விட்டு விடுதலையாகி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 12,002 
 

“குப்பெ வந்துட்டான். குப்பெ வந்துட்டான்”னு எல்லாரும் ரொம்ப அருவசமாச் சொன்னாங்க. குப்பெயப் பாக்குரதுக்கும் ரொம்ப அருவசமாத்தான் இருந்துச்சு. அவனுக்கென்ன பேரா இல்ல? எல்லாப் பெயமக்களும் குப்பெ வந்துட்டான் குப்பெ வந்துட்டான்”னு சொல்லிக்கிட்டுத் திரியிறாளுகன்னு அவுகம்மெ தெருவுல கத்திக்கிட்டுத் திருஞ்சா.“அவம்பேரு யாருக்குத் தெரியும்? என்னைக்காவது பேருச் சொல்லிக் கூப்புட்டுருந்தா நமக்குத் தெரியும். அவனோட அம்மையும் அய்யனுமே அவன ஒரு நாளும் பேருச் சொல்லிக் கூப்புட்டு யாரும் கேட்டதில்ல. இப்ப என்னமோ புதுசாப் பேரு சொல்லிக் கூப்புடச் சொல்றா.” மாரியம்மா சடவாச் சொன்னா.“அதான பாதகத்தியா… அந்தப் பெயலும் இப்ப இருவது வயசு எளந்தாரியா ஆயிட்டான். அவம்பேரு ஒத்த ஆளுக்குத் தெரியல. அவுகம்மெ என்னமோ காணாததக் கண்டுக்கிட்ட கொள்ளு கணக்கா பீத்திக்கிட்டுத் திரிராள்ள… அவாகிட்டயே அவம்பேரக் கேளுங்கடி.” சாந்தாயிப் பாட்டி சொல்லவும் அவுகம்மெ அனந்தம்மாட்டேயே அவெம் பேரக் கேட்டாக.

“நல்லா இருக்குடி ஒங்க நாயம்… என்னமோ அசலூர்க்காரிக கணக்காவுல வந்து பேரக்கேக்கிக. ரொம்ப ராங்கிக்காரிகதான்… அவம்பேரு எளையராசான்னு ஒங்களுக்குத் தெரியாதமாதிரி பணுக்குறீகளே என்ன…, அனந்தம்மா சொன்னப் பெறகுதான் காட்டூர்ச் சனங்களுக்குப் பெயோட நெசப்பேரு எளையராசுன்னு தெரிய வந்துச்சு.அனந்தம்மாளுக்கு மொத்தம் நாலு பிள்ளைக. மூனு பொண்ணு, ஒரே பையன். அதுனால எளையராசவ ரொம்பச் செல்லமாத்தான் வளத்தா. இவந்தாங் கடேசிப் பிள்ள. இவனப் படிக்க வைக்கனும்னு உள்ளுருல இருந்த பள்ளிக்கொடத்துல சேத்து உட்டாக. ஆனா இவனுக்குப் பள்ளிக்கொடம் புடிக்கல. பிள்ளைக்குப் பிடிக்காத எடத்துல அவன உடக்கூடாதுன்னு அனந்தம்மா அடுச்சுச் சொல்லவும் அவுகய்யன் மாரிமுத்து மறுபேச்சு இல்லாம எளையராசவெ வீட்டுலயே வச்சுக்கிட்டான்.
சின்னதுலருந்தே எளையராசா ஒரு வடியாவே திருஞ்சான். வேளாவேளைக்குச் சாப்புடுரதும், தெருப்பெயல்களோட வெளாடுரதுந்தான் அவனோட வேல. இப்ப இருவது வயசு எளந்தாரியனைப் பெறகும் சின்னப் பிள்ளைக கூடத்தான் சேந்துக்குட்டுத் திரிரான். காலு, கையி, மூஞ்சி மொகறையெல்லாம் வங்குவங்கா இருக்கும். நல்ல மொகவாக்கான பெயதான். இருந்தாலும் மண்ட முடியெல்லாம் செம்பட்ட பருஞ்சுபோயி, புருவத்துல வள்ளுசா முடி இல்லாமெ பாக்குரதுக்கு ஒரு சைசா இருப்பான். பூன மீச கெணக்கா எத்தலுங் குத்தலுமா நாலஞ்சு மசுரு ஒதட்டுக்கு மேல குத்திக்கிட்டு நிக்கும். அவுகம்மெயக்கூட எல்லாரும் குப்பெக்கோழின்னுதான் சொல்லுவாக. அவா காதுபடச் சொன்னா, சொன்னா, சொன்னவுகள கிழுச்சுப் பத்திருவா கிழுச்சு.
அவுகய்யனும் அவுகம்மையும் குப்பெயிட்ட எம்புட்டோ சொல்லிப்பாத்துட்டாக.

“நாலு காசு சம்பாருச்சாத்தாண்டா ஒரு பொண்ணுகிண்ணு பாத்துக் கலியாணங்காச்சின்னு முடிக்கலாம் சும்மாச் சுத்திக்கிட்டுத் திரிர வெறும்பெயலுக்கு ஒருத்தரும் பொண்ணு குடுக்க மாட்டாகடா.” ஆளப்போல சனத்தப்போல காடுகரைகளுக்கு வேலவெட்டிக்குப் போகனும்” நல்லாத் துணிமணி எடுத்துக்கெட்டனும் குளுச்சுப் பெறக்கிச் சுத்தமா இருப்போமுன்னு இத்தினிக்கூட எண்ணமில்லாத பெயலாவுல இருக்கெ… இப்பிடி இருந்தீன்னா ஒரு சிறுக்கிக்கூட ஒனிய ஏறுட்டுப் பாக்கமாட்டா. கலியாணம் முடிக்கிற வயசாகிப் போச்சு இன்னங் காத்துட்டுச் சம்பாத்தியம் இல்ல இம்புட்டு வயசாகியும் இன்னமும் வேல பழகாமெ இருந்தா எங்க கண்ணுக்குப் பெறகு எப்பிடித்தான் பொழைக்கப் போறீயா…. தெரியலயே.”

“நீயி இப்பிடியே இருந்து நக்குன. இப்பிடியே இருந்தா… சோறு எப்பிடிக்கூடி வரும்? ஏதோ எங்க கண்ணுள்ளவர கூழோ கஞ்சியோ ஊத்துவோம்னு வையி. எங்க கண்ணுக்குப் பெறகு என்ன செய்வெ?
எங்கக்காமாருக ஊத்துவாளுகன்னு திக்கிச் திக்கிச் சொல்லுவான். அவெம் பேசுரது அவுக வீட்டாளுகளுக்கு மட்டுந்தான் நல்லாப் புரியும். மத்தாளுகளுக்கு அவ்வளவாப் புரியாது. “அக்காமாருக கஞ்சி ஊத்துவாளுகன்னு நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு அலைய வேண்டியதுதான். அக்காமாருக ஊத்துனாலும் மாமாங்காரனுக சம்மதிக்கனும்ல. ஒரு எழவும் புரியமாட்டேங்கி தின்னுபோட்டு சும்மா ஊரச்சுத்திக்கி;ட்டே இருக்கனும்ங்க. அப்பிடி இருந்துட்டாக்கூடத் தேவலயே… ஊருக்குப் போயிச் சினிமாப் பாக்குதுக்கு வேறைல துட்டுக்கேட்டு நச்சரிக்க… ஒத்தப் படம் பாக்கி இல்லாமெ வார படம் பூராம் பாரக்கனும்ங்க…. அந்தப் படத்துகள்ள அப்பிடி என்னதான் இருக்கோ தெரியலையே…, அனந்தம்மா அங்கலாய்ப்பா.

“போம்மா…. போ… படத்துல என்ன இருக்கா… நீயி ஒத்தப் படம் பாத்திருப்பியா? ஒனக்கு ரசினிகாந்து, விசயகாந்து, அசீத்து, விசய்யி, விக்கிரம்மு, சிம்முரன்னு, ரம்பான்னு யாரையாச்சுந் தெரியுமா? இவுகள்ளாம் எம்புட்டு சூப்பரா ஆக்டிங் குடுக்குராகன்னு தெரியும்மா…? நீயி ஒத்தப் படம் பாத்துரு… பெறகு உடவேமாட்டெ…” அனந்தம்மா அங்கலாய்ப்பா.“போடா எடுவட்ட பெயலே. ஒனக்கு ரம்பாவும் கும்பாவும் வந்துதாங் கூழு ஊத்தப்போறாக. சினிமாப் பைத்தியம் புடுச்சுப் போயிக் கெடக்கானே… இவெ எங்குட்டுக்கூடி முன்னேறுவான்? என்ன கழுதையோ பேருக்கு ஒரு பிள்ளன்னு ஒன்னயும் வச்சு கஞ்சி ஊத்திக்கிட்டு கெடக்கோம். ஒங்கய்யங்கிட்ட ஒருவாட்டிக்குப் பத்துவாட்டி சொல்லிட்டேன். அந்தய்யா பரசுராமரு என்னமோ புதுசா கலியாணமண்டவம் கெட்டுறாராம். அவருட்டப் போயிக் கேட்டா அங்னக்குள்ள என்னமோ புதுசா கலியாணமண்டவம் கெட்டுறாராம். அவருட்டப் போயிக் கேட்டா அங்னக்குள்ள கூடமாட எதுனாச்சும் ஏண்ட வேல எடுத்த வேல செய்யச் சொல்லுவாருல்ல. அவரு நெலபொலம் வச்சுக்கிட்டு இருக்கைல எல்லாம் நானும் ஒங்கய்யனும் அவருகிட்டதான் பண்ணவேல பாட்டவேல பாத்துடக்கிட்டு இருந்தோம். இப்பத்தான் பூராத்தையும் வீடு கட்டுற மனைகளாக்கி வித்துப் போட்டாரே… நீயி கைப்பிள்ளையா இருக்கையில எல்லாம் அவரு வீட்டு மாட்டுக் கொட்டாயில தொட்டி கட்டிப் போட்டுத்தானலே ஒனிய வளத்தேன். அவருதான் ஒனிய மொதல்ல குப்பென்னு பேரு வச்சு கூப்புட ஆரம்புச்சாரு. அது அப்பிடியே நின்னு போச்சு. அவருட்ட போயிக் கேட்டா கண்டிப்பா ஒதவி செய்வாருடா.”

“அவருட்ட மனுசன் வேல செய்வானா? மாட்ட வேல வாங்குறதுமாதிரி சும்மா வேலவாங்குவாரு. ஆனா ஒத்தப் பைசா தரமாட்டாரு. அவரு ஒரு மனுசம்னு அவருட்டப் போயி வேல கேக்கச் சொல்ற. அவராலதான் எல்லாரும் எனிய குப்பெ, குப்பெனு கூப்புடுறாக. இன்னொருத்தருக்குக் கீழ வேல செய்றதெல்லாம் எனக்குப் புடிக்காதும்மா. நானா சொந்தமா ஒரு வேல செய்வேன். அந்தாளு மூஞ்சியப் பாத்தாலே எனக்குக் கொமிட்டிக்காயப் பாக்குறது கணக்கா இருக்கு.“சே… சே… அப்பிடியெல்லாம் சொல்லாதடா. அவருட்ட வேல செஞ்சுதான் ஒங்களயெல்லாம் ஆளாக்குனேன்”.“என்னத்த ஆளாக்குன? அந்தாளுதான் ஆளா ஆகியிருக்காரு. நம்மெல்லாம் நாயா ஒழச்சு நாசமானதுதான் மிச்சம்.
“அது என்னமோ நெசந்தாண்டா. நம்மள ஒத்த எழுத்து படிக்க உடாமெ கெடுத்ததே அந்தாளுதான். சின்னதுல இருந்தே அவரோட ஆடுமாடுகள மேச்சு அவருக்குச் சொத்து சேத்து வச்சுட்டு இன்னைக்கு நாம முட்டாக் கழுதைகளா அலைறோம்”

குப்பையோட அக்கா பூமால சொன்னா. அவா சொன்னது சரிதான்னு அவுகம்மெ நெனச்சுக்கிட்டு மேக்கொண்டு எதுவும் பேசல.
கொஞ்ச நாளுக்கழுச்சு குப்பெ கெணத்து வெட்டு வேலைக்குப் போனான். கடுமையான வேல செய்யாவிட்டாலும், வேல செய்ற ஆளுகளுக்கு பீடி, சிகரெட்டு, வெத்தல பாக்கு, டீ, காப்பி இப்பிடி எதுனாச்சும் கடைல போயி வாஙகியாந்து குடுக்குறதுக்காக இவனக் கூட்டிக்கிட்டுப் போவாக. சும்மா ஊரச்சுத்திக்கிட்டு இருக்குறதுக்கு இது தேவலன்னு குப்பையோட அம்மையும் போகச் சொல்லுவா.வாரக் கடைசில சம்பளம்னு கொஞ்சம் பணம் குடுப்பாக. அத வாங்கிட்டு மொதல் வேலயா தூத்துக்குடிக்கோ இல்லன்னா எட்டயபுரத்துக்கோ சினிமா பாக்கக் கௌம்பிடுவான். செலநேரத்துல கோயில்பட்டிக்கும் போயிச் சினிமாப் பாத்துட்டு வருவான். போறவெந் தனியாவும் போகமாட்டான். அவெஞ் செநேகதக்காரப் பெயல்களையும் கூட்டிக்கிட்டுப் போவான். அவெங்கூடப் போறதுகள்ளாம் சின்னப்பெயல்களாத்தான் இருப்பானுக. அவனுகளுக்கும் இவந்தான் டிக்கட் போடுவானுக. அவஞ்சம்பாரிக்கிரத அவனே காலி பண்ணிட்டு வெறுங்கையும் வீசுன கையுமா வீட்டுக்கு வருவான். அவனப் பாரக்கையில அவுகம்மைக்குப் பூழாப்பா இருக்கும். வசவுல கூடிருவா.

“இப்பிடி அங்கங்க போயி படம் பாத்துட்டு வார பெய, பெத்த தாய்க்கு ஒரு வெத்தல பாக்கு, போயல பொடிமட்டன்னு வாங்கியாராலாம்ல… இத்தினிக்கூட பந்தபாசம் இல்லாத பெய…. சரி எனக்குத்தான் ஒன்னும் வாங்கியாரலன்னாலும், அவுகக்கா மக்களுக்காச்சும் எதுனாச்சும் ஒரு சேவு முறுக்குன்னு வாங்கியாந்து குடுக்கலாம்ல… கோயில்பட்டிச் சேவும், கடலமுட்டாயும் அம்புட்டு ருசியா இருக்கும்பாங்க. சரி அத உடு. அவுகய்யனப் பெத்த கெழவி இன்னைக்கோ, நாளைக்கோன்னு இழுத்துக்கிட்டு கெடக்காள்ள… ஒருநா ஒரு பொழுது அவளுக்கு ஒரு ரொட்டியோ காப்பித் தண்ணியோ வாங்கிக் குடுக்கலாம்ல… கல் நெஞ்சுக்காரப் பெய… ஊருக்காட்டுப் பெயமக்களையெல்லாம் கூப்டுக்கிட்டுத் திரிரான்… கடக்காட்டுகள்ளயும் பெறக்கித் தின்னுக்கிரான். வீட்டுலயும் மொக்குறான்…. இவெ வகுறென்ன வகுறா இல்லவண்ணாந்தாழியோ தெரியல.என்ன வசவு வஞ்சாலும் லொங்கமாத் தின்னுட்டு ஏப்பம் போட்டுட்டுப் போவான். சாப்பாடு சாப்பிடுறதுல மன்னந்தான். வகுத்துக்கு வஞ்சன இல்லாமெச் சாப்புடுவான்.ஒரு தடவ குப்பெயோட மாமெ அவன லாரி வேலைக்குச் சேத்து உட்டான். தூத்துக்குடிலருந்து சரக்கேத்திட்டு மெட்ராஸ் போற லாரில கிளீனர் வேலைக்குப் போனான். எடவழில ராத்திரிச் சாப்பாட்டுக்கு ரோட்டோரத்து ஹோட்டலுல சாப்புடப் போனாங்க. டிரைவரு குப்பெயிட்ட புரோட்டா வாங்கிக்கச் சொல்லிட்டு அவனும் ஒக்காந்து சாப்புட்டான். நாப்பது புரோட்டா சாப்புட்டு இன்னும் புரோட்டா வேணும்னு குப்பெ கேட்டான். அவெஞ் சம்பளத்துக்கு மேல அவனுக்குச் சாப்பாட்டுக்குச் செலவழிக்க வேண்டியிருக்குன்னு அன்னைக்கே அவன வீட்டுக்குப் பத்தி உட்டுட்டா ங்க.அதுக்குப் பெறகு வேற ஒரு லெக்குலயும் லாரி வேலைக்குப் போனான்.

இவனப் பத்தி நல்லாத் தெருஞ்ச லாரி டிரைவரு, சாப்பாட்டுக்குப் போகையில அளவு சாப்பாடு இல்லாத ஹோட்டலாப் பாத்து கூப்புட்டுப் போனான்… ஹோட்டலுக்காரன் வைக்க வைக்கச் சாப்புட்டுக்கி;ட்டே இருந்தான் குப்பெ. வச்சு வச்சுப் பாத்துட்டு மெரண்டு போன ஓட்டலுக்காரன் லாரி டிரைவரைப் பாத்து கெஞ்சாத கொறையாச் சொன்னான், அண்ணே நீங்க இது வரைக்கும் சாப்புட்டதுக்கு துட்டுக்வுட குடுக்க வேண்டாம் இந்தப் பையனக் கூப்புட்டுப் போங்கண்ணே. இனிமே இந்தப் பையனோட இங்க வராதிங்கண்ணே ஒங்களுக்குப் புண்ணியமாப் போகும்.அதுலருந்து ஒருத்தரும் குப்பெயக் கூப்புடுறதில்ல. அவனும் அதப்பத்திக் கவலப்பட்டுக்கிட்டதில்ல. அங்குட்டு இங்கிட்டு அலஞ்சு திரிஞ்சுட்டு இருக்கைல பரசுராமர் ஐயா அவன ஒருநாளு பஸ்டாண்டுல பாத்துட்டு கேட்டாரு.“என்னடா குப்பெ, எங்குட்டோ லாரி வேலைக்குப் போறதா ஒங்கய்யஞ் சொன்னான் நீயி இங்க சுத்திக்கிட்டுத் திரிர? “ரெண்டு லெக்குல போனேன், எனக்குச் சாப்பாடு வாங்கிப் போட்டு கட்டுபடி ஆகலன்னு எனிய நிப்பாட்டிப் போட்டாக. நல்லாச் சாப்புட்டாத்தான நல்லா வேல செய்ய முடியும். அதெங்க தெரிது இவனுங்களுக்கு! இப்ப வேற வேல தேடிக்கிட்டு இருக்கேன்.“ஒனக்கென்னடா வேல தெரியும்? அவெவெ பெரிய பெரிய படிப்பெல்லாம் படுச்சுப்போட்டு வேல இல்லாமெ இருக்கான். இவெ என்னமோ வேல தேடுறானாம்.

ஒங்கய்யாவுக்கும் ஒங்கம்மைக்குந்தான் வயசாகிப் போச்சு. நீயி சும்மா திரிரதுக்கு வந்து இந்த மாடு கன்னுகளையாவது மேச்சுடக்குட்டு இருக்கலாம்ல? ஒங்கய்யங்கிட்ட அன்னைக்கே சொல்லி உட்டேன். ஓங்கிட்ட சொல்லலையாடா? “சொன்னாக. ஆனா நானு வாரமாதிரி இல்ல. நானு வெளி ஊருல போயி வேல செய்யப் போறேன்”.
“அப்பிடி என்னடா வெளியூரு வேல? எங்க அமெரிக்காவுக்குப் போறீயாக்கும்? நக்கலா கேட்டாரு.“அதென்னடா தீவு வேல? எந்தப் பெய ஒனியக்கூப்புட்டான்? நீங்கள்ளாம் வெளியூரு போனா உருப்பட்டாப்லதான். வந்து மாட்டமேச்சுட்டு ஊத்துற கஞ்சியக் குடுச்சுட்டு கெடப்பானா… வெளியூருக்குப் போறானாம். குப்பக்கோழிப்பெய” நக்கலாச் சொல்லிட்டுப் போயிட்டாரு.இவரு இம்புட்டுச் சொன்னமட்டுக்கும் தீவு வேலைக்குப் போயே தீரனும்னு குப்பெ மனசுக்குள்ள தீர்மானம் செஞ்சுட்டான். கொஞ்ச நாளைக்கு முன்னால தூத்துக்குடில சினிமா பாத்துட்டு வரும்போது பஸ்சுல பாத்த பக்கத்து ஊருப் பெய சக்திவேல் சொன்னத நெனச்சுப் பாத்தான். தீவு வேலைக்குப் போயிட்டு இப்ப லீவுக்கு வந்திருக்கிறதாச் சொன்னான். அவந்தான் குப்பையையும் தீவு வேலைக்குக் கூப்புட்டான். பஸ்சுலயே அவங்கிட்ட எல்லா வௌரத்தையும் கேட்டு வச்சுக்கிட்டான்.
“தீவு வேலன்னா என்ன வேல சக்திவேலு?

“லட்சத்தீவுன்னு ஒரு தீவு இருக்குடா. இங்கருந்து கப்பலுல பெரயாணம் செஞ்சு போகனும். போயி ஒரு பத்து மாசம் இருந்து வேல செஞ்சம்னு வையி, நல்லா கைநெறய்யா சம்பாரிச்சுட்டு வரலாம். வாரீயா? “நெசம்மாத்தான சொல்ற? எனக்கு இங்ன நம்ம கோயில்பட்டி, எட்டாயவரம், தூத்துக்குடி, பந்தல்குடி, அருப்புக்கோட்டன்னா தெரியும். லெச்சத்தீவுன்னு இதுவரையில கேள்விப்படாத பேராவுல இருக்கு. நாம்போயி அங்க என்ன வேல செய்றது? மொதக்காரியம் கப்பலுல போறதுக்குப் பணத்துக்கு எங்க போவேன்?

“அதப்பத்தியெல்லாம் நீ எதுக்குடா கவலப்பட்டுக்கிற? நீயி வாரேன்னு மட்டும் சொல்லு, மத்தத எல்லாம் நாம்பாத்துக்குறேன். கப்பலுக்கு டிக்கெட்டுக்கெல்லாம் ஒரு ஏஐண்டு இருக்காரு. அவரு டிக்கெட்டு வாங்கி அனுப்பி வைப்பாரு. நீயி சம்பாருச்சு அந்தக் கடன அடைச்சுரலாம். சரிதானா? ஒங்கய்யா, ஒங்கம்மையிட்ட சொல்லிட்டு அவுக சரின்னு சொன்னா வந்து எனியப் பாரு. எங்க ஊருலருந்து நாங்க பத்துப் பேரு ஏற்கனவே போயி வேல செஞ்சுட்டு இப்ப லீவுக்கு வந்துருக்கோம். இன்னும் பத்து நாள் கழிச்சு மறுபடியும் போறோம். நீயி வாரதா இருந்தா எங்ககூடயே வந்துரலாம்.“சரி என்ன வேலன்னு சொல்லமாட்டேங்கீகள்ள… எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுல்ல. நானு என்ன வேல செய்வேன்?
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்டா. நாங்கள்ளாம் எல்லாம் ரொம்பாப் படுச்சுட்டா போறோம்? கையெழுத்து மட்டும் போடத் தெரியும். அதுனால பயமில்லாமப் போகலாம்டா.எனக்கு அதுகூடத் தெரியாதேன்னு இழுத்தான் குப்பெ.“கையெழுத்து என்னடா பெரிய கையெழுத்து?

ஒங்க ஊர்ல எவனாவது படுச்ச பெயலுககிட்ட கேட்டீனா ஓம்பேர எழுதச் சொல்லிக்குடுத்துட்டுப் போறானுங்க. ஒனக்கு வரச் சம்மதமான்னு மட்டும் சொல்லுடா.“அந்த ஊருக்கு பஸ் எதுவும் போகாதா? கப்பலுதான் போகுமாக்கும்? “அந்த ஊரு கடலுக்குள்ள இருக்குடா. சுத்தித் தண்ணிதான். அதுனால கப்பலு இல்லன்னா ஏரோப்பிளேனுல போகலாம்.
“சரி அப்ப நானு வாரேன். அப்பிடி போனாலாச்சும் கடலு, கப்பலு எல்லாம் பாத்துட்டு வரலாம் அந்த ஏஐன்டு எனியச்சேத்துக்குவாரா?.
“சேத்துக்குவாரா? இன்னம் நூறு பேரு வந்தாலும் அவரு கூட்டுக்கிட்டுப் போக ரெடியா இருக்காரு. எம்புட்டுப் பேரு வந்தாலும் அம்புட்டுப் பேத்துக்கும் அங்க வேல இருக்குது. நீயி வந்து ஒருவாட்டிப் பாரேன். ஒனக்கே தெரியும்.வீட்டுல போயி தீவு வேலைக்குப் போற விசயத்தச் சொன்னான். அம்புட்டுத்தான் அவுகம்மெ அழுகைல கூடிட்டா. என்னமோ இங்னக்குள்ள நம்ம வகுத்துப் பாட்டுக்குத்தக்கன ஒரு வேல செஞ்சம்னு இல்லாமெ இப்பிடி எங்குட்டோ கங்காணா திக்குக்கு கப்பல்ல போறம்ங்காணேன்னு ஒப்பாரி வச்சா.

குப்பையோட அய்யாவும், மாமாவும் பக்கத்து ஊருக்குப் போயி சக்திவேலப் பாத்து பேசிட்டு வந்து சொல்லவும், அவனுகளோட போறதுக்கு அரமனசாச் சம்மதுச்சா.அப்பிடிப் போன வருசம் மார்கழி மாசம் ஊரவிட்டு லச்சத்தீவுக்கு வேலைக்குப் போனவந்தான். இந்த மார்கழிக்கு ஊருக்கு வந்துருக்கான். அதான் ஊரெல்லாம் ஒரெ குப்பெயப் பத்திய பேச்சாவே இருந்துச்சு. அனந்தம்மாளுக்கும் மாரிமுத்துக்கும் சந்தோசமா இருந்துச்சு. அதுலயும் குப்பெ வந்துருந்த தோரணயப் பாத்து அவுக ரெண்டு பேரும் பூருச்சுப் போனாக. முன்னால அவனக் குப்பெனு சொன்னவுகள்ளாம் இப்பெ எளயராசான்னு சொன்னாக. அப்பிடிச் சொல்லலைன்னா அவுகம்மெ அவுகட்ட சண்டைக்குப் போனா.

எளயராசு ஊதாக் கலரு பேண்டும் செவப்புக் கலரு டீ சர்ட்டும் போட்டு பெரிய சூட்கேஸோட வந்து எறங்குனான். டீசர்ட்டுக்கு முன்னால நெஞ்சாக்கொலைல படம்படம்மா போட்டுருந்துச்சு. சொந்தக்காரங்க அம்புட்டுப் பேத்துக்கும் என்னென்னமோ வாங்கியாந்திருந்தான். ஒரு நாளைக்கு ரெண்டு மூனு தடவெ துணிமணி மாத்துனான். தலைக்கு வாசன எண்ணெ தேச்சு நல்லா தல சீவுனான். வெதத்துக்கு ஒரு டி சர்ட்டு போட்டு காட்டூரையே ஒரு கலக்கு கலக்குனான்.அவ ஊருக்கு வந்த மறுநாளு நல்ல மழ. ஒடனே அவெ வாங்கிட்டு வந்துருந்த புது மழக்கொட்ட எடுத்து மாட்டிக்கிட்டு அவம்பின்னால பத்துப் பொடிப் பெயல்க அலஞ்சானுங்க. அவனப் பாத்த சனம் பூராம் வச்ச கண்ணு வாங்காமெ அவனயே பாத்துக்கிட்டு இருந்தாக. அவுகய்யனும் அம்மையும் சந்தோசத்துல திக்குமுக்காடிப் போனாக. முன்னால அவங்கூடச் சுத்திக்கிட்டுத் திரிஞ்ச சின்னப் பெயல்கள்ளாம் மறுபடி அவெங்கூட சேந்துக்கிட்டானுக. ஆனா இப்ப முன்ன மாதிரி குப்பெனு கூப்டல. ரொம்ப மரியாதையா சித்தப்பா, மாமா, அண்ணம்னு ஒறவுமொற வச்சுக் கூப்புட்டாக. அவனோட பழைய பிரண்டுகள்ளாம் அவெம் பின்னாழ பவனியா வர இவெம் முன்னாடி மழக்கோட்டோட வந்ததப் பாத்த சனம் பூராம் மூக்கு மேல வெரல வச்சாங்க. மழ வெரிச்சப் பெறகும் குப்பெ மழக்கோட்ட கழத்தாமலேயெ அலஞ்சான்.

ஊர்ல இருந்து வந்த குப்பெயோட மாமனும் குப்பெ இருந்த தோரணயப் பாத்து அசந்துட்டாரு. தன்னோட மகள குப்பைக்கே கட்ழக் குடுத்துரலாம்னும் முடிவு செஞ்சுட்டாரு. குப்பெ தீவுல என்ன வேல செஞ்சான், எம்புட்டுச் சம்பாருச்சான், எம்புட்டுக் கையில கொண்டு வந்தான் இப்பிடிக் கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டே இருந்தாரு. குப்பெயும் உற்சாகமாப் பதில் சொன்னான்.“தீவுல இருந்து பாக்காத சினிமாயில்ல. அம்புட்டுப் புதுப்படமும் பாத்துட்டேன். லச்சத்தீவுன்னா ஒரு தீவு இல்ல, எப்பிடியும் பத்து அம்பது தீவு இருக்கும். எங்க தீவுக்குப் பக்கத்துத் தீவுக்கு அடிக்கடி வெளிநாட்டுல இருந்து வெள்ளக்காரங்க டூரிஸ்டுக்கு வருவாங்க. அந்தத் தீவு அம்புட்டு அழகா இருக்கும்| குப்பெ சொல்லச் சொல்ல அவங்கூட இருந்த பொடிப் பெயல்கள்ளாம் தெறந்த வாய மூடாமெக் கேட்டானுக.

“எப்பிடிச் சித்தப்பா இங்கருந்து போனீக? “கப்பல்ல போனோம். இங்கருந்து தூத்துக்குடி போயி, அங்கருந்து கொச்சியோ, எர்ணாக்கொளம்னோ ஒரு ஊருக்குப் போயி, அங்கருந்து கப்பல்ல போனோம். கப்பல்ல போகையில ரொம்பப் பேரு வாந்தி எடுத்துட்டாக. நானுந்தான். எங்குட்டுப் பார்த்தாலும் தண்ணிதான். நம்மூருக் கம்மாயில கூட அம்புட்டுத் தண்ணி இருக்காதுடா. ஆனா பூராம் உப்புத்தண்ணிதான். நம்ம சோத்துக்குப் போடுற உப்புக்கூட கடல் தண்ணிலருந்துதான் எடுக்காளாம்டா.
“அது எங்களுக்குத் தெரியுமே. எங்க அறிவியல் பாடத்துல வந்துருக்கு.

“லச்சத்தீவுக்கு ஏரோப்பிளேன்னுலகூட போகலாம். நல்லாச் சம்பாருச்சு நெறய்யாத் துட்டு சேத்தப் பெறகு ஒரு தடவயாச்சும் ஏரோப்பிளேன்னுல ஏறிப் போயிட்டு வரனும்டா.“வேல எல்லாம் எப்படி? |மாமா கேட்டாரு.
“வேல எல்லாம் ஈசிதான். கப்பல்ல வார சரக்குகள எறக்கி வண்டிகள்ள ஏத்தனும் அம்புட்டுதான். வேலைக்குப் போனாச் சம்பளம் இல்லன்னா இல்ல. நம்ம செய்ற வேலையைப் பொறுத்துத்தான் சம்பளம். ஆனா ஒரு நாளைக்கு எப்பிடிப் பார்த்தாலும் எரநூறு ரூவாய்க்கு மேல சம்பாருச்சுப் போடலாம். வேல செய்யும்போது பூராம் புதுப்புதுப் பாட்டாப் போடுவாக. கேட்டுக்கிட்டே வேல செய்வோம். மாசம் ஒருதடவ எங்கம்மைக்கிப் போன் போட்டு பேசிப் போடுவேன். அவரு கடக்கார மொதலாளிக்கு போன் போட்டு உட்டா அவரு எங்கம்மையக் கூப்புட்டுருவாரு. மொதவாட்டி பேசும்போது வௌரந்தெரியாமெ எம்பாட்டுக்கு ரொம்பா நேரம் பேசிட்டேன். பில்லு முன்னூறு ரூவாய்க்கு மேல் அள்ளிக்கிட்டப் போயிருச்சு.“கடிதம் போட வேண்டியதுதான வீண் செலவுதான?
“எனக்குத்தான் எழுதத் தெரியாதெ. அப்பிடியே நானு எழுதுனாலும் இவளுகளுக்குப் படிக்கத் தெரியாதே. அதுனால போனுதான்.
“திரும்பி லீவு முடுஞ்சு எப்ப போறீக? “இனி திரும்பிப் போறமாதிரி இல்ல. கொண்டு வந்துருக்குற ரூவாய வச்சு இங்னக்குள்ளயே எதுனாச்சும் தொழிலு பாக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

“சாமாஞ்சட்டுக நெறய்யாக் கொண்டாந்தீகளாம்.“எனக்கு நாலஞ்சு டி சர்ட்டு, இந்த ரெஸ்டுவாச்சு, மழக்கோட்டு, ஒரு சின்ன ரேடியாப்பெட்டி எல்லாம் அங்க தீவுல வாங்குனேன். இன்னைக்குத்தான் இந்த மழக்கோட்டப் போடுறேன். நல்லா இருக்கா?“ம்… ஆளு அடையாளமே தெரியலயே… சினிமாக்காரங் கணக்கவுல இருக்க. எனக்கொன்னு வாங்கியாந்திருக்கலாம்ல. குப்பெயோட பாட்டி சொன்னா.“ஒனக்கெதுக்கு கெழவி மழக்கோட்டு? எந்த ஆபீசுக்குப் போற?கேட்டுட்டு சிருச்சான்.“எதுக்குல சிரிக்க? வயலுல நாத்து நடயில மழபேஞ்சாபோட்டுக்குட்டு நடலாம்ல.“அதுக்கு ஒனக்கு மழக்கோட்டு கேக்குது? கொடலுத் தாளப் போட்டுட்டுப் போயி நட்டா ஆகாதோ? குப்பெ கேட்டுக்குட்டு இருக்கும்போதே அவுகம்மே வந்து அவனச் சாப்புடக் கூப்புட்டா.“எய்யா எளயராசா வா, வந்து சாப்புட்டுட்டு வந்துருய்யா. மணி மூனு ஆகப் போகுது. ஒம்பாட்டுக்கு வநது ஒக்காந்துக்குட்டே. அங்க ஒங்க சித்தப்பக்கார வந்து ஒனியப் பாத்துட்டுப் போகனும்னு ஒக்காந்திருக்கான். வாய்யா… வா சாமி… கோழி அடுச்சுக் கொழம்பு வச்சிருக்கேன்யா. ஒனக்குன்னே உட்டு வச்ச கோழி.

என்னமோ அந்த மாரியாத்தா புண்ணியத்துல போன புள்ள பத்துரமாத் திரும்பி வந்துருக்கு. வார வெள்ளிக்கு கோயிலுக்குப் போயி கெடா வெட்டனும்னு ஒங்கய்யா ஆட்டுக்குட்டி ஒன்னு நேந்து உட்டுருக்கான். போயி ஒனக்கு மொட்ட போடனும்.“மொட்ட போடனுமா? அதெல்லாம் போடமுடியாது போ. வேணும்னா அய்யனப் போடச் சொல்லுமா.“நீயி தீவுக்குப் போயிட்டு நல்லபடியா வந்து சேந்தா ஆத்தாளுக்கு முடி எறக்குறதாநேந்துக்கிட்டம்ட சரி எந்துருச்சு வாடா, பிள்ளகுட்டிகளுக்குள்ள ஒனக்கு வெஞ்சனமில்லாமப் போகப்போகுது.குப்ப எந்துருச்சுப் போனான்.

சாப்புடும்போதே அவுகம்மைட்ட சொன்னான்.“ஏம்மா, நம்ம பஸ்டாண்டுல அந்த நாடாரு கட சும்மாதான இருக்கு?“எந்த நாடாரு கடை? நம்ம சம்முகநாடாரு கடையவா கேக்க?“ஆமாமா.அவருகடதான்.ரோட்ரோரத்துல ஒரு பெட்டிக் கட வச்சிருந்தார்ல? அதுல வேறு யாராச்சும் கட வச்சுட்டாங்களா இல்ல சும்மாதான் இருக்கான்னு கேட்டேன்.

“யாரும் வைக்கல அவரு விட்டுட்டுப் போனதுதுல இருந்து அந்தப் பெட்டிக்கட சும்மா மூடியேதான் கெடக்குது. அவரு ஒடம்புக்குச் சேட்டமில்லாமப் போகவும் கடயக் காலிபண்ணிட்டு கோயிலுப்பட்டிக்குப் போயிட்டாருல.சம்முக நாடாரப் போயிப் பாத்து அந்தப் பெட்டிக்கடய வெலைக்கு வாங்கி ரோட்டோரத்துல ஒரு கட போட்டான் குப்பெ. கடையில பீடி, சிகரெட்டு, வெத்தல, பாக்கு, சோடா, கலரு, சர்பத்து, சோப்பு, ஷாம்பு, பாக்கெட்டுக, மிட்டாய், முறுக்கு, இப்பிடி பலதரப்பட்ட சாமானுகளா வாங்கிப் போட்டு விற்பன செஞ்சான். கட மொகப்புல பெரிய வாழப்பழத் தாரு ஒன்னு வாங்கித் தொங்கவிட்டுருந்தான். வியாபாரமும் நல்லா சூடுபுடிக்கத் தொடங்குச்சு. இப்ப எல்லாரும் குப்பய ஒரு எடுத்துக்காட்டாச் சொல்லி பெருமப்பட்டுக்கிட்டாக. கடதெறந்து ஒரு ரெண்டு மூனு நாளாகியிருக்கும்.

வழக்கம்போல காலைல ஏழெட்டு மணிக்கெல்லாம் கடையத் தெறந்துட்டு கடைக்குள்ள போட்டுருந்த நாற்காலில குப்ப உக்காந்திருந்தான். அந்நியாரம் பரசுராமரு ஐயா அங்க வந்தாரு.“என்னடா குப்ப, எல்லாங் கேள்விப்பட்டேன். வெளியூரெல்லாம் போயிட்டு வந்துருக்கெ. வந்து ஐயாவ எட்டிக்கூடப் பாக்கல! நீதான் அப்பிடின்னா ஒன்னோட ஆத்தாளும், அப்பனும்கூட வந்து ஒரு வார்த்த நீ போனதப் பத்தியோ, திரும்பி வந்ததப் பத்தியோ மூச்சு உடல. சரி பெட்டிக்கட தெறந்தியே… என்னமாதிரி பெரிய மனுசங்களக் கூப்புட்டு தெறக்கச் சொல்லி இருந்தா, தெறந்து வச்சு அஞ்சோ, பத்தோ குடுத்துருப்பம்ல. பொழக்கத்தெரியாத பெயல இருக்கியே…. சரி அந்த நாற்காலிய எடுத்த இப்பிடி வெளிய போடுடா. அருப்புக்கோட்ட வண்டி வர இன்னும் டயமிருக்கு. ரொம்பா நேரம் நிக்க முடியல.

“கடைல ஒரே ஒரு நாற்காலிதான் இருக்கு. அதுல நானு ஒக்காந்துருக்கம்ல. அதத் தூக்கி ஒங்களுக்குப் போட்டுட்டா நானு என்னத்துல ஒக்காருறது? சொல்லிட்டு வியாபாரத்தக் கவனிச்சான். சிகரெட்டு வாங்க வந்தவருக்கு எடுத்தக்குடுத்துடடு திரும்பும்போது கடைக்கு முன்னால கட்டித் தொங்க உட்ருந்த வாழத்தாருல இருந்து பரசுராமரு ரெண்டு பழத்தப் பிய்க்கிறதப் பாத்தான்.“பழம் எங்கடா வாங்குன? நல்லாத் தெருச்ச பழமா வாங்கியாந்திருக்கியே. தெனமும் காலைல காலைல ரெண்டு ரஸ்தாளி தின்னா ஒடம்புக்கு நல்லது.“ஒடம்புக்கு நல்லதுதான். அதான் எட்டயபுரத்துலருந்து வாங்கியாந்தேன். ரெண்டு பழத்துக்கு நாலு ரூவா ஆச்சு. அஞ்சா குடுத்தீங்கன்னா ஒரு ரூவா தாரேன் குப்ப சொன்னான்.
“ஏங்கிட்ட வேல செஞ்சு, கூலி வாங்கித் தின்ன காலமெல்லாம் மறந்தா போச்சு? ஏ முன்னாலயே சவுடாலா நாற்காலில ஒக்காந்துக்கிட்டு, ஏங்கிட்டயே பழத்துக்கு ரூவா கேக்குறியா? எல்லாம் நேரம்டா.“நேரந்தான். அருப்புக்கோட்ட வண்டி வார நேரந்தான். சட்டுனு நாலு ரூவாய எடுங்க.
குப்ப சொன்ன தோரணயப் பாத்து பரசுராமரு அசந்து போனாரு. இந்தக் குப்பப் பெயலா இப்பிடிப் பேசுறாம்னு அவரால நம்ப முடியல. பழத்த மெதுவா உருச்சுத் தின்னாரு. தொண்ட அடைக்கிற மாதிரி இருந்துச்சு. அந்த நேரம்பாத்து அருப்புக்கோட்ட வண்டி வந்துச்சு. ஆனா அவரால ஏற முடியல.

Aug 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *