கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 20, 2015
பார்வையிட்டோர்: 12,771 
 

அலுவலகத்திலிருந்து சோர்வுடன் திரும்பிய தன் கணவனை சற்று திகைப்புடன் பார்த்தாள் மாலதி, தான் நினைத்தது நடந்து விட்டதா என்ன?

“”என்னால இந்த ஆபீஸிலே வேலை செய்ய முடியாது. நேத்து வந்த பய எல்லாம் அதிகாரம் பண்றான். எனக்குக் கீழே இருந்தவன் எல்லாம் எனக்கு பாஸôம். என்னோட பழைய பாúஸôட பையன் அமெரிக்காப் போய்ப் படிச்சுட்டு வந்துட்டானாம். பெரிய கொம்பன்னு நினைப்பு, ஐஸ்கிரீம் வாங்கித் தர்றீங்களா அங்கிள்?னு கேட்டவன், இன்னிக்கு கம்பெனி ரூல்ஸ் பத்தி எங்கிட்டே லெக்சர் அடிக்கறான். என்னால தாங்க முடியலை. நான் வேலையை ரிசைன் பண்ணப் போறேன்”

வேலைமூர்த்தி எப்போதும் புலம்பும் புலம்பல் தான் இது.

கொஞ்ச நாட்களாக இது அதிகமாகி இருந்தது.

திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண். கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மகன்…இந்நிலையில் இவன் புதிய வேலை தேடப் போகிறானா?

கிடைத்ததை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடிக்கப் போகிறானா?

வாழ்க்கை என்றால் நாலும் நாலு விதமாகத்தான் இருக்கும்.

அனுசரித்துப் போவதில் தான் வாழ்க்கை இருக்கிறது.

நம் பணிகள் சரியாக இருந்தால் வாழ்க்கை நம்மை ஏமாற்றாது.

ரோசப் பட்டு விட்டால் வெற்றி கிடைத்துவிடுமா என்ன? எதிரிகள் நடுவே தலை நிமிர்ந்து நிற்க வேண்டுமானால் நம்மிடம் பண பலம் வேண்டும்.

நம்மிடம் இருப்பது உழைப்பு மட்டுமே. அதைத்தான் உண்மையாகச் செய்ய வேண்டும்.

இவள் சமீபத்தில் கட்டுரை ஒன்று படித்தாள்.

ஒரு முதலாளிக்கும் தலைவனுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லி இருந்தார்கள்.

முதலாளி தன் கீழ் பணிபுரியும் ஆட்களை ஓட ஓட விரட்டுவான்.

தலைவன் அவர்களுக்கு செய்முறையின் சரியான பாடத்தைக் கற்பிப்பான்.

முதலாளி கம்பெனியின் சட்ட திட்டங்களைப் பற்றிக் கூறுவான்.

தலைவன் கம்பெனியின் நல்லெண்ணத்தைப் பற்றிக் கூறுவான்.

முதலாளி எப்போதும் பயத்தை மட்டுமே உண்டு பண்ணுவான்.

தலைவன் ஆர்வத்தை உண்டு பண்ணுவான்.

முதலாளி நான் என்பான்.

தலைவன் நாம் என்பான்.

யோசித்துப் பார்த்த போது இரண்டும் ஒன்று மாதிரித் தெரிந்தாலும் அவற்றிக்கு இடையே இருக்கும் வித்தியாசம் புலப்பட்டது.

இந்த வாக்கியங்களைக் கோடிட்டு தன் கணவன் கண்ணில் படும்படி வைத்தாள் அவள்.

அதைப் படித்துவிட்டு எரிச்சல் பட்டான் அவன்.

“”என்னைக் குத்திக் காட்டுறியா?”

“”ஐயய்யோ அப்படி இல்லீங்க நல்லா இருந்தது”

“”நானும் நிறையப் படிச்சிருக்கேன் நான் தலைவனும் இல்லை.

பாஸூம் இல்லை”

உண்மைதான் இவன் தன் மனைவியை மிரட்டுவதில் பாஸ்.

ரேஷன் கார்டில் மட்டும் இடம் பெறும் குடும்பத் தலைவன்.

“”இனிமே எனக்கு இப்படி புத்தி சொல்ற வேலை எல்லாம் வைச்சுக்காதே. சமையல் அறை, உப்பு, புளி இத்தோட நிறுத்திக்கோ”

கத்திவிட்டுப் போய்விட்டான்.

வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் இந்தக் காலத்தில் பத்து வருட சர்வீûஸ யாராவது இழப்பார்களா?

நாம் செய்யும் பணியை நேசித்தால் தான் நாம் அதில் தொடர முடியும். அதைச் சுமை என்று நினைத்தால்…

சுமை என்று நினைக்காமல் தாய் தன் சேயை பத்து மாதம் கருவாகச் சுமக்கவில்லையா?

பறப்பதற்கு ஆண்டவன் தந்த சிறகுகளைப் பறவைகள் சுமை என்றா நினைக்கின்றன?

ஆடத் தெரியாத கால்களுக்கு கொலுசும் சுமை தான்.

தேடல் இல்லா பறவைகளுக்குச் சிறகுகள் சுமை தான்.

இவளுக்கு வாழ்க்கை சுமையாகத் தெரியவில்லை என்பது ஆச்சரியம்.

அன்று…

ஏதோ ஒரு இன்டர்வ்யூவிற்குச் சென்றுவிட்டு வந்தான்,

வழக்கம் போல் புலம்பல் தான்.

“”இந்த வேலையும் சரிப்படாது எங்கோ தூரத்தில் ஆபீஸ் இருக்கு. ரெண்டு பஸ் மாறிப் போகணும். வண்டி அலவன்ஸ் கிடையாதாம். பெட்ரோல் போட்டே என் சம்பளம் தீர்ந்து போயிடும்”

“”முதல்ல ஒரு மாசம் வேலை பாத்துட்டு… அப்புறமா கேட்டுப் பாருங்களேன்”

“”இதோ பார் இந்த அட்வைஸ் எல்லாம் வேண்டாம். உன்னோட வேலையை உப்புப் புளி செக்ஷனோட நிறுத்திக்கோ….”

இவள் பேசவில்லை.

ஒரு வாரமாக அவன் ஆபீஸ் போகவில்லை.

அன்று…

இவள் கோவிலுக்குக் கிளம்பினாள்.

சமையல் ரெடி, அவன் குளித்துவிட்டு வருவதற்குள் கோவிலிலிருந்து திரும்பி விடலாம்.

சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

இவனுக்குப் பொழுது போகவில்லை

பரணிலிருந்து பழைய பேப்பர்களை எடுத்தான்.

கட்டி வைத்துக் கடைக்குப் போட்டால் காசாக்கலாம் என்று தோன்றியது.

தலையில் துண்டு கட்டிக் கொண்டான். பேப்பர்களை அடுக்க ஆரம்பித்தான்.

தும்மல்… தூசி… நெடி…

அப்போது வாசலில் ஆட்டோ ஒன்று வந்து நிற்கும் ஓசை.

பக்கத்தில் இருக்கும் கோவிலிலிருந்து வர்றதுக்கு ஆட்டோவா?

தான் சம்பாதித்தால் பணத்தின் அருமை தெரியும். கோபத்துடன் வாசலுக்கு விரைந்தான்.

காக்கி யூனிபார்ம் அணிந்த ஓர் ஆட்டோ ஓட்டுநர் இளைஞன்.

கதவு திறந்த இவனைப் பார்த்துக் கேட்டான்.

“”மேடம் இல்லீங்களா?”

இவனுக்குப் பிரமிப்பு.

மேடம் யார் மேடம்? எந்த மேடம்? இந்த வீட்டில் மேடம் என்று அழைக்கப்படும் மரியாதைக்குரிய நபர் யார்?

இவனுக்குக் கம்ப்யூட்டர் மோடம் தான் தெரியும்.

“”எந்த மேடம்?”

“”மாலதி மேடம் தான். எனக்கு மேத்ஸ் டியூஷன் சொல்லித் தராங்க..”

மாலதி ஏதோ கிராஜூவேட் என்பது தெரியும் ஆனால்…

“”நான் ஈவினிங் காலேஜ்லே டிகிரி படிக்கிறேன். குடும்பப் போறுப்பு வேற வழியில்லை அதான் ஆட்டோ ஓட்டறேன். நான் கணக்கிலே ரொம்ப வீக். ஒரு நாள் மாலதி மேடத்தை வீட்டிலே டிராப் பண்ணினப்போ என் கஷ்டத்தைச் சொன்னேன். மேடம் தான் மேத்ஸ் சொல்லித் தர்றதா சொன்னாங்க. ஆனா பணம் வாங்கிக்க மாட்டேனுட்டாங்க. ஆனா தான் வெளியிலே போனா தேவைப்பட்டபோது கூப்பிட்டு வரச் சொல்வாங்க. என் செல் நம்பர் கூட அவங்க கிட்டே இருக்கு. ஒரு மாசம் நல்லாத் தான் போயிட்டு இருந்தது. இந்த வாரம் வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அவங்க கூப்பிடுவாங்கன்னு காத்திட்டு இருந்தேன். தகவலே இல்லை. அதான் நேரிலே கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன். என் பேர் கண்ணன். என் பேரை சொன்னா அம்மாவுக்குத் தெரியும். ரொம்ப நல்லாச் சொல்லிக் கொடுப்பாங்க. ஒரு தாய்க்குரிய கருணையோடு அதே சமயம் ஒரு டீச்சரின் கண்டிப்போடும்…

மூர்த்தி தன் தலைத் துண்டை அவிழ்த்தான்.

மனதுக்குள் சில புதிர்கள் அவிழ்க்கப்பட்ட உணர்வு.

பாஸ், தலைவன் வித்தியாசம் புரிந்தது.

உன் சமையல் உப்புப் புளி இதோட நிறுத்திக்கோ.

இவன் கூறிய வார்த்தைகள் இவனைப் பார்த்தே சிரித்தன.

இந்தக் கண்ணன் கூட கடமை என்ற பாடத்தை மெüனமாகப் போதித்த அந்தக் கீதையின் கண்ணன் தானோ?

“”நீ போயிட்டு வாப்பா மேடம் வந்தா நான் சொல்றேன்…”

“”நீங்க மேடத்துக்கு?”

“”நானும் உன்னை மாதிரி ஒரு ஸ்டூடண்ட் தான். ஓல்டு ஸ்டூடண்ட்…”

அவன் போய்விட்டான்.

இவன் தனக்கு வந்த தபால்களைப் பார்க்க ஆரம்பித்தான்.

இதோ இவன் அட்டண்ட் செய்த இன்டர்வியூ அலுவலகத்திலிருந்து வந்த கடிதம்.

ஒரு வாரத்திற்குள் வேலையில் சேர அழைப்பு.

தேதியைப் பார்த்தான். நாளையோடு அந்தக் கெடு முடிகிறது.

புதிய வேலை… புதிய பொறுப்பு… புதிய மனிதன்.

இவன் நாளை அலுவலகம் செல்ல தன் ஷர்ட்டை இஸ்திரி செய்ய ஆரம்பிக்கிறான்.

இனி சுருக்கங்கள் இருக்காது.

– மார்ச் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *