கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2016
பார்வையிட்டோர்: 12,519 
 

அப்பா, லெட்ரீன் குழாய் ஒழுகுது” சொல்லிக் கொண்டே வேகமாய் வெளியே வந்தான் சதீஷ். கதவைப் படாரென்று சாத்தும் சத்தம். அதனைத் தொடர்ந்து டொக், டொக்கென்று விளக்குகளை சத்தமெழ அணைக்கும் சத்தம். ஒரே ஆர்ப்பாட்டம்தான்.

போவது கழிப்பறைக்கு. அதற்கு குளியலறை லைட்டையும் சேர்த்து ஏன் போட்டுக் கொள்ள வேண்டும். அதுவும் பட்டப் பகலில். போதுமான வெளிச்சம் உள்ள இடம்தான். ஆனாலும் லைட்டை எரிய விடுவது என்பது வழக்கமாகிவிட்டது. இவனுக்கும் சரி, இவன் அம்மாவுக்கும் சரி. ரெண்டு பேரும் சொன்னால் கேட்கமாட்டார்கள். அவர்கள் வழக்கப்படிதான் செய்வார்கள். போய்விட்டு வெளியே வந்து, “டொக்கு டொக்கு’ என்று அந்த சுவிட்சை சத்தம் எழ அணைப்பார்கள். இப்டி பத்துதரம் செய்தா வேறே சுவிட்ச் மாற்ற வேண்டியதுதான். அதைக் கொஞ்சம் மெதுவாகச் செய்தாத்தான் என்ன? அப்படி அணைக்கிறது என்ன ஸ்டைலா?

“”மாத்து. போனாப் போகுது”. அவன் சொல்வதை இவளும் ஆமோதிப்பாள். எடுத்ததற்கெல்லாம் தான் குற்றம் சொல்வதாய்த்தான் நினைக்கத் தெரியும். அதிலுள்ள நியாயத்தை எண்ணிப் பார்க்கத் தெரியாது. சர்வ சாதாரணமாய் மாற்று என்கிறான். ஒரு சுவிட்ச் வாங்கப் போனால் அம்பது அறுபது ரூபாய். அதை மாற்ற ஒரு எலெக்ட்ரீஷியனை வேறு கூப்பிட வேண்டும். அவனுக்கு எழுபது கூலி. ஆக நூற்றி இருபது, நூற்றி ஐம்பது ஆகி விடும். ஒரே ஒரு சுவிட்ச் மாற்ற என்றெல்லாம் ஆட்கள் வருவதில்லை இப்போது. படு கிராக்கியாகிப் போனது. ஏதேனும் ரெண்டு மூணு வேலை என்று சொன்னால்தான் பார்க்கலாம் என்கிறார்கள். அப்போதுதானே ஐநூறு, அறுநூறு தேற்ற முடியும்.

யதார்த்தம்“”ஒரு நாளைக்கு, ஏழெட்டுத் தரம் இப்டி டாய்லெட்டுக்கும், பாத்ரூமுக்கும் குளிக்க, கை கால் முகங்கழுவன்னு போயிட்டு வர்றோம்னா. அத்தனை தரம் நீங்க ரெண்டு பேரும் லைட்டை யூஸ் பண்றீங்க அதுவும் பகல்ல. . . யோசிச்சுப் பாருங்க. ரெண்டு மாசத்துக்கொரு தரம் இ. பி. பில் வருது. இப்டிப் பகல்லயே லைட்டை எரிய விட்டா, கரன்ட் சார்ஜ் என்னாகுறது? ராத்திரிப் போட்டுக்கிறதைப் பத்தி நான் எதுவும் சொல்லலை. அதுலயும் எங்க போறமோ, அந்த ரூம் லைட்டை மட்டும் எரியவிட்டாப் போதுமில்ல? டாய்லெட் போனா, அந்த லைட்டை மட்டும்தானே போட்டுக்கணும்? எதுக்காக பாத்ரூம் லைட்டையும் சேர்த்து எரிய விடணும்? வந்து கைகழுவறபோது போட்டுக்கலாமில்ல. இதெல்லாம் ரொம்பச் சாதாரண விஷயங்கள். நீங்களா செய்துக்கணும். இதுக்கு ஒரு ஆள் சொல்லணும்ங்கிறதில்லை. ஆனா சொல்ல வேண்டியிருக்கு. ரெண்டு மாசத்துக்கொரு தரம் ஐநூறு யூனிட்டுக்குள்ள வந்தா நல்லது. அதுவே ஜாஸ்திதான். போகட்டும் பரவால்ல இல்லன்னா தண்டம்தான் கட்டணும். ரெண்டாயிரம், மூவாயிரம்னு. பார்த்துக்குங்க”

இவர் பேச்சை பையன் “கேர்’ பண்ணியதே இல்லை. அவளும் கண்டு கொள்வதில்லை. நீயென்ன சொல்றது, நானென்ன கேட்குறது என்கிற கதைதான். செலவு செய்யலாம். விரயம் செய்யலாமா?

“”போதும் இது ஒண்ணுதான் தெரியும் உங்களுக்கு. எதுக்கெடுத்தாலும் இதைச் சொல்லிண்டு”.

இப்படிப் பையன் காது கேட்கவே சொன்னால் எப்படி? சொல்லியும், இருந்தும் அவன் பார்த்ததனால்தானே அவனுக்கும் அந்தப் பழக்கம் படிந்திருக்கிறது?

இதோ, இப்போது லெட்ரீன் குழாய் ஒழுகுகிறது என்கிறான். அதாவது அவன் சொல்வது தண்ணீர் நிற்காமல் போய்க் கொண்டிருக்கிறது என்பதாகும். அதற்கு என்ன அர்த்தம்? சரியாக மூடவில்லை என்று அர்த்தம். குழாய் சொட்டுது என்றாள் அவள். இழுத்து மூடு என்றார் இவர். அதற்கு ஒரு வாஷர் மாற்ற வேண்டும்தான். இந்தக் காலத்தில் அதெல்லாமா செய்கிறார்கள்? “”வேறே குழாய் போட்ருவோம் சார்” என்று ஆளையே அல்லவா மாற்றி விடுகிறார்கள்

அதைக் கொஞ்சம் அழுத்தி மூடினால்தான் என்ன அழுகியா போய்விடுவோம்? ஏதோ அவ்வப்போது ரெண்டு சொட்டுச் சொட்டினால், சொட்டிவிட்டுப் போகிறது? வாளியில்தானே விழுகிறது. வீணாகவில்லையே? இதற்குப் போய் குழாயையே மாற்ற வேண்டுமா? முணுக்கென்றால் செய்துவிட வேண்டுமா?

“”நாளைக்கு நான் பழசானா, என்னையே மாத்திடுவேளா?”

“”போரும். நீங்களும் உங்க பேச்சும்”

“”அப்டித்தானே இருக்கு உங்க பேச்சு. தொட்டதுக்கெல்லாம் எல்லாத்தையும் மாத்துறதுன்னா. அதுக்கு ஒரு வரைமுறையே இல்லாமப் போயிடுமாக்கும். ஒரு பொருள் அதுக்கான முழு உபயோகத்தை அடைய வேண்டாமா? முக்கால் பங்காவது உழைக்க வேண்டாமா? சட்டுச் சட்டுன்னு மாத்து, மாத்துன்னா மாசத்துக்கு ரெண்டுன்னு எதாச்சையும் மாத்திண்டே இருக்க வேண்டிதான். எதாச்சும் விடாம செலவு பண்ணிட்டேயிருக்க வேண்டிதான். கடைசியா என்னையும் மாத்தி கதையை முடிக்க வேண்டிதான்”.

“”ஏன் என்னைக் கூட மாத்திக்கலாமே. கூடாதுன்னிருக்கா?”

“”இனிமே எங்க மாத்துறது! அதான் காலம் போயிடுத்தே. நீயும் நானும் புடவையும், வேஷ்டியும் மாத்திக்க வேண்டிதான். அதான் சாத்தியம்”.

பல சமயங்களில் பேச்சு படு தமாஷாகப் போகும். இஷ்டத்துக்கு அடிச்சு விடுவார் சிவராமன். நகைச்சுவை உணர்வு எப்போதுமே அவருக்கு அதிகம். அது அவர் உடன் பிறந்தது என்று கூடச் சொல்லலாம். ஆனால் காயத்ரிக்கு அது துளியும் இல்லை.

“”நீ இப்டி இருக்கிறதுனாலதான் பிபி, ஷூகர்னு எல்லாமும் வேணுங்கிற அளவுக்கு இருக்கு உனக்கு. என்னை மாதிரி விட்டேத்தியா இருக்கப் பழகிக்கோ. இனிமே என்னத்தப் பழகுறது கட்டையோட போனாத்தான் ஆச்சு”.

கழிவறைக்குள் இவர் நுழைந்து அந்தக் குழாயை இறுக்க மூடி விட்டு வந்தார். தண்ணி நின்றிருந்தது. இவர் கைக்கு நிற்கும் தண்ணீர் அவன் கைக்கு நிற்காதா? வயசுப் பையன் அதை அழுந்த மூட முடியாதா? செய்ய மாட்டார்கள். ஏனென்றால் எல்லாவற்றையும் யூஸ் அன்ட் த்ரோவுக்குப் பழகிப் போனவர்கள்.

இந்த முறை இவன் ஊருக்கு வந்திருப்பது இந்தக் குழாயை மாற்றிவிட்டுப் போவதற்குத்தான் என்கிற அளவுக்குத் தோன்றியது இவருக்கு. வந்ததிலிருந்து அதையே குரங்குப் பிடியாய்ப் பிடித்துக் கொண்டிருக்கிறானே? ஒன்றைத் தொட்டால் அதைச் சாதிக்காமல் விட மாட்டான். அப்படித்தான் அவன் தன் வேலையையும் பிடித்திருக்கிறான். “”என்னைத் தேர்வு செய்றது உங்களுக்குத்தான் பெருமை” என்று நின்றான். “”இவ்வளவு சாலரி கொடுக்க முடியுமா?” என்று டிமான்ட் வைத்தான். “”வாங்கிக்கோ. ஆள் வந்தாப் போதும்” என்றார்கள். எல்லாம் பெருமைதான். அந்தப் பெருமைகளுக்கு அப்பனையுமா ஆட்டணும்? தான் வருவதே மூணு நாலு நாளைக்கு. ஏதோ ஸ்மூத்தாக இருந்து விட்டுப் போவோம் என்றில்லாமல், வயதான அப்பாவை எதற்குச் சிரமப்படுத்திக் கொண்டு? என்கிற எண்ணம் வேண்டாமா? ம்ம்ம்… அதெல்லாம் இந்தக் காலத்துப் பசங்களுக்கு ஏது? இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பால். அவ்வளவுதான். நோ சென்டிமென்ட்ஸ். மிஞ்சினா இருக்கவோ இருக்கு முதியோர் இல்லம்.

“”அப்டீன்னா நான் இதைச் சொல்லக் கூடாதாப்பா ஏம்ப்பா. குழாய் நிற்காம ஒழுகுது. அதை மாத்துன்னு சொன்னது ஒரு தப்பா? அப்டி ஒழுகிட்டிருக்கிறது உனக்கு அசிங்கமாத் தெரிலயா? யாராவது நம்ம வீட்டுக்கு வந்தாங்கன்னு வையி.. என்ன நினைப்பாங்க? என்னப்பா நீ இப்டி இருக்கே?” ஏதோ இவர் ஒண்ணும் தெரியாத மண்டு போல் கேட்கிறான் அவன். இதை எங்கே போய்ச் சொல்ல? நொந்து கொண்டார் இவர். ஆனால் ஒரு கணம் ஆடியும்தான் போனார்.

அவன் கேட்ட கேள்விகளில் தலை சுற்றியது இவருக்கு. உண்மையிலேயே தான் சரியாய்த்தான் இருக்கிறோமா? என்று ஒரு சந்தேகம் வேறு வந்து விட்டது. ஒரு வேளை இவன் சொல்கிறார்போல், தான் இந்தக் காலத்திற்கேற்றாற் போல், இவர்களுக்கேற்றாற் போல் இன்னும் மாறவில்லையோ? இன்னும் பழைய பஞ்சாங்கமாய்த்தான் இருக்கிறோமோ? திடீரென்று தான் அசடாகிவிட்டதுபோல் கூடத் தோன்றியது. முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள நினைத்தார்.

“”அப்பா என் ஃப்ரென்டும் என் கூட வர்றான். கொஞ்சம் டாய்லெட்டெல்லாம் க்ளீன் பண்ணி வைக்கணும்ப்பா” சொல்லியிருந்தான். அதுவும் நேரடியாய் அவரிடம். அதுதான் அன்றைய அதிசயம்.

“”பையன் சொல்லிட்டாண்டீ. பையன் சொல்லிட்டாண்டி உன் பையன் சொல்றாண்டி. அவன் நண்பனும் நம்ம வீட்டுக்கு வர்றானாம் எல்லாம் சுத்தமா இருக்கணும்ங்கிறான்” என்று சொல்லிக் கொண்டே உற்சாகமாய்த்தான் எல்லாம் செய்தார் இவர். இதுபற்றி அவன் அம்மாவிடம் சொல்லி, பிறகு ஏவலாய் விஷயம் தனக்கு வராமல், நேரடியாய்த் தன்னிடமே சொன்னானே அதுவே பெரிய பெருமையாய்ப் போயிற்று இவருக்கு. விழுந்து விழுந்து ஒட்டடையெல்லாம் அடித்து, கக்கூஸ் கழுவி, ஹார்பிக் போட்டு, ஃபினாயில் ஊற்றி மணக்க வைத்தார். ஓடோனில்லை வாங்கித் தொங்கவிட்டார். இப்போதுதான் பலரும் அவர்கள் வீட்டில் அவர்களே கழுவிக் கொள்வதுதானே? அதையெல்லாம் ஒன்றும் என்றுமே பெரிதாய் நினைத்துக் கொண்டதில்லை இவர். நம்ம வீட்டுக்கு நம்ம செய்றோம், இதிலென்ன இருக்கு? இவரைப் பொறுத்தவரை அது சரி. ஆனாலும் அப்பாதானே செய்கிறார் ஒவ்வொரு முறையும். இந்த முறை நாம் செய்வோமே என்று ஒரு நாள் கூட அவன் பக்கத்தில் வந்ததில்லை. அவன்தானா அவளும்தான் அப்படி. வீடு என்றால் எல்லா வேலைகளையும் எல்லாரும் செய்தால்தானே ஆயிற்று என்ற கொள்கை உடையவர் இவர். வளர்ந்த விதம் அப்படி. அது எல்லாருக்கும் இருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

“”இன்னைக்கு நீங்க சமையுங்களேன். . நான் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்”

“”ஓ யெஸ். தாராளமா ”என்றுவிட்டு காரியத்தில் இறங்கி விடுவார். எந்தச் சந்தேகமும் அவளிடம் கேட்க மாட்டார். சமையலறை ஷெல்ப்பில் ஒரு டைரி இருக்கும். ஏதாச்சும் என்றால் அதை ஒரு புரட்டு, புரட்டிக் கொள்வார். ஏகதேசம் அவள் ருசிக்கு ஈடாக அவர் சமையல் இருந்து விடும். என்ன, சற்று புளிப்பு, உப்பு, காரம் தூக்கலாக இருக்கும். அது அவளிடம் மட்டு. கேட்டால் ”இந்த வயசுக்கு இப்டித்தான் இருக்கணும்” என்பாள். அவள் கைபாகத்திற்கே சாப்பிட்டுப் பழகிப் போனார் இவர். வெளியே எங்கேனும் கை நனைத்தாலும், உப்பும் உரைப்பும் அதிகமாய்த்தான் தோன்றுகிறது இவருக்கு.

“ஆத்தாடீ. . நம்ம உடம்புக்கு இது ஆகாதே’

ஆனாலும் அப்பாவுக்கு வயசாச்சு என்கிற நினைப்பில்லையே பையனுக்கு. இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது எதில் போய் முட்டிக் கொள்வது? அன்று பள்ளியில் படித்தபோது எப்படி இருந்தானோ, இன்றும் அப்படியேதான் இருக்கிறான். கருக்கழியாமல். என்ன மெச்சூரிட்டி வந்துள்ளது. வேலைக்குப் போய்விட்டால் எல்லாம் வந்து விட்டது என்று அர்த்தமா? உலக ஞானம் பிடிபட்டு விட்டது என்று பொருளா? என்னமோ இவர்களும் தலையணை, தலையணையாய்ப் படிக்கிறார்கள். டிகிரி வாங்குகிறார்கள். அவனும் இந்தா பிடி என்று வேலையைக் கொடுத்து, வாங்கிக்கோ என்று ஆயிரக் கணக்கில் அள்ளி விடுகிறான். எவனுக்கும் எதிலும் நிதானம் இருப்பதாய்த் தோன்றவில்லை. என்னவோ ஓட்டமாய் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

வேலைக்கு உட்காரும்போதே முப்பது, நாற்பது என்று தந்தால் பிறகு அங்கே பணத்திற்கு என்ன மதிப்பு இருக்கும்? முப்பத்து மூன்று வருஷம் சர்வீஸ் போட்டே முப்பத்தி ஐந்தைத்தான் எட்டினார் இவர். இவன்களுக்கு எடுத்த எடுப்பில் தூக்கிக் கொடுத்தால் என்னவோ வாங்குகிறார்கள். என்னவோ செலவு செய்கிறார்கள். பணம் வருவதும் தெரிவதில்லை. போவதும் தெரிவதில்லை. வாங்கும் நாற்பதில் பத்து மிஞ்சினால் அதிகம். அப்படி ஒருத்தனுக்கு என்னதான் செலவோ? ரூம் வாடகை, சாப்பாடு, துணி மணி, அது இது என்று எப்படிப் போனாலும் பதினைஞ்சு, அட இருபதுன்னே வைப்போம். அதுக்கு மேலயா ஒரு ஆளுக்கு செலவாகப் போகுது? இல்லைங்கிறானே.

“”அப்டி என்னதான் செலவு பண்ணினே சொல்லு பார்ப்போம்?”.

“”என்னப்பா நீ இதெல்லாம் கேட்டுட்டு. கணக்கெல்லாம் சொல்லத் தெரியாதுப்பா”

தன் அப்பா, தான் வாங்கிய நாற்பது ரூபாய்ச் சம்பளத்திற்கு, பைசா விடாமல் சாகும்வரை கணக்கு எழுதியது இவருக்கு நினைவு வந்தது. அந்த நோட்டை இன்னும் வைத்திருக்கிறார். காலணாவுக்கு மூக்குப் பொடி வாங்கியது கூட அந்தக் கணக்கில் வந்துவிடும். மைப்புட்டியில் தொட்டுத் தொட்டு எழுதிய கணக்கு காலத்தின் பெட்டகம்.

“”ஏதாச்சும் ஒரு தொகை சேமிக்கணும்ப்பா. சேமிப்புங்கிறது ரொம்ப முக்கியம். சிறுகச் சிறுகச் சேமிச்சாத்தான், நாளைக்கு, ஒரு அவசரத்துக்கு, முக்கியமான காரியத்துக்கு உதவுமாக்கும். சேவ் பண்ணிப் பாரு. அப்பத் தெரியும் அதோட பெருமை.”

“”எங்க சேவ் பண்றது? ஷேவ்தான் பண்ணனும். தாடி வளர்ந்து போச்சு”

கருத்தையும் மீறி சிரிப்புத்தான் வந்தது இவருக்கு. தன்னின் நகைச்சுவை உணர்வு வாசனை அவனுக்கும்.

“”அப்படியில்லடா ராஜா. பணம் சேரச் சேர இன்னும் இன்னும்னு அதைப் பெருக்கத்தான்டா தோணும். அப்டித்தாம்ப்பா சேமிப்புங்கிற பழக்கம் வந்திச்சு. எல்லாத்தையும் தூசி தட்டிட்டு, வெறுங்கையை விரிச்சிட்டு நிக்கிறதுல என்னடா பெருமை? சேவிங்க்ஸ்ங்கிறது ஒவ்வொரு மனுஷனுக்கும் கட்டாயம் இருக்க வேண்டிய நல்ல பழக்கம்ப்பா. நான் சொல்றதை நீ ஒரு வாட்டி கேட்டுத்தான் பாரேன். அப்புறம் சொல்றேன்”

என்ன தோன்றியதோ “”சரிப்பா” என்றான் அந்த முறை. இவருக்கோ உச்சந்தலைக்கு ஏறிவிட்டது பெருமை.

“”சரின்னுட்டாண்டீ. உம் பிள்ளை சரின்னுட்டாண்டீ” பெருமை தாளவில்லை இவருக்கு. அவன் அனுப்பும் பத்தாயிரத்தை அப்படியே அவன் பெயருக்கு ஒரு ஆர். டி.யைத் துவக்கி போட ஆரம்பித்தார். அது இன்று ஒன்றரை லட்சத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.

“”பார்த்தியா இதையும் செலவு செய்திருந்தேன்னா செலவோட செலவா போய்ச் சேர்ந்திருக்கும். அவ்வளவுதான். அதுல என்ன இருக்கு பெருமை? மனுஷன்னா அவன் திட்டமிடணும். அப்பத்தான் வாழ்க்கைங்கிறது ஒரு வட்டத்துக்குள்ள வரும் நாம செய்ற காரியங்கள் எல்லாத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். நாலு பேர் பெருமையாப் பேசற மாதிரி இருக்கப் பழகிக்கணும். என்னவோ வந்தோம், போனோம்னு இருக்கிறதுல என்னடா கண்ணா இருக்கு? இப்போ இந்த ஆர். டி. முடிஞ்சவுடனே இதை ஒரு எஃப். டி. யா போடப் போறேன். அதுக்குத் தனியா வட்டி சேர்ந்திட்டிருக்கும். புதுசா ஒரு ஆர். டி. துவக்கி போட்டுண்டு வர்றோம்னு வச்சிக்கோ, அதுவும் தனியா சேர்ந்திட்டிருக்கும். ஓ. கே. யா. நீ ஒண்ணுத்துக்கும் கவலைப் படாதே. அப்பா இருக்கேன் எல்லாத்துக்கும். எல்லாம் நான் சொல்லித் தரேன். உனக்கு ஒரு சரியான வாழ்க்கையை அமைச்சு, நீ ஒரு நல்ல லைஃப் லீட் பண்ற மாதிரி செய்திடுவோம். இல்லாமே அப்பா கண்ணை மூட மாட்டேன். போதுமா?” எல்லாவற்றையும் இவராகவே சொல்லிக் கொண்டார் என்னவோ அத்தனைக்கும் இவர் கையை அவன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைப் போல. தலையைக் குனிந்து கொண்டு எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டான் சதீஷ். லேசாகச் சிரித்துக் கொண்டானோ?

சிரிச்சா சிரிச்சிண்டு போறான். நம்ம பையன்தானே. அவனை நல்லா வச்சுப் பார்க்கிறதுதானே நம்ம கடமை. அதுலதானே நமக்கு சந்தோஷம். அதை ஒழுங்கா செய்து முடிக்கணும். அவ்வளவுதான்.

இதோ புதிய குழாய் வாங்கப் போய்க் கொண்டிருக்கிறார் சிவராமன். அப்படியே ஒரு ப்ளம்பரையும் பார்த்துச் சொல்லி வர வேண்டும். முடிந்தால் கையோடு கூட்டி வந்து விட வேண்டும். ஏற்கனவே போர்த் தண்ணி நேரடியாகப் பிடிக்கும் குழாய் நல்ல நிலையில் இல்லை. அதில் தண்ணீரே வரமாட்டேனென்கிறது. லைனையே சரிபண்ண வேண்டும். சட்டென்றுதான் அது ஞாபகம் வந்தது அவருக்கு. கையோடு அதையும் மாற்றி விட வேண்டியதுதான். ஒரே செலவாய்ப் போகும்.

இந்த முறை பையன் ஊருக்கு வந்திருப்பது ஒரு வார விடுமுறையில். அந்த ஏழு நாட்களுக்கும் குழாயை ஒழுக விட முடியாது. எப்போ போவான், எப்போ வருவான்னு பார்த்துண்டிருந்து, தான் போய்ப் போய் கெட்டியாத் திருகி நிறுத்திண்டிருக்க முடியாது. தன் பெருமை ஒழுகிப் போகும். நினைத்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தார் சிவராமன். கைபேசி அலறியது. எடுத்து இணுக்கினார். பையன்தான் பேசினான்.

“”அப்பா ஞாயிறன்னிக்கு எனக்கு தட்கல் போடணும். தேர்டு ஏசி கூடப் போட்டுடுப்பா. கிடைச்சிடுச்சின்னா பஸ் டிக்கெட்டை வழக்கம்போலக் கான்சல் பண்ணிடலாம். மறந்திடாதே. . எங்க நீ மறந்திடுவியோன்னு அட்வான்சா சொல்லி வைக்கிறேன். ஓ. கே. யா? கண்டிப்பா போட்ருப்பா”

“”சரிப்பா” என்று ஃபோனைக் கட் பண்ணினார் இவர். வீட்டில் வந்து சொன்னால் போதாதா? தோணும்போதே அப்பாவுக்கு ஆர்டர் போடுகிறான் பையன். நேரில் சொல்லத் தயக்கமான பலவற்றிற்கு ஃபோன்தானே வசதி. முதல் பத்து ஆளுக்குள் க்யூவில் நிற்க அப்போதே அவர் மனம் திட்டமிட ஆரம்பித்தது.

இவன்களுக்கு டிக்கெட் போடவும், கான்சல் செய்யவும்னே ஒரு ஆளு தனியா வேணும். காசுக்கே மரியாதை இல்லாமப் போச்சு. எதுலயாச்சும் சுட்டுக்கிட்டாத்தான் இவனுங்களுக்குப் புத்தி வரும் போல்ருக்கு. ரயில்வேக்காரனுக்கும் பஸ்காரனுக்கும் காசு கொடுத்து மாளல. காச இப்டி அள்ளி எறைக்கிறான்களே? எந்த நேரமும் வெளில போன்னு சொல்ற உத்தியோகத்துல இருந்துக்கிட்டே இந்தப் பாடு படுத்துனா… இவனுங்கள என்னன்னு சொல்றது? எல்லாம் காலக்கிரகம்

மகனை நினைத்து ஒரு கணம் அதீத பயமாகவும் இருந்தது சிவராமனுக்கு.

– ஜனவரி 2015

Print Friendly, PDF & Email

1 thought on “யதார்த்தம்

  1. ஐ டி கம்பெனிகளில் வேலைபார்த்துக் கொண்டு, பணத்தை வாரி இறைத்தபடி செலவு செய்து கொண்டு, பணத்தின் மதிப்போ, சம்பாத்தியத்தின் அருமையோ, சேமிப்பின் உயர்வோத் தெரியாமல் தாம் தூம் என்று அலட்டும் இளைய தலைமுறையினரைக் காணும்போது சற்றுக் கவலையாகத்தான் உள்ளது.
    எல்லா Values ஐயும் அலட்சியப் படுத்தும் குணம்.
    எதையும் அதன் முழு உபயோகம் வரை பயன்படுத்தும் குணம் முற்றிலும் அற்றுப் போய்விட்டது.
    உதாரணமாக, ஊற்றுப் பேனாவில் தீரத் தீர மை ஊற்றி எழுதும் பழக்கம் அறவே போய்விட்டது.
    KG முதல் PG வரை யூஸ் & த்ரோ பேனாதான்.
    இந்த செலவு அவசியமா என்று திட்டமிடுதல் அறவே ஒழிந்துவிட்டது.
    vanity Fair என்று தாக்கரே எழுதியது போல ஜம்பம்தான் இன்றைய இளைஞர்களுக்கு ஆதர்ஸனமாக உள்ளது.
    யூஸ் & த்ரோ கலாச்சாரத்தைப் புகுத்தி, கூட்டுக் குடும்பங்களின் மேன்மையைக் குலைத்து, கலாச்சாரச் சீரிழிவிற்கு வித்திடும் யு எஸ் போன்ற நாடுகளின் கைப்பாவையாக ஆடும் இளைஞர்களைக் கண்டு கவலைதான் வருகிறது.
    சமுதாயக் கண்ணோட்டம் கொண்டு சிறப்பான சிறுகதை
    வாழ்த்துக்கள்
    பாராட்டுக்கள்
    வாழ்க வளமுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *