வெளிச்சத்துக்கு வராதவள்!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 8,459 
 

இந்துவின் மனதில்தான், அந்த எண்ணம் முதலில் தோன்றியது. அன்று, ஞாயிற்றுக்கிழமை. மதிய உணவுப் படலத்திற்குப் பின், ஹாலில் கிடந்த சோபாவில், சாவகாசமாகச் சாய்ந்திருந்தாள் இந்து.
எதிரேயிருந்த சுவரில் தொங்கிக் கொண்டிருந்த மாதக் காலண்டரில், பார்வை பதிந்திருந்தது.
ஆகஸ்ட் மாதத் தேதிகளை, பெரிய பெரிய எண்களாய் பிரகடனப்படுத்திக் கொண்டிருந்த அந்தக் காலண்டரின் மத்தியப் பகுதியில், விடுமுறையை அறிவிக்கும் விதமாய், சிவப்பு வண்ணத்தில் பளீரிட்டது அந்த ரெட்டை இலக்க எண்கள்.
அந்த எண்களை பார்த்த மாத்திரத்தில், இந்துவின் விழிகளில், ஒரு பளீர் பிரகாசம்!
ஆகஸ்ட் பதினைந்து!
வெளிச்சத்துக்கு வராதவள்!பாரத மக்களை பரவசப்படுத்தும் சுதந்திர தினம்.
இந்துவுக்கோ, சுதந்திரப் பரவசத்தோடு, இன்னுமொரு கூடுதல் சந்தோஷத்தையும் கொடுக்கும் தினம்.
ஆறுமுகசாமி மாமா பிறந்த தினம் அது.
ஆறுமுகசாமி மாமா, அவளது தாய் மாமன். அவளது வாழ்வில் ஒளியேற்றியவர். அவளது வாழ்வில் மட்டுமல்ல; அவளது தங்கை ஜெயந்தியின் வாழ்விலும் தான்!
மாமாவுக்கு பிள்ளைகள் கிடையாது. இவளும், இவளது தங்கை ஜெயந்தியும் தான், அவருக்குப் பிள்ளைகள். இவர்களின் அப்பாவும், அம்மாவும் அடிமட்ட விவசாயக் கூலிகள்.
விடியக் கருக்கலிலேயே கஞ்சிப் பாத்திரத்தோடு, காடுகரைகளுக்கு சென்றுவிடும் அவர்கள், பொழுது மங்கிய பிறகுதான் வீடு திரும்புவர்.
குழந்தைகளாயிருந்த இந்துவும், ஜெயந்தியும், அதுவரை அண்டை வீடான மாமா வீட்டில்தான் இருப்பர்.
சாப்பாடும் அங்கேதான்; விளையாட்டும் அங்கே தான்.
ஐந்து வயது ஆனதும், அவர்களைப் பள்ளிக்கூடம் சேர்த்தது மாமாதான்.
அவர்களை படிக்க அனுப்பியது, இந்துவின் அப்பாவுக்கு அறவே பிடிக்கவில்லை.
“பொட்டக் கழுதைகளுக்கு எதுக்கு மச்சான் படிப்பு, கிடிப்பு எல்லாம்… கலெக்டர் உத்தியோவத்துக்காப் போவப் போவுதுங்க? எவன் வூட்டு அடுப்படிக்கோ கஞ்சி காய்ச்சப் போவுதுங்க. இன்னும் ரெண்டு, மூணு வருசப்பாட்டுக்கு அப்படியே சும்மா வூட்டுலக் கெடந்ததுங்கன்னா, ஏழெட்டு வயசாவிடும். கொஞ்சம் வெடிப்பாவும் நிமுந்துடும். எங்கக் கூட காட்டு வேலை, கழனி வேலைகளுக்கு கூட்டிப் போயிறலாம். எங்கக் கூலியோடச் சேத்து, அன்னாடு ரெண்டு அரையாளங் கூலி அதிகமா கெடைக்கும். அந்த வரும்படியை வச்சி, கைகுளுர விட்டு, வீதியாச் செலவளிச்சுக்கலாமுல்ல. அதை விட்டுட்டு…’ என, பள்ளி செல்வதற்குத் தடை போடப் பார்த்தார்.
ஆனால், மாமா அவரது வார்த்தைகளைக் கேட்கவில்லை.
“ஆதிகாலத்து ஆசாமி மாதிரி பேசாதீங்க மாப்ள… இப்ப காலம் எவ்வளவோ மாறிப் போச்சி. ஆண்களுக்குச் சமமா, பெண்களும் படிச்சி, பெரிய பெரிய உத்தியோகத்துக்கு போகிற நெலமை வந்தாச்சி. நாமும் காலத்துக்குத் தகுந்தபடி மாறியாகணும். நம்மப் புள்ளைங்களையும் படிக்க வைக்கணும்…’ என, எதிர்வாதம் செய்தார்.
“நீங்க என்னத்தைச் சொன்னாலும், இந்தப் பொட்டை பிள்ளைங்களப் படிக்க வைக்கிற விஷயத்துல எனக்கு விருப்பமில்லை. முடிஞ்சா நீங்கப் படிக்க வச்சிக்கங்க. ஒங்க இஷ்டம்…’ என, பொறுப்பில்லாமல் தட்டிக் கழித்துப் பேசினார் அப்பா.
அம்மாவும், அவரது வார்த்தைகளை ஆமோதிக்க, பிள்ளைகள் இருவரையும், மாமா தன்பக்கம் இழுத்து அணைத்துக் கொண்டார். அவர்களைப் படிக்க வைப்பதையும், தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார்.
உடன்குடி சந்தையடி தெருவில் இருந்தது அவரது வீடு. வீட்டின் முகப்பு பகுதியில், சின்னதாய் டீக்கடை வைத்திருந்தார். அதிகாலையிலிருந்து, அந்தி இருள் சூழும் வரை, டீயடிப்பதில் கிடைக்கும் வரும்படி, சொற்பம்தான் என்றாலும், குடும்பச் செலவுகளைச் சுருக்கி, அந்த சொற்பத்திலும் மிச்சம் பிடித்து, இருவரது படிப்பிற்கும் செலவு செய்தார்.
இந்துவும், ஜெயந்தியும் பொறுப்பை உணர்ந்து படித்து, முதுகலைப் பட்டதாரிகளாயினர்; இன்று மதிப்பான நிலையில் இருக்கின்றனர்.
இந்து, கல்லூரி ஒன்றில் ஆங்கிலப் பேராசிரியை. ஜெயந்தியோ, அரசு வங்கி ஒன்றில் உதவி மேலாளர்!
அழகு, படிப்பு, வேலை அனைத்தும் அவர்களிடம் ஒருங்கே அமைந்திருந்ததால், நல்ல நல்ல வரன்களும் தேடி வர, மண வாழ்வும் நல்லபடியாய் அமைந்து விட்டது. இப்போது இருவரும், சென்னையிலேயே செட்டிலாகி இருக்கின்றனர். இந்து, அரும்பாக்கத்தில்; ஜெயந்தி, அண்ணா நகரில்!
அன்று படிப்பு விஷயத்தில் மண்ணை அள்ளிப் போட முயற்சித்த அப்பாவும், அம்மாவும் கூட, இன்று இவர்களோடு வந்து ஒட்டிக் கொண்டனர்.
மூத்தவளிடம் கொஞ்ச நாட்கள்; இளையவளிடம் கொஞ்ச நாட்கள் என, ஆசைப்பட்ட இடங்களில் மாறிமாறி இருந்து, ஆனந்தமாய் நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மாமா மட்டும் வரவேஇல்லை. “நீங்களும் சென்னைக்கு வந்து எங்கக் கூடவே இருங்க மாமா…’ என, இருவரும் வற்புறுத்தி அழைத்தும், “கிராமத்து அமைதியிலேயே வாழ்ந்து பழகிட்ட எனக்கு, பட்டணத்து பரபரப்பெல்லாம் ஒத்துக்காது செல்லங்களா…’ என மறுத்து விட்டார்.
“அப்ப இந்தப் பாய்லர் வெக்கையில வேகுற டீக்கடைத் தொழிலையாவது விட்டொழியுங்கள். நாங்க உங்களுக்கு மாசா மாசம், ஒரு தொகை அனுப்புறோம். அதை வச்சி, ஓய்வா உக்காந்து சாப்புடுங்க…’ என்றும் சொல்லி பார்த்தனர்.
“இதுதானேம்மா எனக்குத் தெரிஞ்ச தொழில். ஒடம்புல ஒழைக்கறத் திராணி இருக்கிற வரைக்கும் ஓய்வை பற்றியோ, மத்தவங்ககிட்ட உதவி பெறுவதைப் பற்றியோ நெனைக்கவே கூடாதுங்கிறது என்னோடக் கொள்கை. என்னைக்கித் திராணி கொறையுதோ, அன்னைக்கி அப்போதைய சூழ்நெலைக்கித் தகுந்தபடி முடிவெடுப்போம்…’ என்று, அதற்கும் மறுப்புத் தெரிவித்து விட்டார்.
கிராமத்தோடும், கிராமிய வாழ்க்கையோடும் ஒன்றிவிட்ட மாமாவுக்கு, பொருளாதார உதவி செய்ய நினைத்தாலும், அதை ஏற்கும் மனம் அவருக்கு இல்லை. “நான் ஆசைப்பட்டபடி, உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சதே, அந்த மனநிறைவு போதும் எனக்கு…’ என்பார்.
மாமாவின் இந்த மறுதலிப்புகளால், இந்து, ஜெயந்தி இருவரது இதயங்களிலும் ஏகமாய் வேதனை. அவரால் ஏற்றம் பெற்றத் தங்களால், அவருக்கு ஏதும் செய்ய இயலவில்லையே என்ற ஆற்றாமை. ஆனாலும், மாமாவின் பிடிவாத குணம் பற்றி அறிந்த இந்துவால், அதற்குமேல் அவரை வற்புறுத்த இயலவில்லை.
அவரது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், ஒரு பிரசித்திப் பெற்ற கோவிலுக்குச் சென்று, அவருடைய நீடித்த ஆயுளுக்கும், நிறைவான ஆரோக்கியத்திற்கும் தெய்வத்தைப் பிரார்த்தித்து, அர்ச்சனை செய்வாள். இன்னும் நான்கு நாட்களில் வரவிருக்கும் இந்தப் பிறந்த நாளின் போது, எந்தக் கோவிலுக்குச் செல்வது என, அவள் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் தான், அந்த விஷயம் திடீரென மின்னலிட்டது.
“மாமாவுக்கு இது சாதாரணப் பிறந்த நாள் அல்ல; அறுபதாவது பிறந்த தாள்! இந்த பிறந்த நாளை, ஊருக்குப் போய் வெகு விமரிசையாகக் கொண்டாடினால் என்ன? ஊரே வியக்கும்படி சிறப்பாக நடத்தி, மாமாவை கவுரவப்படுத்தினால் என்ன? இங்கும் வர மாட்டேன் என்கிறார். பணம் கொடுத்தாலும் ஏற்க மாட்டேன் என்கிறார். அப்பேர்ப்பட்டவரை, இப்படியாவது கவுரவப்படுத்துவோமே…’ என, தன் மனதில் தோன்றிய இந்த எண்ணத்தை, உடனடியாகத் தங்கை ஜெயந்திக்கு போன் போட்டுத் தெரிவித்து, அவளது அபிப்ராயத்தைக் கேட்டாள்.
மாமா விஷயத்தில், இவளது மனப்பாங்குடனேயே இருந்த அவளும், அதை உற்சாகமாய் ஆமோதித்தாள். “”ஆமாம்… நீ சொல்றது சரிதான். ரொம்ப ரொம்பப் பிரமாதமா, பிரமாண்டமாக் கொண்டாடுவோம்க்கா. நம்மை உச்ச நிலைக்கு உயர்த்துன மாமாவோட சந்தோஷத்துக்காக இல்லேன்னாலும், பிரதியுபகாரமா ஏதும் செய்ய முடியலையேங்கிற நம்மோட ஆற்றாமையைத் தீர்த்துக்கிறதுக்காகவாவது நாம இந்தப் பிறந்த நாள் விழாவை நடத்தி அவரை கவுரவப்படுத்தித்தாங்கா ஆகணும். நான் ரெடி…” ஜெயந்தி தீர்மானமாய்க் கூற, அடுத்தபடியாக மாமாவுக்கு போன் செய்தாள் இந்து.
விழாவுக்கு அவருடைய சம்மதத்தைப் பெற வேண்டுமே!
இதையும் அவர் வேண்டாமென, மறுக்க முடியாதபடிக்கு எப்படி மடக்கிப் பேசுவது எனத் திட்டமிட்ட படியே, நலம் விசாரிப்புக்குப் பின், விழா பற்றிய பேச்சை, வெகு ஜாக்கிரதையாக ஆரம்பித்தாள்.
“”நாளை மறுநாள், நானும் ஜெயந்தியும், குடும்பத்தோட ஊருக்கு வர்றோம் மாமா.”
“”என்னம்மா திடீர்ன்னு… வழக்கமா குலசை முத்தாரம்மன் தசரா திருவிழாவுக்குத்தானே வருவீங்க?”
“”இப்பவும் கூட, ஒரு திருவிழாவுக்குத்தான் வர்றோம் மாமா.”
“”இப்ப என்னத் திருவிழா… நம்ம சுத்து வட்டாரத்தில் இப்ப எந்தவிதமானத் திருவிழாவும் இல்லையே?”
“”எங்கள வாழ வச்சத் தெய்வத்துக்கு, நாங்க திருவிழா நடத்த வர்றோம் மாமா!”
“”என்னம்மா சொல்றே… எனக்கு ஒண்ணுமே புரியல. பொடி வச்சிப் பூடகமாகப் பேசாம, நேரடியா விஷயத்தைச் சொல்லு.”
“”சொல்றேன் மாமா… ஆனா, அதுக்கு முன்னாடி, நீங்க எனக்கு ஒரு உத்திரவாதம் தரணும்.”
“”என்ன உத்திரவாதம்?”
“”நான் சொல்லப்போற விஷயத்தை, மறுக்கவோ, அதை செயல்படுத்த முட்டுக்கட்டைப் போடவோ மாட்டேன்னு…”
“”நா ஏத்துக்கக்கூடிய மாதிரியான விஷயத்தை நீ சொன்னா, நா ஏம்மா மறுக்கப் போறேன்?”
“”உங்களோடப் பாசத்துக்குரிய பிள்ளைகளான எங்களோட சந்தோஷமும், திருப்தியும் நீங்க ஏற்றுக்கொள்ளக்கூடியதுதானே மாமா?”
“”அதுல என்னம்மா ஒனக்கு சந்தேகம்?”
“”சந்தேகமே இல்லை மாமா… நாங்க எதைச் செய்தாலும், ஏத்துக்குவீங்கங்கிற நம்பிக்கையோடத்தான், நானும், ஜெயந்தியும் ஒரு முடிவு எடுத்து, அதை நிறைவேற்ற ஊருக்கு வர்றோம்.”
“”என்ன முடிவு?”
“”வரப்போறப் பதினைந்தாம் தேதி, உங்களோடப் பிறந்த நாள்…”
“”அப்படியா… அதையெல்லாம் நா மனசுல நெனைச்சே பார்க்கிறதுல்ல.”
“”நீங்க நினைச்சுப் பார்க்கலேன்னாலும், நாங்க நினைக்காம இருக்க முடியுமா மாமா? இதுவரைக்கும் உங்களுக்கு எத்தனையோ பிறந்த நாள் வந்திருந்தாலும், இந்தப் பிறந்த நாளுக்கு, ஒரு சிறப்பு இருக்குது.”
“”என்ன சிறப்பு?”
“”இது உங்களோட அறுபதாவது பிறந்த நாள்.”
“”அறுபதாயிருந்தாலும், எழுபதாயிருந்தாலும், அதுவும் ஒரு எண்ணிக்கை தானேம்மா?”
“”உங்க சம்பந்தமான எந்த ஒரு விஷயத்தையுமே, பெருசா எடுத்துக்காத உங்களுக்கு, அது ஒரு சாதாரண எண்ணிக்கையாகத் தான் தெரியும். ஆனா, எங்களுக்குக் கல்வியைக் கொடுத்து, எங்களோட வாழ்வை பிரகாசிக்க செய்த உ<ங்களோட அறுபதாவது பிறந்த நாள், எங்களுக்கு ரொம்பவும் சிறப்பாகத் தெரியுது.”
“”அதனால?”
“”தங்களோட நல்வாழ்வுக்கு நல்லருள் புரிஞ்ச தெய்வத்திற்கு, பக்தர்கள் திருவிழா நடத்தி, சந்தோஷப்படுவாங்க. அதைப்போல, எங்களுக்கு நல்வழி காட்டின எங்களோட தெய்வமான உங்களுக்கு, நாங்கள் விழா நடத்தி, கவுரவிச்சி, சந்தோஷப்பட ஆசைப்படறோம்.”
“”என்னம்மா இது, தெய்வம் அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற…”
“”எங்களுக்கு நீங்க, தெய்வத்துக்கு சமமானவர்தான் மாமா… தன்னோடப் பக்தர்கள் விழா நடத்துறதை, எப்படி அந்தத் தெய்வம் தடுக்கிறதில்லையோ, அப்படி நாங்க உங்களுக்கு, விழா நடத்தப் போறதை நீங்களும் தடுக்கவே கூடாது…”
அன்பு நிறைந்த அழுத்தத்தோடு இந்து கூற, மாமாவிடமிருந்து உடனடியாய் எவ்வித எதிர் வார்த்தையும் வரவில்லை.
இந்துவே உசுப்பினாள்.
“”என்ன மாமா… மவுனமாயிட்டீங்க? உங்களோட மவுனத்தை, விழாவுக்கான சம்மதமா எடுத்துக்கலாமா?”
“”ம்… ஆனா…”
“”என்ன மாமா ஆனா?”
“”ஒரு சின்ன மாற்றம் செய்யணும்.”
“”என்ன மாற்றம்?”
“”விழா எனக்கானதா இருக்கக் கூடாது.”
“”என்ன மாமா குழப்புறீங்க?”
“”நா தெளிவாத்தாம்மா பேசுறேன். ஒங்களோட வாழ்க்கையை முன்னேற்றுனதுக்காக, உங்க நன்றியை வெளிப்படுத்தத்தானே இந்த விழாவை நடத்தப் போறீங்க?”
“”ஆமாம் மாமா.”
“”அப்படின்னா அந்த விஷயத்துல, அதிகப் பங்குள்ள, அதிகமான தியாகம் செய்த நபருக்கில்ல, நீங்க விழா நடத்தணும்?”
“”நீங்கதானே மாமா அந்த நபர்?”
“”நா வெளிச்சத்துலத் தெரியிறவன்… ஆனா வெளிச்சத்துக்கு வந்து, தன்னை விளம்பரப்படுத்திக்காம, ஒரு ஓரமா ஓசையில்லாம நின்னு, ஒட்டு மொத்தக் காரியத்துக்கும் உறுதியான ஆதாரமாயிருந்த ஒரு உன்னத ஜீவன் இருக்கும்மா.”
“”நீங்க இவ்வளவு சிலாகிச்சிச் சொல்ற அந்த ஜீவன் யாரு மாமா?”
“”பொறுமையின் சிகரமா, தியாகத்தின் உருவமா, இன்னும் என்னோட அமைதியா வாழ்ந்துக்கிட்டிருக்கிற ஒங்க அத்தைதாம்மா அது.”
“”என்ன சொல்றீங்க மாமா?”
“”உன் மேலேயும், ஜெயந்தி மேலேயும் நா பாசம் வச்சதும், படிக்க வச்சி முன்னேற்ற நெனைச்சதும், பெரிய விஷயமே இல்லம்மா. ஏன்னா, நா ஒங்களோடத் தாய் மாமா. நீங்க என்னோடத் தங்கச்சிப் புள்ளைங்க; ரத்த சொந்தங்கள்.
“”ஆனா, நமக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத, எங்கேயோ ஒரு குடும்பத்துல பொறந்து, இருபத்தஞ்சி வருசங்களுக்கும் மேலா அங்கேயே வாழ்ந்துட்டு, பிடுங்கி நடப்பட்ட நாற்றா, திடும்ன்னு ஒரு நாள், என்னோடப் பொண்டாட்டிங் கிறப் பட்டத்தோட, நம்மக் குடும்பத்துக்குள்ள நொழைஞ்சி, ஒங்களை முன்னேற்றியே தீரணும்ங்கிற என்னோட மூர்க்கமான லட்சியத்துக்கு, முழுமூச்சா ஒத்துழைப்பு குடுத்தாளே, அவளோட செயல்தாம்மா பெருசு,” சற்று நிறுத்தித் தொடர்ந்தார் மாமா…
“”எந்தப் பெண்ணாவது, தன்னோடப் புருஷன் அவனோடத் தங்கச்சிப் புள்ளைங்களுக்காக ஒட்டு மொத்த ஒழைப்பையும் தாரை வார்க்கிறதை பொறுமையா சகிச்சிக்கிட்டிருப்பாளா… ஆனா, இவ அசாத்தியப் பொறுமையா, புன்னகையோட சகிச்சிக்கிட்டிருந்தா… அந்தப் பொறுமைக் கெல்லாம் மேலா, அவ இன்னொரு பெரும் தியாகமும் பண்ணியிருக்காம்மா…” சொல்லும் போதே, மாமாவின் குரல் தழுதழுத்தது.
“”அது… அது… எந்த ஒரு பெண்ணும் எந்த நெலையிலேயும் செய்ய விரும்பாத தாய்மைத் தியாகம். நம்ம சமூகத்துல, ஒரு தாய்மையடையாத பெண்ணை, “மலடி, இருளி’ன்னு இகழ்ந்து, இந்த ஒலகம் ஒதுக்கி வச்சிடும். உங்களுக்காகவும், எனக்காகவும், உங்க அத்தை, அந்த இகழ்ச்சியையும் இன்முகத்தோட ஏற்றிருக்கா. உங்க விஷயத்துல ஒரு நல்ல மாமாவா நடந்துக்கிட்ட நா, உங்க அத்தை விஷயத்துல, ஒரு நல்ல புருஷனா நடந்துக்கவே இல்லம்மா…
“”தவழுறப் பிராயத்துலேர்ந்தே, என்னைச் சுற்றிச் சுற்றி வந்து, “மாமா … மாமா …’ன்னு உங்களோட மழலையால, என் மனசை மயக்கிக் கட்டிப் போட்டுட்ட உங்க ரெண்டு பேரையும் தாண்டி, “அப்பா’ன்னு அழைக்கக் கூடிய இன்னொரு பிள்ளையை என்னாலக் கனவுலேயும் நெனைச்சிப் பார்க்கவே முடியல. தங்கச்சி புள்ளைங்களான உங்க மேல எனக்கிருக்கிற பாசம் அப்படி…
“”இதனால, உங்க அத்தைக்குத் தாய்மை பாக்கியம் குடுக்காமத் தட்டிக் கழிச்சேன். எந்தப் பெண்ணுமே மன்னிக்காத இந்த துரோகத்தை, உங்க அத்தை பெருந்தன்மையோட மன்னிச்சா. என்னோட மன உணர்வைப் புரிஞ்சிக்கிட்டு, தாய்மை ஆசையைத் தனக்குள்ளேயே புதைச்சிக்கிட்டு, எனக்காக, உங்களை ஆளாக்கணும்ங்கிற என்னோட லட்சியத்துக்காக வாழ ஆரம்பிச்சா. உங்கத்தைக்குக் கொழந்தை பெறக்கலைங்கிறது தான் உலகம் அறிஞ்ச விஷயம். ஆனா, தாய்மையடையக் கூடியத் தகுதியிருந்தும், உங்களுக்காக மலட்டுப் பட்டத்தை அவள் மனமுவந்து ஏத்துக்கிட்டாங்கிறது மறைக்கப்பட்ட நிஜம்.
“”இப்பச் சொல்லும்மா… யாரோடத் தியாகம் அதிகம்? யாருக்கு நீங்க விழா நடத்திக் கவுரவிக்கணும்?” மாமா அபரிமித உணர்ச்சியோடு வினவினார்.
இத்தனைக் காலமும் அறியாதிருந்த அத்தையின் பெரும் தியாகத்தை, அறிந்ததால் ஏற்பட்ட அதிர்வில், அப்படியே உறைந்து போய் அமர்ந்திருந்த இந்துவின் அதரங்கள், அனிச்சையாய் அசைந்து உச்சரித்தன…
“சரஸ்வதி அத்தே…’

– கண்ணகுமார விஸ்வரூபன் (அக்டோபர் 2012)

இயற்பெயர் : ஜி.ஆறுமுகப் பெருமாள்
வயது : 51
கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு
தொழில் : சிறு தொழில்
இதுவரை, 150க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது சிறுகதை, பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளது. இதுவரை, மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. தினமலர் – வாரமலர், டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் பரிசு பெற வேண்டும் என்ற இவரது நீண்ட நாள் கனவு, இப்போது நிறைவேறியதில், மனம் கொள்ளா மகிழ்ச்சி என்கிறார்.
***

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *