கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 23, 2016
பார்வையிட்டோர்: 13,442 
 

ஜேஜியின் மனைவி வந்திருப்பதாக என்னுடைய மனைவி சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

“”நீங்க சொன்னாத்தான்ணே கேப்பாக”

“”சரிம்மா… என்னதான் பிரச்னை?” என்றேன்.

“”வருமானத்துக்கு ஒண்ணும் குறையில்லண்ணே… ஆனா முழுசும் குடும்பத்துக்கு வராம….”

அதிர்ந்து போனேன்.

“”என்னம்மா சொல்ற நீ?”

ஜேஜி என்று நாங்கள் சுருக்கமாக அழைக்கும் ஜே.கோவிந்தன் முகம் மனதுக்குள் வந்து போயிற்று.

“”நீ சொல்றதுக்கு நிறைய அர்த்தம் இருக்குதே…. ஏதாவது பொண்ணுங்க விஷயத்துல காசு போகுதா? ”

“”அய்யய்யோ இல்லண்ணே… அதுல அவரு மேல ஒரு துளி குறையில்ல… நீங்க கொஞ்சம் பேசுங்கண்ணே ”

“”பையனுங்க நல்ல படிக்கறாங்களாம்மா… பெரியவன் என்ன படிக்கிறான்?”

மழை மேகம் “”பத்தாவது படிக்கிறான்… ஸ்கூல்ல வரச் சொல்லி சொன்னாலும் இவரு போறதில்ல… கேட்டா வேலை அதிகம்னு சொல்றாரு…. கடைசியா பையனை அறைக்கு வெளியே நிக்க வைச்ச பிறகு போறாரு…. போனாலும் எதுக்கு வெளியில நிக்க வைச்சிங்கன்னு வாத்தியார் கிட்ட சண்டை ”

சலிப்புடன் போய்க் கொண்டே இருந்தது ஜேஜியின் மனைவியின் குரல்.

“”சரிம்மா… இன்னிக்கு நான் ஜேஜியப் பார்த்து பேசுறேன். நீ ஒண்ணும் வருத்தப்படாத… போய்ட்டு வா”

*******

ஞாயிற்றுக்கிழமையின் சோம்பல் உடலிலும் மனதிலும் இருந்தது. குளித்து முடித்து பத்தே கால் மணியிருக்கும்போது “ஜீ டுடோரியல்ஸ்’ படிக்கட்டில் ஏறி முன்னால் இருந்த சிறிய அறையில் அமர்ந்திருந்தேன்.

இன்னொரு அறையின் உள்ளே நுழையும் இடத்தில் ஜே.கோவிந்தன் முதல்வர் என்று பெயர்ப்பலகை இருந்தது. பெயருக்குப் பின்னால் ஜேஜியின் பட்டங்கள் அவன் பெயரைவிட நீளமாய் இருந்தன.

அனுமதி பெறாது உள்ளே வர வேண்டாம் என்று ஒரு அறிவிப்பு என்னைப் பயமுறுத்திற்று. அறைக்கதவு உட்புறம் தாழிடப்பட்டிருந்ததால் எனக்குத் தயக்கமாய் இருந்தது.

“”என்ன சார் …. அட்மிஷனா?”

உள்ளே நுழைந்த அந்தப் பெண் ஜேஜியின் உதவியாளராக இருக்க வேண்டும். பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து பழைய மர மேஜை மீது ஏதோ ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தை வைத்து எழுதத் துவங்கிற்று.

“”பெயர்… என்ன படிச்சிருக்கீங்கன்னு சொல்லுங்க… என்ன தேர்வு எழுதணும்… இப்ப க்ரூப் ஐஐ- க்கு….”

“”இல்லம்மா… நான் ஜேஜியோட நண்பர்… அவரைப் பார்க்கணும்”

“”மன்னிச்சுக்கங்க சார்… ஒரு முக்கியமான மீட்டிங்-ல இருக்கார்… கொஞ்ச நேரம் ஆகும்”

பதினான்கு நிமிடங்கள் போன பிறகு அவனுடைய அறையில் இருந்து மூன்று பேர் வெளியே போனார்கள். இரண்டு பேர் வெள்ளை வேட்டி சட்டையிலும் ஒருவர் லுங்கி சட்டையிலும் போக எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

உதவிப் பெண் சொல்லியிருக்க வேண்டும்.

“”என்னடா அதிசயமாயிருக்கு? ”

என்றபடி ஓடி வந்து ஜேஜி என் கையைப் பிடித்துக் கொண்டான். முரட்டுத்தனமாக கை இருந்தது. சிறுவயதில் ஏர் பிடித்துக் கல் உடைத்து களையெடுத்த கை.

பழைய சோற்றில் கரைந்து போன அந்த நாட்கள் மனதிலாடிற்று. விடுமுறை நாட்களில் கிடைத்த வேலைக்குச் சென்று கிடைத்ததை சாப்பிட்டு, அடுத்த ஆண்டுக்கான படிப்புச் செலவுக்குக் காசு சேர்த்த நாட்கள்.

“”என்ன ஜேஜி வேலையாய் இருந்தயா? தொந்தரவு செஞ்சிட்டனா?”

“”ஒண்ணுமில்லப்பா… ஒரு பஞ்சாயத்து”

“”ஏதோ மீட்டிங்கில இருக்கேன்னு அந்தப் பொண்ணு சொல்லுச்சு ”

“” ஆமாம் அதுவும் மீட்டிங்தான்… ரெண்டு பேரும் சம்பந்திங்க. ஒத்துப் போகலை. அதான் பேசி அனுப்பினேன்”

“”என்ன இது உனக்குச் சம்பந்தமில்லாத”

பெரிதாய்ச் சிரித்தான் ஜே.ஜி.அதுவே பதிலாய் இருந்தது.

“”அப்புறம் டுடோரியல் எப்படிப் போகுது?”

“”ஒண்ணும் குறையில்லை”

“”எவ்வளவு பேர் படிக்கிறாங்க?”

“”இப்போதைக்கு முன்னூறுக்கு மேல”

ஒருவருக்கு எவ்வளவு கட்டணம் என்று சொல்லி அதை முன்னூறு பேருக்குக் கணக்கிட்டுச் சொன்னபோது அது ஆறு இலக்கத்தைத் தாண்டியிருந்தது

“”ஆனா என்ன? ஓய்வுங்கிறதே கிடையாது. எது என்ன ஆனாலும் தினமும் இங்க வந்து

உட்கார்ந்தாதான் வேலை நடக்கும்”

மேஜை மேல் ஆங்கிலத்தில் ஒன்று தமிழில் இரண்டு என மூன்று செய்தித்தாள்கள் இறைந்திருந்தன.

“”சரி ஜேஜி உன் பையன் என்ன படிக்கிறான்?”

“”பத்தாவதுப்பா”

அந்தப் புகழ்பெற்ற பள்ளியின் பெயரைச் சொன்னான்.

“”பத்தாவதுன்னா அடிக்கடி பெத்தவங்களை வரச் சொல்லுவாங்களே…”

“”சொல்லுவாங்க… ஆனா நான் போறதில்ல ”

“”போகாம விட்டா… பையனைத்தான் தண்டிப்பாங்க… சரி… எப்படிப் படிக்கிறான் பையன்… என்ன ரேங்க்…”

இந்தக் கேள்விகளுக்கு ஜேஜியிடம் இருந்து பதில் இல்லை. மெüனம் நீடிக்க நானே தொடர்ந்தேன்.

“”இது சரியில்ல ஜேஜி… நீ செய்ற சமுதாயப் பணி எல்லாம் எனக்குத் தெரியும். அனாதை இல்லம்… முதியோர் இல்லம்… சுழற்சங்கம் இதுக்கெல்லாம் உன்கிட்ட இருந்து நன்கொடை போகுதுங்கறதும் தெரியும். ஆனா இது எல்லாத்தியும் விட நம்ம குழந்தைங்க… குடும்பம். இது ரொம்ப முக்கியம்”

அதற்கு மேல் தொடர்ந்து அதை பேச நட்பு மனம் இடம் தரவில்லை. எதுவும் தெரியாதவர்களுக்கு வேண்டுமானால் ஏதாவது அறிவுரை சொல்லலாம்.

ஜேஜி மெüனம் கலைந்து….

“”வாப்பா… வீட்டுக்குப் போகலாம்” என்று சொல்ல அவன் வீட்டுக்கும் கிளம்பினோம்.

********

ஜேஜியின் வீட்டில் அவன் பையனும் மனைவியும் இருந்தார்கள்.

“”வாங்கண்ணே…”

பெரியவனை அழைத்துப் பேசினேன். அந்த வீட்டிலும் பையன்களின் முகத்திலும் ஜேஜியின் ஆறிலக்கு வருமானத்துக்கான சாயல் எதுவும் இல்லாதது, எளிமையா? இயலாமையா? என்று குழப்பமாக இருந்தது. ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. ஜேஜிக்குப் பிள்ளைகள் மேலும் வீட்டின் மேலும் கவனம் ரொம்பவும் குறைவு என்பது.

ஜேஜியைத் தனியே அழைத்துக் கேட்க…. அவன் சிறிதும் அசராமல்….

“”இத பாருப்பா… உரம் வெச்சி… தண்ணி ஊத்தி…வேலி போட்டு வளர்த்தா ரோஜாவும், குரோட்டன்சும் மட்டும்தான் வளரும். காக்கா துப்பிவிட்டுப் போற வேப்பங் கொட்டையும், புளியங்கொட்டையும் எந்த உரமும் இல்லாம எப்படிப்பா பெரிய மரமா வளருது?” என்று எதையோ பேசத் துவங்க… எனக்கு எரிச்சலாயிற்று.

“”இன்னிக்கு உலகம் எங்கே போயிட்டிருக்குன்னு புரிஞ்சு பேசறியா… இல்ல புரியமாப் பேசறியா… உன்னோட டுடோரியல்ல மூணு செய்தித்தாள் வாங்கற நீ வீட்டுல பையனுங்க படிக்கறதுக்காக ஏன் எதுவுமே வாங்கறது இல்ல…. இது ஒரு சின்ன உதாரணம்… மாசம் ஒருமுறை பையனோடு பள்ளிக் கூடம் போய் அவன் எப்படிப் படிக்கிறான்னு பாரு… வாரம் ஒரு முறை வெளில கூட்டிட்டுப் போய் நல்லா சாப்பிட வை… ஒத்தை ஆளா ஏர் இழுக்குற பலம் உடம்புலயும் வேணும்… மனசுலயும் வேணும்….”

சொல்லிவிட்டு விடை பெற்றேன். தொடர்ந்த அலுவல்களில் நான் ஜேஜியை மறந்து போனேன்.

*******

ஒன்றரை மாதம் கழித்து ஜேஜியின் அழைப்பு கைபேசியில் வந்தது.

“”என்ன ஜேஜி செüக்கியமா?”

அதற்குள் அவனுடைய மனைவி கைபேசியை அவனிடம் இருந்து வாங்கி என்னிடம் பேசியது.

“”அண்ணே செüக்கியமா அண்ணே… நீங்க அன்னைக்கு வீட்டுக்கு வந்திட்டுப் போனதுக்கப்புறம் மாசத்துக்கு ரெண்டு தடவை பள்ளிக்கூடத்துல போய்ப் பார்க்குறார். அதைவிட செய்தித்தாள் வாங்கிப் போட்டிருக்கிறார்… பதினஞ்சு நாளைக்கு ஒரு தடவை எல்லாரையும் வெளியே கூட்டிட்டுப் போறார். உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும் அண்ணே ”

எனக்கு மகிழ்ச்சி கூடிற்று.

ஜேஜி பேசினான்:

“”நீ பேப்பர் வாங்கிப் போடச் சொன்னதுல இன்னொரு நன்மையும் நடந்திருக்கு. எங்க வீட்டுக்குப் பால் ஊத்தற பொண்ணு… பிஎஸ்சி படிச்சிருக்கு. தினமும் உட்கார்ந்து பேப்பர் படிச்சுட்டுத்தான் போகும். அதுல வந்த விளம்பரத்தைப் பாத்து விண்ணப்பிச்சு வேலைக்குச் சேர்ந்துடுச்சி… ” அவன் குரலில் மகிழ்ச்சி கொப்புளித்தது.

ஜேஜி பேசிக் கொண்டே இருந்தான். வெளியே மழை லேசாய் பெய்யத் தொடங்கிற்று. மழைத்துளி மண்ணில் விழுந்தது. மண் வாசனை கிளம்பி மனதெங்கும் பரவிற்று. மழை என்ன பேதம் பார்த்தா பெய்கிறது? எல்லா இடத்திலும்தானே பெய்கிறது. ஜேஜி மழை மேகம் போல. தன் மகனைப் போல பிறரையும் பார்க்கும் மழை மேகம்.

– ஜனவரி 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *