ . ஆனால் அவருக்கு வெளியே கொப்பளித்த வாழ்க்கை அதைக் கேட்கவில்லை. பொன்னிறப்பூக்கள் பூத்து நிறைந்து கிளைகனத்து நின்ற மரங்களால் பொன்வெளியாக ஆகி விரிந்திருந்த சாலையோர பூங்காவில் சிமிண்ட் பெஞ்சியில் தன்னருகே அமர்ந்திருந்தவரிடம் காரி சொன்னார் ‘சகோதரா, நான் இந்த நிலத்தையும் மக்களையும் அழிக்க முற்பட்டவன்’ அவர் சரியாக கேட்டாரா என்றே தெரியவில்லை. இனிய புன்னகையுடன் ‘வந்தனம். ஏசுவின் பெயர் உங்களுடன் இருக்கட்டும்’ என்றார்

அந்த நகரில் அத்தனை பேரையும் நிறுத்தி ‘நான் உங்களை அழிக்கவந்த கொலைக்காரன்’ என்று கூவ வேண்டும் போலிருந்தது. ஆனால் ஒருவராவது அதை பொருட்படுத்துவார்கள் என்று அவருக்குத் தோன்றவில்லை. ஆமாம் இரண்டுவருடம் முன்பு உலகின் நேர்பாதி மக்கள் மீதி பேரை கொன்றொழிக்க வெறிகொண்டு கிளம்பினார்கள். உலக மக்கள்தொகையில் கணிசமான பகுதியை அழித்தார்கள். அதில் ஈடுபட்ட எவருமே கொலைகாரர்கள் அல்ல. எவருக்கும் எவர்மேலும் கோபம் இல்லை. அவர்களுக்கு அது தங்கள் கடமை என்று சொல்லப்பட்டது, அவர்கள் அதை நம்பினார்கள் அவ்வளவுதான். இப்போது அதை சொல்லிக்கொடுத்தவர்கள் கைகுலுக்கிக் கொண்டாயிற்று. இனிமேல் அவர்கள் கொல்லவேண்டியதில்லை. கொன்றவர்களும் செத்தவர்களும் ஒன்றுமறியாதவர்கள். அவர்கள் நடுவே என்ன பகை? என்ன பழி?

அன்றிரவில் குளிரில் அந்த பூங்காவில் தனிமையில் அமர்ந்து காரி டேவிஸ் அழுதார். அங்கே அவருக்கு தெரிந்தது, ஏன் ஏசு அப்படி கத்தினார் என்று. ’பிதாவே என்னை ஏன் கைவிட்டீர்’ என கூவியவர் ஒரு ஏசு. அவர் மனிதர்களின் பிரதிநிதி. பிதாவால் கைவிடப்பட்ட கோடானுகோடிகளில் ஒருவர். ’பிதாவே இவர்களை மன்னியுங்கள்’ என்று பிதாவிடம் கெஞ்சியவர் கடவுளின் ஒரு துளி. இந்த இரண்டு வரிகளால் ஆனதுதானா எல்லா ஞானிகளின் அகமும்? இவ்விரு வரிகளின் நடுவே ஊசலாடுவதுதானா அவர்களின் வாழ்க்கை?

அந்த வசந்தகாலத்தில் காரி பாரீஸுக்குச் சென்றார். அங்கே நடந்துகொண்டிருந்த ஓர் உலக சம்மேளனத்தில் தன்னுடைய அமெரிக்கக் குடியுரிமையை துறப்பதாக அறிவித்தபின் பொது இடத்தில் தன்னுடைய பாஸ்போர்ட்டை எரித்தார். ’ என் மேல்தோலை உரித்து இழுத்து கழற்றி வீசி வெறும் சதையுடன் தெருவில் நின்றேன். அங்கே நான் புதியதாக பிறந்து வந்தேன்’ அதற்காக அவர் கைதானார். அவரது பேட்டியும் அவரைப்பற்றிய கட்டுரைகளும் பாரீஸையே அவரைப்பற்றி பேசவைத்தன. ஆந்த்ரே ழீடும் அல்பேர்காம்யூவும் உட்பட பாரீஸின் அறிவுலகமே அவரை ஆதரித்தது. பிரான்ஸ் அவரை நாடுகடத்தியது

பாரீஸில் இருந்து ஜெனிவா சென்ற காரி டேவிஸ் ஐநா சபையின் பொதுக்குழு கூட்டத்தில் பார்வையாளராகச் சென்று அமர்ந்து கொண்டு உரியதருணத்தில் எழுந்து துண்டுப்பிரசுரங்களை வீசியபடி கோஷமிட்டார். ‘உலகை பங்குபோடுவதை நிறுத்துங்கள். நாடு என்பது கொள்ளைக்காரர்கள் வகுத்த எல்லை அடையாளம். மனிதர்களை சேர்ந்து வாழ அனுமதியுங்கள். ஒரே உலகம், ஒரே மக்கள்! ’ .அவரை கவாலர்கள் வெளியேற்றினார்கள். ஆனால் சபை உறுப்பினர்களில் கணிசமானவர்கள் அதைக்கேட்டு கைதட்டி ஆதரவளித்தார்கள்.

அதன்பின் காரியின் வாழ்க்கை ஒரு நீண்ட போராட்டம். மறு வருடமே உலகக்குடிமகன்களுக்கான உலகப் பதிவகத்தை ஆரம்பித்துத் தனக்கான பாஸ்போர்ட்டை தானே உருவாக்கிக் கொண்டார். அந்த பாஸ்போர்ட்டை உலகம் அங்கீகரிக்கச்செய்ய நாடுகள் தோறும் பயணம்செய்தார். உலகின் நூற்றைம்பது நாடுகளிலாக இருநூறுமுறை சிறை சென்றிருக்கிறார். 1954ல் அந்த பாஸ்போர்ட்டுடன் இந்தியாவுக்கு வந்தார். இந்திய காவலர்களால் சிறையில் தள்ளப்பட்ட அவரை காக்க அவரது நண்பரான நடராஜ குரு அரசுக்கும் அறிவுஜீவிகளுக்கும் கடிதங்கள் எழுதினார். ஆர்.கெ.லட்சுமணனும், முல்க் ராஜ் ஆனந்தும் எல்லாம் அவருக்கு ஆதரவாக திரண்டனர். ஜவகர்லால் நேரு அவரை அங்கீகரித்து விடுதலைசெய்தார்

நடராஜகுருவும் காரி டேவிஸும் ஊட்டி குருகுலத்தின் தகரக்கொட்டகையில் மண்ணெண்ணை சிமினி விளக்கின் ஒளியில் அமர்ந்துகொண்டு ஓருலகம் என்ற பெரும் கனவை முன்வைப்பதற்கான திட்டங்களை தீட்டினார்கள். இருவரின் அகமும் பொங்கி எழுந்துகொண்டிருந்த காலகட்டம் அது. உலகநாடுகள் தங்கள் பொருளியல் நலன்களை விட்டுக்கொடுக்காமல் மெல்லமெல்ல ஒரே உலகமாக இணைவதற்கான ஒரு பெருந்திட்டத்தை நடராஜ குரு உருவாக்கினார். கல்வியில் பண்பாட்டில் மதநம்பிக்கையில் தனித்தன்மைகளை தக்கவைத்துக்கொண்டே உலகை ஒற்றை மானுடவெளியாக ஆக்கும் முன்வரைவை காரி டேவிஸ் உருவாக்கினார்

அந்த அறிக்கைகளை மேலும் மூன்று வருடம் கழித்து பாரீஸ் சார்போன் பல்கலையில் அவர்கள் வெளியிட்டார்கள். அந்த முன்வரைவுடன் காரி உலகமெங்கும் சென்று பல லட்சம்பேரை தன் அமைப்பில் உறுப்பினராக ஆக்கினார். ‘என்றோ ஒருநாள் நாம் உலகமாக ஆகத்தான் போகிறோம், அதை இன்றே தொடங்குவோம்’ என்ற அவரது அறைகூவலுக்கு அன்று உலகமெங்கும் வரவேற்பிருந்தது. உலகப்போரின் வடுக்கள் உலராத காலகட்டம். போரில் முளைத்த ஒரு தலைமுறை ஹிப்பி யுகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தருணம். சார்லி சாப்ளினும் , பாப் மார்லியும் உலகை நோக்கி பேசிக்கொண்டிருந்த காலகட்டம்.

காரிக்கு இந்திய வேதாந்தம் மீதும் காந்தி மீதும் நம்பிக்கை இருந்தது. அகிம்சைப்போராட்டங்கள் மக்களின் எண்ணங்களை மாற்றி மாபெரும் சமூக மாற்றங்களை உருவாக்கமுடியும் என்பதற்கு காந்தி வாழும் உதாரணம் என அவர் நம்பினார். இந்திய வேதாந்தம் மீது பெரும் ஈடுபாடிருந்தது. ‘வசுதைவ குடும்பகம்’ என்ற சொல்லை ஒரு மந்திரமாக அவர் நெஞ்சில் நிறைத்திருந்தார். அவரது வேதாந்தம் அந்த வரியில் இருந்து ஆரம்பித்தது.நடராஜ குரு பெங்களூர் சோமனஹள்ளியில் ஜான் ஸ்பியர்ஸின் உதவியுடன் மேலை-கீழை சிந்தனைகளை இணைக்கும்பொருட்டு ஆரம்பித்த ’ஈஸ்ட் வெஸ்ட் யூனிவர்ஸிட்டி’ யின் வகுப்பில் சேர்ந்து வேதாந்தத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

காரி நடராஜகுரு இருந்தபோது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையேனும் இந்தியா வந்துகொண்டிருந்தார். பின்னர் அவரது உலகப்பயணங்களும் சிறைவாசமும் பெருகி அவர் வருவது குறைந்தது. பலவருட இடைவெளிக்குப்பின் மீண்டும் குருகுலம் வந்திருந்தார்.

நான் காரி டேவிஸை பார்க்க பின்மதியம் அவரது குடிலுக்குச் சென்றேன். அது திறந்தே கிடந்தது, அவர் இல்லை. அருகில் எங்காவது நிற்பார் என்று நினைத்தேன். கருணாகரன் ‘சாயிப்பு இப்பம் அங்ஙோட்டு போயி’ என்றார். கதவு திறந்து கிடக்கிறதே என்றேன். ‘சாயிப்பினு பூட்டு இல்லா’ என்று சிரித்தார். நான் சாலைக்கு வந்தபோது காரி டேவிஸ் காலையில் அவர் துவைத்து காயவைத்த அந்த காக்கி ஆடையுடன் ஒரு ஜீப்பில் அமர்ந்திருந்தார். ஜீப்பில் வெள்ளை ஆடை அணிந்து நீண்ட தாடி வைத்த ஒரு பிரம்மசாரியும் இருந்தார்.

நான் அருகே சென்றேன். ‘ஹல்லோ’ என்றார். ‘எங்கே செல்கிறீர்கள்?’ என்றேன். ‘மேற்குமலைக்கு. அம்பாதேவி ஆசிரமம் சென்று அங்கிருந்து போய் மேற்கு மலைச்சரிவை பார்க்கப்போகிறேன்’ . ’சரி’ என்றேன். ‘நீயும் வருகிறாயா? ‘ என்றார் ‘வருகிறேன்’ ‘ஏறிக்கொள்’ நான் அப்படியே ஏறிக்கொண்டேன். சொல்லிக்கொள்ளவேண்டாமா என்று அவர் கேட்பாரென நினைத்தேன். சொல்லிக்கொண்டு செல்லும் ஆளே அல்ல போல.

ஜீப் சேறு நிறைந்த சாலைகள் வழியாக குலுங்கிக் குலுங்கிச் சென்றது. காரி டேவிஸ் வெளியே ஓடும் சிறு தகரவீடுகளை, பெரிய பசுக்கள் அசைபோட்டுக்கிடந்த சந்துகளை, நீர்த்தூவிகள் பீரிட்டு பீரிட்டு சுழன்ற உருளைக்கிழங்கு வயல்சரிவுகளை, வேடிக்கை பார்த்தபடி வந்தார். சிறுகுழந்தைகளுக்கு உற்சாகமாக கையை ஆட்டினார். ஒருநாய் குரைத்தபடி ஜீப்பை துரத்தியபோது என்னை நோக்கிச்சிரித்தார். நான் அவரிடம் பேச விரும்பினேன். ஆனால் ஜீப்பில் பேசமுடியாதென்று தோன்றியது. அம்பாதேவி ஆசிரமத்திற்குச் சென்று இறங்கியதும் சடைமகுடம் அணிந்து காவி தரித்த வயோதிகப்பெண்ணான அம்பாதேவி அவரே வந்து காரி டேவிஸை வரவேற்றார். ’ஹரி ஓம்’ என்று சொல்லித் தேவி வணங்கியதும் ’Ohm! The absolute is adorable!’ என்று சொன்னார் காரி டேவிஸ். பின் என்னை நோக்கி கண்ணைச்சிமிட்டினார்.

தேவியுடன் சில உபசாரங்களுக்குப் பின்னர் வழிகாட்டியாக வரவிருக்கும் இளம்துறவிக்காக இருவரும் ஆசிரமத்தின் திண்ணையில் காத்திருந்தோம். முற்றம் முழுக்க விதவிதமான மலர்கள் பூத்துக்கனத்து செடிகள் தளர்ந்து வளைந்து நின்றன. இடுப்பில் கைக்குழந்தையை ஏற்றிக்கொண்ட அக்காக்குழந்தைகளைப்போல. நான் ‘உங்களைப்பற்றித்தான் படித்துக்கொண்டிருந்தேன்’ என்றேன். ‘ஆர்வமூட்டுகிறதா?’ என்று கேட்டு காரி டேவிஸ் கண்ணடித்தார். நான் சிரித்தேன். ‘ஆனால் உங்கள் போராட்டம் பற்றி எனக்கு சந்தேகமாக இருக்கிறது’

‘சொல்’ என்றார். ‘நீங்கள் உங்கள் கருத்தை எடுத்துச்செல்ல விரும்பும் நாட்டுக்குச் செல்கிறீர்கள். அங்கே அவர்களின் சட்டங்களை மீறி சிறைசென்று சிறையில் வாழ்கிறீர்கள்…இப்படி சிறைசெல்வதன் மூலம் என்ன அடைய நினைக்கிறீர்கள்?’ காரி டேவிஸ் புன்னகையுடன் ‘சட்டமறுப்பு என்பதை காந்தியின் நாட்டுக்குச் சொல்லவேண்டுமா என்ன? எந்தச் சட்டம் தன் அடிப்படை மனிதத்தன்மைக்கோ ஆன்மீகமேன்மைக்கோ தடையாக ஆகிறதோ அதை மீற எந்த மனிதனுக்கும் உரிமை உண்டு. மீறியாகவேண்டும் என்ற கடமையும் உண்டு’

’ஆனால் நீங்கள் வேறு நாடுகளுக்குச் செல்கிறீர்கள்…’ என்றேன் ‘எனக்கு என ஒரு நாடு இல்லையே’ என்றார். என் கேள்வியை எப்படி முன் வைப்பதென்று தெரியவில்லை. ’நீங்கள் இதை ஒரு போராட்டமாகச் செய்கிறீர்கள். ஆனால் அதை தனிமனிதராக நின்றுசெய்யும்போது விளையாட்டாக ஆகிவிடுகிறது’ என்றேன். அவர் ‘நான் கருத்துக்களை எடுத்துச்செல்கிறேன். ஓர் உலகம் என்ற என் கனவை நான் செல்லும் இடங்களில் விதைக்கிறேன்’ என்றார். ‘அதற்கு ஏன் சிறைக்குச் செல்லவேண்டும்?’ என்றேன்.

‘இந்த உலகமே கருத்துக்களால் ஆனதாக உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் ஊடகங்கள் பெருகும்தோறும் கருத்துக்கள் வந்து குவிகின்றன. கோடானுகோடி கருத்துக்கள். எல்லா கருத்துக்களுக்குமே அவற்றுக்கான தர்க்கம் உண்டு. ஓரளவு தேவையும் இருக்கலாம். ஆனால் இன்று எவரும் கருத்துக்களை கூர்ந்து கவனிப்பதில்லை. இத்தனை கோடிக் கருத்துக்களில் எந்த கருத்து கவனிக்கப்படும்? எது ஏற்கப்படும்? ஒரு நூலில் பல்லாயிரம் வரிகள் இருந்தால் எந்த வரி புரட்டிச்செல்லும் வாசகன் கவனத்தில் விழும்?’ அவர் என் தோளைத் தொட்டு கூர்ந்து நோக்கிச் சொன்னார் ‘எந்த வரி அடிக்கோடிடப்பட்டிருக்கிறதோ அது….’

‘இளம் நண்பனே, எப்படி ஒருவரியை அடிக்கோடிடுவது? இரண்டே வழிகள்தான். ஒன்று, அதிகாரம் மூலம். இன்று நம்மிடையே பரவலாக இருக்கும் மிகப்பெரும்பாலான கருத்துக்கள் அதிகாரத்தால் முன்வைக்கப்பட்டு பிரச்சாரம் மூலம் நம் தலைக்குள் ஏற்றப்பட்டவை. ஆனால் நாளைக்கான ஒரு கருத்துக்கு அத்தகைய அதிகாரபலம் இருப்பதில்லை. அதை எப்படி அடிக்கோடிடுவது?’ அவர் மீண்டும் என் தோளைத் தட்டினார் ‘தியாகம் மூலம்…அது ஒன்றுதான் வழி. என் கருத்துக்காக நான் சிறைசென்றால் அதை நான் புறக்கணிக்க முடியாத ஒன்றாக முன்வைக்கிறேன். ஒரு கருத்துக்காக ஒருவன் தன் உடைமைகளையும் உயிரையும் ஒட்டுமொத்தமாக அனைத்தையும் தியாகம்செய்யத் தயாரென்றால் அந்தக்கருத்துக்கு நம்பமுடியாத வல்லமை வந்துவிடுகிறது. அதுதான் காந்திய வழி’

நான் பெருமூச்சு விட்டென். அவர் சொன்னார் ‘நான் ஒரு நாட்டுக்குச் செல்லும்போது அந்த நாட்டைப்பற்றி அறிந்துகொண்டுதான் செல்வேன். ஏற்கனவே அந்த நாட்டில் ஒரு சிந்தனை இயக்கம் இருக்கிறது என்பதை உறுதிசெய்துகொள்வேன். அங்கே சென்று அவர்களின் சட்டத்துக்கு சவால் விடுவேன். நீதிமன்றத்தில் நானே என் தரப்பை முன்வைப்பேன். நாளிதழ்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் எழுதுவேன். நான் சிறையில் இருக்கும் நாளெல்லாம் என் கருத்துக்களை சொல்லிக்கொண்டே இருப்பேன். என் கருத்தை அந்த சிந்தனைச்சூழலில் முன்வைக்க எனக்கு இருக்கும் மிகச்சிறந்த வழி அதுதான்’

அந்த இளம்துறவி வந்ததும் நாங்கள் கிளம்பினோம். எமரால்ட் எஸ்டேட்டை ஒட்டிச்சென்ற வனப்பாதை ஒரு கட்டத்தில் மேலே ஏற ஆரம்பித்தது. பிரம்மாண்டமான பச்சைக்குவியல்களாக அமைதியில் ஆழ்ந்து கிடந்தன மலையடுக்குகள். தூரத்து மலை வானத்தை வெட்டும் விளிம்பில் மெல்ல சிறு புள்ளிகளாக வரையாடுகள் நகர்ந்தன. மாலை இன்னமும் சிவக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் ஒளி நன்றாக மங்கி கொஞ்சம் நடுக்கும்படி குளிரடித்தது. நான் கனத்த ஸ்வெட்டர் போட்டிருந்தேன். ஊட்டியில் நான் அதை கழற்றுவதேயில்லை. காரி வெறும் காக்கிஷர்ட் மட்டும்தான் அணிந்திருந்தார்.

எதிர்பாராமல் காரி அவரே பேச ஆரம்பித்தார். ‘இங்கு வருவது வரை சென்ற நாலரை வருடங்களாக தென்னாப்ரிக்காவின் சிறையில் இருந்தேன்’ என்றார். நான் ஒரு நிமிடம் நின்றுவிட்டேன் ‘நாலரை வருடங்களா?’ ‘ஆம். ஏழுவருடம் தண்டனை. ஆனால் விடுதலைசெய்துவிட்டார்கள்’ நான் அவரையே பார்த்தேன். அவர் பேசிக்கொண்டே மலை ஏறினார். ‘இதுவரை தனிமைச்சிறையில் இருந்ததில்லை. இம்முறை தனியாக அடைத்துவிட்டார்கள். நாலரைவருடங்களில் மொத்தமே நூறு சொற்றொடர்கள் கூட பேசவில்லை. எழுத அனுமதி இல்லை. வாசிக்க ஏதும் இல்லை. எந்த ஊடகத்தொடர்பும் இல்லை. முழுமையான தனிமை…’

‘தனிமை ஒரு நல்ல பயிற்சி’ என்று அவர் தொடர்ந்தார். ‘தனிமையில் நாம் சுற்றிலும் உள்ள காற்றில் நம் அகத்தை பிரதிபலித்து பார்த்துக்கொள்கிறோம். நம் மனதில் உள்ள எல்லாம் ஒன்று நூறு பல்லாயிரமாக தெரிய ஆரம்பிக்கின்றன. தன்னை தானே தாங்கிக்கொள்ள முடியாதவர்களுக்கு தனிமைதான் பெரிய நரகம். உண்மையில் மிகப்பெரும்பாலான மனிதர்களின் நரகம் தனிமைதான். சார்த்ர் சொன்னது தவறு.நரகம் என்றால் பிறர்தான் என்றார் அவர். அவரை தனிமையில் அடைத்திருந்தால் கருத்தை மாற்றிக்கொண்டிருப்பார்.அவரது No exit நாடகத்தில் தனிமைச்சிறை இல்லை. கூட்டுச்சிறைதான்’

‘என்ன செய்தீர்கள்?’ என்றேன். ‘சிந்தனைசெய்தேன். என் வேதாந்தக்கல்வி முழுக்க அதற்குப் பயன்பட்டது’ என்றார் காரி. ‘தனிமைச்சிறையின் சிக்கல் என்னவென்றால் நமக்கு அங்கே புறவுலகம் இல்லை என்பதுதான். நான் இருந்தது எட்டடிக்கு பத்தடி அறையில். வெள்ளைநிறமான சுவர்கள். இரண்டாள் உயரத்தில் இரு சன்னல்கள். கதவை மூடிவிட்டார்கள் என்றால் நான்குபக்கமும் சுவர்தான். நான் மட்டுமே அதற்குள் இருப்பேன். என் உடலை நான் பார்க்கமுடியாதாகையால் நான் பருவடிவமாக அங்கே இருப்பதே என் பிரக்ஞைக்கு தெரியாது. என் பிரக்ஞை மட்டும் அங்கே தனியாக இருப்பது போல தோன்றும்…

’அதுதான் பிரச்சினை. தூய போதம் மட்டும் இருப்பது. அதற்கு வடிவம் இல்லை. போதம் எப்போதும் புறவுலகப்பொருட்களில் தன்னைப் பிரதிபலித்துத்தான் கண்டுகொண்டிருக்கிறது. வெற்றுச்சுவர்களின் நடுவே தேங்கியிருக்கும் போதம் தன்னைத்தானே விதவிதமாக உணர்வதை மெல்லமெல்ல நிறுத்திக்கொள்கிறது. போதம் என்பது சூழலில் பிரதிபலித்துக்கொண்டே இருக்கும் ஒரு நிகழ்வுதான். அந்த நிகழ்வு நின்றுபோகும்போது மெல்ல அது கரைந்து போகிறது. போதம் கரைந்ததும் அபோதம் பெரும் சீற்றத்துடன் வெளிவருகிறது. ஒரு வருடத்துக்குள் தனிமைச்சிறையில் அகப்பட்டவன் மனநோயாளி ஆகிவிடுவான்’ காரி சொன்னார்.

‘ஆம், ஹென்றி ஷாரியரின் பாப்பிலோன் நாவலில் வாசித்திருக்கிறேன்’ என்றேன். காரி டேவிஸ் சிரித்தார் ‘ஆம் உலகுக்கு நாகரீகத்தை கற்றுக்கொடுத்த பிரான்ஸின் கண்டுபிடிப்பு அது…’ மேலும் சிரித்து ‘உலகுக்கு தத்துவத்தை கற்றுக்கொடுத்த இன்னொருநாடுதான் விஷவாயு அறைகளை கண்டுபிடித்தது’ நான் அந்த நேர இறுக்கம் தளர்ந்து சிரித்தேன். ‘நீங்கள் எப்படி அந்த வதையை எதிர்கொண்டீர்கள்?’ என்றேன்.

‘என் போதம் தன்னை உணர்ந்துகொள்ள எனக்கு வெளியே ஓர் உலகம் தேவை. அதைத்தான் வேதாந்தஞானம் மூலம் உணர்ந்தேன்’ என்றார் காரி டேவிஸ். ’ஆனால் வெளியுலகம் என்பது என் அகம் உருவாக்கிக்கொள்வது மட்டுமே. அதையும் வேதாந்தம் சொல்கிறது. அதாவது என் போதத்துக்கு வெளியுலகம் என்ற ஒரு பாவனை தேவை . ஒரு மாயை. அதை உருவாக்கினேன். சாப்பாட்டுத்தட்டை வளைத்து அந்தச்சுவரில் உலகை வரைந்தேன். நான் இருப்பது உலகின் மையம். அந்த இடம் இமயமலையில் ஒரு புள்ளி. அங்கிருந்து கிழக்கு நோக்கி நின்றேன். என் முன்னால் கிழக்காசியாக்கண்டம். பின்னால் ஐரோப்பா. இடதுகைப்பக்கம் ஆர்ட்டிக். வலது கைப்பக்கம் அண்டார்ட்டிக்…’

’ஒவ்வொரு நிலப்பகுதியிலும் உள்ள நகரங்களை மலைத்தொடர்களை ஆறுகளை கடல்களை வரைந்தேன்.அங்குள்ள மனிதர்களைப்பற்றி எனக்கு தெரிந்தவற்றை எல்லாம் உதிரிச்சொற்களில் குறித்து வைத்தேன். அதன் பின் அந்த உலகில் நான் வாழ ஆரம்பித்தேன். நினைத்ததும் ஆல்ப்ஸ் மலைகளில் இருப்பேன். நான்கு காலடி எடுத்து வைத்தால் இமயமுகடு. அங்கிருந்து பசிபிக்கின் ஆழ்கடல்வெளியை நான்கு காலடிகளில் தொட்டு விடமுடியும். அட்லாண்டிக்கில் நின்றுகொண்டு அரேபிய பாலைவனத்தை கைநீட்டி தொடமுடியும். ஒரு விராட புருஷனாக நான் உலகை நிறைத்து பூமியெங்கும் பரவிக்கிடந்தேன்’

’ஒவ்வொரு நாளும் நான் ஒவ்வொரு நிலத்தை தேர்ந்தெடுத்தேன், அங்கே அந்த மனிதர்களுடன் வாழ்ந்தேன். அவர்களில் ஒருவனாக ஆனேன். பின் அந்த நிலத்தை முற்றிலும் சம்பந்தமில்லாத இன்னொரு நிலத்துடன் இணைத்தேன். ஹான் சீனர்கள் ஸ்வாஹிலி பேசச் செய்தேன். லத்தீனமேரிக்காவில் தமிழ் பண்பாட்டைக் கொண்டு சென்றேன். சியரா லியோனில் கோயம்புத்தூரை கலந்தேன். என் உடல் ஒரு பெரிய மின்கம்பிப்பின்னலாக ஆகியது. என் வழியாக கலாச்சாரங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டன. மனித உள்ளங்கள் ஒன்றை ஒன்று கண்டுகொண்டன. என் வழியாக நிலங்கள் இணைந்தன. கடல்கள் ஒன்றுக்குள் ஒன்று பொங்கிப்பெருகின.’

’சிலசமயம் நானே ஒரு பெரிய நிலப்பகுதியாக அந்த நிலங்கள் நடுவே விழுந்து கிடந்தேன். என்மேல் மலைகள் எழுந்தன. கடல்கள் அலையடித்தன. என் மலைகளில் இருந்து கடல்களை நோக்கி பேராறுகள் பெருக்கெடுத்தோடின. என் உச்சிகளில் குளிர்ந்த மேகங்கள் ஒளிவிட்டன, என் ஆழங்களில் கண்களில்லா கரிய மீன்கள் இருட்டையே ஒளியாக அறிந்தபடி சிறகலைத்து பறந்தன. என் மேல் பழை பெய்தது. பசுமை புல்லரித்து எழுந்தது. நான் என் உடலின் உப்பையெல்லாம் கனிகளின் இனிமையாக ஆக்கினேன். மலர்களின் வண்ணங்களாகவும் நறுமணங்களாவும் தேனாகவும் மாற்றினேன்’.

’சிலசமயம் பூமியின் மொத்த வேதனையையும் நான் அறிந்துகோண்டு படுத்திருந்தேன். என் மேல் ஆறாத புண்களாக சுரங்கங்கள் திறந்தன. புழுக்கள் போல யந்திரங்கள் குடைந்துசென்றன. என் உயிர்த்திரவங்களும் ஆழத்து வைரங்களும் உறிஞ்சி எடுக்கபட்டன. என் வயிறெங்கும் குப்பைகள் நிறைந்து கனத்தது. . என் குருதி நாளஙளில் அமிலங்கலும் விஷங்களும் ஓடின. என் பிள்ளைகளின் குருதி வழிந்து என் மடி சிவந்தது’.

’அந்த மகத்தான தன்னுணர்வே என்னை அங்கே வாழச்செய்தது. நான் எல்லையற்றவன்,நான் அழியமாட்டேன் என்று எனக்குச் சொன்னது. என்னை துன்புறுத்துபவர்களையும் தாங்கிக்கொள்ளும் மடித்தட்டாக என்னை உணரச்செய்தது. நான் பூமியானேன். எல்லையற்ற கருணையும், எல்லையற்ற துயரமும், எல்லையற்ற அந்தரங்க நெருப்பும் கொண்டவனாக ஆனேன்’.

’திடீரென ஒருநாள் அந்நாட்டு நீதிமன்றம் என்னை விடுதலை செய்தது. எனக்காக அந்நாட்டு பொதுப்பணியாளார் ஒருவர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். என்னைப்பற்றிய செய்திகள் மீண்டும் நீதிமன்றத்திலிருந்து செய்தித்தாள்களுக்கு பெருகின. அதை வெல்ல இருவழிகளே அரசுகளுக்கு உள்ளன. என்னை நாடுகடத்துவது. அல்லது என் கோரிக்கையை ஏற்றுக்கொள்வது. இரண்டாவது வழியை தென்னாப்ரிக்கா தேர்வுசெய்தது. நான் என்னை எங்கே அனுப்பவேண்டும் என்ற வினாவுக்கு இந்தியா என்றேன்’.

‘ஏன்?’ என்றேன். ‘நான் சிறையில் இருந்த நாட்களில் நித்யா எனக்கு கடிதம் எழுதியிருந்தார். மாதம் ஒருகடிதம் வீதம் நான்கு வருடங்களும் சலிக்காமல் கடிதமெழுதினார். ஒருகடிதத்துக்கு கூட பதில் வராதபோதும் எழுதினார். அந்தக்கடிதத்தின் நகல்களை பல்வேறு மனிதர்களுக்கு அனுப்பினார். என்னை அத்தனை சீக்கிரம் மறைத்துவிட முடியாதென அவர் அவர்களுக்கு சொல்லிக்கொண்டே இருந்தார் .ஒரு கடிதத்தில் அவர் எழுதினார் ‘புதைத்து வைப்பவர்களுக்கு நாய்தான் பெரிய தொல்லை. எத்தனை ஆழத்தில் எப்படி புதைத்து வைத்தாலும் அது வாடை பிடித்து வந்து பிராண்ட ஆரம்பித்துவிடும்’ சொல்லப்போனால் என்னை பிராண்டி வெளியே எடுத்தவர் நித்யா. அவரைப்பார்க்க விரும்பினேன்’

’ஆனால் இந்த மண்ணில் காலெடுத்து வைத்ததும் நான் உணர்ந்தது இன்னும் பெரிய ஒரு காரணத்தை. நான் சுதந்திரத்தை கண்டுகொண்டேன். நான் சுதந்திரத்தை விரும்பினேன். கட்டற்று அலையும் சுதந்திரத்தை. அது இன்று இந்த ஒருநாட்டில் மட்டுமே உள்ளது.’

நான் ஆச்சரியத்துடன் ’அப்படியா?’ என்றேன்? ‘ அமெரிக்காவில்? பிரான்ஸில்?’ அவர் சிரித்து ‘இளம் நண்பனே அங்கெல்லாம் சுதந்திரம் என்ற கருத்து மட்டும் சுதந்திரமாக இருந்தால்போதும் என நினைக்கிறார்கள். அவை கண்காணிப்பு மிகுந்த நாடுகள் . எங்கும் எப்போதும் கேள்விகள். எல்லா வாசல்களிலும் அடையாளச்சீட்டுகள் தேவைப்படும். அங்கே சகமனிதர்கள் நம்மை கண்காணிப்பார்கள். நல்வழக்கங்களை கவனிப்பார்கள். கொஞ்சம் வழக்கத்தை மீறினால்கூட முகம்சுளிப்பார்கள். அங்கே மீறல்களுக்கு இடமுண்டு. ஆனால் அந்த மீறல்களுக்கே ஒரு ஒரு நல்வழக்க மரபு உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்..’

அவர் உரக்கச் சிரித்தார். ‘எளிய மக்கள். எதையும் அமைப்பாக, ஒழுங்காக, சீராக அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற மனப்பழக்கத்தில் இருந்து அவர்களால் இன்னும் விடுபட முடியவில்லை. ஒழுஙற்று கொந்தளிக்கும் இயற்கையின் நிகரற்ற படைப்பூக்கத்தில் இருந்து அவர்கள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை…’ என் தோளில் கையை வைத்து ‘.இந்த நாட்டில் நான் நுழைந்த முதல்நாள் என் பாஸ்போர்ட்டை ஓர் அதிகாரி பார்த்ததுடன் சரி. . இன்றுவரை ஒரு கேள்வி கிடையாது. ஒரு கட்டுப்பாடு கிடையாது. திறந்து என் முன் போடப்பட்டிருக்கிறது இந்த நாடு’

‘அப்படியானால் இது பாதுகாப்பில்லாத நாடுதானே?’ என்றேன். ‘இல்லை. எந்த ஐரோப்பிய நாட்டை விடவும் இது பாதுகாப்பான நாடு. இங்கே உள்ள குற்றங்களின் எண்ணிக்கை பிரமிப்பூட்டுமளவுக்கு குறைவானது’ அவர் சிரித்து கொச்சையான தமிழ் உச்சரிப்பில் ‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழிந் அல்லை வாழிய நிலனே’ என்றார். ‘இது திருக்குறள்’என்று சிரித்தார். ‘இல்லை. இது வேறு ஒரு பெண்கவிஞர் எழுதியது. ஔவையார்.பெண் கவிஞரா? ஆம் அப்படித்தான் சொன்னார்கள்’

காரி சொன்னார் ‘…நான் இங்கே ஜூனில் வந்தேன். வற்கலை ஆலுவா தலைச்சேரி கண்ணூர் வழியாக சென்று திரும்பி வந்தேன். மீண்டும் கிளம்பி பெங்களூர் சோமனஹள்ளிக்குச் சென்று வினய சைதன்யாவை பார்த்துவிட்டு அப்படியே கோவா சென்று ஃப்ரெடி சுவாமியை பார்த்தேன். நேராக மும்பை. அங்கிருந்து அஜந்தா எல்லோரா. நேராக காசி. காசியில் ஒருமாதம் இருந்தேன். படித்துறையியிலேயே தங்கியிருந்தேன்.

‘ஆம் நானும் தங்கியிருக்கிறேன்’ என்றேன். ’அங்கிருந்து அலகாபாத்வழியாக கல்கத்தா. அங்கிருந்து புவனேஸ்வர் வந்து சென்னை வந்து திருவனந்தபுரம் போய் தலைச்சேரி போய் கண்ணூர் சென்று எழிமலைக்குச் சென்று பத்துநாட்கள் தங்கியிருந்தேன். அங்கிருந்து மானந்தவாடி வழியாக திரும்பி வந்தேன்’ நான் ஆச்சரியத்துடன் ‘இன்றுகாலை வந்தீர்களே?’ என்றேன். ‘ஆமாம்’ ‘ஆனால் உங்களிடம் ஒரு பைகூட இருக்கவில்லை’ ‘என்னிடம் ஒரு மாற்று உடை இருந்தது, அது போதும்..’

மலையின் உச்சிக்கு ஏறிவிட்டோம். இப்போது மாலை நன்றாக சிவந்து கனிந்துவிட்டிருந்தது. வானத்தில் மேகங்கள் மிகக்குறைவாகவே இருந்தன. ஊட்டியில் அது மிக அபூர்வம். நீலக்கண்ணாடி வளைவுபோல துல்லியமான வானத்தின் கீழே வழுக்கிவிழுந்து குவிந்தவை போல கொஞ்சம் வெண்மேகங்கள் கூரிய நுனிப்பளபளப்பில் குருதியுடன் கிடந்தன.சூரியன் வெப்பமே இல்லாத நீலநிற வட்டமாக வானில் நின்றது. நின்றுபோன மாபெரும் கடிகாரத்தின் அசைவற்ற பெண்டுலம் போல. விளிம்புகளில் இருந்து செவ்வொளி அதிர்ந்து அதிர்ந்து பரவியது.

குளிர்ந்த காற்று செவிமடல்களை மோதியது. எதிர்மலையின் உச்சியில் கிடந்த மிளாக்கள் ஒன்றொன்றாக எழுந்து செவிகளை முன்னால் கோட்டி நின்று எங்களைப் பார்த்தன. விதவிதமான திரும்பல்களில் அவை சிலைகளைப்போல உறைந்து நின்றன. இருமலைகளுக்கும் நடுவே கிடந்த பச்சைமேகக்குவியல் போன்ற சோலைக்காட்டில் இருந்து பறவைக்கூச்சல் எழுந்துகொண்டிருந்தது. அஸ்தமனத்தில் எழும் மெல்லிய நீராவி கலந்த தழைமணம்.

மலையின் நுனியில் ஒரே ஒரு தனிமரம் மட்டும் நின்றது. சில்வர் ஓக், ஆனால் தேயிலைத்தோட்டத்தில் நிற்பதுபோல கிளையில்லாமல் இல்லை. நன்றாக கைவீசி செழித்து காற்றில் குலுங்கி நின்றது. அதன்கீழே சென்று நின்றோம். அதில் பறவைகள் ஏதும் இல்லை. புல்வெளியில் ஒரு பெரிய மான்கூட்டம் மேய்ந்து சென்றிருக்க வேண்டும். புழுக்கைகள் சிதறிக்கிடக்க அதில் சிறிய பூச்சிகள் மொய்த்துப்பறந்தன. அவற்றுக்கு அவை உயிரமுதம். தங்கள் குழந்தைகளின் பிறப்புக்கட்டில், வளர்ப்புத் தொட்டில்.

ஒன்றும் பேசாமல் இளந்துறவி சற்று தள்ளி சென்று அமர்ந்து வான் வளைவை பார்த்து சில நிமிடங்கள் இருந்த பின்னர் கண்களை மூடிக்கொண்டார். சூரியன் பனிக்கட்டியில் சறுக்குவதுபோல நழுவி நழுவி ஆழத்தில் புதைந்தது. வானில் நிறைய சிவப்புக்கோடுகள். அத்தனை மேகப்பிசிறுகள் அங்கே இருப்பதை அப்போதுதான் உணர முடிந்தது. சட்டென்று எதிர்மலையின் மிளாக்கள் ஓடி புதர்களுக்கு அப்பால் மறைந்தன. ஒரே ஒரு செங்கழுகு மட்டும் வானில் வழுக்கி வழுக்கிச் சுழன்றது. ஓரு தனியிறகு போல தன்னிச்சையில்லாமல் இறங்கி சட்டென்று உயிர்கொண்டு சிறகடித்து மேலேறியது.

காரி டேவிஸ் புல் மேல் குந்தி அமர்ந்திருந்தார். அவரது வழுக்கைத்தலை செக்கச்சிவப்பாக இருந்தது, தோலே இல்லாதது போல. மூக்குக் கண்ணாடிச் சில்லுகளில் இரு செவ்வொளித்துளிகள் தேங்கி நின்று ததும்பின. அவர் கனவிலிருப்பது போல தோன்றியது. சூரியனின் வட்டத்தின் மேல் வளைவு மட்டும் எஞ்சியிருந்தது. அந்த தனிப்பருந்து கீழ் வானத்தில் எங்கோ மறைந்தது. ஒரு பறவையின் சில் சில் சில் என்ற ஒலி மட்டும் கேட்டது, எங்கிருக்கிறதென தெரியவில்லை.

கமறும் ஒலி கேட்டு நான் திரும்பிப்பார்த்தேன். காரி டேவிஸ்தான். அவரது தொங்கிய கழுத்துச்சதைகள் அதிர்வதைக் கண்டேன். அவருக்கு சிறிய வலிப்பு ஒன்று வருகிறதா என்று அஞ்சினேன். முகம் ஒரு பக்கமாக கோணி இழுத்துக்கொண்டது. மீண்டும் கமறினார். கைகளால் முகத்தை மூடிக்கொண்டு முழங்காலில் தலையை வைத்துக்கொண்டார்.

பின்பு நிமிர்ந்து சூரியன் விட்டுச்சென்ற வெளிச்ச ஈரத்தை மட்டும் பார்த்தார். தலையை அசைத்துக்கொண்டே இருந்தார். கையை ஆட்டி ஏதோ சொல்ல வருவது போல. பின் வழுக்கைத்தலையை வருடிக்கொண்டு மெதுவாக அமைதியானார். கண்களை சில நிமிடங்கள் மூடிக்கொண்டிருந்தார். நான் பார்க்கும் உணர்வு அப்போதுதான் வந்திருக்கும்போல. திரும்பி என்னைப்பார்த்தார். புன்னகையுடன் ‘ மேன், திஸ் இஸ் ஹாரிபிள்’ என்றார்.

நான் ஒன்றும் சொல்லாமல் பார்த்தேன். அவர் மேலும் சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்துவிட்டு எழுந்தபோது நானும் எழுந்தேன். ‘முதல் சில நிமிடங்களுக்கு உலகின் எல்லையின்மையை உணர்ந்தேன். ஆனால்..’என்றார். தலையை கையால் நீவிக்கொண்டார். பின்பு வேகமான திக்கல்களுடன் ‘…சட்டென்று இந்த உலகம் ஒரு அறை என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. மிகச்சிறிய அறை. கைநீட்டி கால்நீட்டினால் நான்கு சுவர்களுக்குள் எல்லா இடங்களையும் ஒரே சமயம் தொட்டுவிடமுடியும். நான்குபக்கமும் மூடப்பட்ட அறை. மீட்பே இல்லாமல் இந்த அறைக்குள் மானுடம் நிரந்தரமாக அடைக்கப்பட்டுள்ளது…ஜீஸஸ்!’

அந்தச் சொற்களை உள் வாங்கி அதை என் அனுபவமாக ஆக்க எனக்கு கொஞ்ச நேரம் தேவைப்பட்டது. உணர்ந்ததும் என் உடல் அச்சத்தால் குறுகியது. அங்கே நிற்க முடியாதென்று தோன்றியது. உடனே ஓடி ஏதாவது சிறிய அறைக்குள் பாதுகாப்பாக அடைபட்டு விடவேண்டும். அப்போதுதான் வெளியே எல்லையற்ற உலகை உணர முடியும். சுதந்திரத்தை அறியமுடியும்

இளம்துறவி ‘ஓம்’ என்று கண் விழித்தார். ஒன்றுமே சொல்லாமல் அவரே மலையிறங்க ஆரம்பித்தார். திரை சரிவதுபோல இருட்டு விழ ஆரம்பித்தது. சோலைக்காடுகள் இருண்டு விட்டன. மலைவிளிம்புகளில் மட்டும் ஊமை ஒளி. மலை உச்சிகளில் கொஞ்சம் ஒளி சிதறிக்கிடந்தது. அதுவும் ஒரு தரைவிரிப்பு சுருட்டப்படுவதுபோல பின்வாங்கிக்கொண்டிருந்தது

மலைப்பாதை ஒரு சிறிய கோடு போல தெரிந்தது. அதன் வழியாக திரும்பி இறங்கினோம். சீவிடுகளின் ஒலியால் இரவு தன் குளிரையும் இருட்டையும் ஓசைகளையும் விண்மீன்களையும் தொகுத்துக்கொள்ள ஆரம்பித்தது. என்னுடன் கனத்து கனத்து கீழிறங்கிய எண்ணங்கள் பாதங்களை தடுமாறச்செய்தன

காரி டேவிஸ் நினைத்துக்கொண்டு நின்று திரும்பி என்னிடம் ‘இதில் நாம் பிரபஞ்சவெளியை வரைந்துகொள்ள வேண்டும்…என்ன?’ என்றார். நான் அவரை வெறுமே பார்த்தேன். அவர் இறங்கிச்சென்றார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *