மீளும் மனிதம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 12, 2016
பார்வையிட்டோர்: 7,588 
 

தாரணியின் வீடு இன்று களைகட்டியிருந்தது. வீடு முழுவதும் உறவினர்கள் நிரம்பியிருந்தனர். வாழ்க்கையின் அசுரவேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் உறவினர்களை, சகோதரர்களை மறந்து அவர்களின் அன்றாட வாழ்வில் இருந்து விலகி இயந்திர வாழ்க்கையில் சிக்குண்டிருந்தவர்கள், தாரணியின் தங்கையின் திருமணத்துக்காக தமது அன்றாட வாழ்க்கையில் இருந்து சிறிதுவிலகி திருமணத்துக்காக வந்திருந்தனர். எமது சொந்தங்கள் யார்? என்பதனை தமது பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வுகளாகவே இன்றைய குடும்ப நிகழ்வுகள் அமைந்துவிடுகின்றன. தாரணியின் மூத்த அண்ணாவும், அக்காவும் தத்தமது குடும்பத்துடன் மட்டுமன்றி அவரவர் புகுந்தவீட்டு சொந்தங்களுடன் வந்திருந்தனர். தகப்பன் இல்லா குறையை நிவர்த்திசெய்யும் வகையில் திருமணவீட்டு வேலைகளை மூத்த மகன் நிறைவேற்றிக்கொண்டிருந்தது தாரணியின் தாய்க்கு பெருமையாகவும் பூரிப்பாகவும் இருந்தது.

தாரணியின் ஒரேமகள் வந்திருந்த பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். எனினும் அவளுடன் பெரிதாக எவரும் ஒட்டிக்கொள்வதாக தெரியவில்லை. இது தாரணியின் மகளுக்கு தெரியாமல் இருந்தாலும் தாரணியால் உணரக்கூடியதாக இருந்தது. அவ்வளவு ஏன்? தாரணிக்கு தானே அன்னியமான உணர்வு அவ்வப்போது தலைதூக்கியபடிதான் இருந்தது. இருந்தாலும் தனது தங்கையின் திருமணம் சிறப்பாக முடியவேண்டும் என்பதால் உள்ளத்து உணர்வுகளை மூட்டைகட்டிவைத்துவிட்டு திருமண வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டாள். திருமண வீடு தாரணிக்கு சொந்தமாக இருந்தபடியினால் அதையே காரணமாக கொண்டு அவளையே மற்றவர்கள் ஒவ்வொருவேலைக்கும் ஏவியபடி இருந்தனர். இந்த வீடு தாரணிக்கு என தகப்பனால் எழுதியதால், தங்கைக்கு சீதனமாக கொடுக்க வீடு இன்றி பல வரன்கள் தட்டிப்போக அதனாலேயே பெரிய பிரச்சினைகள் தாரணியின் குடும்பத்துள் உருவாகியிருக்கின்றன. அந்த நேரங்களில் எல்லாம் தாரணியின் உணர்வுகளை புரிந்துகொள்ள அவள் குடும்பத்தில் எவரும் இல்லாமல் போயினர்;. சொத்துக்களும் பொருளாதாரமும் சொந்தங்களில் எவ்வளவு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை அந்த நேரங்களில் உணர்ந்து கொள்வாள் தாரணி.

வுழமையாக இருந்த மின்குமிழ்களுடன் மேலதிகமாக கூடிய வெளிச்சம் வரக்கூடியவாறு பல வர்ணமின்குமிழ்கள் பொருத்தியிருந்ததால் வீடே வர்ணமயமாக காட்சியளித்துக்கொண்டிருந்தது. ஓருவாறாக ஒலித்துக்கொண்டிருந்த சினிமா பாட்டுக்கள் நிறுத்தப்பட வீடு சிறு அமைதியை அணைத்துக்கொள்ள மேலதிகமான மின்குமிழ்களும் அணைத்துக்கொள்ளப்பட்டன. நேரம் இரவு 11 ஐ தாண்டியபடியால் அவரவர் தமது நித்திராதேவிகளை அணைக்க தங்களுக்கு ஏற்ற இடங்களை தெரிவுசெய்து ஒதுங்கிக்கொள்ள, வந்தவர்களுக்கு இடங்கொடுத்து வீட்டின் ஒருமூலையில் தனது மகளை அணைத்தவாறு உறங்க ஆயத்தமான தாரணியின் காதுகளில் அண்ணியின் வார்த்தைகள் சுடுநீரை ஊற்ற, தன்னைப்பற்றி கதைக்காமல் இவர்கள் உறங்கமாட்டார்கள் என எண்ணியபடி அவர்களின் கதையை கேட்க மனமின்றி காதுகளை இருகைகளாலும் இறுக மூடிக்கொண்டாள். ஊரவர்கள் கதைக்கும்போதெல்லாம் கலங்காத அவள் மனம், தனது உடன்பிறந்தவர்களும் அவர்களது துணைகளும் கதைக்கும்போது மட்டும் தனது தன்நம்பிக்கையின் அடிநாதமே அசைவது போன்ற உணர்வு ஏற்பட்டு உயிர்இருந்தும் உயிரற்ற பிணமாகிப்போவாள்.

எங்கட குடும்பத்துக்கு என்று வந்து சேர்ந்தது… ஒழுங்காக இருந்திருந்தா கடைசிக்கு செய்யிறது போல எல்லாம் நாங்க செய்திருப்பம்தானே. அவங்களோட போனவள் போன இடத்தில ஒழுங்காக இருந்திருக்கலாம்தானே. அப்படி இருந்திருந்தாலும் பரவாயில்லை. அங்கேபோய் வன்னியில கலியானத்தை கட்டி கடைசியில ஒன்றும் இல்லை. ஒரு சொல்லு எங்களிட்ட கேட்டாலே? அண்ணனின் பேச்சு தாரணியின் மீது முழுவதுமாக குற்றம் சாட்டுவதாகவே இருந்தது. அப்போதுதானே அவனால் இலகுவாக சொல்லமுடியும் இது நீ தேடின வாழ்க்கை நாங்க பொறுப்பில்லை…. இது நீயே உனக்கு பறிச்ச குழி, இவ்வாறு சொல்வதன் மூலம் தன் பொறுப்பினை தட்டிக்கழித்துகொண்டான். அவனது யோசனை அம்மா இல்லாத காலத்தில் எங்கே நமக்கு பாரமாகிவிடுவாளோ என்று.

இவர்களது குணங்களை பெற்ற தகப்பனாக நன்கு அறிந்திருந்ததனால் என்னவோ! தாரணியின் தகப்பன் 2009 இல் பிரச்சினை முடிக்குவந்தவுடனேயே வீட்டினை தாரணியின் பெயரில் எழுதிவைத்துவிட்டார். அது மட்டுமின்றி வீட்டுடன் இருந்த கடையையும் அவளின் பிள்ளையின் பெயருக்கே எழுதிவைத்துவிட்டார். இதனால் தாரணியின் அண்ணன் தகப்பனுடன் முரன்பட்டுக்கொண்டதும் தகப்பனின் சாவீட்டில் கூட பிரச்சினை பண்ணியிருந்தான். தகப்பன் இறந்தபின் வீடும் கடையும் உனக்குத்தானே என்று கூறிகூறியே ஏனைய சொத்துக்களை எல்லாம் சுருட்டிக்கொண்டவர்கள் உனக்குத்தான் துணைவேண்டும் அம்மா உன்னுடன் இருக்கட்டும் என்று அம்மாவை விட்டுச்சென்றார்கள் என்பதைவிட தள்ளிவிட்டுச்சென்றார்கள் என்பதே சரி. மக்களுக்காக போனவளுக்கு அம்மாவை இப்படி அவர்கள் தட்டிக்கழித்து சென்ற சகோதரர்கள் மீது வெறுப்பினை ஏற்படுத்தவே தங்கையையும் தன்னுடன் இருக்கட்டும் என்று கூறி மூத்தவர்களின் தொடர்பினையே விட்டிருந்தாள்.

2009 மே மாதம் தனது கணவனுடனான தொடர்பு அறுந்து போனபோது கலங்காமல் இருந்தவளுக்கு உறவுகளின் சுயநலங்கள் கலக்கத்தை அவ்வப்போது ஏற்படுத்தின. அப்பொழுதெல்லாம் தனது கணவன் மலரவனின் வார்த்தைகள்தான் அவளுக்கு ஞாபகம் வரும். தாரு, நாங்கள் சோறுதண்ணி இல்லாமல் மக்கள் மக்கள் என்று வாழ்கின்றோம் வாழ்ந்துவிட்டோம். ஆனால் மக்கள் எங்களை, எங்கள் உணர்வுகளை மதிப்பது காலஓட்டத்தில் குறைந்துகொண்டே வருகின்றது. இந்நிலை தொடரக்கூடாது. காலம் நீள நீள உளவியல் ரீதியாக மக்கள் காட்டுமிராண்டிகளாக மாறிவிடுவார்கள் என்பது உளவியல். சமாதான பேச்சுக்கள் நீடித்துக்கொண்டுபோகும்போது கூறியவார்த்தைகள். எவ்வளவு யதார்த்தமானவை என்பதை இவ்வளவு சீக்கிரம் உணரும்படியாகும் என்று கனவில் கூட தாரணி நினைக்கவில்லை.

இறுதியில் மலரவனை செட்டிகுளத்தில் கண்டது. அதன் பின்னர் இன்றுவரை அவன் எங்கிருக்கிறான் என்பதை விட உயிருடன் இருக்கின்றானா? ஏன்பதே கேள்விக்குறியானது. ஆனாலும் அவனது தேவை தாரணிக்கும் அவர்களது மகளுக்குமே கணப்பொழும் தேவையாகவிருந்தது. அதை உணர்ந்து கொள்ளும் மனநிலையில் எவரும் இல்லை என்பதுதான் துன்பியலாகிப்போனது. அரசியல் தலைவர்களுக்கு மட்டும் அடுத்தடுத்து வரும் தேர்தல்களுக்கு எல்லாம் அவனையும், அவன்சார்ந்தவர்களும், அவன்சாராதவர்களுமான காணமற்போனவர்கள் சிறந்த மூலதனமாகினர். தாரணி போன்றவர்களுக்கு நிரந்தர ஏக்கங்களாகவும், அரசியல்வாதிகளுக்கு நிரந்தர மூலதனங்களாகிப்போனார்கள் காணமற்போனவர்கள்.

அண்ணாவின் கதையினால் எங்கோ சென்ற மனம் திடீரென்று அக்காளின் குரலுக்கு மீண்டும் வீடுவந்து சேர்ந்தது. போனவள் போனநோக்கத்தோட இல்லாமல் அதுக்குள்ளேயே வாழ்கையை சீரழித்துப்போட்டு வந்திருக்கிறாள். இனி என்ன செய்வது? அக்காளின் ஆதங்கம் புரிந்தாலும் தாரணியின் மனம் முதன் முதலாக மலரவனை சந்தித்த நிகழ்வுக்கு தாவியது. மனதுக்கு இருக்கும் வேகத்தில் ஒரு சிறிதளவாவது உடலுக்கு இருந்திருந்தால் இன்று பல பிரச்சினைகள் ஏற்படாது இருந்திருக்கும். அன்று நடந்துகொண்டிருந்த உக்கிரமான சண்டையிலும் எறிகணை வீசு;சுக்களிற்கும் இடையில் காயம்பட்டவர்களுக்கான சிகிச்சைகளை மிகவேகமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக செய்து கொண்டிருந்தாள் தாரணி. சண்டை நிகழும் இடத்தில் இருந்து வந்து வாகனம் மீண்டும் வந்த இடத்துக்கே செல்வதற்கு கிளம்பியபோதுதான் அவதானித்தாள் தாரணி காயம்பட்ட போராளி ஒருவன் காயங்களுடன் மீண்டும் சண்டை நடக்கும் இடத்துக்கு போகும் வாகனத்தில் ஏறி செல்வதை. அவனை அவளுக்கு தெரியும். எப்பொழுதும் அவன் முகத்தல் தவழ்ந்து கொண்டிருக்கும் மழலை மாறாத சிரிப்பினை அவள் பலமுறை ரசித்திருக்கிறாள். ஏன் இவன் காயங்களுடன் மீண்டும்? மேலும் யோசிக்க முடியாதளவு வேலைகள் வர அவனை மறந்து கடமையில் மூழ்கினாள்.

அடுத்தநாள் காலையில் வைத்தியசாலைக்கு அனுப்பவேண்டியவர்கள் யாராவது இருக்கின்றார்களா என விசாரித்தவண்ணம் வந்தவளுக்கு மீண்டும் தென்பட்டான் மலரவன். இப்பொழுதும் அவன் முகத்தல் புன்னகை திருப்தியான புன்னகை ஆனால் மயக்கமான நிலையில். நிறைய குருதி இழப்பு. இருக்கட்டும் பிற்பாடு விசாரிக்கவேண்டும் என எண்ணியவளை மனம் தடுத்து நிறுத்தி பக்கத்தில் இருப்பவர்களை விசாரித்து பார் என்றது. அவளையறியாமலேயே அங்கு நின்ற ஒருவனிடம் விசாரித்தாள். யார்? முலரவன் அண்ணையோ அக்கா? அவர் காயம் பட்டு இங்கே வந்தவர் சண்டையில் ஆட்கள் குறைவு என்றவுடன் திரும்பிபோய்விட்டார். போன இடத்தல் மீண்டும் காயம் இங்கே கொண்டுவருதற்குள் இரத்தம் நிறைய போய்விட்டது.

இப்பொழுது அவனது கடமையுணர்வு அவளைத்தாக்க அவன்மீது இனம்புரியாத ஈர்ப்பும் சேர்ந்து கொண்டது. அவனது காயங்கள் அவனை மீள சண்டைக்கு செல்லமுடியாத தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனால் மனமுடைந்து போனவனை தேற்ற வந்தவள் நாளடைவில் அவனை திருமணம் செய்வதற்கு அனுமதியும் பெற்றுக்கொண்டாள். திருமணம் முடித்தகையோடு தங்களுக்கென்று ஒரு குடிசை அமைத்து தமது வாழ்க்கையை தொடங்கியபோதுதான் போர் உக்கிரமடைந்து எல்லாமே தலைகீழாக மாற, மாண்டவர்கள் மாவீரர்களாகவும், காணாமற்போனவர்கள் வீரமறவர்களாகவும், மீண்டவர்கள் கணக்கெடுக்கப்படாத நடைப்பிணங்களாகவும் ஆகியிருந்தனர்.

இந்நிலையில்தான் தாரணியும் விமர்சனப்பொருளாகியிருந்தாள். நினைவுகள் கண்களை குளமாக்க தன்னை சுதாகரித்துக்கொண்டாள் தாரணி. அக்காளின் பேச்சுதொடர்ந்து வேறு திசைநோக்கி செல்வதை அவதானிக்க தொடங்கினாள். அம்மா கலியாணம் முடிந்ததும் தங்கச்சியை அவர் தங்கட வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போய்விடுவார். உனக்கு தனிய இங்கே இருப்பதற்கு சரிவராது. நீ எங்களுடன் வந்துவிடு. என்னாலும் தனிய பிள்ளைகளை பார்க்கமுடியாம இருக்கிறது. வேலைக்குபோனபிறகு வீட்டில அதுகள் தனிய. நீ பேசாமல் என்னுடன் வந்து விடு. என்ற தன் மகளை சிரிப்புடன் பார்த்த தாய் நினைத்துக்கொண்டாள். மனிதர்களிடம் சுயநலம் அதிகரித்து இருக்கும் வரை பாசங்கள் மனிதாபிமானம் என்பன எல்லாம் வெறும் வார்த்தைகளாகவே இருக்கும் என்பதுதான் உண்மை. சிந்தனையில் இருந்தவரை மூத்தமகளின் குரல் மீண்டும் உலுப்பியது. அம்மா நான் என்ன கேட்கின்றேன்? பதி;ல் பேசாமல் இருந்தால் என்ன முடிவு?

மூத்தவள் ஒருமுடிவுடன் வந்திருப்பதையுணர்ந்தவள் இனியும் கடைசி மருமகனின் முடிவினை கூறாமல் இருப்பது சரியல்ல என்ற நினைப்புடன் கூறினாள் தங்களின் முடிவினை. கடைசியின்ர மாப்பள்ளை அவளுடன் கதைக்கும்போது சொன்னவராம் அக்காவின்ர நிலைமைக்கு நாங்கள் எல்லோரும்தான் காரணம் அவ மட்டுமில்லை. அவவையும் அவவின்ர பிள்ளையையும் பார்க்கவேண்டியது எங்கட கடமை. அவையின்ர பொருளாதாரத்துக்கு கடை இருக்குத்தானே நாங்கள் அவவுக்கு ஒத்தாசையாகவும் பாதுகாப்பகவும் அவையோட இருந்தால் சரிதானே. இந்த வருட இடமாற்றத்தில் நானும் இங்கே வந்துவிடுவேன். அது வரை நீங்கள் சமாளியுங்கோ என்றவராம்.

இந்த வார்த்தைகள் தாரணியின் துவண்டிருந்த மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த, இது போதும் எனக்கு என நினைத்துக்கொண்டாள். மனிதம் சாகவில்லை அவ்வப்போது சிலரூடாக வெளிப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றது என்பதை நினைக்கும்போது அவளுக்கு மலரவனும் மீண்டுவருவான் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது. ஆனால் தாயின் வார்த்தையில் அடியுண்ட அக்காவோ அதுசரி மாப்பிள்ளைக்கு ஆரம்பத்திலேயே வீட்டில் ஒரு கண்! என்னவோ எங்கட சொல் இனி அம்பலத்தில் ஏறாதுதானே என்று தனது திட்டம் பிழைத்துப்போன நிலையில் புலம்ப தொடங்கியிருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *