இளம் மாங்கன்று

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 27, 2022
பார்வையிட்டோர்: 3,331 
 

பள்ளிக்கூட இடைவேளையில் அவசர அவசரமாய் சிறு நீர் கழிக்க அந்த புதருக்குள் நுழைந்தவர்களில் ராசுக்குட்டி, பரமன், கட்டாரி, மூவர் மட்டும் “இற்று போய்” எப்பொழுது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் நிலையில் இருந்த “டவுசர்களை” இழுத்து விட்டு அண்ணாகயிற்றால் பிணைத்து கொண்டனர்.

இருந்தாலும், ராசுக்குட்டியின் மூக்கில் வெள்ளையாய் வழிந்து கொண்டிருந்த சளி வேறு மேல் உதட்டின் விளிம்பில் நின்று எப்பொழுது வேண்டுமானாலும் உதட்டை தாண்டி விழுந்து விடுவேன் என்று பயமுறுத்த, “சர்ரென்று” மூக்கை இழுத்து பிடிக்க முயற்சித்தான், ஆனால் பரிதாபம் அது இன்னும் கீழே இறங்குவதற்குத்தான் முயற்சித்தது.

மூக்கை கைகளால் துடைக்க கைகளை மேலே தூக்க முயற்சித்தால் போட்டிருக்கும் டவுசர் விடுபட்டு கால் இடையில் விழுந்து விடும், அதே நேரத்தில் டவுசரை இழுப்பில் வைத்து அண்ணாகயிற்றால் பிணைக்க முயற்சிப்பதற்குள் சளி வழிந்து விழுந்து விட்டால் என்ன செய்வது?

இறுதலை கொள்ளியான நிலைமையில் இருந்தாலும் லாவகமாய் ஒரு கையால் டவுசரின் ஒரு கால் பகுதியை இழுத்து பிடித்து மறுகையால ஒழுகும் சளியை தடுத்து மெல்ல மெல்ல துடைத்து அருகில் இருந்த ஒரு மரக்கிளையில் தேய்த்து விட்டு கொண்டே டவுசரையும் ஒரு வழியாய் அண்ணா கயிற்றால் இழுத்து இறுக்கி விட்டான்.

அப்பாடி என்ற பெரு மூச்சுடன், தன் கூட்டாளிகளிடம் “வாங்கடா பெல் அடிச்சிடுவாங்க” புதரை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் கூட்டத்தில் பூபதி மட்டும், அந்த புதரை விட்டு வெளியே வரவில்லை.

“பூபதி எங்கடா? பரமன் கேட்க கட்டாரி தலையசைத்தான் தெரியலைடா, நம்ம கூடத்தான் “ஒண்ணுக்கு” வந்தான்.

டேய் பூபதி பூபதி புதரின் முன் நின்று சபதமிட ஐந்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்தான் பூபதி. முகம் வேர்த்திருந்தது. கைகளில் மண் அப்பியிருந்தது.

என்னடா? கையெல்லாம் மண்ணாயிருக்கு? நண்பர்கள் விசாரிப்பதற்குள் இண்டெர்வெல் முடிந்ததற்கான மணி அடிக்க அனைவரும் பள்ளிக்குள் ஓடினர்.

என்னடா கையெல்லாம் மண்ணா இருக்கு அருகில் உட்கார்ந்திருந்த கட்டாரி அவனிடம் இரகசியமாய் கேட்டான். இவர்கள் இருவரும் குசு குசுவென பேசுவதை அவர்கள் பின்னால் இருந்த ராசுகுட்டி ஒட்டு கேட்பதற்காக முன்னால் குனிய மீண்டும் அவனது வெள்ளை சளி சட்டென்று மூக்கிலிருந்து வெளியே வந்தது. யாரும் பார்க்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்துவிட்டு தன் புத்தகப்பையால் மூக்கை துடைத்து ஒரு வழியாக வெள்ளை சளியை புத்தக பைக்கு மாற்றி விட்டான்.

இவனின் இந்த படுதலை பற்றி கவலைப்படாமல் கட்டாரியின் காதில், பூபதி நான் ஒரு இரகசியம் சொல்றேன் யாருக்கும் சொல்லமாட்டியில்ல,

கட்டாரி நான் யாருக்கும் சொல்ல மாட்டேன்.

அம்மா சத்தியமா?

அம்மா சத்தியமா

பூபதியின் மண் கையில் அடித்து சத்தியம் செய்தான் கட்டாரி.

நாம ‘ஒண்ணுக்கு’ போனமில்ல அந்த இடத்துல ஒரு மாங்காய் செடி ஒண்ணு இருக்கு, நல்ல குட்டியா இருக்கு.

அய்..மாங்கா செடியா, அதை நாம் கொண்டு போலாமா?

உஷ்..யாருகிட்டயும் சொல்லாத, அதை நான் மண்ணை பறிச்சு அப்படியே அணைச்சு வச்சுட்டு வந்திருக்கேன். சாயங்காலம் போகறப்ப புடுங்கிட்டு போயிடலாம்.

கட்டாரிக்கு இப்பவே போய் அந்த மாங்காய் செடியை பார்க்கவேண்டும் போல இருந்தது.மதியானம் நாம் போய் அதை பாத்துட்டு வரலாமா?

வேணாம் வேணாம், நாம் போய் பார்த்தா எவனாச்சும் நம்ம பின்னால வந்து பார்த்துட்டு அதை எடுத்துட்டு போயிடுவான்.

ராசுக்குட்டியும், பரமனும் பின்னால் இருந்து முதுகில் குத்தினார்கள், என்னடா இரகசியம் பேசிகிட்டிருக்கீங்க, ,

அதற்குள் குசு குசுவென்று பேசிக் கொண்டிருந்தாலும் ஐந்து வரிசை முன் தள்ளி இருந்த வள்ளி டீச்சரின் காதுகளுக்குள் இவர்களின் சல சலப்பு விழ செய்தது.

என்னடா அங்க குசு குசுன்னு பேசிட்டு இருக்கறீங்க? சப்தமாய் இறைய..

ஒண்ணுமில்லைங்க டீச்சர், கோரசாய் பதில் தந்தனர் ராசுகுட்டியும், பூபதியும்.

மதியம் சத்துணவுக்கு ஆளுக்கொரு தட்டை எடுத்து வரிசையில் நிற்கும்போதே பரமனுக்கும், எல்லா கூட்டாளிகளுக்கும் பூபதி மாங்காய் செடி ஒன்றை பார்த்து வைத்திருக்கிறான் என்பது பரவி விட்டது. ஆனால் ஒவ்வொருவரிடமும் யாரிடமும் சொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கியே, சொல்லியிருந்தான்.

அவ்வளவுதான், அவர்கள் அனைவரும் எப்படா சாப்பிட்டு முடித்து அதனை போய் பார்க்கலாம் என்று துடித்தனர்.

கொஞ்சம் தூரம் புதராய் இருக்க, அதனுள் குனிந்த படியே உள்புறம் சென்றார்கள். இளம் பச்சை நிறத்தில் மண்ணிலிருந்து இரண்டடி வளர்ந்து இரண்டே இரண்டு இலைகளை விரித்து நின்று கொண்டிருந்தது அந்த மாங்கன்று.

அய் அழகா இருக்குடா, கட்டாரி அதை ஆசையுடன் தடவி கொடுத்தான்.

சட்டென அவன் கையை தட்டிவிட்ட பூபதி மனுசன் கை பட்டா கருகி போயிடும், அதை தொடாதே.

டேய் இதை எனக்கு தரயா? ராசுக்குட்டி கெஞ்சினான்.

ஆளைப்பாரு ஆளை, இதை நான் சாயங்காலம் ஸ்கூல் விட்ட உடனே வந்து எடுத்துட்டு போயிடுவேன்.

சரிடா..ஆனா சாயங்காலம் நாம எல்லாருமே வந்து இதை எடுத்துட்டு போயிடலாம், என்ன சரிதானே கொஞ்சம் சமாதானப்படுத்திக்கொண்டு சொன்னான் சின்ன குட்டி.

மனமில்லாமல்தான் தலையசைத்தான் பூபதி. அவனை பொறுத்தவரை இரகசியமாய் இதை செய்ய நினைத்திருந்தான். ஆனால் முடியாதே.

மதியம் மேல் அவர்கள் பேசிக்கொண்டது முழுவதுமே இந்த மாங்கன்றை பற்றித்தான். டேய் மாம்பழம் காச்சா எனக்கு தருவியா? கேட்ட கட்டாரிக்கு நம்ம கூட்டாளிங்களுக்கு எல்லாத்துக்கும் தருவேன் பூபதி பெரிய மனதாய் சொன்னான்.

ஆமா இந்த செடியை நட்டு வைக்க உங்கம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?

இந்த கேள்வியை கேட்ட பரமனிடம் எங்கம்மாவுக்கு செடியெல்லாம் ரொம்ப புடிக்கும்னு ஒருக்கா சொல்லியிருக்கு.

ஆமா இதை எங்க நட்டு வைப்பீங்க?

எங்க வூட்டு முன்னாடியே நட்டு வச்சுடுவோம். அப்பத்தான் தினமும் நான் இதை பார்த்துக்க முடியும். தண்ணி கூட ஊத்த முடியும்..

மாலை பள்ளி மணி அடிக்கவும் பூபதியும் அவன் கூட்டாளிகளும் எல்லோரும் போவதற்காக காத்திருந்தனர். ஒரு வழியாய் பள்ளியின் மாணவர்களும், மாணவிகளும் வெளியேறி கதவை சாத்திய பின் கூட்டாளிகள் நால்வரும் மெல்ல மெல்ல அந்த புதரை நோக்கி சென்றனர்.

சிறு நீர், மலம் இவைகளின் வீச்சமோ, அவைகளின் இருப்போ எதை பற்றியும் கவலைப்படாமல் அவர்கள் அந்த புதருக்குள் நுழைந்து அந்த “மாஞ்செடியை” பொறுமையாக சுற்றிலும் குழி பறித்து பதனமாய் அதை வெளியே எடுத்தனர்.

மக்கிபோன அந்த மாகொட்டையின் உயிர் முழுவது வெளியில் வந்திருக்கும் அந்த இளம் பச்சை முளைகளிடம் இருக்க அந்த “முளைகளுக்கு” எந்த கிழிசலும் வராமல் சிரமப்பட்டு நால்வரும் புதரில் குனிந்து குனிந்து வெளியே வந்தனர்.

நால்வரும் தங்கள் புத்தகப்பைகளை தோளில் போட்டிருக்க மாங்கன்று கட்டாரியின் கையில் பதனமாய் இருந்தது. அவன் பூபதியிடம் வேண்டி கேட்டுகொண்டிருந்தான், டேய் இந்த செடியை நீயே வச்சுக்க, ஆனா வீடு வரைக்கும் நாங்க மூணு பேரும் மாத்தி மாத்தி கொண்டுட்டு வருவோம். சரியா?

ம் என்று தலையசைத்தாலும் பூபதிக்கு மனசே இல்லை, தன் பார்வை முழுக்க அந்த கட்டாரி கையில் இருந்த மாங்கன்றின் மீதே இருந்தது.

கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் அவர்கள் இருப்பிடத்துக்கு அந்த மாங்கன்று ஊர்வலமாக இவர்கள் நால்வரின் கையால் மாறி மாறி பயணித்து வந்தது.

இவர்கள் வீட்டருகில் வர வர மக்களின் கூக்குரலும், ஆர்ப்பாட்டங்களும் அதிகமாக காணப்பட்டன. அங்கங்கு நிறைய போலீஸ் தலைகள் கைகளில் லத்தியுடன் நின்று கொண்டிருக்க..

இவர்கள் இருந்த குடிசை எல்லாம் பிரித்தெரியப்பட்டு இவர்களின் குடும்பங்கள் அப்படியே அழுது கொண்டு நின்றிருந்தனர்.

“நல்லாயிருப்பீங்களா” நீங்க எல்லாம் வசைபாடிபடியே கண்னீர் உகுத்து நின்றிருந்த பூபதியின் அம்மா, அவனது கூட்டாளிகளின் அம்மாக்களும்.

நால்வரும் ஒன்றும் புரியாமல் அவர்கள் அருகில் போய் நிற்க.

யாரோ ஒரு போலீஸ்காரர் ஒலி பெருக்கியில் அறிவித்து கொண்டிருந்தார் “இங்க பாருங்க நீங்க இருக்கற இடம், தனியாருக்கு சொந்தமான இடம் அந்த இடத்தை ஆக்ரமிச்சு குடிசைய போட்டு உட்கார்ந்துட்டிருக்கீங்க, இப்ப கோர்ட்டு அவங்களுக்கு சாதகமா சொல்லிடுச்சு, அதனால நீங்க எல்லாரும் இந்த இடத்தை விட்டு ஒழுங்கா காலி பண்ணிடறதுதான் நல்லது”

சட்டி பானைகளை துக்கி கொண்டு இவர்கள் அனைவரின் குடும்பங்கள் வேறொரு இடம் தேடி நடந்து கொண்டிருந்தனர்.

இளம் பச்சை”மாங்கன்று” அங்கிருந்த போலீஸ்காரர்கள் பூட்ஸ் காலாலும், அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தவர்களின் கால்களாலும் மிதி பட்டு உருத் தெரியாமல் கிடந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *