மாறிய மனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 22, 2021
பார்வையிட்டோர்: 4,277 
 

“அம்மா பேக் பண்ணியாச்சா?”, என்று கேட்டபடியே சாப்பிட‌ வந்தமர்ந்தாள் லிசா.

“ஆச்சு.. ஏன்டி இவ்வளவு அவசரம் கொஞ்சம் முன்னமே எழுந்து பொறுமையா கிளம்பலாம்ல”

“நீயும் தினம் தினம் இதைத்தான் சொல்ற, நானும் தலையாட்டறேன்.. ஆனா முடிய மாட்டேங்குதே”

“என்னடி முடியமாட்டேங்குது, சீக்கிரமா எந்திரிக்கனும்னா சீக்கிரமா தூங்கனும், நானெல்லாம் நாலுக்கே எழுந்திருச்சிட்டேன் தெரியுமா?”

‘தெரியும் தெரியும், நானும் அப்ப முழிச்சுச்தானே இருந்தேன்’, என மனதிற்குள்ளாக‌வே நினைத்துக் கொண்டவள், தட்டை சிங்கில் போட்டுவிட்டு, கை கழுவிவிட்டு, லஞ்ச் பாக்ஸை எடுத்துக்கொண்டு.. “அம்மா பாய்மா”, எனச் சொல்லியபடியே ஓட்டமும் நடையுமாக ஆபிஸ் கிளம்பினாள்.

“பாய்”, எனச் சொன்னபடியே சிந்தனையில் ஆழ்ந்தாள் டயானா.

ஒற்றை மகளை விட்டுவிட்டு பிரிந்த போன கணவன். திடுதிப்பென பாழுங்கிணற்றில் விழுந்த உணர்வு, அப்போது லிசா இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். எப்படியோ தெளிவடைந்து பல வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்து லிசாவின் பள்ளிப்படிப்பை முடித்து, டிகிரி முடிக்கவைத்து, இதோ இப்போது அவள் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பின் தான் வீட்டில் இருக்க முடிகிறது. அப்பப்பா இதற்குள் எத்தனை ஆண்டுகள் ஓடிவிட்டன.. நினைத்துக்கொண்டே இருந்தவள் அப்படியே கண்ணயர்ந்து விட்டாள்.

“டயானா.. டயானா..”, என்று யாரோ கூப்பிடுவதாகத் தோன்றவே கண்களைத் திறந்து பார்த்தாள். பக்கத்து வீட்டு செல்லம்மா நின்று கொண்டிருந்தாள்.

எழுந்து கண்களை கழுவிக்கொண்டு வந்து அமர்ந்தாள்.

“வா.. செல்லம்மா… வேலைலாம் முடிச்சிட்டியா?”

“வேலையா.. அது எப்படி முடியும்? எல்லா வேலையும் அப்படியேத்தான் இருக்கு.. இப்பத்தான் கடைவீதியில இருந்து வர்றேன்.. அப்படி வர்றப்ப தான் லிசாவையும் பார்த்தேன்”

“இதச் சொல்லத்தான் இங்க வந்தியா?”

“இது மட்டும் செய்தினா வந்திருக்க மாட்டேனே.. நம்ம தெரு முனைல தான் அவளப் பார்த்தேன். அவ என்னை பார்க்கலேனு நினைக்கறேன்.. அங்க யார் கூடவோ பைக்ல உட்கார்ந்து சர்ருனு போய்ட்டா.. அதச் சொல்லத்தான் வந்தேன்”

“ஓ.. அப்படியா.. சரி சரி..”

“இன்னா டயானா.. எவ்வளவு தலை போற விஷயத்தச் சொல்றேன்.. சுவாரஸ்யமில்லாம அப்படியானு மட்டும் கேக்கற!”

“ஹி.. ஹி..”, என்று மட்டும் சிரித்து வைத்தாள் டயானா..

இவகிட்ட நின்னா நம்ம வேலையாகாது. எந்த ரியாக்சனும் காட்ட மாட்டேங்கறாளே.. .என்று சலித்தபடியே அவளது வீட்டுக்கு கிளம்பினாள் செல்லம்மா.

செல்லம்மா போவதைப் பார்த்தபடியே வீட்டுக்குள் நுழைந்தாள் எதிர்வீட்டு மேனகா.

“என்ன டயானா.. செல்லம்மா.. என்ன அளந்துட்டு போறா?”

“அவ கிடக்கறா.. நீ உட்காரு.. நீ மட்டும் தான் வந்தியா.. இல்ல எதாவது மேட்டர் கொண்டு வந்தியா?”

“மேட்டர்லாம் ஒன்னுமில்ல.. வேலையெல்லாம் முடிச்சிட்டேன்.. அதான் அப்படியே வந்தேன்”

“சரி.. இரு.. காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்.. காலைலயிருந்து குடிப்போம் குடிப்போம்னு நினைச்சுக்கிட்டு தான் இருக்கேன்.. ஆனா டைமே கிடைக்கல”, என்றவாறே கிச்சனுக்குள் சென்றாள் டயானா..

காபி போட்டவாறே யோசித்துக் கொண்டிருந்தாள்.

‘இது என்ன புது மேட்டரா இருக்கு.. எப்படியோ எந்த ரியாக்சனும் காட்டாம அந்தச் செல்லம்மாவ அனுப்பிச்சாச்சு.. இனிமே அவ இதப்பத்தி வேற யாருகிட்டேயும் சொல்லப்போறதில்ல.. அம்மாக்காரியே கண்டுக்கல.. இனி யாருகிட்ட சொல்லி என்ன ஆகப்போகுதுனு அப்படியே அடங்கிருவா… ம்..”

காபி தயாரானதும் ஹாலுக்கு வந்தாள்.

இருவரும் கதைத்தபடியே காபியை குடித்து அன்றைய பொழுதினை கழித்தனர்.

***

மாலை ஆறு மணிக்கு வழக்கம் போல வீட்டுக்கு வந்தாள் லிசா..

தினம் தினம் நடப்பதைப் போலவே, ஆபிஸ் விஷயங்களை ஒன்று விடாமல் கடகடவெனச் சொல்லிக்கொண்டே சென்றாள்.

பல கலகலப்பான சம்பவங்களைச் சொல்லி அவளும் சிரித்து, அம்மா டயானாவையும் இடைவிடாமல் சிரிக்க வைத்தாள்.

“காலைல ஆபிஸ் போனவுடனே ரேஷ்மாவுக்கும், மேனேஜருக்கும் பயங்கரச் சண்டை”

“எதுக்கு?”

“எப்பவும் போல இன்னைக்கும் லேட்டா வந்தாங்க‌, மேனேஜர் பிடிச்சு நல்லா திட்டி விட்டுட்டார்..”

“அப்பறம்!”

“அப்பறம் என்ன, பேச்சுக்கு பேச்சு ரேஷ்மாவும் திட்ட‌..”

“அச்சச்சோ.. பெரிய பிரச்சனையாயிருக்குமே!”

“இல்ல.. ஒரு பிரச்சனையும் ஆகல.. மேனேஜர் அப்படியே கப்சிப்புனு ஆயிட்டார்..”

“என்னடி சொல்ற?.. மேனேஜர் எதுக்கு கப்சிப்புனு ஆனார்…?

“அப்படித்தாமா.. ஆவார்..”

“அதான் ஏன்னு கேக்கறேன்?”

“ஏன்னா.. ஆபிஸ்ல தான் அவரு மேனேஜர்… வீட்டுல அவரு ரேஷ்மாவுக்கு புருஷன்”

கக்கபிக்கவென்று இருவரும் சிரிக்க வீடு கலகலப்பானது.

‘இவகிட்ட இன்னைக்கு என்னத்த கேட்கறது’, என்ற எண்ணம் வர, சாப்பிட்டு விட்டு தூங்கிப்போனாள்.

***

டயானா, காலையில் கண் விழித்ததுமே ஒரு ப்ளான் மனதிற்குள் உருவானது.

அன்றும் அதே படபடப்புடன் வழக்கம் போல கிளம்பிச் சென்றாள் லிசா. அவள் கிளம்பிய அடுத்த வினாடி, அடிக்கடி பயணிக்கும் ஆட்டோ அவள் காலையில் சொன்னபடியே வீட்டுக்கு வந்து அவளை கூட்டிச்சென்றது.

டயானா செய்யும் இந்த நடவடிக்கை அவளுக்கே பிடிக்கவில்லை. ஆனாலும் லிசாவை என்னவென்று நேரடியாக கேட்க மனதிற்குள் தைரியமில்லை. ‘நாம ஏதாவது கேட்கப்போய், அவள் ஏதாவது பேசப்போய் எதுக்கு வீணான பிரச்சனை. இதோ இப்ப ஃபாலோ பண்ணி கன்பார்ம் பண்ணிட்டு அப்பறமா பார்த்துக்கலாம்’ என்று நினைத்தவாரே..

“அதோ பாருங்க ஆட்டோக்கார்.. அந்த பைக்க கொஞ்சம் இடைவெளி விட்டு பாலோ பண்ணுங்க..”

“சரிங்கம்மா..”

வண்டி வளைந்து வளைந்து சென்று ஒரு ஆஸ்பத்திரி முன்னால் நின்றது.

“எதுக்கு ஆஸ்பத்திரிக்கு வர்றா? ஆபிஸ் நேரத்துல..”

பின்னாடியே நடந்தாள்.

லிசாவோடு வந்த பையன் முன் செல்ல, இருவரும் ஒரு ஐசியூவிற்குள் நுழைந்தனர்.

லிசா உள்ளே சென்றதும் ஐசியூவின் கதவிற்கு வெளியே நின்று கண்ணாடி வழியாக உள்ளே பார்த்தாள்.

உள்ளே அவள் கண்ட காட்சி..

அவளது கணவன் சாம்ராஜ்.. குளுக்கோஸ் ஏற்றியபடி, வெளிரிப்போன கண்களுடன் லிசாவிடமும், அந்தப் பையனிடமும் பேசிக் கொண்டிருந்தான்.

பல குழப்பங்கள் மனதிற்குள் எழ, கண்ணிலும் கண்ணீர் முட்டிக்கொண்டு வர, அப்படியே வீடு திரும்பினாள்.

***

மாலையில் சிறிது தாமதமாகவே வந்தாள் லிசா. அவளாகவே சொல்வாள் என எதிர்பார்த்திருந்தாள் டயானா. ஆனால் வழக்கம் போலவே ஆபீஸ் விஷயங்களை மட்டுமே பேசிக் கொண்டிருந்தாள்.

இன்று அவளுக்குப் பிடித்த எதையுமே இரவு உணவில் சமைக்கவில்லை. எது எது லிசாவுக்குப் பிடிக்காதோ அவையெல்லாம் டின்னருக்கு ரெடி பண்ணி வைத்திருந்தாள்.

டயானா எதிர்பார்த்தது போலவே, சாப்பிட ஆரம்பிக்கும் முன்னே லிசா கேட்டேவிட்டாள்.

“என்னம்மா.. எனக்கு பிடிக்காத அயிட்டமா சமைச்ச வச்சிருக்க.. எனக்கு பிடிக்காததெல்லாம் உனக்கும் பிடிக்காது தானேம்மா!?”

“எனக்கும் பிடிக்காததெல்லாம் உனக்கும் பிடிக்காதுன்னு தான், நானும் இத்தனை நாளா நெனச்சுக்கிட்டு இருந்தேன்மா!”

“ஏம்மா.. ஒரு மாதிரியா பேசற? இப்ப என்னாச்சு.. என்ன உனக்கு பிடிக்காத விஷயம் நான் பண்ணிட்டேன்..?”

“அது உன்னோட மனசாட்சிக்கு தெரியும்மா?”

“என்ன சொல்ல வர்றேனு புரியவே இல்லையேமா..”

“இவ்ளோ சொன்ன பிறகும் நீயே சொல்ல மாட்ட.. நானே இந்த விஷயம் சொல்லுனு சொன்னாத்தான் சொல்வ… அப்படித்தானே!”

“அப்படியெல்லாம் இல்லம்மா.. நானே சொல்றேன்.. ஆனா நான் எந்தத் தப்பும் பண்ணலமா?”

“எனக்கும் தெரியும்டி நீ தப்பு பண்ணமாட்டேனு.. இருந்தாலும் இத்தன நாளா சொல்லாம மறச்சிட்டுயே!”

“நான் யாரோ ஒரு பையனோட தினமும் பைக்ல போறதத்தானே சொல்ற.. யாரு.. பக்கத்துவிட்டு செல்லம்மா ஆன்டி போட்டுக்கொடுத்தாங்களா..!?”

“நான் அதையும் சொல்றேன்… அதுக்கு மேல உங்க அப்பனப்பார்க்கப் போனியே ஆஸ்பத்திரி, அதையும் சொல்றேன்..”

“சொல்றேன்மா.. சொல்றேன்.. அப்பாவுக்கு உடம்பு சரியானவுடனே நானே சொல்லலாம்னு இருந்தேன்.. அப்போ ஆஸ்பத்திரி வரைக்கும் பின்னாடியே வந்து எல்லாத்தையும் பார்த்துட்டியா?”

“ஆமா…”

“அப்ப உள்ள வரவேண்டியது தானே!”

“எப்படிடி.. அம்போனு நம்பள விட்டுட்டு, எவ பின்னாடியோ போன மனுசன வந்து பாருனு உன்னால சொல்ல முடியுது..!”

“சாரிம்மா.. நான் அப்படிச் சொல்லக்கூடாது தான்…”

“அதவிடு.. எப்படி அவர் உன்னைப்பார்த்தார்..? எப்ப இருந்து இதெல்லாம் நடக்குது..? அவருக்கு என்னாச்சு..? யார் அந்தப் பையன்?”

“சொல்றேன்மா.. ஒன்னொன்னா சொல்றேன்…”

“நான் பத்தாவது படிக்கும்போது.. ஒரு நாள் ஸ்கூலுக்கு வந்திருந்தார்.. ரொம்ப உடைஞ்சு போயிருந்தார்.. அப்பா நம்ம விட்டுட்டு போன மாதிரியே.. அவர் கூடப்போன அந்தம்மாவும் அப்பாவ விட்டுட்டு எப்பவோ போயிருச்சாம்.. கூடவே ரஞ்சித்தையும் கூட்டிட்டு வந்திருந்தார்.. அவன் யாருமில்ல.. என்னோட தம்பிமா.. அப்ப இருந்து அடிக்கடி வருவார்.. தம்பியும் வருவான்.. நானும் அவர வீட்டுக்கு வரச்சொல்லி பல தடவை கூப்பிட்டிருக்கேன்.. ஆனா அவருக்கு உன் முகத்துல எப்படி முழிக்கறதுங்கற‌ பயம்… இப்பத்தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி அவருக்கு ஸ்ட்ரோக் வந்துச்சு.. அப்பயிருந்து ஆஸ்பத்திரியில தான் இருக்கார்.. தம்பி தான் பாத்துக்கிறான்.. அதான் நானும் அப்பப்ப‌ போயி கொஞ்சம் ஆறுதலா இருக்கேன்… இன்னும் ரெண்டு நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணாலும் பண்ணிடுவாங்க. அதுக்கப்பறம் வேற ஊருக்குப் போயிர்றோம்னு சொல்லிட்டு இருக்கார்..”

“ஓ.. இதுதான் விஷயமா.. எனக்கு என் பொண்ணப்பத்தி தெரியும்டி.. என்னை மாதிரியே இரக்கம் உள்ள மனசுக்காரினு.. அதான் அப்ப இருந்து சிறுகச் சிறுக சேர்த்த பணத்துல உனக்காக, உனக்கே தெரியாம ஒரு வீடு வாங்கி வச்சிருக்கேன்..”

“ஆ.. என்னம்மா சொல்ற.. அத ஏன் இப்பச் சொல்ற?”

“இந்த வீட்ட காலி பண்ணிட்டு அங்கேயே போயிடலாம். அங்கேயே அவங்கள கூட்டிட்டு வா.. நான் இனிமே அவரப் பார்த்துக்கறேன்…”

“என்னம்மா.. டக்குனு ஒரு முடிவ எடுத்துட்ட..?”

“ஆமான்டி.. வயசாயிடுச்சு இல்லையா.. உன்னையும் உனக்குப் பிடிச்ச ரோஷன் கைல பிடிச்சுக் கொடுக்கனும் இல்லையா.. அப்பறம்.. நான் தனிமரம் தானே..!”

“ரோஷன் மேட்டர்.. அது உனக்கு எப்படிமா தெரியும்….?”

“ரஞ்சித் தான் சொன்னான்.. இன்னைக்கு மத்தியானம் வீட்டுக்கு வந்திருந்தான்.. அன்னைக்கு நான் ஆஸ்பத்திரி வந்தப்ப, என்னைக் கவனிச்சிருக்கான் போல..

உன் ஆபிஸ்மேட் தானே ரோஷன்.. ரஞ்சித்கிட்ட கூட அறிமுகப்படுத்தி வச்சிட்ட.. ஆனா இந்த அம்மாக்கிட்ட சொல்லாம மறச்சிட்ட இல்ல..”

“இல்லமா… அது வந்து.. நேரம் வர்றப்போ சொல்லலாம்னு நெனச்சேன்…. அதான்..”

“சரி..சரி.. இப்ப அந்த நேரம் உனக்கு வந்திருச்சுனு நெனச்சுக்க.. இப்ப சாப்பிடு.. நாளைக்கு காலைல ரஞ்சித்த வீட்டுக்கு வரச்சொல்லு… நானும் ஆஸ்பத்திரிக்கு வரேன்..”

“கிரேட் மா.. எனக்கு இந்த மாதிரி ஒரு அம்மானு நினைக்கும் போதே ரொம்ப பெருமையா இருக்கு…”, என்று சொல்லிவிட்டு ஹேப்பியாக பிடிக்காத சாப்பாட்டை இருவருமே சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *