மாங்கல்யம் தந்துனானே

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 2, 2022
பார்வையிட்டோர்: 6,994 
 

ஹரி கிருஷ்ணன் மறுபடியும் சுணங்கிப் போய்விட்டான். எல்லோருக்கும்போலத்தான் அந்த வீட்டுக்கும் விடிந்தது. அத்தனை பேருக்கும் தெரிந்த மஞ்சள் வானம்தான் ஜான்சிராணி கண்ணுக்கும் தெரிந்த்து. ஆனால் ஜான்சிராணி வீட்டுக்கு மட்டும் துயரத்தோடு விடிந்த து. எழுந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக கிடக்கிறான் அவளுடைய இளைய மகன். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு மகன் எழுந்து விட்டானா என்று பார்த்தபோதுதான் அந்த அதிர்ச்சி காத்திருந்த்து. உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லும் முஸ்தீபுகளைத் தொடங்கி விட்டாள்.

ஒத்தாசையாக வருவதற்கு அந்த ஊரில் அவளுக்கு நாதியில்லை. பக்கத்து வீட்டுக்காரர்களிடம் நடந்து கொண்ட விதம் அப்படி இருந்திருக்கிறது. அவளுடைய கண்ணீரைத் துடைக்க யாரும் முன்வரவில்லை. கையைப் பிடித்து ஆறுதல் சொல்ல எந்த வாயும் திறக்கவில்லை. தன் கையே தனக்குதவி என்று ஒண்டிக்கட்டையாக மகனைக் கூட்டிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்று விட்டாள்.

ஹரி கிருஷ்ணனுக்கு அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர் வந்துவிட்டார். இந்த விசயத்தை அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்த நர்சுதான் அவள் காதுக்குள் போட்டாள். பரிசோதனை நடந்தது. என்ன சொல்லப் போகிறாரோ என்று பதறிக் கொண்டிருந்தாள் ஜான்சிராணி. வந்து அவருடைய இருக்கையில் உட்கார்ந்து கொண்டு ஜான்சி ராணியைப் பார்த்து கேள்விகளை வீசினார்

“கவனமா பாத்துக்கச் சொன்னேன்ல…. என்ன நடந்துச்சு….”

“நல்ல நடை உடையோடதான் புள்ளெ இருந்துச்சு. என்ன்னு தெரியலை டாக்டர், நாலஞ்சு நாலா புலம்பிக்கிட்டே இருந்தான். இன்னைக்கு காலையிலெ பாத்தா ஈரக்கொலையே நடுங்கிடுச்சு. படுத்த படுக்கையாகிட்டான்…” என்று கண்ணீர் விட்டாள் ஜான்சிராணி.

“அவரை சங்கடப்படுத்துற மாதிரி எதுவும் நடந்ததா. யாரும் அவர் பேரைச் சொல்லி வஞ்சாங்களா….?”

“அப்டிலாம் எதுவும் நடக்கலையே சாமி…. வேலாவேலைக்கு கஞ்சிலாம் கரெக்டா சாப்டானே. இது எப்டி நடந்துச்சுன்னு எனக்கே விளங்கலை டாக்டர்…..!”

“ஓகே… ஓகே… கண்ணைத் தொடச்சுக்கோங்க….ரொம்ப குழப்பமா இருக்காரு, இது நீடிச்சா ப்ராப்ளம்தான்… முடிஞ்சவரை முயற்சி பண்ணிப் பாக்கலாம்…. மத்தபடி கடவுள்தான் காப்பாத்தணும்..!”

மகனைக் கூட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டாள். மனசுக்குள்ளேயே ஒவ்வொரு கடவுளையும் கும்பிட்டு நேர்த்திக் கடன் செலுத்துவதாக வேண்டிக் கொண்டாள். போகும்போது இருந்த வேகம் வீடு திரும்பும்போது இல்லை.

டாக்டரைப் பார்த்துவிட்டு வீடு திரும்ப இரவு எட்டுமணி ஆகிவிட்டது. அவர்கள் ஊருக்குள் நுழையும்போது மாங்கு மகன் மட்டும் ஆடுகளை அடைத்துக் கொண்டிருந்தான். அவள் வந்த பின்தான் அவள் வீட்டு ஆம்படையான் போசு வீட்டுக்குள் நுழைகிறான், அழுது அழுது வீஙுகிப்
போன சான்சிராணியைப் பார்த்தான்

“என்னாச்சு மூஞ்ச தூக்கி வச்சிண்டு இருக்கே”

“….உங்களுக்கென்ன இன்னும் மாப்பிள்ளையாட்டம் அக்கரம் சுத்திக்கிட்டு இருக்கீங்க….,நா இருக்குறவரை நாந்தானே தித்திரிக்கணும் , அதான் இப்படி சாவகாசமா வந்து விசாரிக்கிரீங்க…உங்களுக்கு வாக்கப்பட்டேன்ல, அதுக்கு செருப்பாலெ அடிச்சுக்கணும்.. அதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்….எல்லாம் ஏவ்விதி…”

“ஏன் வளத்துக்கிட்டு இருக்கே… சொல்ல வந்த்தை சொல்லித் தொலை….”

“காலைல காபி கொடுக்கிறதுக்காக ரூமுக்குள்ளே போனேன், பாத்தா தம்பி படுத்த படுக்கையா கெடக்கான். இப்பவொ அப்பவோன்னு ஆயிப்போச்சு ஒத்தாசைக்கு ஒரு நாதியில்லெ. நா ஒரு ஆளுமா ஆஸ்பத்திரிக்கி கூட்டிட்டுப் போய்ட்டு வந்தேன்….”

“சரி விடுவிடு என்ன சொன்னாங்க ஆஸ்பத்திரிலே… ஒடம்பு எப்படி இருக்காம்..?ஏற்கனவே ஒரு பிரச்சினையும் இல்லைனு சொன்னாங்களே…”

“டாக்டர்னா அப்பிடித்தான் சொல்வாங்க. மறுபடியும் வர வேணாமா அதுக்காக அப்டி சொல்லிருப்பாங்க…..!”

பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே அவனுடன் படுக்கையில் சாய்ந்து கொண்டாள் ஜான்சிராணி. அவளை கூல் செய்வதற்காக உச்சந்தலையிலிருந்து கீழ்தாடை வரை வருடிக் கொடுத்த போசு சீக்காளியின் எதிர்கால்ம குறித்த கேள்வி எழுப்பினான்.

“இனி என்ன செய்யலாம். யோசிச்சிருப்பியே….ஐடியா இருக்கா…”

“ஆமாங்க…. எப்டி சொல்றதுன்னுதா யோசிச்சுக்கிட்டு இருந்தேன். எனக்கு என்னமோ சின்னவன் பொலைப்பான்னு நம்பிக்கை இல்லைங்க… பிரியாவை மூத்தவனுக்கு ரெண்டாம் தாரமா கட்டி வெக்கெலாம்ன்னு நினைக்கிறேன்…! அதுக்கு சொத்து கொஞ்சம் அதிகமா இருக்கிறதா பேசிக்கிறாங்க….”

சரி தவறு என்று எதுவும் சொல்லாமல் தலையாட்டினான்.

இதை ஆமோதிப்பதாக எடுத்துக் கொண்ட சான்சிராணி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி யோசிக்கத் தொடங்கி விட்டாள். சதா எந்நேரமும் கணவன் மனைவிக்குள் நடந்த இந்த சம்பாசனைகள் அரிதாசின் காதுகளுக்கு எட்டியது. கேன்சர் எப்படி அவனுக்கு உயிர்ப் பிரச்சினையாக இருக்கிறதோ, பெற்றவர்களின இந்த உரையாடல் வாழ்க்கை பிரச்சினையாக மாறிக் கொண்டிருந்தது.

இந்த சம்பாஷணைகளை ஒவ்வொரு நாளும் கேட்டுக் கொண்டிருந்த அரிதாஸ் முற்றிலும் மாறிப் போய் விட்டான். யாரோ சிலரை பழி வாங்கப் போகும் வெறிநாய் போல கூப்பாடு போட்டான்.சுவரில் முட்டிக் கொண்டான். அவளுடைய மேடு பள்ளங்களையும் ஏற்ற இறக்கங்களையும் எப்போதும் வர்ணிப்பவனுக்கு ஆத்திரம் இருக்காதா என்ன…?

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அன்னந்தண்ணியில்லாமல் வறப்பட்டினியாக கிடந்தான்..

நல்ல நாளும் பெரிய நாளுமான ஏகாதசியன்று ஒவ்வொரு வீட்டிலும் விருந்துச் சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக ஜான்சிராணி வீட்டிலிருந்து எழுந்த அழுகுரல் செவிப்பறைகளை கிழித்தது. விரதச் சாப்பாட்டுக்காக காத்திருந்தவர்கள் சாவு வீட்டுக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் ஆகிவிட்டது. அவனுடைய இறப்புக் குறித்து யாருக்கும் தெரியவில்லை. மர்மம் இருப்பதாக உணர்ந்தார்களே தவிர கேட்டுத் தெரிந்து கொள்ளத் திராணியும் இல்லை.

நேரம் ஆக ஆக இன்னொருபுறம் ஊர்ப்பெரியவர்களின் அனத்தல் அதிகரித்துக் கொண்டிருந்தது.

“கோயிலைத் திறக்க வேணாமா. பாடியை தூக்குற வழியைப் பாருங்க” என்றார்கள். வேறு வழியில்லாமல் அதற்கான சடங்குகள் தொடங்கின.அப்போதுதான் பெரிய மகன் சங்கரனும் அரிதாசின் மனைவி பிரியதர்சினியும் காரில் வந்து ஜோடியாக இறங்கினார்கள். இதைப்பார்த்தவர்கள் இது என்னடா கொடுமை என்று விழித்தார்களே தவிர வாய் விட்டுக் கேட்க முடியாத சூழ்நிலை

தாலியை அறுத்து வளையல்களை உடைக்கும் சாங்கியம் நெருங்கியது. ஆனால் இதற்கு பிரியதர்சிணி ஒத்துக் கொள்ளவில்லை, இதனால் பலருக்கு ஆத்திரம் மூக்கு மேல்
நின்றது. வாய்வழியாக வராததால்ஆத்திரத்தின் உக்கிரத்தை அவளால் உணர முடியவில்லை. அதில் பக்கத்து வீட்டுக்காரி பரிமளா மட்டும் மூக்கு விடைக்க கத்தினாள். அவள் மட்டும் மூர்க்கமானவள் போல் இருக்கிறது.

“ஏண்டி லவ்வாடி…புருசன் எறந்து கிடக்கான். நீ என்னமோ தாலிய அறுக்க முடியாதுங்கிறே…வெளிய போடி வேசை முண்டை..” என்று கூப்பாடு போட்டாள். இந்தச் சாங்கியமெல்லாம் இல்லாமல் அரிதாசின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கணவன் இறந்த துயரத்தை இம்மியளவு கூட காட்ட்வில்லை பிரியதர்ஷினி. மாமனார் மாமியாரைத் தவிர ஊரே இதைப்பற்றித்தான் பேசிக் கொண்டிருந்த்து.

இது போதாது என்று பெரிய மகனின் முதல் மனைவி சங்கரதாசுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டாள். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இரண்டு குழந்தைகள் இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சங்கரதாசுக்கு எதிராக தீர்ப்பு வந்த்து. குழந்தைகளின் கல்விச் செலவுக்கு நிதி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இது அவனுடைய காதுகளுக்கு எட்டியபோது அவனுடைய வீராப்பு தீர்ப்பை நிர்தாட்சண்யம் செய்த்து.

“இது தலை போற காரியமில்லை…என்ன நடந்தாலும் பார்க்கலாம்…” என்று சங்கரதாசு சொல்லி விட்டான். நீதிமன்றம் கூடிக் கொண்டே இருக்கிறது. ஆனால் உத்தரவுகள் கிடப்பிலே கிடக்கிறதே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாள் முதல் மனைவி.

இந்த விசயத்தைக் கேள்விப்பட்ட ஊர் ஜனங்களுக்கு உள்ளூர வருத்தம். பொண்ணாப் பறந்துட்டா இப்டிலாமா பண்ணுவாங்க…அந்த ஊருக்குள் நுழையும்போது இதைக் கேட்க முடிகிறது.

Print Friendly, PDF & Email

3 thoughts on “மாங்கல்யம் தந்துனானே

  1. சில ஜென்மங்கள் இன்னும் திருந்தவில்லை. அதனால்தான் நாம் வாழும் காலம் கலியுகமாகிவிட்டதுப்போல…அச்சு. பெண்குழந்தைகளைப் பெற்றவர்கள் படிக்க வேண்டிய கதை

  2. நல்ல கதை. இது எங்கள் ஊருக்கு அருகில்கூட நடந்தது.இதனை யாராவது தட்டிக் கேட்பார்களா என்றால் இல்லை. இதுபோன்ற தருணத்தில் இந்த கேவலமான நடவடிக்கையை உலகத்துக்கே வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது உங்கள் தளத்தில் வெளியான இந்தக் கதை. ஆசியருக்கு எனது நன்றியைத் தெரிவித்ததாக சொல்லுங்கள்

  3. இந்த சங்கரதாசு குடும்பத்தை அப்படியே சிறையில் கழி திங்க வைக்க வேண்டும்.இந்த பிரியதர்ஷினி போன்றோரை கழுகு மரத்தில் ஏற்ற வேண்டும்.அருமையான கதை.கதையாசிரியருக்கு பாராட்டுகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *