இப்படியும் ஒரு பெண்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 15, 2015
பார்வையிட்டோர்: 6,290 
 

எங்கே இன்னும் இந்த இரண்டு தங்கச்சிகளையும் காணோம் என்று குடிசையில் இருந்து வெளியே வந்து எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த வள்ளிக்கு “பாப்பா” எத்தனயாவது படிக்கற?

கேட்டவனின் கண்களில் வழியும் காமத்தை பார்த்து முகம் சுழித்த அந்த சிறு பெண், அவனுக்கு பதில் சொல்லாமல் கதவு இல்லாத குடிசைக்கு வெளியே நின்று “அப்பாவ்” உன்னை கூப்பிடறாங்க ! கேட்டுவிட்டு குடிசைக்குள் நுழைந்தால் எங்கே இந்த ஆளும் உள்ளே நுழைந்துவிடுவானோ என பயந்து குடிசையை சுற்றிக்கொண்டு பின்புறமாக சென்று ஒரு கல்லில் அமர்ந்து அவள் அப்பனையும் கூப்பிட்டு போக வந்தவனையும் மனதுக்குள் வைய ஆரம்பித்தாள்.

அதுவரை போதையில் படுத்துக்கிடந்த இருளப்பன் மகளின் சத்தம் கேட்டு யாரு புள்ளே? அவிழ்ந்து விழும் லுங்கியை இழுத்து பிடித்தவாறு வெளியே வந்தான்.

“ஏலேய் மாப்பிள்ள எப்படா வந்த? வாடா உள்ளே இழுத்துச்சென்றான். காலையில கொஞ்சம் சரக்கு அதிகமாயிடுச்சு, அவனாக உளறினான் ! ஆனால் வந்தவன் ஆமா உனக்கு எத்தனை புள்ளைங்க? அதை ஏண்டா கேக்கற இவ அம்மாக்காரி வரிசையா மூணையும் பொட்டையா பெத்துக்கொடுத்துட்டு போய் சேர்ந்துட்டா! இந்த கழுதைக ஸ்கோலுக்கு போகணும்னு போகுதுக, அப்பனுக்கு ஏதாவது சோறு போடோனும்னு ஒரு மூதிக்கும் தெரியறதில்ல, போதயில் உளறியவன் ஆமா நீ எதுக்கு மாப்பிள்ளை இத எல்லாம் கேக்கற? திடீரென்று இவன் திருப்பி கேட்கவும் வந்தவன் திடுக்கிட்டு ஒண்ணுமில்ல சும்மாத்தான் கேட்டன்,சரி நம்ம மசக்காணி அண்ணன் உன்னை கூட்டியாறச்சொல்லுச்சு, அண்ணன் எதுக்கு வரச்சொல்லுச்சு..ம்ம் போலாம் வா தடுமாற்றத்துடனே அவன் கையை பிடித்து வெளியே வந்தனர். இவார்கள் போய்விட்டார்களா என்பதை உறுதி செய்துகொண்ட வள்ளி மெதுவாக குடிசையின் பின்புறமிருந்து வெளியே வந்தவள் மீண்டும் தன் தங்கைகளுக்காக, முன்னால் நின்று பார்க்க இரு சுட்டிப்பெண்கள் கிழிந்த பாவாடை,சட்டையுடன் அவ்ர்களுக்குள் கதைஅளந்தபடி சாவகாசமாய் நடந்து வந்து கொண்டிருந்தன, ஏ “குட்டிகளா சீக்கிரம் வாங்கலே ! சத்தம் கொடுக்க அக்காவின் சத்தம் கேட்டு இரண்டும் வேக வேகமாக வந்தன. அவர்களை உள்ளே அழைத்துச்சென்று தன் அப்பனுக்கு தெரியாமல் ஒரு சட்டியில் வைத்திருந்த பழைய சாப்பாட்டை எடுத்து மூவருக்கும் பிரித்து வைத்தாள்

‘ஏ செவப்பி அந்த அறுவாளை எடு ! இவரின் குரல் கேட்ட செவப்பி ஆமா எத்தனை நாளைக்கு இப்படி போக வர அறுவாளை வெச்சுக்கிட்டு அலையறதா உத்தேசம்? ஏண்டி நானென்ன வேணும்னா வச்சுக்கிட்டு அலையறன், என்னைய எப்படியாச்சும் போட்டுத்தள்ளறதுன்னு உன் பங்காளிகள் அலையறானுங்க ! என்னை என்ன செய்யச்சொல்ற ஆதங்கத்துடன் கேட்டார்.

ஏ மாமா எதுக்கு இந்த கொலை வெறி, எத்தனை நாளுக்கு இப்படி ஒருத்தனை ஒருத்தன் வெட்டிக்கறது, நீ உத்தரவு கொடு நான் வேணா போய் பேசிப்பார்க்கறேன்.. அந்த அரை ஏக்கரா கிணத்து மேட்டு தோட்டம்தான வேணும்னு இப்படி வெட்டு குத்துன்னு இருக்கற, எடுத்துக்க,அப்பவாச்சும் உன் வெறி அடங்குனா சரி..கண்ணீருடன் சொன்னாள்..அப்படியே நீ போய் சொன்னாலும் அவன் கேட்டுருவானா? இப்ப பாரு அவன் நேர்ல வந்து மச்சான்ன்னு எங்கிட்ட பேசட்டும் அவன் என்ன் கேட்கறானோ அதை நான் கொடுக்கறதுக்கு தயாரா இருக்கறேன்.அவந்தான் நம்ம கூட்டத்துக்கு ஆகாதவன் பேச்சைக்கேட்டு ஆடறானே…சரி விட்டுத்தொலை நான் கம்மா வரைக்கும் போயிட்டு வந்துர்றேன், கையில் அறுவாளை கொடுக்க மறந்தவள், சூதானமா போய்ட்டு வாய்யா என்று வழி அனுப்பியது தான் கடைசி வழி அனுப்புதல் என்பது மதியத்துக்கு மேல் ‘ராசு’ வந்து இருளப்பன் நம்ம பாண்டி அண்ணனை வெட்டிட்டு போலீஸ் ஸ்டேசன் போய் சரண்டராயிட்டானாம், என்று சொன்னவுடன் தான் தெரிந்த்து.

கம்மாங்கரை தோட்டத்தில் கிடந்த பாண்டி அண்ணன் உடலை எடுத்து போலீஸ் வழக்கம் போலச்செய்யும் காரியங்களுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி, மீண்டும் உடல் வீடு வந்து சேர்ந்த பொழுது மறு நாள் பகல் ஆகிவிட்டது, அது வரை செவப்பி ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் “ஞானி” போல அமர்ந்திருந்தாள். அவளைச்சுற்றியிருந்த பெண்கள் எவ்வளவோ சொல்லியும் ஒரு வார்த்தை பேசாமல் உட்கார்ந்திருந்ததை பார்த்த ஊர் பயந்துவிட்டது. மருத்துவமனையில் இருந்து வந்த உடல் ஐந்து நிமிடங்கள் மட்டுமே வீட்டில் வைத்திருந்து மயானத்துக்கு கொண்டு சென்றுவிட்டனர். அப்பொழுது மட்டும் செவப்பி உட்கார்ந்த நிலையிலேயே மயங்கி விழுந்தாள். பெண்கள் பதட்டத்துடன் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை தெளிய வைக்க மிக படாதபாடுபட்டனர்.

மாலை மங்கி இருள் சூழ ஆரம்பித்துவிட்டது, ஒரே ஒரு விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருந்தது. சுற்றியிருந்த கூட்டங்கள் கரைந்து போயிருந்தது.வீட்டுக்குள் நெருங்கிய உறவுகள் மட்டுமே ஒன்றிரண்டு பேர் இருந்தனர். கணவனின் நினைவுகள் வேகம் தாங்காமல் வெளியிலே திண்ணையில் உட்காரலாம் என திண்ணையில் வந்து உட்கார்ந்தாள் செவப்பி, தூரத்தில் அவளையே எதிர்பார்த்தவாறு நிற்பதைப்போல் மூன்று உருவங்கள் நின்று கொண்டிருந்தன, தன்னையே உற்றுப்பார்த்தவாறு நிற்கும் உருவங்களை கையசைத்து அருகில் வருமாறு சைகை காட்டினாள்.

தயங்கி தயங்கி அந்த உருவங்கள் அருகில் வர… தன் கணவனை கொலை செய்த இருளப்பனின் குழந்தைகள் பயந்து போய் அவளையே பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தன.ஒரு கனம் அவ்ளின் அடி வயிற்றிலிருந்து ஆங்காரம் கிளம்பி வர சட்டென பொங்கி அடங்கியது அவள் மனம், இவர்கள் அப்பன் செய்த செயலுக்கு இதுகள் என்ன செய்யும்? மூவரும் சாப்பிட்டு இரண்டு நாட்களாகிவிட்டன, குடிசைக்குள் இருந்தால் ஊர்க்காரர்கள் ஏதேனும் செய்து விடுவார்களோ என பயந்து பயந்து புதர்க்காடுகளில் ஒளிந்து திரிந்திருக்கின்றன. சட்டென எழுந்தாள் செவப்பி இங்கேயே நில்லுங்கள் என்று சைகையிலே கை காண்பித்துவிட்டு உள்ளே சென்று உறவினர்கள் பொங்கிவைத்திருந்த சோறு, குழம்பு சட்டிகளையும், தட்டுக்களையும் எடுத்து வந்தாள், மூவருக்கும் திண்ணையில் தட்டை வைத்து சட்டியில் இருந்த சாதத்தை தட்டில் போட்டு குழம்பை ஊற்றினாள், அவர்களை வந்து உட்காரும்படி சைகை செய்தாள், மூவரும் தட்டில் உள்ள சோற்றைப்பிசைந்து கொண்டிருந்தனர், கண்களில் பசி வெறி தெரிந்தது, ஆனால் பயம் அவர்களை சாப்பிடவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தது, செவப்பியையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

“சாப்பிடுங்கள்” செவப்பி அன்புடன் சொன்னாள்.

(நான்கைந்து வருடங்களுக்கு முன்பு “ராஜ்” டி.வி யில் வந்த விவாத அரங்கம் ஒன்றில் நிகழ்ச்சி அமைப்பாளர் ஒரு செய்தி சொன்னார். அதாவது தன் கணவனை கொன்றுவிட்டு ஜெயிலுக்கு போனவனின் குழந்தைகளை இவள் தத்து எடுத்து வளர்த்து வருவதாக, அதன் நினைவுகளில் இந்த கதை உருவானது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *