வணங்கான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 10, 2012
பார்வையிட்டோர்: 11,233 
 

கதை ஆசிரியர்: ஜெயமோகன்.

என் பெயர் வணங்கான். ஆமாம் பெயரே அதுதான், முழுப்பெயர் என்றால் கெ.வணங்கான் நாடார். இல்லை, இது என் குலச்சாமியின் பெயரெல்லாம் இல்லை. இந்த பெயர் என் குடும்பத்தில் எனக்கு முன் எவருக்கும் போடப்பட்டதில்லை. என் சாதியில், சுற்றுவட்டத்தில் எங்கும் இப்படி ஒரு பெயர் கிடையாது. இந்த பெயருள்ள இன்னொருவரை நான் சந்திததே இல்லை. ஏன், இந்தப் பெயரைக் கேள்விப்பட்ட ஒருவரைக்கூட நான் பார்த்ததில்லை.

என் அப்பாதான் இந்தப் பெயரை எனக்கு போட்டார். அந்தப் பெயரைப் போட்ட நாள் முதல் அவர் சாவதுவரை இருபத்தேழு வருடம் இந்த பெயரைப்பற்றித்தான் அவர் பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது. நான் பொறியல் படித்துவிட்டு முதலில் வேலைக்குச்சென்றது பிலாயில். அங்கே அவர்களுக்கு எல்லா பேரும் ஒன்றுதான். ஆனால் அங்கே உள்ள அத்தனை தமிழர்களும் மலையாளிகளும் இந்தபெயர் பற்றி என்னிடம் கேட்டிருப்பார்கள்.

தமிழ்நாட்டுக்கு ஓய்வுபெற்று வந்து நான்கு வருடங்களாகிறது. இப்போது நெல்லை புறநகரில் வீடுகட்டி நானும் என் மனைவியும் மகளும் குடியிருக்கிறோம். என் மகளுக்கும் மருமகனுக்கும் நான் தேவையில்லாத இடங்களில் எல்லாம் இந்தப் பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று மனக்குறை. பேசாமல் கெ.வி.நாடார் என்று சொல்லுங்கள் என்கிறார்கள். அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். நான் அதைச் சொல்வதில்லை. எங்கும் என்பெயரைச் சொல்வேன். கொஞ்சம் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து ஒருவர் கேட்டார் என்றால் என் பெயரின் கதையை நான் சொல்ல ஆரம்பிப்பேன்.

என் அப்பன் பெயர் கறுத்தான். கூட நாடார் உண்டா? என்று கேட்கிறீர்கள். உங்களுக்கு அன்றைய சாதியடுக்குகளைப்பற்றி தெரியாது. நாடாரிலேயே பல தரங்கள் உண்டு. சொந்த நிலமும், குடும்பப் பெருமையும் உடையவர்கள்தான் நாடார் என்று சாதிப்பெயர் வைத்துக்கொள்வார்கள். அவர்களுக்கு அங்கணம் வைத்த சுற்றுவீடும், முற்றமும் தோப்புகளும், வயல்களும், வைக்கோல்போர்களும், தொழுவங்களும் இருக்கும். அவர்கள் மன்னருக்கு வரிகட்டுவார்கள்.

பிறருக்கெல்லாம் சொந்தமாக ஒரு பெயர் இருப்பதேகூட ஓர் ஆடம்பரம். கறுப்பாக பிறந்ததனால் என் அப்பா கறுத்தான் ஆனார். அவரது தம்பிக்கு உதடு பெரியது ஆகவே அவர் சுண்டன். அவரது தங்கை கொஞ்சம் சிவப்பு. ஆகவே வெள்ளக்குட்டி. நாய்க்குட்டிகளுக்கு பெயர் வைப்பதுபோலத்தான். சாதியுள்ள பண்ணையார்களின் வீட்டு நாய்களைச் சொல்லவில்லை. அவற்றுக்கு நல்ல பெயர்கள் இருக்கும். தெருநாய்களைச் சொன்னேன்.

என் அப்பாவுக்கு அப்பா பெயர் ஏழான்.அவர் ஏழாவது குழந்தையாக இருக்கலாம். அவரது அம்மா ஒன்பது பிள்ளை பெற்றதில் இரண்டுதான் மிஞ்சியது, ஆம், நாய்க்குட்டிகளைப்போலவே. தாத்தாவின் தங்கை குஞ்சியை நான் சிறியவயதில் பார்த்திருக்கிறேன். குறுகிப்போன கரிய கிழவி. ஆனால் இறுகிய உடம்பு. தளர்ந்து ஒடுங்கி சுருங்கினாலும் எண்பது வயதுவரை இருந்தாள். சாவதுவரை சாணி சுமந்தும், காக்கோட்டையில் காய்கறிகளுக்குத் தண்ணீர் சுமந்தும், வாழைக்குத் தடம் வைத்தும் உழைத்தாள். சந்தைக்கு வாழைக்குலை சுமந்து சென்றிருந்தபோது நெஞ்சுவலிக்கிறது என்று கருப்பட்டிகடைத் திண்ணையில் படுத்துக் கண்மூடித் தென்றலை அனுபவிப்பவள் போன்ற முகத்துடன் செத்துப்போனாள்.

என் தாத்தா உள்ளூரில் உள்ள கரைநாயர் வீட்டில் வருஷக்கூலிக்கு வேலைசெய்தார். அவர்களுக்கு ஊரெல்லாம் வயல்களும் தோப்புகளும் இருந்தன. அதைப்பார்த்துக்கொள்ள இரண்டு காரியஸ்த நாயர்கள். தேங்காய் பறிக்கவும் தென்னையோலை முடையவும் கைப்பள்ளிகள். நெல்லுகுத்த ஆசாரிச்சிகள். நெல்விவசாய வேலைகளுக்குப் புலையர்கள். பிற வேலைகளுக்கு நாடார்கள். ஒவ்வொரு சாதி வேலைக்காரர்களுக்கும் ஒரு தலைவன். அவன் அவனுடைய கோழிமுட்டை வட்டத்திற்குள் கொல்லவும் புதைக்கவும் அதிகாரம் கொண்ட மன்னன். பிறர் அவனுடைய காலடிமண்ணுக்கும் கடையர்களாக வாழவிதிக்கப்பட்டவர்கள்.

அத்தனைபேரும் அதிகாரத்தால் கீழ்கீழாக அடுக்கப்பட்டிருந்தார்கள். அடுக்குகளுக்கு எச்சில் ஓர் அடையாளமாக இருந்தது. கூலியடிமை மீது குலமேலாள் காறித்துப்பினால் அவன் முன்னால் நிற்பதுவரை அடிமை அதைத் துடைத்துக்கொள்ளக் கூடாது. காரியஸ்தன் கோபம் கொண்டு வெற்றிலைச்சாற்றை மேலாட்கள்மேல் துப்பினால் அவர்கள் பணிவுடன் சிரிக்கவேண்டும். காரியஸ்தன் அந்த நாயர் வீட்டு உறுப்பினர் யார் வெற்றிலை வாயை குவித்தாலும் பணிவுடன் கோளாம்பியை எடுத்து முன்னால் நீட்டவேண்டும். அந்த குடும்பத்திற்கு மன்னர் குலத்தில் இருந்து யாராவது வந்தால் கையில் கோளாம்பியுடன் கரைநாயரே பின்னால் பணிந்து நடந்து செல்லவேண்டும்.

அந்தக்காலத்தில் தினசரிக்கூலி கிடையாது. வருடத்தில் இருமுறை அறுப்பு காலத்தில் நெல்தான் கொடுப்பார்கள். அதை வாங்கி வந்து உலர்த்தி பானையில் போட்டு வைத்துக்கொண்டால் இரண்டுமூன்று மாதங்களுக்கு அவ்வப்போது எடுத்து தொலித்து பொங்கி சூடுகஞ்சி குடிக்க முடியும். அதை பஞ்ச மாசமான ஆடி வரை சேர்த்து வைத்துக்கொள்வதற்கு அபாரமான மன உறுதி தேவைப்படும். மிச்சநாளெல்லாம் ஏமான் வீட்டில் பெரிய அண்டாக்களில் காய்ச்சிக்கொடுக்கப்படும் கஞ்சியும் மரச்சீனி மயக்கும் புளிக்கீரைக்குழம்பும்தான். அது மதியம் மட்டும். அந்திவேலை முடிந்து திரும்பும்போது காட்டுக்குள் நுழைந்து எதையாவது பொறுக்கிக் கொண்டுவந்து சுட்டுத் தின்பதுதான் இரவுக்கு. பெரும்பாலும் கிழங்குகள். சிலசமயம் கீரைகள். அதிருஷ்டம் இருந்தால் முயலோ, கீரியோ, பெருச்சாளியோ.

உடம்பில் வயிறுதவிர வேறு உறுப்பிருக்கிறது என்ற நினைப்பே இல்லாத வாழ்க்கை. கோபமே அடங்காத துர்தேவதை மாதிரி வயிறு பொங்கிக்கொண்டே இருக்கும். கூரைக்கு பிடித்த தீ போன்றது பசி என்று என் பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதில் கைக்குக் கிடைத்ததை எல்லாம் அள்ளி போட்டு அணைக்க வேண்டியதுதான். அது நல்லதா கெட்டதா என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. பசியை விட வேறு எதுவும் கொடியது அல்ல.

என் தாத்தா நடக்க ஆரம்பித்த வயதிலேயே வேலைக்குபோகவும் ஆரம்பித்தார். வேலைசெய்யாத நாளின் ஞாபகமே அவருக்கு இருந்ததில்லை. அடிவாங்கி வசைவாங்கி வேலைசெய்து களைத்து சோர்ந்து கண்ட இடத்தில் விழுந்து தூங்கி விடிவதற்குள் உதைவாங்கி எழுந்து மீண்டும் வேலைசெய்வதுதான் அவர் அறிந்த வாழ்க்கை. வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த சமூகக் கல்வி என்பது யார் யாருக்கு எப்படி எப்படி பணிவது என்றுதான். பணிவின் அடுக்குகள்தான் சமூகம் என்று அவருக்கு தெரிந்திருந்தது.

ஒருநாள் என் தாத்தா வேலைக்கு நடுவே காராம்புதருக்குள் ஒளிந்து அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அறுப்பு கழிந்த மாதமானதனால் பாட்டி கொஞ்சம் கஞ்சியை காய்ச்சினாள். முந்தையநாள் குடித்த மிச்சத்தை பழையதாக்கி சட்டியில் கையோடு கொண்டுவந்திருந்தாள். தாத்தாவுக்கு புளித்தசோறு மேல் அத்தனை பிரியம் இருந்தது. அவசரமாக அள்ளி வாயில் போட்டுக்கொண்டு இருந்தபோது காரியஸ்தனுடன் கரைநாயரின் பேரன் அவ்வழியாக சாஸ்தா கோயிலுக்குச் செல்வதற்காக வந்திருக்கிறான். பதினைந்து வயதானவன். அவன் கண்ணில் தாத்தா சாப்பிடுவது பட்டுவிட்டது.

அவனைப்பார்த்ததும் தாத்தா எழுந்து கைகளை மார்போடு சேர்த்துக்கொண்டு தளைபோல உடல் வளைத்து அமர்ந்து கண்களை தாழ்த்திக்கொண்டார். அவர் அருகே அந்த கஞ்சி இருந்தது. என்ன நினைத்தானோ அந்தப்பையன் காலால் கொஞ்சம் மண்ணை அள்ளி அதில் போட்டுவிட்டு ‘குடிக்கெடா’ என்றான். தாத்தா கொஞ்சம் தயங்கியதும் அப்பால் வந்து நின்ற மேலாள் பெரிய பிரம்பால் அவரை மாறிமாறி அடிக்க ஆரம்பித்தான்.

தாத்தா சாமி வந்தவர் போல அப்படியே சட்டியுடன் பழையதை எடுத்து ஒரே மிடறாக குடித்துவிட்டு குனிந்து அமர்ந்து குமட்டி உலுக்கும் உடம்பை வளைத்து மண்ணோடு ஒட்டிக்கொண்டார். அவன் மீண்டும் காலால் மண்ணை அள்ளி அவர்மேல் வீசிவிட்டு சிரித்துக்கொண்டே சென்றான். அவனைப்பார்த்து காரியஸ்தனும் மேலாளும் சிரித்தார்கள்.

தூரத்தில் என் அப்பா வயலில் நாற்று சுமந்துகொண்டிருந்தார். அவர் கண்ணில் தாத்தாவின் கூனிக்கூடிய உடம்பு ஒரு சாணிக்குவியல் போல தோன்றியது. அதிலிருந்து அவிந்த வாடையும் புழுக்களும் எழுவதுபோல பிரமை ஏற்பட்டது. அப்போது அவருக்குத் தன் தந்தைமீது தாளமுடியாத வெறுப்புதான் எழுந்தது. அவர் அங்கேயே செத்துப்போகமாட்டாரா என்று மனம் ஏங்கியது. கண்ணீர் நாற்றுச்சேறுடன் கலந்து கொட்ட அவர் திரும்பி நடந்தார்.

அன்று இரவு அவர் தன் அப்பா கேட்க அம்மாவிடம் ‘நான் போறேன்’ என்றார். ‘எங்கண்ணு கேளு உனக்க பிள்ளைக்ககிட்ட’ என்றார் தாத்தா. ‘இனி இஞ்ச எனக்கு எடமில்ல. எனக்க சோறு வெளியயாக்கும்’ என்றார் அப்பா. ‘ஆமலே உனக்கு வச்சிருக்கு சோறு. லே, நீ செய்த புண்ணியத்தினாலயாக்கும் இஞ்ச உனக்குக் கஞ்சியும், காடியும் கிட்டுதது. பட்டினி கெடந்து தெருவிலே சாவாம உள்ள சோலியப்பாத்து இங்க கெடலே’ என்று தாத்தா அவரைப் பார்க்காமலேயே பதில் சொன்னார்.

’கண்ட நாயெல்லாம் கஞ்சியிலே மண்ண வாரி போடுகத நான் குடிக்கணுமோ?’ என்று அப்பா சொன்னார். ‘லே, மகாபாவி. ஏமானையா சொல்லுதே? அன்னம் போடுத ஏமானையாலே சொல்லுதே?’ என்று வெறிகொண்டு பாய்ந்து வந்த தாத்தா கையில் கிடைத்த வாரியலால் அப்பாவை மாறி மாறி அடித்தார். ‘லே நீ மகன் இல்லலே…நண்ணி கெட்ட நாயே..நீ எனக்க மகன் இல்லலே’ என்று மூச்சிரைத்துக் கூவினார்

உடம்பெல்லாம் வாரியல்குச்சிகள் குத்தி எரிய அப்பா குடிசைக்கு வெளியே சென்று குட்டித்தெங்கின் குழிக்குள் அமர்ந்துகொண்டார். இருட்டு ஏறியபின் பாட்டி வந்து ‘போட்டு மக்கா…அவருக்க குணம் தெரியுமே…நீ வா..அம்மை உனக்கு சுட்ட கெளங்கு தாறேன்’ என்று அணைத்து உள்ளே கூட்டிச்சென்றாள். சுட்டகிழங்கு சாப்பிட்டு பசியாறி தூங்கினார்கள். ஆனால் நள்ளிரவில் எழுந்த என் அப்பா வீட்டைவிட்டு வெளியேறினார்.

ஆனால் அவரைச் சுலபமாக பிடித்துவிட்டார்கள். அவர் நட்டாலம் பெருவழியில் நுழைந்தபோது அங்கே பெரிய வைக்கோல்போர் மீது காவலுக்கு தூங்கிக்கொண்டிருந்தவன் அவரை பார்த்துவிட்டான். அதே நேரம் அவனுடைய நாயும் அவரை பார்த்துவிட்டது. அது முதலில் குரைத்துக்கொண்டே வந்து அவரை பிடித்துக்கொண்டது. அவன் பின்னால் வந்து அவரை இழுத்து இடுப்புக்கச்சையால் கட்டி இழுத்துச்சென்று எஜமானின் வீட்டு முன்னால் போட்டான்

காலையில் எழுந்து வெளியே வந்த ஏமான் பார்த்தது உடம்பெல்லாம் சிராய்ப்பும் மண்ணுமாக கிடந்த அப்பாவை. அப்பாவின் மேலாள் வரவழைக்கப்பட்டு அவனுக்கு புளியமாறால் இருபது அடி கொடுக்கப்பட்டது. தாத்தாவை இழுத்து வந்து எருக்குழியில் இடுப்பளவு புதைத்து வைத்தார்கள். அவர் கைகூப்பி ‘ஏமானே பொன்னேமானே… ஒண்ணுமறியா பயலாக்கும் ஏமானே…கொண்ணு போடப்பிடாது ஏமானே’ என்று கதறினார்.

எஜமான் அவரது செல்ல யானையாகிய கொம்பன் கொச்சய்யப்பனை காலையில் கொஞ்சநேரம் கொஞ்சுவதுண்டு. அதைக் காலையில் அவரது வீட்டு முற்றத்தில் கொண்டுவந்து கட்டி மாலையில்தான் கொண்டு செல்வார்கள். அன்றெல்லாம் வீட்டுமுகப்பில் ஒரு கொம்பன் யானை காதாட்டி நிற்பது ஐஸ்வரியம் என்று கருதப்பட்டது. யானைக்குக் கொடுப்பதற்காக வெல்லம் கொட்டைத்தேங்காய் போன்றவற்றை ஒரு பெரிய தட்டில் வைத்து வேலைக்காரன் நாணன்நாயர் கொண்டு வைத்தான். ஏமானுக்கு அதை பார்த்தபோது அவருக்கு ஓர் எண்ணம் வந்தது

‘அவனே கொண்டு வாடே’ என்றார். அப்பாவை கையையும் காலையும் கட்டி இழுத்து தூக்கி வந்தார்கள். எஜமானின் ஆணைப்படி யானையின் நான்கு கால்களுக்கு நடுவே மாடுகட்டும் தறி ஒன்றை ஆழமாக அறைந்து அதில் அப்பாவை கட்டிப்போட்டார்கள். அப்பா அலறி திமிறி துடித்தார். யானைக்கு அடியில் சென்றதும் அச்சத்தில் மூச்சு நின்றது போல உடம்பு மட்டும் அதிர்ந்துகொண்டிருந்தது. சற்றுநேரத்தில் மலமும் சிறுநீரும் வெளியேறியது.

கொஞ்சநேரம் சிரித்துவிட்டு எஜமான் எழுந்தார் ‘வைகும்நேரம் வரே அவன் கிடக்கட்டே. அவனே கொல்லணுமா வேண்டியாந்நு கொச்சய்யப்பன் தீருமானிக்கட்டே’ என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றார். அப்பா மெல்ல நிதானமடைந்தார். கொஞ்சநேரத்தில் பயமெல்லாம் போயிற்று. எப்படி அந்த அளவுக்கு மனம் தெளிவடைந்தது, எப்படி அந்த நாளின் ஒவ்வொரு காட்சியையும் துல்லியமாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடிந்தது என்று அப்பா கடைசி வரை சொல்லிச்சொல்லி ஆச்சரியப்படுவார்

யானையின் கால்கள் ஒவ்வொன்றும் காட்டுகோங்கு மரத்தின் அடிப்பட்டை போல வெடிப்புகளும் மடிப்புகளுமாக, வெட்டி எடுத்து வைத்த தடி போல உருண்டு பெரிதாக இருந்தன. கிளைவேர்களை வெட்டி எடுத்த வெள்ளைத் தடம் போல நகங்கள். கொஞ்ச நேரம் நகங்களைப்பார்த்தபோது அவை ஒவ்வொன்றும் ராட்சதப்பல்வரிசை என்று தோன்றியது. அப்பாவை அவை ஏளனமாகப் பார்த்து சிரிப்பதைப்போல. தலைக்குமேல் குகையின் அடிக்கருங்கல் பரப்பு போல அதன் அடிவயிறு. பெரியதோர் கலப்பைபோல அதன் ஆண்குறி.

யானை இருமுறை துதிக்கையை நீட்டி அப்பாவை தொட்டது. ஒரு முறை அது அடி போல பட்டு அப்பா தெறித்து விழுந்தார். அதன்பின் யானை அவரை பொருட்படுத்தவில்லை. அதன் மூன்று கால்கள் நிலத்தில் ஊன்றியிருக்க நாலாவது கால் இலகுவாக எடுத்தும் அசைத்தும் வைக்கப்பட்டபோது காலின் அடிப்பகுதி தெரிந்தது. பெரிய துணிமூட்டை போல இருந்தது அது. அடிக்கடி அது காலை மாற்றுவதையும் பெரிய காலைத் தரையில் தப் தப் என அடித்துக்கொள்வதையும் அப்பா கவனித்தார். பேய்க்கரும்பை பிய்த்து அது தன் காலில் அடித்தபோது மண் தெறிக்கவே அப்பா ‘அய்யோ’ என்றார். அதன்பின் அது மிகக் கவனமாக காலில் தட்டுவதை கொஞ்சநேரம் கழித்தே கவனித்தார். பின்பக்கம் தப்தப்தப் என்று சூடான பச்சைத்தழை ஆவியுடன் பிண்டங்கள் விழ அதன்மேல் சிறுநீர் பாறைஓடை போல பாசிப்பச்சை நிறத்தில் கொட்டியது. அப்பாவின் உடம்பெங்கும் யானைச்சிறுநீர் வீசியது.

சாயங்காலம் யானையை அவிழ்த்துச்சென்றபோதும் அங்கேயே கிடந்தார் அப்பா. அவரை இழுத்துச்சென்று கயிற்றால் ஒரு தென்னைமரத்தில் கட்டி வைத்தார்கள். எருக்குழியில் கழுத்துவரை புதைந்திருந்த தாத்தாவை தூக்கி ‘போலே’ என்று அடித்து துரத்தினார்கள். எருக்குழியின் சூட்டில் வெந்து சுருங்கி சுட்ட கொக்குபோல தோல்வழிந்த உடலுடன் அவர் மார்பில் அறைந்து கதறினார் ‘எனக்க பயல ஒண்ணும் செய்யப்பிடாது பொன்னேமானே…உடயதே..தெயவ்மே..என் பயல விட்டிருங்க தம்புரானே’ என்று கத்திக்கொண்டே அடிவாங்கிக்கொண்டு சென்றார் அவர்.

இரவு முழுக்க தன் கையின் கட்டை,  பல்லால் கடித்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கிழித்து பிரித்து எடுத்துவிட்டார் அப்பா. கூரிய சில்லாங்கல்லை எடுத்து பிறகட்டுகளை அறுத்தார். நள்ளிரவில் இருளில் அங்கிருந்து தப்பி சென்றார். இம்முறை எங்கும் சாலைக்கோ இடைவழிக்கோ ஏறவில்லை. முழுக்கமுழுக்க தோட்டங்கள் புதர்கள் வயல்வரப்புகள் வழியாகவே சென்றார்.

செல்லும்போது தன் அப்பாவைப்பற்றிய அருவருப்பே அவர் மனமெங்கும் நிறைந்திருந்தது. காறிக்காறி துப்பிக்கொண்டே சென்றார். மறுநாள் தன் அப்பாவுக்கு என்ன ஆகும் என்று நினைத்தார். ‘தாயளி சாவட்டு’ என்று சொல்லிக்கொண்டார். மேலும் பதினாறு வருடம் கழித்து ஒருமுறை சேர்ந்து அமர்ந்து பழையது சாப்பிடும்போதுதான் தன் அப்பா அந்த நாள்முதல் கொடும்பட்டினியிலும் பழையசோறை கையால் தொட்டதில்லை என்று தெரிந்து கண்ணீர் விட்டார். ‘பாவப்பெட்டவனுக்கு பழிவாங்கணுமானா அவனுக்க சொந்த தேகமும் வயறும் ஆன்மாவும் மட்டும்தானேலே இருக்கு?’ என்பார் அப்பா.

அப்பா நட்டாலத்தில் இருந்து கருங்கல்லுக்கும் அங்கிருந்து திங்கள்சந்தைக்கும் சென்றார். அங்கிருந்து நாகர்கோயிலுக்கு. அப்போது அவருக்கு எட்டு வயது. எழுத்துபடிப்பு வாசனை கிடையாது. அவர் வாழ்ந்த நட்டாலம் ஊரைத்தவிர வெளியுலகம் பற்றி கேள்விப்பட்டதுகூட கிடையாது. அன்று அந்த ஊர்களுக்கு புழுதிநிறைந்த வண்டிப்பாதைகள்தான். இரு மருங்கும் வயல்களும் அவ்வப்போது சிறு ஊர்களும் உண்டு. ஆனால் பெரும்பாலான இடங்களில் பாறைகள் நிறைந்த புதர்க்காடுகள். நரிகளும் செந்நாய்களும் நிறையவே உண்டு என்பதனால் இரவில் மனிதர்கள் நடமாடுவதே இல்லை.

ஆனால் புனிதமான அறியாமை என்று ஒன்று இருக்கிறது. அதற்கு நம்பமுடியாத அளவுக்கு ஆற்றல் உண்டு. என்னுடைய இத்தனைநாள் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று அது. மனிதன் கள்ளமற்று இருக்கும்போது கடவுள் அவரது இரக்கமில்லாத விதிகளை எல்லாம் கொஞ்சம் தளர்த்திக்கொள்ள வேண்டும். வேறு வழியே இல்லை அவருக்கு. அந்த சக்தியால்தான் அப்பா அவ்வளவுதூரம் சென்றார்.

அதை நான் ஒருமுறை சொன்னபோது அப்பா சிரித்தார் ‘போலே, அறிவுகெட்ட மூதி. ஏலே எனக்க உடம்பு முழுக்க ஆனைக்க வாசனையாக்கும். ஆனைமணம் கேட்டா ஒரு நாயிநரி அருவில வருமாலே? நான் பின்ன எப்டியாக்கும்லே ஏமானுக்க முற்றத்திலே இருந்து தப்பினென்? பன்னிரண்டு நாயாக்கும் காவலுக்கு. எல்லாம் எனக்க ஆனைவாசன கேட்டு வால கவட்டைக்கெடையிலே வச்சுகிட்டுல்லா ஓடிச்செண்ணு மூலையிலே இருந்துபோட்டு” அப்பா கடைசிவரை அப்படித்தான். எந்நிலையிலும் அவரது தர்க்க புத்தியை விட்டுக்கொடுப்பதில்லை.

மறுநாள் மாலையில் நாகர்கோயிலை அடைந்தார் அப்பா. கிட்டத்தட்ட முப்பத்தைந்து கிலோமீட்டர் தூரம் நடந்திருப்பார். பட்டினி அவருக்கு நன்றாக பழகியதுதான். எல்லாவிதமான வதைக்கும் பழகிப்போன மெலிந்த கரிய உடம்பு. அப்பாவே சொல்வார், காடுகளில் தீப்பிடித்தால் சில குச்சிகள் எரியாமல் கருகி கிடக்கும். அவற்றை தேடி கொண்டுவந்து வயலில் தொழி ஊன்றுவதற்கு பயன்படுத்துவார்கள். அவை வைரம் மட்டுமெ ஆனவை. என்ன செய்தாலும் ஒடியாது, வளையாது. அதைப்போல அவர் இருந்தார்.

நாகர்கோயிலைப் பார்த்து அவர் என்ன நினைத்தார் என்றெல்லாம் அவருக்கு ஞாபகம் இல்லை. மிருகம் போல தின்பதற்கு என்ன கிடைக்கும் என்று மட்டும் பார்த்துக்கொண்டு நடந்திருப்பார். உடம்பெல்லாம் மண்ணும் சேறும். இடையில் கமுகுப்பாளையை கீறி கட்டிக்கொண்ட கோவணம். ஆனால் என் அப்பாவை நீங்கள் பார்க்க வேண்டும். அவரைப்போல லட்சணமான மனிதரை நீங்கள் குறைவாகவே பார்திருப்பீர்கள். கொஞ்சம் டென்சில் வாஷிங்டனின் சாயல் உண்டு அவருக்கு. இனிமையான நிதானமான கண்கள் கொண்டவர். அன்று அவரது கண்கள் இன்னும் அழகாக இருந்திருக்கும். காட்டு ஓடையில் கிடக்கும் கூழாங்கற்கள் போல கருமையாக, மினுமினுப்பாக, குளுமையாக இருந்திருக்கும்.

பார்வதிபுரம் அருகே கணேசன் என்பவர் நடத்திவந்த இட்டிலிக்கடைக்கு வெளியே போடப்படும் எச்சில் இலைகளில் இருந்து அகப்பட்டதை எல்லாம் வழித்துத் தின்றுகொண்டு அங்கேயே படுத்து தூங்கிவிட்டார். கணேசன் நல்ல வியாபாரி. பார்த்ததுமே தெரிந்துவிட்டது, இது ஒரு சரியான உழவுமாடு என்று. உள்ளே கூப்பிட்டு குண்டான் நிறைய பழையசாதமும் பழங்கறியும் விட்டுக் கொடுத்தார். வயிறு தெளிந்ததும் அப்பா நிமிர்ந்து நின்றார். பெயரைச் சொன்னார். ஆனால் ஊரையும் பிற தகவல்களையும் எவ்வளவு கேட்டும் சொல்லவில்லை. சொல்லக்கூடிய ஆள் இல்லை என்று கணேசனுக்கும் தெரிந்துவிட்டது

நான்கு வருடம் அங்கேயே அப்பா வேலைபார்த்தார். தினமும் காலையில் எழுந்து ஒரு ஃபர்லாங் தூரமுள்ள ஓடையில் இருந்து குடம்குடமாக நீர் கொண்டுவந்து பெரிய மரத்தொட்டியை நிறைப்பார். பத்துமணிக்கு இட்டிலிக்கடை முடிவது வரை அந்த வேலை. அதன்பின்ன அந்த பாத்திரங்களை எல்லாம் சுமந்து கொண்டு வந்த நீரில் மண்ணும் சாம்பலும் போட்டு கழுவுவார். மீண்டும் நீர் கொண்டு வருவார். மாலையில் சோற்றுக்கடைமுடிந்ததும் மீண்டும் பாத்திரங்கள் தேய்ப்பார். மீண்டும் தண்ணீர். மீண்டும் பாத்திரங்களை கழுவி முடிக்கையில் நள்ளிரவாகிவிடும். கடையையே அவர்தான் மூடுவார்.

களைத்து சோர்ந்து பின்பக்கம் ஒட்டுத்திண்ணையில் விழுந்து அப்படியே தூங்கினால் காலையில் வேதக்கோயில் மணி கேட்டதும் எழுந்துவிடுவார். ஒருமுறை மழை கொட்டிக்கொண்டிருக்க மழைக்குள்ளேயே கிடந்து அப்பா தூங்கிக்கொண்டிருப்பதை கணேசன் கண்டு பலவருடம் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார். அப்பாவுக்கு எந்த நோயும் வருவதில்லை. மிஞ்சியது மட்டும்தான் அவருக்கு உணவு. அவரே பாத்திரங்களில் இருந்து வழித்தும் சுரண்டியும் சாப்பிட்டுக் கொள்வார். அவருக்கென எவரும் சாப்பாடு எதுவும் கொடுப்பதில்லை.

அப்பா அடி உதைகளில் இருந்தும் வசைகளில் இருந்தும் வெளியே வந்தார். வயிறு புடைக்க உண்டு அவரது கைகால்கள் இரும்புலக்கை போல ஆயின. ’மாடன்சிலை மாதிரி இருக்கேலே மயிரே’ என்று வெற்றிலைக்கடை செல்லப்பன் சொல்வாராம். ஆனால் புதுவகை அவமரியாதைகளை அவர் சந்தித்துக்கொண்டே இருந்தார். சமைத்த உணவை தொடுவதற்கு அவர் ஒருபோதும் அனுமதிக்கப்பட்டதில்லை. ஒருமுறை குவிக்கப்பட்டிருந்த சோற்றின்மேல் இருந்த இலை பறந்து போனபோது அவர் ஓர் இலையுடன் அதை நோக்கிச் சென்றார். கணேசன் பாய்ந்து வந்து ‘லே, லே, தொடாதேல…வெளியே போலே..லே, வெளியே போ’ என்று கூச்சலிட்டான்.

அன்று முதல் அவருக்கு புதிய எல்லைகள் தென்பட ஆரம்பித்தன. அவர் தன்னுடைய கொல்லைப்பக்க திண்ணை தவிர வேறெங்கும் எவர் முன்னாலும் அமர அனுமதிக்கப்பட்டதில்லை. அவரிடம் எவரும் எதையும் நேரடியாக கொடுப்பதில்லை. கீழே வைக்கும் பொருட்களை அவர் எடுத்துக்கொள்ள வேண்டும். தெருவில் அவர் செல்லும்போது எதிரே வரக்கூடியவர்கள் சிலர் ‘டேய் தள்ளி போடா’ என்று கூச்சலிடுவார்கள்.

ஆனால் அப்பா மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். அவர் வளர்ந்து கொண்டிருந்தார். உடம்பாலும் மனத்தாலும். அவரே எழுத்துகூட்டி படிக்க கற்றுக்கொண்டார். கையில் சிக்கிய எல்லா காகிதங்களையும் வாசித்தார். கணக்குகளை போட பயின்றார். ஆங்கில எழுத்துக்களைக்கூட கற்றுக்கொண்டு உதிரி வார்த்தைகளை வாசிக்க ஆரம்பித்தார். தன் பதிமூன்றாம் வயதில் அவர் நாகர்கோயில் நீதிமன்றத்துக்கு எதிரில் இருந்த அம்புரோஸ் டீக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே அவர் பரிமாறுபவனாக இருந்தார். அவ்வப்போது சமையலும் செய்தார்.

அவரது பதினைந்தாம் வயதில் டீக்கடைக்கு வந்து அறிமுகமாகியிருந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் அவர் கிழிந்த ஆங்கில செய்தித்தாளின் ஒருபக்கத்தை வாசிப்பதைக் கண்டு ‘தம்பி எத்தனாம் கிளாஸ் வரை படிச்சே?’ என்றார். ‘படிக்கேல்ல’ என்றார் அப்பா. ‘பள்ளிக்கொடமே போனதில்லியா?’ ‘இல்ல’ அவர் கொஞ்சநேரம் அவரை உற்றுப்பார்த்துவிட்டு ‘பின்ன எப்பிடியாக்கும் இங்கிலீஸு படிச்சே? வல்ல சாயிப்புகிட்டயும் வேல பாத்தியோ?’ ‘இல்ல,நானாட்டு படிச்சேன்’

அவரால் நம்ப முடியவில்லை. ஆனால் நம்பத்தான் வேண்டியிருந்தது. அவர் சொன்னார் ‘லே கறுத்தான், உனக்கு என்னல பிராயமாச்சு?’ அப்பாவுக்கு அப்போது இருபது. ‘லே நீ ஒண்ணாம்ஃபாரம் பரிச்சை எளுதலாம் பாத்துக்கோ. நான் உனக்கு பாடபுஸ்தகங்கள கொண்டு வந்து தாறன். நீ ஒருநாலஞ்சுமாசம் இருந்து படிச்சாபோரும்’ அவர் கொண்டுவந்த புத்தகங்களை அப்பா ஒரே மாதத்தில் துப்புரவாக வாசித்து மனப்பாடம் செய்துவிட்டார். அவரது மூளைத்திறமையை நான் கடைசிவரை நினைத்து ஆச்சரியப்பட்டேன். எண்பதிரண்டு வயதில் அவர் சாவதற்கு எட்டுமாதம் முன்னால் சர்ச்சுக்கு வந்த புதிய ஃபாதரிடம் போய் லத்தீன் படிக்க ஆரம்பித்தார். இரண்டு வருடம் இருந்திருந்தால் லத்தீனில் பெரிய அறிஞர் ஆகியிருப்பார் என்று ஃபாதர் என்னைப்பார்க்கும்போதெல்லாம் சொல்வார்.

அப்பா ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் ஆறாம் வகுப்பு , அதாவது ஒன்றாம் ஃபாரம் எழுதி முதல்தடவையிலேயே வெற்றிபெற்றார். தொடர்ந்து அதே டீக்கடையில் வேலைசெய்துகொண்டே இ.எஸ்.எஸ்.எல்.சியும் எழுதி வென்றார். அதாவது எட்டாம் வகுப்பு. அடுத்து மெட்ரிக்குலேஷன் எழுத ஃபீஸ் கட்டியிருந்தார். கடையில் அவர் பொறுப்பாக இருந்து வியாபாரம்செய்வதனால் அம்புரோஸுக்கும் அவர் மேல் நல்ல நம்பிக்கை இருந்தது.

1921ல் அப்பா அவரது வாழ்க்கையில் கடைசிநாள் வரை ஒவ்வொருநாளும், ஒவ்வொரு மணிநேரமும் வியந்து போற்றி பேசிவந்த மனிதரைச் சந்தித்தார். ஜூலை பன்னிரண்டாம் தேதி காலை பதினொரு மணிக்கு. வெளியே வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. கறுப்பு கோட்டும் கீழே கச்சவேட்டியும் அணிந்து வக்கீல்களுக்குரிய வெள்ளை போ டை கட்டி இருபத்தைந்து இருபத்தாறு வயதுள்ள ஓர் இளைஞர் அவர் கடைக்குள் நுழைந்து பெஞ்சில் உட்கார்ந்து ‘சூடாட்டு ஒரு சாயா எடுலெ மக்கா‘ என்றார்.

அன்று நாடார்கள் மட்டும்தான் அந்தக்கடைக்கு வருவார்கள். நாடார்களில் அன்று வழக்கறிஞர்கள் மிகவும் குறைவு. இருக்கும் சில நாடார்வக்கீல்களும் பங்களாத்தெருவைச்சேர்ந்த லண்டன்மிஷன் கிறிஸ்தவர்களாக இருப்பார்கள். அவர்களின் நடை உடைகள் எல்லாமே ஆங்கிலோ இந்தியர்களைப்போல இருக்கும். மற்ற நாடார்களை அவர்கள் உயர்சாதியினரை விடவும் கேவலமாக நடத்துவார்கள். இவர் தெற்கே விளவங்கோடு பக்கம் என்று பார்த்தாலே தெரிந்தது. அசைவில் தோற்றத்தில் எல்லாம் நாட்டுப்புறத்தனம். வெயிலுக்கு கோட்டின் பித்தான்களை கழற்றி காலரை நன்றாக மேலே ஏற்றி விட்டிருந்தார். கோட்டின் கைகளை சுருட்டி மடித்து முட்டுக்குமேலெ கொண்டு வந்து வைத்திருந்தார்.

’அண்ணைக்கு எனக்கு அவரு ஆருண்ணு தெரியாது. ஆனா முதல்பார்வையிலே அவரு ஆருண்ணு எனக்க ஆத்மா கண்டுபிடிச்சு போட்டு. இண்ணைக்கும் அவரு அங்க வந்ததும் இருந்ததும் காலை ஆட்டிகிட்டு இருந்து சாயாவ ஊதிக்குடிச்சதும் கண்ணுலே நிக்குதே… நிப்பும் நடப்பும் கண்டா ஒரு அசல் காட்டுநாடாரு. சட்டைய களட்டிப்போட்டா பத்து பனைய இந்நாண்ணு ஏறுவாருண்ணு தோணிப்போடும். ஒரு அடின்னா நிண்ணு அடிப்பாருன்னு தோணும்…சாயாவ அப்பிடி சுத்தி சுத்தி ஊதிக்குடிக்குதத கண்டா மங்களாதெரு வக்கீலுமாரு சிரிப்பாவ’ என்றார் அப்பா.

பணம் கொடுத்துவிட்டு ‘ஏபிரகாம் சாறுக்க ஆப்பீஸ் ஏதாக்கும்?’ என்று அப்பாவிடம் கேட்டு விட்டு அவர் கையில் இருந்த புத்தகத்தை பார்த்தார் அவர். ‘என்ன புக்கு?’ என்று விளவங்கோடு பாணி நீட்டலுடன் கேட்டார். ‘மெட்ரிக்கு…பரிச்சைக்கு பணம் கெட்டியிருக்கு’ ‘ஓ’ என்றபின் வழியை தெரிந்துகொண்டு சென்றார். அவர் பெயர் ஏ.நேசமணி. தக்கலை அருகே பள்ளியாடி என்ற ஊரைச்சேர்ந்தவர். கொஞ்சம் நிலங்களும் தோப்புகளும் கொண்ட பெருவட்டர் குடும்பம். அவரது அப்பாபெயர் அப்பாவுபெப்ருவட்டர். திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பீஏ படித்து திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் பி.எல் படித்து முடித்து நாகர்கோயில் பாரில் வக்கீலாக பதிவுசெய்திருந்தார்

ஆம், அவரேதான். மார்ஷல் நேசமணி என்ற பேரில் கன்யாகுமரியில் நாடார்களின் தலைவராக இன்றும் பக்தியுடன் நினைக்கப்படுபவர். அவர் காலத்தில் திருவிதாங்கூரில் அவர் வேறு காங்கிரஸ் வேறு என்றிருக்கவில்லை. திருவிதாங்கூர் சட்டச்சபை உறுப்பினராகத் தேர்தலில் வென்று சென்றார். கன்யாகுமரிமாவட்டம் உருவாகி தமிழ்நாட்டுடன் இணைவதற்காக திருவிதாங்கூர் காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கிப் போராடினார். தமிழக காங்கிரஸின் தலைவராக இருந்தார். கடைசிவரை பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

நீதிமன்றத்துக்கு நேசமணி சென்ற முதல் நாளே பெரிய பிரச்சினை எற்பட்டது. கையில் வக்காலத்து பேப்பர்களுடன் அவர் நீதிமன்றத்தில் நுழைந்தார். நீதிமன்றத்திற்குள் ஏழெட்டு நார்காலிகளும் நான்கு முக்காலிகளும் போடப்பட்டிருந்தன. முக்காலிகள் ஜூனியர்களுக்கு என்பது பேச்சு வழக்கானாலும் நாடார்கள் முக்காலிகளில்தான் அமரவேண்டும் என்பது ஒரு வழக்கமாக பேணப்பட்டது. நேசமணி நேராகச் சென்று ஒரு நாற்காலியில் அமர்ந்தார். வழக்குக்கு வந்த அரசு வழக்கறிஞர் எம்.சிவசங்கரன்பிள்ளை அவர் அமர்ந்திருப்பதைக் கண்டு முகம் சுளித்து திரும்பிச்சென்றுவிட்டார். அவர் அருகே எவருமே அமரவில்லை. அரைமணிநேரம் தானே தனியாக அமர்ந்திருப்பதை அவர் உணர்ந்தபோது ஏதோ தப்பாக இருப்பதைப் புரிந்துகொண்டார்.

பெஞ்ச்கிளார்க் பரமசிவம் வந்து அவர் அருகே குனிந்து விஷயத்தை சொன்னார். நாடார்கள் முக்காலிகளில் உட்காரலாம். அதுதான் வழக்கம். சீனியர் நாடார் வக்கீல்கள்கூட அப்படித்தான் உட்கார்வது. எம்.கெ.செல்லப்பன் கூட இன்று வரை நாற்காலியில் அமர்ந்ததில்லை… ஒரு நிமிடத்தில் ரத்தமெல்லாம் தலைக்கு ஏற நேசமணி எழுந்து கத்த ஆரம்பித்தார். ‘லே இங்க பாவப்பெட்டவனுக்கு இருக்க எடமில்லேண்ணா பின்ன நீதி எங்கலே கிட்டும்? நாயிப்பயலுவளே…’ என்று கூவியபடி முக்காலிகளை தூக்கிக் கொண்டு வந்து நீதிமன்ற முற்றத்தில் வீசினார். ஒவ்வொரு அறையாக போய் முக்காலிகளை தூக்கிக் கொண்டு வந்து வீசிக்கொண்டே இருந்தார்

அப்பா டீக்கடையில் இருக்கும்போது ஒரு வக்கீல் குமாஸ்தா ஓடிவந்து ‘அந்த பள்ளியாடிப் பெய அங்க எளகி நிக்கான்…தலைக்கு சுகமில்லாத்த பயலாக்கும்’ என்றார். இன்னும் பலர் ஓடிவந்தார்கள். கொலைநடக்கப்போகிறது என்றார்கள். ‘பள்ளியாடிப் பெருவட்டருக்க மவனாக்கும். மரியாத அறியாத்தவன்…எளவயசுல்லா’ என்று ஒரு கிழவர் சொன்னார்.கொஞ்ச நேரத்தில் சட்டையெல்லாம் கலைந்திருக்க வியர்த்து மூச்சிரைத்து நேசமணி வந்துசேர்ந்தார். ‘சாய எடுலே’ என்று அதட்டினார். அப்பா டீயை கொடுத்ததும் ஒரே மிடறில் உள்ளே இழுத்துவிட்டு, சக்கரத்தை வீசிப்போட்டுவிட்டு கிளம்பிச் சென்றார்.

கொஞ்சநேரத்தில் வெள்ளமடம் பகுதியைச்சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட ரௌடிகள் கையில் கம்புகளுடன் டீக்கடைக்கு வந்து நேசமணியை தேடினார்கள். அப்பாவை இழுத்து நிறுத்தி அவரைப்பற்றி கேட்டு மிரட்டினார்கள். நாகர்கோயில் முழுக்க அவர்கள் அவரை தேடி அலைந்தார்கள். அன்று நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. நகர்முழுக்க இதுவே பேச்சாக இருந்தது.’ வெள்ளமடம் பயக்களாக்கும்லே.. வெட்டும் கொலையும் அவனுகளுக்கு வெளையாட்டாக்கும்’என்றார்கள். ஒரு நல்ல கொலை நகரில் நடந்து நெடுநாட்களாயிற்று என்றார்கள்.

மறுநாள் பள்ளியாடியில் இருந்து கம்புகளும் அரிவாட்களும் ஏந்திய ஐம்பது ஆட்களுடன் நேசமணி திருவனந்தபுரம் பயோனியர் பஸ்ஸில் வந்து இறங்கினார்.அவர்கள் சூழ வர வக்காலத்தை தூக்கிக்கொண்டு நீதிமன்றத்துக்குள் சென்றார். அவருடைய ஆட்கள் நீதிமன்றத்துக்கு வெளியே நிறைந்திருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நீதிமன்றம் முன்னால் கூட்டம்சேர ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் வெள்ளாள வக்கீகளும் நாயர் வக்கீல்களும் பின்பக்கம் வழியாக தப்பி ஓடவேண்டியிருந்தது.

நாலைந்துநாள் நீதிமன்றம் இல்லை. நகரமெங்கும் பதற்றமாகவே இருந்தது. எல்லா டீகக்டைகளிலும் எல்லா வீடுகளிலும் இதே பேச்சு. விஷயத்தில் சர்ச் தலையிட்டது. பிஷப் வந்து நீதிபதிகளிடம் பேசினார். ரெசிடெண்ட் துரைக்கு மனுகொடுக்கப்போவதாக பேச்சு அடிபட்டது. அந்த செய்தி வெள்ளாளநாயர் வக்கீல்களை அச்சுறுத்தியது. ஆரம்பத்தில் வீரமாக நின்ற பலர் பின்வாங்கினார்கள். கேஸ் இல்லாத இளவட்டங்கள் சிலர் கத்தினாலும் எல்லா சீனியர்கலும் ஒதுங்கிக்கொண்டார்கள்.

மீண்டும் நீதிமன்றம் கூடியபோது புதிய நாற்காலிகள் வாங்கி எல்லாருக்கும் போடப்பட்டிருந்தது. நேசமணியும் அவரது நண்பர்களும் பெரும்கூட்டமாக வந்து டீக்கடை முன்னால் சாலையில் நின்று டீகுடித்தார்கள். அப்பாதான் அன்றைக்கு டீ போட்டார். நூற்றி எழுபத்தெட்டு டீ.

அதன்பின் கண்ணெதிரில் நேசமணி வளர்ந்து பெரிதாவதை அப்பா கண்டார். அவர் டீ குடிக்க வருவதில்லை. அவருடைய ஆபீஸுக்கு டீ கொண்டு கொடுக்கவேண்டியிருக்கும். சிலசமயம் பையன்கள் இல்லாவிட்டால் அப்பாவே செல்வார். நேசமணியின் ஆபீஸ் வாசலில் எந்நேரமும் ஆட்கள் கூட்டம்கூட்டமாக நிற்பார்கள். அழுதுகொண்டு அமர்ந்திருக்கும் பெண்களையும் கோபத்துடனும் கொந்தளிப்புடனும் விவாதித்துக்கொண்டிருக்கும் கிராமத்தினரையும் தாண்டி டீயை கொண்டுசென்றால் அங்கே வெள்ளைச்சட்டையும் போ டையையும் எல்லாம் கழற்றி ஆணியில் மாட்டிவிட்டு சட்டை இல்லாமல் நாற்காலியில் கால்களை தூக்கி வைத்துக்கொண்டு உரக்கச்சிரித்து பேசிக்கொண்டிருக்கும் நேசமணியை பார்க்கமுடியும். எப்போதும் முடிந்தவரை உச்சத்தில் பேசுவது விளவங்கோடு கல்குளம் பக்கத்து வழக்கம்.

எப்போதும் அங்கே ஏழெட்டுபேர் இருப்பார்கள்.’ உள்ளயும் வெளியயும் நிக்கப்பட்ட எல்லாருக்கும் சாய குடுடே’என்று அவர் சொல்வார். ஒரு நாளைக்கு எப்படியும் இருநூறு முந்நூறு டீ ஆகிவிடும். ஒருகட்டத்துக்குமேல் அவரது ஆபீஸிலேயே ஒரு பையனைப்போட்டு டீ போட ஆரம்பித்தார்கள். அப்பா அந்த ஆபீஸை கடந்துசெல்லும்போதெல்லாம் அவர் நேசமணியின் சிரிப்பையும் மலையாள நெடிகொண்ட உரத்த குரலையும் கேட்பார். இந்த மனிதர் உண்மையிலேயே வழக்குகளை நடத்துகிறாரா என்று சந்தேகம் வரும். ஆனால் அவர்தான் திருவிதாங்கூரிலேயே வெற்றிகரமான வழக்கறிஞர் என்றார்கள். அவர் வந்து நின்றாலே வழக்கு வென்றுவிடும் என்று நம்பினார்கள்.

நேசமணி திருவிதாங்கூர் காங்கிரஸில் சேர்ந்து முதலில் நாகர்கோயில் நகர்மன்றத்துக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவராக ஆனார். அதன்பின் அவரை வக்கீல் அலுவலகத்தில் பார்ப்பது அரிதாயிற்று. அப்பா மெட்ரிக் பரீட்சையில் வென்றதும் அப்போதுதான். அவருக்கு நெருக்கமாக இருந்த வாத்தியார் செல்லப்பன் ஒருநாள் திருநெல்வேலியில் வெள்ளைக்கார சர்க்கார் வேலைக்கு ஆளெடுக்கிறார்கள், நீ அப்ளிக்கேஷன் போடு என்றார். அப்பா அன்று வரை அதைப்பற்றி யோசித்ததில்லை. அப்போது அவருக்கு முப்பத்திமூன்று வயது. திருமணம் செய்துகொள்ளும் நினைப்பும் அவருக்கு இருக்கவில்லை. நாள் தவறாமல் உள்ளூர் மிஷன் நூலகத்துக்குப் போய் வாசிப்பது மட்டுமே அவரது ஆர்வமாக இருந்தது.

‘வேலை கண்டிப்பா கெடைக்கும்… மெட்ரிக்கு படிச்சுட்டு உன்னளவுக்கு விஷயம்தெரிஞ்ச ஆரும் அந்த வேலைக்கு வரமாட்டாங்க..’ என்று வாத்தியார் சொன்னார். நம்பிக்கை இல்லாமல் அப்பா விண்ணப்பம் போட்டார். திருநெல்வேலிக்கு நேர்முகம் செல்ல ஆணை வந்தது. அவரிடம் பேசியவர் ஒரு மதுரை அய்யங்கார். ஆங்கிலத்திலேயே கேள்விகளைக் கேட்டார். அப்பாவும் ஆங்கிலத்திலேயே பதில் சொன்னார் ‘நீ மிஷன் பள்ளிக்கூடத்திலே படித்தாயா?’ என்றார். அப்பா ‘இல்ல பள்ளிக்கூடத்திலேயே படிக்கவில்லை’ என்றார். அய்யங்கார் தலையசைத்தார். அவர் அதிருப்தி கொள்வதுபோல முகம் காட்டியது.

வேலைகிடைக்காது என்று நம்பித்தான் அப்பா திரும்பிவந்தார். ஒருமாதத்தில் வேலைக்கு உத்தரவு வந்தது. அய்யங்கார் அவருக்குத்தான் இரண்டாவது இடம் கொடுத்திருந்தார். நேராக மதுரைக்குச் சென்று வேலையில் சேர்ந்தார். எட்டுமாத பயிற்சிக்காலம் முடிந்ததும் நில அளவைத்துறையில் தென்காசியில் அவருக்கு வேலைமாற்றம் கொடுத்தார்கள். அப்பாவுக்கு எல்லா ஊரும் ஒன்றுதான். தெனகாசியைப்பற்றி ஒன்றுமே தெரியாது. மதுரையில் இருந்து நேராக தென்காசிக்கு ரயிலில் சென்று இறங்கி வேலைக்குச் சேர்ந்தார்.

அவர் வேலைக்குச் சேர்ந்த அன்றே அவர் அங்கே விரும்பப்படவில்லை என்பதை உணர்ந்தார். நில அளவையின் மைய அலுவலகம் தென்காசியில் இருந்தது. அங்கே அவரை சேர்த்துக்கொண்டதும் நேராக இலஞ்சிக்கு போகச்சொன்னார்கள். அலுவலகத்தில் ஒருவர் கூட அவரைப்பார்த்து புன்னகை செய்யவில்லை. அவரது உத்தரவில் முத்திரை அடித்த இருளாண்டிச்சேர்வை ‘வெள்ளக்காரனுக்கு குனிஞ்சு குடுத்து வேல எடுத்துட்டு வந்திருதானுக’ என்று உரக்க முணுமுணுத்தபோது ஆபீஸில் பலர் திரும்பாமலேயே புன்னகைசெய்தார்கள்.

அப்பா குதிரைவண்டியில் இலஞ்சிக்குச் சென்று ஆபீஸுக்கு போனபோதுதான் அங்கே அவரை ஏன் வேலைக்கு போட்டார்கள் என்று புரிந்தது. அந்தப்பகுதி முழுக்கவே நேரடியாகவும் மறைமுகமாகவும் இஞ்சிக்குடி ஜமீனுக்குச் சொந்தமானதாக இருந்தது. அவரது ஆணைக்கு அப்பால் அங்கே சட்டமும் நீதியும் ஒன்றும் இல்லை. நிலங்கள் யார் பெயரில் இருந்தாலும் , யார் சம்பாதித்ததாக இருந்தாலும் ஜமீன் ஆட்கள் நினைத்தால் அதை எடுத்துக்கொண்டார்கள். பட்டா மாற்றினார்கள். அங்கே வரும் எந்த அதிகாரியும் ஜமீனுக்கு அடிமையாகவே இருந்தாக வேண்டும் என்று வழக்கம் இருந்தது

ஆபீஸ் பூட்டப்பட்டிருந்தது. மண்சாலை ஓரமாக கல்சுவருக்குள் இருந்த தாழ்வான பழைய ஓட்டுக்கட்டிடம். அதைச்சுற்றி செடிகள் மண்டியிருந்தன. ஒற்றையடிப்பாதைபோல ஒன்று உள்ளே போயிற்று. இலஞ்சியில் மழை அதிகமானதனால் பலவகை கொடிகள் அடர்ந்து கட்டிடத்தின் மேல் படர்ந்து கூரையை மூடியிருந்தன. அவர் அங்கே விசாரித்து தலையாரி சங்கரத்தேவரை வரவழைத்து கதவைத் திறந்து உள்ளே சென்றார். ஏழெட்டுமாதமாக திறக்காமலிருந்த அலுவலகம் முழுக்க வவ்வால் எச்சம். அப்பாவே அதை கூட்டிப் பெருக்கினார்.

முதல்நாளே தலையாரி சங்கரத்தேவர் அவருக்கு எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். அவருடன் அப்பா ஜமீன்தாரை பார்க்கச் சென்றார். ஜமீன்பங்களா ஒரு பெரிய தோட்டத்தில் ஓடைக்கரையில் தென்னைமரகூட்டங்களுக்குள் இருந்தது. முகப்பிலேயே வெளிவாசல் அருகே ஜமீன் அலுவலகம். அங்கேதான் கணக்குப்பிள்ளைகளும் பிறரும் இருப்பார்கள். ஜமீன்தார் காலையில் ஒருமுறை வந்து எல்லாவற்றிலும் கையெழுத்து போட்டுவிட்டுச் செல்வார்.

அலுவலகத்தை தாண்டிச்செல்லும் நீளமான சாலையின் இருபக்கமும் ஜமீன்தார் சொந்தமாக வைத்திருந்த மிருககாட்சிசாலையின் கம்பி அழி போட்ட கூண்டுகள். அவற்றில் அவர் நாலைந்து கரடிகளையும் ஏழெட்டு மலைப்பாம்புகளையும் ஒரு சிறுத்தையையும் வளர்த்து வந்தார். இதைத்தவிர புனுகுப்பூனைகள், முள்ளம்பன்றிகள், காட்டுப்பூனைகள், நரிகள், ஓநாய்கள், கருங்குரங்குகள் என பலவகை உயிர்கள். அவற்றின் எச்சமும் சிறுநீரும் கலந்த கடும் துர்நாற்றம் எந்நேரமும் அலுவலகத்தில் வீசிக்கொண்டிருக்கும்.

இஞ்சிக்குடி ஜமீன்தார் வேட்டையில் ஆர்வம் உடையவர். அவர் காட்டுக்குள் வேட்டைக்குச் செல்வதற்காகவே குதிரைகளை வரவழைத்து பழக்கி வைத்துக்கொள்ள நாலைந்து பட்டாணி முஸ்லீம்கள் இருந்தார்கள். மிருகங்களை பொறிவைத்து பிடிக்க பழங்குடிகளை வைத்திருந்தார். அவருக்குப் பிடிக்காதவர்களை கரடி மலைப்பாம்புகளுடன் போட்டு கூண்டுகளில் அடைத்து இரவெல்லாம் வைத்திருப்பது அவரது வழக்கம். கரடியால் கிழிபட்டு பலர் இறந்திருக்கிறார்கள் என்றார் சங்கரத்தேவர். மலைப்பாம்பைக் கண்டு பயந்தே ஒரு சிறுவன் உள்ளே செத்துக்கிடந்திருக்கிறான்.

அப்பாவும் தேவரும் வாசலை அடைந்தபோது கணக்குப்பிள்ளை வெளியே வந்து அப்பாவிடம் ‘ஏலே நீ நாடான்தானே…அந்தாலே ஏறி வாறியே..வெளியே நில்லுலே… திண்ணையிலே ஏறாதே… செருப்ப களட்டி மூலையிலே போடு’ என்றார். அப்பா அலுவலகத்திற்கு வெளியே நின்றுகொண்டார். தேவரை மட்டும் திண்ணையில் ஏறி அமரச்செய்தார்கள். எட்டுமணிக்கு அலுவலகத்தில் அனைவருக்கும் பதநீர் கொண்டுவந்து கொடுப்பார்கள். அதை அத்தனை பேருக்கும் மண்கோப்பைகளில் கொடுத்துவிட்டு அப்பாவுக்கு மட்டும் ஓலைபட்டையில் கொடுத்தார்கள். பட்டையை வெளியே கொண்டு சென்று போடச்சொன்னார்கள்.

பத்துமணி வரை அங்கேயே காத்திருக்க வேண்டியிருந்தது. ஒருமணி நேரம் நின்றபின் அப்பா தரையில் குந்தி அமர்ந்துகொண்டார். பத்து மணிக்கு ஒரு டவாலி ஓடி வந்து ஜமீந்தார் பெரியகருப்பத்தேவர் வருவதை அறிவித்தான். அவனுக்கு நீதிமன்றத்தின் வில்லைசேவகனின் அதே உடையை அணிவித்திருந்தார் ஜமீன்தார். கொஞ்ச நேரத்தின் நீதிமன்றத்தைப்போலவே ஒரு வெள்ளித் தடியை ஏந்தி அதே சீருடையுடன் ஒரு சேவகன் லெஃப்ட் ரைட் போட்டு வந்தான். அவன் ஆங்கிலம் போன்ற உச்சரிப்புடன் அர்த்தற்ற ஒலிகளை எழுப்பி கூவிக்கொண்டே வந்தான். பின்னால் இருவர் பாண்ட் வாத்தியத்தையும் பியூகிளையும் மனம்போனபடி முழக்கியபடி வந்தார்கள்.

கடைசியாக நாலைந்து சேவகர்கள் பின்தொடர ஜமீன்தார் பெரியகருப்புத்தேவர் வந்தார். அவர் வெள்ளைக்கார லெஃப்டினெண்டின் சீருடையை தைக்கச்செய்து அணிந்திருந்தார். இடுப்பில் கைத்துப்பாக்கியும், கைகளில் வெள்ளைக் கையுறைகளும், கால்களில் பெரிய வேட்டை பூட்டுகளும் அணிந்து பெரிய எடை கொண்ட உடலை சிரமப்பட்டு நகர்த்தி கொண்டு வந்தார். அவர் வந்ததும் அத்தனைபேரும் எழுந்து நின்று அவரை வாழ்த்திக் கூச்சல் போட்டார்கள். அப்போது அவர்கள் ஹிட்லரின் படைகள் செய்வது போல வலது கையை முன்னால் நீட்டியிருந்தார்கள். அதெல்லாம் அங்கே பழக்கப்படுத்தப்பட்டிருந்தது.

ஜமீன்தார் அலுவலகத்தின் படிகளில் ஏறிய போது அப்பாவை பார்த்தார். அப்பா கழுத்துமூடிய வெள்ளைச்சட்டையும் அதன்மேல் கறுப்பு கோட்டும் போட்டு கச்சவேட்டி கட்டியிருந்தார். தலையில் தலைப்பாகையை தொப்பி போல வைத்திருந்தார். அது அன்று எல்லா அரசாங்க அதிகாரிகளுக்கும் உரிய உடை. கணக்குப்பிள்ளை ‘புதிய ஆளாக்கும். திருவிதாங்கூருகாரன். நாடானாக்கும்’ என்றார்.

சட்டென்று ஜமீந்தார் கடும் கோபத்துடன் கையில் இருந்த பிரம்பால் அப்பாவை மாறி மாறி அடித்தபடி ‘கபர்தார்…ஃபூல்…’ என்று கத்த ஆரம்பித்தார். தலையாரியிடம் அப்பாவைப் பிடித்துக் கட்டி சவுக்காலடிக்கும்படி சொன்னார். கணக்குப்பிள்ளை உள்ளே புகுந்து அவரை நிதானமடையச்செய்து அப்பா அரசாங்க உத்தியோகஸ்தர் என்றும் அப்படி செய்யமுடியாது என்றும் சொன்னார். மெல்ல ஜமீந்தார் அடங்கி பெரிதாக மூச்சு விட்டுக்கொண்டு வசைபாட ஆரம்பித்தபோதுதான் அவரது கோபத்துக்கு என்ன காரணம் என்று தெரிந்தது. அவர் முன் ஒரு நாடார் அப்படி உடையணிந்து நின்றது அவருக்குப் பிடிக்கவில்லை.

அவர் உள்ளே சென்றதும் கணக்குப்பிள்ளை அப்பாவிடம் தலைப்பாகையையும் சட்டையையும் கழற்று என்று அதட்டினார். ஜமீந்தார் தலையை வெட்டிவிடவும் அஞ்சமாட்டார் என்றார். அச்சத்தாலும் அவமானத்தாலும் கூசிப்போனவராக அப்பா தலைப்பாகையையும் சட்டையையும் கழட்டினார். வெற்று மார்புடன் கைகட்டி நின்றார். அவரது உடலில் பிரம்படிக்காயங்கள் சிவந்து வரியோடின. ஜமீன்தார் மீண்டும் வெளியே வந்தபோது அப்பாவை வெறுப்புடன் பார்த்தார். ‘பாத்து மரியாதையா வேலைசெய்தா தலையோட வீடு போவே..என்னலே’ என்றபின் அவரது உடல்மேல் துப்பிவிட்டு சென்றார்.

எச்சில் வழியும் உடலுடன் அப்பா திரும்பி நடந்தார். அமிலம் மாதிரி அந்த எச்சில் உடலை எரித்தது. திரும்பி வந்து தன் அலுவலக அறையில் அமர்ந்து மனமுடைந்து அழுதார். தலையாரி சங்கரத் தேவர் மெல்லிய கிண்டலுடன் பார்த்துக்கொண்டு சென்றார். அன்று பகலும் இரவும் அப்படியே அந்த நாற்காலியிலேயே அப்பா அமர்ந்திருந்தார். அவர் மனம் முழுக்க உதிரி எண்ணங்களாக ஓடிக்கொண்டிருந்தன. மறுநாள் காலையில் மனம் கல் போல இறுகிப்போய் இருந்தது.

அப்பா அலுவலகத்திலேயே தங்கிக்கொண்டார். அலுவலக வளாகத்திலேயே குளமும் கக்கூஸும் இருந்தது. பின்பக்கம் ஒரு சாய்ப்பு இறக்கி அதில் அடுப்பு செய்துகொண்டார். பாத்திரங்களும் அரிசிபருப்பும் விறகும் வாங்கி அவரே சமைத்துக்கொண்டார். அவருக்கு உதவியாக பியூன் கந்தசாமி தினமும் வந்து செல்வான். தலையாரி தேவர் அவருக்கு தோன்றும்போது வருவார். அவருக்கு பெரும்பாலும் வேலை ஜமீனில்தான்.

ஒருமாதத்தில் அப்பா எல்லா கோப்புகளையும் வாசித்துவிட்டார். அதற்கு முன்னால் இருந்த அய்யர் ஜமீன்தார் சொன்னதை எல்லாம் செய்து எட்டுமாதம் சமாளித்துவிட்டு கையை காலை பிடித்து மாறுதல் வாங்கிப்போனபிறகு எந்த வேலையும் நடக்கவில்லை. அப்பா எல்லாவற்றையும் சரியாக பதிவு செய்ய ஆரம்பித்தார். ஆவணங்களின் மூலங்களை ஒப்பிட்டார். பின்னர் ஜமீன்தாருக்கு பெரிய ஒரு கடிதம் எழுதினார். உண்மையான கணக்குகளையும் ஆவணங்களையும் உடனே பதிவு செய்யவேண்டும் என்று சொன்னார். மோசடிகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

நாலைந்துநாட்கள் கழித்து தலையாரித் தேவர் வந்து ஜமீன்கணக்குப்பிள்ளை அவரை வந்து பார்க்கும்படி சொல்லி அனுப்பியதாகச் சொன்னார். வரமுடியாது என்று அப்பா சொல்லிவிட்டார். இரண்டுநாள் கழித்து ஜமீன்தாரே பார்க்க விரும்புவதாக தகவல் வந்தது. அதற்கும் அப்பா மறுத்து விட்டார். ஜமீன் அலுவலகம் எப்படி நிலை குலைந்திருக்கும் என்று அவரால் ஊகிக்க முடிந்தது.

மறுநாள் தலையாரி சங்கரத்தேவர் வேல்கம்பு ஏந்திய இன்னொரு தேவனுடன் வந்து ‘வே பேசாம வந்திரும் கேட்டேரா, …நாங்க உம்ம கைய கால கட்டி இளுத்துக்கிட்டு போனா நல்லா இருக்காது’ என்றார் . கடும் கோபத்துடன் ’முடிஞ்சா கூட்டிட்டுப் போடா…டேய், சூரியன் அணையாத பிரிட்டிஷ் சர்க்காருக்கு அதுக்க வேலைக்காரன பாதுக்காக்குத சக்தி இருக்கா இல்லியாண்ணுட்டு பாத்திருவோம்’ என்றார் அப்பா.

தலையாரி திக்பிரமை பிடித்துவிட்டார். அந்த கோணத்தில் அவர் யோசித்ததே இல்லை. அங்கே இருக்கும் அந்த கரிய மனிதன் ஒரு மாபெரும் வெள்ளைசாம்ராஜ்யத்தின் பிரதிநிதி! பீரங்கிகள், தொப்பிகள், ரைஃபிள்கள், குதிரைகள், முத்திரையிட்ட காகிதங்கள்…அவர் மேலே பேசவில்லை. மீசையை கோதியபடி கொஞ்ச நேரம் நின்றுவிட்டு திரும்பிச் சென்றுவிட்டார். போகும்போது ஒருமுறை அப்பாவை திரும்பிப்பார்த்தார்.

மறுநாளே தலையாரி சங்கரத் தேவரை வேலையில் இருந்து தூக்கி ஆணையிட்டார் அப்பா. மதியம் அவர் லேசான சாராய மணத்துடன் கம்பும் கையுமாக மீசையை கோதியபடி ஆபீஸ் வந்தபோது பியூன் கந்தசாமி பழுப்பு நிறமான சர்க்கார்காகிதத்தை கையில் கொடுத்தான். ‘என்னலே?’ என்றார் அவர் பீதியுடன். அவருக்கு வாசிக்கத்தெரியாது. ‘உம்மை வேலைய விட்டு தூக்கிட்டாருவே நாடாரு..’ என்றான் கந்தசாமி. சங்கரத்தேவர் திகிலடித்து நின்றார். அவர் அப்படி ஒன்று நிகழ முடியும் என்றே எதிர்பார்க்கவில்லை. நேராக வந்து ‘என்னவே இது?’ என்று காகிதத்தை ஆட்டி காட்டினார். ‘கவர்மெண்டு பேப்பராக்கும். அப்டி ஆட்டப்பிடாது’ என்றார் அப்பா. தேவர் கை காற்றில் நின்றது. முகம் வெளிறியது. ‘இனிமே நீரு வரவேண்டாம்….அங்க ஜமீனிலேயே போயி வேல பாரும்’ அப்பா சொன்னார்

ஏதோ சொல்ல வந்து சொல்ல முடியாமல் பிரமைபிடித்தவராக சங்கரத்தேவர் கிளம்பிச் சென்றார். மறுநாள் அவரும் அவர் மனைவியும் வந்து அப்பாவிடம் அழுது மன்றாடினார்கள்.’இந்தப்பாவி குடிச்சு தீக்குறதுல மிச்சத்த வச்சு சோறும்கஞ்சியும் குடிச்சு கெடக்கேன் சாமீ…வயத்தில அடிக்காதீக’ என்று பிள்ளையை இடுப்பில் வைத்துக்கொண்டு வண்டிமலைச்சி கெஞ்சினாள். குழந்தை ஆர்வமாக வேடிக்கை பார்த்தது. அவள் இடுப்பை பிடித்துக்கொண்டு முழுந்ர்வாணமாக ஒரு பையன் மூக்கில் கைவிட்டுக்கொண்டு விழித்து பார்த்தான். தேவர் தூண் மறைவில் ஒளிந்து நின்று ஓரக்கண்ணால் பார்த்தார்.

’செரி, உனக்காக பாக்கேன். நான் ஆரு சோத்திலயும் மண்ண போடுதவன் இல்லே’ என்றார் அப்பா. தேவரிடம் ‘ஆனா இனிமே தினம் காலம்பற இங்க வரணும். நான் சொல்லுறப்பதான் போகணும்.  சொல்ற வேலைய செய்யணும். இந்த ஆப்பீஸுக்குள்ள என்ன நடந்தாலும் நீருதான் பொறுப்பு, கேட்டேரா?’ ‘செரி’ என்றார் அவர். ‘இனிமே என்னை சார்னுதான் கூப்பிடணும்.. இது சர்க்கார் உத்தரவு. அந்த தாளிலே எளுதியிருக்கு’. ‘செரி சார்’ என்றார் தேவர். எதிர்பாராதவகையில் படீரென்று ஒரு சல்யூட் அடித்தார்.

மறுநாள் கணக்குப்பிள்ளை தேவரைக்கூப்பிட்டு அப்பாவை ஏன் அழைத்துவரவில்லை என்று திட்டினார். தேவர் உறுதியாகச் சொல்லிவிட்டார். ‘இங்க பாருங்க. நான் சர்க்காருத்தியோகஸ்தனாக்கும். மேல சூரியனுக்கு கெட்டு போட்டு வச்சிருக்கப்பட்ட ராஜ்ஜியமாக்கும் எனக்குள்ளது. நீங்க வெளியிலே என்ன வேணுமானாலும் செய்யுங்க. ஆப்பிஸிலே சார் எனக்கு எஜமான், நான் வேலைக்காரன். அங்க சார் சொன்னா நான் சரசராண்ணுட்டு பத்து தலைய வெட்டி அடுக்கிப்போடுவேன். பின்ன எனக்க மேலே வருத்தப்படப்பிடாது’

‘லே அவன் சொன்னா என் தலய வெட்டுவியாலே?’என்றார் கணக்குப்பிள்ளை. ‘பின்ன? சார் சொன்னா வெட்டணுமின்னுல்லா சர்க்காரு சொல்லுகான். நீரு என்ன, பூஞ்ச பிள்ளவாள். சாரு சொன்னாருண்ணாக்க வந்து சமீன் தலைய வெட்டி கீழ வச்சிருவோம்லா? ஏது?’ என்றார் தேவர். கணக்குப்பிள்ளைக்கு கண் பிதுங்கிவிட்டது. ‘சூரியன மந்திரம்போட்டு வச்சிருக்கப்பட்ட ராஜ்ஜியமாக்கும். இந்தா கண்டீரா? நோட்டீஸு?’ என்று அப்பா அவருக்களித்த வேலைநீக்க கடிதத்தை நீட்டினார். பிள்ளைவாள் அதை கையில் வாங்க தைரியப்படவில்லை. அதைத் தேவரே வந்து அப்பாவிடம் சொன்னார்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை இழுபறி நீடித்தது. மூன்றாவது நோட்டீஸ் போனபோது கணக்குப்பிள்ளை நோட்டீஸுடன் அவரே அப்பாவை பார்க்க வந்தார். வந்ததும் ’என்னவே?’ என்று சுபாவமாக உள்ளே நுழைய முயன்றவரை தேவர் தடுத்து ‘சாரு எளுதுகாருல்லாவே? அவரு விளிக்கட்டும் போலாம். இரியும்’ என்று வாசலில் நிறுத்திவிட்டார். கணக்குப்பிள்ளை வெளிறிவிட்டார். பிறகு உள்ளே வந்தபோது அவரால் வந்த வேகத்தில் பேசமுடியவில்லை. அப்பா கணக்குகளின் உள்ள சிக்கல்களைச் சொன்னபோது ‘இங்க இப்டியாக்கும். அது சர்க்காருக்கும் தெரியும்’ என்றார்

‘செரி. அப்ப நான் சர்க்காருக்கு எளுதுகேன்’ என்றார் அப்பா. ‘அப்டி எளுதுற வளமொறை இல்லல்லா’ என்றார் கணக்குப்பிள்ளை. ‘பின்ன? நான் எனக்க சோலிய செய்யணுமில்லா?’ கணக்குப்பிள்ளைக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ‘பெரியகருப்புத்தேவரு கலெக்டருக்க செல்லப்பிள்ளையாக்கும். ஒரு வார்த்தை சொன்னா துரை இங்க ஓடி வந்துபோடுவாரு…துரைக்கு வேட்டைக்குபோறதுக்கு கூட்டுகாரன் நம்ம தேவருல்லா?’ என்றார் பிள்ளைவாள். அப்பா ‘அது எனக்கெதுக்கு. நான் மேலே எளுதுகேன். கலெக்டர் அவருக்கு தோணினத செய்யட்டும்’ என்றார் ‘எனக்க சோலிய நான் செய்யுதேன்னு தேவரிட்ட சொல்லிடுங்க’

இவனுக்கு கிறுக்கா என்று பிள்ளைவாள் நினைத்தார். அனாவசியமாகச் சாக துணிகிறானே. எத்தனை பேரை கொன்று சத்தமில்லாமல் புதைத்திருக்கிறார்கள். ‘வே நாடாரே…உம்ம எனக்க மகன மாதிரி நினைச்சாக்கும் சொல்லுதேன். வேண்டாம் கேட்டேரா? லீவ போட்டுட்டு போவும். மாற்றம் வேங்கிட்டு நல்ல ஊராட்டு போயி ஒரு நல்ல நாடாச்சிய கெட்டி பிள்ளகுட்டியோட இரியும். இது கொலகாரப்பய ஊரு, வெட்டி புதைச்சிருவானுக. தேவருக்கு ஆளைக்கொல்லுகது ஒரு வெளையாட்டாக்கும்’ என்றார்

அப்பா திடமாக ‘வே, நான் எருக்குழியிலே இருந்து கேறி வந்தவனாக்கும். மரணத்தைக் காட்டிலும் மோசமான பலதையும் கண்டவன். இனி இந்த சென்மத்திலே நான் ஒண்ணுக்கும் பயப்படமாட்டேன் பாத்துக்கிடும். உமக்கெல்லாம் கணக்குவேலைண்ணா பல அர்த்தம் உண்டு. நீரு அதை வச்சு என்ன ஆட்டமும் ஆடலாம். நான் இப்பதான் கேறி வந்து பிடிச்சிருக்கேன். இந்தப்பிடி எனக்க பிடியில்லவே, எனக்கும் எனக்கு பின்னால வாற ஏழு தலைமுறைகளுக்கும் சேத்து உண்டான பிடியாக்கும். இப்பம் நான் இத விட்டா எட்டு தலைமுறைகளாக்கும் கீழ விழுகது, கேட்டேரா? சாவுறதுக்கு நாடாரு ரெடியாக்கும்னு போயி சொல்லும்..போவும் வே’ என்றார்

கணக்குப்பிள்ளை திகைத்து அமர்ந்திருந்துவிட்டு கிளம்பிச்சென்றார். தலையாரி தேவர் ‘சார் வெளியே போகாதீங்க. கண்ட எடத்திலே வெட்டுகதுக்கு வந்திருவானுக’ என்றார். அப்பா ஆபீசிலேயே இருந்தார். மறுநாள் காலையில் ஜமீந்தார் தடதவென்று குதிரையில் வந்து ஆபீஸ் முன் இறங்கினார். கூடவே வந்த வேட்டைக்காரர்கள் வெளியே நின்றார்கள். அவர் வெள்ளைக்கார வேட்டை உடையில் இருந்தார். அப்பா எழவில்லை. வரவேற்கவில்லை. கையில் நீளமான ரைஃபிளுடன் தடதடவென படி ஏறி வந்த ஜமீந்தார் அவரது அறை வாசலில் நின்று துப்பாக்கியை நீட்டினார். டிரிக்கரில் அவரது கை இருந்தது.

அப்பா அந்தக் கணத்தில் ஒருமுறை செத்துப் பிழைத்தார். பின்பு ‘சுடுறதுன்னா சுடலாம். பிரிட்டிஷ் அதிகாரியா பிரிட்டிஷ் ஆபீஸிலே சாவுறதுக்கு ஒரு யோகம் வேணும்லா?’ என்றார். ஜமீந்தார் ரைஃபிளை தாழ்த்திவிட்டார். ‘சுடும் வே…நீரு பெரிய புடுங்கில்லா….கொல்லவும் கொள்ளையடிக்கவும் லைசன்ஸ் உள்ளவருல்லா…சுட்டுட்டு போவும். நான் செத்தா அது அப்டி தீராது வே . குளவிக்கூட்டிலயாக்கும் நீரு கைய வைக்குதீரு. கெளம்பி வருவோம் வே. அலையலையா பெத்து பெறந்து வந்துகிட்டே இருப்போம். எம்பிடு பேர நீரு சுடுவீருண்ணு பாக்குதோம்’ என்று அப்பா சொன்னார். அந்த நேரத்தில் அந்த அறையில் அவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் பல்லாயிரம்பேர் கேட்டுக்கொண்டிருப்பது போல அப்போது அவருக்குத் தோன்றியது

அந்த தைரியத்தை ஜமீந்தார் எதிர்பார்க்கவில்லை. அவரால் எதையும் சிந்திக்க முடியவில்லை. அவரது கைகள் நடுங்கின, துப்பாக்கியை தழைத்துக்கொண்டார். அந்த தயக்கத்தை அப்பா பயன்படுத்திக்கொண்டார். ‘நீரு சுட்டுட்டு தப்பிடலாம்னு நினைக்கேரா? நான் கிஸ்தி பிரிக்கவேண்டிய ஆப்பீஸராக்கும். நீரு நினைக்குதது மாதிரி ஒரு கலெக்டர் போறபோக்கிலே இந்த கேஸ மூடிர முடியாது. பிடிச்சு தூக்கில ஏத்திப்போடுவான் வெள்ளக்காரன். உம்மை பிடிச்சு தூக்கிலே போட்டுட்டு ஜமீனை வேற ஆளுக்கு குடுக்கதானா உம்ம பங்காளிகள் வந்து நிப்பானுக சாட்சி சொல்லுகதுக்கு. தெர்யுமா?’ என்றார்

ஜமீந்தாரின் முகம் மெல்ல நிதானம் அடைந்தது. கண்கள் தந்திரத்துடன் இடுங்கின. ‘டேய் நீ புத்தியுள்ள நரி…ஆனா நாங்க இந்த புத்திய பத்து தலமொறையா வச்சு வெளையாடுதவனுக. பாப்போம். இந்த வளாகத்திலதானே நீ ஆப்பீஸரு? இத விட்டு வெளிய வா. உன்னைய ஆனை மிதிச்சு கொல்லும். வழிய போற தேவன் வெட்டுவான். என்னல செய்வே? பாப்போம்..’ என்றபின் தடதடவென இறங்கிசென்று குதிரையில் ஏறி குளம்புகள் சேற்றை மிதித்து தெறிக்க திரும்பிச் சென்றார்

அப்பா அந்த அலுவலகத்தை விட்டு வெளியே செல்லவே இல்லை. அவர் வெளியே சென்றால் அவரைக் கொல்ல எல்லா இடத்திலும் ஆட்கள் பதுங்கி இருந்தார்கள். அதை தேவர் வந்து சொன்னார். பியுன் கந்தசாமி லீவு போட்டுக்கொண்டான். ஆனால் சங்கரத்தேவர் வேல்கம்புடன் அலுவலகத்திலேயே தங்கி விட்டார். அப்பா சமைத்ததை அவரும் சாப்பிட்டார். இரவில் திண்ணையில் சாக்கைப் போர்த்திக்கொண்டு ஒருகணம்கூட கண்ணயராமல் காவலிருந்தார். பகலில் ஆபீஸ் திண்ணையில் தூங்கினார். ஒரு ஓணான் ஓடும் ஒலி கேட்டல்கூட வேல்கம்புடன் எழுந்தார்.

இருபத்தேழு நாள் அந்த கெடுபிடி நீடித்தது. அப்பா ஆபீஸ் வளாகத்தைவிட்டே வெளியே வரவில்லை. தேவர் கையில் வேல்கம்புடன் தபால் அலுவலகம் சென்று கடிதங்களை கொண்டுவந்து திருப்பி கொண்டு சென்றார். தேவையான மளிகை வாங்கி வந்தார். மடியில் ’சர்க்கார் கடுதாசி’யை ஆதாரமாக வைத்திருந்ததனால் தலை நிமிர்ந்துதான் சென்றார்.

நாட்கணக்காக அப்பா காத்திருந்தார். அவர் முன்னால் கண்ணுக்குத் தெரியாமல் மரணம் பதுங்கி காத்திருந்தது.அப்போதுதான் ஒருநாள் இரவில் அப்பாவுக்கு ஒரு கனவு வந்தது. அவரது டீக்கடையில் நேசமணி வந்து அமர்ந்து டீ குடிப்பதாக. ‘என்னலே மக்கா?’ என்று கோட்டை காலரை தூக்கி பின்னால் விட்டுகொண்டு அலட்சியமான உரத்த குரலில் அவர் கேட்டார். அப்பா விழித்துக்கொண்டார். உடனடியாக நடந்தவற்றை விரிவாக எழுதி நேசமணிக்கு ஒரு கடிதம்போட்டார்.

நேசமணி அந்தகடிதத்தை நெல்லை கலெக்டர் வரைக்கும் கொண்டு செல்லக்கூடும், ஒருவேளை போலீஸ் உதவி வரக்கூடும் என்றுதான் அப்பா எதிர்பார்த்தார். ஆனால் ஐந்தாவது நாள் தென்காசியில் இருந்து இலஞ்சி நோக்கி எழுபது எண்பது பேர் கொண்ட ஒரு கூட்டம் அரிவாள்களும் வேல்கம்புகளுமாக திரண்டு வந்தது. அதன் முன்னால் ஒரு யானை. ’ காங்கிரஸுக்கு ஜே! மகாத்மாகாந்திக்கு ஜே, பண்டிட்டு நேருவுக்கு ஜே! சுபாஷ் சந்திரபோசுக்கு ஜே’ என்று பெரும் கூச்சல்

அப்பா மதியம் ஆபீஸில் இருந்தபோது சத்தம் கேட்டு வெளியே வந்தார். தேவர் அரிவாளுடன் வாசலில் சென்று நின்று ’ உள்ள போங்க சார்…என்னைய மீறி ஒருத்தனும் உள்ள வந்துகிடமாட்டான்’ என்றார். அப்பா முதலில் வாசலை மூடி பெரிய பாறை முளைத்தது போல நின்ற கொம்பன்யானையைத்தான் பார்த்தார். ஒன்றும் புரியவில்லை. பின்னர்தான் முன்னால் வந்த நேசமணியை பார்த்தார்.

‘வே தேவரே, இது எனக்க நேசமணி வக்கீலாக்கும்’ என்றார் அப்பா. ‘ஆரு?’ என்றார் தேவர். ’எங்க தலைவரு…’ என்று அப்பா வெளியே சென்றார். பாய்ந்து சென்ற அவரை நேசமணி அள்ளி மார்போடு அணைத்துக்கொண்டார் . ’ஆணுக்குப் பெறந்தவன்ல நீயி…நிண்ணு காட்டினியே.. லே, நிண்ணு காட்டணும்ல…எங்கயும் நாம நிண்ணு காட்டணும்…. நீ வெளிய எறங்கினா எவன் வெட்டுகான் பாப்பம்…ஏறுல ஆனை மேலே’ என்றார்.

அப்பா ‘அய்யோ’ என்றார் ‘லே,நானாக்கும் சொல்லுகது. ஏறு ஆனை மேலே’ அவர் பாகனுக்கு கை காட்ட யானை குனிந்து முன்காலை காட்டியது. அதன் காதைப்பற்றிக்கொண்டு காலில் மிதித்து ஏறி மத்தகத்தின் மேல் அமர்ந்தார் அப்பா. பெரியதோர் பாறை மேல் அமர்ந்துகொண்டது போல இருந்தது.

பாகன் சத்தம் கொடுத்ததும் யானை எழுந்தது. அப்பா மேலே சென்றார். அந்த அசைவை அவர் வாழ்நாள் முழுக்க ஆவேசமாக வர்ணிப்பதுண்டு. எத்தனை முறை எத்தனை எத்தனை சொற்களில் அதைச் சொல்லியிருக்கிறார். அதிகம் போனால் மூன்றடி உயரம் அந்த மேலெழும் அசைவு இருந்திருக்கும். ஆனால் அது நெடுநேரம் அவரது மனதில் நிகழ்ந்தது.

அவர் சென்றுகொண்டே இருந்தார். மண் அவரில் இருந்து கீழே இறங்கிச்சென்றது. அலுவலகம் அதன் ஓட்டுக்கூரையுடன் கீழிறங்கியது. மரக்கிளைகள் கீழே சென்றன. சாலையும் மனிதர்களும் கீழே சென்றார்கள். ஒளியுடன் வானம் அவரை நோக்கி இறங்கி வந்தது. அவரைச்சுற்றி பிரகாசம் நிறைந்திருந்தது. வானத்தின் ஒளி. மேகங்களில் நிறைந்து ததும்பும் ஒளி.

யானை நடந்தபோது அவரே யானையாகி அசைவதை உணர்ந்தார் அப்பா. ‘ஆனைன்னா என்னண்ணு அதுக்கு மேலே கேறினாத்தான்லெ தெரியும். ஆனைன்னா சக்தியாக்கும் கேட்டியா? ஒரு குண்டூசிய வச்சு கோட்டைய உடைச்சிரலாம்னுட்டு தோணிரும் அப்ப…ஆனைக்க நடையிருக்கே. அதாக்கும் நடை…அதுக்க கெம்பீரம் வேற கேட்டியா?’ அப்பாவால் அதை சொல்லி சொல்லி முடிக்க முடியாது. அப்பா அசைந்து அசைந்து வானில் நடந்து சென்றார்.

அப்பாவை யானைமேல் வைத்துக்கொண்டு இலஞ்சி முழுக்க தெருத்தெருவாக கோஷமிட்டுச் சென்றது ஊர்வலம். இருபக்கமும் வந்து நின்று ஆட்கள் பிரமித்துப்போய் பார்த்து நின்றார்கள். வீடுகளின் சன்னல்கள் முழுக்க பெண்முகங்கள் பிதுங்கின. கோயில்முன்னால் சென்று நின்று கூச்சலிட்டார்கள். அப்படியே சுற்றிக்கொண்டு சாவடி முன்னால் சென்று நின்றார்கள். அப்பாவைக்கொல்ல வேல்கம்பும், கவணும், அரிவாளுமாக அலைந்த ஜமீன் ஆட்கள் எல்லாம் பீதிபடிந்த கண்களுடன் பார்த்து நின்றார்கள்

கூட்டம் அப்படியே ஜமீன் பங்களா நோக்கிச் சென்றது. அவர்கள் வருவதைக் கண்ட ஜமீன் வளாகத்தின் கேட்கதவுகள் மூடப்பட்டன. ‘உடைச்சு போலே உள்ள’ என்று நேசமணி கத்தினார். யானை முன்னங்காலை தூக்கி ஓர் உதைவிட்டதும் கேட் திறந்து மடேலென சரிந்தது. நேராக ஜமீன் பங்களாவின் முற்றத்தில் யானை சென்று நின்றது. மிருகசாலைக்குள் கூண்டுக்குள் கரடிகளும் சிறுத்தையும் யானையின் வீச்சம் கேட்டு பயந்து பரிதவித்து சுற்றிவந்தன. காட்டுபூனைகள் மூலைகளில் தாவிப்பதுங்கி அஞ்சி சீறின.

அப்பா ஜமீன் பங்களாவின் கூரை விளிம்புக்கு மேல் இருந்தார். அந்த ஓட்டுக்கூரையை அவர் தன் காலால் எத்தினார். கூட்டம் ஆர்ப்பரித்து கூச்சலிட்டது.அரைமணிநேரம் அங்கேயே நின்று ’ காங்கிரஸுக்கு ஜே! மகாத்மாகாந்திக்கு ஜே, பண்டிட்டு நேருவுக்கு ஜே! சுபாஷ் சந்திரபோசுக்கு ஜே! காமராஜுக்கு ஜே! நேசமணி ராசாவுக்கு ஜே!’ என்று கோஷமிட்டபின் அதேபோல யானையில் திரும்பிசென்றார்கள்.

அப்பா ஆபீஸ் வாசலில் இறக்கி விடப்பட்டார். அவர் தன் உடலில் யானையின் அசைவுகள் மிச்சமிருப்பது போல உணர்ந்தார். இரு தொடைகளும் கடுத்து உளைந்தன. காலை அகட்டி நடந்தபோது மிதந்து செல்வது போல இருந்தது. ‘’ஏலே, அண்ணைக்கு எனக்க நடை மாறிச்சுலே. அதுக்கு பின்னால எப்பமும் எனக்க நடையிலே அந்த ஆட்டம் உண்டு பாத்துக்க’ என்று அப்பா சொல்வதுண்டு. அப்பாவை ஆபீஸில் விட்டு விட்டு நேசம்ணியும் குழுவும் கிளம்பிச் சென்றார்கள். ‘இனிமே ஒரு பய உனக்க மேலே கைய வைக்க மாட்டன் பாத்துக்க.. தைரியமாட்டு இரி’ என்று சொல்லி நேசமணி விடைபெற்றார்.

ஆமாம், அதன்பின்னால் அப்பா ஏழுவருடம் இலஞ்சியில் வேலைபார்த்தார். ஜமீந்தாரின் நிதி முறைகேடுகளை அறிக்கையிட்டார். நிலங்கள் மறு அளவை செய்யப்பட்டு உரியவர்களுக்கு அளிக்கப்பட்டன. ஒருகட்டத்தில் ஜமீந்தாரின் பங்காளிகளே அப்பாவுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்தார்கள். அப்பா சாலையில் நடந்துசென்றால் எதிரே வருபவர்கள் ஓரமாக விலகி நின்று வணக்கம் சொல்வார்கள். அவர்கள் எப்போதுமே அவருக்கு ஒரு யானைபோகுமளவுக்கு இடம் விட்டார்கள்.

‘ஏல, அவனுக கண்ணுக்கு நான் ஆனைமேலயாக்கும் போயிட்டிருந்தேன்…’என்றார் அப்பா. ’ஏன்னா எனக்க மனசிலே எப்பவும் ஆனை உண்டு. எனக்க நடையிலே ஆனை உண்டு பாத்துக்க’ அவர் பேருடன் யானை ஒட்டிக்கொண்டது. ஆனைக்கறுத்தான்நாடார் என்றுதான் அவரே கடிதங்களில் தன்னை எழுதிக்கொண்டார்.’ஆனைமேல போறவன் குனியமுடியாது. வழிவிட்டு ஒதுங்கமுடியாது, கேட்டியாலே?’

இலஞ்சியில் வேலைபார்க்கும்போதுதான் அப்பா திருமணம் செய்துகொண்டார். நான் பிறந்தேன். எனக்கு பெயரிடும்போது அப்பாவுக்கு அந்த கணம் சட்டென்று தோன்றியது அந்தப்பெயர் ‘வணங்கான்’. அம்மா ‘அது என்னது? ஒருமாதிரி பெயரா இருக்கு’ என்றாள். ‘சும்மா கெட..அவனுக்க பேரு அதாக்கும் ,வணங்கான்நாடார்.’ என்றார் அப்பா. எனக்கு என் பிறப்பிலேயே நான் மீறமுடியாத ஆணை ஒன்றை அளித்தார்.

எனக்கு ஏழுமாதம் இருக்கும்போது என்னை எடுத்துக்கொண்டு பள்ளியாடியில் நேசமணியை பார்க்கச்சென்றார் அப்பா. நேசமணி கூடத்தில் செய்தித்தாள் படித்துக் கொண்டிருதார். அப்பாவுப் பெருவட்டரின் பெரிய வீட்டில் நுழைந்து முன்கூடத்தில் இருந்த அவரது புகழ்பெற்ற மகனின் முன்னால் நின்றார். அவர் ‘இரில’ என்றதும் நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்துகொண்டு என்னை அவர் கையில் கொடுத்தார். ‘என்னவாக்கும் பேரு?’ என்றர் நேசமணி. அப்பா சொன்னார். நேசமணி புன்னகைசெய்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *