யதார்த்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 9,444 
 

இவ்வளவு பணத்தையும் கொண்டு போவது பற்றி என்னைப் போலவே அவருக்கும் பிரச்சனை இருந்தது. ஒரு ஆட்டோவைப் பிடித்துப் போகும் படிக்கு எனக்கு ஆலோசனை வழங்கினார். ஆட்டோவைப் பிடிப்பது என்றாலும் அதற்காகும் பணத்திற்கும் இந்தப் பணத்திலிருந்து தான் எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற சங்கடம் எனக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அதை நண்பருக்குச் சொல்லும் அசந்தர்ப்பத்தைத் தவிர்த்துக் கொள்ளவே விரும்பினேன். அதனாலேயே பஸ்ஸில் போவதை அசெளகர்யக் குறையாயில்லை என்பதை அழுத்திச் சொன்னேன். பணம் ஏற்கனவே கட்டப்பட்டு பத்திரிகைக்கட்டொன்றை எடுத்துச் செல்வது போல ஒழுங்கு படுத்தியிருந்தேன். பார்க்கும் யாருக்கும் சந்தேகம் வராதிருக்கவே இந்த ஏற்பாடு. ஆனாலும் இவ்வளவு பெருந்தொகைப் பணத்தையும் இவ்வாறு அஜாக்கிரதையாக எடுத்துச் செல்வதாகவே நண்பர் நம்பினார். கூடுதல் பாதுகாப்பு அதிக கவனத்தை ஏற்படுத்தும் என்றும் அதனால் வேண்டாதவர்களின் பார்வை என் மீது விழுந்து விடக் கூடுமென்றும் நான் நம்பினேன். ஒவ்வொருவரின் பார்வையும் எண்ணங்களும் வேறுபட்டிருப்பது தானே இங்கு இயல்பாயிருக்கின்றது. ஆட்டோவில் போகலாமென்ற அவரின் புத்திமதி எனக்கும் உவப்பாய்த்தானிருந்தது. ஆனாலும் என் பாக்கெட்டில் அதற்கான கனமில்லை என்று எப்படி சொல்லிக் கொள்வது. அவரிடம் கேட்டால் இன்னுமொரு இருபது ரூபாய்களைத் தர மறுப்பேதும் சொல்லிவிட மாட்டாரென்பதும் எனக்குத் தெரியும். அந்த இருபது ரூபாய்களுக்காக என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏற்கனவே எனது நட்புக்காக இத்தனை உதவி செய்திருக்கும் அவரை மேலும் தர்மசங்கடப் படுத்தக் கூடாதென்ற நல்லெண்ணமும் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

மகளின் திருமணம் இனி நல்லபடியாக நடந்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருந்தது. இது பேசிச் செய்யும் திருமணமில்லை. எனது மகளும் மாப்பிள்ளையும் ஒரே இடத்தில் வேலை செய்பவர்கள். ஒருவரில் ஒருவர் மனம் விரும்பி விட்டிருந்தார்கள். அவர்களாகவே பெண் கேட்டு வந்தபோது எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அவர்களை பற்றிய உயரிய விம்பமும் தோன்றியிருந்தது. மகளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைந்ததென்றும் ஆனந்தப் பட்டுக்கொண்டோம். ஆனாலும் அந்த மகிழ்ச்சிக்கும் ஒரு விலை உண்டென அவர்களுடன் பேசியபோது உணரமுடிந்தது. என்னதான் மனம் விரும்பியிருந்தாலும், பெரியவர்களுக்கும் சம்மதமென்றிருந்தாலும் சிலசில சம்பிரதாயங்களை விட்டுக்கொடுக்க முடியாதென்று தெரிவித்து விட்டார்கள். மூத்த மகளின் திருமணம். வீட்டில் எல்லோருக்கும் பிடித்திருந்தது. ஆனாலும் அவர்களின் எதிர்பார்ப்பு எங்கள் வசதிக்கும் மேலால் இருந்தது தான் கவலைப் படுத்தியது. இதற்கு மேல் அவர்களால் இறங்கி வரமுடியாதென்பது அவர்களிடம் பேசிப்பார்த்ததில் புரிந்தது. நல்ல சம்பந்தம். ஆனாலும் பெண்ணைப் பெத்தவர்களின் அவஸ்தைகளைப் புரிந்து கொள்ள முடியாதவர்களை என்ன செய்வது. பெண்ணின் கவலையையும் பெற்றவளின் வருத்தத்தையும் கண்கொண்டு பார்க்கச் சகிக்கவில்லை. மூத்தவள் வழிவிடக் காத்திருக்கும் இளையவள். வாழ்க்கை அதன் கடின முகத்தைக் காட்டத் துணிந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டேன். எதற்கும் ஒரு தீர்வு இருக்கும் என்பதை நம்பினாலும் அதை எப்படிக்கண்டு பிடிப்பது என்பதுதான் புரியாமலிருந்தது. அந்த நேரத்தில் உதவ வந்த நண்பனிடம் தான் பணத்தை வாங்கிக் கொண்டு புறப்பட்டுக் கொண்டிருந்தேன்.

நண்பனும் பஸ் தரிப்பிடம் வரை கூடவே வந்திருந்தான். அவன் கூட இருந்தது எனக்கும் தெம்பாக இருந்தது. என்னதான் நான் பெரிதாக வீரம் பேசியிருந்தாலும் பணத்தை கையில் எடுத்ததிலிருந்து பயம் பிடித்துக் கொண்டது. இதை ஒழுங்காகக் கொண்டு சேர்த்து விடவேண்டுமேயென்ற கவலை தொற்றிக் கொண்டது. வந்த பஸ்களும் ஜனக்கூட்டத்துடன் பிதுங்கி வழிந்தபடியே வந்தன. வந்தபடியே நிற்காமலே போய்ச் சேர்ந்தன. நண்பனின் தொணதொணப்பும் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. எனது பிடிவாதம் காரணமற்றது என்று விளாசிக் கொண்டிருந்தான். எனது தவறு எனக்கு உறைக்கத்தான் செய்தது. சில தறுகளை நாங்கள் வேண்டுமென்றே செய்வதில்லை தானே. சந்தர்ப்ப சூழ்நிலைகள் எவ்வாறெல்லாம் செயற்பட வைக்கின்றது. அவனிடம் என் கையாலாகாத் தன்மையை ஒத்துக் கொள்ளவும் பாழாய்ப்போன தன்மானம் இடங்கொடுக்கமாட்டேன்கிறதே.

அடுத்து வந்த பஸ் ஒன்று தரித்து நின்றது. பாய்ந்துபோய் ஏறினேன். படியை விட்டு மேலேற முடியவில்லை. “இறங்கி விடு இறங்கி விடு” என்று நண்பன் அலறுவது கேட்டது. ” இல்லை பரவாயில்லை. சமாளித்து விடுவேன் ” என்று அவனுக்குக் கூறிக்கொண்டே உள் நுழைய முயற்சித்தேன். அவனிடம் இருந்து தப்பிக் கொள்வதற்கும் என் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் இதை விட்டால் வேறு வழி எனக்குத் தெரியவில்லை.உள்ளே நுழைய முடிந்தால் தானே. உள்ளிருந்து வெளித்தள்ளிய நெருக்குவாரத்தைச் சமாளிப்பதே பெரும் பாடாக இருந்தது. பணக் கட்டை நெஞ்சுடன் சேர்த்து அணைத்துக் கொண்டேன். எனக்கும் கீழே நின்றவன் குரல் கொடுத்தான். ” சார் பயப்படாதே நான் உன்னை விழாமப் பிடிச்சிக்கிரேன் ” பான் பராக் போட்டிருந்தான் போலும். எச்சில் பறக்கப் பேசினான். அப்பொழுது தான் அவனை நன்கு கவனித்தேன். தலை கலைந்து பறக்க நாலு நாள் சவரம் செய்யாத தாடி மீசையுடன் ரவுடியைப் போல தோன்றினான். என்னையே குறி வைத்து வந்திருப்பானோ?

மயிர்க்கால்களெல்லாம் சில்லிட்டுப் போய் விட்டன. அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஜாலியாகச் சிரித்தான். சிரிப்புக்குள் ஏதோ புதைந்திருப்பது போல என்னை இன்னும் இன்னும் பயங்கூட்டியது. அவனின் பார்வையைத் தவிர்க்கும் நோக்கில் உடலைத் திருப்ப முயற்சித்தேன். எனக்கும் மேலே பெருத்த உடலுடன் ஒருவன் முழுப் பாதையையும் அடைத்தவண்ணம் நின்றிருந்தான். அவன் மட்டும் உள்ளே சென்று விட்டால் பெரிய இடம் கிடைக்கக் கூடும். அந்த இடைவெளியில் நானும் ஊள்ளே சென்று விடக் கூடும். அவனை உள்ளிற்குத் தள்ளும் முயற்சியில் முதுகால் நெம்பித்தள்ளினேன். அந்த பெருத்த உடல் அசைந்தால் தானே. எனக்கு மூச்சுத்தான் வாங்கியது.

அந்தவேளையில் தான் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. பெருத்த உடல் காரன் தன் இடக்கையினை விசுக்கென பின்னால் விசுறினான். சரியாய் குறிவைத்ததுபோல என் பணக்கட்டில் வந்து மோதியது. என் கையின் இறுக்கத்தை மீறி பணக் கட்டு எகிறிப் பறந்தது. பாய்ந்து அதனைப் பற்றிப் பிடிக்க முயன்ற போது பின்னங்கையில் பட்டு வாசலை நோக்கிப் பறந்தது. வாசலில் நின்ற தாடிக் காரன் அதனைப் பாய்ந்து பிடிக்க முயற்சிக்க அது மீண்டும் தட்டுப் பட்டு என் கைகளுக்குள்ளேயே வந்து விழுந்தது.

அதே நேரத்தில் கைகளின் பிடிப்பை விட்டிருந்த தாடிக்காரனின் கால்கள் பலன்ஸை நழுவ விட காற்றில் அலைந்து வேகமாக அடுத்த லேனில் வந்த காரில் மோதி இரத்தம் கக்கி சக்கரத்துள் நசிபட்டு வீதியின் ஓரத்தில் இரத்தச் சகதியாக ‘அது’ போய் விழுந்தது.

பஸ்ஸினுள் எழுந்த அலறலும் அதனைத் தொடர்ந்து கிரீச்சிட்டு நின்ற வாகனங்களும் ,நின்ற பஸ்ஸினின்றும் குபுகுபுவென இறங்கி ஓடியவர்கள் என்னையும் வீதியோரத்தில் தள்ளிவிட பணம் காப்பாற்றப் பட்ட நிம்மதியுடன் நடந்து கொண்டிருந்தேன்.

– பெப்ரவரி 2006 (இளந்திரையன் [ilan19thirayan@yahoo.ca])

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *