கடந்த மூன்று ஆண்டுகளாக, கந்தசாமியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த நடராஜன் டிரான்ஸ்பர் காரணமாக வீட்டை காலி செய்து விட்டார்.
டு-லெட் போர்டை தூசி தட்டி மாட்டினார் கந்தசாமி. சிலமணி நேரங்களில் இரண்டு பேர் வீட்டைக் கேட்டு வந்து விட்டனர்.
முதலில் வந்தது கணவன் மனைவி இரண்டே பேர்.
ஐ.டி.தொழிலில் பணிபுகிறார்கள். அடுத்து வந்தது அரசுப் பேருந்தில் கண்டக்டர். ஒரே மகன் கல்லூரியில் சேர்க்கப் போகிறார்கள்.
கண்டக்டருக்கு வீட்டை வாடகைக்கு விட்டு விட்டாள் கந்தசாமியின் மனைவி .’முதலில் கேட்டவங்களுக்கு விட்டிருக்கலாமே…’ என்றார் கந்தசாமி.
”அவங்களுக்கு விட்டா என்ன புண்ணியம்…கண்டக்டருக்கு ஒரு பையன் இருக்கான். பால் வாங்கிட்டு வா…பேப்பர் வாங்கிட்டு வா…காய்கறி வாங்கிட்டு வா…உடம்பு
சரியில்லைன்னா வண்டியில ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போ” அப்படின்னு அவனை ஏவலாம்…அதான்…”
”அட ஆமாம்” என்றார் கந்தசாமி
– சேது சுந்தரம் (ஏப்ரல் 2012)