மலையின் தனிமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2021
பார்வையிட்டோர்: 4,835 
 

கருகிய காகித அடுக்குகள் கிணற்றடியில் புரண்டு கொண்டிருந்தன. உடைந்த சில காகிதத்துண்டுகள் காற்றில் நகர்ந்து, காம்பவுண்டு சுவரில் ஏறமுயன்று பின் கீழே விழுந்து சிதறின.

ஒரு குச்சியால் பிரிசில்லா காகித அடுக்குகளைப் புரட்டினாள். கறுப்புத் துகள்கள் குபுக்கென்று எழுந்தன தீய்ந்த நாற்றத்தோடு. அடுக்குகளுக்கு அடியில் நீலநிற டைரி ஒன்றும், வேறு இரண்டு நோட்டுகளும் ஓரங்கள் எரிந்த நிலையில் கிடைத்தன. நோட்டுப்புத்தகங்களில் கிரேசுக்கு எழுதிக் காண்பித்தவை இருந்தன தேதி வாரியாக. 2013 டைரியில் திறந்தாள். மார்வெல்ஸ் செல்வநாயகம் என்று கறுப்பு மையில் எழுதப்பட்டிருந்ததைக் கவனித்தாள்.
வீட்டிற்குள் பெனிட்டாவும், ஆலனும் விளையாடிக் கொண்டிருந்தனர். கட்டிலில் கிரேஸ்அத்தை முடியை விரித்துப் போட்டு, எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். இவள் டைரியைத் திறந்தாள்.

ஐனவரி 1
8.30 ஆராதனைக்கு சர்ச் சென்றேன். வீட்டைப் பூட்டி சற்று தூரம் சென்ற பின் மறுபடியும் வந்து பூட்டை இழுத்துப்பார்த்தேன். கிரேஸ் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தாள். திரும்புவதற்கு (கம்யூனியன் முடிந்து) 10.30 ஆகிவிட்டது. வரும் வழியில் கமிஷனர் ஆபிஸ் அருகில் கால் கிலோ சிக்கன், நாடார் கடையில் காய்கறிகள் வாங்கினேன். தங்கம் ஸ்டோரில் அரிசி 2 கிலோ(பொன்னி). வீட்டைப்பூட்டினோமா என்ற சந்தேகம் மறுபடியும் வந்தது.

கிரேஸ் கட்டிலைப் பிடித்தபடி அழுது கொண்டுருந்தாள். சர்ச்சுக்குப் போனதாக சைகையில் (காலண்டரைக் காட்டி) சொன்னேன். அவள் தலையசைத்தாள். சுவரில் இருந்த ஸ்டீபன் போட்டோவைக் காட்டி தன் தலையைத் ஆட்டி கொண்டுவா என்றால். எதற்கென்று புரியவில்லை.அருகில் இருந்த டம்பரிளிலிருந்து தண்ணீரைத் தொட்டு ஸ்டீபன் தலைமீது அவள் வைத்தபோது தான் எனக்கு புரிந்தது. அவனுக்கு ஞானஸ்தானம் கொடுத்த நாள் 1.1.65.

இது மட்டும் எப்படி ஞாபகத்தில் நிற்கிறது?

சுட்டி சேனலை உற்சாகமாகப் பார்த்தாள்.

கறி நன்றாக வெந்து இருந்தது. இரண்டு வாய் அதிகமாகவே சாப்பிட்டாள். வாயைக் கழுவி விடும்போது பேசினைத் தட்டிவிட்டாள் நல்லவேளை கிழே விழுந்தது. கட்டில் பாழாகவில்லை.

“சி…சி…ருக்கு ….சோ…” சோ… இரண்டு நாட்களாக எலக்ட்ரானிக் சிட்டுக்குருவிக்குச் சோறு வைக்கச் சொல்கிறாள். கிண்ணத்தில் கொஞ்சம் சோறு குழம்பு வைத்து அவளிடம் காட்டி விட்டு, அறையில் சிட்டு குருவிக்கு முன்னால் வைத்தேன்.

“சாப்பு… சாப்பு…” என்றாள். குழந்தைபோல் சிரித்தாள்.

வழக்கம் போல் கார்ட்டுன் சேனல் பார்த்தாள்.

மாலையில் போதகர் வந்து ஜெபம் பண்ணினார். ராபின் ஜான்சன் மனைவியுடன் மெக்ரனட் கேக்டுடன் மகள் கல்யாணப் பத்திரிகை கொடுக்க வந்தான். தாமஸ் மவுண்ட் சர்ச் போனதாக சொன்னபோது, சி.எஸ்.ஐ காரனுக்கு எதுக்கு ஆர்சி சர்ச் என்று கேலி பண்ணினேன். தாமஸ் இந்தியா வந்த போது சி.எஸ்.ஐ, ஆர்சி இருந்ததா என்று திரும்பிக் கேட்டான். ஐந்து ஆண்டுகளாக என்னால் மலை ஏற முடியவில்லை. தலைசுற்றல். உச்சியிலிருந்து சென்னையைப் பார்ப்பது அலாதியானது. கிறிஸ்மஸ் காலங்களில் தாமஸ் மவுண்ட் பகுதி முழுக்க நட்சத்திரங்கள் தொங்கும்.

ஐனவரி 5
இன்று இரண்டு முறை பல் விளக்கினேன். ஒரு கோடிக்கு தரமுடியமா என்று ஒரு ரியல் எஸ்டேட்காரன் பட்ரோடில் வைத்து என்னைக்கேட்டான் வீட்டைக் கேட்டு இந்தப்பக்கம் வந்துவிடாதே என்று கோபமாகச் சொன்னேன். ஒவ்வோரு செங்கலிலும் என் விரல் ரேகை இருக்கு. கிரேஸ் எத்தனை வாளி தண்ணீர் இறைத்திருப்பாள். அந்தப் பையலுக்கு என்ன தெரியும். இரண்டு அறைகளிலும் மகன்கள் விளையாடியது, கிறுக்கியது, சிரித்தது, படித்தது, மூச்சுவிட்டது, அழுதது, ஜபித்து பாடியது எல்லாம் அப்படியே இருக்கிறது. வராண்டாவில் எத்தனை பிள்ளைகள் ட்யூஷன் கற்றிருப்பார்கள். வீட்டின் மீது வாங்கிய கடன்தான் பின்னால் பிள்ளைகள் எம்.எம்.சி, அண்ணா யுனியவர்சிட்டி படிப்பு, வெளிநாடு செல்ல எல்லாவற்றிற்கும் உதவியது. இதெல்லாம் யாருக்கும் விற்கக் கூடியதில்லை.

இரண்டு முறை கிரேசுக்கு டயபர் மாற்ற வேண்டியதாயிற்று. Haloperidol, Tonact 10 ஆகிய மாத்திரைகள் வாங்கி வந்தேன்.

ஓ வென்று கத்திக்கொண்டு ஆலன் ஓடிவந்தான். பின்னால் பெனிட்டா. மறுபடி கத்திக்கொண்டு உள்ளே ஓடினர். கிரெஸ் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இருந்தாள். வராண்டாவில் தாமஸ் ஸ்டீபனுடன் ஜெயகர் அமர்ந்திருந்தான். ஸ்டீபன் தாமஸ் மனைவிகள், பிள்ளைகள் லாட்ஜிலிருந்து இன்னும் வரவில்லை. கேர் டேக்கர் வத்சலா வந்திருந்தாள். அத்தைக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள்.

ஐனவரி 8
போதகர் ஐயாவை கத்திபாரா அருகில் பார்த்தேன். வயதான காலத்தில் ஏன் ஐயா இப்படி சிரமப்படுகிறீங்க. அமெரிக்கா, யுகேக்கு பிள்ளைகள்கிட்ட போயிட வேண்டியதுதானே என்றார்.
ஸ்டீபன், தாமஸ்க்கு போன் பண்ணியும் எடுக்கவில்லை. ஜெயகர் மெடிக்கல் கான்பரன்சுக்காக இந்தோனேசியா போய் இருப்பாதாக பிரிசில்லா சொன்னது. பசங்கள் பெனிட்டா, ஆலன் வெப் கேமராவில் வந்தனர். கிரேஸ் பார்த்தாள். புரியாமால் விழித்தாள். அதைவிட அந்த பிள்ளைகளுக்கு எங்களை யாரென்று தெரியவில்லை. ஸ்டீபன், தாமஸ் மனைவி, பிள்ளைகளுக்கு தமிழே தெரியவில்லை.

“என் வளையல், செயின் எங்கே” என்றாள் திடீரென்று. பீரோவிலிருந்து எடுத்து வந்து போட்டேன். கொஞ்சநேரம் சுட்டி டிவி பார்த்துக்கொண்டிருந்தாள். அப்படியே தூங்கிப் போனாள்.

ஐனவரி 15
இன்று ஒரே கூட்டம். காய்கறி விலை உயர்ந்திருந்தது. புளிக்குழம்பு வைத்திருந்தேன். ஊட்டியபோது விரலைக் கடித்துவிட்டாள். நன்றாகவே சாப்பிட்டாள். வயித்தாலை போனது.

மாலை 7 மணிக்கு அவளை வீல் சேரில் வைத்து உருட்டிக் கொண்டு சில்வர் தெரு முனைக்கு வந்து, பிளாட்பாரத்தில் ஏற்றி நின்றேன். அவளுக்கு ஒரே குஷி. போய்க் கொண்டே இருந்தன வாகனங்கள் நெருக்கமாக. இடது கையை உயர்த்தி ஸ்கூல் பக்கம் காட்டினார். எத்தனை முறை இருவரும் நடந்து, ஸ்கூல் பின்வழியாக உள்ளே போய் வந்திருப்போம். சி.எஸ்.ஐ சர்ச் பக்கம் கரம் திரும்பியது. “நம்ம சர்ச்” என்றாள். பின் தாமஸ் மவுண்ட் பக்கம் கை உயர்ந்தது. பிக்னிக் என்றால் லெமன் ரைஸ், முட்டைபிரியாணி கட்டிக் கொண்டு தாமஸ் மவுண்டு ஏறியதை நினைக்கிறாளோ?

பசங்களோடு மலையேறும்போது மகிழ்ச்சி, பயம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்டீபன், ஜெயகர் எங்கேயாவது தடுக்கி விழுந்து விடக்கூடாது என்ற பயம். எவ்வளவு வேகமாக ஓடுவார்கள். தாமஸ் இருபுற சுவர்மீது. இவர்களோடு மேலே சென்று ஜெபம் பன்னியபின் சாப்பிட்டு விட்டு, 3 மணிக்கு திருப்புவது… இதெல்லாம் கிரேசுக்கு ஞாபகம் இருக்குமா? பசங்களுக்கு?

ஐனவரி 18
மூன்று மகன்களும் கிரேசுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னார்கள். (17 ஆம் தேதி இது பற்றி மெயில் அனுப்பினேன்) அவளுக்கு எங்கே புரிந்திருக்கப் போகிறது? ட்ராஃபிக் சிக்னல் அருகே பேக்கரியில் கேக் வாங்கி வந்து, அவளை வெட்டவைத்தேன். 75 என்று எழுதிக்காண்பித்தேன். தலையாடினாள்.

போதகர் வந்தார். தன் மனைவியின் பேச்சைக்கேட்டு அரக்கோணத்தில் தனியாக இருந்த தன் அம்மாவைக் கவனிக்ககாமலேயே விட்டுவிட்டதாகக் கூறி கண்கலங்கினார். அம்மா போன வருடம் இறந்து விட்டார்கள். குற்ற உணர்வு இன்னும் அதிகமாகியது. பாவம். நான் ஆறுதல் கூறினேன். இன்று ஐயா பண்ணிய ஜபம் உருக்கமாக, உண்மையாக இருந்தது.

ஐனவரி 24
மனம் கனமாக இருந்ததால். மலை அடிவாரம் சென்றேன். புரியாத மொழி, கலாச்சாரம், மதம், என்ற சூழலை செயின்ட் தாமஸ் எப்படி தனியாக சமாளித்தார்? தாமஸ் மலைக்குள் நிறைய கதைகள் புதைந்து இருக்கிறது. எனக்கு 60 வருட Friend, Philiosopher and guide தாமஸ் மலைதான். இன்றைக்கு எவ்வளவோ மாற்றங்கள். ஆனால் மலை அப்படியேதான் அமைதியாக இருக்கிறது.

ஐனவரி 25
கிளாரா ஜெயந்தியும், அகல்யாவும வந்தனர். கிரேசின் கையைப் பிடித்தபடி வெகுநேரம் அமர்ந்திருந்தனர். டீ கொடுத்தேன்.

கிரேஸ் மௌனமாக அவர்களைப் பார்த்தாள். “சாரி நல்லா இருக்கு” என்றாள் திடீரென்று. அகல்யா சேலையைத் தடவிப் பார்த்தாள்.

“கிரேஸ்ஃபுல் டீச்சர்னு பேர் வாங்கினவங்க இப்படி ஆய்ட்டாங்க…. டீச்சர்தான் எங்களுக்கு காட்மதர்.”

“தெரியும் எப்பவும் உங்களை பத்தி சொல்வாள்.” என்றேன்.

அவர்கள் ஜெபித்து விட்டுச் சென்றனர். கிரேசுக்கு கடைசிவரை அவர்கள் யாரென்று தெரியவில்லை. சற்று நேரம் கழித்து மெகந்தி என்று சொல்லி சிரித்தாள். மெகந்தி பூசும் ஜெயந்தியை மறக்கவில்லைதான்.

பிப்ரவரி 10
ஐபிஎஸ்காரர் வீட்டருகே இருந்த மணலில் சறுக்கி விழுந்தேன். நல்லவேளை ஒருவர் பிடித்துக்கொண்டார். “இங்கிலனட் ஹெர்குலஸ் சைக்கிளை இவ்வளவு உயரமாக நான் பார்த்ததில்லை. எதுக்குசார் இந்த வயசுல சைக்கிள்,” என்றார் அந்த ஆள். இந்த சைக்கிள்தான் எனக்கு இன்னோரு கால். தாம்பரம், அடையாறு, ராயபுரம் என்று என்னைப் பல இடங்களுக்கு கூட்டிச் சென்றிருக்கிறது. அதை எப்படி விடுவது? நல்ல வேளையாக கிரேசுக்கு வாங்கிவந்த அஞ்சப்பர் கறிக்குழும்பு சிந்தவில்லை. மல்லிகைப்பூ கூடைக்கு வெளியே விழுந்து விட்டது. எனக்கு இரண்டு நாட்களாக சாப்பிடவே பிடிக்கவில்லை. அல்சர் தொல்லை மறுபடி வந்துவிட்டது. வலதுபுற வயிற்றில் வலி.

படுத்திருக்கும்போது, ஜெயகர் அருகில் வந்து வயிற்றைத் தொடுக் கேட்டான்,

“என்னப்பா பண்ணுது?”

“ஒன்றுமில்லப்பா சும்மா அல்சர்.”

“உடம்ப கவனிக்குனும்பா”.

“சரிப்பா”.

திடுக்கிட்டு எழுந்தேன். வெறும் கனவு. ஸ்கைப்பில், கைப்பேசியில் ஜெயகருடன் பேச முயன்றேன். கிடைக்கவில்லை. இன்று விடுமுறைதான், எங்கு போயிருப்பான்?

ஜெயகர் வாசலில் வந்து நின்றான். “ப்ரிசி என்ன செய்ற?”

“ஒன்றுமில்ல, உங்க அப்பா டைரி கிடைச்சது”.

“பழைய பேப்பர், சுவடி, டைரி எப்பவும் இதே நினைப்புதானா”?

“ஆர்கியாலிஜிஸ்டுக்கு வேல அதுதான்?”

அவன் உள்ளே போனான்

பிப்ரவரி 15
கண்ணாடியை பேண்ட் பாக்கிட்டில் வைத்துக்கொண்டு அதை அரைமணி நேரம் தேடினேன். அவளை நடக்க வைக்க கைத்தாங்கலாகத் தூக்கினேன். காலை ஊன்றவே மறுத்தாள். வாசலில் சாக்கடைக்குள் காலை முறித்துக் கொண்டு மூன்று மாதங்களாகி விட்டது. இனி நடப்பாளா? ஸ்டீபனுக்கு சோறு என்று குருவியைக் காண்பித்தாள். எனக்கு ரொம்ப களைப்பாக இருந்தது.

பிப்ரவரி 17
இன்று காலை எழுந்ததும் ஸ்டீபன் வெளியே போயிருக்கானா என்று கேட்டாள், மூத்தவன் மீது அதிகபாசம், குறையவே இல்லை. இண்டர்நெட்டில் ஸ்டீபன் கிடைக்கவே இல்லை. அவன் பேசி பல நாட்களாகி விட்டன. தாமஸ் ஸ்கூலுக்கு மூன்று பேரையும் விடுமுறை நாட்களில் கிரேஸ் அழைத்துப் போய் ஆம்பளை போல கிரிக்கெட் விளையாடிதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. “டியூஷன் டியூஷன் அலையிரீங்களே பிள்ளைகளோடு விளையாட கூட நேரமில்லாம” என்றாள். தலையில் கிரிக்கெட் பால் அடிபட்டு ரத்தம் வழியும் போது கூட பிள்ளைகளோடு இன்னும் நெருக்கமாக இல்லாமல் விட்டோமே என்று குற்ற உணர்வு அடிக்கடி வருகிறது.

பிப்ரவரி 20
ஜெயகர் சேவியர் இறந்து விட்டதாக போனில் அவன் தம்பி கூறினான். என் நண்பர்கள் எல்லோரும் போய்விட்டனர். ஸ்ரீ வில்லிபுத்தூரில் இனி யாரும் இல்லை. மனசு ரொம்ப வேதனை அடைந்தது. எங்கோ ஒரு இருட்டு மூலையில் தனியாக விடப்பட்டது போல இருந்தது. இருட்டில் கிரேசின் கரம் மட்டும் என்னைத் தடவிக்கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஏன் இப்படிப் பைத்தியக் காரத்தனமாக தோன்றுகிறது?

11 மணிக்கு கிரேஸ் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கையில் கதவைப் பூட்டிக் கொண்டு தாமஸ் மவுண்ட் அடிவாரத்திற்கு நடந்து சென்று படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டேன். சென்னைக்கு ஜெயகர் வரும்போதுதெல்லாம் இங்கு வந்து மணி கணக்கில் பேசி கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. மூன்றாம் மகனுக்கு உன் பெயர் வைக்கப்போகிறேன் என்றபோது அவன் வெட்கப்பட்டான். பிறகு வெஸ்லி இங்கிலிஷ் சர்ச் உள்ளே பழைய நாற்காலியில் அமர்ந்து, ஜெபித்துவிட்டு, வீட்டிற்கு வந்தேன் மதியம் சாப்பிடப் பிடிக்கவில்லை. கிரேசுக்கு எழுதிக் காண்பித்தேன் ஜெயகர் சேவியர் காலமானது பற்றிப் புரிந்துப்போல் தலையாட்டினாள். ஜெயகர் போட்டோவைக் காண்பித்து எடுத்துவரச் சொல்லி போட்டோவைத் தடவிக் கொடுத்தாள். இன்று இரவு ஜெபத்தில் கதறி அழுதது எனக்கே ஒருமாதிரி இருக்கிறது. இரவு கொஞ்சமாகவே சாப்பிட்டேன். வாந்தி வருவது போலவே இருக்கிறது.

பிப்ரவரி 22
ஏன் யாரிடமிருந்தும் போன் வரவில்லை? எம்எம்சியில் ஸ்டீபனும் ஜெயகரும் படிக்கையில் தினம்தினம் இரவு எத்தனை காலேஜ் சம்பவங்களை என்னிடம்சொல்லியிருப்பார்கள். தாமஸ் மட்டுமென்ன அண்ணா யுனிவர்சிட்டி புரபசர்கள், ரோட்ராகிட் மீட்டிங் பற்றி. தூங்குவதற்கு வெகுநேரம் ஆகியிருக்கிறது. இந்த உலகில் நாம் வாழ்ந்துக்கொண்டிருப்பது அர்த்தமில்லாமல் இருக்கிறதோ. அதனால்தான் ஸ்டீபனும் தாமஸ்சும் தாங்களே திருமணம் செய்துக்கொண்டனர்.

மார்ச் 2
தாமஸ் ஆஸ்பத்திரி போனேன். ஸ்கேன் பண்ண வேண்டியதாயிற்று. Gall Blader wall thickening, multiple nodes multiple focal leisions in liver all in favour of malignancy மாதிரித் தெரிகிறது என்று ரிபோர்ட் எழுதியிருக்கிறது. ஸ்கேன் ரிப்போட்டை ஸ்டீபனுக்கும் ஜெயகர்ருக்கும் மெயில் பண்ணினேன். ஸ்டீபனிடம் இருந்து தகவல் இல்லை. ஜெயகர் உடனே 1 மணி நேரத்தில் பதில் அனுப்பிட்டான் பயாப்சி பண்ணச் சொல்லி.

மார்ச் 8
இன்று பயாப்சிக்கு போனேன் வீட்டில் அகல்யா டீச்சரை விட்டுவிட்டு. பயங்கர வலியாக இருந்தது

மார்ச் 10
கேன்சர் கன்பர்ம் ஆகிவிட்டது. வலி அதிகமாகத் தெரிந்தது. வயிற்றுக்குள் ஏதோ ஒரு மிருகம் என்னைத் தின்று கொண்டிருப்பது போல் உணர்ந்தேன்.யோபுவை விடவா எனக்கு அதிக துக்கம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். தேவன் வழிகாட்டுவார். யோபு புத்தகம் முழுவதையும் 2 முறை படித்தேன், கண்கள் ரொம்ப மஞ்சளாக தெரிகிறது.

மார்ச் 12
மிகவும் வற்புறுத்திக் கேட்டபிறகே இன்று டாக்டர் வின்ஸ்டன் சொன்னார் கல்லீரலிலும் பரவி விட்டதால் 6 மாதம் வரை தாக்குப் பிடிக்கலாமென்று.

ஸ்டீபனிடமிருந்து இன்னும் பதிலே இல்லை. தாமஸ்க்கு போன் பண்ணி சொன்னேன். (நல்ல வேளை கிடைத்தான்) அப்படியா என்று அதிர்ந்தான். ஆறுதல் கூறினான். எனக்கு அழுகை வந்து விட்டது. எல்லோரையும் பார்க்கவேண்டும் என்று தோன்றியது.

மார்ச் 15
இன்று கிரேஸ் கரத்தை பிடித்துத்கொண்டு உட்காருவது ரொம்ப ஆறுதலாக இருந்தது. தூங்கிக்கொண்டிருந்தாள். வீடுகட்டும் போது, பிள்ளைகள் காலேஜ் படிக்கும்போது, வெளிநாடுபோகும்போது ஏற்பட்ட கடன் தொல்லையில் வேதனைப்பட்ட போதெல்லாம், பயபடாதீங்க கடவுள் வழிகாட்டுவார் என்று தைரியம் சொல்வாள். அவள் விசுவாசம் ரொம்ப ஆழமானது. கல்யாணமானபுதிதில் தாமஸ் மவுண்ட் உச்சிக்கு கட்டுச்சாதத்துடன் சென்றது, கிளிக் 3யில் புகைப்படம் எடுத்தது, மாலை வரை இருந்தது எல்லாம் மறக்க முடியுமா? வீடு கட்ட அங்குதான் முடிவு செய்தோம்.

அவளை நாற்காலியில் அமர வைப்பதும், குளிப்பாட்டுவதும் ரொம்ப ரொம்ப சிரமமாகமாறிவிட்டது. உடம்பு திடீரென ரொம்ப பலவீனமாகத் தெரிகிறது. எனக்குப் பிறகு யார் இவளைப் பார்ததுக் கொள்வார்கள்?

மார்ச் 22
ராஐகோபாலிடம் பேசினேன். அவன் இன்னமும் 9 ஆம் வகுப்பு மாணவன் போலதான் வார்த்தைக்கு வார்த்தைகு சார் போட்டு பேசுகிறான்.

ஏப்ரல் 1 அன்று வருவதாகக் கூறினான். வேண்டிய பணத்தை அவன் நிறுவன அக்கவுண்ட்டுக்கு மாற்றினேன்.

மார்ச் 23
மிக மிக களைப்பாக இன்று இருக்கிறது. கைகால் நடுக்கமாயிருக்கிறது. வயிற்றுவலியும் தாங்க முடியவில்லை. நகங்களில் மஞ்சள் பூசியது போல் இருக்கிறது. கிரேஸ் திடீரென கையைத் தட்டினாள். குருவி கத்தியது. மறுபடி மறுபடி தட்டி குருவியைக் கத்த வைத்தாள். அவளுக்கு கேட்டிருக்காது. ஸ்தோத்திரம்.

மார்ச் 24
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம். தாமஸ் ஒரு அந்நியனால் குத்தப்பட்டபோது என்னவெல்லாம் யோசித்து இருப்பார். தன் தனிமையை நினைத்து இருப்பாரா? இயேசு நாதரை திட்டியிருப்பாரா?

மார்ச் 25
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன் ஏசாயா 43: 2 திடன் கொள்ளுங்கள் நான் உங்களுடனே இருக்கிறேன் ஆகா 2:4

மார்ச் 29
இன்று பெரிய வெள்ளி. மும்மணி தியானத்திற்குப் போக முடியவில்லை. வலி தாங்க முடியவில்லை. பயப்படாதே தேவன் உனக்கு தயவு பண்ணினார் அப் 27: 24 நீ வேண்டிக் கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார் உபா 18:16. உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் யோவான் 16:20

மார்ச் 31
உன் தேவனை சந்திக்கும்படி ஆயத்தப்பட்டு ஆமோஸ் 4:12
இன்று ஈஸ்டர். சர்ச் செல்லவில்லை. போதகர் வீட்டிற்க்கு வந்து இருவருக்கும் கம்யூனியன் கொடுத்தார்.

ஏப்ரல் 1
ராஐகோபால் வந்து கிரேசை அழைத்துக் கொண்டு (ஸ்ட்ரெச்சரில் வைத்து- பார்க்க சகிக்கவில்லை) போனான். நான் உடன் வர மறுத்து விட்டேன். சில காகிதங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டான். வெறிச்சோடி இருந்தது வீடு. கதறி அழுதேன். தனிமை என்னை அழுத்தி மூச்சுத் திணற வைத்தது. வயிற்று வலியும், வயிறுவீக்கமும், வாந்தியும் அதிகமாயிற்று.

ஏப்ரல் 2
மூன்று பையன்களின் இமெயில் ஐடி, போன் நம்பர்கள், செக், பாஸ்புக், பென்ஷன் புத்தகங்கள், ஏடிஎம் கார்ட், எல்ஐசி பாலிசி, எஃப்டி, வீட்டுப்பத்திரம் ஆகியவற்றை ஒரு துணிப்பையில் போட்டு பீரோவில் வைத்துப் பூட்டினேன். சாவியை மேஜையில் வைத்தேன். பசங்களின் போன் நம்பர்கள், இமெயில் மற்றும் முக்கியமானவர்களின் போன் நம்பர்களை மற்றொரு காகிதத்தில் எழுதி, பீரோ சாவிக்குக் கீழே வைத்தேன். நாளை காலை 7 மணிக்கு ஜெபம் பண்ண வருமாறு போதகரிடம் கேட்டுக்கொண்டேன். முன் கதவைத் தாழிடவில்லை. சற்று நேரம் கிரேஸ் கட்டிலில் படுத்திருந்தேன். அவள் வாசம் இன்னும் அங்கேயே மிதந்து கொண்டிருக்கிறது.

வேண்டாம் டைரிகள் இருக்கக் கூடாது.

அதற்கப்புறம் டைரி காலியாக இருந்தது. காகிதங்கள் எரிந்த இடத்தை மறுபடியும் கிளறிப் பார்த்தாள் பிரிசில்லா. Alprazolam மாத்திரை அட்டைகள் எரிந்த நிலையில் பளபளத்தன. வேறொன்றும் கிடைக்கவில்லை.

டைரியுடன் வீட்டிற்குள் வந்தாள். பெனிட்டாவும், ஆலனும் எலக்ட்ரானிக் சிட்டுக்குருவியுடன் ஒரே விளையாட்டு, சிரிப்பு.

ஸ்டீபன், தாமசை காணவில்லை. கேர் டேக்கர் வத்சலா கிரேசை ஈரத்துணியால் துடைத்து, பவுடர் போட்டாள். ஜெயகர் 800 ரூபாய் கொடுத்தான்.

“தாங்க்ஸ் சார். மார்வல்ஸ் ஐயா மட்டும் சொல்லியிருந்தா, முன்னாடியே வந்திருப்பேன்.” “ஸ்டின்ஜி மேன்” ஜெயகர் முணுமுணுத்தான்.

ஜெய் ஆன்டிய லண்டனுக்கு கூட்டிப்போய் பாத்துக்கலாமா? பிரசில்லாவை முறைத்தான் ஜெயகர்.

ஆர்யு கிரேசி? எப்படி முடியும் ரெண்டு பேருமே பிசி. ராஜகோபால் வில்லுக் ஆஃப்டர் ஹெர் டோன்ட் வொர்ரி வேணும்ன்ற பணம் அனுப்பிடலாம். விசாரிச்சதுல அவுங்க ஹோம் இஸ் ஒன் ஆஃப்த பெஸ்ட் இன் சென்னை.

ராஜகோபால் 5 மணிக்கு ஆம்புலன்சில் வந்தான். வராந்தாவில் எண்ணெய்க்கறை படிந்த சுவர் பகுதியைத் தடவினான். கண்களைத் துடைத்துக் கொண்டான். “திங்கட்கிழமை அப்பா ப்ரேயர் மீட்டிங்களுக்கு அம்மாவே அழைச்சி வந்தா போதும்”

“ஓகே சார் ஒரு ரெக்வெஸ்ட்”

“சொல்லுங்க.”

“சாரோட சைக்கிள நா எடுத்துக்கலமா?”

“க்ஷ்யூர்” ஜெயகர் ராஜகோபால் தோளை அழுந்தியபடி சிரித்தான்.

ஐந்தரைக்கு ஸ்டீபன், தாமஸ் ரியல் எஸ்டெட்காரன் இனோவாவில் வந்து இறங்கினர்.

“ஜெயகர் நாளை வீடு ரெஜிஸ்ட்ரேஷன் 2 குரோர்ஸ்”

“தேங்க் காட், ஜெயகர் வானத்தைப் பார்த்தான். ”

வாலன்டினாவும் நடால்யாவும், பிள்ளைகளுடன் வந்தனர். வால்ன்டிமா கையில் டூரிசம் கைட் இருந்தது.

ஆலன் ஓடிவந்து குருவி கத்தவில்லை என்று ஜெயகரிடம் கொடுந்தான் ஷிட் என்று திட்டியபடி குருவியைத் தூக்கியெறிந்தான் ஜெயகர். அது கிரோஸ் கட்டிலுக்குக் கீழே உருண்டு போனது சோ..று… கு..ரு..வி என்றாள் கிரோஸ்.

– செப்டம்பர் 2013 (நன்றி: http://egbertsachidhanandham.blogspot.com)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *